Friday, December 24, 2021

மார்கழிப்பதிவுகள் - 9

 

திருசிற்றம்பலம்

திருவெம்பாவை # 9



முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே!

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!

உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்

உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்;

அன்னவரே எங்கணவர் ஆவார் அவர் உகந்து

சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்;

இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோ மேலோர் எம்பாவாய்! .....(9)


(  இது வரை பெண்களை எழுப்பிய பாடல். இப்பாடலில் இருந்து பெண்கள் எல்லோரும் சேர்ந்து பாடும் பாடல்கள். )

பொருள்: 
இந்த பிரபஞ்சம் முழுவதையும் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடும் எம்பெருமானே, நீவிர் முன்னரே தோன்றிய பழமையான எல்லா பொருட்களுக்கும் முற்பட்ட பழம் பொருள். அவ்வாறே பின்னே தோன்றிய புதுமைப் பொருட்களுக்கெல்லாம் புதுமையாக தோன்றும் தன்மையன்.


உன்னை இறைவனாக பெற்ற நாங்கள்; உன் சிறந்த அடியார்களாவோம். ஆதலால் உன்னுடைய அடியார்களது திருவடிகளை வணங்குவோம். அங்ஙனமே அவர்களுக்கே உரிமையுடையவர்களாவோம், அந்த சிவனடியார்களே எங்களது கணவர்கள் ஆவார்கள். அவர்கள் விரும்பி கூறும் முறையிலே அடிமைப் பணி செய்வோம்.
எங்கள் அரசே! இந்த வகையான வாழ்க்கையை எங்களுக்கு நீங்கள் அருளுவீர்களானால் எந்த குறையும் இல்லாதவர்களாவோம்! ஓம் நமசிவாய!

பாவை நோன்பின் ஒரு நோக்கமான பெண்கள் நல்ல கணவனைப் பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டும் பாடல். 


திருசிற்றம்பலம்

***************

ஸ்ரீ:

திருப்பாவை # 9





 மாமாயன்  மாதவன்  வைகுந்தன்

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழ துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை யெழுப்பீரே? உன் மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்! .........(9)


பொருள்:


தூய மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மாடம் அதிலே சுற்றிலும் விளக்குகள் ஒளிர்கின்றன, அகில் முதலிய தூபம் மணக்கின்றன, சப்ர மஞ்ச கட்டிலில் ஒய்யாரமாக சாய்ந்து உறங்கும் மாமன் மகளே! எழுந்து வந்து கதவைத் திறடி கண்மணி!

(மாமன் மகள் இவ்வாறு எழுப்பபட்டும் அவள் எழவில்லை;ஆதலால் அவள் தாயை அழைத்து அவளை எழுப்பும்படி வேண்டுகின்றனர்)

மாமியே! உங்கள் மகள் எங்களுக்கு பதில் ஏதும் சொல்லாததால் அவள் என்ன ஊமையா? அல்லது செவிடா? ; ஓயாத உறக்கமா? அல்லது ஒழிவில்லாத ஆழ்ந்த உறக்கத்தில் மந்திரத்தினால் கட்டுப்பட்டு கிடக்கின்றாளா?


மாமாயனே! மதுசூதனே! மாதவனே! வைகுந்தனே என்று எம்பெருமானுடைய திருநாமங்கள் பலவற்றையும் கூறினோம், அந்தப் பெருமானைப் பார்க்கப் போகலாம் என்று சொல்லி எழுப்புங்களேன்.

மாயம் என்பதற்கு பொது அர்த்தம் பொய் என்பது ஆனால் வைஷ்ணவ சம்பிரதாயத்தில்  ஆச்சர்யம் என்று பெரியோர்கள் பொருள் கூறுவர். பக்தர்களை தனது சௌலபியத்தால் ஆச்சிரிசியப்படுத்துவதால் அவன் மாமாயன்.  

இப்பாசுரத்தின் உட்கருத்து: இங்கே சொல்லப்படும் தத்துவம் – கண்ணனை அடைவதான உயர்ந்த புருஷார்த்தத்தை இவர்களுக்கு புருஷகாரம் செய்து அருள அந்த கிருஷ்ணனுக்கு பிரியமான அந்த கோபிகையை பிடிக்கிறார்கள். அவளுடைய தாயாரையே ஆசார்யனாகக் கொண்டு அந்த கோபிகையை வேண்டுகிறார்கள். ஆக மோக்ஷ புருஷார்த்தத்தை அடைய புருஷகாரம் தேவை. அதற்கு ஆசார்ய அனுக்ரஹம் தேவை என்பது தேறும்.

இந்த பாசுரத்தில் பகவன் நாமாவிற்கு உள்ள மகிமை சொல்லபட்டு இருக்கிறது.பகவான் நாமத்துக்கு அவரை விட சக்தி அதிகமாம். திரௌபதியும் சரி,கஜேந்த்ரனும் சரி தங்களால் தங்களை காப்பற்றிக்கொள்ள முடியாது என்று தெரிந்தவுடன் அச்சுதா,அனந்தா,கோவிந்தா .சங்க சக்ர கதா பாணி என்றெல்லாம் அழைத்து பரிபூர்ண சரணாகதி அடைந்து விட்டார்கள்.அந்த க்ஷணமே அந்த நாமங்கள் காப்பாற்றினவாம்..அப்பேற்பட்ட சக்தி அவற்றுக்கு உண்டு. இங்கே மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று பல பேர்களால் சகஸ்ர நாமத்தினால் கூவி அழையுங்கள் என்கிறாள் ஆண்டாள்.
 





2 comments:

Anuprem said...

மாமாயன் !
மாதவன் !!
வைகுந்தன் !!! ...திருவடிகளே சரணம் ..

S.Muruganandam said...

மிக்க நன்றி