Wednesday, March 25, 2020

திருப்பாத தரிசனம் - 18


திருவாரூரின் சிறப்பு மிகு தீர்த்தங்கள்

கமலாலயத் திருக்குளம்


தலம், தீர்த்தம், மூர்த்தி என்னும் முப்பெருமைகளும் உடையது திருவாருர். சகல புண்ணிய தீர்த்தங்களும் விரும்பி அடைந்து உறையும் தலம் திருவாரூர், எனவே இத்தலம் சர்வ தீர்த்த ஆசிரயம் என்றும் அறியப்படுகின்றது.  திருவாரூரில் பல தீர்த்தங்கள் ஆலயத்தின் உள்ளேயும், புறத்தேயும் அமைந்துள்ளன.  ங்கு முனிவரால் உண்டாக்கபட்ட ங்கு தீர்த்தம் கிழக்கு கோபுரம் உட்புறம் தேவாசரியம் அருகே அமைந்துள்ளது. சங்க முனிவர் இதில் நீராடி தமது அறுபட்ட கரங்களை மீண்டும் பெற்றார். சித்ரா பௌர்ணமியன்று நீராட தொழுநோய் நீங்கும். சமற்காரன் என்ற மன்னன் இவ்வாறு இத்தீர்த்தத்தில் நீராடி தொழுநோய் நீங்கப்பெற்றான் என்று தலவரலாறு இயம்புகிறது.

நந்தவனத்தில் அமைந்திருப்பது பார்வதி தீர்த்தம், மேற்குப் பக்க நந்தவனத்திற்கு அருகில் அமைந்திருப்பது பெரிய கேணி வாணி தீர்த்தம், நவராத்திரி மற்றும் பௌர்ணமி அன்று மேதா சூக்தம் அல்லது சகலகலாவல்லி மாலை பாராயணம் செய்து நீராடல் சிறப்பு. சரஸ்வதி தீர்த்தத்தின் சிறப்பு திருவாரூர் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஊமையாக இருந்த ஒரு மன்னன் இத்தீர்த்தத்தில் நீராடி பேசினான் மற்றும் கமலாம்பிகையின் தரிசனமும் பெற்றான்.

கமலாம்பிகை திருக்கோவிலின்  கமலாம்பிகை தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம் இரண்டும் கேணிகள். வடக்கு கோபுரம் அருகே அமைந்துள்ளது  முக்திக்கேணி தீர்த்தம், அம்பிகை தன் மூக்குத்தியை  தவறவிட்ட மூக்குத்தி கேணி என்பர் சில அன்பர்கள். பாதிரி மரத்தின் அருகே பாதிரீஸ்வரர் தீர்த்தம் இருந்துள்ளது.  இரண்டாம் திருச்சுற்றில் ஆடகேச்சுரம் அருகே அமைந்துள்ளது திருத்தீர்த்தம் (இலட்சுமி தீர்த்தம்). கிழக்கே மடப்பள்ளி அருகே அமைந்துள்ளது கௌமாரி தீர்த்தம். கௌமாரியின் விருப்பத்தை ஏற்று இறைவன் நடனமாடிய பகுதி, பௌர்ணமியன்று நீராட அனைத்து துன்பங்களும் விலகும். நீலோத்பலாம்பாளின் ஆலயத்திற்கு பின்புறம் அமைந்துள்ளது அகத்திய தீர்த்தம். ஆனந்தீச்வரர் கோவில் அருகில் அமைந்துள்ளது ஜ்யேஷ்டா தீர்த்தம். மேலும் விடங்கர் தீர்த்தம், வேத தீர்த்தம், ஹம்ஸ தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்,  கயா தீர்த்தம், அமுத தீர்த்தம், முக்தி தீர்த்தம்  ஆகிய தீர்த்தங்களும் உள்ளன. செங்கழு நீர் ஓடை, ஓடம் போக்கி ஆறு என்றழைக்கப்படும் கபில  தீர்த்தம் ஆகியவையும் இத்தலத்தின் தீர்த்தங்கள்.

இவ்வூரில் அமைந்திருக்கும் கிணறுகள் கூட புண்ணிய தீர்த்தமாக கூபஆதி என்றழைக்கப்படுகின்றன.  திருவாரூரில் அமைந்துள்ள தீர்த்தங்களில் தலையானதும் திருவாரூரின் சிறப்பான தீர்த்தமும் ஆனது கமலாலய திருக்குளம். வாருங்கள் அதன் சிறப்புகளைக் காணலாம்.





கமலாலயத்தின் சிறப்பு: சிவபெருமானின் ஆனைப்படி திருவாரூர் கரமும், ஆலயமும், கமலாலய திருக்குளமும் முசுகுந்த சக்கரவர்த்தியால் நிர்மாணிக்கப்பட்டது என்கின்றன புராணங்கள். கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை நந்தவனம் ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் கமலாலயத்தின் சிறப்பை நாம் அறியலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம் ஆகும்) திருவாரூர் தீர்த்தங்களில் கமலாலயத் தீர்த்தம் மிக தொன்மை வாய்ந்தது. பராசக்தியால் தோற்றுவிக்கப்பட்டது, தேவதீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றது. மூன்றரைக் கோடி விண்ணுலகத் தீர்த்தங்களும் திருவாரூர் திருத்தலத்தின் 21 தீர்த்தங்களுள் அடங்கும்.

திருவாரூரில் மட்டுமே ஆலயத்தின் பெயரிலேயே கமலாலயக்குளம் அமைந்துள்ளது. திருக்கோவிலின்  மேற்கு வாயிலை ஒட்டி சதுர வடிவில் நேர்த்தியான சாலைகள் சூழ கண்டோர் நெஞ்சை மகிழ வைக்கும் பாங்குடன் மையத்தில் ஒரு சிறு கோவிலுடன் எழிலாக அமைந்துள்ளது கமலாலய திருக்குளம். சேரமான் பெருமாள் நாயனார் தமது திருவாரூர் மும்மணிக்கோவையில் திண்ணிய கரைகளுடன் திகழ்ந்த இத்திருக்குளம் பற்றிப் பாடியுள்ளார்.



கமலாலய குளத்தின் மையத்தில் யோகாம்பாள் உடனாய நாநாதர் கோவில் அமைந்துள்ளது. அழகிய திருக்குளத்துக்கு மேலும் எழில் சேர்க்கும் விதமாக அதன் மையப்பகுதியில் மிதக்கும் ஆலயம் போல், கோபுரத்துடன் கோயில் உள்ளது. அங்கே குடிகொண்டுள்ளார் அருள்மிகு யோகாம்பாள் உடனுறை நாகநாத சுவாமி. இந்த அம்பாளை குண்டலினி நாக சக்தியாகவும், ஈசுவரனை சிவராஜ யோக சக்தியாகவும் கருதி வழிபாடு செய்கிறார்கள் பக்தர்கள். பிரதோஷ காலத்தில் இவர்களை வழிபட சகல நன்மைகளையும் பெறலாம். அச்சமயத்தில் படகு சவாரி உள்ளது.   நாக தோஷம் உள்ளவர்கள்  நாகநாதரை வழிபட அத்தோஷம் அகலும்.  பல அழகிய செடி கொடி மரங்களுடன் காட்சி தரும் வ்வாலயத்தின் பிரகாரங்களில் பல பரிவார தேவதைகளும் காட்சி தருகிறார்கள்.
இந்நடுக்கோயிலை சுற்றி ஆதி சேது, விநாயக சேது, குமார சேது, ருத்திர சேது, கௌரி சேது, விஷ்ணு சேது, லெக்ஷ்மி சேது, பிரம்ம சேது, வாணி சேது, சோம சேது, வனிதா சேது, இந்திர சேது, அக்னி சேது, துர்க்கா சேது, ஆதித்ய சேது, என்று மொத்தம் 16 ஸ்நான கட்டங்கள் அமைந்துள்ளன. இக்கோவிலில் உள்ள ஒரு சிற்பத்தில் குரங்கு முகமுடைய  முசுகுந்தன் சிவலிங்கத்திற்கு திருமஞ்சனம் ஆட்டுதலும், அருகே இரு முனிவர்கள் அமர்ந்து ஆசி கூறுவதும் வடிக்கப்படுள்ளது.

மூன்றரைக் கோடி விண்ணுலகத் தீர்த்தங்களை அடக்கிய திருவாரூர் கமலாலய குளத்தில் பங்குனி உத்திரத்தன்று நீராடினால், கும்பகோண க்ஷேத்திரத்தில் 12 மகாமகம் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். பங்குனி உத்திர திருநாளன்று, கமாலாலயத்தில் நீராட வேண்டும். பின்னர், ஆரூரின் சமீபத்தில் உள்ள குருவி இராமேசுவரம் என்ற இடத்தில் தம் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். அதன் பின்னர், அருகில் உள்ள கேக்கரை என்ற குளத்தில் க்ஷேத்திர பிண்டத்தை போட்டுவிட்டு, பின்பு சுவாமி தரிசனம் முடித்து, கடைசியாக தியாகேசன் திருக்கோயில் வந்து பிரம்ம முகூர்த்தத்தில் இறை பூஜை செய்து வழிபட்டால், தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிட்டும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.




கமலாலயத்தின் நேர்த்தியான கருங்கல் படிகள், காசியில் கரையெல்லாம் துறையானது போல அமைந்துள்ளது. 64 தீர்த்த கட்டங்கள் அமைந்த திருவாரூர் கமலாலயம் 25 ஏக்கர் விஸ்தீரணம், என்றுமே வற்றாத புண்ணிய தீர்த்தம் ஆகும். கீழ்க்கரையில் 12 கட்டங்களும், மேற்கரையில் 13 கட்டங்களும், நடுவிலாங்கோவிலில் 16 கட்டங்களும், தென்கரையில் 20 கட்டங்களும், வடகரையில் 19 கட்டங்களும் அமைந்துள்ளன. ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒவ்வொரு பெயரும். அதில் குளித்தபின் கொடுக்க வேண்டிய தானம் பற்றியும், அங்கு நீராடினல் உண்டாகும் பலன் பற்றியும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மாற்றுரைத்த பிள்ளையார் சன்னதி
( பிள்ளையார் மாற்றை சரி பார்த்து சுந்தரருக்கும் பரவையாருக்கும் கூறுதல்)

 திருமுதுகுன்றத்தில் மணிமுத்தாற்றில் இட்ட பொன்னை கமலாலய திருக்குளத்தில் சுந்தரர் பெறுதல்
இந்த 64 ஸ்நான கட்டங்களில் தலையாய சிறப்பினைக் கொண்டது, தேவ தீர்த்த கட்டம் கமலாலயத் திருக்குளத்தின் சமீபமும் ஆலய மேல கோபுரம் எதிரே அமைந்துள்ள மாற்றுரைத்த பிள்ளையார்” என்னும் பெயருடைய விநாயகர் குடி கொண்ட சிறு கோயில் அருகில் தேவ தீர்த்த கட்டம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் தேவர்களின் அதிபதி இந்திரன் இழைத்த கொடுமைகளிலிருந்து பாதிக்கப்பட்ட மன்னன் திரிசங்கு த்தேவ தீர்த்தத்தில் நீராடி அதிலிருந்து விடுதலை அடைந்ததாக தல வரலாறு கூறுகிறது.
திருவாரூர் தியாகராஜப் பெருமானின் 364 லீலைகளில் பெரும்பாலான கதைகளில், கமலாலயத்தின் பெருமை, அருமை, அற்புதம், அதிசயம் சிறப்பாக கூறப்பட்டுள்ளன. தேவர்கள், மகாமுனிவர்கள், அருளாளர்கள், அடியார்கள் தீர்த்தமாடிய சிறப்புடையது கமலாலயம். திருவாரூர் புராணத்தில் தேவதீர்த்தச் சருக்கத்திலும் இக்குளத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.

துர்வாச முனிவருக்காக சிவபெருமான் கமலாலய தீர்த்தத்தில் கங்கையை வரவழைத்தார். அதனால் இத்தீர்த்தத்திற்கு கங்காஹரதம் என்றும், துர்வாசரின் தாபத்தை தீர்த்ததால் தாபஹாரணி என்றும் திருநாமம் உண்டு. இக்குளத்தின் தென்கரையில் துர்வாச முனிவர் கமலாம்பிகையை பூசித்த   திருமடம் உள்ளது. தன்னால் உருவாக்கப்பட்ட ஹம்ஸ தீர்த்தம் என்னும் புண்ணிய புஷ்கரணியை தியாகேசர் வற்றச்செய்து, அதன் தீர்த்தத்தை கமலாயத்தில் சேரச்செய்தார். 

கமலாலயத்தில் பங்குனி உத்திரத்தன்று தீர்த்தவிழா நடைபெறும், மற்றும் விஷு, மார்கழித்திருவாதிரை, அருணோதயம், மகோதயம் முதலான புண்ணிய காலங்களிலும் தீர்த்தவிழா நடைபெறுகிறது. தெப்பத்திருவிழாவும் ஆண்டுக்கு ஒரு முறை சிறப்பாக நடைபெறுகிறது.

தியாகேசர் வயோதிகராய் குளத்தில் வீழ, நீலோத்பலாம்பாள் பாவம் செய்யாதவர்கள் மட்டுமே தொட்டு தூக்கலாம் என்று கூறுதல்

சுந்தரர் கமலாலயத்தில் குதித்து வயோதிகரை காப்பாற்றுதல்

சுந்தரருக்கு சிவபெருமான் திருக்காட்சி நல்குதல்
(கமலாலயத்தில் நீராடுவதால் பாவம் நீங்கும் என்பதை விளக்கும்  சரிதம்)


கமலாலயக் குளத்தில் புனித நீராடுவதால் பாவங்கள் கரையும் என்பதற்கான ஒரு கதை உண்டு.  கமலாலய குளத்தில் இறைவன் முதியவர் வேடத்தில் வந்து தவறி விழுந்தார், அவரின் மனைவி பதறிப்போய், “என் கணவரைக் காப்பாற்றுங்கள்” என்று சத்தம் போட்டார். அவ்வழியே வந்த சுந்தரர் அவரை காப்பாற்ற வந்த போது, முதியவரின் மனைவி, “நீங்கள் எப்பாவமும் செய்யாதவராக இருந்தால் மட்டுமே என் கணவரைக் காப்பாற்ற வேண்டும் என நிபந்தணையிட்டார். சுந்தரரும் கமலாலய குளத்தில் நீராடியவர் என்பதால் அந்நிபந்தணைக்கு உட்பட்டு அக்கிழவரை காப்பாற்றினார். இதன் மூலம் கமலாலயத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் அனைத்தும் விலகும் என்று அம்மையப்பர் உணர்த்தினர்.  கமலாலய குளத்தில் மாற்றுரைத்தப் பிள்ளையார் சன்னதிக்கு அருகில் உள்ள மண்டபத்தின் கூரையில் இவ்வரலாறு கவின் மிகு ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

பெரிய புராணத்தில் தெய்வ சேக்கிழார் தண்டியடிகள் புராணத்தில் கமலாலயத்தின் சிறப்பைப் பாடுகின்றார். சிறந்த தீர்த்தக்குளமாக இருந்த கமலாலயத்தை சமணர்கள் தூர்த்துப் பாழிகள் கட்டி உறைந்தனர் எனவும் அதனால் வெகுண்டெழுந்த தண்டியடிகள் தாம் பிறவி அந்தகராக இருந்த போதும், கரையில் கயிற்றைக் கட்டி அதனைப் பிடித்துக் கொண்டு சென்று குளத்தை தூரெடுத்து தூய்மைப் படுத்தினார் என்றும், இதனால் விரிசடைக் கடவுளும் மகிழ்ந்து அவருக்கு பார்வை அருளினார் இதனை
செங்கண் விடையார் திருக்கோயிற் குடபால் தீர்த்தக் குளத்தின் பாங்
கெங்கும் அமணர்ப்பாழிகளா யிடத்தாற் குறைபா டெய்துதலால் 
அங்கந் நிலைமை தனைத்தண்டி யடிகள் அறிந்தே யாதரவால்
இங்கு நானிக்குளம்பெருகக் கல்ல வேண்டு மென்றெழுந்தார் – என்று பாடுகிறார் சேக்கிழார். இத்திருக்கோயில் வளாக மூன்றாவது சுற்றில் மூலாதார கணபதிக்கு அருகில் தண்டியடிகள் நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது. இவரை சுந்தரர் நாட்டம் மிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன் என்று போற்றுகிறார்


கமலாலய குளத்தில் எம்பெருமான் நிகழ்த்திய  சில அதிசயங்கள்,  தண்டியடிகள்  பிறவி அந்தகராக இருக்கும் போது கமலாலய தீர்த்தத்தில் மூழ்கி கண் பார்வை பெற்றார். மிந்தி அடிகள்  இத்திருக்குளத்தின் நீரை எடுத்து விளக்கேற்றினார். சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாருக்காக 12 ஆயிரம் பொன் கட்டிகளை திருமுதுகுன்ற ஆற்றில் இட்டு திருவாரூர் கமலாலய குளத்தில் இருந்து பொன்னை எடுத்தார். அப்பொன்னின் மாற்று சரிதானா என்று சரி பார்த்து விநாயகர் கூறினார். இவர் மாற்றுரைத்த பிள்ளையாராக இன்றும் கமலாலய திருக்குளக்கரையில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.


திகழ்ந்த பங்குனி யுத்திர நாளினில் தேவதீர்த்தப் பொய்கை
மகிழ்ந்து மூழ்கிய யடயா டகம்பசு மாநிலம் முதற்றானம்
புகழ்ந்து நூன்முறை வஞ்சமின் புற்றிடங் கொண்டோனே
அகங்கொ ளன்போடு போற்றினோர் முத்தியாங்கடைதல் சத்தியமம்மா – தேவர் தொழும் நாயகரான திருமூலட்டானரை வணங்கி பங்குனி உத்திர திருநாளன்று தீராத பாவங்களையும் போக்கும் கமலாலய திருக்குளத்தின் 64 தீர்த்தக் கட்டங்களுள் பிரதான தீர்த்தக் கட்டமான  தேவதீர்த்த கட்டத்தில் நீராடியோர் சகல வித செல்வங்களையும் இகபர சுகங்களையும் அடைந்து இந்திரனுக்கு ஒப்பான வாழ்வடைவதோடு பிறவிக் கடன் தீர்ந்து தியாகேசன் பதம் அடைவார் என்பது சத்தியம் என்பது தலபுராணம்.   இவ்வளவு சிறப்புகள் கொண்ட இக்குளத்தில் ஒரு முறை மூழ்கி நீராடினால் சிவலோகம் அடைந்து சாமீப முக்தி பெறுவர். பங்குனி உத்திர நாளில் இத்தேவதீர்த்தத்தில் நீராடி தானம் செய்து புற்றிடங்கொண்டாரை போற்ற முத்தி கிட்டும்.





சிதம்பரம் திருமறைஞானசம்பந்த நாயனாரால் இயற்றப்பட்ட கமலாலய சிறப்பு என்னும் நூல் 1547 திருவிருத்தங்களைக் கொண்ட 94 பகுதிகளைக் கொண்டதாகும். அந்நூலில் அசலேஸ்வர சருக்கம், தேவ தீர்த்த சருக்கம், கயா தீர்த்த சருக்கம் தசரத சருக்கம் என்று பல சருக்கங்கள் உள்ளன.  தசரத சருக்கத்தில் கூறப்பட்டுள்ள ஓர் வரலாறு.

இராமபிரானின் தந்தையும், அயோத்தி மன்னனான தசரத சக்கரவர்த்திக்கும் கமலாலய ஆரூருக்கும் தொடர்பு உண்டு எனில் அது ஆச்சரியத்தையே தரலாம். த்தொடர்பை விளக்கும் புராணக் கதையைப் பார்ப்போம். தசரதன் தந்தையான அசன் திருவாரூரில் சிவபெருமானையும் அம்பாளையும் பூசித்து தசரதனை மகனாகப் பெற்றான். தசரதன் வேதங்கள் முதலான நூல்களை ஆய்ந்தறிந்த பண்டிதனாக திகழ்ந்தான், ஒரு சமயம் ஆதித்தன் புதல்வனான சனிபகவான் ரோகிணியை பேதித்துக்கொண்டு செல்ல இருப்பதால், அதன் விளைவாக மழை இன்றி நாட்டில் பஞ்சம் தோன்றக்கூடும் பசியால் மண்ணுலகில் மனிதரெல்லாம் துன்புறுவர். பன்னிரெண்டாண்டுகள் துன்பம் நிகழும் என்று புரோகிதர்கள் தசரதனிடம் கூறினர்.

கார்த்திகை நட்சத்திரத்தை விட்டு ரோகிணிக்குச் செல்ல சனி பகவான் இரதத்தில் ஏறி செலுத்திய போது தசரதன் அங்கு சென்றான். ரோகிணியை ஊடறுத்துச் செல்லக்கூடாது. என் விருப்பத்தை மிறிச் செல்வாயானால் வாளினால் உன்னை கூறு செய்வேன் என்றான். அவனது வீர்த்தை கண்ட சனி அவன் வேண்டிக்கொண்டபடி ரோகிணையை பேதிக்காமல் அதன் பக்கமாய் சுற்றுக்கொண்டு சென்றான்.  தயரதன் சனியிடம், சனிக்கிழமை நல்லெண்ணெய் ஸ்நானம் செய்வோரை எந்நாளும் இடர் செய்யக்கூடாது. அன்று மறையோருக்கு எள், அன்னம் முதலியவற்றை அளிப்போருக்கு அட்டம சனியிலும் துன்புறுத்தக்கூடாது. பசுநெய்,   எள் முதலான திரவியங்களைக் கொண்டு தில ஹோமம் செய்கின்றவர்களை ஏழரைச் சனியிலும் துன்புறுத்தக்கூடாது என்று பல வரங்களையும் கேட்டார். சனியும் அவ்வாறே வரம் அளித்தார்.  தசரதனின் பராக்கிரமத்தை கண்டு இந்திரன் தசரதனை நண்பனாக்கிக் கொண்டான்.

ஒரு சமயம் தசரதன் இந்திரலோகம் சென்று நட்பு பாராட்டி திரும்பி வந்தான். பிள்ளைப் பேறில்லாதவன் என்று அவர் உட்கார்ந்திருந்த இடத்தை நீர் தெளித்து சுத்தம் செய்தான். இதை நாரத முனிவர் மூலம் அறிந்த தசரதன் மீண்டுமொரு முறை இந்திரலோகம் சென்றான் இம்முறையும் இவ்வாறே இந்திரன் செய்வதைக் கண்டு மனம் நொந்த தசரதன் திருவாரூர் வந்து சிவலிங்கம் ஸ்தாபித்து பூசை செய்ய தியாகேசரும் அவர் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்றார். மன்னனும் புத்திரப்பேறு வேண்டினார். இந்நகரில் கமல மலர் தடாகம் அமைத்து அதன் கரையில் திருமாலை வழிபட அவரே உனக்கு மகவாய் பிறப்பார் என்று அருளினார். தயரதனும் திருவாரூர் வந்து கமலாய குளத்தில் நீராடி புற்றிடங்கொண்டாரை வணங்கி இராமனை மகனாகப் பெற்றார். இவ்வாறு புத்திரப்பேறு தரவல்ல திருத்தலம் திருவாரூர் -  கமலாலயம்.



இத்திருக்குளத்து நீரால் விளக்கு எரித்தார் நமிநந்தியடிகள், கண் பெற்றார் தண்டியடிகள், மணிமுத்தாற்றில் இட்ட பொன்னை சுந்தரருக்கு இங்கு வழங்கியது ஆகிய சிறப்புகள் மட்டுமல்லாமல், ஆளுடையப்பிள்ளையாரும், அருள் திருநாவுக்கரசரும் மற்றும் பல நாயன்மார்களும் புனித நீராடியதும் இத்திருக்குளத்தில்தான். 

இது வரை திருவாரூரின் தீர்த்தங்களின் சிறப்பைப் பற்றிக் கண்டோம் வாருங்கள் திருவாரூர் ஆலயத்தின் பிரகாரத்தில் அமைந்துள்ள நான்கு முக்கியத் திருக்கோயில்களான அசலேசம், ஆடகேசம், அனந்தீச்சுரம், சித்தீசுரம் என்பனவற்றுள் அசலேசமே அரநெறி என்றழைக்கப்படுகின்றது. மற்ற மூன்று திருக்கோவில்களின் சிறப்பை முன்னரே கண்டோம். வாகீசர்  தமது திருவிருத்தத்திலும், தாண்டகப் பகுதியிலும் பாடிய அசலேசத்தின் சிறப்பை  அடுத்துக் காணலாம். 

                                                           திருப்பாத தரிசனம் தொடரும் . . . . 

No comments: