Thursday, December 30, 2021

மார்கழிப்பதிவுகள் - 15



                                                                                                     உ

      திருச்சிற்றம்பலம்






திருவெம்பாவை # 15
 

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
ஓரொருகால் வாயோவான் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப
பாரொருகால் வந்தணையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் அட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவ பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவ பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!..........(15)


பொருள்:கச்சு உருவுமாறு அழகிய அணிகலன்களைப் பூண்ட முலையையுடைய பெண்களே! இவள் ஒவ்வொரு சமயம் "எம்பெருமானே! எம்பெருமானே! என்று வாய் ஓயாது அரற்றுகின்றாள்; மற்றொரு சமயம் நமது மஹாதேவன் புகழைப் வாய் ஓயாமல் பேசுகின்றாள்; அதனால் ஏற்பட்ட மன மகிழ்ச்சியால் இவள் கண்கள் அருவியைப் போல் கண்ணீரை சுரக்கின்றன. நிலத்தில் விழுந்து எம்பெருமானை வணங்கியவள் அப்படியே தனனை மறந்து அப்படியே கிடக்கின்றாள், சிவபெருமானைத் தவிர மற்ற எந்த தெய்வத்தையும் இவள் வணங்க மாட்டாள்; அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனாம் பேரரசனாகிய சிவபெருமானுக்கு பித்தானவர்கள் தன்மை இப்படித்தான் போலும்!

இவ்வண்ணம் நம்மை ஆட்கொள்ளும் அந்த ஒருவர் யார்? அவர் ஞானமே வடிவான இறைவனே ஆவான்! அவரது திருவடிகளை வாயாரப்பாடி அழகிய மலர்கள் நிறைந்துள்ள இந்த குளத்து நீரில் பாய்ந்து மார்கழி நீராடுவோமாக. 

*************

ஸ்ரீ:






வல்லானைக் கொன்றான்





எல்லே! இளங்கிளியே! இன்னமுறங்குதியோ?
சில்லென்றழையேன்மின்! நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதானாயிடுக
ஒல்லைநீபோதாய் உனக்கென்ன வேறுடைமை
எல்லாரும் போந்தாரோ?போந்தாரை வந்தெண்ணிக்கொள்
வல்லானைக்கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.............(15)

பொருள்:
எழுப்புவோர்: ஏண்டி! கிளி போல் மிழற்றும் குமரியே! இன்னமும் உறங்குகின்றாயே!

எழாதிருப்பவள்: பெண்களே! 'சில்' என்று கத்தி கூப்பிடாதீர்கள்! இதோ வந்து விடுகின்றேன்.

எழுப்புவோர்:நீ மிகவும் கெட்டிக்காரி! பசப்பு வார்த்தைக்காரி! உன்னுடைய பேச்சுவன்மையை நாங்கள் முன்பே அறிந்திருக்கின்றோம்! உன் வாயையும் நாங்கள் அறிவோம்!

எழாதிருப்பவள்: கெட்டிக்காரிகள் நீங்களா? நானா? நானே ஆனாலும் சரி.

எழுப்புவோர்: சீக்கிரம் எழுந்து வா! இந்த கெட்டிக்காரத்தனத்தைத் தவிர வேறு என்ன வைத்திருக்கின்றாய்!

எழாதிருப்பவள்: நம் தோழியர்கள் அனைவரும் வந்து விட்டனரா?

எழுப்புவோர்:: வந்து விட்டார்கள்! சந்தேகம் இருந்தால் நீயே வந்து எண்ப் பார்த்துக் கொள்: குவாலயாபீடம் என்ற யானையை (வல்+யானை) கொன்ற கண்ணனை, பகைவரின் செருக்கை அழிக்க வல்லவனை(வல்லானை) மாயக்கண்ணனின் புகழைப் பாடலாம் சீக்கிரம் வாடி இளங்கிளியே.

குவலாயாபீடம் என்னும் யானையைக் கொன்றவன்:

கம்சனால் வஞ்சனையாக மதுராவிற்கு வரவழைக்கப்பட்ட கிருஷ்ண பலராமர்கள். கம்சன் அரண்மனை நோக்கிச் செல்லுகையில், அவனது அரண்மணை வாயிலில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த குவாலயாபீடம் என்னும் மதயானை கண்ணனைக் கொல்ல வந்தது. அந்த மாயன் மணிவண்ணன், ஊரார் அனைவரும் காணும் வகையில் அந்த  வலிய யானையின் (வல் + யானை) தந்தங்களை முறித்து, அதையே ஆயுதமாகக் கொண்டு யானையைக் கொன்றார். பகைவனது செருக்கையும் அழித்தார்.

இவ்வளவு ஆற்றல் படைத்தவன்   (வல்லான்) நமக்கு எளியன் ஆனான். இதுவே அவன் மாயம். எனவே அந்த பரந்தாமனைப் பாடிக் கொண்டு பாவை நோன்பைக் கொண்டாடுவோம் என்று ஆயர் சிறுமியர் புறப்ப்டுகின்றார்கள் என்பதை,
"வல்லானை கொன்றானை" என்னும் பாசுர வரிகளில் புலப்படுத்தியுள்ளார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்.

கோவிந்தன்:
ஆநிரைகள் ஆயர்களின் செல்வமாக விளங்குபவை; அவற்றைக் கவர்ந்து செல்ல வரும் பகைவர்களை எதிர்த்து நின்று அவர் தம் வலிமையை அழிக்கின்ற கோவிந்தன் என்பதை கூடாரை வெல்லுஞ்சீர் கோவிந்தா என்றும் "மாற்றாரை மாற்றழிக்க வல்லானைஎன்னும் இரண்டு பாடல்களில் உணர்த்தியுள்ளார் ஆண்டாள்.

மற்றவர் குற்றத்தை பொறுப்பது மட்டுமல்ல அதை தன் குற்றமாக ஏற்றுக்கொள்ளும் சிறந்த வைணவ பண்பாட்டை இப்பாசுரத்தில் குறிப்பிடுகின்றாள் கோதை நாச்சியார். இராமாயணத்தில் பரதன் இந்த சிறந்த பண்பிற்கு இலக்கணமாக இருந்து நமக்கெல்லாம் உதாரணமாக விளங்கினான்.   

இப்பாசுரத்தையும் 29வது சிற்றஞ் சிறு காலே பாசுரத்தையும் இதுவன்றோ திருப்பாவை என்று பூர்வாசிரியர்கள் குறிப்பிடுவர். இப்பாசுரம் பாகவத தாஸ்யத்தையும், இருபத்தொன்பதாம் பாசுரம் பகவத தாஸ்யத்தையும் குறிப்பிடுகின்றது.

இப்பாசுரத்தில் பகவந்நாமாவை இடையறாது அனுசந்திக்க வேண்டும், பாகவதர்களை மதிக்க வேண்டும், கர்வம்  விடுத்து நைச்ய பாவத்துடன் இருக்க வேண்டும், ஆசார்யர்கள் சொன்ன வழியில்  நடக்க வேண்டும், அனுஷ்டானத்தில் கால தாமதம் செய்யக்கூடாது. பகவானை பாகவதர்களுடன் சேர்ந்து சத்சங்கமாக அனுபவிக்க வேண்டும் என்று பாகவதர்களுக்கு உரிய தான குணங்களை அழகாக எடுத்து காட்டுகின்றாள் கோதை நாச்சியார்.
  
இப்பாசுரத்துடன் உறங்கும் தோழியர்களை எழுப்பும் பாசுரங்கள் நிறைவடைகின்றன. இனி தோழியர்கள் அனைவரும் ஒன்றாக நந்தகோபன் மாளிகைக்கு செல்கின்றனர்.
   



2 comments:

வெங்கட் நாகராஜ் said...

விளக்கம் நன்று. தொடரட்டும் பாசுர அமுதம்.

S.Muruganandam said...

மிக்க நன்றி. பாசுர அமுதத்தை அருந்த தொடர்ந்து வாருங்கள் வெங்கட் ஐயா.