Wednesday, December 22, 2021

மார்கழிப்பதிவுகள் - 7

  

திருசிற்றம்பலம் 


திருவெம்பாவை # 7

அன்னே! இவையுஞ் சிலவோ? பல அமரர்
உன்னற்கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்ப சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னா! என் னாமுன்னம் தீ சேர் மெழுகொப்பாய்
என்னானை என் அரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங் கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசே லோர் எம்பாவாய் .........(7)


பொருள்:  தாயினும் மேலாகிய பெண்ணே! நாங்கள் இது வரையும் கூறியவை கொஞ்சமோ? இறைவன் தேவர்கள் பலராலும் நினைத்து பார்க்கவும் அறியன், ஒப்பற்றவன்! பெரும் புகழையுடையவன்.

விடியற்காலையில் அந்த பெருமானுடைய இசைக் கருவிகளின் ஒலி கேட்டால் உடனே "சிவா", "சிவா" என்று வாய் திறப்பாயே. "தென்னா" என்று( தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி) அவர் பெயரை கூறும் முன்னாலேயே நெருப்பிலிட்ட மெழுகு போல் உள்ளம் உருகுவாயே! அத்தகைய உனக்கு என்ன நேர்ந்தது? இன்னும் விளையாடுகின்றாயா? உன்னுடைய சிறப்புத்தன்மைகளுள் இந்த தூக்கமும் ஒன்றோ?

நாங்கள் எல்லோரும் சேர்ந்தும் தனித் தனியாகவும், "என் தலைவனே!, என் அரசனே! இனிய அமுதனே" என்று பலவாறாகவும் பாடும் பொழுதும் கொடிய மனமுடையவள் போல வாளா கிடக்கின்றாயே! உன் உறக்கத்தின் தன்மைதான் என்னே! இத்தூக்கத்தை நீ என்ன பரிசாக கருதுகின்றாயா? ( எழுந்து வா சிவன் தாள் போற்றலாம் என்று அழைக்கிறாள்)

காலை தூக்கத்தில் இருந்து விடுபவர்கள்  வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி. சூரியனைக் காணாத ஒவ்வொரு நாளும் வீணே என்கிறது சாஸ்திரம்.

**********

         ஸ்ரீ:



கேசவன்



ஆய்ச்சியர் தயிர் கடைதல்
 




திருப்பாவை #  7

கீசு கீச்சென்றெங்கும் ஆணைசாத் தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே?
காசும் பிறப்பும் கலகலப்ப கைப்பேர்த்து
வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயண மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்!

பொருள்:

மதி கெட்ட பெண்ணே! விடியற்காலை நேரமாகி விட்டது ஆனைசாத்தன் (வலியன் )பறவைகள் கீசு கீசு என்று தங்களுக்குள் ஒன்றோடு ஒன்று கலந்து கொண்டு பேசும் பேச்சின் ஒலி இன்னும் உன் காதுகளில் விழவில்லையா?


நெய் மணம் வீசும் கூந்தலையுடைய இடைச்சியர்கள், தங்கள் மார்பில் அணிந்துள்ள ஆமைத் தாலியும், அச்சுத்தாலியும் "கலகல" என்று எழுப்ப தங்கள் கைகளை அசைத்து மத்தினால் தயிரைக் கடையும் "சலசல" என்னும் ஒலியும் கூடவா கேட்கவில்லை?

தலைமையுடைய பெண்ணே! அந்த பரந்தாமனை, நாராயண மூர்த்தியை, கேடில் விழுப் புகழ் கேசவனை, அண்ணலை, அச்சுதனை, அனந்தனை நாங்கள் அனைவரும் பாடுகின்றோம்! நீ அதைக் கேட்டுக் கொண்டே கேட்காதது போல் படுக்கை சுகத்தில் அமிழ்ந்து கிடக்கின்றாயே, ஒளி பொருந்திய உடலை உடைய கண்ணே! ஓடி வந்து கதவைத் திறடி என் கண்மணி.

வெளியே கிளம்பும் போது "கேசவா" என்ற திருநாமத்தை சொல்ல வேண்டும் என்பதை இப்பாசுரம் உணர்த்துகின்றது.




உறங்குகின்ற பெண்ணை எழுப்பும் வண்ணம் அமைந்த மற்ற ஒரு பாசுரம், இதிலும் காலை காட்சியை சிறப்பாக படம் பிடித்துக் காட்டியுள்ளார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள். இப்பாசுரத்தில் நாயக பெண் பிள்ளையை எழுப்புகிறாள் கோதை நாச்சியார்



3 comments:

Anuprem said...

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....

S.Muruganandam said...

ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

மிக்க நன்றி

S.Muruganandam said...

ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

மிக்க நன்றி