Saturday, December 26, 2020

அத்யயனோற்சவம் - 12 (வைகுண்ட ஏகாதசி)

இராப்பத்து - முதல் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    10    11    13    14    15    16    17    18    19   20   21   22     

             

  

 

                       

இரத்ன அங்கி, கிளி மாலை, பாண்டியன் கொண்டை தரித்து நம்பெருமாள் சேவை சாதிக்கும் அழகு.

                                           

பின்னழகு 




உபய நாச்சியார்களுடன் ஸ்ரீநிவாசர் 



மார்கழி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி. அன்று அதிகாலை 4 மணி அளவில் பரம பத வாசல் திறப்பு, அன்று நம் பெருமாள் சிவப்பு நிற ரத்ன அங்கியில் சேவை சாதிக்கின்றார். கஸ்தூரி திலகத்துடன், இரத்னங்கியிலே சிவப்பு, வெள்ளை, பச்சை, முத்து , பவளம் என்று எல்லா நிற மணிகளும் மின்ன, மெல்லிய சல்லாத் துணி இடையினில் உடுத்தி, கிளி மாலையுடன் , கோல விளக்கே , கொடியே, விதானமே என்று ஆண்டாள் பாடியபடி அழகாக எம்பெருமான் தங்க தோளுக்கினியாளில் எழுந்தருளி விடியற்காலையில் அரங்கன் பட்டர் வம்சத்தினரின் வேத விண்ணப்பம் கண்டருளி அரையர்கள் திருவாய்மொழி தொடங்க இரத்தின அங்கியில் சிம்ம கதியில் நமக்கு வைகுண்ட பேற்றை வழங்க ரங்கா, ரங்கா என்ற கோஷத்துடனே எழுந்தருளுகின்றார். அலைகடலென பக்தர்களின் பக்தி அலை நடுவே பரமபத வாயிலை அடைந்து  விரஜா நதி மண்டபத்தில் வேத முழக்கம் கேட்டருளி பரமபத வாசல் திறக்க பரமபத நாதனாய் சேவை சாதித்து திருமாமணி மண்டபம் என்னும் ஆயிரங்கால் மண்டபம் சேர்ந்து நாள் முழுதும் சேவை சாதிக்கின்றார். பொது ஜன சேவையும், அரையர் சேவையும் நடைபெறுகின்றது. இரவு 9 மணிக்கு குளிருக்காக தலையில் ஒரு குல்லாவை அணிந்து, ஒரு சல்லாத்துணியினால் மேனியை மறைத்துக்கொண்டு  திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் அதிகாலை மூலஸ்தானத்தை அடைகின்றார் நம் பெருமாள்.


மூலவர் அரங்கநாதர் முத்தங்கி சேவை தருகின்றார் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முத்தங்கியில் மூலவரை சேவிக்கலாம்.

அனைத்து வைணவ தலங்களிலும் மூலவர் மற்றும் உற்சவர் வைர அங்கி, ரத்ன அங்கி, முத்தங்கி, புஷ்ப அங்கி அல்லது சிறப்பு அலங்காரத்தில் இன்று சேவை சாதிக்கின்றனர். பரமபதவாசல் திறக்கப்படுகிறது அதன் வழியே சென்று பெருமாளை தரிசிக்கின்றனர் பக்தர்கள்.

காயத்ரியைக் காட்டிலும் சிறந்த மந்திரம் இல்லை. தாயை விஞ்சிய தெய்வம் இல்லை. காசியை விஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை. ஏகாதசியை விஞ்சிய வேறு விரதமும் இல்லை என்பது முன்னோர் வாக்கு. தீட்டுக்காலத்தில் கூட ஏகாதசி விரதம் மேற்கொண்டால் பயன் உண்டு. 

ஏகாதசி பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியில்( பக்ஷம்) பதினொன்றாவது நாளாகும். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஆகிய இந்த பதினோரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் ஏகாதசி விரதம் இருந்தால் ‘நம் வினைகள் எல்லாம் அழிந்துவிடுவது உறுதி என்பர் முன்னோர். 

ஏகாதசி திதியின் உரிய தேவதை தர்ம தேவதை ஆகும். ஆகவே தர்ம திதியாகிய ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடித்தால் தர்மத்திற்கு வளர்ச்சி ஏற்படும். தர்மத்தைக் காப்பாற்ற யுகம் யுகமாக அவதாரம் செய்யும் இறைவனுக்கும் மகிழ்ச்சி ஏற்படும்.

வருடத்தில் மொத்தம் 24 ஏகாதசிகள் வரும் அதிசயமாக சில வருடம் 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. ஒவ்வோரு ஏகாதசிகளுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு, விரதத்திற்கு ஒரு பலன் உண்டு. எல்லா ஏகாதசிகளுக்கும் சிறந்தது மார்கழி மாத சுக்லபக்ஷ ஏகாதசியாகும்.  இது வைகுண்ட ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் மோக்ஷ ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது. இது மூன்று கோடி ஏகாதசிகளுக்கு சமம் என்பதால் முக்கோடி ஏகாதசி. இராவணனுடைய கொடுமையிலிருந்து தப்பிக்க பெருமாளிடம் முப்பத்து முக்கோடிதேவர்களும் சரணடைந்ததால், இந்த ஏகாதசி. முக்கோடி ஏகாதசி என்றழைக்கப்படுகின்றது.

திருமால் தேவர்களின் வேண்டுகோளை ஏற்று முரன் என்னும் அரக்கனை அழிக்க சென்றார். பல வருடங்கள் அவனுடன் போரிட்டும் அவனை எளிதாக அழிக்க முடியவில்லை எனவே பெருமாள் பத்ரிகாச்ரமம் சென்று அங்கு ஒரு குகையில் படுத்துக் கொண்டார். திருமாலைத் தேடி வந்த அசுரன் அவர் நித்திரையில் இருப்பதை கண்டு அவரை தாக்கத் தொடங்கினார். அப்போது பெருமாளின் திருமேனியிலிருந்து ஒரு மகத்தான சக்தி ( தேவி ஸ்வரூபம்) தோன்றி அந்த அசுரனை மாய்த்தது.

இதனால் மகிழ்ந்த எம்பெருமான் அவள் வேண்டிய வண்ணம் அவளுக்கு ஏகாதசி என்னும் நாமம் விளங்கும் என்றும். ஏகாதசி அன்று விரதமிருந்து பெருமாளை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இம்மையிலும், மறுமையிலும் நல்லவனற்றையே அருளுவதாக வரம் கொடுத்தார்.

ஏகாதசி விரதம், இம்மையில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை அளிப்பதோடு மறுமையில் பேரின்பத்தையும் அருளும் என்பது உறுதி.

இந்த மகத்தான விரதத்தை பின்பற்ற சில இன்றியமையாத விதிமுறைகளை முன்னோர்கள் வகுத்துள்ளனர். அவை தவம், தானம், புலனடக்கம் என்று மூன்று வகைப்படும். புலனடக்கத்தின் அடிப்படையாக இருப்பது உணவுக்கட்டுப்பாடு, எனவேதான் ஏகாதசி நன்னாளில் முழுமையான உண்ணாவிரதத்தை முக்கியமாகக் கொண்டனர்.

ஆகவே அமைதியாக தியானத்தில் அமர்ந்து எப்போதும் இறைவன் திருநாமத்தை ஸ்மரணம் செய்து கொண்டிருக்கலாம். இதனால் உடலும் உள்ளமும் தூய்மை அடைந்து பக்குவபப்டுகின்றது. எனவே இவ்விரதத்தை கடைப்பிடிப்பவர் தவம் செய்ய தகுதி உடையவர் ஆகின்றார்.

அல்லும் பகலும் அனவரதமும் இறைவனைப் பற்றி நினைத்தல், அவரின் இனிமையான திருநாமங்களை நா இனிக்கக் கூறுதல், அவர் எழுந்தருளி அருள் பாலிக்கும் கோவில்களிலோ அல்லது தங்கள் தங்கள் இல்லங்களிலேயோ ஆடி ஆடி அகம் கரைந்து, இசைப் பாடி பாடி கண்ணீர் மல்கி அவரிடம் நம் மனம், மொழி, மெய்களை ஈடுபடுத்தவே விரதம் இருக்க வேண்டும்.

இவ்வாறு ஏகாதசி விரதம் இருந்த பின், இறைவனுக்கு நிவேதனம் செய்த உணவை உண்பதற்கு முன் அதை தகுந்த பெரியோர்களுக்கு முதலில் வழங்கி உண்ணச் செய்யும் துவாதசி பாரணையில் தானம் என்ற உயர்ந்த பண்பு விளங்குகின்றது.

இனி ஏகாதசி விரத மகிமையைப் பற்றிக்காண்போமா? திருமாலின் அவதாரமான ஸ்ரீராமனே பங்குனி மாதத்தின் விஜயா என்னும் ஏகாதசி விரதம் இருந்து பின் கடலைக் கடந்து சென்று தசக்ரீவனை அழித்து இலங்கையை வென்றார் என்று புராணம் கூறுகின்றது. இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் சீதா தேவியின் அருளைப் பெறலாம்.

ஒரு வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மஹாராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடியாதவாறு திருமாலில் சுதர்சன சக்கரம் காத்தது என்று பாகவத புராணம் கூறுகின்றது.

திருக்குறுங்குடி என்ற தலத்தில் பாணர் குலத்தைச் சார்ந்த நம்பாடுவான் ஏகாதசி அன்று எம்பெருமானைப் பாடி தானும் உயர்வு பெற்றதோடு தன்னை அழிக்க வந்த பிரம்மராக்ஷனுக்கும் சாப விமோசனம் அளித்ததை கைசிக புராணம் கூறுகின்றது.

ருக்மாங்கதன் என்ற மாமன்னன் இந்த விரதத்தை தானும் கடைப்பிடித்து தன் நாட்டவரும் பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்ற பெரும் பயனை ருக்மாங்கத சரித்திரம் கூறுகின்றது.

பீமன் ஒர் ஆண்டு முழுவதும் இந்த விரதத்தை செய்ய முடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியாகிய நிர்ஜலா என்ற விரதத்தை மட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டின் முழுப்பயனையும் பெற்றதாக பத்மபுராணம் கூறுகின்றது.

பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதம் கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும். குருக்ஷேத்திரப் போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்நாள்தான்.

வைகுண்ட ஏகாதசி எல்லா விஷ்ணுவாலயங்களிலும் கொண்டாடப்பெற்றாலும், இதன் பெருமை மிகுதியாக விளங்குவது சோழ நாட்டு திருவரங்கத்தில்தான். ஏகாதசியின் முரு றுழுப்பயனையும் அடையும் வாய்ப்பு திருவரங்கத்தில் அமைந்திருந்தாலும் அதே அமைப்பை நம் முன்னோர்கள் நாம் எல்லோரும் உய்ய அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் அமைத்தனர்.

எம்பெருமானுடன் போராடித் தோற்று அவர் அருள் பெற்ற அரக்கர்கள் இருவர் தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை , உலகில் உள்ள எல்லாரும் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தால் எம்பெருமானை நோக்கி வைகுண்ட ஏகாதசியன்று திருவரங்க வடக்கு வாசல் வழியாகத் தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளி வரும் போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும் எத்தனை கொடியவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அருள வேண்டும் என்றும் வேண்டினார்கள். அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று பரமபதவாசல் வழியாக எம்பெருமான் பவனி வரும் பெருநிகழ்ச்சி ஏற்பட்டது.

பல வடிவங்களில் எம்பெருமான் அவதரித்து பலரையும் காத்தது போல, அர்ச்சாவதாரத்தில் தானே முக்தியடையும் ஒருவனாக நடித்து அவ்வாறு அடைபவன் தன் முக்தி பயணத்தில் என்னென்ன மாற்றங்களையும், வரவேற்புகளையும் பேரின்பத்தையும் பெறுவானோ, அவைகளை நிகழ்த்தி காட்டும் முறையில் பெருமாளின் வைகுண்ட ஏகாதசி புறப்பாடும் திருவுலாவும் விளங்குகின்றன.

அத்யயன உற்சவத்தில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியை பெருமாள் செவி மடுக்கும் இராப்பத்து இந்த வைகுந்த ஏகாதசியன்று முதல் தொடங்குகின்றது. நம்மாழ்வார் பாசுரங்கள் இரவில் சேவிக்கப்படுவதால் இராப்பத்து என்று அழைக்கப்படுகின்றது. தினமும் ஒரு பத்து அதாவது நூறு பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன.

No comments: