சிவ சொர்ணாம்பாளின் நட்சத்திரம் சித்திரை எனவே சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று அம்மையப்பர் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. இன்று இத்திருக்கல்யாணத்தை தரிசனம் செய்பவர்களுக்கு அன்னை இம்மையில் எல்லா நலங்களையும் அளித்து மறுமையில் முக்தி பேறும் வழங்குகின்றாள்.


சைவத்தலங்களில் பெருவிழாக்கள் அனைத்தும் அம்மையப்பரின் திருக்கல்யாணத்துடன் நிறைவடைகின்றன. பத்தாம் நாள் இரவு திருக்கலயாணம் நடைபெறுகின்றது. பொதுவாக திருக்கல்யாணம் என்பது ஜீவாதமா மற்றும் பரமாத்மாவின் ஐக்கியத்தை குறிக்கின்றது. பாசத்தால் சூழப்பட்டிருக்கின்ற பசுவானது அந்த பாசம், ஆணவம் முதலிய மலங்கள் நீங்கி பதியுடன் சேருவதைக் குறிக்கின்றது. ஆகவேதான் சிவபெருமான் பசுபதி என்று அழைக்கப்படுகின்றார்.


கன்னியா குமரியருள் காந்திமதி மீனாட்சி
கருணைப ருவதவர்த்தினி
கமலை பராசக்தி சிவகாம சுந்தரி
காழியுமை பிரமவித்தை
தன்னிகரி லாஞான அபயவர தாம்பிகை
தையல் அபிராமி மங்கை
தந்த அகிலாண்டநா யகி அறம் வளர்த்தவள்
தண்ணருள் செய் காமாட்சி யிலங்கு
என்னையாள் கௌரி ஜ்வாலாமுகி உண்ணாமுலை
இலங்கு நீலாயதாட்சி
எழிற் பிரமராம்பிகை யிலங்கு பார்வதி ஆதி
எண்ணிலா நாம ரூப
அன்னை யாய்க் காசி முதலாகிய தலத்து விளை
யாடிடும் விசாலாட்சியாம்
அண்டகோடிகள் பணி அகண்ட பூரணி என்னும்
அன்னபூரணி ( சிவ சொர்ணாம்பிகை) அன்னையே.
உன் தாள் சரணம்.

திருக்கலயாணம் முடிந்த பின்பு அம்மையப்பர் திருக்கயிலாய வாகனத்தில் சேவை சாதிக்கின்றார், ஐயனும் அம்மையும் உறையும் தம் திருக்கயிலாயம். சகல புவனங்களையும் படைத்தும் காத்தும், அழித்தும், அருளியும் மறைத்தும் ஐந்தொழில் புரியும் ஐயனும் அவரின் பாதி சக்தி அம்மையும் யோகத்தில் அமர்ந்து சகல புவனத்தையும் பரிபாலிக்கின்றனர். எனவே திருக்கயிலாய வாகனம் சிவபெருமானுக்கே உரியது பூதம், ரிஷபம், அதிகார நந்தி போல. அடாத செயல் செய்த இராவணனின் ஆணவத்தை ஐயம் தன்து இடது பெரு விரலால் லேசாக அழுத்தி அடக்கியதை உனர்த்தும் வகையில் கைலாய வாகனத்தின் முன் ஆணவ இராவணனின் சிலை இருக்கும். ஒன்றை கவனித்தீர்கள் என்றால் ஒரு உண்மை புலப்படும் இராவணனின் தலைகள் ஒன்பதுதான் உள்ளன, பத்தாவது எங்கே சென்றது. சரியாகப்பாருங்கள் அவன் சாம கீதம் மீட்டும் வீணையில் ஒரு தலை சிறிதாக உள்ளதே.


திருவிதி உலா முடிந்து பஞ்ச மூர்த்திகள் திருக்கோவில் திரும்பியதும் கொடியிறக்கம். இதுவரை தேவ லோகத்தை விட்டு பிரம்மோற்சவத்தை காண வந்த சகல தேவர்களையும் தங்கள் தங்கள் யதாஸ்தானம் செல்லுமாறு வேண்டப்பட்டு பெருவிழாவின் நிறைவை குறிக்கும் வகையில் கொடியிறக்கப்படுகின்றது. பின் சண்டிகேஸ்வரர் உற்சவம்.
2 comments:
கோபுர வாயில் அருகே வீதிவுலா புறப்பாடுக் காட்சி அட்டகாசமாய் இருந்தது, மிக்க நன்றி!
மிக்க நன்றி ஜீவா ஐயா.
Post a Comment