Monday, December 27, 2021

மார்கழிப்பதிவுகள் - 12

 ஸ்ரீ:



கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசற்கடைப் பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தானெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத்தாரும் மறிந்தேலோ ரெம்பாவாய்
! ...........(12)

பொருள்:

இளங்கன்றினை ஈன்ற எருமைகள் தங்கள் கன்றுக்குப் பாலை பொழிவதாக கருதிக் கொண்டு தானே பாலைப் பொழிய, அப்பாலினால் இல்லம் முழுதும் நனைந்து சேறாகியிருக்கும் வளம் நிறைந்த செல்வ கோபாலனின் தங்கையே!


மார்கழி மாதத்து பனி எங்கள் தலையில் மேல் விழ, உன் வீட்டின் தலை வாசல் படியில் நின்று நின் தோழிமார்களாகிய நாங்கள் அனைவரும் தென் இலங்கை வேந்தனாகிய இராவணனை கோபத்தினால் அழித்த இராமபிரானை. இராகவனை, தாசரதியை, மைதிலி மணாளனை, காகுத்தனை  நினைத்த மாத்திரத்தில் நம் மனத்தில் இன்பம் பயக்க வல்ல பெருமாளை அனைவரும் வாயாரப் பாடுகின்றோம்.

அதைக் கேட்டும் கூட இன்னும் வாயைத் திறக்காமல் பேசா மடந்தையாக அப்படியே படுக்கையில் கிடக்கின்றாயே! அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் எழுந்து வந்து எங்களை ஏளனமாகப் பார்க்கின்றனர். இன்னும் என்ன உறக்கம் வேண்டிக்கிடக்கின்றது உனக்கு? எழப் போகின்றாயா இல்லையா?

சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்றவன்:

சீதா பிராட்டியைக் கடத்திக் கொண்டு சென்ற தென்னிலங்கைக்கு அதிபதியாகிய இராவணனை பொங்கி வந்த கோபத்தினால் வதம் செய்தவர், மனதுக்கு இனியவரான இராமபிரான் என்னும் இராமாவதார பெருமையை "சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானை" என்று பாடுகின்றார் கோதை நாச்சியார் இப்பாசுரத்தில்.

தலையில்  பனியினால் ஏற்பட்ட குளிர், கீழே பால் வெள்ளத்தால் ஏற்பட்ட குளிர்ச்சி, இந்நிலையில் நற்செல்வன் தங்கையின் வாசலிலுள்ள ஒரு கட்டையை பிடித்து தொங்கிக்கொண்டு அவளை எழுப்பும் பெண்களின் பக்தியை என்னவென்று சொல்ல.   
*************


திருசிற்றம்பலம்


ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்! நற்தில்லை சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்!
இவ்வானுங் குவலயுமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வலைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவந் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோர் எம்பாவாய்!............(12)


பொருள்:
அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலத்தில் பொன்னின் செய் மண்டபத்துள்ளே தனது இடக் கரத்திலே அனலை ஏந்தி சிவானந்த வல்லியுடன் நாம் எல்லாரும் உய்ய ஆனந்த தாண்டவம் ஆடுகின்றான் எம்பெருமான், நமக்கு ஆனந்த நடராசனாக சிவகாமியம்மையுடன் அருட்காட்சி தருகின்றார்.

 நமது பிறவிப் பிணி தீருவதற்கு நாம் சென்று சாரும் அவ்வெம்பெருமான், நாம் துள்ளி ஆடுதற்குரிய (மொய்யார்) தடம் பொய்கை என்ற தீர்த்த வடிவினராகவும்  விளங்குகின்றார்.

இந்நிலவுலகத்தையும், விண்ணுலகத்தையும், மற்றும் சகல பிரம்மாண்டத்தையும் எல்லோரையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் திருவிளையாடல் புரிகின்றான் ஐயன். (ஐந்தொழிலும் ஐயனின் விளையாட்டே).

அந்தப் பெருமானின் புகழைப் பாடிக் கொண்டு, கைகளில் உள்ள வளையல்கள் ஒலிக்கவும், இடையில் உள்ள மேகலை ஒலி துள்ளவும், மலர்கள் சூடிய கூந்தலில் மேல் வண்டுகள் ஒலிக்கவும், தாமரை பூத்த இப்பொய்கை நீரைக் குடைந்து நம்மை உரிமையுடைய தலைவனது பொன் போன்ற திருவடிகளை துதித்து பெரிய சுணை நீரிலும் நாம் மார்கழி நீராடுவோமாக! (இறைவனின் பொற் திருவடிகளை அடைவோமாக)

திருசிற்றம்பலம்

2 comments:

Anuprem said...

மனத்துக்கினியான் ....ராமர் தம் உயர்ந்த குணங்களால் தங்கள் மனம் கவர்ந்தவராக,சிந்தனைக்கு இனியனாக இருப்பதை "மனத்துக்கு இனியான்" என்கிறார்கள்...அத்தகைய ராமனை நினைத்து பாடுவோம் ...

S.Muruganandam said...

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே