Friday, December 31, 2021

மார்கழிப்பதிவுகள் - 16

ஸ்ரீ:





(பாவையர்கள் எல்லோரும் திருக்கோவில் முன்சென்று பாடுகின்றனர்.)

நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்...........(16)


உலகுக்கெல்லாம் தலைவனாய் நிலைத்திருக்கின்றவனாகிய நந்த கோபனுடைய திருக்கோவிலைக் காப்பவனே! கொடிகள் மற்றும் தோரணங்கள் மேவும் வாயிலைக் காப்பவனே! மணிக்கதவின் தாளைத் திறப்பாய்!

கோகுலத்தின் சிறுமியர்களாகிய எங்களுக்கு நோன்பு நிறைவதற்கான பலனை (பறை) தருவதாக , மாயவன், கருநீல மணிவண்ணன், கண்ணன், நேற்றே வாக்களித்தான்; அந்த எம்பெருமானை துயில் எழுப்ப பாடுவதற்கு, உள்ளும் புறமும் தூயவர்களாக நாங்கள் வந்தோம்.

உன் வாயாலே, முதன் முதலிலேயே மறுத்து சொல்லிவிடாதே அப்பனே! வாயில் நிலையோடு நேசமாகப் பொருந்தியிருக்கும் கதவை நீ, நீக்கி திறந்து விடு.


பிரமாணம், பிரமேயம், பிரமாதா ஆகிய மூன்றும் இப்பாசுரத்தின் உட்பொருளில் வெளிப்படுகிறது. பிரமாணம் - வேதம் முதலியவை, பிரமேயம் - எம்பெருமான், பிரமாதா - அவரை அடைய வழி காட்டும் ஆச்சார்யன். 

கோயில் காப்பான்  -  திருமந்திரம்.

கொடி தோன்றும் தோரண வாயில் காப்பான் - த்வயம்

நென்னலே வாய் நேர்ந்தான் - சரம ஸ்லோகம்.

சிஷ்யனானவன் ஓர் ஆச்சார்யனை அடைந்து உபதேசம் பெறத்தயாராகும் கணத்திலே எம்பெருமானின் கருணைக்கு பாத்திரமாகி விடுகிறான் என்ற உட்கருத்தை நென்னலே வாய் நேர்ந்தான் என்பது குறிக்கின்றது.

**********

 

திருசிற்றம்பலம் 



திருவெம்பாவை #16   


முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற சிலம்பித் திருபுருவம்
என்னச் சிலைக்குலவி தந்தெம்மை ஆளுடையான்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னியவன் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!.........(16)

பொருள்:
மேகமே! நீ கடலினை நெருங்கி அதன் நீரை முகந்து அக்கடலைக் குறைத்து, எங்களை ஆளாக உடைய அம்மை உமா தேவியின் சிற்றிடையைப் போல மின்னிப் பொலிவுற்று, எம்பெருமாட்டியின் திருவடிகளில் அணியப் பெற்ற பொற்சிலம்பைப் போல சிலம்பி, அம்மையின் வில்லைப்போன்ற திருப்புருவம் எனும்படி வானில் குலவி , நம்மையெல்லாம் அடிமையாக உடைய எம்பெருமாட்டியை விட்டுப்பரியாத எம்பெருமான் தன் அன்பர்களுக்கு பொழியும் இனிய அருளைப் போல நீ மழையைப் பொழிவாயாக!

மழை குறையாமல் பெய்தால்தான் பயிர்கள் செழித்து வளரும், அதன் மூலம் உயிரினங்கள் வாழும் என்பதால் பாவை நோன்பின் போது மாதம் மும்மாரி பொழிய வேண்டுவது மரபு. இப்பாடல் மழை வேண்டி பாடும் பாடல்.   

( மழை கற்குறைய பெய்தல்)

No comments: