Thursday, January 20, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 8

மார்கழிப்பதிவுகளினால் இடையில் தடைபட்ட பதிவுகள் மீண்டும் தொடர்கின்றன. வந்து தரிசியுங்கள் அன்பர்களே.

தான்தோன்றி மலை கல்யாண வெங்கடரமணர் தரிசனம்

கருடப்பார்வையில் தான்தோன்றி மலை 



அடுத்து அடியோங்கள் தரிசித்த தலம் தான்தோன்றிமலை ஆகும். கரூரிலிருந்து திண்டுக்கல் செல்லும் பாதையில்   4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் தான்தோன்றிமலையில் அருள்பாலித்து வருகிறார் அருள்மிகு கல்யாண வெங்கடரமண பெருமாள். சுயம்பு என்ற வடமொழி பதத்தின் தமிழ் சொல்லே  தான்தோன்றி.  திருப்பதிக்கு சென்று தரிசிக்க முடியாதவர்களும், வயதானவர்களும் இம்மலையில் உள்ள பெருமாளை தரிசனம் செய்யலாம் என்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு எனவே இத்தலம் தென்திருப்பதி என்றும் அழைக்கப்படுகின்றது.  ஒரு பாலகனுக்காக தானாக தோன்றி தலையை சாய்த்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். பலருக்கு இவர் குலதெய்வமாக அருள் பாலிக்கிறார்.

தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறும் இத்திருக்கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது, இது ஒரு குடைவரைக் கோயில் ஆகும். இந்த குடைவரைக் கோயில் கிழக்கிலிருந்து மேற்காக அரை பர்லாங் தூரம் பரவியுள்ள ஒரு குன்றின் மேற்புறம் அமைந்துள்ளது. இக்குன்று மேல் புறம் உயர்ந்தும், கீழ்ப்புறம் தாழ்ந்தும் அமைந்துள்ளது. கருவறையின் குகைக்கு மேலே மலை மீது கட்டப்பட்ட விமானம்  கம்பீரமாய் பிரகாசிக்கிறது. கருவறையின் நடுவில் உயர்ந்த மேடை உள்ளது. மேடையின் கீழ்ப்புறம் கல்யாண வெங்கடரமண சுவாமி பாறையிலேயே புடைப்புச் சிற்பமாகக் காட்சியளிக்கிறார். குடைவரையின் முன்பாக காணப்படும் மகாமண்டபம் மற்றும் பிற சன்னதிகள் பிற்காலத்தில் கட்டப்பட்டவையாகும். கோயிலின் எதிரில் நீராழி மண்டபத்துடன் கூடிய திருக்குளம் உள்ளது. அடியோங்கள் தரிசித்த சமயம் தாமரைக் கொடிகளுடன் நீர் நிரம்பி எழிலாக இருந்தது.

வாயு தேவனுக்கும் ஆதி சேஷனுக்கும் நடந்த போட்டியின் உடைந்து விழுந்த திருவேங்கடமலையின் ஒரு துண்டு இக்குன்று என்றொரு ஐதீகம் உள்ளது. அதற்கான கதை இதோ,   ஒரு சமயம் திருப்பாற்கடலில் திருமால், லட்சுமிதேவியுடன் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தார். வாசலின் வெளியே ஆதிசேஷன் காவல் இருந்தார். அப்போது வாயுபகவான் இறைவனை சேவிக்க உள்ளே நுழைய முயன்றார். ஆதிசேஷனோ, வாயுபகவானை தடுத்து நிறுத்தினார். அதனால் இருவருக்குமிடையே யார் பெரியவர் என்ற மோதல் ஏற்பட்டது. வெளியே வந்த பகவான், இருவரிடையே சமசரம் செய்து இருவருக்கும் ஒரு போட்டியையும் வைத்தார்.

ஆதிசேஷன் திருவேங்கடமலையை தனது உடலால் அழுத்தி பிடித்து கொள்ள வேண்டும். வாயுதேவன் அதை தனது பலத்தால் அசைத்து பிடுங்க வேண்டும். இதுதான் போட்டி. ஆதிசேஷன், மலையை தனது உடலால் சுற்றி இறுக அழுத்தி கொண்டார். வாயு பகவான் அதனை பெயர்த்தெடுக்க முயன்றார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. கோபம் கொண்ட வாயு பகவான், தனது முழு பலத்தையும் கொண்டு பெரும் புயலாக வீசியபோது மலை சிதறுண்டு நாலா பக்கமும் விழுந்தன. அவ்வாறு சிதறி விழுந்த குன்றுகளில் ஒன்றுதான் இந்த தான்தோன்றிமலை என்று கூறப்படுகிறது.  

தலவரலாறு : ஒரு காலத்தில் சோமசர்மா எனும் பக்தர் ஒருவர் தனது மனைவியோடு இல்லறம் எனும் நல்லறத்தை நடத்தி வந்தார். அவர்களுக்கு மகப்பேறு இல்லாதது பெருங்குறையாக இருந்தது. அவர்கள் நியமத்துடன் பல விரதங்களை மேற்கொண்டனர். ஒரு நாள் நள்ளிரவில் அவர் தியானம் செய்து கொண்டு இருந்த போது, நாரதர் அவர் முன் தோன்றி, முற்பிறவிப் பாவம் தீர, திருப்பதி யாத்திரையை நீ மேற்கொள்வாயாக என ஆணையிட்டு மறைந்தார். சோமசர்மாவும் அவரது மனைவியும் அதன்படி திருப்பதிக்கு நடந்தே யாத்திரை செய்தனர். காவிரி உற்பத்தியாகும் மலைப்பிரதேசத்தை அடைந்து புனித காவிரியில் நீராடி பூஜைகள் செய்து, தியானத்தில் ஆழ்ந்திருந்தனர். அப்பொழுது நாரதர் அவ்விருவர் முன்பு மீண்டும் தோன்றி காவேக்கரையின் மீதே நடந்து அமராவதி ஆறு காவிரியுடன் கலக்குமிடம் செல்லுங்கள். அங்கே சிலர் உங்களை வரவேற்று அவர்களது இருப்பிடம் அழைத்துச் செல்வர். அங்கே பகவான் பேரருள் பெற்று உங்களது வேண்டுகோள் நிறைவேற்றப்படும் என்று கூறினார். தம்பதியினர் நடந்தே அமராவதி கூடுதுறை வந்து சேர்ந்தனர். அங்கு சில கல்தச்சர்கள் அவ்விருவரையும் அன்புடன் வரவேற்றனர். அவர்கள் சோமசர்மாவைக் குருவாக ஏற்றுத் தமது இருப்பிடத்திற்குத் சகல மரியாதைகளுடன் அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.

மறு நாள் அனுஷ்டானம் முடித்து சோமசர்மா கல் தச்சர்களை அழைத்துக் கொண்டு மலைக்குச் சென்று, கல் வேலையின் நுட்பங்களை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்.பாறை ஒன்றைப் பிளந்த போது அசரீரி ஒன்று சோமசர்மாவை பார்த்து உனது மனைவியையும் அழைத்து கொண்டு நாளை இம்மலைக்கு வா என்ற ஆணையிட்டது (அவ்வாறு பிளந்த பாறை இன்றும் பெருமாள் சன்னதிக்கு வடபக்கத்தில் காணத்தக்கதாக உள்ளது.) மறு நாள் சோமசர்மா தனது மனைவியையும் கல்தச்சர்களையும் அழைத்துக் கொண்டு மலையை வலம் வந்தார். மூன்றாவது சுற்று வரும்போது மலையின் மேற்புறத்தில் நட்சத்திரத்தைப் போன்று ஒளி ஒன்று தென்பட்டது. இதனை கண்டு அவர்கள் பெரும் வியப்படைந்தனர். பின்னர் அவர்கள் ஒளி வந்த திசையிலேயே சென்று கொண்டிருந்த போது மலையில் பிளவு ஏற்பட்டு, அதிலிருந்து அருள்மிகு திருப்பதி வெங்கடேசப் பெருமாள் தோன்றி அத்தம்பதியர்க்கு காட்சி கொடுத்தார். மேலும், நான் இம்மலையில் நித்யவாசம் புரிவேன் என்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றி அவர்களுக்கு அருள் புரிவேன் என்று திருவாய் மலர்ந்தருளினார். இவ்வரலாறு சன்னதிக்கு அருகே உள்ள திருக்கல்யாணமண்டபத்தின் சுவரில் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

இவ்வாலயத்தை தரிசனம் செய்த பின்னர் ஒரு நாள் சென்னை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது தான்தோன்றி மலை மகிமை என்றொரு இசை நாடக நிகழ்ச்சி ஒன்றை ஒளி பரப்பினர்கள், அக்கதை கோவிலில் எழுதியிருந்த கதையை விட வேறாக இருந்தது அக்கதை இதோ.

கரூரை தலைநகராக கொண்டு மூன்றாம் குலோத்துங்கச் சோழன் ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் டங்கணாச்சாரி என்பவர் வசித்து வந்தார். இவர் அரசவையின் சிறந்த சிற்பியாகவும், வீரசைவராகவும் திகழ்ந்தார். அவரது மனைவி சுந்தராம்பிகை. இத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லாதது ஒரு பெரிய  குறையாக இருந்தது.

ஒரு நாள் டங்கணாச்சாரி, அரசவைக்கு சென்றிருந்தார். சுந்தராம்பிகை தனது வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது தெருவில்கோவிந்தா... கோவிந்தா...’ எனும் சப்தம் கேட்டது. அவள் ஓடோடி வந்து தெருவை பார்த்தாள். அப்போது ஒரு கூட்டம் கோவிந்தா... கோவிந்தா... என்று உரக்க கத்திக்கொண்டே சென்றது. அக்கூட்டத்தின் நடுவில் மஞ்சள் ஆடை அணிந்து மார்பில் துளசி மாலையுடன் நெற்றியில் திருநாமத்துடன் ஐந்து வயது சிறுவன் ஒருவன் தென்பட்டான்.

கூட்டத்தில் இருந்த ஒரு பெண்மணியிடம் இதுகுறித்து சுந்தராம்பிகை விசாரித்தாள். அதற்கு அப்பெண்மணி, ‘அந்த சிறுவன் எனது மகன்தான். எனக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. திருப்பதி வேங்கடேசனை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டோம். குழந்தை பிறந்தது. ஐந்தாவது வயதில் குழந்தையையும் அழைத்துக்கொண்டு பெரு மாளின் சன்னிதியில் வந்து காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருந்தோம். அதை நிறைவேற்றவே இப்போது திருப்பதி செல்கிறோம்என்றாள்.

இதனை கேட்ட சுந்தராம்பிகை, தானும் திருப்பதி வேங்கடவனை வேண்டி அதே பிரார்த்தனையை செய்து கொண்டாள். பெருமாளும் அவளுக்கு அருள்புரிந்தார். சுந்தராம்பிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு குண்டலாச்சாரி என்று பெயரிட்டாள். குழந்தைக்கு ஐந்து வயதானது. பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டிய காலம். இதுவரை கணவரிடம் பிரார்த்தனை பற்றி கூறவில்லை. தற்போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினாள் சுந்தராம்பிகை.

கோபத்தில் கொந்தளித்தார் டங்கணாச்சாரி. ‘சிவபெருமானை தவிர உலகில் வேறு தெய்வம் இல்லை. நான் திருப்பதிக்கு போக மாட்டேன். உன்னையும் போக விட மாட்டேன்என்று எச்சரித்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார். சுந்தராம்பிகையோ மனம் வருந்தி கண்ணீர் வடித்தாள். குண்டலாச்சாரி தனது தாய் அழுவதை கண்டு, ‘ஏனம்மா அழுகிறாய்?’ என்று கேட்டான். தனது இக்கட்டான நிலையை தனது மகனிடம் சுந்தராம்பிகை கூறினாள். அதைக் கேட்ட குண்டலாச்சாரி, ‘அம்மா நீ அழாதே!. திருப்பதி சீனிவாச பெருமாளை, நமது ஊரிலுள்ள மலைக்குன்றுக்கு வரவழைக்கிறேன். நாம் பிரார்த்தனையை இங்கேயே நிறைவேற்றலாம்என்றான்.

மகனின் விளையாட்டுப் பேச்சைக் கேட்ட தாய்க்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. அன்று இரவு எல்லோரும் தூங்கியவுடன் குண்டலாச்சாரி, தனது தந்தை வைத்திருந்த, சிற்பம் செதுக்குவதற்கான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு மலைக்குச் சென்றான். மலையின் மீது ஆலயம் எழுப்ப அடி அளந்து கொண்டு இருந்தான். அப்போது சந்நியாசி ஒருவர், அவன் முன் தோன்றி, ‘குழந்தாய்! இங்கு வந்து என்ன செய்கிறாய்?’ என்று கேட்டார். குண்டலாச்சாரி, ‘நான் இங்கே கோவில் அமைத்து, திருப்பதி சீனிவாச பெருமாளை அழைக்க போகிறேன்என்று கூறினான்.

இதனை கேட்ட சந்நியாசி, ‘உன்னால் இக்காரியம் முடியக்கூடியதல்ல. என்னிடம் ஆட்கள் அதிகம் இருக்கின்றனர். அவர்களை வைத்து கோவில் அமைத்து விடலாம். நீ நாளைக்கு இங்கே வா!’ என்று கூறினார். குண்டலாச்சாரி வீட்டிற்கு திரும்பி உறங்கினான். எப்போதும் போல் டங்கணாச்சாரி அதிகாலையில் எழுந்து மலைப்பக்கம் சென்றார்.

அங்கு ஒரு கோவில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ‘ஒரேநாளில் கோவில் அமைப்பது என்பது மன்னனை தவிர வேறு யாராலும் முடியாதே! மன்னன் என்னிடம் சொல்லாமல் இக்கோவிலை கட்டி விட்டாரேஎன்று வருந்தினார். காலை விடிந்ததும் அரசவைக்கு சென்று கோவில் அமைக்கப்பட்டிருப்பது பற்றி கேட்டார். மன்னனும் வியப்பில் ஆழ்ந்தான். மலைக்குச் சென்று பார்த்தான். தனக்கே தெரியாமல் விஷ்ணு ஆலயம் கட்டியவனை கண்டுபிடித்து தண்டிப்பதாக கூறிவிட்டு சென்றான். டங்கணாச்சாரி, கடும் கோபத்தில் இருந்தார். அன்று இரவு மலைக்குச் சென்றார்.

கோவில் கட்டியவர்கள் எப்படியும் வருவார்கள் என்பதால் அங்கு பதுங்கி இருந்தார். அப்போது குண்டலாச்சாரி ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கோவில் வாசலில் நுழைந்தான். இருட்டில் யார் என்று அறியாமல் டங்கணாச்சாரி, சிறுவன் குண்டலாச்சாரியை வாளால் வெட்டி வீழ்த்தினார். அதன் பிறகு யாரும் வராததால் வீட்டிற்கு வந்து உறங்கினார்.

 மறுநாள் காலையில் தன் மகனை காணாது சுந்தராம்பிகை துடித்தாள். இதற்கிடையில் மலையின் மீது தலை துண்டித்து கிடந்த குண்டலாச்சாரியை, அந்த பகுதி மக்கள் பார்த்து தூக்கி வந்தனர். பெற்றோர் கதறி அழுதனர். அப்போது அங்கு ஒரு சந்நியாசி தோன்றினார்.

அவர் டங்கணாச்சாரியைப் பார்த்து, ‘கொஞ்சம் துளசி இலையைப் பறித்துக் கொண்டு வா!. உன் மகனை பிழைக்க வைக்கிறேன்என்று கூறினார். அதைக்கேட்டதும் டங்கணாச்சாரி, தனது இரு காதுகளையும் பொத்திக்கொண்டுநான் துளசியை கையால் தொடமாட்டேன்என்றார்.

இதனை கேட்ட மக்கள் கோபம் அடைந்துஇந்த இக்கட்டான நேரத்திலும் நீர் வைராக்கியம் பேசுவது சரியல்லஎன்று சொல்லவும், அரைமனதுடன் துளசியை பறித்துக்கொண்டு வந்து கொடுத்தார் டங்கணாச்சாரி. அதை வாங்கிய சந்நியாசி, குண்டலாச்சாரியின் தலையையும் உடலையும் சேர்த்து வைத்து கழுத்து பகுதியில் துளசி சாற்றை பிழிந்து ஊற்றினார். உடனே குண்டலாச்சாரி உயிர் பெற்று எழுந்தான். அதனை கண்டோர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

சுந்தராம்பிகை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தனது மகனுக்கு உயிர் கொடுத்த சந்நியாசியின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். கோவில் கட்டப்பட்ட நிகழ்ச்சியையும், தான் வெட்டப்பட்ட நிகழ்ச்சியையும் குண்டலாச்சாரி தனது பெற்றோர் முன்னிலையில் எடுத்துக்கூறினான்.

அதனை கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர். சிறுவன், அவனது பெற்றோர், மன்னன் உள்பட பலரும் சந்நியாசியுடன் மலையேறிச் சென்றனர். ஆனால் மலை மீது சென்றவுடன் சந்நியாசி மறைந்து விட்டார்.

குகையின் நடுவே பகவான் திருப்பதி வெங்கடேச பெருமாள் காட்சியளிப்பதை கண்டு அனைவரும் வணங்கினர். அப்போது அசரீரி ஒலித்தது. ‘குண்டலாச்சாரி என் மீது கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையைக் கண்டு மகிழ்ந்ததால்தான், நான் இங்கே பிரசன்னமாகி இருக்கிறேன். இனி நீங்கள் திருப்பதி வர தேவையில்லை உங்களது பிரார்த்தனைகளை இங்கேயே செலுத்துங்கள். நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்என்று கூறினார்.  

இதுவரை இத்தலத்தின் வரலாறுகளைப்பற்றிப் பார்த்தோம் வாருங்கள் மலையேறி சென்று தானே தோன்றிய பெருமாளை சேவிக்கலாம். சாலைக்கு அருகிலேயே அலங்கார வளைவு நம்மை வரவேற்கின்றது. மலை அடிவாரம் வரை கூரை வேய்ந்துள்ளனர். மலை அடிவாரத்தில் அனுமன் சன்னதி. அதிகமான படிகள் இல்லை.  சன்னதியை அடைந்தவுடன் அதிசயிக்கும் வகையில் மேற்கு நோக்கி அருளும்  சுயம்பு பெருமாளை சேவிக்கின்றோம். திருப்பதியைப் போல இங்கும் அகலகில்லேன் இறையும் என்று பெருமாளின் திருமார்பில் அலர்மேல் மங்கை தாயார் வீற்றிருக்கிறார். எனவே தாயாருக்கு தனி சந்நிதி இல்லை. மேலும் அதே கருவறையில் உற்சவமூர்த்தி ஸ்ரீநிவாசர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சித்தருகிறார். பிரகாரத்தில் பெருமாளுக்கு எதிரே உபய தெய்வமாக ஆஞ்சநேயர், கருடாழ்வார், பகவத்ராமானுஜர் மற்றும் ஆழ்வார்களின் தரிசனத்தைப் பெறலாம்.

 அருகில் திருக்கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வந்து திருமண வரம் வேண்டியவர்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் ஸ்வாமிக்குத் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைக்கின்றனர். இக்கல்யாண உற்சவம் ஞாயிறு,திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் இம்மண்டபத்தில் நடைபெறுகிறது.  சுமார் ஆயிரம் பக்தர்கள் அமர்ந்து சேவிக்கும் விதமாக விலாசமாக இம்மண்டபம் அமைந்துள்ளது. இன்னொரு வழியாக இறங்கினால் அனுமன் சன்னதி ஒன்று உள்ளது அருகில் ஒரு வில்வ மரமும் உள்ளது. அனுமன் சன்னதியிலிருந்து சுவாமி விமானத்தை நன்றாக தரிசிக்கலாம். திருக்கல்யாண நேர்த்திக்கடனைத் தவிர  இத்தலத்திற்குரிய சிறப்பு நேர்த்திக்கடன்கள் உள்ளன அவை  என்னவென்று அடுத்துக் காணலாம்.

கால் பாதம் அடித்தல்:  கை, கால் பிரச்னைகள் தீர வேண்டி இக்கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் தங்களின் பிரச்னை தீர்ந்தவுடன், ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்துவிட்டு, பிறகு ஒரு கல்லில் தாங்கள் குணம் பெற்ற கை அல்லது காலை அக்கல்லின் மீது வைத்து கை, காலின் வடிவத்தைக்  குறித்துக்கொண்டு அதன் மீது அடிப்பர். இந்த வழக்கம் நெடுங்காலமாக இக்கோயிலில் பின்பற்றப்படுகிறது.

                                                கருடனுடன் செம்மாலி சமர்ப்பணம்

செம்மாலி சமர்ப்பணம் : செருப்பு தைப்பவர் இனத்தில் உள்ளோர் கனவில்  பெருமாள் தோன்றி இந்தக் கால் பாதுகை, இந்த அளவு செய்து சமர்பிக்கவும் என்று கூறுகிறார். ஒரு சிலருக்கு இரண்டு கால் பாதுகைகளையும் சமர்ப்பிக்க சொல்வதுண்டு. அடியோங்கள் அது போல சமர்ப்பிக்கப்பட்டிருந்த இரு செருப்புகளை தரிசித்தோம். ஒரு பாதுகை சுமார் மூன்றடி நீளத்தில் வாரின் மேல் கருடனுடன் அழகாக இருந்தது. இனி இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களைப் பற்றி காணலாம்.

புரட்டாசி திருவோணத்தை ஒட்டி 22 நாட்கள் பெருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. அனு தினமும் காலையில் பல்லக்கிலும், மாலை பல் வேறு வாகனங்களிலும் சேவை சாதிக்கின்றார் ஸ்ரீநிவாசப்பெருமாள். ஒன்பதாம் திருநாளன்று தேரோட்டம் நடைபெறுகின்றது. அன்றைய தினம் லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். புரட்டாசி சனிக்கிழமைகளிலும் சிறப்பு நாட்கள் தான் இத்தலத்தில். மாசி மகத் தேர் திருவிழா 17 நாட்கள் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி மற்றும் கிருஷ்ண ஜெயந்தியும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. 

உடலில் மரு இருப்பவர்கள் உப்பு, மிளகு, வெல்லம் போட்டு பிரார்த்தணை செய்து கொள்கின்றனர். உப்பு சம்பந்தமான எந்த வியாதி ஏற்பட்டாலும் இவரை வணங்க குணம் அடைகிறது.  

பெருமாள் கோவில் பிரசாதம் எப்போதும் மிகவும் சுவையாக இருக்குமல்லவா? இத்தலத்தில் அடியோங்களுக்கு உளுந்து வடை பிரசாதம் கிடைத்தது மிகவும் சுவையாக இருந்தது.  இவ்வாறு கரூர் செல்லும் வழியில் இருந்த இரு தலங்களை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. இனி கருவூர் ஆநிலை என்றழைக்கப்பட்ட கரூரில் தரிசனம் எவ்வாறு என்று காணலாம் வாருங்கள் அன்பர்களே.   

 

No comments: