Friday, December 31, 2021

மார்கழிப்பதிவுகள் - 16

ஸ்ரீ:





(பாவையர்கள் எல்லோரும் திருக்கோவில் முன்சென்று பாடுகின்றனர்.)

நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்...........(16)


உலகுக்கெல்லாம் தலைவனாய் நிலைத்திருக்கின்றவனாகிய நந்த கோபனுடைய திருக்கோவிலைக் காப்பவனே! கொடிகள் மற்றும் தோரணங்கள் மேவும் வாயிலைக் காப்பவனே! மணிக்கதவின் தாளைத் திறப்பாய்!

கோகுலத்தின் சிறுமியர்களாகிய எங்களுக்கு நோன்பு நிறைவதற்கான பலனை (பறை) தருவதாக , மாயவன், கருநீல மணிவண்ணன், கண்ணன், நேற்றே வாக்களித்தான்; அந்த எம்பெருமானை துயில் எழுப்ப பாடுவதற்கு, உள்ளும் புறமும் தூயவர்களாக நாங்கள் வந்தோம்.

உன் வாயாலே, முதன் முதலிலேயே மறுத்து சொல்லிவிடாதே அப்பனே! வாயில் நிலையோடு நேசமாகப் பொருந்தியிருக்கும் கதவை நீ, நீக்கி திறந்து விடு.


பிரமாணம், பிரமேயம், பிரமாதா ஆகிய மூன்றும் இப்பாசுரத்தின் உட்பொருளில் வெளிப்படுகிறது. பிரமாணம் - வேதம் முதலியவை, பிரமேயம் - எம்பெருமான், பிரமாதா - அவரை அடைய வழி காட்டும் ஆச்சார்யன். 

கோயில் காப்பான்  -  திருமந்திரம்.

கொடி தோன்றும் தோரண வாயில் காப்பான் - த்வயம்

நென்னலே வாய் நேர்ந்தான் - சரம ஸ்லோகம்.

சிஷ்யனானவன் ஓர் ஆச்சார்யனை அடைந்து உபதேசம் பெறத்தயாராகும் கணத்திலே எம்பெருமானின் கருணைக்கு பாத்திரமாகி விடுகிறான் என்ற உட்கருத்தை நென்னலே வாய் நேர்ந்தான் என்பது குறிக்கின்றது.

**********

 

திருசிற்றம்பலம் 



திருவெம்பாவை #16   


முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற சிலம்பித் திருபுருவம்
என்னச் சிலைக்குலவி தந்தெம்மை ஆளுடையான்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னியவன் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!.........(16)

பொருள்:
மேகமே! நீ கடலினை நெருங்கி அதன் நீரை முகந்து அக்கடலைக் குறைத்து, எங்களை ஆளாக உடைய அம்மை உமா தேவியின் சிற்றிடையைப் போல மின்னிப் பொலிவுற்று, எம்பெருமாட்டியின் திருவடிகளில் அணியப் பெற்ற பொற்சிலம்பைப் போல சிலம்பி, அம்மையின் வில்லைப்போன்ற திருப்புருவம் எனும்படி வானில் குலவி , நம்மையெல்லாம் அடிமையாக உடைய எம்பெருமாட்டியை விட்டுப்பரியாத எம்பெருமான் தன் அன்பர்களுக்கு பொழியும் இனிய அருளைப் போல நீ மழையைப் பொழிவாயாக!

மழை குறையாமல் பெய்தால்தான் பயிர்கள் செழித்து வளரும், அதன் மூலம் உயிரினங்கள் வாழும் என்பதால் பாவை நோன்பின் போது மாதம் மும்மாரி பொழிய வேண்டுவது மரபு. இப்பாடல் மழை வேண்டி பாடும் பாடல்.   

( மழை கற்குறைய பெய்தல்)

Thursday, December 30, 2021

மார்கழிப்பதிவுகள் - 15



                                                                                                     உ

      திருச்சிற்றம்பலம்






திருவெம்பாவை # 15
 

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
ஓரொருகால் வாயோவான் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப
பாரொருகால் வந்தணையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் அட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவ பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவ பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!..........(15)


பொருள்:கச்சு உருவுமாறு அழகிய அணிகலன்களைப் பூண்ட முலையையுடைய பெண்களே! இவள் ஒவ்வொரு சமயம் "எம்பெருமானே! எம்பெருமானே! என்று வாய் ஓயாது அரற்றுகின்றாள்; மற்றொரு சமயம் நமது மஹாதேவன் புகழைப் வாய் ஓயாமல் பேசுகின்றாள்; அதனால் ஏற்பட்ட மன மகிழ்ச்சியால் இவள் கண்கள் அருவியைப் போல் கண்ணீரை சுரக்கின்றன. நிலத்தில் விழுந்து எம்பெருமானை வணங்கியவள் அப்படியே தனனை மறந்து அப்படியே கிடக்கின்றாள், சிவபெருமானைத் தவிர மற்ற எந்த தெய்வத்தையும் இவள் வணங்க மாட்டாள்; அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனாம் பேரரசனாகிய சிவபெருமானுக்கு பித்தானவர்கள் தன்மை இப்படித்தான் போலும்!

இவ்வண்ணம் நம்மை ஆட்கொள்ளும் அந்த ஒருவர் யார்? அவர் ஞானமே வடிவான இறைவனே ஆவான்! அவரது திருவடிகளை வாயாரப்பாடி அழகிய மலர்கள் நிறைந்துள்ள இந்த குளத்து நீரில் பாய்ந்து மார்கழி நீராடுவோமாக. 

*************

ஸ்ரீ:






வல்லானைக் கொன்றான்





எல்லே! இளங்கிளியே! இன்னமுறங்குதியோ?
சில்லென்றழையேன்மின்! நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதானாயிடுக
ஒல்லைநீபோதாய் உனக்கென்ன வேறுடைமை
எல்லாரும் போந்தாரோ?போந்தாரை வந்தெண்ணிக்கொள்
வல்லானைக்கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.............(15)

பொருள்:
எழுப்புவோர்: ஏண்டி! கிளி போல் மிழற்றும் குமரியே! இன்னமும் உறங்குகின்றாயே!

எழாதிருப்பவள்: பெண்களே! 'சில்' என்று கத்தி கூப்பிடாதீர்கள்! இதோ வந்து விடுகின்றேன்.

எழுப்புவோர்:நீ மிகவும் கெட்டிக்காரி! பசப்பு வார்த்தைக்காரி! உன்னுடைய பேச்சுவன்மையை நாங்கள் முன்பே அறிந்திருக்கின்றோம்! உன் வாயையும் நாங்கள் அறிவோம்!

எழாதிருப்பவள்: கெட்டிக்காரிகள் நீங்களா? நானா? நானே ஆனாலும் சரி.

எழுப்புவோர்: சீக்கிரம் எழுந்து வா! இந்த கெட்டிக்காரத்தனத்தைத் தவிர வேறு என்ன வைத்திருக்கின்றாய்!

எழாதிருப்பவள்: நம் தோழியர்கள் அனைவரும் வந்து விட்டனரா?

எழுப்புவோர்:: வந்து விட்டார்கள்! சந்தேகம் இருந்தால் நீயே வந்து எண்ப் பார்த்துக் கொள்: குவாலயாபீடம் என்ற யானையை (வல்+யானை) கொன்ற கண்ணனை, பகைவரின் செருக்கை அழிக்க வல்லவனை(வல்லானை) மாயக்கண்ணனின் புகழைப் பாடலாம் சீக்கிரம் வாடி இளங்கிளியே.

குவலாயாபீடம் என்னும் யானையைக் கொன்றவன்:

கம்சனால் வஞ்சனையாக மதுராவிற்கு வரவழைக்கப்பட்ட கிருஷ்ண பலராமர்கள். கம்சன் அரண்மனை நோக்கிச் செல்லுகையில், அவனது அரண்மணை வாயிலில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த குவாலயாபீடம் என்னும் மதயானை கண்ணனைக் கொல்ல வந்தது. அந்த மாயன் மணிவண்ணன், ஊரார் அனைவரும் காணும் வகையில் அந்த  வலிய யானையின் (வல் + யானை) தந்தங்களை முறித்து, அதையே ஆயுதமாகக் கொண்டு யானையைக் கொன்றார். பகைவனது செருக்கையும் அழித்தார்.

இவ்வளவு ஆற்றல் படைத்தவன்   (வல்லான்) நமக்கு எளியன் ஆனான். இதுவே அவன் மாயம். எனவே அந்த பரந்தாமனைப் பாடிக் கொண்டு பாவை நோன்பைக் கொண்டாடுவோம் என்று ஆயர் சிறுமியர் புறப்ப்டுகின்றார்கள் என்பதை,
"வல்லானை கொன்றானை" என்னும் பாசுர வரிகளில் புலப்படுத்தியுள்ளார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்.

கோவிந்தன்:
ஆநிரைகள் ஆயர்களின் செல்வமாக விளங்குபவை; அவற்றைக் கவர்ந்து செல்ல வரும் பகைவர்களை எதிர்த்து நின்று அவர் தம் வலிமையை அழிக்கின்ற கோவிந்தன் என்பதை கூடாரை வெல்லுஞ்சீர் கோவிந்தா என்றும் "மாற்றாரை மாற்றழிக்க வல்லானைஎன்னும் இரண்டு பாடல்களில் உணர்த்தியுள்ளார் ஆண்டாள்.

மற்றவர் குற்றத்தை பொறுப்பது மட்டுமல்ல அதை தன் குற்றமாக ஏற்றுக்கொள்ளும் சிறந்த வைணவ பண்பாட்டை இப்பாசுரத்தில் குறிப்பிடுகின்றாள் கோதை நாச்சியார். இராமாயணத்தில் பரதன் இந்த சிறந்த பண்பிற்கு இலக்கணமாக இருந்து நமக்கெல்லாம் உதாரணமாக விளங்கினான்.   

இப்பாசுரத்தையும் 29வது சிற்றஞ் சிறு காலே பாசுரத்தையும் இதுவன்றோ திருப்பாவை என்று பூர்வாசிரியர்கள் குறிப்பிடுவர். இப்பாசுரம் பாகவத தாஸ்யத்தையும், இருபத்தொன்பதாம் பாசுரம் பகவத தாஸ்யத்தையும் குறிப்பிடுகின்றது.

இப்பாசுரத்தில் பகவந்நாமாவை இடையறாது அனுசந்திக்க வேண்டும், பாகவதர்களை மதிக்க வேண்டும், கர்வம்  விடுத்து நைச்ய பாவத்துடன் இருக்க வேண்டும், ஆசார்யர்கள் சொன்ன வழியில்  நடக்க வேண்டும், அனுஷ்டானத்தில் கால தாமதம் செய்யக்கூடாது. பகவானை பாகவதர்களுடன் சேர்ந்து சத்சங்கமாக அனுபவிக்க வேண்டும் என்று பாகவதர்களுக்கு உரிய தான குணங்களை அழகாக எடுத்து காட்டுகின்றாள் கோதை நாச்சியார்.
  
இப்பாசுரத்துடன் உறங்கும் தோழியர்களை எழுப்பும் பாசுரங்கள் நிறைவடைகின்றன. இனி தோழியர்கள் அனைவரும் ஒன்றாக நந்தகோபன் மாளிகைக்கு செல்கின்றனர்.
   



Wednesday, December 29, 2021

மார்கழிப்பதிவுகள் - 14

ஸ்ரீ:

திருப்பாவை # 14
  


ஸ்ரீ
:




சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் 


உங்கள்புழைக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர்வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய்கூம்பினகாண்
செங்கற்பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களைமுன்ன மெழுப்புவான்வாய் பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்
சங்கொடுசக்கரம் ஏந்தும்தடக்கையன்
பங்கயக்கண்ணானைப் பாடேலோரெம்பவாய்!.........(14)


பொருள்: உங்கள் வீட்டு புழக்கடை தோட்டத்திலுள்ள குளத்தில் செங்கழுநீர் மலர்கள் பூத்தன, ஆம்பல் மலர்கள் இதழ் குவிந்து வாய் மூடின. பொழுது விடிந்து விட்டதே உனக்கு விளங்கவில்லையா?

தாம்பூலம் தரியாததால் வெண் பற்களைக் கொண்ட தவசீலர்கள் தாங்கள் பொறுப்பேற்றுள்ள திருக்கோவில்களை திறக்க சென்று விட்டனர்.

முன்னரே வந்து உங்களை நானே வந்து எழுப்புவேன் என்று வாய் சவடால் பேசிய நங்கையே! எழுந்திரு! வெட்கமில்லாதவளே! நாவின் நீட்சியுடையவளே! சங்கு, சக்கரம் ஏந்திய நீண்டக் திருக்கைகளையும், தாமரைக் கண்களையும் உடைய அந்த எம்பெருமானை  கேசவா! மாதவா! நாராயணா! என்று பாடுவோமாக.

கொடுத்த  வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற உயர்ந்த பண்பை இப்பாசுரத்தில் நமக்கு அறிவுறுத்துகிறார் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்.  

*************


 

திருச்சிற்றம்பலம்

திருவெம்பாவை # 14



காதார் குழையாடப் பைம்பூண் கலனாட
கோதை குழலாட வண்டின் குழாமாட
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம் பாடி ஆடேலோர் எம்பாவாய்!..........(14)


பொருள்: பெண்களே! நம் செவிகளில் அணிந்துள்ள தோடுகள் ஆட, உடலில் அணிந்துள்ள பசும் பொற்கலன்கள் ஆட, கருங்கூந்தலாட, அக்கூந்தலில் சூடியுள்ள மலர் மாலைகள் ஆட, அந்த மாலைகளில் மொய்க்கின்ற வண்டின் கூட்டங்கள் எழுந்து ஆடக் இக்குளத்தின் குளிர்ந்த நீரில் மூழ்குவோம்!

எம்பெருமான் ஆனந்த கூத்தாடும் திருச்சிற்றம்பலத்தைப் பாடி, மறைப்பொருளைப்பாடி, அம்மறைப்பொருள ஆமாறு(-ஆம் வண்ணம்) பாடி, முச்சுடர்க்கும் ஒளி வழங்கும் ஒளியாகிய இறைவன் திறங்களைப்பாடி, அவன் திருமுடியில் விளங்கும் பொன் கொன்றை மாலையைப் பாடி, அவன் எல்லா பொருளுக்கும் இறைமையாய் விளங்கும் முதன்மையும்பாடி,(அவரது முழு முதன்மையையும்), முடிவில்லா முடிவையும் பாடி ஏனைய உயிர்களினும் நம்மை வேறுபடுத்துச் சிறப்புற வைத்து மேல் நிலையில் எடுத்து அருள்கின்ற ஆனந்த நடராஜர், சிறந்த வளையல்களை அணிந்த தளிரன்ன கரங்களையுடைய சிவகாமி அம்மையின் ஆகியோரின் திருவடிச் சிறப்பையும் பாடிக் கொண்டே நீராடுவோமாக!

எளிதில் உணரமுடியாத வேதப்பொருளான இறைவனே எளி வந்த கருணையினால் சோதி ரூபமாக, நடராஜரூபமாக காட்சி தருவதையும்,  சிவசக்தி ரூபமாக அருள் பாலிப்பதையும் கூறும் அருமையான பாடல்.

நீராடும் போது மற்றவற்றைப் பற்றி எண்ணாமால் இறைவனைப் பற்றியே எண்ணவேண்டுமென்று மாணிக்கவாசகர் நமக்கு அறிவுறுத்துகிறார். 

Tuesday, December 28, 2021

மார்கழிப்பதிவுகள் - 13



                                                                       

திருசிற்றம்பலம்  










பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து நம்
சங்கந் சிலம்ப சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்க
பங்கயப் பூம்புனல் பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். .....(13)


எம்பெருமானுக்கும், எம் பிராட்டிக்கும்( தனித் தனியாக) பொங்கு மடுவிற்கும் சிலேடை

1. பைங்குவளைக் கார்மலரால்:
கருமையான குவளை மலர்கள் நிறைந்திருப்பதால் எம்பிராட்டி போன்று இசைந்த மடு.(குவளைக் கண்ணி கூறன் காண்க)

செங்கமலப் பைம்போதால்:
 செந்தாமரை மலர்கள் நிறைந்திருப்பதால் எம்பெருமான் போன்று இசைந்த மடு.( செய்யான் காண்க)

2.அங்கங் குருகினத்தால்

அங்கம் - அம்பிகையின் திருமேனியில், திருக்கைகளில் அணிந்துள்ள வளையல் கூட்டத்தால் எங்கள் பிராட்டி போன்று போன்று இசைந்தபொங்கு மடு.

அங்கு அம் - அவ்விடத்தில் அழகிய குருகு இனத்தால்- பறவைக் கூட்டத்தினால் பொங்கும் மடு.

அங்கு அங்கு உருகும் இனத்தால்: அன்பின் மிகுதியால் அங்கே அங்கே உருகும் தொண்டரினத்தால் எங்கோனும், எம்பிராட்டியும் போன்று இசைந்த பொங்கு மடு.


3. பின்னும் அரவத்தால்: 

எம்பெருமான் திருமேனியில் அணிந்துள்ள பாம்புகள் பின்னுவதால் எம்பெருமான் போன்று இசைந்த பொங்கு மடு.

பின்னும் பின்னும் தொடர்ந்து அலையும் திரையால் பொங்கும் மடு.

4. தங்கண் மலம் கழுவார் வந்து சார்தலினால்:

தங்களுடைய உடம்பு அழுக்கை(மலம்) கழுவ வந்து சேர்பவர்களினால் இசைந்த பொங்கு மடு.

தங்களுடைய ஆணவம் முதலிய மலங்களை நீக்க வந்து சேர்பவர்களினால் எம்கோனும் எம் பிராட்டியும் போன்று இசைந்த பொங்கு மடு.

இத்தகைய எங்கோனும் எங்கள் பிராட்டியும் போன்ற  பொங்கு மடுவில் பாய்ந்து, பாய்ந்து கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலிக்கவும், காற்சிலம்புகள் கலந்து ஆரவாரம் செய்யவும், கொள்ளும் கைகள் பூரிப்படையவும், அந்த கைகளால் குடைகின்ற பொய்கை நீர் மேலோங்கவும், இந்த தாமரைப் பூங்குளத்து நீரில் பாய்ந்து நீராடுவோம் எல்லோரும் பாவை விளையாட்டு.

நம் மன அழுக்கு நீங்க இறைவன் திருவடியே சரணம் என்பதை உணர்த்தும் அற்புதமான சிலேடைப்பாடல். மும்மல கலப்பினால் தூங்குகின்ற ஜீவான்மா விழித்து எழுந்து  மலம் நீங்கி சிவனுடன் இணைவதே  பாவை நோன்பின் தாத்பரியம்.

************

ஸ்ரீ:


                                                                                                       


 

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானை கீர்த்திமைப் பாடிப்போய்
பிள்ளைகளெள்ளாரும் பாவை களம் புக்கார்
வெள்ளியெழுந்து வியாழம் முழங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண்; போதரிக்கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய்!...............(13)


பொருள்:


நம் பெருமாள் பறவை வடிவாக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அவனைக் கொன்றவர், மைதிலியைக் கவர்ந்த பொல்லா இராவணனின் பத்துத் தலைகளையும் கிள்ளி அவனை அழித்தவருமான அந்த பரந்தாமனின் வீரப் புகழைப்பாடிக் கொண்டு பாவைமார்களாகிய நம் தோழிகள் அனைவரும் நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்று விட்டனர்.

விடி வெள்ளி தோன்றி விட்டது, வியாழன் மறைந்து விட்டது. விடியலை அறிவிக்க பறவைகள் கூவுகின்றன; மலர் போன்ற அழகிய கண்களைக் கொண்ட பெண்ணே! நீ இன்னும் படுக்கையில் கிடக்கின்றாயே! இந்த நல்ல நாளில் உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டு விட்டு எங்களுடன் கலந்து குளிரக் குளிர பொய்கையில் மார்கழி நீராட எழுந்து வாடி என் கண்ணே!


புள்ளின் வாய்க் கீண்டான்:

இப்பாசுரத்தில் கிருஷ்ணர் செய்த லீலையான பகாசுர வதம் கூறப்பட்டுள்ளது. பூதனை, சகடாசுரன் முதலியோரை அனுப்பியும் கிருஷ்ணரை ஒன்றும் செய்ய முடியாத கம்சன் அடுத்து பகாசுரன் என்னும் அசுரனை ஏவினான். அவனும் கொக்கின் வடிவம் கொண்டு சென்று யமுனை நதிக் கரையில் கண்ணனை விழுங்கினான். அவனது நெஞ்சத்தில் அந்த மணி வண்ணன் மாயக் கண்ணன் நெருப்பைப் போல எரிக்கவே, அவன் பொறுக்க மாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து தன் அலகால் குத்தத் தொடங்கினான். கண்ணன் அவனது வாய் அலகுகளைப் தனது கைகளால் பற்றி இரண்டாக கிழித்து எறிந்து அவனை வதம் செய்தார். இதை "புள்ளின் வாய் கீண்டான் " என்னும் பாசுர வரிகளினால் விளக்குகின்றார் கோதை நாச்சியார்.


பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்:
பொங்கி வந்த கோபத்தினால் தென்னிலங்கைக்கு அதிபதியாகிய இராவணனை வதம் செய்தவர், மனதுக்கு இனியவரான இராமபிரான் என்னும் இராமாவதார பெருமையை "... பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை" என்று பாராட்டுகிறார் ஆண்டாள் நாச்சியார்.




Monday, December 27, 2021

மார்கழிப்பதிவுகள் - 12

 ஸ்ரீ:



கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசற்கடைப் பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தானெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத்தாரும் மறிந்தேலோ ரெம்பாவாய்
! ...........(12)

பொருள்:

இளங்கன்றினை ஈன்ற எருமைகள் தங்கள் கன்றுக்குப் பாலை பொழிவதாக கருதிக் கொண்டு தானே பாலைப் பொழிய, அப்பாலினால் இல்லம் முழுதும் நனைந்து சேறாகியிருக்கும் வளம் நிறைந்த செல்வ கோபாலனின் தங்கையே!


மார்கழி மாதத்து பனி எங்கள் தலையில் மேல் விழ, உன் வீட்டின் தலை வாசல் படியில் நின்று நின் தோழிமார்களாகிய நாங்கள் அனைவரும் தென் இலங்கை வேந்தனாகிய இராவணனை கோபத்தினால் அழித்த இராமபிரானை. இராகவனை, தாசரதியை, மைதிலி மணாளனை, காகுத்தனை  நினைத்த மாத்திரத்தில் நம் மனத்தில் இன்பம் பயக்க வல்ல பெருமாளை அனைவரும் வாயாரப் பாடுகின்றோம்.

அதைக் கேட்டும் கூட இன்னும் வாயைத் திறக்காமல் பேசா மடந்தையாக அப்படியே படுக்கையில் கிடக்கின்றாயே! அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் எழுந்து வந்து எங்களை ஏளனமாகப் பார்க்கின்றனர். இன்னும் என்ன உறக்கம் வேண்டிக்கிடக்கின்றது உனக்கு? எழப் போகின்றாயா இல்லையா?

சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்றவன்:

சீதா பிராட்டியைக் கடத்திக் கொண்டு சென்ற தென்னிலங்கைக்கு அதிபதியாகிய இராவணனை பொங்கி வந்த கோபத்தினால் வதம் செய்தவர், மனதுக்கு இனியவரான இராமபிரான் என்னும் இராமாவதார பெருமையை "சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானை" என்று பாடுகின்றார் கோதை நாச்சியார் இப்பாசுரத்தில்.

தலையில்  பனியினால் ஏற்பட்ட குளிர், கீழே பால் வெள்ளத்தால் ஏற்பட்ட குளிர்ச்சி, இந்நிலையில் நற்செல்வன் தங்கையின் வாசலிலுள்ள ஒரு கட்டையை பிடித்து தொங்கிக்கொண்டு அவளை எழுப்பும் பெண்களின் பக்தியை என்னவென்று சொல்ல.   
*************


திருசிற்றம்பலம்


ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்! நற்தில்லை சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்!
இவ்வானுங் குவலயுமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வலைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவந் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோர் எம்பாவாய்!............(12)


பொருள்:
அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலத்தில் பொன்னின் செய் மண்டபத்துள்ளே தனது இடக் கரத்திலே அனலை ஏந்தி சிவானந்த வல்லியுடன் நாம் எல்லாரும் உய்ய ஆனந்த தாண்டவம் ஆடுகின்றான் எம்பெருமான், நமக்கு ஆனந்த நடராசனாக சிவகாமியம்மையுடன் அருட்காட்சி தருகின்றார்.

 நமது பிறவிப் பிணி தீருவதற்கு நாம் சென்று சாரும் அவ்வெம்பெருமான், நாம் துள்ளி ஆடுதற்குரிய (மொய்யார்) தடம் பொய்கை என்ற தீர்த்த வடிவினராகவும்  விளங்குகின்றார்.

இந்நிலவுலகத்தையும், விண்ணுலகத்தையும், மற்றும் சகல பிரம்மாண்டத்தையும் எல்லோரையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் திருவிளையாடல் புரிகின்றான் ஐயன். (ஐந்தொழிலும் ஐயனின் விளையாட்டே).

அந்தப் பெருமானின் புகழைப் பாடிக் கொண்டு, கைகளில் உள்ள வளையல்கள் ஒலிக்கவும், இடையில் உள்ள மேகலை ஒலி துள்ளவும், மலர்கள் சூடிய கூந்தலில் மேல் வண்டுகள் ஒலிக்கவும், தாமரை பூத்த இப்பொய்கை நீரைக் குடைந்து நம்மை உரிமையுடைய தலைவனது பொன் போன்ற திருவடிகளை துதித்து பெரிய சுணை நீரிலும் நாம் மார்கழி நீராடுவோமாக! (இறைவனின் பொற் திருவடிகளை அடைவோமாக)

திருசிற்றம்பலம்

Saturday, December 25, 2021

மார்கழிப்பதிவுகள் - 10

 ஸ்ரீ:



நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மானாய்!
மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
பேற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றுமுனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்றவனந்த லிடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்! ..............(10)



பொருள் :விரதமிருந்து சுவர்க்கம் போகின்ற அம்மையே! நாங்கள் இவ்வாறு கூப்பிட்டும் கதவைத்தான் திறக்கவில்லை, பதிலும் கூடவா தர மாட்டாய். புண்ணிய மூர்த்தியாகிய இராமபிரானால் முன்னொரு காலத்தில் எமன் வாயில் வீழ்ந்த கும்பகர்ணன் உறங்கும் போட்டியில் உன்னிடம் தோற்று அவனுடைய பேருறக்கத்தை உனக்கு கொடுத்தானோ?

ஆழ்ந்த உறக்கமுடையவளே! பெறர்கரிய ஆபரணம் போன்றவளே! வாசம் மிகுந்த துளசி மாலையை திருமுடியில் அணிந்துள்ள நாராயண மூர்த்தி நம் நோன்புக்கு பரிசாக பேரின்பத்தை நல்குவான். எனவே உறக்கம் தெளிந்து வந்து கதவைத் திறடி.

இராமாவதாரம்:
இப்பாசுரத்தில் இராம பெருமானின் வல்லமையை பாடுகின்றார் ஆண்டாள். இராமபிரானால் இறந்து பட்டவன் கும்பகர்ணன். உன் உறக்கத்திற்கு தோற்று, அவன் உறக்கத்தையும் உனக்கு தந்து விட்டானோ? எனப் பெண்கள் ஒருவரையொருவர் எள்ளி நகையாடும் வகையில் இதனை எடுத்துரைக்கின்றார் ஆண்டாள். "போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ" என்று பாடுகிறார் ஆண்டாள்.

கீதாசாரத்தை எடுத்துச் சொல்லி உலகத்திலே உள்ளவர்களை திருத்த பூமிப் பிராட்டி வராஹ அவதாரத்திலே எம்பெருமானின் மூக்கின் மேல் அமர்ந்திருந்த போது

. அவன் திருவடிகளில் புஷ்பத்தை இட்டு அர்ச்சனை செய்யவும்.

. அவன் திருநாமத்தை உரக்கச் சொல்லவும்

.அவன் திருவடிகளில் ஆத்ம சமர்ப்பணம் செய்யவும் செய்த சங்கல்பத்தை ஸ்ரீ ஆண்டாளாக அவதரித்த போது நிறைவேற்றுகின்றாள்.

 இது வரை பார்த்த திருப்பாவையின் முதல் பத்து பாசுரங்களில் எம்பெருமானின் திருநாமங்களைப் போற்றி பாடியுள்ளார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் என்பது பெரியோர் வாக்கு. 

 ***********  


திருசிற்றம்பலம்








பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாத மலர்
போதார்ப் புணை முடியும் எல்லாப் பொருள் முடிவே!
பேதை ஒரு பால் திருமேனி ஒன்றல்லன்
வேத முதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழந் தொண்டருளன்
கோதில் குலத்தவன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்!
ஏதவன் பேர்? ஏதவன் பேர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்?
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்!..................(10)


பொருள்:

சிவபெருமானின் திருக்கோவிலை சார்ந்து வாழும் குற்றமற்ற குலத்தில் தோன்றிய கோயிற்ப் பணிப் பெண்களே!

அரியும் அயனும் அடி முடி காண முடியா அனற்பிழம்பாக, திருவண்ணாமலையாக, லிங்கோத்பவராக எம்பெருமான் நின்ற எம்பெருமானின் வீரக் கழலணிந்த திருவடி மலர்ப் பாதங்கள் பாதாளம் ஏழுக்கும் கீழே சொற்களைக் கடந்த எல்லையில் உள்ளன. கொன்றை, ஊமத்தை, சந்திரன், கங்கை அணிந்த அவரது திருமுடி மேலோர்க்கும் மேலாக, எல்லாவற்றிக்கும் மேலாக அண்டங் கடந்து விளங்குகின்றது.

அவன் மாதொரு பாகன், மங்கை கூறன், மாவகிடண்ண கண்ணி பங்கன், ஆதலால் திருமேனி ஒன்று உடையவனல்லன். எல்லாப் பொருள்களிலும் பரவி உள்ளவன். அவன் மறைக்கும் முதல்வன். விண்ணகத்தாரும், மண்ணகத்தாரும், அளவிறந்த காலமாக எந்தெந்த முறையில் பரவிப் புகழ்ந்தாலும் வரையறுத்து புகழ முடியாத உயிர்த்துணைவன்.

அந்தப் பெருமானின் ஊர் யாது? பேர் யாது? அவருக்கு உறவினர் யார்? அயலார் யார்? அவரைப் பாடும் தன்மை எப்படி? அன்புடன் கூறுவீர்களா?

திருசிற்றம்பலம்

Friday, December 24, 2021

மார்கழிப்பதிவுகள் - 9

 

திருசிற்றம்பலம்

திருவெம்பாவை # 9



முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே!

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!

உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்

உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்;

அன்னவரே எங்கணவர் ஆவார் அவர் உகந்து

சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்;

இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோ மேலோர் எம்பாவாய்! .....(9)


(  இது வரை பெண்களை எழுப்பிய பாடல். இப்பாடலில் இருந்து பெண்கள் எல்லோரும் சேர்ந்து பாடும் பாடல்கள். )

பொருள்: 
இந்த பிரபஞ்சம் முழுவதையும் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடும் எம்பெருமானே, நீவிர் முன்னரே தோன்றிய பழமையான எல்லா பொருட்களுக்கும் முற்பட்ட பழம் பொருள். அவ்வாறே பின்னே தோன்றிய புதுமைப் பொருட்களுக்கெல்லாம் புதுமையாக தோன்றும் தன்மையன்.


உன்னை இறைவனாக பெற்ற நாங்கள்; உன் சிறந்த அடியார்களாவோம். ஆதலால் உன்னுடைய அடியார்களது திருவடிகளை வணங்குவோம். அங்ஙனமே அவர்களுக்கே உரிமையுடையவர்களாவோம், அந்த சிவனடியார்களே எங்களது கணவர்கள் ஆவார்கள். அவர்கள் விரும்பி கூறும் முறையிலே அடிமைப் பணி செய்வோம்.
எங்கள் அரசே! இந்த வகையான வாழ்க்கையை எங்களுக்கு நீங்கள் அருளுவீர்களானால் எந்த குறையும் இல்லாதவர்களாவோம்! ஓம் நமசிவாய!

பாவை நோன்பின் ஒரு நோக்கமான பெண்கள் நல்ல கணவனைப் பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டும் பாடல். 


திருசிற்றம்பலம்

***************

ஸ்ரீ:

திருப்பாவை # 9





 மாமாயன்  மாதவன்  வைகுந்தன்

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழ துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை யெழுப்பீரே? உன் மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்! .........(9)


பொருள்:


தூய மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மாடம் அதிலே சுற்றிலும் விளக்குகள் ஒளிர்கின்றன, அகில் முதலிய தூபம் மணக்கின்றன, சப்ர மஞ்ச கட்டிலில் ஒய்யாரமாக சாய்ந்து உறங்கும் மாமன் மகளே! எழுந்து வந்து கதவைத் திறடி கண்மணி!

(மாமன் மகள் இவ்வாறு எழுப்பபட்டும் அவள் எழவில்லை;ஆதலால் அவள் தாயை அழைத்து அவளை எழுப்பும்படி வேண்டுகின்றனர்)

மாமியே! உங்கள் மகள் எங்களுக்கு பதில் ஏதும் சொல்லாததால் அவள் என்ன ஊமையா? அல்லது செவிடா? ; ஓயாத உறக்கமா? அல்லது ஒழிவில்லாத ஆழ்ந்த உறக்கத்தில் மந்திரத்தினால் கட்டுப்பட்டு கிடக்கின்றாளா?


மாமாயனே! மதுசூதனே! மாதவனே! வைகுந்தனே என்று எம்பெருமானுடைய திருநாமங்கள் பலவற்றையும் கூறினோம், அந்தப் பெருமானைப் பார்க்கப் போகலாம் என்று சொல்லி எழுப்புங்களேன்.

மாயம் என்பதற்கு பொது அர்த்தம் பொய் என்பது ஆனால் வைஷ்ணவ சம்பிரதாயத்தில்  ஆச்சர்யம் என்று பெரியோர்கள் பொருள் கூறுவர். பக்தர்களை தனது சௌலபியத்தால் ஆச்சிரிசியப்படுத்துவதால் அவன் மாமாயன்.  

இப்பாசுரத்தின் உட்கருத்து: இங்கே சொல்லப்படும் தத்துவம் – கண்ணனை அடைவதான உயர்ந்த புருஷார்த்தத்தை இவர்களுக்கு புருஷகாரம் செய்து அருள அந்த கிருஷ்ணனுக்கு பிரியமான அந்த கோபிகையை பிடிக்கிறார்கள். அவளுடைய தாயாரையே ஆசார்யனாகக் கொண்டு அந்த கோபிகையை வேண்டுகிறார்கள். ஆக மோக்ஷ புருஷார்த்தத்தை அடைய புருஷகாரம் தேவை. அதற்கு ஆசார்ய அனுக்ரஹம் தேவை என்பது தேறும்.

இந்த பாசுரத்தில் பகவன் நாமாவிற்கு உள்ள மகிமை சொல்லபட்டு இருக்கிறது.பகவான் நாமத்துக்கு அவரை விட சக்தி அதிகமாம். திரௌபதியும் சரி,கஜேந்த்ரனும் சரி தங்களால் தங்களை காப்பற்றிக்கொள்ள முடியாது என்று தெரிந்தவுடன் அச்சுதா,அனந்தா,கோவிந்தா .சங்க சக்ர கதா பாணி என்றெல்லாம் அழைத்து பரிபூர்ண சரணாகதி அடைந்து விட்டார்கள்.அந்த க்ஷணமே அந்த நாமங்கள் காப்பாற்றினவாம்..அப்பேற்பட்ட சக்தி அவற்றுக்கு உண்டு. இங்கே மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று பல பேர்களால் சகஸ்ர நாமத்தினால் கூவி அழையுங்கள் என்கிறாள் ஆண்டாள்.
 





Thursday, December 23, 2021

மார்கழிப்பதிவுகள் - 8

   

ஸ்ரீ:

திருப்பாவை # 8


மல்லரை மாட்டிய தேவாதி தேவன் 



கீழ்வானம் வெள்ளன் றெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறை கொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்! ...........(8)


பொருள்:
மனமகிழ்ச்சியுடைய பாவையே! கிழக்கே வானம் வெளுத்து விட்டது. எருமைகள் எல்லாம் சிறிது நேரத்திற்கு முன்பே விடுதலை பெற்று மேய்ச்சலுக்கு சென்று விட்டன.


பாவை நோன்பு செய்யும் இடத்திற்கு நமது தோழிமார்கள் பலர் சென்று விட்டனர். மீதமுள்ளவர்கள் அங்கு செல்லும் நோக்கத்துடன் புறப்படுகின்றனர், அவர்களை போக விடாமல் தடுத்து உன்னை அழைக்க வந்து நின்றோம். காரிகையே! காலம் தாழ்த்தாமல் எழுந்து வா!

நம் பெருமான் குதிரை வடிவம் எடுத்து வந்த மாய அசுரனை வாயைப் பிளந்து மாய்த்தவர். மதுராபுரியிலே கொடிய கஞ்சன் அனுப்பிய மல்லர்களை வீழ்த்தியவர்.

அந்த தேவர்களுக்கெல்லாம் பெரிய தேவனை, கச்சிப் பதி மேவிய களிற்றை நாம் சென்று அடைந்து பாடி, வேண்டிக் கொண்டு வணங்கினால் நம்மீது இரக்கம் காட்டி" வா! வா!" என்று அழைத்து நாம் வேண்டும் வரத்தை அருளும் வரதராஜன் அவர். எனவே விரைவில் எழுந்து வா பெண்ணே!

இப்பாசுரத்தில் அவதாரப் பெருமை:

மாவாய்ப் பிளந்தான்:

கோகுலத்தில் வளரும் கண்ணனை அழிக்க பல அசுரர்களை அனுப்பியும் அவர்களே கண்ணன் கையில் வதம் ஆவது பற்றிக் கவலைப்படாமல் கம்சன் மேலும் கேசி என்னும் ஒரு அசுரனை அனுப்பினான். அவனும் குதிரை வடிவம் எடுத்து தன் குளம்பால் கண்ணனைக் கொல்ல வெகு வேகமாக ஓடி வந்தான். கண்ணன் அந்தக் குதிரையின் வாயைப் பிளந்து அவனையும் வதம் செய்தார் என்பதை "மாவாய்ப் பிளந்து" என்னும் பாசுர தொடரினால் பாடுகின்றார் ஆண்டாள்.


மல்லரை மாட்டியவன்:
மதுராவில் நடை பெறும் வில் விழாவிற்காக கண்ணனையும் பலராமரையும் வஞ்சனையாக அழைத்த கஞ்சன் அவர்கள் இருவரையும் கொல்ல சாணுரன், முஷ்டிகன் என்னும் மல்லர்களை ஏற்பாடு செய்திருந்தான். கண்ணன் அந்த மல்லர்களுடன் மல்யுத்தம் செய்து அனைவரையும் தோற்கடித்ததை ஆண்டாள் “மல்லரை மாட்டிய தேவாதி தேவனை" என்று பாடுகிறார்.

இப்பாசுரத்தின் உட்கருத்துகிழக்கு  வெளுப்பது என்பது  ஸத்வகுணம் தலையெடுப்பதற்கான அறிகுறி, எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண்.. தமோ குணங்கள் விலகிப்போவதாகக் கூறுவது.


 

திருச்சிற்றம்பலம்






திருவெம்பாவை # 8


கோழி சிலம்ப சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப் பொருளை பாடினோம் கேட்டிலையோ?
வாழியீதெனன உறக்கமோ? வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைப்பங்காளனையே பாடேலோ ரெம்பாவாய்! ......(8 )


பொருள்நற்காலை பொழுது விடிந்து விட்டது, கோழிகள் கூவுகின்றன, எங்கும் சிறு பறவைகள் ஒலிக்கின்றன; நாதசுரம் ஒலிக்கின்றது, எங்கும் வெண் சங்குகள் முழங்குகின்றன. நாங்கள் அனைவரும் "தனக்குவமையில்லாத பேரொளியை, ஒப்பற்ற பேரருளை, மேலொன்றுமில்லாத மெய்ப் பொருளை, பரஞ்சோதியை பாடினோமே அது உனக்கு கேட்கவில்லையா? பெண்ணே வாழ்வாயாக! உன் உறக்கம் தான் எப்படிப்பட்டதோ! வாயைத் திறந்து ஒரு வார்த்தையாவது சொல்.

அருட்பெருங் கடலாகிய எம்பெருமானுக்கு நீ அன்பு செய்யும் முறை இதுதானா? ஊழி காலத்தில் அனைத்து ஜீவ ராசிகளும் அந்த எம்பெருமானது திருவடிகளிலே அடங்க தனி முதல்வனாய் விளங்கும் ஒப்பற்ற தலைவனை, உமையொரு பாகனை, ஏழைப் பங்காளனை பாட வேண்டாமா? எழுந்திரு கண்ணே!


காலைக்காட்சியை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் பதிகம். எம்பெருமான் ஏழைப் பங்காளன் என்று கூறும் பாடல். ஏழை என்பது ஏந்திழை என்று உமையம்மையை குறிப்பது. எனவே ஏழைப் பங்காளன் என்பது  அர்த்தநாரீஸ்வரராக எம்பெருமான் விளங்குவதை குறிக்கின்றது.  இப்பாடலில் தமிழுக்குரிய  சிறப்பு எழுத்தான "ழ" ஒன்பது முறை வந்திருப்பது சிறப்பு. 

Wednesday, December 22, 2021

மார்கழிப்பதிவுகள் - 7

  

திருசிற்றம்பலம் 


திருவெம்பாவை # 7

அன்னே! இவையுஞ் சிலவோ? பல அமரர்
உன்னற்கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்ப சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னா! என் னாமுன்னம் தீ சேர் மெழுகொப்பாய்
என்னானை என் அரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங் கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசே லோர் எம்பாவாய் .........(7)


பொருள்:  தாயினும் மேலாகிய பெண்ணே! நாங்கள் இது வரையும் கூறியவை கொஞ்சமோ? இறைவன் தேவர்கள் பலராலும் நினைத்து பார்க்கவும் அறியன், ஒப்பற்றவன்! பெரும் புகழையுடையவன்.

விடியற்காலையில் அந்த பெருமானுடைய இசைக் கருவிகளின் ஒலி கேட்டால் உடனே "சிவா", "சிவா" என்று வாய் திறப்பாயே. "தென்னா" என்று( தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி) அவர் பெயரை கூறும் முன்னாலேயே நெருப்பிலிட்ட மெழுகு போல் உள்ளம் உருகுவாயே! அத்தகைய உனக்கு என்ன நேர்ந்தது? இன்னும் விளையாடுகின்றாயா? உன்னுடைய சிறப்புத்தன்மைகளுள் இந்த தூக்கமும் ஒன்றோ?

நாங்கள் எல்லோரும் சேர்ந்தும் தனித் தனியாகவும், "என் தலைவனே!, என் அரசனே! இனிய அமுதனே" என்று பலவாறாகவும் பாடும் பொழுதும் கொடிய மனமுடையவள் போல வாளா கிடக்கின்றாயே! உன் உறக்கத்தின் தன்மைதான் என்னே! இத்தூக்கத்தை நீ என்ன பரிசாக கருதுகின்றாயா? ( எழுந்து வா சிவன் தாள் போற்றலாம் என்று அழைக்கிறாள்)

காலை தூக்கத்தில் இருந்து விடுபவர்கள்  வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி. சூரியனைக் காணாத ஒவ்வொரு நாளும் வீணே என்கிறது சாஸ்திரம்.

**********

         ஸ்ரீ:



கேசவன்



ஆய்ச்சியர் தயிர் கடைதல்
 




திருப்பாவை #  7

கீசு கீச்சென்றெங்கும் ஆணைசாத் தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே?
காசும் பிறப்பும் கலகலப்ப கைப்பேர்த்து
வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயண மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்!

பொருள்:

மதி கெட்ட பெண்ணே! விடியற்காலை நேரமாகி விட்டது ஆனைசாத்தன் (வலியன் )பறவைகள் கீசு கீசு என்று தங்களுக்குள் ஒன்றோடு ஒன்று கலந்து கொண்டு பேசும் பேச்சின் ஒலி இன்னும் உன் காதுகளில் விழவில்லையா?


நெய் மணம் வீசும் கூந்தலையுடைய இடைச்சியர்கள், தங்கள் மார்பில் அணிந்துள்ள ஆமைத் தாலியும், அச்சுத்தாலியும் "கலகல" என்று எழுப்ப தங்கள் கைகளை அசைத்து மத்தினால் தயிரைக் கடையும் "சலசல" என்னும் ஒலியும் கூடவா கேட்கவில்லை?

தலைமையுடைய பெண்ணே! அந்த பரந்தாமனை, நாராயண மூர்த்தியை, கேடில் விழுப் புகழ் கேசவனை, அண்ணலை, அச்சுதனை, அனந்தனை நாங்கள் அனைவரும் பாடுகின்றோம்! நீ அதைக் கேட்டுக் கொண்டே கேட்காதது போல் படுக்கை சுகத்தில் அமிழ்ந்து கிடக்கின்றாயே, ஒளி பொருந்திய உடலை உடைய கண்ணே! ஓடி வந்து கதவைத் திறடி என் கண்மணி.

வெளியே கிளம்பும் போது "கேசவா" என்ற திருநாமத்தை சொல்ல வேண்டும் என்பதை இப்பாசுரம் உணர்த்துகின்றது.




உறங்குகின்ற பெண்ணை எழுப்பும் வண்ணம் அமைந்த மற்ற ஒரு பாசுரம், இதிலும் காலை காட்சியை சிறப்பாக படம் பிடித்துக் காட்டியுள்ளார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள். இப்பாசுரத்தில் நாயக பெண் பிள்ளையை எழுப்புகிறாள் கோதை நாச்சியார்



Tuesday, December 21, 2021

மார்கழிப்பதிவுகள் - 6

ஸ்ரீ:

திருப்பாவை # 6








புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில்
வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்! .........(6)


பொருள்:   பெண்ணே பறவைகள் கூவத்தொடங்கிவிட்டன, பறவைகளுக்கு அரசனான கருடனுக்கு இறைவன் நம் பெருமாள் எழுந்தருளியுள்ள திருக்கோவிலிலிருந்து வெண்சங்கு முழங்கும் ஓசை உன் காதில் விழவில்லையா?


நம் கண்ணன் வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையில் தடவிய நஞ்சை உண்ட மாயவன். கஞ்சன் அனுப்பிய சகடாசுரனை எட்டி உதைத்து மாள வைத்த திருவடிகளையுடையவன். பாற்கடல் அலை மேலே பாம்பணையில் பள்ளி கொண்ட பரந்தாமன், உலகுக்கெல்லாம் வித்தானவன்.

அந்த பரமனை உள்ளத்தே கொண்டு முனிவர்களும், யோகிகளும் மெள்ள எழுந்து "ஹரி"," ஹரி" என்று ஓதுகின்றனரே அந்த பேரொலி உள்ளம் புகுந்து எங்களை குளிரவைக்கின்றது, உன்னை குளிர வைக்கவில்லையா? சிறு பிள்ளையாய் இருக்கின்றாயே! எழுந்து வா.


அதிகாலை பிரம்மமுகூர்தத காலத்தை அருமையாக காட்டும் பாடல். முதல் ஐந்து பாசுரங்களில் எம்பெருமானின் பெருமைகளையும் பாவை நோன்பின் சிறப்புகளை கூறி வந்த ஆண்டாள் நாச்சியார் ஒரு ஜீவாத்மா மற்றொரு ஜீவாத்மாவை எழுப்பி மாயையை விடுத்து எம்பெருமானின் திருவடியில் சரணடைவோம் வாருங்கள் என்று அழைப்பதைப் போல் தன்னை ஒரு இடைச்சியாக பாவித்து மற்ற பெண்களையும் எழுப்பும் பாசுரங்கள் அடுத்த பத்துப்பாசுரங்கள்.


பேய் முலை நஞ்சுண்டவன்:

கண்ணை கொல்ல கஞ்சன் முதலில் அனுப்பிய அரக்கி பூதனை. அவள் ஒரு இளம் பெண் வடிவம் எடுத்து கோகுலம் வந்து குழந்தையாக இருந்த கண்ணனை நஞ்சுப்பால் கொடுத்து கொல்ல வந்தாள். அவள் நஞ்சுப் பால் கொடுக்கும் போது கண்ணன் பாலோடு சேர்த்து அப்படியே அவளது உயிரையும் சேர்த்து உறிஞ்சினார், அவள் சுய ரூபம் பெற்று அலறி வீழ்ந்து மாண்டாள். இவ்வாறு வஞ்சனையால் வந்த பேய்ச்சி கொடுத்த நஞ்சை அவளுக்கே நஞ்சாக்கினார் எம்பெருமான். இதை பட்டர் பிரான் கோதை "பேய் முலை நஞ்சுண்டு" என்று பாடுகிறார்.


கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சியவன்:

பூதனை மாண்டபின் கண்ணனைக் கொல்ல மற்றொரு அசுரனை அனுப்பினான் கஞ்சன். அவனும் சகட உருவம் எடுத்து உருண்டோடி வந்தான் சகடாசுரன் கண்ணனைக் கொல்ல. ஆனால் பால கிருஷ்ணனோ தனது பிஞ்சுக் கால்களால் அந்த சகடத்தை உதைத்து அவனையும் வதம் செய்தார். இதை ஆண்டாள் நாச்சியார் "கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சி" என்று பாடுகிறார்.

***********

   

திருசிற்றம்பலம் 


 திருவெம்பாவை # 6


மானே! நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறனே அறிவரியான்
தானே வந்தெம்மை தலையளித்தாட் கொண்டருளும்
வான் வார் கழல் பாடி வந்தோர்க்குன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோ ரெம்பாவாய்!


பொருள் : மான் போன்ற மருட்சியுடைய விழிகளையுடைய காரிகையே! " நாளை நானே வந்து உங்களையெல்லாம் எழுப்புவேன்" என்று நேற்று சொல்லிய நீ வெட்கமில்லாமல் இன்னும் தூங்குகின்றாயே? அந்த சொல் எந்த திசையில் போயிற்று என்பதை சொல்? இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா?

தேவர்களும், மனிதர்களும் மற்றுமுள்ள சகல ஜீவராசிகளும் அறிதற்கரியவனான எம்பெருமானின் மேலான திருவடிகள் எளியவர்களான நமக்கு தானாகவே வந்து காத்து ஆட்கொள்வன. அந்த வீரக் கழலணிந்த திருவடிகளை

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க

புறத்தார்க்கு சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவுவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்கள் வெல்க என்று மனமுருகிப் பாடி வந்த எங்களிடம் வாய் திறந்து பேசினாயில்லை! உடல் உருகவில்லை உனக்குத் தான் இந்நிலை பொருந்தும். நம் அனைவரின் தலைவனாகிய சிவபெருமானை பாட எழுந்து வா கண்ணே!

Monday, December 20, 2021

மார்கழிப்பதிவுகள் - 5

                                                                                

திருசிற்றம்பலம்





மாலறியா நான்முகனும் அறியா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய் படிறீ கடை திறவாய்!
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடி சிவனே! சிவனே! என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்!
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்! ...........(5)

பொருள்: மாலும் அயனும் அறிய முடியா அருட்பெரும் மலை நமது திருவண்ணாமலையார், அந்த பரமேஸ்வரனை நாம் அறிந்து விட முடியும் என்பது போல் மற்றவர்கள் நம்பும்படியாக பொய்யை பாலும் தேனும் ஒழுகப் பேசிய வாயினையுடைய வஞ்சகியே! வந்து கதவைத் திற!


இறைவன் எம்பெருமான் விண்ணுலகினராலும், மண்ணுலகினராலும், மற்றும் உள்ள உலகினராலும் யாராலும் காணுதற்கு அருமையானவன். அந்த பெருமான் எளி வந்த கருணையினால் அவர் தம்முடைய திருக்கோலத்தையும் காட்டி, எளியவர்களான நம்மை ஆட்கொண்டு அருளி சீராட்டுகின்ற திறத்தையும் பாடுகின்றோம்! சிவனே! சிவனே! என்று உள்ளுருகி உரக்கப் பாடுகின்றோம்! அந்த ஒலி கேட்டும் நீ உணர்ந்தாயில்லை! உணர்ந்து விழித்தாயில்லை! மணம் பொருந்திய கூந்தலை உடையவளே! இதுவோ உனது தன்மை போலும்.

எம்பெருமான் அக்னி ஸ்தம்பமாக அண்ணாமலையாராக நின்ற போது அகந்தை கொண்ட மாலும் நான்முகனும் அவரது திருமுடியையும், திருவடியையும் காண முடியாமல் நின்றதையும் அதே சமயம் எளி வந்த கருணையினால் அவர் தனது பக்தர்களுக்கு அருளுபவர் என்பதை     மாலறியா நான்முகனும் அறியா மலையினை நாம் போலறிவோம்  என்பதன் மூலம் மாணிக்க வாசக சுவாமிகள்  விளக்குகின்றார். 


***********

ஸ்ரீ:






 தூயப் பெருநீர் யமுனைத் துறைவன்


மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் வந்து தோன்றும் அணி விளக்கை
தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றளவும்
தீயினால் தூசாகும்! செப்பேலோ ரெம்பாவாய். ..........(5)


பொருள்:    கண்ணனது பெயர் சிறப்பு :

பாற் கடலில் பள்ளி கொண்ட பரமன் கண்ணன், நிலைத்த தன்மையுடைய மதுராவில் தோன்றிய மாயன், தூய்மையும் பெருமையும் உடைய யமுனைக் கரையில் ராச லீலைகள் புரிந்தவன். ஆயர் குலத்தினில் வந்துதித்த அழகிய விளக்கு. தன்னைப் பெற்ற தாயை எனன பேறு பெற்றாள் இவனைப் பெற்ற வயிற்றுடையாள் என்று உலகத்தோரெல்லாம் புகழச் செய்த தாமோதரன்.

(என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள் என்னும் வார்த்தையெய்துவித்த இருடீகேசா! முலையுணாயே என்பது பெரியாழ்வாரின் பாசுரம்)

அந்த பெருமாளை நாம் தூய மனதுடன் நல்ல மலர் தூவி வணங்குவோம்; வாயினால் அயர்விலா அமரர்கள் ஆதிக் கொழுந்தே, ஆழிப் படையந்தணணே, உய்ய்க் கொள்கின்ற நாதனே என்று அவனதுப் புகழைப் பாடுவோம்; மனதினால் அவனது தன்மையை நினைப்போம், இவ்வாறு காலையில் மார்கழி நீராடி கண்ணனை பூசை செய்தால் நாம் முன்பு செய்த பிழைகளும், இனி மேல் வரும் பொருட்டிருக்கும் பிழைகளும் நெருப்பில் இட்ட தூசு போல் அழிந்து விடும் ஆகையால் அவனது புகழைப் பேசுவாமாக!


வராக அவதாரத்தில் பூமி தேவியாகிய தாயார் என்ன பிரதிக்ஞை செய்தாளோ அதை இப்பாசுரத்தில் மனதினால் சிந்தித்து, வாயினால் பாடி, தூமலர் தூவி தொழ வேண்டும் என்று நமக்கு வலியுறுத்துகிறாள் கோதை நாசியார்.

இவ்வைந்து பாசுரங்களும் மார்கழி நோன்புக்கான அவதாரிகை எனப்படும் முன்னுரையாகும். ஆறாவது பாசுரத்திலிருந்து தன் பத்து தோழியர்களை எழுப்பும் பாடல்கள் ஆகும்.