Thursday, December 27, 2007

ஆருத்ரா தரிசனம் - 12



" குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே" என்றபடி எம்பெருமானுக்கு மிகவும் சிறப்பாக ஆருத்ரா தரிசனம் நடைபெறும் ஒரு கோவில். நெரிசல் மிகுந்த சென்னையில் ஒரு சிறு கோவில்தான் என்றாலும் விழாக்கள் சிறப்பாக நதைபெறுவது என்னை ஈர்த்தது. இந்த ஆருத்ரா தரிசன தொடரின் நிறைவாக இந்த சென்னை கோடம்பாக்கம் சவுந்தர விநாயகர் திருக்கோவிலின் விமானங்களைப் பற்றி கூறுகின்றேன்.

பஞ்ச மூர்த்திகளும் பவனி வரும் அழகை காண்பவர்கள் அது போன்று எங்கும் கண்டதில்லை என்று ஆச்சிரியப்படும் அளவில் அருமையான பொன் முலாம் விமானத்தில் வலம் வருகின்றனர். காணக்கண் கோடி வேண்டும் என்பார்களே அது போல ஒவ்வொரு வருடமும் தவறாது சென்று தரிசிக்க அழைக்கும் அற்புத தரிசனம் அது. இத்திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் இவ்வாறு நடைபெறுகின்றது. இரவு 7 மணி அளவில் மஹாபிஷேகம். இரவு 10:30 மணி அளவில் வெள்ளை சார்த்தி புறப்பாடு. ஆருத்ரா தரிசனத்தன்று அருணோதய காலத்தில் சிவகாம சுந்தரி உடன் ஸ்ரீ நடராஜ பெருமான் திருக்கல்யாண வைபவம். காலை ஆறு மணிக்கு கோபுர வாசலில் ஆருத்ரா தரிசனம். காலை 9 மணிக்கு பத்ம ஜோதி கலியுகக் கண்ணாடி விமானத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு. பகல் 1 மணிக்கு திருஊடல் உற்சவம் என சகல உற்சவங்களுடன் வெகு சிறப்பாக நடைபெருகின்றது. சிதம்பரம் போல் பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது இத்திருக்கோவிலின் சிறப்பு.


விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் புறப்பாடு

விநாயகப் பெருமான் தங்க மூஷிக வாகன்த்தில் காலை மடித்து தொங்கவிட்டு, கையில் அங்குசம் ஏந்தி முன் செல்கின்றார். இருபக்கமும் கந்தர்விகள் யாழ் கூட்டுகின்றனர்.



பத்மஜோதி கலியுகக் கண்ணாடி என்று அழைக்கப்படும்

ககன கந்தர்வ கனக விமானம்:


இனி பத்மஜோதி கலியுகக் கண்ணாடி என்று அழைக்கப்படும் நடராஜப்பெருமான் தரிசனம் தந்தருளும் ககன கந்தர்வ கனக விமானத்தின் அழகை முதலில் காண்போம். திருத்தேர் போன்ற அமைப்பு, அருணன் சாரதியாக இருந்து இரதத்தை செலுத்த ஐம்பூதங்களே ஐந்து குதிரைகளாக தேரை இழுக்கின்றன. சூரியனும் சந்திரன் மற்றும் அக்னியை மூன்று கண்களாகக் கொண்ட ஐயனுக்கு சூரிய சந்திரர்களே இறக்கைகள், ஐயனுக்கு நான்கு கோண விமானம். பன்னிரண்டு தூண்கள். நான்கு திசைகளிலும் துவார பாலகர்கள். நான்கு பக்கமும் விசிறி வீசுபவர்கள் ரம்பா, ஊர்வசி, மேனகை , திலோத்தமை என்னும் தேவ கன்னியர்கள். மேல் புரத்தில் கவரி வீசுபவர்கள் மற்றும் மாலை தாங்கி நிற்பவர்கள் தேவதைகள். ஐயனுக்கு பேரியாழ் தேவி, சகோட யாழ் தேவி, மகர யாழ் தேவி, மற்றும் செங்கோட்டி யாழ் தேவி நால்வரும் இசை கூட்டுகின்றனர். ஆனந்த நடராஜப்பெருமான் பத்ம பீடத்தில் ஆனந்தத் தாண்டவ தரிசனம் தந்தருளுகின்றார். ஐயனின் திருவாசியில் அன்னப் பறவைகள் அழகு கூட்டுகின்றன. விமானம் முழுவதும் அழகான மர சிற்பங்கள். முன் பக்கத்தில் தில்லைக்காளி, மஹா விஷ்ணு, பிரம்மா எம்பெருமானை வணங்கி நிற்க நாரதரும் தும்புருவும் ஐயன் புகழ் பாடுகின்றனர். விமானத்தில் மூன்று கலசங்கள், நான்கு பக்கமும் எக்காளம் ஊதும் கந்தவர்கள், வணங்கி அமர்ந்திருப்பது அதிகார நந்திகள், விமானத்தைத் தாங்கி நிற்பது நான்கு பக்கமும் யாழிகள். முன் பக்கத்து விமானத்தில் ஆதி சங்கரரும், தாயுமானவரும் அருட்காட்சி தருகின்றனர்.

வலது பக்க சூரிய இறக்கை


இனி வலப்பக்கத்தில் அகத்தியர் மற்றும் திருவள்ளுவர். வல, பின், இடபக்கங்களில் மூன்று வரிசையில் சிற்பங்கள். மேல் வரிசையில் சிறிய காமதேனு, அம்மை ஐயன் கண்ணை மூடும் சிற்பம், மற்றும் கம்பா நதிக்கரையில் சிவ பூஜை செய்யும் காட்சி. நடு வரிசையில் நின்ற கோலத்தில் தவ žலர்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், வள்ளலார் சுவாமிகள் மற்றும் குதிரை வாகனாரூட குபேரன். கீழ் வரிசையில் பத்ம பீடத்தில் சித்த புருஷர்கள் குதம்பை சித்தர், சட்டை முனி, திருமூலர், காலங்கி, கொங்கணர். ஜடாமுடியும், தாடியும், அணிந்துள்ள ருத்ராக்ஷமாலைகளும் அத்தனையும் அப்படியே தத்ரூபம்.சூரிய இறக்கை அப்படியே ஜடாயுவின் இறக்கை எனலாம்




,

ககன கந்தர்வ விமானத்தின் பின்னழகு



அடுத்து பின் பக்கம் விமானத்தில் வியாசர், வால்மீகீ. முதல் வரிசையில் மார்க்கண்டனுக்காக காலனை சம்ஹாரம் செய்யும் சிற்பம், தத்தாத்ரேயர், சிம்ம வாகனத்தில் அஷ்ட புஜங்களுடன் மஹ’ஷாசுரமர்த்தனி சிற்பங்கள். ஐயனின் திருவாசியின் அழகே அழகு. இரண்டாவது வரிசையில் சமயக்குரவர் நாலவர் மற்றும் மூன்று கால்களுடன் கோல் உன்றிய பிருங்கி முனி. கீழ் வரிசையில் சித்தர்கள் மச்சமுனி, கோரக்கர், கருவூரர், பாம்பாட்டி சித்தர், புலிப்பாணி சித்தர் மற்றும் போகர்.



இடது பக்க சந்திர இறக்கை



இனி இடப்ப்புறம் மேல் வரிசையில் காமதேனு, கண்ணப்பர் கண்ணை அப்பும் சிற்பம், மாணிக்கவாசகருக்கு குருந்த மரத்தடியில் குருவாக சிவபெருமான் உபதேசம் செய்யும் சிற்பம். நடு வரிசையில் காரைக்காலம்மையார், ஏனாதி நாயனார், நித்யானந்தர், கரும்பு தாங்கிய பட்டினத்தார். கீழ் வரிசையில் மற்ற ஆறு சித்தர்கள் அகத்திய முனி. கமல முனி, நந்தி தேவர், தன்வந்திரி முதலியோர்.


இவ்வாறு ஆதிசேஷன், அஷ்ட திக் கஜங்கள், அஷ்ட பாலகர்கள் விமானத்தை தாங்க, யாழ் தேவிகள், நாரதர், தும்புரு இசை கூட்ட, தேவதைகள் சாமரம் விசிறி வீச, கோபுரத்தில் அதிகார நந்திகள் சேவைக்காக காத்திருக்க , நான்கு பக்கமும் துவார பாலகர்கள் காவல் காக்க, யோகிகள், முனிவர்கள் ஓங்காரம் ஓத , சித்தர்கள் சிவாய நம சிந்தித்திருக்க, நால்வரும் தேவார திருவாசகம் பாட , காரைகாலம்மையார் ஐயன் அடிக்கீழ் இருந்து தாளம் போட, மணிகள் கல கல என்று ஒலிக்க ஆனந்த தாண்டவமாடி எம்பெருமான் வரும் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த விமானத்தை உருவாக்கியது அந்த மயனாகத்தான் இருக்க வேண்டும். தங்க நிறத்தில் காலை இளம் வெயிலில் மின்ன வரும் விமானத்தில் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன், சகல அகிலத்திற்கும் ராஜாவாக , நடராஜாவாக பவனி வரும் அழகை, தரிசனம் செய்வோர் பேறு பெற்றோர் என்பதில் ஐயமில்லை. ஆதி அந்தம் இல்லாத அந்த அருட்பெருஞ்சோதிதான் அகில பிரம்மாண்டத்தையும் ஆக்கியும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் ஐந்தொழில் புரிகின்றார் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றது இந்த ககன கந்தர்வ கனக விமானம்

60 வருடங்களுக்கும் மேலாக வெகு சிறப்பாக இந்த ஆருத்ரா தரிசன காட்சி அற்புதமாக நடந்து வருகின்றது. அடியேன் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ஆருத்ரா தரிசனத்தன்று காலையில் அலுவலகம் சென்று கொண்டிருந்த போது கோடம்பாக்கம் மேம்பாலத்தில் பேருந்தில் இருந்து வெளியே தங்க மயில் வாகனத்தில் வள்ளி தேவ சேனா சமேத முருகர் வலம் வரும் கோலத்தை மட்டும் காணும் பாக்கியம் கிடைத்தது, ஐயனின் அலங்காரம் அப்படியே மனதை ஈர்த்தது, எனவே அடுத்த வருடம் காத்திருந்து ஆருத்ரா தரிசனத்திற்கு இரண்டு நாள் முன்னம் அந்த பகுதியில் சென்று தேடினேன் அப்போது கண்ணில் பட்டது ஐயனின் பவனியை அறிவிக்கும் அறிவிப்பு, அந்த வருடம் முதல் ஒரு வருடம் கூட எத்தனை கோவில்கள் சென்றாலும் ஒரு வருடம் கூட அந்த ககன கந்தர்வ விமான தரிசனத்தை மறப்பதில்லை.

மானச கந்தர்வ மாணிக்க விமானம்





பின்னழகு



ஐயனுக்கு நான்கு கோண விமானம் ஆனால் அம்மைக்கோ எண்கோண விமானம். கோபுரத்தில் அம்மைக்கும் மூன்று கலசங்கள் ஒன்று நடுவிலும் மற்ற இரண்டும் தனியாக, கோபுரத்தில் கிளிகள் கொஞ்சுகின்றன. வளைவுகளிலே அழகிய சிற்பம் , நடுவில் பூவேலைப்பாடு. கோபுரத்தை யாழிகள் தாங்க கந்தர்விகளும், கின்னரிகளும், கையில் கிளியுடன் முத்து மாலை ஏந்தி விமானத்திற்கு அழகு சேர்க்கின்றனர். பிரம்ம சக்தி, சிவ சக்தி, பராசக்தி, நாகம், வராகி, மகேஸ்வரி, விஷ்ணு சக்தி, வீர சக்தி என்னும் தன் எட்டு ரூபங்கள் விமானத்தை சுற்றி அருட்காட்சி தர, இறக்கையை விரித்த கந்தர்விகள் முன்புறமும் பின்புறமும் வீணை இசை மீட்ட எழிலாக பவனி வருகின்றாள் அன்னை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி. விமானத்தை சிம்மங்கள் மற்றும் நாகங்கள் தாங்குகின்றன. பீடத்தில் பூ வேலைப்பாடுகள் அற்புதம். ஐயனின் விமானம் ஒரு வித அழகு என்றால் அம்மனின் விமானத்தின் அழகு மற்றொரு விதம். ஒவ்வொரு வருடமும் அம்மனுக்கு செய்யப்படும் அலங்காரமும் ஒவ்வொரு வகை. ஒரு தடவை நின்ற கோலம் .மறு வருடம் அமர்ந்த கோலம், அதற்கடுத்த வருடம் யோகக் கோலம் என்று காணக் கண் கோடி வேண்டும்.

தங்க மயில் வாகனத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகர்



வள்ளி தேவ சேனா சமேத முருகர், தங்க மயில் வாகனத்தில் பவனி வருகிறார், குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடி கொண்டிருக்கிறானல்லவா? எனவே முருகரது தங்க மயில் ஒரு குன்றின் மேல் நிற்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. குன்றில் அனைத்து பறவைகள் மற்றும் மிருகங்களைக் காணலாம். எம்பெருமானுக்குரிய கைலாய வாகனத்தில் இது போல்தான் மிருகங்களும் பறவைகளும் காட்டப்பட்டிருக்கும், ஆனால் இங்கு குன்றிலேயே அனைத்து ஜ“வராசிகளும் காட்டப்பட்டுள்ளன. மயிலின் காலின் கீழ உள்ளது ஐந்து தலை நாகம். அலகில் இருப்பது மூன்று தலை நாகம். பீடத்திலும், திருவாசியிலும் அழகிய பூ வேலைப்பாடுகள். முருகரும் நான்கு புறமும் கந்தர்விகள் யாழ் மீட்ட பவனி வருகின்றார். வினாயகப்பெருமானுக்கு தங்க மூஞ்சூறு வாகனம், மூஞ்சூறுவின் மேல் இடப்பட்டுள்ள போர்வையின் அமைப்பு மிகவும் சிறப்பு. இவருக்கும் பீடத்தில் மற்றும் திருவாசியில் பூ வேலைப்பாடுகள், நான்கு புறமும் கந்தர்விகள் இசை கூட்டுகின்றனர்.
தங்க இடப வாகனத்தில் சண்டிகேஸ்வரர்


சண்டிகேஸ்வரருக்கு தங்க சிறிய ரிஷப வாகனம். ரிஷபத்தின் அலங்காரங்கள் அனைத்தும் அற்புதம். வருடாவருடம் வினாயக, முருக, சண்டிகேஸ்வரர் அலங்காரமும் அம்மனின் கோலத்தை ஒட்டி செயப்படுகின்றது. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்றபடி அவன் அருளால் அவன் பவனி வரும் அந்த அற்புத அழகை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாததை எடுத்தியம்ப முயற்சி செய்துள்ளேன், தாங்களும் சென்று அந்த அழகை கண்டு களிக்குமாறு வேண்டுகிறேன்.
இத்துடன் ஆருத்ரா தரிசன தொடர் நிறைவு.இந்த தொடரில் வந்து தர்சனம் பெற்ற அனைவருக்கும் நன்றி. நடராஜப் பெருமானின் பல திருக்கோவில்களைப் பற்றி எழுத உத்தேசிக்கின்றேன் இது போலவே வந்து தரிசனம் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

4 comments:

அபி அப்பா said...

என் மூச்சிலும், என் நினைவிலும், என நினைப்பிலும்,என் தூக்கத்திலும் கூட இருக்கும் நடராஜா நடராஜா போற்றி போற்றி !!!!

S.Muruganandam said...

வாருங்கள் அபி அப்பா அவர்களே, வந்து போற்றி கூறியதற்கு நன்றி.

Geetha Sambasivam said...

அற்புதமான வர்ணனை, நேரில் பார்த்தால் கூடக் கூட்டத்தில் பல விஷயங்கள் தவற விடுவோம், ஒவ்வொன்றையும் மிக மிக நுணுக்கமாய்க் கவனித்து எழுதி இருக்கும் பாங்கு அசத்தி விட்டது. இந்தக் கோயிலைப் பற்றி நீங்கள் எழுதும் வரை கேள்விப் பட்டதும் இல்லை. கட்டாயமாய்ப் போய்வரவேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டது உங்கள் வர்ணனையும், பதிவின் அழகும், அம்மை, ஐயனின் தேர்களின் அழகும், நிச்சயமாய் காணக் கிடைக்கவில்லை எனக்கு இத்தனை நாளாய்! :(

S.Muruganandam said...

நன்றி, எங்கோன் மற்றும் எம்பிராட்டியின் தொண்டரே!

தாங்கள் சென்னையை சார்ந்தவராக இருந்தால் ஆருத்ரா தரிசனத்தன்று கோடம்பாக்கம் இரயில் நிலயத்தின் கிழக்குப் பக்கம் அமைந்துள்ள இந்த திருக்கோவிலில் காலை ஆறு மணி முதல் பத்து மணிக்குள் இந்த அரிய தரிசனத்தைக் கண்டு அருள் பெறலாம்.