Tuesday, April 21, 2020

திருப்பாத தரிசனம் - 27


நாகப்பட்டினம் -  ஸ்ரீ ரத்ன சிம்மாசன பாரவார தரங்க சுந்தர விடங்கர்-1


இத்தலத்தின் மற்றொரு பதிவைக் காண இங்கு செல்லவும் :      திருநாகை  -2




திருநாகைக் காரோணம் 



அடுத்து நாம் தரிசிக்க இருக்கின்ற சப்த விடங்கத்தலம். 

பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்மூன்றும்
ஆரார் அழலூட்டி அடியார்க் கருள்செய்தான்
தேரார் விழவோவாச் செல்வன் திரைசூழ்ந்த
காரார் கடல்நாகைக் காரோ ணத்தானே. -   என்று ஆளுடையப்பிள்ளையார் பாடிய திருநாகைத்தலம் ஆகும்.

தஞ்சைத் தரணியின் கிழக்குக் கடற்கரையோர நகரங்களில் ஒன்று நாகப்பட்டினம். இந்நகரின் மையப்பகுதியில்நாகைக் காரோணம்என்ற தேவாரப் பாடல் பெற்ற  சிவசக்தித்தலம் அமைந்துள்ளது. இங்கு நீலாயதாக்ஷி அம்பிகை உடனாய காயாரோகணேஸ்வரப் பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அவரே நீலோத்பலாம்பாள் உடனாய சுந்தர விடங்கராகவும் அருள் பாலிக்கின்றார்.




புண்டரீக முனிவர் காசி, காஞ்சி, நாகையில் சிவபூசை செய்யும் சிற்பம் 

காலசம்ஹார முர்த்தி 

புண்டரீக முனிவரை இறைவன் தன் மேனியில் ஆரோகணம் செய்து கொண்ட தலம் என்பதால் நாகைக் காரோணம். அகத்தியருக்கு இறைவன் திருமணக் காட்சி நல்கிய தலம்.

பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநா ளிரங்கீர்
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
என்று பாடிய  சுந்தரருக்கு இறைவன் குதிரை, முத்து மாலை, பட்டு, கஸ்தூரி, கமழ் சாந்து முதலானவை வழங்கியத்தலம். அன்றுமுதல் இக்கோவிலில் குதிரை வாகன விழா, சுந்தரருக்கே நடைபெறுவதாகப் புராணம் கூறும்.

பதினெண்சித்தர்களுள் ஒருவரான அழுகிணி சித்தர் ஜீவசமாதி ஆன தலம். இத்தலவிருட்சமான மாமரம், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடன் இருக்கிறது. இம்மரம் கோயிலின் தென்கிழக்கு பிரகாரத்திலிருந்து பார்க்கும் போது, நந்தி வடிவில் தோற்றமளிக்கிறது. சிறப்பு மூர்த்தியாக நாகாபரணப் பிள்ளையார் அருள் புரியும் தலம்.  காசியைப் போல இத்தலமும் முக்தி மண்டபத்துடன் திகழ்கிறது  என்பது சிறப்பு.

சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாக விளங்கிய தலம் . நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகம் சென்று நாககன்னியைக் கூடிப்பெற்ற புதல்வனே தொண்டை நாட்டை அரசாண்ட இளந்திரையன் எனப் பத்துப்பாட்டால் அறிகிறோம். பொன்னி நாடெனும் கற்பக பூங்கொடி மணி போல் நன்மை சான்றது நாகபட்டினத் திருநகரம் என்று சேக்கிழார் பெருமான் இத்தலத்தை சிறப்பித்துப் பாடியுள்ளார்.

அம்பாள், முருகன், திருமால், அகத்தியர், வசிஷ்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபாட்டு அருள்பெற்ற தலம் .

மதுரை என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ஸ்ரீமீனாக்ஷி அம்மன் திருக்கோவில். மதுரையம்பதி, பாடல் பெற்ற மிகப்பெரிய சிவஸ்தலமாகவும், சோமசுந்தரக் கடவுளின் உறைவிடமாகவும் திகழ்கின்ற போதிலும், மீனாக்ஷி அம்மன் ஆலயம் என்பதே பிரசித்தம். அதுபோல நாகப்பட்டினம் திருக்கோவில், சிவபெருமானின் சப்த விடங்க ஸ்தலங்களிலே ஒன்று என்ற போதிலும், காரோணம் என்ற சிறப்புடையதாயினும் அம்மனின் பெயரால் நீலாயதாக்ஷி அம்மன் ஆலயம் என்றே அழைக்கப்படுகிறது.


நீலாயதாக்ஷியம்மன் 
அம்மன் அருளாட்சி நடைபெறும் அறுபத்து நான்கு சக்தி தலங்களில் ஒன்று இவ்வாலயம். தாய்மையின் உருவகமாகப் போற்றப்படும் இறைவடிவமாகிய அம்பாள், பெண்மையின் ஐந்து படிநிலைகளை (பருவங்களை), ஐந்து வெவ்வேறு க்ஷேத்திரங்களில் தாங்கி நின்று அருள்பாலிக்கிறாள்.
அவற்றில், காசியில் உறையும் விசாலாக்ஷி குழந்தையாகவும், காஞ்சியில் வீற்றிருக்கும் காமாக்ஷி சிறுமியாகவும், நாகையில் விளங்கும் நீலாயதாக்ஷி பூப்படைந்த கன்னியாகவும், திருவாரூரில் திகழும் கமலாம்பிகை இளம் பெண்ணாகவும், மதுரையில் அரசாளும் மீனாக்ஷி திருமணமான சுமங்கலிப் பெண்ணாகவும் வணங்கப்படுகிறார்கள். இந்த ஐந்து க்ஷேத்திரங்களில் நடுநாயகமாக, கன்னிப்பெண் வடிவமாக அம்மன் திருக்காட்சி கொடுத்து தெய்வீக அருள் புரியும் சக்தி பீடம் இத்திருநாகைக் காரோணம் என்றழைக்கப்படும் நாகபட்டினம்.

இங்கே அம்பாளின் திருநாமம் நீலாயதாக்ஷி. இதன் பொருள், நீல நிறக் கண்ணுடையாள் என்பது. தூய தமிழில் கருந்தடங்கண்ணி என்று அம்மனுக்குத் திருப்பெயர். கருணை நிறைந்த திருக்கண்களைக் கொண்ட அம்பாள் என்று பொருள்.  இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவளாக போற்றப்படுகிறாள். கவலைகளைப் போக்குகின்ற கருந்தடங்கண்ணியாக வணங்கப்படுகிறாள். நாகை நீலாயதாக்ஷி அம்மன் மீது முத்துஸ்வாமி தீட்சிதர் பாடிய அம்பா நீலாயதாக்ஷி கருணா கடாக்ஷி சர்வ லோக சாக்ஷிஎன்ற சுருதி, கர்நாடக இசை மேடைகளிலும், கலைகளைப் போற்றும் பக்தர்கள் நெஞ்சங்களிலும் இனிமையாய் ஒலிக்கிறது.
இத்தலம், சோழநாட்டு காவிரித் தென்கரையில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற  82-வது தலம் ஆகும். திருநாவுக்கரசர் நான்கு பதிகங்களும், பிள்ளைப் பெருமானாகிய திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களும்,  எம்பெருமான் தோழராகிய சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தல முருகனைப் பாடியுள்ளார். இராமலிங்க அடிகளாரும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.

காயாரோகணர்:த்தலத்தில் இறைவனுக்கு காயாரோகணேஸ்வரர் என்று திருநாமம். காயாரோகணம் என்பது மருவி காரோணம் என்று அழைக்கப்படுகிறது. புண்டரீக முனிவரை  சிவபெருமான்  காயத்தோடு  தன் திருமேனியில் ஆரோகணம் செய்து கொண்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. காய ஆரோஹணம் அதாவது உடலுடன் சேர்த்துக் கொள்ளுதல்  என்று பொருள்.  எனவே பெருமான், காயாரோகணர் என்ற பெயரைத் தாங்கி நிற்கிறார். புண்டரீக முனிவரின் உருவத்தை ஒரு கல்தூணில் காணலாம்.
இறைவனின் திருமேனியில் பீடத்தில் பிரம்மனும், திருமால் ஆவூடையிலும், சப்த ரிஷிகளை புலத்திலும் அமர்த்திக்கொண்டதாக ஐதீகம். சப்த ரிஷிகளுக்கும் இறைவன் சோமாஸ்கந்த வடிவில் காட்சியருளியதை மூலவருக்கு  பின்னால் கருவறையின் மேற்கு சுவரில்  சிற்ப வடிவில் காணலாம்.  மஹா சங்கார காலத்தில் அனைத்து உயிர்களையும் தம்முள் ஐக்கியமாக்கி கொண்டதை இது குறிக்கின்றது. பல ஊழிக்காலங்களுக்கும் அப்பாற்பட்டதால் இத்தலத்தை ஆதி புராணம் என்றும் சுவாமியை ஆதி புராணேச்வரர் என்றும் தல புராணம் குறிப்பிடுகிறது. மேலும் அரவநகரம், பார்ப்பதீஸ்வரம், சிவராசதானி என்றும் இத்தலம் அறியப்படுகின்றது.

காரோணம் என்று பெயருடைய திருக்கோயில்கள் தமிழ்நாட்டில் மூன்று உள்ள; 1. நாகைக் காரோணம், 2. குடந்தைக் காரோணம், 3. கச்சிக் காரோணம் ஆகியவை ஆகும்.

ஆதி சேஷன் வழிபட்ட தலம்: 

ஸ்ரீமகாவிஷ்ணு சயனித்திருக்கும் பெருமை பெற்ற நாகங்களின் தலைவனாகிய ஆதிசேஷன், ஒருமுறை சிவராத்திரியின் போது இத்தலத்தில் இறைவனை நாகேஸ்வரராகத் துதித்து வழிபட்டார் என்கின்றன புராணங்கள். பூவுலகை எப்போதும்  தாங்கிக்கொண்டிருப்பதால் ஆதிசேஷன் தன் பலத்தை எல்லாம் இழந்தார், இழந்த பலத்தை மீண்டும் பெற ஒரு மகாசிவராத்திரியன்று காலையில் கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவில், நண்பகலில் திருநாகேஸ்வரம், மாலையில் திருப்பாம்புரம் ஆகிய இடங்களில் சிவபெருமானை வழிபட்டு, இறுதியாக திருநாகையில் உள்ள இத்தலத்தில் தனது பூஜையை ஆதிசேஷன் நிறைவு செய்தாராம். அதனால் இத்தலத்திற்கு  நாகப்பட்டினம் என்று பெயர் ஏற்பட்டது.

ஆதிசேஷன் வழிபாடு நடத்தியதால், த்தலம் ராகு, கேது பரிகார ஸ்தலமாகவும் போற்றப்படுகிறது. ஆதிசேஷனின் மகளை, சிவபக்தரான சாலீசுக மஹாராஜா திருமணம் செய்துகொண்டதாகவும் தலவரலாறு இயம்புகிறது.


சுந்தர விடங்கர்:
கரை மலி கடல் சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
இறைவனை நாளும் ஏத்த இடும்பை போய் இன்பமாமே என்பது அப்பர் பெருமான் பாடிய இத்தலத்தில்  மூலவர்  கருவறைக்கு இணையாகத் தெற்கில் தியாகராஜரின் சந்நதி அமைந்துள்ளது. இதில் பெரிய மேடைமீது முத்து விதானத்தின் கீழ் தியாகராஜப்பெருமான் அழகிய இரத்தின  சிம்மாசனத்தில் எழுந்தருளியுள்ளார். இவருக்குச் “நீலோத்பலாம்பாள் உடனுறை ஸ்ரீரத்ன சிம்மாசன பாரா வார தரங்க நடன ஸ்ரீசுந்தரவிடங்கர்என்பது திருநாமம். இவருக்கு முன்புறத்திலும் இரண்டு வீரகட்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.  நின்ற நந்தியெம்பெருமானையும் தரிசிக்கின்றோம்.


இவருடைய நடனம் பாராவார தரங்க நடனம் என்று அழைக்கப்படும். பாராவாரம் என்றால் கடல். தரங்கம் என்றால் அலைகள். கடலின் மீது தோன்றும் அலைகள் கரைமீது சுழன்று வீழ்ந்தும் தணிந்தும் அடிப்பது போன்று உயர்ந்தும் தாழ்ந்தும் இவர் ஆடுவதால் தியாகராஜ நடனம் பாராவார தரங்க நடனம்” என்றழைக்கப்படுகின்றது. விளத்திதானம்”  என்றும் “வீசி நடனம்” என்றும் அழைக்கப்படுகிறது. கடல் அலை அசைவது போன்ற நடனம் என்று இதற்குப் பொருள். எனவே இவர் அலைநடன தியாகேசர். கடற்கரை நகரமான நாகப்பட்டினத்துக் இறைவன், கடல் அலை போல் நடனமிடுவது பொருத்தம்தானே. இவருடைய சந்நதியில் முன்னாளில் கோமேதகத்தால் ஆன அழகியலிங்கம் பிரதி விடங்க லிங்கமாக வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. அது களவுபோய் விட்டதால் தருமையாதீனக் குருமகா சந்நிதானத்தால் அளிக்கப் பெற்ற ஸ்படிக லிங்கத்தை வைத்து பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. விடங்கருக்கு காலை 8 மணி மற்றும் இரவு 9 மணிக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.


மற்ற சப்த விடங்கத் தலங்களைப் போலவே முகதரிசனம் மட்டுமே தந்தருளுகின்றார் சுந்தர விடங்கர். வைகாசி விசாக விழாவின் போதும், மார்கழி திருவாதிரையன்று வலது பாத தரிசனம் தரிசனம் தந்தருளுகிறார் தியாகராஜ சுவாமி. திருவாதிரையன்று அதிகாலை மூன்று மணிக்கு ருத்ர ஹோமமும் தொடர்ந்து சிறப்பான ருத்ராபிஷேகமும் நடைபெற்று  பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்கு வலது பாத தரிசனம் தந்தருளுகின்றார். மாலை ஆறு மணிக்கு விசேஷ முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகின்றது.  தியாகராஜருக்கு முன்புறம் மகாமண்டபத்தில் உலோகத்தாலான நின்ற நிலையிலுள்ள இடபமும் அவருக்குப் எதிரே  பரவை நாச்சியார் உடனாய சுந்தரமூர்த்தி சுவாமிகளும் எழுந்தருளியுள்ளனர். தியாகேசருக்கு ஆண்டிற்கு ஆறுகால அபிஷேகத்துடன் கிரகண புண்ணிய கால அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. சப்தவிடங்கத் தலங்களில் அமைந்துள்ள தியாகராஜர் சந்நிதிகளில் மிகவும் பெரியது இதுவேயாகும்.
ச்சந்நிதி மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் விரிவுபடுத்திக் கட்டப்பட்டுள்ளது.  இவனுடைய 14வது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு இக்கோயிலைப் புதுப்பித்தது பற்றியும், மருதமங்களமுடைய மலைமேல் அமர்ந்தவன் என்கிற வானவன் விழுப்பரையன் அழகிய விடங்கருக்குப் பொன்னும் மணியும் ஆபரணங்களும் கொடையாக அளித்ததையும்  குறிப்பிடுகின்றது.

இத்தலத்தின் புராணம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களால் பாடப்பெற்றதாகும். இதிலுள்ள சுந்தரவிடங்கப்படலம் நாகை அழகிய விடங்கரின் பெருமைகளை விரிவாகப் பேசுகின்றது. முசுகுந்தன் இங்கு வழிபட்டுத் தமது பிரம்மஹத்திக் குற்றத்தைப் போக்கிக் கொண்டான் என்று இப்புராணம் கூறுகிறது. சுந்தரவிடங்கரைக் காரோணச் சிந்தாமணி என்று புராணம் குறிக்கின்றது. பிள்ளைப்பேறு அருளும் பெருமானாக இவர் விளங்குகின்றார்.
நகரின் மத்தியில் இக்கோயில் 180 மீட்டர் நீலம், 75 மீட்டர் அகலம் நிலப்பரப்பு கொண்டு, இரண்டு பிரகாரங்களுடன் கிழக்கு (கடற்கரையை) நோக்கி மிக பிரம்மண்டமாக அமைந்துள்ளது  இத்திருக்கோவில். நுழை வாயிலில் நாகாபரணப் பிள்ளையார் திருவுடம்பில் நாகத்துடன் தலையில் ஐந்து தலை நாகம் குடைப்பிடிப்பது போன்ற தோற்றத்துடன் அமர்ந்துள்ளார். நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு, ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். ராகு, கேது பெயர்ச்சியின் போது இவருக்கு விசேஷ பூஜைகளும் நடக்கிறது அத்துடன், வெண்கலத்தால் ஆன பஞ்சமுக வினாயகரும் விசேஷமானவர்.  அடுத்து சுதையால் ஆன பிரம்மாண்ட சுதை  நந்தி. அடுத்து முக்தி மண்டபம். முக்தி மண்டபத்தில் வள்ளலார் பெருமான் தங்கியிருந்து தமிழ் விருந்தளித்துள்ளார்.

பிரகாரத்தில் அதிபத்த நாயனாருக்கு தனி சன்னதி உள்ளது. மேலும் வல்லப கணபதி, அகோர வீரபத்திரர், ஆறுமுகர், காசி விஸ்வநாதர், பைரவர், அறுபத்து மூவர், மாவடிப் பிள்ளையார், அருணாசலேஸ்வரர், வெண்ணெய்ப் பிரான் எட்டு கரங்களில் ஆயுதங்களுடன், அஷ்டபுஜ பைரவர்', அஷ்டபுஜ காளி ஆகியோர் சன்னதிகளும் உள்ளன. எண்திசைகளுக்கு அதிபதிகளான அஷ்டதிக் பாலகர்கள்,  சிலை வடிவில் காட்சி தருகின்றனர்.  நான்கு தந்தங்கள் கொண்ட, இரண்டு யானைகள் அபிஷேகம் செய்தபடி இருக்க வீற்றிருந்த கோலத்தில் அருளும் கஜலட்சுமியையும்  தரிசிக்கலாம்.  மதில் சுவர் முழுவதும் பல சுதை சிற்பங்கள் அமைத்திருக்கின்றார்கள் அது அருமையாக உள்ளது.

மற்ற ஆலயங்களில் நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர், இங்கு சிம்ம வாகனத்துடன் காட்சி தருவது ஒரு தனி சிறப்பு. புண்டரீக தீர்த்தக்கரையில் பைரவர் சன்னதி அமைந்துள்ளது. புண்டரீகர், சிவனை வழிபட்டபோது, காசியின் கங்கை தீர்த்தம் இங்கு பாதாளத்திலிருந்து பொங்கியது. அப்போது கங்கைக்கரையில் உள்ள பைரவரும், இங்கு எழுந்தருளினார். இவரே இங்கு, "காலசம்ஹார பைரவராக' அருளுகிறார். இவருக்கு பின்புறம் சிம்ம வாகனம் இருக்கிறது. காலனை (எமன்) சம்ஹாரம் செய்த சிவனே, இங்கு பைரவர் வடிவில் அருளுவதாக ஐதீகம். இவர் எமனுக்குரிய தென்திசையை நோக்கியிருப்பதால், ஆயுள் பலம் கிடைக்க இவரிடம் வேண்டிக்கொள்கின்றனர் பக்தர்கள். இவர் உக்கிரமானவராக காட்சி தருவதால், சாந்தப்படுத்த எதிரில் இரண்டு விநாயகர்களை ஒரு சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.  

செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை வெண்ணகைத் தேன்மொழியார்
வந்து வலஞ்செய்து மாநட மாட மலிந்த செல்வக்
கந்த மலிபொழில் சூழ்கட னாகைக்கா ரோணமென்றும்
சிந்தை செய்வாரைப் பிரியா திருக்குந் திருமங்கையே.

பொருள்: சிவந்த பவளம் போன்ற வாயையும் கரிய இருகண்களையும், வெள்ளிய பற்களையும் , தேன் போன்ற இனிய சொற்களையும் உடைய இளைய மகளிர் வந்து வலம் செய்து சிறந்த கூத்து நிகழ்த்துமாறு, செல்வம் மிகுந்ததும், நறுமணம் வீசும் பொழில்களால் சூழப்பட்டதுமான கடலை அடுத்து அமைந்த நாகைக் காரோணத்தை என்றும் தியானிப்பவர்களைத் திருமகள் என்றும் நீங்காது இருப்பாள், என்று அப்பர் பெருமான் பாடிய இத்தலத்தின் மூலவர் பெரிய பாணத்துடன் கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் திருக்காட்சி தருகின்றனர். அக்ஷி தலங்களுள் ஆசீர்வாதம் அளிக்கும் அபய கரத்துடன் அருள் பாலிப்பவள் நீலாயதாக்ஷி அம்பாள்.


இந்திரன் தியாகராஜரை வழிபடும் சிற்பம் 

மூலவரின் பின்புறம் தனி மாடத்தில் சிவனார், அம்மை மற்றும் கந்தருடன் அமர்ந்த கோலமான சோமாஸ்கந்தர் திருவடிவம் உள்ளது . துவாரபாலகர்களின் அருகில் ஒருபுறம் விநாயகரும், மற்றொருபுறம் அதிகார நந்தியும் உள்ளனர். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், பிட்சாடனர் முதலியோர் திருக்காட்சி அளிக்கின்றனர். தக்ஷிணாமூர்த்தி 8 சீடர்களுடன் அருள் பாலிப்பது  ஒரு தனி சிறப்பு. சுவாமி சன்னதி முன்மண்டபத்தின் மேற்பகுதியில் 12 ராசி சக்கரம் உள்ளது. ஆறுமுகர்  திருவாசியுடன் சேர்த்து 12 திருக்கரங்களில், ஆயுதங்களுடன் எழிலாக தரிசனம் அளிக்கின்றார்.

….. ஞால வட்ட முற்ற வுண்டு நாகமெத்தை யிற்றுயின்ற
      நார ணற்க ருட்சு ரந்த    மருகோனே-
நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்ம னைக்களைந்த
      நாக பட்டி னத்த மர்ந்த பெருமாளே -  இத்தல முருகனை அருணகிரிநாதர்  திருப்புகழில் பாடியுள்ளார். சண்டிகேஸ்வரர் சன்னதி, கோஷ்டத்தை ஒட்டி இல்லாமல் பிரகாரத்திலிருந்து விலகியுள்ளது. நடராஜர் சபையில் சிவகாமி அம்மையுடனான நடராஜர், பிட்சாடனர், காட்சி நாயகர் உற்சவ மூர்த்தங்களை தரிசிக்கலாம்.

அம்பாள் எதிரிலுள்ள நந்தி தன் கழுத்தை திருப்பி, சிவன் சன்னதியையும் பார்த்தபடி உள்ளது.  அதற்கான ஐதீகம் அம்பிகை கன்னிப்பெண் என்பதால், அன்னையை காவல் காக்கும் படி எம்பெருமான் வேண்டிக்கொண்டதால் நந்தியின் வலக்கண் அம்பிகையையும்,  அதே சமயம் எம்பெருமானையும் நோக்க இடது கண் சிவனையும், பார்த்தபடி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. எனவே, இந்நந்தியை "இரட்டைப் பார்வை நந்தி' என்று அழைக்கிறார்கள். கண் தொடர்பான நோய்கள் நீங்க, இந்நந்தியிடம் வேண்டிக்கொள்ளலாம்.

“காப்பார் காலன் அடையா வண்ணம் காரோணத்தாரே” என்று அம்மையின் ஞானப்பாலுண்ட சம்பந்தப் பெருமான் பாடிய இக்கோவிலின் தல விருட்சம், மாமரம். இதனடியில் அருள் பாலிக்கும்  மாவடி விநாயகர் சக்தி வாய்ந்தவர். வ்வாலயத்தில் இரண்டு புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. தெற்குப் பகுதியில் தேவ தீர்த்தமும், மேற்குப் பகுதியில் புண்டரீக முனிவரால் உருவாக்கப்பட்ட புண்டரீக தீர்த்தமும் உள்ளன. சற்று வித்தியாசமாக  மற்ற சப்த விடங்கத்தலங்களைப் போலல்லாமல் நவகிரகங்கள் ஒரே வரிசையில் இல்லாமல்,  ஒரு வரிசைக்கு மூன்று பேராக, மூன்று வரிசைகளில் மேற்கு நோக்கி சுவாமியை பார்த்த வண்ணம் உள்ளனர்.  தசரதர் பிரதிஷ்டை   செய்த சனீஸ்வரர் தனி சன்னதியில் அருளுகின்றார். 

                                                                                       திருப்பாத  தரிசனம் தொடரும் . . . . .

No comments: