Tuesday, May 12, 2009

திருக்காரணி அறுபத்து மூவர் பெருவிழா

எட்டாம் நாள் இரவு அறுபத்து மூவர் திருவிழா

சிவனடியே சிந்தையில் வைத்து உடல் பொருள் ஆவி அனைத்தையும் சிவ பெருமானுக்கே தத்தம் செய்து, சிவத்தொண்டுக்காகவே வாழ்ந்து சிவ தரிசனம் பெற்ற அடியார்கள்தான் அறுபத்து மூவர்கள். பல்வேறு குலங்களில் பிறந்திருந்தாலும், பல் வேறு சோதனைகள் வந்த போதும் சிவ சேவையே வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் என்று வாழ்ந்து புகழ்பெற்றவர்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள். இந்த அருந்தொண்டர்களை சிறப்பிக்கும் வகையில் பெருந்திருவிழாவில் அறுபத்து மூவர் திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது எட்டாம் நாள் மாலை 6 மணியளவில். சிறப்பு அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகள் புஷ்ப அலங்காரத்துடன் கூடிய இந்திர விமானத்தில் எழுந்தருளி அறுபத்து மூவர்களும் அம்மையப்பரை வலம் வந்து வணங்குகின்றனர். அம்மையப்பருக்கும் நாயன்மார்களுக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை நடைபெறுகின்றது. பின்னர் அறுபத்து மூவரும் அம்மையப்பரை வணங்கிய நிலையில் முன் செல்ல பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து அருள் பாலிக்கின்றனர். அந்த அறுபத்து மூவர் திருவிழாவை கண்டு களியுங்கள்.




முழுமுதற்க் கடவுள் முன் செல்ல


ஐயனை வணங்கியவாறு சைவ சமயக் குரவர்கள்
அப்பர், சுந்தரர் மாணிக்க வாசகர்

சேக்கிழார் பெருமான் உடன் வருகின்றார்

மற்ற நாயன்மார்கள் மும்மூவராய்
அருட்காட்சி தருகின்றனர்

தில்லைவாழ் அந்தணர்தன் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்


இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்


வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்கடியேன்


அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


ஐயனின் அருட் கோலம்

சிறப்பு மலர் அலங்காரத்துடன் இந்திர விமானத்தில்
காரணீஸ்வரப்பெருமான்

அறுபத்து மூவருக்கு அருட்காட்சி தரும் காரணீஸ்வரர்

63 நாயன்மார்கள் முக்தி பெற்ற வகை

குருவை வழிபட்டவர்கள் - 12
லிங்கத்தை வழிபட்டவர்கள் - 31
சிவனடியாரை வழிபட்டவர்கள் - 20



இவர்கள் அல்லாமல் தொகையடியார்கள் 9 பேர்

1.தில்லை வாழ் அந்தணர்கள்

2.பொய்யடிமையில்லாத நாயனார்.

3.பத்தராய்ப் பணிவார்.

4.பரமனையே படுவார்.

5.சித்தத்தை சிவன்பாலே வைத்தார்.

6.திருவாரூர் பிறந்தார்.

7.முப்போதும் திருமேனி தீண்டுவார்.

8. முழு நீறு பூசிய முனிவர்.

9.அப்பாலும் அடி சார்ந்தார்.

சொர்ணாம்பாள்

எட்டாம் திருநாளான இன்று கோமேதகம் சூடும் கோகிலமாய் வணங்குகின்றோம்.

கோமேதகம்
சிலையை யெடுத்த மன்மதனைச்
சினந்து சுட்ட சங்கரனார்
சிறிதும் ஆலம் விழுங்காதே
சித்தஞ் செய்யுநற் சங்கரியே


மலையை யெடுத்த மாவரக்கன்
மதத்தோள் நைய ஊன்றியதுன்
மலராய்த் தோன்றும் பதமென்று
மறைகள் மொழியும் மேன்மையளே


கலையைக் கொழிக்கும் தண் கதிரின்
கவிணைக் கூட்டுங் கூன்பிறையைக்
கனிந்தே சூடும் கலாவல்லி
கோமே தகங் கொள் கோகிலமே


அலைசூழ் மயிலை கற்பகமே
அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி

அன்னாய் சிவசொர் ணாம்பிகையே (8)




சிவசுப்பிரமணிய சுவாமி

சண்டிகேஸ்வரர்

கடிசேர்ந்த போது மலரன்ன கைக்கொண்டு நல்ல

படிசேர்ந்த பால்கொண்டங்கு ஆட்டிடத் தாதை பண்டு

முடிசேர்ந்த காலை அற வெட்டிட முக்கண் மூர்த்தி

அடி சேர்ந்த வண்ணம் அறிவார் கேட்டுமன்றீ


எட்டாம் நாள் திருவிழாவின் தாத்பர்யம்: அம்மையப்பரிடம் முற்றும் உணர்தல், வரம்பில் இன்பமுடைமை, முடிவில் ஆற்றலுடைமை, பேரருள் உடைமை, இயற்கை உணர்வுடைமை, தூய உடம்புடையவனாதல் ஆகிய எட்டு குணங்களையும் அளித்து எங்களை நல்வழிப்படுத்தி உன் திருவடிகளில் சேர்த்துக் கொள் என்று வேண்டுவதே இந்த எட்டாம் திருநாளின் தாத்பர்யம்.


No comments: