Monday, February 25, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -7


  1. நான்காம் திருநாள் மாலை நாக வாகன சேவை -1

குழலூதும் கண்ணனாக சிவசுப்பிரமணிய சுவாமி 

இத்திருக்கோவிலை வலம் வரும் போது ஒன்றை கவனிக்கலாம், பல கல்வெட்டுகளில் அன்பர்கள் செய்த திருப்பணிகளைப் பற்றியும் அவர்கள் கொடுத்த நன் கொடைகளைப் பற்றியும் இவை கூறுகின்றன.  அநேகமாக அனைத்து திருவிழாக்களுக்கும் யாராது ஒருவர் உபயம் செய்து அதை குறிப்பிட்டும் வைத்துள்ளனர்.

புல்லினால் ஆறு கோடி
     புது மண்ணால் பத்துக் கோடி
செல்லுமாம் ஞாலம் தன்னில்
     செங்கல்லால் நூறுகோடி
அல்லியங்கோதை பாகன்
     ஆலயம் மடாலயங்கள்
கல்லினார் செய்த பேர்கள்
     கயிலை விட்டு அகலார் தாமே.
என்ற படி நம் இறைவனுக்கு எப்படியும் சேவை செய்ய வேண்டுமென்று செங்குந்த சபையினரும், பக்தர்களும் சேர்ந்து சுமார் 25  லட்சத்தில் 11.5 அடி உயரம் கொண்ட வெள்ளி ரதம் செய்து முருகனுக்கு அர்பணித்துள்ளனர்.


நான்காம் நாள் காலை வெள்ளித் தொட்டி உற்சவம்

ஆலயமெங்கும்  திருப்புகழ், குமாரஸ்தவம், கந்தரலங்காரம், கந்தர் அநுபூதி, கந்தர் சஷ்டி கவசம், தெய்வ மணிமாலை, திருமுறுகாற்றுப்படை,    கந்தர் சரணப் பத்து, சண்முக கவசம், அபிராமி அந்தாதி, துக்க நிவாரணி அஷ்டகம், போற்றித் திருத்தாண்டகம்,  சர்வ தேவதா ஸ்துதிகள், அனுமன் துதி, முப்பெரும் தேவியர் துதி என்று பல்வேறு ஸ்தோத்திரங்கள் படிக்கக் கிடைக்கின்றன.  தினமும் நான்கு கால பூஜைகள் கிரமமாகவும் சிரத்தையாகவும் நடைபெறுகின்றன.

சமயம் கிட்டும் போது
நாடிய வானோர்க்கென்றும்
     நண்ணுதல் அரியாய் போற்றி
பாடிய பக்தர்க்கென்றும்
     பரிந்தருள் மூர்த்தி போற்றி
நீடிய செல்வம் கல்வி
     நித்ய மங்களங்கள் யாவும்
கூடிய செங்குந்தக் கோட்டம்
     சிவசுப்பிரமணியனே போற்றி போற்றி
என்று வணங்க வாருங்கள் மேற்கு சைதாப்பேட்டை.

சிவசுப்பிரமணிய சுவாமியின் மாசி மகப் பெருவிழாவின் நான்காம் திருநாள் காலை வெள்ளித்தொட்டி உற்சவம். மாலை நாக வாகனம். நாக வாகனத்தில் முருகர் கிருஷ்ணன் கோலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். ஒவ்வோரு வருடமும் ஒரு வித அலங்காரம் இப்பதிவில்  நின்ற கோல குழலூதும் கிருஷ்ணனாக -  வேணு கோபாலனாக சிவசுப்பிரமணிய சுவாமி அருள் பாலிக்கும் அழகை காணுங்கள் அன்பர்களே.  





 நாகம்  என்பதால் முருகனுக்கு விஷ்ணு ரூப  அலங்காரம் செய்கின்றனர் இவ்வாலயத்தில். ஒயிலாக  தேவியர் இருவரும்  சாய்ந்த கோலத்தில்   குழலூதும்  வேணு கோபாலனாக தரிசனம் தரும் அழகான  கோலத்தை பாருங்கள்.


இனி ஒரு வருடம் என்ன  அலங்காரம் என்பதை அடுத்த  பதிவில் காணுங்கள் அன்பர்களே. 


Sunday, February 24, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -6

மூன்றாம் திருநாள் இரவு மேஷ வாகன சேவை 


சிவ சுப்பிரமணிய சுவாமி மூலவர் தேவியருடன் அருள் பாலிக்கின்றார். அதே சமயம் தேவியர் இருவருக்கும் தனி சன்னதிகளும் ஐயனின் உள் பிரகாரத்திலேயே உள்ளது. வள்ளி நாயகியை

காமதேனு வாகனத்தில் வள்ளி நாயகி

மாதவனோர் மாதவனாய் மாதவம் செய்திடலும்
     வனமானாய் வந்தெதிர் மலர் மானை புணரப்
பூதல மங்கையர் உருவாய் அவதரித்து வள்ளிப்
     பொருப்புறையும் பொருப்பர் மணை விருப்பமுடன் வளர்ந்து
தீதகலும் திணை காத்து வேங்கை உருவெடுத்த
     செவ்வேளை அவ்வேளை சேர்ந்திருக்கை கோளும்
காதலுடன் புரிந்திறைவன் வளர் பாகத்தருளும்
     கன்னி எனும் வள்ளி கழல் உன்னி வழுத்திடுவாம்.

வள்ளி அன்னையை வணங்கிப்பின் தெய்வ நாயகி சன்னதிக்கு செல்வதற்கு முன் சுவற்றில் அபிராமி அந்தாதி கல்வெட்டு, அபிராமி அம்பாளின் சுதை சிற்பம் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது.

இடப்பக்கம் தெய்வ நாயகி சன்னதி   அன்னைக்கு முன்னால் யாணை வாகனம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அன்னையை வளர்த்தது ஐராவதம் என்னும் யாணை தானே.  

காமதேனு வாகனத்தில் தெய்வ நாயகி 
ஞான சக்தியான தேவ சேனாவை
சங்கரி தன் மருமகளை சங்கரி தன் மகளைச்
     சங்கரிக்கும் சங்கரனை மாமன் எனும் தயலை
வெங்கரிதங் பிடியை விண்ணவர் கோன் சுதையை
     விண்ணவர்கள் பணிந்தேத்தும் விண்ணுலகத் தணங்கை
பைங்கழு நீர் விழியாளை பைங்கழுநீர் நிழமே
     படைத்தாளை பைங்கழிநீர் செங்கரம் கொண்டாளை
செங்கமலை தரும் அமுதைக் கந்தர்  இடத்தருளும்
     தெய்வயாணையைத் தொழுது திருவருள் பெற்றிடுவாம்.

இந்த இரு துதிப்பாடலும் தணிகாசல புராணத்தில் இடம் பெற்றது கல்வெட்டுகளாக அன்னையர்களின் சன்னதியின் அருகில் அமைத்துள்ளனர். பள்ளியறையும் இப்பிரகாரத்த்ஹில்தான் அமைந்துள்ளது. கோஷ்டத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கு எதிரே துக்க நிவாரணி அஷ்டகம் கல்வெட்டு உள்ளது. இதுவரை இத்திருக்கோவிலை வலம் வந்து வணங்கினோம்.  இனி மூன்றாம் நாள் இரவு மேஷ வாகன சேவை காட்சிகளை இப்பதிவில் காணலாமா அன்பர்களே.

                                              ஆட்டுக்கிடா வாகனத்தில் சிவ சுப்பிரமணிய சுவாமி 

முருகனுக்கு சூரனான மயில் மட்டுமா வாகனம் இல்லை , இல்லை தெய்வாணை அம்மையின் தந்தையான இந்திரன் அளித்த ஐராவதமாம் வெள்ளை யாணையும் திருமுருகனுக்கு ஒரு வாகனம். நாரதர் செய்த ஒரு வேள்வியின் போது மந்திர மாறுதல் காரணமாக ஒரு ஆட்டுக்கிடா தோன்றியது அது விண்ணையும் மண்ணையும் கதி கலங்கச்செய்தது. தேவர்கள் தேவ சேனாபதியாம் முருகனிடம் முறையிட வீரபாகுவை அனுப்பி முருகன் முன் கொண்டு வரச்செய்து அதன் திமிரை அடக்கி வாகனமாக கொண்டார்.  இதன் காரணமாக மேஷமும்( ஆட்டுக்கிடா) முருகனுக்கு உரிய வாகனமாகும்.

சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திம் மூன்றாம் திருநாள் இரவு முருகர் தனக்குரிய ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். உடன் தேவியர் இருவரும் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.      
  






Saturday, February 23, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -5

மூன்றாம் திருநாள் காலை தாராகாசுர வாகன சேவை 

தாரகாசுர வாகன சேவை -1

வாருங்கள் சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்த சிவ சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க செல்லலாம். வாரியார் சுவாமிகள் மிகவும் வேடிக்கையாக சொல்லுவார், முருகர் ஒருவர் தான் ஆண் பிள்ளை ஏஎனென்றால் தாயின் கலப்பு இல்லாமல் அவதாரம் செய்தவர் அவர் ஒருவர்தான். அந்த சுவாமியைத்தான் நாம் இப்போது தரிசனம் செய்கின்றோம்  இச்சா சக்தியாகிய வள்ளி நாயகி, ஞான சக்தியாகிய  தெய்வநாயகி ஆகிய  தேவியர் இருவருடன் நின்ற கோலத்தி   ஞான சக்தியாகிய சக்தி வேல் தாங்கி, சக்தியாயுதம், வஜ்ராயுதம், அபய வரத கரங்களுடன் மந்தகாசப்புன்னகையுடன் ஓங்கார ரூபனாய்  நமக்கு எல்லாம் அருளை வாரி வழங்க எழிலாக நின்றிருக்கிறான் அருட்குமரன். முருகன் அருள் முன்னிற்கும் என்பதை அவன் முன் நின்றால் தாங்கள் உணரலாம் அவ்வளவு அலைகள். ஆகவே தான் எப்போதும் இவ்வாலயத்தில் கூட்டம் அலை மோதுகின்றது. அவன் அருளில் சிறிது நேரம் கலந்து நிற்கின்றோம். உற்சவர் முகப்பு போல மூலவர் முகப்பும் பித்தளை கவசம் பூண்டுள்ளது. இவருக்கு 1994ம் ஆண்டு பக்தர்களால் தங்கக் கவசம் சமர்பிக்கப்பட்டது.

மூஷிக வாகனத்தில் விநாயகர் 
சுமார் 300 வருடங்களுக்கு முன்னால் நடந்த கதை கேட்டவர்க்கு கேட்ட வரம் அருளும் இந்த கருணை வள்ளலிடம் ஒரு துர்மார்க்கன் திருட வந்தான். ஐயனை நெருங்கியவுடன் அவன் ஒலமிட்டு அலறி வெளியே வந்து விழுந்தான். அவனது கண்கள் இரண்டும் பறி போயின. கோயில் சொத்தை திருட நினைப்பவருக்கெல்லாம் இது ஒரு பாடமாக அமைந்தது.  


அழகன் முருகனை
சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் – தேங் கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல்பட்டு அழிந்தது வேலையம் சூரனும் வெற்பும் – அவன்
கால்பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே
  என்று துதித்து வணங்குகிறோம்.



                       
கந்தருவி வாகனத்தில் தேவியர் -1

சிவ சுப்பிரமணிய சுவாமியின் பிரகாரத்தில் உற்ச  மூர்த்தங்களுக்கான சன்னதிகளும் உள்ளன.சிவ சுப்பிரமணிய சுவாமி உற்சவர் பிரம்மோற்சவ காலங்கள் மற்றும் கார்த்திகையன்று வீதி உலா வந்தருளுகின்றார்.    உற்சவர் சன்னதிக்கு வலப்பக்கம், பிரதோஷ நாயகர், சைவ சமயக் குரவர் நால்வர் பெருமக்கள் மற்றும்  சேக்கிழார் பிரான் உற்சவ மூர்த்தங்கள். ஆங்கில வருடப்பிறப்பன்று நால்வர் விழா நடைபெறுகின்றது. சுவாமிகள் மாட வீதி வலம் வந்து பின்னர் நடராஜப் பெருமான் திருமுன்பு இவர்கள் எழுந்தருளி திருமுறைகள் ஓதப்படுகின்றன. இவர்களுக்கு நேர் எதிரே  ஒரு சன்னதியில் சிவகாமி சுந்தரி உடனுறை ஆடல் வல்லான் அருள் பாலிக்கின்றார். ஐயனின் குஞ்சித பாதத்தின் கீழ் திருமுரைக்கோயில் உள்ளது. இவர் ஆருத்ரா தரிசனம், ஆனி உத்திரம் மற்றும் மாசி மக நாள் ( பிரம்மோற்சவ தீர்த்த வாரியன்று) காலை திருவீதி உலா வந்து அருளுகின்றார். இவருடன் ஆறுமுகப் பெருமானும் உடன் வந்து அருளுகின்றார். ஐயனுக்கு இடப்பக்கம் உள்ள சன்னதியில் தேவியருடன் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் அற்புதமான தரிசனம் தருகின்றார் சண்முகர். இச்சன்னதியிலேயே பழனி ஆண்டவர் உற்சவரும், பால சுப்பிரமணியரும் எழுந்தருளியுள்ளார். தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்தன்று பழனி ஆண்டவர் உற்சவம் கண்டருளுகின்றார். மயில் மேல் அமர்ந்த கோல பால சுப்பிரமணியர் மஹா கந்தசஷ்டி உற்சவம் கண்டருளுகின்றார்.  

அற்புத அலங்காரத்தில் சிவசுப்ப்ரமணிய சுவாமி  

உற்சவருக்கு இடப்புறம்  துறவுக்கோல அருணகிரி நாதர் உற்சவ மூர்த்தம். இவர் இக்கோவிலின் சிறப்பு ஆகும்   அருணகிரி நாதரின் சன்னதியை அடுத்து நவ வீரர்கள் சன்னதி. வீர பாகு, வீர கேசரி, வீர சிம்மம், வீர தீரன், வீர மார்த்தாண்டன், வீராந்தகன், வீரராட்சஷன், வீர புரந்தரன், மற்றும் வீர பரமேஸ்வரன்   ஆகிய நவ வீரர்கள் விநாயகப்பெருமானுடன் எழுந்தருளியுள்ளனர் . சன்னதி வலத்தை பின்னர் தொடரலாம் தற்போது மூன்றாம் திருநாள் காலை தாராகாசுர வாகன சேவையை கண்டு களிக்கலாமா அன்பர்களே. தொண்டை நாட்டின் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் திருநாள் காலை சிறப்பு உற்சவம் ஆகும். இத்திருக்கோவிலில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்திலும், சிவ சுப்பிரமணிய சுவாமி பிரம்மாண்ட தாராகசுர வாகனத்திலும், தேவியர் இருவரும் கந்தர்வ ஸ்த்ரி( கந்தருவி) வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி உலா வருகின்றனர் அந்த அற்புத காட்சிகளைத்தான் இப்பதிவில் காண்கின்றீர்கள் அன்பர்களே.   

தாரகாசுர வாகன சேவை -2

தாரகன் என்பது ஆணவ மலம், சிங்கமுகாசூரன் கன்ம மலம், சூரபத்மன் என்பது மாயா மலம், இந்த மூன்று மலங்களும் ஜீவான்வாமை அஞ்ஞான கடலில் தள்ளி துன்புறுத்துகின்றன. முருகப்பெருமான் இந்த மூன்று மலங்களையும் தமது ஞான வேல் கொண்டு சம்ஹாரித்து அருளுகின்றார் என்பதே இந்த தாரகாசுர வாகனத்தின் தாத்பரியம். நாமும் அந்த சிவ குமாரனை சரணமடைந்து  மும்மலம் நீக்கப்பெற்று முக்தியடைவோமாக. 



 கந்தருவி வாகனத்தில் தேவியர் -2




ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் 

Friday, February 22, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -4

இரண்டாம் திருநாள் உற்சவம் 


வேத ஆகம-திருமுறை மண்டபத்தில் சண்முகர் சன்னதி மட்டுமல்லாது சிவபெருமானுக்கும் ஒரு தனி  சன்னதி உள்ளது. ஐயனின் திருநாமம் விசாலாக்ஷி உடனுறை விஸ்வநாதர், ஐயன் லிங்க ரூபமாகவும்  மிகவும் விசேஷமாக சோமாஸ்கந்தராக மூர்த்த ரூபத்திலும், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தூடன் அருள் பாலிக்கின்றாள்.விசாலாக்ஷி அம்பாள் தெற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் எழிலாக தரிசனம் செய்கின்றார். கோஷ்ட தேவதைகள், சண்டிகேஸ்வரர், நந்தியெம்பெருமான் என்று எல்லா தேவதைகளும்  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். 1993ம் ஆண்டு ஸ்ரீ பிரதோஷ மூர்த்தியும் வெள்ளி  ரிஷப வாகனமும் பக்தர்களால் சமர்பிக்கப்பட்டு பிரதோஷம் தோறும் சிறப்பாக நடைபெறுகின்றது. சகல தோஷ நிவாரணத்தை அள்ளித்தரும் பிரதோஷ  விழாக்களில் ஏராளமான பக்தர்கள் பக்தி சிரத்தையுடன் கலந்து கொள்கின்றனர்.

பஞ்ச பர்வ உற்சவத்தின் பொதும் இவர் மாட வீதி உலா வந்து அருளுகின்றார்.  ஐயனை பாடிப்பரவிய தொண்டர்களான, அப்பர், திருஞான சம்பந்தர் சுந்தரர், மாணிக்க வாசகர் மற்றும் பெரிய புராணம் பாடிய சேக்கிழார் பெருமானும் ( இவரும் செங்குந்த இனத்தினர் என்பதாலோ?)   மூலவர் ரூபத்தில் ஒரு தனி கோஷ்டத்தில் எழுந்தருளியுள்ளனர். ஐயனின் மஹா மண்டப முகப்பில் காஞ்சி காமாக்ஷி, காசி விசாலாக்ஷி, மதுரை மீனாக்ஷி எழில் ஒவிய வடிவில் காட்சி தருகின்றனர். மேலும் பஞ்ச பூதத் தலங்களான, காஞ்சிபுரம், திருவாணைக்காவு, திருக்காளத்தி, திருவண்ணாமலை, சிதம்பரம் ஷேத்திரங்களின் ஐதீகம் ஓவிய வடிவில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது.  மேலும் இம்மண்டபத்தில் அனுமனுக்கு ஒரு சன்னதியும், முப்பெருந்தேவியரான கலை மகள், அலைமகள், மலை மகள் ஆகியோருக்கும் தனி சன்னதி உள்ளது. இம்மண்டபத்தில் திருமுறை தொடர் சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கின்றது. 

இரண்டாம் திருநாள் காலை சூரிய பிரபையில்
சிவசுப்பிரமணிய சுவாமி

வள்ளி நாயகி, தெய்வ நாயகி உடனுறை சண்முகர் சன்னதி இம்மண்டபத்தின்  கிழக்கில் உள்ளது  அருமையான மூர்த்தம் மயில் மேக் பன்னிரு கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி தேவியருடன் தரிசனம் தருகின்றார் ஆறுமுகப்பெருமான். இவரை
ஆறிரு தடந்தோள் வாழ்க!
     அறுமுகம் வாழ்க!  வெற்பை
கூறு செய் தணிவேல் வாழ்க!
      குக்குடம் வாழ்க! செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க! ஆணை
தன்  அணங்கு வாழ்க!
மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க
     சீரடியார் எல்லாம்.
என்று வாழ்த்தி வணங்குகிறோம். சண்முகர் சன்னதியிலும் கோஷ்ட தேவதைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவருக்கு வாகனமாக , ஐராவதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அடுத்து நாம் காண இருப்பது தெற்கில் அமைந்துள்ள கல்யாண மண்டபம். இம்மண்டபம் தேவி கருமாரி அம்மன் ஆலயத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டதால்  கருமாரி அம்மன் மற்றும் அவரின் பிள்ளைகளான விநாயகர் மற்றும் முருகர் சுதை சிற்பங்கள் அலங்கரிக்கின்றனஇம்மண்டபத்தில்தான் உற்சவ காலங்களில் சுவாமி அலங்காரம்  மற்றும் பூசனைகள் நடைபெறுகின்றதுஇம்மண்டபத்தின் பக்தர்கள் ஐயனை தரிசிக்கும் பகுதியில் மேற்பகுதியில் ஆறு படை வீடுகளின் சுதை சிற்பங்கள் அருமையாக அமைக்கப்பட்டுள்ளனதிருப்பரங்குன்றுதிருக்கல்யாண முருகன், திருச்செந்தூர்ருத்ர முருகன்,  , திருவாவினன்குடிஞான முருகன், சுவாமி மலைஉபதேச முருகன், திருத்தணி- சினம் தனிந்த முருகன், பழமுதிர் சோலைஅருள் பாலிக்கும் முருகன் மற்றும் வள்ளி நாயகி  யானையை கண்டு விருத்தரை அனைத்துக் கொள்ளும் வள்ளி மலை தினைப்புனம் காக்கும் சிற்பம்  என்று சுதை சிற்பங்கள் உயிரோட்டமுடன் அழகாக அமைந்துள்ளன.

இரண்டாம் திருநாள் மாலை சந்திர  பிரபையில்
சிவசுப்பிரமணிய சுவாமி



இனி மூலவரை சென்று தரிசனம் செய்வதற்கு முன் இரண்டாம் திருநாள் அலங்காரம் என்ன என்று காணலாமா? காலையில்  அருள் முருகன் சூரியப் பிரபை வாகனத்திலும் இரவி சந்திர பிரபை வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி வலன் வந்து சாம்பவி தீக்ஷை அளித்து அருள் பாலிக்கின்றார். இந்த காட்சிகளை இப்பதிவில் காண்கின்றீர்கள் அன்பர்களே.














Thursday, February 21, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -3

முதலாம் திருநாள் மாலை வில்வ மர சேவை 

யோக தக்ஷிணாமூர்த்தி கோலத்தில் எழில் குமரன்
( மண்டபத்த்தில் அருள் பாலிக்கும் கோலம், இந்த வருடம் மேல் திருக்கரங்களில் அனலும், நாகமும் ஏந்தியுள்ளார்)

சுமார் 450 வருடங்கள் பழமையான கோவில் காலத்திற்கேற்ப பல மாற்றங்களுடன் இன்று  எழிலாக விளங்குகின்றது.  ஒன்றாம் திருநாள் மாலை அலங்காரத்தை காண்பதற்கு முன் இவ்வாலயத்தை வலம் வரலாமா? இவ்வாலயத்தின் அருகிலேயே சிறிய விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த விநாயகரின் திருநாமம் செங்குந்த விநாயகர் ஆகும்.  அநேகமாக விநாயகர் கிழக்கு நோக்கிய திருமண்டலத்துடன்தான் எழுந்தருளி அருள்பாலிப்பார் ஆனால் இவரோ வடக்கு நோக்கி அருள் பாலிக்கின்றார். சிறிய ஒரு பிரகாரத்துடன் அமைந்துள்ளது இந்த சன்னதி.  பிரகாரத்தில் விநாயகரின் 32 வடிவங்களை புகைப்படமாக அமைத்துள்ளனர் மற்றும் திருப்புகழில் உள்ள விநாயகப்பெருமானின் பாடல்கள் கல்வெட்டுகளாக பதியப்பட்டுள்ளன.

வில்வ  மரத்தடியில்  

அருகிலேயே வடக்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரம். சிவசுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் ஆயினும் இராஜ கோபுரம் வடக்கு நோக்கித்தான் உள்ளது. விநாயகர் ஆலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டில் விநாயகரின் சன்னதியும்   மூன்று நிலை இராஜகோபுரமும் திருப்பணி செய்யப்பட்டுள்ளதாக இருந்தது. பின்னர் விசாரித்ததில் தற்போதுள்ள  ஐந்து நிலை இராஜகோபுரம் 1975 புதிதாகக் கட்டப்பட்டதாக அறிந்தேன்.  கோபுரத்தில் நுழைந்தவுடன் எதிரில்  உற்சவர் அழகாக காட்சி தருகின்றார். உற்சவர் சன்னதிக்கு கவசம் சார்த்தப்பட்டுள்ளது மயிலும், துவார பாலகர்களும் எழிலாக காட்சியளிக்கின்றனர். மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமியை தரிசிக்கும் முன்னர் பிரகார வலம் வந்து விடலாமா? 
வில்வ மர சேவை 

இராஜ கோபுரத்தில் உள்ளே நுழைந்து திரும்பியவுடன்  மேற்கு நோக்கிய உற்சவ யாகசாலை   அதற்கடுத்து கொடி மர மண்டபம் இம்மண்டபம் 1988ம் ஆண்டு புதிதாக கட்டப்பட்டதாம். கொடி மரத்திற்கு பித்தளை தகடு சார்த்தப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் அற்புதமான சுதை சிற்பங்கள் அமைத்துள்ளனர். அலர் மேல் மங்கை உடனுறை திருவேங்கடவன், திருக்கயிலையில் மாங்கனி பெறும் காட்சி, ஆறு படைவீடுகளின் எழில் குமரன் ,  தேவியர் இருவருடன் மூலவர் சிவ சுப்பிரமணிய சுவாமி என்னும் சுதை சிற்பங்கள் மேல் பகுதியில் உள்ளன. இந்த சிற்பங்களையெல்லாம் கண்ணாடி கதவு கொண்டு மூடியிருப்பதால் பொலிவு மாறாமல் அப்படியே புதிதாக உள்ளன.    

இந்த வருடம் மேல் திருக்கரங்களில் மானும் மழுவும் ஏந்தி தரிசனம் 

 கீழ்ப்பகுதியில் சன்னதிகள். சுதை வடிவத்தில்  முருக பக்தர்களான பாம்பன் சுவாமிகள், அருட்பிரகாச வள்ளலார்,  மற்றும் சிதம்பரம் சுவாமிகள் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர். மேற்கு நோக்கி அங்காரகன் (செவ்வாய்), சாஸ்தா, இடும்பன், கடம்பன், மற்றும் சூரியபகவானுக்கான சிறு சன்னதிகள் உள்ளன.  பலிபீடம், கொடி மரம் மற்றும் மயில் வாகன சன்னதி இம்மண்டபத்தில் உள்ளன. கிழக்கு நோக்கி அந்தாதி இல்லா இறைவனுக்கு செந்ததேனும்  புளித்து அறக் கைத்ததுவே என்று அந்தாதி பாடிய அருணகிரி நாதருக்கு ஒரு சன்னதி. மறு பக்கம் பழனியாண்டவருக்கு ஒரு சன்னதி. இம்மண்டபத்தில் வள்ளலார் சுவாமிகள் பாடிய திருப்பள்ளியுழுச்சி கல்வெட்டாக  அமைக்கப்பட்டுள்ளது.
துவஜஸ்தம்ப மண்டபத்தை அடுத்து நாகேந்திரர் சன்னதி, இச்சன்னதியில் இலிங்க நாகேந்திரர், விநாயகர், மற்றும் நாகேந்திரர் அருள் பாலிக்கின்றனர். இதை அடுத்து சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அதற்கு அடுத்து  நவக்கிரக சன்னதி, மடப்பள்ளி மற்றும் நந்தவனம்.  இவ்வாலயத்தில் முருகப்பெருமான் மூலவராக மூன்று கோலங்களில் அருள் பாலிக்கின்றார்.  வள்ளி நாயகி, தெய்வ நாயகி உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார். ஆண்டிக்கோலத்தில் கையில் ஞான தண்டாயுதம் தாங்கி பழனி ஆண்டவராகவும் அருள் பாலிக்கின்றார், மற்றும் வள்ளி நாயகி, தேவசேனா நாயகி உடனுறை சண்முகரை  ஆறு முகங்களுடன், அருள் புரியும் பன்னிரு விழிகளுடன் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றார் இச்சன்னதிக்கு எதிரே வேத ஆகம-திருமுறை மண்டபம் அமைத்துள்ளனர்.  திருக்கோவில் வலத்தை இனி அடுத்த பதிவில் தொடரலாம் இப்பதிவில் முதலாம் திருநாள் இரவு வில்வ மர சேவையினைக் காணலாமா அன்பர்களே.

தேவியருடன் எழில் குமரன் 

பாகம் பிரியாமல் தேவியர் உடன் வர , மற்றும் இரு தேவியர் தினமும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி முருகருடன் மாட வீதி வலம் வருகின்றனர். வீரபாகுத்தேவர் முன் செல்ல, சண்டிகேஸ்வரர் நிறைவு செய்ய தினமும் பஞ்ச மூர்த்திகள் வலம் வருகின்றனர்.  



 ஒரு வருடம்  முயசலகன் மட்டும் 


குருவாய் வருவாய் அருள்வாய் குகனே


வள்ளி நாயகியின் ஏழிற்கோலம் 

சான்றோருடைத்த தொண்டை நாட்டில் பெருவிழாவின் முதல் நாள் இரவு சுவாமி தல விருட்சத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பார், அது போலவே இவ்வாலயத்திலும் சிவசுப்பிரமணிய சுவாமி வில்வ விருக்ஷத்தில் யோக தக்ஷிணாமூர்த்தியாக தரிசனம் தருகின்றார், கல்லாலின் கீழ் அமர்ந்து நால்வருக்கும் உண்மைப்பொருளை பேசாமல் உபதேசித்த குருவாய்  முருகன் எழுந்தருளி தரிசனம் அந்த அழகை என்னவென்று சொல்ல.  குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று அன்று அருணகிரி நாதர் பாடிய படி ஞான வேல் கொண்டு நம் அஞ்ஞானம் அகற்றும் அருள் முருகன் அருளுகின்றார் இந்த முதலாம் திருநாள் இரவில்.  ஒவ்வொரு வருடமும் விதமாக அலங்காரம் செய்யும் அம்சம் தான் அடியேனுக்கு இத்திருக்கோவிலில் பிடித்த ஒரு அம்சம்.

Tuesday, February 19, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -2

முதலாம் திருநாள் காலை கொடியேற்றம்


சிவசுப்பிரமணிய சுவாமி 


"கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம்" என்றால் அவ்வைபாட்டி ஏனென்றால் திருக்கோவில்கள்  முழு  கிராமத்திற்கும் ஒரு பாதுகாப்பு அரணாக  விளங்கின உயரமான கோபுரத்தில் உள்ள கலசங்கள் மின்னலில் இருந்து கிராமத்தை காப்பாற்றுகின்றது.  அதில் இட்டு வைத்திருக்கும் வரகு முதலிய தானியங்கள் பஞ்ச காலத்தில் விதை தானியமாகவும் பயன்பட்டன. அதுவுமல்லாமல் கோவில் என்பது பலருக்கும்   வேலை வாய்ப்பை அளிக்கும் நிலையங்களாவே அன்றும் விளங்கின, இன்றும் விளங்குகின்றன.



வள்ளி நாயகி  தேவ சேனா நாயகி 
உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமி 


அது போலவே திருக்கோவில்கள் கல்வி மையமாகவும், கலைகளின் இருப்பிடமாகவும், அரங்கேற்றம் நடைபெறும்  இடமாகவும் அறக்கொடைகளால் வறியவர்களுக்கு உணவும், உறையுளும் வழங்கும் ஒரு இடமாகவும் விளங்கி வருகின்றன. ஆகஏ இன்றும் நாம் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அந்த் இடத்தில் ஓர் ஆலயத்தை நிறுவி நிர்வகித்து வருகின்றோம். ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும் என்றபடி, இத்திருக்கோவிலின் திருவிழாக்கள் அந்த காலத்தில் விவசாயம் இல்லாத காலத்தில் கிராமத்தினர் அனைவரும் ஒன்றாகக் கூடி இரை வழிபாடு செய்யவும் உதவின.

 கொடி

தர்மமிகு சென்னை என்று வள்ளலார் சுவாமிகளால் பாடப்பட்ட சென்னை மாநகரின் மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் பல பழமையான ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் சில கூத்தாடும் பிள்ளையார், சித்தி புத்தி விநாயகர் என்று முழுமுதற் கடவுள் கணேசருக்கு பல ஆலயங்கள் உள்ளன, சிவபெருமான் இந்திரனுக்கு அருளிய  சொர்ணாம்பாள் உடனுறை காரணீஸ்வரப் பெருமானாகவும், திருமால் அலர்மேல் மங்கை உடனுறை பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாளாகவும், அன்னை கடும்பாடி சின்னம்மனாவும், சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் உதித்த முருகபெருமான்  சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் உதித்த முருகபெருமான் வள்ளி நாயகி தெய்வநாயகியுடன்  சிவசுப்பிரமணிய சுவாமியாக ஞான வேல் கரங்கொண்டு ஒங்கார ஸ்வரூபமாய்  எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இந்த ஐந்து கோவிகளில் நடு நாயகமாக சிவசுப்பிரமணியர் ஆலயம் அமைந்துள்ளது.  இதல்லாமல் எண்ணற்ற சிறிய கோயில்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. நாம் காணப்போகும் பெருந்திருவிழா சிவசுப்பிரமணிய சுவாமியின் மாசி மாத பெருந்திருவிழாவாகும்.











கொடி மரத்திற்கு அபிஷேகம் 


வாத்தியார் சுப்பிரமணி தெருவில் செங்குந்த கோட்டம் என்னும் இவ்வலயம் அமைந்துள்ளது. சென்னை நகருக்கேற்றார்ப் போல ஒரு உட்பிரகாரத்துடன் கூடிய ஆலயம்தான் இது. கோட்டம் என்றால் கோயில். அதிலும் குன்று தோறாடும் குமரன் மகிழந்து  உரையும் திருக்கோயில்கள் கோட்டம் எனப்படுகின்றன. கந்த புராணத்தை தமிழில் இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு அடி எடுத்துக் கொடுத்தவன்  காஞ்சி குமர கோட்ட குமரன், அது போல வள்ளலார் சுவாமிகளை ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தன் உறவு வேண்டும் என்ற பாட வைத்தவன் வடசென்னை  கந்த கோட்ட முருகன். அது போல செங்குந்த மரபினரால் ஸ்தாபிதம் செய்யப்பட்டு நிர்வாகம் செய்து வரப்படுகின்ற இக்கோவில் செங்குந்தக் கோட்டம் என்னும் பெயர் பெற்றது.  செங்குந்த முதலியார் என்னும் இவர்கள் சைவத்திற்கு பெரும் தொண்டாற்றியுள்ளனர். காரணீவரர் ஆலயமும் செங்குந்த இனத்தினரின் ஆலயம்தான். இப்பதிவில் முதல்நாள் காலை கொடியேற்றத்தின் சில காட்சிகளை கண்ணுருகின்றீர்கள் அன்பர்களே.


வள்ளி நாயகி                                                                                                                                   தேவ சேனா நாயகி 

வீரபாகு

முதலாம் திருநாள் அன்று காலை நன் முகூர்த்த காலத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி, வள்ளி நாயகி, தேவ சேனா நாயகி, வீரபாகு தேவர் மற்றும் சண்டிகேஸ்வரர். அஸ்திர தேவர்  கொடி மரத்திற்கருகில் எழுந்திருளி கொடியேற்றம் கண்டருளுகின்றனர்.  விக்னேஸ்வர பூஜை முடித்து கொடியேற்றி சகல தேவர்களையும் கொடி மரத்தின் அருகில் வந்து யதாஸ்தானம் கொண்டருளி பெருவிழா முடியும் வரை இருக்குமாறு வேண்திக்கொள்ள அனைவரும்  யதாஸ்தானம் கொள்வதாக ஐதீகம். பின் கொடி மரத்தில் உள்ள தெய்வ மூர்த்தங்களுக்கு அபிஷேகம் ஆகி, பின்னர் சிவசுப்பிரமணிய சுவாமிக்கு கற்பூர ஆரத்தி நடைபெற்று பின் கோவிலுக்கு வெளியே எழுந்தருளி அஸ்தமான கிரி விமானத்தில் கோவிலின் உள்ளே வர முடியாதவர்களுக்கும் காட்சி அளிக்கும் வகையில்  மாட விதி உலா வந்து அருளுகின்றனர் பஞ்ச முர்த்திகள்.     

Saturday, February 16, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -1

விநாயகர் வீரபாகு தேவர் உற்சவம் 

தருமமிகு சென்னையின் மேற்கு சைதாப்பேட்டையில் வள்ளி நாயகி தெய்வ நாயகி உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமியின் மாசி மகப் பெருவிழா வெகு சிறப்பாக எப்போதும்  போல  சிறப்பாக நேற்று(15-02-2013) தொடங்கி நடைபெறுகின்றது. இப்பிரம்மோற்சவத்திம் அழகன் முருகனுக்கு செய்யப்படும் அலங்காரத்தை காணவே வருடா வருடம் இத்திருக்கோவிலுக்கு வருபவர்கள் அநேகம். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிரம்மோற்சவத்தின் சில அழகு காட்சிகளை தங்களுடன் பகிர்ந்து  கொள்ளவே இப்பதிவுகள் . 



அக்குறமகளுடன் அச்சிறு முருகனை 
அக்கணம் மணமருள்  பெருமாளின் 
அற்புத அலங்காரம்





பிரம்மோற்சவ விழாவின் பூர்வாங்கமாக விநாயகர் மற்றும் வீரபாகுத் தேவர் திருவிழா, கொடியும் ஊர்வலம் வருகின்றது.  இத்திருக்ககோவிலின் ம்லர் அலங்கரம், நகை  அலங்காரம் மற்றும் அந்தந்த நாளுக்கான வாகனத்திற்கு ஏற்றார்ப்போல முருகருக்கு அலங்காரம் எல்லாமே மிகவும் சிறப்பு . அவற்றை ஒவ்வொன்றாக காண வாருங்கள் அன்பர்களே.    


முழு முதற் கடவுள் விநாயகர்





நவவீரர்களின் முதல்வன்
திருமுருகனின் தூதன்
வீரபாகுத்தேவர்