Thursday, April 19, 2018

பாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா -1

 அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத  திருவாலீஸ்வரர் என்றழைக்கப்படும் பாரத்வாஜேஸ்வரர் திருக்கோயில்

புலியூர் - கோடம்பாக்கம் - சென்னை

தொண்டைநாடு சான்றோர் உடைத்து என ஆன்றோரால் போற்றப்படும் பெருமை பெற்றதாகும். இநன்னாட்டில் பொலிவு பெற்று விளங்கும் இருபத்து நான்கு கோட்டங்களுள்  புலியூர் கோட்டம் இரண்டாவது கோட்டமாகும்.  இப்புலியூர் கோட்டத்தில் தற்போதைய   தருமமிகு சென்னையின் ஒரு பகுதியான  கோடம்பாக்கத்தில் சிவபெருமான்  சொர்ணாம்பிகையுடன் எழுந்தருளி அருள் பாலித்து  வருகின்றார்.  இவ்வாலயம்  திரேதா யுகத்தில் ஏற்றம்  மிகுந்த ஏழு முனிவர்களுள் ஒருவரான ஸ்ரீபாரத்வாஜ முனிவர் வழிபட்டமையால் திருபாரத்வாஜேஸ்வரம் எனவும்,  வீரம் செறிந்த மகாசிவ பூஜா துரந்தரனும் வானர அரசனுமான வாலி வழிபட்டமையால்  திருவாலீஸ்வரம் எனவும், ஸ்ரீராமபிரானும், ஸ்ரீநளமஹாராஜாவும் மற்றும் ஸ்ரீஊர்வசியும்  வழிபட்டு அருள் பெற்றுள்ளனர் என்று புகழப்படுகின்றது.

 வானர அரசன்  வாலி 

(வாலில் பத்துத்தலை இராவணனையும் , பீடத்தில் இராமன் மற்றும் அனுமனையும் கவனியுங்கள்)

பெரிய புராணம் இயற்றிய திருத்தொண்டர் சேக்கிழார் சுவாமிகள் புராணத்தை இயற்றிய உமாபதி சிவாச்சாரியர் புலியூர் கோட்டத்தின் சிறப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில்

பாலாறு வளஞ்சுரந்துநல்க மல்கும்
      பாளைவிரி மணங்கமழும் பூஞ்சோலைதோறும்
காலாறு கோலிசை பாடநீடுங்
      களிமயில் நின்  றாதும் இயல் தொண்டை நாட்டுள்
நாலாறு கோட்டத்துப் புலி யூர்கோட்டம்
      நன்றிபுனை குன்றைவளநாட்டு மிக்க
சேலாறு கின்றயற் குன்றத்தூரில்
       சேக்கிழார் திருமரபு சிறந்த தன்றே - சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

       
இத்திருக்கோயிலில்  சித்திராப்பௌர்ணமி திருக்கல்யாண வைபவம் பத்து நாள் உற்சவமாக சிறப்பாக நடைபெற உள்ளது.  அத்திருவிழாவின் அருட்காட்சிகளை  இனி வரும் பதிவுகளில் காணலாம்.

(திருவிழாவின் போது காலையும், மாலையும் சென்று அனைத்து உற்சவங்களையும் அலுவலக நிமித்தமாக காண்பது சிறிது கடினம் என்பதால் சில உற்சவங்கள் சென்ற வருடத்தின் படங்கள் ஆகும். அவற்றின் இறுதியில் *** குறி இருக்கும்)


சித்திரைப் பெருவிழாவின்  பூர்வாங்கமாக கிராமதேவதை வழிபாடும், விநாயகர் உற்சவமும் நடைபெறுகின்றது. அக்காட்சிகளை இப்பதிவில் காணலாம்.

அடியேன் ஒரு வருடம் அகஸ்மாத்தமாக திருவீதியில் சுவாமி உலா வரும் போது தரிசிக்க ஒரு வாய்ப்புக்கிட்டியது. அப்போது சுவாமிகளின் அலங்காரம் சற்று வித்தியாசமாக மிகவும் உன்னதமாக இருப்பதை கவனித்து இத்தலத்திற்கு செல்ல ஆரம்பித்தேன்.  பின்னர் இவ்வாலயத்தின் குருக்கள் பல ஆலயங்களுக்கு சென்று அலங்காரம் செய்து தருகின்றார் என்று தெரிந்தது. அது போலவே பூசைகளும் மிகவும் ஆத்மார்த்தமாக நடைபெறுகின்றது.

பழைய ஆலயத்தை புதிதாக மாற்றி 2015ல் திருக்குட முழுக்கு நடைபெற்றது அப்போது புதிதாக ஒரு ஐந்து நிலை இராஜ கோபுரம், உற்சவ மண்டபம் ஆகியவை புதிதாக கட்டப்பட்டன. மேலும் அம்மன் சன்னதி தேர் வடிவில் எழிலாக அமைக்கப்பட்டது. பல கலை நுணுக்கம் நிறைந்த  சுதை சிற்பங்கள், கல் சிற்பங்கள் . ஆகம மற்றும் புராண வரலாறுகளை விளக்கும் பல் அம்சங்கள் இக்கோவிலில்  தற்போது அமைந்துள்ளன.  அவைகளையும் இனி வரும் பதிவுகளில் காணலாம் தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.


புலியூர் கிராம தேவதை வழிபாடு  ***


முப்பாத்தம்மன் 


விநாயகர் உற்சவம்   ***
(சென்ற வருடத்தியது முழுதும் எருக்கம் பூ மாலை)


இவ்வருடத்திய அலங்காரம் 



அம்புறாத் தூணியையும், அதில் இருந்து ஒரு அம்பை  லாகவகமாக உருவும்
பாங்கையும் கவனியுங்கள்.


வரும் இடையூறுகளை எல்லாம் களையும் விதமாக  வில் அம்புடன் விநாயகர் அலங்காரம். 






பெருவிழா அருட்காட்சிகள் தொடரும் . . . . . . . .

No comments: