Tuesday, January 11, 2022

மார்கழிப்பதிவுகள் - 27

ஸ்ரீ:

 திருப்பாவை # 27 ( கூடார வல்லி)  




கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.   (27)


பொருள்: உன்னை கூடி மகிழாத ஒதுங்கியிருப்பவர்களையும் அன்பால் வென்று அடிமைப்படுத்தும் குணக்குன்றே கோவிந்தா!

இந்த பாவை நோன்பை நோற்பதால் நாங்கள் பெறும் பரிசு மிகச்சிறந்தது. உன் கருணையினால் அவனி மக்கள் போற்றும் பரிசுகள் அனைத்தும் அடைந்திடுவோம்.

நோன்பிற்காக ஒதுக்கிய அலங்காரங்கள் அனைத்தும் மேற்கொள்வோம். தலையில் சூடாமணி சூடுவோம், தோள் வளையங்கள் அணிவோம், தோடணிவோம்,கைகளில் வளையல்கள் அணிவோம், செவிப்பூவால் சிறப்போம், கால்களில் பாடகம் அணிவோம் இப்படி பல ஆபரணங்களை அணிவோம். மலர் சூடுவோம், புது பட்டாடையணிவோம்.

இவையெல்லாம் எதற்காக தெரியுமா? எம்பெருமானே! பால் சோறு பொங்கி அதில் பசு நெய் கலந்து முழங்கை வழிய வழிய "குறையொன்றும் இல்லாத கோவிந்தன்" உன்னுடன் கூடி உண்ணவே. மனம் குளிர்ந்து நீ எங்களுக்கு அந்த பாக்கியத்தை அருள்வாயாக!

கோவிந்தன்:

மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கோபாலர் சாதியிற் பிறந்தவன் கண்ணன் என்பதை "பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ" (பா. 29 ) என்னும் வரிகளில் உணர்த்துகின்றார் ஆண்டாள். ஆரைகள் ஆயர்களின் செல்வமாக விளங்குபவை; அவற்றைக் கவர்ந்து செல்ல வரும் பகைவர்களை எதிர்த்து நின்று அவர் தம் வலிமையை அழிக்கின்ற கோவிந்தன் என்பதை "கூடாரை வெல்லுஞ்சீர் கோவிந்தா" என்னும் இப்பாசுரத்தின் வரிகளாலும் மாற்றாரை மாற்றழிக்க வல்லானை (பா.15 ) என்னும் இரண்டு பாசுரங்களில் உணர்த்தியுள்ளார் ஆண்டாள்.



 "கூடார வல்லி" தன்னை கோபிகையாக பாவித்து கண்ணனை வேண்டி மற்ற கோபிகையர்களுடன் மாதம் முழுவதும் நோன்பிருந்த ஆண்டாள் அந்த குறை ஒன்றும் இல்லாத  கோவிந்தனுடன் கூடிய நாள். 

********



திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 7

உத்தரகோச மங்கைக்கரசே பள்ளியெழுந்தருள்





அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
எளிதென அமரரும் அறியார்;
இதுஅவன் திருவுரு, இவன்அவன் எனவே
எங்களை ஆண்டு கொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தரகோச
மங்கையுள்ளாய்; திருப்பெருந்துறை மன்னா!
எதுஎமைப் பணிகொளும் ஆறு? அது கேட்போம்;
எம்பெருமான்; பள்ளி எழுந்தருளாயே!........(7)




பொருள்: தேன் சொரியும் மலர்ச் சோலைகள் சூழ்ந்த திருவுத்தரகோச மங்கை திருத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் சிவபெருமானே! திருப்பெருந்துறை அரசே!

பரம்பொருளாகிய பழச்சுவை போன்று தித்திப்பானதா? தேவாமிர்தம் போன்றதா? அறிய முடியாததா? எளிதானதா? என்று தேவர்களாலும் அறிய முடியாதது. ஆனால் " இதுவே அவனுடைய திருவுருவம், இவனே அந்த கருணைக்கடல் சிவ பெருமான்" என்று நாங்கள சுட்டிக் காட்டி சொல்லும்படி எளி வந்த கருணையினால் எங்களை அடிமையாக ஏற்றுக் கொண்டு இந்த மண்ணிலே எழுந்தருள்வாய்!

நீ எங்களை ஏவல் கொள்ளும் முறைமை எது? எம்பெருமானே! அந்த முறைமையை நீ எங்களுக்கு அருளினால் அவ்வாறே நாங்களும் ஒழுகுவோம்! எம்பெருமானே எங்களுக்கு அருள பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!  


**********  

திருப்பள்ளியெழுச்சி # 7

அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே   






அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ

      அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ

இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ

      எம்பெருமான் உன கோயிலின் வாசல்

சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க

      இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்

அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ

      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே             (7)

 

பொருள்: இதோ, இப்பக்கம் அமரர்கள் கூட்டம். அந்தப் பக்கம் பெரும் தவம் செய்யும் முனிவர்கள், மருதகணங்கள். இதோ, ஐராவதம் என்ற யானையுடன் இந்திரன் வந்திருக்கிறான். கந்தர்வர்கள், வித்யாதரர்கள், யட்சர்கள் என எல்லாரும் உன் திருவடிகளைத் தொழ வந்துள்ளார்கள். வானில், மண்ணில் எங்கும் இடமே இல்லாதபடி அவர்கள் நிறைந்துள்ளார்கள், அரங்கத்தம்மானே, பள்ளி எழுந்து அவர்களுக்கெல்லாம் அருள்வாயாக. 


2 comments:

கோமதி அரசு said...

//"குறையொன்றும் இல்லாத கோவிந்தன்" உன்னுடன் கூடி உண்ணவே. மனம் குளிர்ந்து நீ எங்களுக்கு அந்த பாக்கியத்தை அருள்வாயாக!//

குறையொன்றும் இல்லாத கோவிந்தன் எல்லோருக்கும் பாக்கியங்களை அருள வேண்டும்.

கோமதி அரசு said...


பதிவும் பாடல்கள் விளக்கமும் அருமை.

திருப்பெருந்துறை அரசே ! எல்லோருக்கும் எல்லா நலங்களும் அருள்வாய்.

உலகை அச்சுறுத்தும் தீநுண்மி விலக அருள்புரிய வேண்டும்.