Thursday, January 6, 2022

மார்கழிப்பதிவுகள் - 22

 

திருப்பாவை # 22

ஸ்ரீ:








அங்கண் மாஞாலத்தரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கமிருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்;
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டுங் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் ................(22)


பொருள்:
பெருமாளே! உன்னிடம் தோல்வியடைந்த அகிலத்து அரசர்கள் எல்லாம் தத்தம் ஆணவம் தொலைத்து உன் பஞ்சனைக்கு பக்கத்தில் வந்து உன்னடியில் காத்து நிற்கின்றனர். அது போல நாங்களும் உன்னைச் சரணடைந்து நீ கண் விழிப்பதற்காக வந்து நிற்கின்றோம்.

சலங்கை போன்று சற்றே வாய் பிளந்த வரதா! செந்தாமரை கண்களால் எங்களை பார்த்தும் பாராமல் சிறிது சிறிதாக விழித்துப் பாரேன்.

அவ்வாறு சூரிய சந்திரர்கள் போன்ற இரு விழிகளால் நீ எங்களை நோக்குவாயே ஆனால் எங்கள் பாவங்கள் அனைத்தும் அகலும். அருளாளா!

விபீஷணன் சரணாகதிக்காக வந்து நிற்பது போல  வந்து நிற்கின்றோம், கண்ணா நீ  மெல்ல மெல்ல கண் திறந்து இரட்சிக்க வேண்டும் என்று வேண்டும் பாடல். 

16ம் பாசுரம் முதல் இப்பாசுரம் வரை கோபியர்கள் அனைவரும் நந்தகோபன் மாளிகையின் முன் நின்று கண்ணனை துயிலெழுப்பிய பாசுரங்கள் ஆகும்.

  

*************


திருச்சிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 2


அருட்செல்வத்தை அருளும் திருக்கயிலைக்கரசே பள்ளியெழுந்தருள்






அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது; உதயம்நின் மலர்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர்மலர, மற்றண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன்; இவையோர்
திருப்பெருந்துறை சிவபெருமானே;
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே;
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே
..........(2)


பொருள்: திருப்பெருந்துறையிலே கோயில் கொண்டுள்ள சிவபெருமானே! அன்பர்களுக்கு அருட்செல்வத்தை அருளும் திருக்கயிலைக்கரசே! அலை கடல் போன்ற கருணை வள்ளலே!

கிழக்கே அருணோதயம் துவங்கி விட்டது இருள் அகன்று விட்டது; உன் திருமுகம் ஆன உதய கிரியில் உன் கருணையாகிய சூரியன் மேலே எழுந்தொறும் உன் கண்களாகிய மலர்கள் மலர்கின்றன.

அண்ணலாகிய தேனை நாடும் (அடியார்களாகிய) அறு கால வண்டுகளின் திரள்கள் முறையே தோத்திர முழக்கம் செய்கின்றன. எனவே எங்களுக்கு அருள பள்ளி எழுந்தருள்வாயாக எம்பெருமானே !.


***********

திருப்பள்ளியெழுச்சி # 2




ஆனையின் அருந்துயர் கெடுத்த   அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே      

கொழுங்கொடி முல்லையின் கொழு மலர் அணவிக்

      கூர்ந்தது குண-திசை மாருதம் இதுவோ

எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம்

      ஈன்பணி நனைந்த தம் இருஞ் சிறகு உதறி

விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாய்

      வெள் எயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி

அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த

      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே             (2)

 

பொருள்: கொழுத்த முல்லைக்கொடியின் மலர்களை அளைந்து கொண்டு கிழக்குத்திசையிலிருந்து காற்று வருகிறது. மலர்ப்படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த அன்னங்கள், சொட்டும் பனியில் நனைந்த தங்கள் பெரிய சிறகுகளை உதறிக்கொண்டு எழுகின்றன. முதலையொன்று தனது பெரிய வாயிலிருக்கும் வெள்ளைப் பல்லால் கவ்வ, அதன் விஷத்தைத் தாங்க இயலாமல் தவித்த யானையின் அரிய துயரத்தைக் கெடுத்த அரங்கத்தம்மானே, பள்ளி எழுந்தருள்வாய்!

                     வைஷ்ணவ சம்பிரதாயத்தின் முக்கிய கோட்பாடான சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் கஜேந்திர மோட்ச வரலாறு இப்பாசுரத்தில் இடம் பெற்றுள்ளது

Wednesday, January 5, 2022

மார்கழிப்பதிவுகள் - 21

                                                                                  

திருசிற்றம்பலம்

எருதுக்கொடியையும் எம்மையும் உடையவனே பள்ளி எழுந்தருள்



திருப்பள்ளியெழுச்சி # 1



இறைவன் எங்கும் நிறைந்தவன், எல்லா பொருட்களிலும் அந்தர்யாமியாக எழுந்தருளி இருப்பவன், சகல வல்லமை கொண்டவன். அவர் உறங்குவதும் இல்லை விழிப்பதும் இல்லை, ஆனால் மானிட இயல்பினால் நாம் அந்த இறைவனை இரவு திருப்பள்ளிப்படுத்துகின்றோம், அவர் உறங்குவதாக பாவித்து, பிறகு காலையில் அவரை திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்புகின்றோம். ஓர் நாமம் ஓர் உருவம் இல்லாத அந்த பரம்பொருளுக்கு நாம் ஆயிரம் நாமம் பாடி வணங்குவதைப் போன்றதே இதுவும்.

திருப்பள்ளியெழுச்சி என்பது இவ்வாறு இறைவனை துயில் எழுப்புவதாகவும் கொள்ளலாம், நம்மில் ஆன்மிக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாவைத் துயிலெழுப்பி பரம கருணா  மூர்த்தி இறைவனின் கருணையை உணரச்செய்வதாகவும் கொள்ளலாம். "சுப்ரபாதம்" என்பது இதன் இணையான சமஸ்கிருத சொல்.

 அப்படி திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை,  குருவாக வந்து தானே வந்து ஆட்கொண்ட வள்ளலை எழுப்பி அனைத்து வளங்களையும் நலங்களையும் வழங்க பிரார்த்திப்பது போல் அமைந்த பாடல்கள் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள்.  மாணிக்க வாசக சுவாமிகள் பாடிய பதிகம் இது.

எம்பெருமானே எங்களுக்கு சகல மங்களங்களையும் தந்து அருள்வீர்களாக என்று வேண்டும் வண்ணம் அமைந்தவையே இந்த திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள். மார்கழி மாதம் திருவெம்பாவையுடன் இப்பதிகங்களும் திருக்கோவில்களில் பாராயணம் செய்யப்படுகின்றன. வாருங்கள் அன்பர்களே இனி வரும் நாட்களில் திருப்பள்ளியெழுச்சி பாடல்களை ஒவ்வொன்றாக அனுபவிப்போம். 




திருசிற்றம்பலம்


மாணிக்கவாசக சுவாமிகள்
திருப்பெருந்துறையில் அருளியது
(திரோதன சுத்தி)


போற்றி! என் வாழ்முதல் ஆகிய பொருளே!
புலர்ந்தது பூங்கழற்கிணைதுணை மலர் கொண்டு
ஏற்றி நின் திருமுகத்தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றி தழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ்
திருப்பெருந்துறை சிவபெருமானே!
ஏற்றுயர் கொடியுடையாய்! எம்மை உடையாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.........(1)



பொருள்:போற்றி! என் வாழ்விற்கு மூலப்பொருளே! சேற்றில் செந்தாமரை மலர்கள்  இதழ் விரிக்கும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளி அருள் பாலிக்கும் எம்பெருமானே! உயர்த்திய எருது கொடி உடையவனே! சிவபெருமானே போற்றி!

பொழுந்து விடிந்தது, உனது அழகிய மலர் போன்ற திருவடிகள் இரண்டிற்கும் ஒன்றுக்கொன்று ஒத்த மலர்கள் கொண்டு தூவினோம்; எங்களுக்கு அருள் புரியும் பொருட்டு உன் திருமுகத்தில் மலரும் அழகிய புன்னகையை எங்கள் உள்ளத்தில் நிறுத்தி உன் திருவடிகளை வணங்குகிறோம். எம்மை தொண்டனாக ஆட்கொண்ட எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்க.


**********
ஸ்ரீ:

திருப்பாவை # 21




ஏற்றக் கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப்படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றாருனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்து அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்...............(21)



பொருள்: பாத்திரங்கள் எல்லாம் பொங்கி பெருகி வழியுமாறு பாலைப் பொழிகின்ற வள்ளல் தன்மை பொருந்திய பசுக்களை உடைய நந்தகோபனின் திருமகனே கண்ணா! எழுந்திரு.

உன்னை அண்டியவர்களை காப்பவனே! எல்லாருக்கும் தலைவனே! ஒளிச்சுடராய் உலகமெங்கும் நிறைந்தவனே எழுந்திராய்!

பகைவர்கள் எல்லாரும் உன்னிடம் தோற்று, தங்களுடைய வலிமையெல்லாம் இழந்து, வேறு வழி இல்லாமல் உன் வாசல் தேடி வந்து உனது பொற் திருவடிகளில் விழுந்து சரணடைவது போல நாங்களும் உன் வாசலில் வந்து நின்று உன் புகழ் பாடுகின்றோம், நீ மகிழ்ந்து எழுந்து வந்து அருள்வாயாக!
****************
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருள்

 திருப்பள்ளியெழுச்சி # 1






கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்

      கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய்

மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்

      வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி

எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த

      இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்

அதிர்தலில் அலை-கடல் போன்றுளது எங்கும்

      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே             (1)

 பொருள்: கிழக்கு திசையில் சூரியன்  உதித்து விட்டான். கரிய இருள் அகன்று விட்டது. காலைப் பொழுது மலர்கின்றது, அன்றலர்ந்த மலர்களில் தேன் ஒழுகுகிறது. தேவர்கள் வந்து எதிர் திசையை நிரப்புகிறார்கள். அவர்களுடன் ஆண் -பெண் யானைகளின் கூட்டமும் வந்துள்ளன. முரசு கடல் அலைபோல அதிர்கிறது. அரங்கனே பள்ளியில் எழுந்து  தொண்டர்களுக்கு  அருள்வாயாக.         


Tuesday, January 4, 2022

அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே

தொண்டரடிப்பொடியாழ்வார் 




தமேவமத்வா பரவாஸுதேவம்

ரங்கேசயம் ராஜவதர்கணீயம்-

ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம்

பக்தாங்க்ரி ரேணும் பகவந்த மீடே.

 

பொருள்: ஸ்ரீவைகுண்டத்தில் வீற்றிருக்கும் பரவாசுதேவனாகிய எம்பெருமானே இராஜாதிராஜனாக திருவரங்கத்தில் வீற்றிருக்கிறான் என்பதை முழுமையாக உணர்ந்து, அவனைத் துயில் எழுப்பும் (திருப்பள்ளியெழுச்சி என்னும்) பாசுர மாலையை அருளிச்செய்த தொண்டரடிப்பொடி ஆழ்வாரைப் போற்றி வணங்குகிறேன்.

 

மண்டங் குடியென்பர் மாமறையோர், மன்னியசீர்த் 

தொண்ட ரடிப்பொடி தொன்னகரம், - வண்டு 

திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப், பள்ளி 

உணர்த்தும் பிரானுதித்த வூர்.

 

பொருள்: தேன் வண்டுகள் விரும்பி மீண்டும் மீண்டும் விஜயம் செய்யும் பூஞ்சோலைகள் நிரம்பிய திருவரங்கத்தில் உள்ள இறைவனைத் துயில் எழுப்பும் பாசுரங்களைப் படைத்தவரும், உன்னத குணங்கள் அமையப் பெற்றவருமான தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த நகரம் மண்டங்குடி. வேத விற்பன்னர்கள் நிறைந்த பாரம்பரியச் சிறப்புடைய ஊர். (அத்திருத்தலத்தைப் போற்றுகிறேன்.)

தொண்டரடிப்பொடியாழ்வார் மார்கழி மாத  கேட்டை நட்சத்திரத்தில் திருமண்டங்குடியில்  திருமாலின் வனமாலையின் அம்சமாக அவதரித்தவர். "அரங்கனைப் பாடிய வாயால் மற்றொரு குரங்கனைப் பாடேன்" என்று பரம வைராக்கியமாய் திருவரங்கனை மட்டுமே பாடிய ஒரே ஆழ்வார். இவர் பாடிய பாசுரங்கள் இரண்டு. ஒன்று திருமாலை, மற்றது திருப்பள்ளியெழுச்சி. திருமாலையை (பாசுரம்)  அறியாதார் திருமாலையே (மஹாவிஷ்ணு) அறியாதார் என்பது இப்பாசுரத்ததிற்கு உள்ள சிறப்பு.  நாம சங்கீர்த்தனத்தின் பெருமையை கூறுவதே இப்பிரபந்தத்தின் சாரம் ஆகும்.  திருபள்ளியெழுச்சி திருவரங்கத்தில் பாம்பணையில் யோகு துயில் கொள்ளும்  திருவரங்கனை பள்ளியெழுந்து பக்தர்களுக்கு அருள வேண்டும் பாடல்கள் கொண்ட பாசுரம்.

ஆழ்வார் திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து அரங்கனுக்கு மாலை தொடுத்து சமர்ப்பித்து வந்தார். குறிப்பாக துளசி மாலை தொடுத்து அரங்கனுக்கு சமர்ப்பிப்பதில் இவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. இவ்வாறு துளசி மற்றும் புஷ்ப கைங்கர்யத்தில் ஈடுபட்டு இருந்த இவரை, அரங்கன் மாயம் செய்து சில நாட்கள் தேவதேவி என்ற ஒரு  தேவதாசிப்பெண்ணிடம் மயங்கச் செய்தான்.

அரங்கனை முற்றிலும் மறந்து தன்னையும்  பொருட்கள் அனைத்தையும்  அப்பெண்ணிடம் இழந்தார். முடிவில் பொருள் ஒன்றும் இல்லாத நிலையில் அவள்  ஆழ்வாரைக் கை விட்டாள். ஆனால் ஆழ்வார் தேவதேவியை மறக்க இயலாமல் வருந்தவே அரங்கன் ஒரு திருவிளையாடல் செய்தான். உயர்ந்த முனிவர்கள் போற்றும் பரந்தாமன், ஒரு சிறுவனாக உருமாறி, தன் சந்நிதியில் இருந்த பொன் வட்டிலை ஏந்திக் கொண்டு தேவதேவியின் வீட்டிற்கு சென்று விப்ர நாராயணர் அளித்ததாகக் கொடுத்தான். அவளும்  மிகவும் மகிழ்ந்து மறுபடி ஆழ்வாரை தன் வீட்டிற்கு உள்ளே வர அனுமதி அளித்தாள். மறுநாள் காலை, கோயிலில் அரங்கன் சந்நிதியில் பொன் வட்டிலைக் காணாமல், பட்டர் குழாம் அரசனிடம் முறையிட, அரசன் ஆட்களை ஏவி வட்டில் இருக்குமிடம் அறிந்து, ஆழ்வார் அதைத் திருடியதாக நினைத்து அவரை சிறையில் அடைத்தான்.

அன்றிரவு அரசனின் கனவில் அரங்கன் தோன்றி அனைத்தும் தன் திருவிளையாடல் என்பதை உணர்த்தி, ஆழ்வாரை உடனே விடுவிக்க கட்டளை இட்டான். (ஆழ்வாரது முன் வினையை நீக்கவும், சிற்றின்பம் எவ்வளவு கீழ்மையானது என்பதை உணர்த்தவும், காம குரோதமாகிய குற்றங்களை விலக்கி வாழ வேண்டும், இளமையில்  மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இறை நினைவுடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்த எம்பெருமான் நடத்திய லீலை இது என்பர் பெரியோர்கள்) .  

அரசனும் அவ்வாறே செய்ய, ஆழ்வார் அரங்கனின் அருளை நினைந்து நெக்குருகி இனி தன் வாழ்நாள் எல்லாம் அரங்கனுக்கே ஆட்பட்டு இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டு பழையபடி புஷ்ப கைங்கரியத்தில் ஈடுபட்டார். இடையே அரங்கனை மறந்து உழன்றதன் காரணத்தினால் ஏற்பட்ட ஏக்கத்தினால் இனி அவரை மறக்ககூடாது என்ற பாரிப்பினால் பாடிய பாடல்களே திருமாலை பிரபந்தம்.திருமால் இராமனாக அவதாரம் செய்த பொழுது, விசுவாமித்திரர் யாகம் காக்க அவருடன் காட்டிற்கு செல்கிறார். இராம லக்ஷ்மணர்கள், விசுவாமித்திர ரிஷியுடன் இரவு பொழுதைக் காட்டில் கழிக்கின்றனர். விடியல் வேளையில், “கௌசல்யா சுப்ரஜா ராமா…உத்திஷ்ட” என்று விசுவாமித்திரர் இராமனை துயில் எழுப்புகிறார். இது போல அர்ச்சாவதாரத்தில் அரங்கனைத் துயில் எழுப்பும் விதமாக, “திருப்பள்ளி எழுச்சி” என்னும் பிரபந்தத்தையும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளியிருக்கிறார்.

சிறு வயதில் அதிகாலைக் குளிரில் அடியேனின் ஊர் உடுமலைப்பேட்டையில், அருள்மிகு பிரசண்ட விநாயகர் கோவிலில் மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம் செய்வோம். அப்போது தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சியும் சேவித்திருக்கிறோம். ஆயினும் இதுவரை இப்பாசுரங்களுக்கான பொருளை பதிவிடவில்லை என்பதால் இவ்வருட மார்கழிப்பதிவில்  நாளை முதல் சிவபெருமானின் திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பாராயணம் செய்யும் நேரத்தில் அரங்கனின் திருபள்ளியெழுச்சியையும் சேவித்து பாசுர விளக்கத்தையும்  காணலாம் அன்பர்களே.

 


மார்கழிப்பதிவுகள் - 20

                                                                          ஸ்ரீ:



நப்பின்னை பிராட்டியாருக்காக கண்ணன் யாவராலும் அடக்க முடியாத ஏழு காளைகளை அடக்கி அவரைக் கைப் பிடித்தார் என்பது புராண வரலாறு.




    
ஸ்ரீ ஆண்டாள் சத்ய நாராயணப் பெருமாள் சேர்த்தி

முப்பத்துமூவர் அமரற்கு முன்சென்று
கப்பங்தவிர்க்குங் கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பங் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பென்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்..........(20)


பொருள்: முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தானே முன் சென்று அவர்களின் இடரை களையும் கண்ணா எழுந்திரு, நேர்மையானவனே! திறமையானவனே! பகைவரைப் பந்தாடும் பரந்தாமா! துயிலெழாய்.

( முப்பத்து மூவர் - பன்னிரண்டு சூரியர்கள், பதினோறு உருத்திரர்கள், அஷ்ட வசுக்கள், இரண்டு அக்னிகள் ஆகியோர் என்பாரும் உண்டு)

பொற்கலசம் போன்ற மெல்லிய மார்பகங்களையும், சிவந்த வாயையும் கொடி போன்ற மெல்லிய இடையையும் உடைய நப்பின்னை நங்கையே! திருமகளே! நீயும் துயிலெழாய்.

எங்கள் நோன்பிற்க்கு தேவையான விசிறியும் கண்ணாடியும் அளித்து உன் கணவனை மலர் கண்ணனை எங்களுடன் நீராட்ட அனுப்பு தாயே!


கண்ணாடி மற்றும் விசிறி கேட்பதின் உள்ளார்த்தம் - விசிறி என்பது மனதிலும், உடலிலும் உள்ள மாசை விசிறியபடி அகற்றவும், அவ்வாறு சுத்தப்படுத்தப்பட்ட ஆத்ம ஸ்வரூபம் பார்க்க கண்ணாடியும் என்று கொள்ளலாம். மனித ரீதியாக நீராடிய பிறகு கண்ணாடி பார்த்துக் கொண்டு விசிறி கொண்டு கூந்தலை காய வைப்பதற்காக கேட்டதாகவும் கொள்ளலாம்.



திருசிற்றம்பலம் 



போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றியெல் லாவுயிக்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்! ..........(20)


பொருள்: திருவெம்பாவையின் துவக்கத்தில் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி என்றருளிய மாணிக்க வாசகர், முடிவில் அப்பெருஞ்சோதி ஐந்தொழில் புரியும் பொருட்டு திருவுள்ளங் கொண்டருளும் பொருட்டு ஆதியாயிற்று. ஐந்தொழில் செய்து முடித்ததில் அந்தமாயிற்று. முதலும் முடிவும் முழுமுதற்பொருட்டு முதலும் முடிவும் நேர்கின்றன. ஐந்தொழில் புரிவதால் அத்தகைய ஆதியும் அந்தமும் எம்பெருமானது திருவடிகளே.


அந்த திருவடிகள் நம்மை காத்தருள்க. தோற்றம்(படைப்பு), போகம்(காப்பு), ஈறு(அழிப்பு), காணாமை(மறைப்பு), ஆட்கொண்டருளல்(அருளல்) என்னும் ஐந்தொழில்களும் அனைத்து உயிர்களுக்கும் பொது, ஐந்தொழில்களும் திருவடிகளே செய்யும். காணாமை அடி முடி தேடிய வரலாற்றால் குறிப்பித்தது உய்தல் எல்லாவுயிரொடும் எமக்கும் உரித்து.

முதல் ஏழு அடிகளிலும் திருவடிகள் காத்தல் வேண்டும் என்றபடி ஈற்றடியில் பொங்கு மடுவாக விளங்கும் தேவ தேவனின் திருவடிகளில் சேர வேண்டும் என்ற மார்கழி நீராடல் என்ற "தொல் வழக்கம்" கூறப்பட்டது.


நடராச பெருமானது உருவத்தில் தோற்றம் துடியதனில், தோயும் திதி அமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் ஊற்றமாய் ஊற்றும் மலர்பதத்தே உற்ற திரோதம், முத்தி நான்ற மலர் பதத்தே நாடு. இவ்வுண்மை விளக்குத் திருவெண்பாவிற் திருக்கரங்கள் முத்தொழிலுக்கு இடமாக கூறப்படினும், இத்திருவாசகம் உணர்த்தும் உண்மை திருவடிகளேயாகக் கொள்க. அருவம் அருவுருவம் உருவம் மூன்றும் கடந்த ஞான சொரூபத்தில் எவ்வுறுப்பும் ஞானபாவனையாகத்தாம் அமையும்; உண்மையில் உருவமில்லை. ஞானமே அம்பலம் ஆனந்தமே திருக்கூத்து.

(பாவை நோன்பின் நோக்கம் அந்த எம்பெருமானின் தாள் அணைவதற்கே என்பதை உணர்க)

இத்துடன் திருவெம்பாவை நிறைவுற்றது இனி திருப்பள்ளியெழுச்சிப் பதிகங்களைக் காண்போம்.


                                                                          திருச்சிற்றம்பலம்

                                                                       ************************


Monday, January 3, 2022

மார்கழிப்பதிவுகள் - 19

                                                                                      உ

                         
திருசிற்றம்பலம் 


உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொற் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான்! உனக்கொன் றுரைப்போம்கேள்!
எங்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க;
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க;
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க;
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு? எமக்கேலோர் எம்பாவாய்!..........(19)



பொருள்: எங்கள் பெருமானே! "உன் கையில் உள்ள பிள்ளை உனக்கே அடைக்கலம்" என்ற சொல் பழமையானது. அதை புதுப்பித்து கூற வேண்டிய அச்சம் எங்களுக்கு தோன்றியுள்ளது. ( இம்மண்ணில் பிறந்த யாவரும் இறுதியில் எம்பெருமானின் திருவடிக்கமலங்களில் தான் சென்று சேர்கின்றனர், அதுவல்லாமல் மீண்டும் பிறவி வேண்டாம் என்பதை இவ்வாறு கூறுகின்றனர்)

குழந்தைகளின் துன்பத்தை நீக்கி இன்பத்தை கொடுப்பவள் தாய் தான். நாங்கள் குழந்தைகள் நீயே தாய். எங்கள் விருப்பத்தை நீதான் நிறைவேற்ற வேண்டும். அந்த விண்ணப்பத்தை கேட்டு அருள்!

எங்கள் கொங்கைகள் உன் அன்பர் அல்லாதார்கள் தோளைத் தழுவாதொழிக. எங்கள் கைகள் உனக்கு அல்லாமல் வேறு எந்த பணிகளையும் செய்யாதொழிக. எங்கள் கண்கள் இரவும் பகலும் உன்னைத் தவிர வேறொன்றையும் காணாதொழிக.

எங்கள் தலைவனாகிய தாங்கள் அடிமைகளாகிய எங்களுக்கு இந்த வண்ணம் அருள் புரிந்தாயானால், கதிரவன் எந்த திசையில் உதித்தாலும் எங்களுக்கென்ன குறை?


(மனம், காயம், வாக்கு ஆகியவற்றால் செய்யும்   எல்லா செயல்களும் அந்த சிவபெருமானுக்கே அர்ப்பணம் என்னும் சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் பாடல்)

(பாவை நோன்பின் நோக்கமான நல்ல கணவனை அடைய வேண்டும் என்பதைக் கூறும் பாடல் என்பாருமுண்டு. )

**********


ஸ்ரீ:




ஆண்டாள் திருக்கல்யாணம்



குத்து விளக்கெரிய கோட்டுக்காற் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்.
 ........ (19)


பொருள்: சுற்றிலும் குத்து விளக்குகள் ஒளி சிதற , யானை தந்தத்தால் செய்யப்பட்ட கால்களையுடைய சப்ர மஞ்ச கட்டிலில், மிருதுவான, வெண்மையான, குளிர்ச்சியான, வாசனை மிக்க, அழகான பஞ்சு மெத்தையில் வாசனை மிகுந்த கொத்து கொத்தான மலர்களை சூடிய நப்பின்னை பிராட்டியை அனைத்துக் கொண்டு உறங்கும் அகலகில்லேனிறையும் என்று அலர் மேல் மங்கை உறையும் மார்பா! மணிவண்ணா! கண்ணா! வாய் திறந்து பேசு.

மை எழுதிய கண்களையுடைய நப்பின்னையே! உன் கணவனின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்று, உறங்கும் உன் கணவனை எழுப்ப உனக்கு மனமில்லையா? அவரை நீ சிறிது நேரம் கூட பிரிய மாட்டாயா? இது உனக்கு தகுதியன்று. அவ்வளவு தான் சொல்வோம். எங்கள் கோரிக்கையை ஏற்று கண்ணனை எழுப்பு அம்மா!



நப்பின்னை பிராட்டியாருக்காக கண்ணன் யாவராலும் அடக்க முடியாத ஏழு காளைகளை அடக்கி அவரைக் கைப் பிடித்தார் என்பது புராண வரலாறு.

     (பஞ்சனை என்பதற்கு அன்னத்தின் தூரிகை, இலவம் பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தோகை ஆகியவற்றால் ஆன மெத்தை என்பர்.)
          

Sunday, January 2, 2022

மார்கழிப்பதிவுகள் - 18

ஸ்ரீ:

திருப்பாவை # 18


திருப்பாவை ஜீயர்



உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி! கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்;
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்துதிற வாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!...........(18)


பொருள்:

ஆயர் குலத்தின் தலைவன் நந்தகோபாலன், மதம் பொழிகின்ற யானைகளையுடையவன், பகைவர்களைக் கண்டு பின் வாங்காத தோள் வலிமை கொண்டவன், அவனுடைய மருமகளே! நப்பின்னை பிராட்டியே! மணம் கமழும் கூந்தலை உடையவளே! கதவை திறவம்மா!


பொழுது விடிந்து விட்டது, பொற்கோழிகள் கூவுகின்றன, மாதவிப் கொடிகள் படர்ந்திருக்கும் பந்தலின் மேல் பல குயில்கள் கூவுகின்றன. பந்து பொருந்துகின்ற மெல்லிய காந்தள் போன்ற விரல்களையுடையவளே! உன் கணவன் கண்ணனின் புகழை உன்னுடன் சேர்ந்து நாங்களும் பாட வந்திருக்கின்றோம், தாமதம் செய்யாமல் செந்தாமரை போன்ற உன் கைகளில் அணிந்துள்ள வளையல்கள் கல கல என்று ஒலிக்கும் வண்ணம் வந்து கதவைத் திறவாயாக தாயே!


விடையேழும் அடக்கிய வரலாறு: கண்ணன் நப்பின்னைப் பிராட்டியைத் திருமணஞ் செய்து கொள்வதற்காக அவர் தந்தை குறித்தபடி, யாவருக்கும் அடங்காத ஏழு எருதுகளையும் ஏழு திருவுருவங் கொண்டு சென்று வலியடக்கித் தழுவினான் என்பது வரலாறு. சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் ஒரு வலிமை மிக்க காளையை அடக்கி நப்பின்னை பிராட்டியை கண்ணன் மணந்த செய்தி குறிப்பிடப்படுகின்றது. நந்த கோபரின் மருமகளாக நப்பின்னைப் பிராட்டி விளங்குவதை " உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன், நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்" என்று இப்ப்பாசுரத்தில் ஆண்டாள் நாச்சியார் பாடுகின்றார்.


திருப்பாவை ஜீயர்: ஒரு நாள் பகவத் இராமனுஜர் பெரிய நம்பிகள் திருமாளிகைக்கு பிக்ஷைக்கு எழுந்தருளினார். அப்போது அவர் இப்பாசுரத்தை அனுசந்தித்துக்கொண்டு இருந்தார். சரியாக சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் என்று நினைக்கும் அதே சமயத்தில் பெரிய நம்பிகளின் புத்ரி அத்துழாய் கதவை திறந்து பிக்ஷையிட வந்தார். உடனே இராமானுஜர் மூர்ச்சையடைந்து விட்டார்.  அத்துழாய் துணுக்குற்று உள்ளே சென்று தன் திருதகப்பனாரை அழைத்து வந்தார். அவரும்  வந்து இரானுஜரை எழுப்பி உந்து மதக்களிற்றன் அனுசந்தானமோ என்றார். இராமனுஜரும் ஆம் என்றார். இவ்வாறு எந்நேரமும் திருப்பாவையை அனுசந்திப்பதால் பெரிய நம்பிகள் இராமனுஜரை திருப்பாவை ஜீயர் என்றழைத்தார்.    

***********

 

திருசிற்றம்பலம் 



அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கி தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாகி அலியாய் பிறங்கொளி சேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணே! இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!..........(18)


பொருள்: பெண்ணே! திருவண்ணாமலையில் எம்பெருமான் மாலும் அயனும் அரிய ஒண்ணா அருள் மலையாய், அருட்சோதிப்பிழம்பாய், எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அவர் திருவடியில் விழுந்து வணங்கும் தேவர்களின் மகுடங்களில் உள்ள பல்வேறு இரத்தினங்களின் ஒளியானது எம்பெருமானின் திருவடி பேரொளியின் முன் வீறற்று விடுகின்றன, அவை போல கதிரவன் எழுந்ததும் விண் மீன்கள் தங்கள் ஒளி இழந்து மறைந்து விட்டன, பொழுதும் விடிந்து விட்டது.

எம்பெருமான், பெண்ணானவன், ஆணானவன், அலி மூன்றுமானவன். ஒளிதரும் கதிரவனும், மதியும் சுடருமான முக்கண்ணனானவன். விண்ணாகவும், மண்ணாகவும், மற்றுமுள்ள வேறாக உள்ள அனைத்துமானவன். அவன் நம் கண் முன்னே அருட்காட்சி தரும் நிறைந்த அமுதமுமாகி நிற்கின்றான். அந்த பெருமானுடைய பொற்திருவடிகளைப் பாடிப்பரவி, நாம் உய்ய மலர்கள் நிறைந்த இந்த நீரிலே பாய்ந்து நீராடுவோமாக.

அண்ணாமலையார் மகிமை காண செல்லுங்கள் முதல் பதிகம்  http://thiruvempavai.blogspot.in/2007/12/1.html

Saturday, January 1, 2022

மார்கழிப்பதிவுகள் - 17

                                                                

              

திருசிற்றம்பலம் 

அன்பர்கள் அனைவருக்கும்  இனிய ஆந்கில புத்தாண்டு வாழ்த்துகள் (2022). பிறக்கின்ற இந்த ஆண்டில்  அனைவருக்கும்  அனைத்து நலத்தையும்  வளத்தையும் அருள இறைவனை  பிரார்த்திக்கின்றேன். 


 





செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலாதக்
கொங்கண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமல பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப்பூம் புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!..........(17)

பொருள்: நங்கள் சிவபெருமான் பரம கருணாமூர்த்தி! அவர் சிவந்த கண்களைக் கொண்ட திருமால், நான்முகன், மற்றுமுள்ள மற்ற தேவர்கள் ஆகியவர்களிடத்திலும், வேறு எங்கும் இல்லாத இன்பம் தனது அடியவர்களாகிய நம்மிடம் உள்ளதாக அருள் புரிந்தவர்.

நம்முடைய குற்றங்களையெல்லாம் நீக்கி குணம் மட்டும் கொண்டு கோதாட்டும் உத்தமர். எளி வந்த கருணையினால் நமக்காக இரங்கி இம்மண்ணுலகில் தேன் சிந்தும் மலர் சூடிய கருங்கூந்தலையுடைய உமையம்மையுடன் ரிஷபத்தில் இறங்கி நம்முடைய வீடுகளில் வந்து எழுந்தருளி தன் பொற்பாத தரிசனம் தந்தருளிய வள்ளல்.

பெண்ணே! அந்த அருள்கனிந்த திருக்கண்களையுடைய அரசனை, அடிமைகளாகிய நமக்கு தெவிட்டாத தெளிந்த அமுதமானவனை, நம்முடைய சிவபெருமானைப் பாடி மங்களம் பெருகி விளங்க தாமரை மலர்கள் நிறைந்த இந்த நீரில் பாய்ந்து நீராடுவோமாக!

***********


ஸ்ரீ:






அம்பரமே,தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா, எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்!
செம்பொற் கழலடி செல்வா! பலதேவா!
உம்பியும் நீயுன் உறங்கேலோ ரெம்பாவாய்!


பொருள்: உடுக்க நல் உடை, பருகும் நீர், உண்ணும் உணவு ஆகிய அனைத்தையும் எங்களுக்கு தாராளமாக அறமாக வழங்கும் எம்பெருமானே! கண்ணனின் தந்தையே! நந்தகோபாலா! எழுந்திரு.

வஞ்சிக்கொடிக் கொடி போன்ற ஆய் குலத்து பெண்கள் அனைவருக்கும் கொழுக் கொம்பாக விளக்கும் ஒளி விளக்கே! எம்பெருமாட்டியே யசோதையே! நீயும் துயில் எழாய்!

வாமனனாக வந்து வான் வெளியையும் கடந்து திரிவிக்கிரமனாக வளர்ந்து உலகத்தை தன் திருவடியால் அளந்த தேவதேவனே! கண்ண பெருமானே துயில் கொள்ளாமல் எழுந்திரு!

செம்பொன்னாலான வீரக்கழல்களை அணிந்த செல்வா! பலதேவா! நீயும் உனது தம்பியும் உறங்காதீர்கள்.


அம்பரமூடுறுத்து ஓங்கி உலகளந்தவன்:

வாமன அவதாரத்தின் பெருமையையே இப்பாசுரத்தில் "அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே" என்று பாடுகிறார் ஆண்டாள் நாச்சியார். (பார்க்க மூன்றாம் பாசுரம்  .http://andalthiruppavai.blogspot.in/2007/12/3.html )