Sunday, December 19, 2021

மார்கழிப்பதிவுகள் - 4

 ஸ்ரீ:




ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்;
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து
பாழியம் தோளுடைப் பற்பநா பன் கையில்
ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.    (4)


பொருள்கடல் போன்ற பெருமையுள்ள மழையாகிய அருளாளனே! உனக்கென ஒரு துளி நீரையும் மறைத்து வைக்காதே! கடலுள் செல்! கடல் நீரை முகந்து கொள்! பேரொலியுடன் மேலே ஏறு! ஊழிக் காலத்தின் திருமாலின் கேடில்லா திருமேனி நிறத்தை ஒத்த கருமை நிறம் கொள்! பெருமையும் எழிலும் கொண்ட பத்மனாபனின் வலக் கையில் விளங்கும் சுதர்சன சக்கரத்தைப் போல் மின்னிட்டு விளங்கு! இடக்கரத்தில் உள்ள பாஞ்சசன்னியத்தைப் போல முழங்கு! அப்பெருமாளின் சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து எய்யும் அம்பு மழை போல இவ்வையகம் வாழவும், பாவைகளாகிய நாங்கள் மகிழ்ந்து மார்கழி நீராடவும் காலந்தாழ்த்தாமல் மழையைப் பொழி!


பாவை நோன்பின் ஒரு முக்கிய நோக்கமான மழை பெய்ய வேண்டும் என்று வேண்டும்  பாடல். மழை எவ்வாறு உருவாகின்றது என்று அன்றே பாடியுள்ளாள் கோதை.

இப்பாசுரத்தில் தமிழுக்கே சிறப்பான "ழ"  என்ற எழுத்து ஆழி (3), மழை(2),ஊழி, பாழியம், தாழாதே, வாழ, மார்கழி, மகிழ்ந்து என்று பதினோரு முறை வருவது சிறப்பு.

                                                                                            ************

                                                                                                 உ

திருசிற்றம்பலம்




திருவெம்பாவை #4


ஒண்ணித்திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ?
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே!
விண்ணுக் கொரு மருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடி கசிந்துள்ளம்உள்நெக்கு
நின்றுருக யாமாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில் ஏலோ ரெம்பாவாய்! ........(4)

எழுப்புபவள்:
ஒளி பொருந்திய முத்தினைப் போன்ற பற்களை உடைய பாவையே! உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையா?

படுக்கையிலிருப்பவள்:
கிளி போல மிழற்றும் நம் தோழிகள் அனைவரும் வந்து விட்டனரோ?

எழுப்புபவர்:
எண்ணிப் பார்த்து உள்ளபடி சொல்கின்றோம்; ஆனால் நேரமாகும், அதுவரையும் கண் உறங்கி காலத்தை வீணாக்காதே! தேவர்களுக்கும் மருத்துவரான வைத்தீஸ்வரனை, மறைகள் பேசுகின்ற உயர்வான பொருளை, கண்களுக்கு இனியவனைப் பாடி மனம் கசிந்து உள்ளம் உடைந்து நின்று உருகும் நாங்கள் எண்ண மாட்டோம். நீயே வந்து எண்ணி, எண்ணிக்கை குறைந்தால் மீண்டும் போய் உறங்கு.

அநாதி காலமாக அறியாமையினால் உழலும் ஒரு ஜீவான்மாவை, பரமாத்மாவை அடைய வேண்டும் எழுந்து வா என்று அழைக்கும் ஒரு பாடல்.

Saturday, December 18, 2021

மார்கழிப்பதிவுகள் - 3

 திருவெம்பாவை # 3 

திருசிற்றம்பலம்

முத்தன்ன வெண்ணகையாய்! முன்வந்தெதிர் எழுந்தென்

அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளுறித்

தித்திக்க பேசுவாய் வந்துன் கடை திறவாய்!

பத்துடையீர்! ஈசன் பழவடியீர் பாங்குடையீர்

புத்தடியோம் புன்மை தீர்த்தாண்டாற் பொல்லாதோ

எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?

சித்தம் அழகியார் பாடாரோ? நம் சிவனை

இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். ......(3)

பொருள்:

எழுப்புபவள்முத்தினைப் போன்ற வெண்மையான பற்களை உடையவளே! முன்பெல்லாம் நீ, எங்களுக்கு முன்பாக எழுந்து எங்கள் எதிரே வந்து " என் அப்பனே! ஆனந்தனே! அமுதனே! என்று வாயூறி இனிக்க இனிக்க இறைவனைப் புகழ்வாய். இனியும் படுக்கையில் கிடப்பதேன். எழுந்து வந்து கதவைத் திறடி கண்மணி!

உள்ளே இருப்பவள்: நீங்கள் இறைவனிடம் பற்றுடையவர்கள்; இறைவனுடைய பழைய அடியார்கள்; அவனைப் புகழும் முறைமையை பெற்றவர்கள். நானோ புதிய அடிமை! உங்கள் பெருமையால் என்னுடைய சிறுமையை நீக்கி ஆட்கொள்ளலாகாதோ?

எழுப்புபவள்உன்னுடைய அன்புடைமை எங்களுக்கு தெரியாதா? அதை அனைவரும் அறிவோம். அழகிய மனமுடையவர்கள் நம்முடைய சிவபெருமானைப் பாடாமலிருப்பாரோ? உன்னை எழுப்ப வந்தோமே நாங்கள் எங்களுக்கு இவ்வளவு பேச்சும் வேண்டியதுதான்.

நம்முடைய சித்தம் ஸ்படிகம் போன்றது. அது நமது எண்ணத்தையே பிரதிபலிக்கும் எனவே சித்தத்தை இறைவனை நிறைத்தல் வேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்து.

********

திருப்பாவை # 3

  ஸ்ரீ:
                                   


ஓங்கி உலகளந்த உத்தமன்



ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் லூடு கயலுகல
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய். .........(3)


பொருள்:பாவை நோன்பின் பயன்:


வாமனனாக வந்து நெடியோன் திரிவிக்கிரமனாக ஓங்கி வளர்ந்து இந்த உலகத்தை ஓர் அடியால் அளந்த உத்தமன் திருமால்! அந்த பெருமாளின் திருநாமங்களை கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, திரிவிக்கிரமா, வாமனா, ஸ்ரீதரா, இருடிகேசா ,பத்மநாபா, தாமோதரா, கோபாலா, வாமனா, மாமாயா, தேவ தேவா, பால கிருஷ்ணா, மணி வண்ணா, பூவண்ணா, புள்ளரையா, ஸ்ரீஹரி, பரமா, கண்ணா, மாதவா, வைகுண்ட நாதா என்று பாடி நாம் நம் பாவை நோன்பை நோற்பதன் பலன்கள் என்ன என்று தெரியுமா தோழி?

ஊர் செழிக்க தீமையில்லாமல் மாதம் மூன்று மழை தவறாமல் பெய்யும், அதனால் வயல்களில் செந்நெல் ப்யிர்கள் நெடு நெடுவென வளரும், அந்த பயிர்களின் ஊடே கயல் மீன்கள் துள்ளித் திரியும், நிரம்பியிருக்கும் நீர் நிலைகளில் கருங்குவளை மலர்களில் புள்ளிகளையுடைய அறுகால் வண்டினங்கள் தேனைக் குடித்து மெய் மறந்து உறங்கும். மாட்டுத் தொழுவத்தில் புகுந்து அழகிய பசுக்களின் மடியைப் பற்றி இழுத்தால் பாலை தேக்கி வைத்துக் கொள்ளாமல் வள்ளல்களைப் போல பாலைப் பொழிந்து குடங்களை நிறைக்கும். எப்போதும் அழியாத செல்வம் எங்கும் நிறைந்திருக்கும் அறி பெண்ணே!

இப்பாசுரத்தில் அவதாரப்பெருமை: வாமன அவதாரம்
 

இந்த மூன்றாம் பாசுரம், பதினேழாம் பாசுரம் மற்றும் இருபத்து நான்காம் பாசுரம் மூன்றிலும் ஆண்டாள், எம்பெருமானின் வாமன அவதாரத்தை போற்றுகின்றார். இப்பாசுரத்தில் "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி" என்னும் பதத்தினால் இவ்வவதார பெருமையை உணர்த்துகின்றார்.


வாமன அவதாரம்: பலி சக்கரவர்த்தி பிரகலாதரின் பேரன், விரோசனரின் புத்திரன், இந்திரப்பதவியை கைப்பற்றியதால் இந்திரனுடைய தாய் அதிதியின் கர்பத்தில் பெருமாள் வாமனனாக அவதரித்தார். "வாமன அவதாரம்" எடுத்து வந்து மஹாபலியிடம் சென்று தவம் செய்வதற்கு தன் காலடியில் மூன்றடி மண் தருமாறு யாசித்தார். மகா பலியும் தருவதற்கு இசைந்து , தாரை வார்த்து தர முற்படும் போது ஓங்கி திரிவிக்கிரமனாக வளர்ந்து, ஓரடியால் மண்ணுலகத்தையும், இரண்டாவது அடியால் விண்ணுலகத்தையும் அளந்து நின்ற நெடுமால், இன்னுமொரு அடிக்கு மண் எங்கே? என்று வினவ, மகாபலி தன் தலையை தாழ்த்தி வணங்கி நின்றான். பெருமாள் அவனது முடியில் தன் அடியை வைத்து பாதாளத்திற்க்கு அழுத்தி அவனது செருக்கை அடக்கினார்.

பாசுரத்தின் உட்கருத்துபக்குவமடைந்த ஜீவாத்மாக்கள் (பசுவின் மடியைப்பற்றுவதுபோல) குருவின் காலைப்பிடித்து ஞானப்பாலைப்பெற்று பருகினால் ஆனந்த வெள்ளமாம் அது! அவர்களின் இதயகமலத்தில் பகவான் பொறிவண்டுபோல படுத்து உறங்குவானாம். 

Friday, December 17, 2021

மார்கழிப்பதிவுகள் - 2

ஸ்ரீ:

திருப்பாவை # 2



பாற்கடலுள் பையத் துயின்ற பரமன்


வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்;
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்!  (2)


பாவை நோன்பை நோற்கும்  முறை: ( செய்யக்கூடியவைகளும் செய்யக்கூடாதவைகளும்)

இந்த மண்ணுலகில் வாழ்பவர்களே! நாம் நல்ல மழை பெறவும், செல்வம் செழிக்கவும், நல்ல கணவனை அடையவும் செய்யும் நம் பாவை நோன்புக்கு செய்ய வேண்டிய காரியங்களை கேளுங்கள்!


திருப்பாற்கடலில் அரிதுயில் கொண்டுள்ள அரியின் திருவடிகளை எப்போதும்  பாடுவோம்.நெய், பால் கலந்த உணவை உண்ண மாட்டோம், அதி காலை எழுந்து நீராடுவோம்; கண்களுக்கு மையிட்டு அலங்கரிக்கமாட்டோம், கூந்தலில் மலர் இட்டு அழகு செய்து கொள்ள மாட்டோம்; பெரியோர்களால் செய்யத்தகாதவை என்று கூறப்பட்டுள்ள செயல்களை செய்ய மாட்டோம், எவரிடமும் சென்று கோள் சொல்லமாட்டோம். அண்டி வந்து யாசிப்பவர்களுக்கு இல்லை எனாது தர்மம் செய்வோம். இவை யாவும் செய்வது நாம் கடைத்தேறும் வழிக்கே என்று நினைத்து மகிழ்வோம். பிறப்பினின்று உய்யும் வழியைக் கருதி பாவை நோனபை கடைப்பிடிப்போம்.

நோன்பு இருக்கும் போது தூய மனமும், தூய உணவும் தேவை, கோபம் கூடாது என்பதை உணர்த்தும் பாசுரம் இது.

சேஷத்வமே நமது குறிக்கோள் என்று முதல் பாசுரத்தில் கூறிய ஆண்டாள் அதை அடையும் மார்கத்தில் எதை செய்ய வேண்டும்  - எதை செய்யக்கூடாது என்று க்ருத்யா - அக்ருத்யா விவேகம் சொல்கிறாள். இதை செய்தால் அவனுக்கு உகக்கும் - இதை செய்வதால் நாம் பந்தத்தில் சிக்கி உழல்வோம் என்று விவரமாக இப்பாசுரத்தில்  ஆண்டாள் கூறுகிறாள்.

ஐயம் என்பது நம்மை விட உயர்ந்த ஆசார்யர்களுக்கும் சந்நியாசிகளுக்கும் சமர்ப்பணம் செய்வது. பிச்சை என்பது ஏழைகளுக்கும், பிரம்மசாரிகளுக்கும் தர்மமாக தருவது. 


*************

 

திருசிற்றம்பலம்


திருவெம்பாவை # 2

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் தீராப்பகல் நாம்
பேசும்போது எப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையே? நேரிழையீர்
சீ! சீ! இவையும் சிலவோஏசும் இடமீதோ? விண்ணோர்கள்
ஏத்துதற்குக்கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கன்பார்? யாம் ஆரேலோர் எம்பாவாய் ......(2)

பொருள்:

எழுப்புபவள்: சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே! இரவும் பகலும் நாம் பேசும் போது "யாவும் கடந்து நிற்கின்ற ஒளி வடிவினனான இறைவனுக்கே என் அன்பு" என்று சொல்லுவாயே அரிவையே! அந்த அன்பை இப்போது இந்த மலர்ப் படுக்கையின் எப்போது வைத்தாய் கண்மணி?

உறங்குபவள்: சிறந்த அணிகலன்களை நான் மட்டும் அணியவில்லை, தாங்களும் தான் அணிந்துள்ளீர்கள்! சீ! சீ! சிறிது நேரம் தூங்கியதற்கு தாங்கள் பேசிய இவை கொஞ்சமா? விளையாடி ஏசிக் கொள்ளும் இடம் இதுவா?

எழுப்புபவள்: தேவர்களும் வணங்குவதற்கு அரியதாகி அவர்கள் தங்கள் நிலைக்கு இரங்கி கூச்சப்படும் படி உள்ளவை அந்த பெருமானுடைய திருவடிகள், ஒளிமயமான அந்த திருவடிகள் மண்ணில் படும்படி வந்தருளி நாம் காணுமாறு தந்தருளுவான் அந்த சிவலோகன். நாம் அனைவரும் உய்ய தில்லை சிற்றம்பலத்தில் ஆனந்த நடனம் பயிலும் ஆனந்த கூத்தன். நாம் யார்?  அவனது அடிமைகளே! அவனது புகழைப் பாட சீக்கிரம் எழுந்து வா பெண்ணே!

Thursday, December 16, 2021

மார்கழிப்பதிவுகள் - 1


 திருசிற்றம்பலம்


மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவெம்பாவை

திருவண்ணாமலையில் அருளியது
(சக்தியை வியந்தது)


ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்
சோதியை யாம்பாட கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ! வன்செவியோ ? நின் செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றுங் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசேலோ ரெம்பாவாய்! .......(1)

மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் சிறுமிகள் பாவை நோன்பு நோற்பதைக் கண்டு தன்னையும் பாவையாக பாவித்து பாடிய பதிகம். ஒரு ஜீவாத்மா, இந்த உலக மாயையில் சிக்குண்டு, இறைவனை மறந்து தூங்கும் மற்றொரு ஜீவாத்மாவை இறைவனின் புகழ் பாட அழைக்கும் படி அமைந்த பாடல்கள்.

பொருள்: திருவண்ணாமலையார் ஆதியும் அந்தமும் இல்லாதவர்! பிரமனும், நெடுமாலும் அடியும், முடியும் காண முடியா அனற் பிழம்பாய், அருட்பெருஞ்சோதியாய் நின்றவர், அந்த தியாகராஜருடைய திருவடி பெருமைகளை நாங்கள் அனைவரும்( ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி! தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி! என்று) பாடுகின்றோம்.

ஆனால் வீதியிலே எம்பெருமானின் திருநாமங்களை கேட்டவுடனே விம்மி விம்மி மெய் மறந்து இறைவனில் ஒன்றிவிடுகின்ற , வாள் போன்ற கூரிய கண்களைக் கொண்ட பெண்ணே! இப்போது அந்த வாழ்த்தொலிகளை கேட்ட பின்னும், செவிட்டு மங்கையைப் போல் உறங்குகின்றாயோ, உனது செவிகளுக்கு என்ன ஆயிற்று?

எம்பெருமானை மறந்து விட்டு இந்த பஞ்சு மெத்தை சுகத்திற்கு ஆளாகி தூங்குகின்றாயா? இதுதான் தூக்கத்தின் பரிசா பாவையே? அதை விடுத்து எழுந்து வா இறைவனின் புகழ் பாடி மார்கழி நீராடுவோம், அவரது திருவருளைப் பெறுவோம்.

அண்ணாமலையார் மகிமை:
தான் என்னும் அகந்தை மட்டும் யாருக்கும் இருக்கக் கூடாது. தெய்வங்களுக்குக் கூட இது பொருந்தும் என்ற அரிய தத்துவத்தை மாந்தருக்கு உணர்த்த முப்பெருந்தெய்வங்களூம் ஒரு நிகழ்வை நிகழ்த்திக் காட்டினர் திருவண்ணாமலையில் அந்த நாடகம் இதோ. ஒரு சமயம் திருமாலை விடவும் தானே பெரியவர் என்ற அகந்தை பிரம்மாவிற்கு ஏற்பட்டது. திருமாலிடம் சென்ற அவர் . 'உம்மிடமிருந்து பிறந்திருந்தாலும் நானே பெரியவன். நான் படைப்பதால்தான் உம்மால் காத்தல் தொழிலை செய்ய முடிகிறது என்று கர்வத்துடன் பேசினார். திருமால் அவரிடம், 'உனது தொழிலுக்கு ஆதாரமான வேதங்களையே உன்னால் காத்துக் கொள்ள முடியவில்லை. அப்படியிருக்கையில் நீ எப்படி பெரியவன் ஆக முடியும் , நானே பெரியவன் என்று அவர் வாதிட்டார். வாதம் தொடர்ந்தது இருவரும் யார் பெரியவர் என்று முடிவெடுக்க சிவபெருமானிடம் சென்றனர். சிவபெருமான் அப்போது ஒரு சோதிப்பிழம்பாய் வானமும் பாதாளமும் கடந்து நின்றார். இருவரில் பெருமானது அடியையோ அல்லது முடியையோ யார் முதலில் காண்கின்றார்களோ அவர்க பெரியவர் என்றார் திருக்கயிலைவாசர்.

உடனே திருமால் பன்றி வடிவம் எடுத்து பூமியைக் குடைந்து பெருமானுடைய திருவடியைக் காண புறப்பட்டார். பிரம்மதேவர் அன்ன வடிவம் எடுத்து எம்பெருமானுடைய திருமுடியைக் காண மேலே பறந்து சென்றார் இவ்வாறு பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின் வழியில் எம்பெருமானின் திருமுடியில் இருந்து விழுந்த தாழம்பூ ஒன்றை பிரம்மதேவர் கண்டார், எம் பெருமானின் திருமுடி எங்குள்ளது என்று பிரம்மன் கேட்க அந்த தாழம்பூ நான் சிவனாருடைய சடையிலிருந்து நழுவி 40000 வருடம் கீழே பயணம் செய்திருக்கின்றேன் என்று கூறியது பிரம்ம தேவர் திருமுடியைக் காணும் முயற்சியை கை விடுத்து அந்த தாழம்பூவை தான் எம்பெருமானின் முடியைக் கண்டதாக சாட்சி கூறுமாறு வேண்டினார் தாழம்பூவும் ஒத்துக் கொண்டது. மாயவனும் திருவடி காணாமல் திரும்பி வந்தார். அவர்கள் சிவபெருமானை அடைந்து இந்த உண்மையைக் கூறினர். பொய் கூறிய பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் கோவில் இல்லாமல் போகட்டும் என்று சாபம் கொடுத்தார் எம்பெருமான், படைப்புக் கடவுளின் மன்றாடலுக்கு மனமிரங்கி , ஆணவமும் தோல்வியை ஒப்புக் கொள்ளாத தன்மையும் இருக்கக் கூடாது என்று பிரம்மாவிற்கு உபதேசம் செய்து கோவிலின் அபிஷேகத் தீர்த்தம் வரும் இடத்தில் ஓரமாக பிரம்மா ஒதுங்கிக் கொள்ள சம்மதித்தார் அந்த கருணாலயன். பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உபயோகப்படுத்தபடக் கூடாது என்றும் சாபம் கொடுத்து லிங்கோத்பவராக இருவருக்கும் அருட்காட்சி தந்தார் எம்பெருமான். தங்கள் பிழையை உணர்ந்த மாலும் அயனும் பின் லிங்க பூசை செய்தனர்.

பிரமன்அரி என்று இருவரும் தம் பேதமையால்பரம் யாம்
பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க
அரனார் அழல் உருவாய் அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ

என்று திருவாசகத்தில் மணி வாசக சுவாமிகள் பாடியபடி திருமாலும் பிரம்மனும் தான் என்னும் அகந்தை நீங்கிட அடி முடி காணாமல் ஜோதிப்பிழம்பாய் எம்பெருமான் நின்ற ஸ்தலம் திருவண்ணாமலை, நாளோ மஹா சிவராத்திரி, ஆயினும் பிரம்மனுக்கும், மாலுக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் அவர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்கி கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஒரு சோதி மலை நுனியில் காட்டா நிற்போம் என்று அருளிய படி கார்த்திகை மாதம் கார்த்திகை நாளன்று திருவண்ணாமலை உச்சியில் தீப தரிசன காட்சி தருவதாக ஐதீகம். ஜோதி ரூபமாககாட்சி தரும் சிவபெருமானை, அண்ணாமலையானைக் காண தேவர்களும், மகரிஷ’களும், சித்தர்களும், ஞானிகளும் திருக்கார்த்திகையன்று இத்தலத்திற்கு வருவதாக ஐதீகம்.


*****************

ஸ்ரீ:
ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை


திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லிவள நாடி வாழியே
வண்புதுவை நகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே


நீளா துங்க ஸ்தந கிரி தடீம் ஸுப்த  முத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம்  ஸ்வம் ச்ருதி சத ஸிர: ஸித்தம் அத்யாபயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய:

அன்ன வயற்புதுவையாண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல் பதியம் - இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.



சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே! தொல் பாவை
பாடியருள வல்ல பல்வளையாய்! - நாடி நீ
வேங்கடவற் கென்னை விதியென்ற விம்மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு.


திருப்பாவை #1





ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் 

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யாசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கு பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!

மார்கழி மாதத்தின் சிறப்பு:

பொருள்: கோபியரே! கோபியரே! கொஞ்சும் இளம் வஞ்சியரே! பொருத்தமான அணிகலன்களை அணிந்த பெண்களே! கண்ணனின் அருட்செல்வம் நிறைந்திருக்கின்ற திருஆய்ப்பாடியின் செல்வச் சிறுமிகளே!

நம் கண்ணன் (நாராயணன்) , கூர்மையான வேலுடன் சென்று பகைவர்களை வெல்லும் நந்தகோபனின் திருக்குமரன், அழகிய கண்களையுடைய யசோதையின் இளஞ்சிங்கம், கருவுடை முகில் வண்ணன், காயா வண்ணன், கருவிளை போல் வண்ணன், செந்தாமரையை ஒத்த கண்களையுடையவன், குளிர்ச்சி பொருந்திய முகிழ்கின்ற முழுமதி திருமுகத்தினன். அந்த ஸ்ரீமந் நாராயணனே நமது பாவை நோன்பிற்கு வேண்டிய அனைத்தையும் வழங்குவான் (இம்மை இன்பங்களை மட்டுமல்ல மறுமையில் வைகுண்டப்பதவியையும்) வாருங்கள்! வஞ்சியரே! இந்த மாதங்களில் சிறந்த மார்கழியில், முழுமதி நன்னாளில் கோவிந்தன் பெயரைச் சொல்லி உலகத்தோர் போற்றும் வண்ணம் மார்கழி நீராடுவோம். ( எம்பெருமான் அனுபவத்தில் திளைப்போம். )என்று தன்னை ஒரு ஆயர்குலப்பெண்ணாகவும், திருவில்லிபுத்தூரை ஆய்ப்பாடியாகவும், வடபத்ர சாயியை கண்ணனாகவும் பாவித்து பாவை நோன்பை அனுசரிக்க ஆண்டாள் நாச்சியார் அழைக்கின்றார். 

திருப்பாவையின் இம்முதல் பாசுரம் எம்பெருமானிடம் பறை என்னும் கைங்கரியத்தை வேண்டும் பாசுரமாக அமைந்துள்ளது.  சேஷத்வமே நமது குறிக்கோள் என்கிறாள் ஆண்டாள்.

மார்கழிப்பதிவுகள்

இது ஒர் மீள் பதிவு  முதலில்http://thiruvempavai.blogspot.in என்ற வலைப்பூவில்  வெளியிட்டேன் தற்போது இந்த வலைப்பூவில் அன்பர்கள் இந்த பிலவ வருட (2021) மார்கழி மாதத்தில் படித்து மகிழலாம். 

 

திருசிற்றம்பலம்

மாணிக்க வாசகர் வரலாறு

குருந்த மரத்தடியில் சிவபெருமான் குருவாய் உபதேசம் செய்த காட்சி

தொல்லை யிரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே
எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர்
எங்கோன் திருவாசகம் என்னும் தேன்.


"திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்"

வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தை
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே. - வள்ளலார் சுவாமிகள்.



இவை அனைத்தும் மாணிக்க வாசக சுவாமிகள் தீந்தமிழால் சிவபெருமானை குறித்துப் பாடிய திருவாசகத்தை பற்றிய சில புகழாரங்கள். சிவபெருமானே குருவாக வந்து மாணிக்கவாசகரை தடுத்தாட் கொண்டார். சைவ சமய குரவர்கள் நால்வர்களுள் ஒருவரான மாணிக்க வாசகரின் வரலாற்றை இந்த மார்கழி மாதத்தில் அவரது திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியையும் காண்பதற்கு முன் காண்போம்.

பாண்டிய நாட்டில் திருவாதவூரில் சம்புபாதாசிருதர், சிவஞானவதி ஆகியோருக்கு மகவாக அவதரித்தார். இவரது இயற்பெயர் திருவாதவூரர். இவர் 63 நாயன்மார்களுள் ஒருவர் இல்லை மேலும் சுந்தரரின் திருத்தொண்டர் தொகையில் இவர் இடம் பெறவில்லை. எனவே இவர் சுந்தரர் காலத்திற்கு பின் பட்டவராக இருக்க வேண்டும். இளமையில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால் பாண்டிய மன்னன் அரிகேசரி அல்லது அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக இருந்தார். "தென்னவன் பிரம்மராயர்" என்னும் உயரிய விருதை அளித்து பெருமை படுத்தினார். அரசனுக்கு அமைச்சராக இருந்தும் அவர் ஆன்மீக நாட்டம் உடையவராகவே இருந்தார். தக்கவொரு குருவை அவர் உள்ளம் நாடியவாறிருந்தது. ஒரு நாள், அரசன் தன்னுடைய குதிரைப் படையைப் பலப்படுத்தவேண்டி, வாதவூராரை அழைத்து, கருவூலத்திலிருந்து பொன்னை எடுத்துக்கொண்டு, கீழைக்கடற்கரைக்குச் சென்று, நல்ல அரபு, பாரசீகக் குதிரைகளாகப் பார்த்து, வாங்கிவரும்படி ஆணையிட்டான். அக்காலத்தில் தமிழகத்தின் கடற்கரைப்பகுதிகளில் சில பட்டினங்களில் பாரசீக வளைகுடாப் பகுதியிலிருந்து வந்த அராபியர்கள் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டு வாணிபம் செய்து வந்தனர்.


ஒட்டகங்களின்மீது பெரும்பொருளை ஏற்றிக்கொண்டு வாதவூரார் பாண்டிநாட்டு வடஎல்லையில் இருந்த "திருப்பெருந்துறை" என்னும் ஊரை அடைந்தார். இப்போது இத்திருத்தலம் ஆவுடையார் கோவில் என்று அழைக்கப்பதுகின்றது. அவ்வூரை நெருங்கியதுமே வாதவூராருக்கு ஏதோ பெரும்பாரமொன்று மறைந்ததுபோலத் தோன்றியது. அங்கு ஓரிடத்திலிருந்து, "சிவ சிவ" என்ற ஒலி கேட்டது. அந்த ஒலியை நோக்கிச் சென்றார். அங்கு ஈசனே குருந்தமரத்தடியில் சீடர்களுடன் மௌனகுருவாக அமர்ந்திருந்தான். இறைவன் அவரின்மீது தனது அருட்பார்வையைச் செலுத்தி அவருக்கு "மாணிக்கவாசகன்" என்னும் தீட்சாநாமமும் வழங்கினான். மாணிக்கவாசகராய் மாறிவிட்ட திருவாதவூராரும் திருப்பெருந்துறையிலேயே தங்கி, பெரும் கோவிலைக்கட்டி பல திருப்பணிகளையும் அறப்பணிகளையும் செய்து கொண்டிருந்தார். வந்த காரியத்தையும் மறந்தார்; அரசன் கொடுத்தனுப்பிய பணத்தையும் கோவில் கட்டுவதிலேயே செலவிட்டுவிட்டார். குதிரைகளை ஞாபகப்படுத்தி பாண்டியமன்னன் தூதுவர்களை அனுப்பினான். ஈசனின் ஆணைப்படி, ஆவணி மூல நாளன்று குதிரைகள் வந்து சேருமென்று சொல்லியனுப்பினார். ஒற்றர்களின் வாயிலாக உண்மையினை அறிந்த மன்னவன் செலவழித்த பொருட்களைத் திருப்பித்தருமாறு மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான்.


மாணிக்க வாசகரின் உண்மையான பக்தியை உலகுக்கு தெரியப்படுத்த திருவுளம் கொண்ட சொக்கேசப்பெருமான் தானே காட்டில் திரிந்த நரிகளைக் குதிரைகளாக மாற்றி, (நரிதனை பரியாக்கி) தன்னுடைய பூதர்களை ராவுத்தர்களாக்கி, தானும் "சொக்கராவுத்தர்"என்னும் கோலத்தொடு ஓர் அராபியக் குதிரை வணிகனாகப் பாண்டியனை அடைந்து குதிரைகளை ஒப்படைத்தார். ஆனால் இரவில் போலிக்குதிரைகள் நரிகளாக மாறி, பழைய குதிரைகளையும் சேதப்படுத்திவிட்டு, மதுரை நகரில் பெருங்குழப்பம் விளைவித்து, காட்டிற்குள் ஓடிப்போயின. மீண்டும் அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை சித்திரவதை செய்தான். அப்போது சொக்கேசப்பெருமான், வைகையில் பெருவெள்ளம் தோன்றிடச் செய்தார். அரசன் வீட்டுக்கு ஒருவர் வந்து வைகையை அடைக்க வேண்டும் என்று ஆணையிட்டான். அவ்வமயம் பிட்டு விற்கும் வந்திக்கு யாரும் இல்லாததால் அவர் ஆலவாயண்ணலிடம் வேண்டி முறையிட்டாள். அவளுக்கும் அருள கூலியாளாகத் தானே வந்து கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே கூலி என்று பேசி அன்று சோதனையாக எல்லா பிட்டும் உதிர்ந்து விட அதை உண்டு விட்டு , அனைவரும் மண் எடுத்து வெள்ளத்தை அடைத்துக் கொண்டிருக்க , கூலியாளாக வந்த பெருமான் மட்டும் தூங்கிக் கொண்டு இருந்தார். அங்கே வந்த அரிமர்த்தன பாண்டியன் கோபம் கொண்டு தன் கையால் இருந்த பிரம்பால்  முதுகில் அடிக்க அந்த அடி எல்லாவுயிர்களின் முதுகிலும்  விழ அரசன் மயங்கி நிற்க , தானே ஒரு கூடை மண்ணை வெட்டிப்போட்டு, வைகையின் வெள்ளத்தை அடக்கி மறைந்தார்.


மணிவாசகரின் பெருமையை அறிந்த மன்னன், அவரை விடுவித்தான். ஆனால் அவர் அரசவையை விட்டு, திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி, குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் "சிவபுராணம்", "திருச்சதகம்" முதலிய பாடல்களைப்பாடினார். அதன்பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு திருஉத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். அதன்பின்னர் தலயாத்திரை புரிந்து திருவண்ணாமலையில் "திருவெம்பாவை", "திருவம்மானை" ஆகியவற்றைப்பாடினார். கடைசியாகத் தில்லையை அடைந்தார். அங்கு ஈழநாட்டைச் சேர்ந்த புத்தமதக்குருவை வாதில்வென்று, ஈழமன்னனின் ஊமைமகளைப் பேசவைத்து, அவர்களை மதமாற்றம் செய்தார். ஈழத்து புத்தகுரு கேட்ட கேள்விகளுக்கு, ஈழத்தரசனின் குமாரியின் வாயால் சொல்லச்செய்த விடைகளே, "திருச்சாழல்" என்னும் பதிகமாக அமைந்தன. தில்லையில் "அச்சோப்பதிகம்" போன்ற சிலவற்றைப்பாடினார்.

 ஒருநாள், பாண்டிநாட்டு அந்தண வடிவில், ஈசன் மணிவாசகரிடம் வந்து, அதுவரை அவர் பாடியுள்ள பாடல்களை முறையாகச்சொல்லுமாறு கேட்டுக்கொண்டான். மணிவாசகர் அவ்வாறு சொல்லச்சொல்ல, இறைவனும் தன் திருக்கரத்தால் ஏட்டில் எழுதிக்கொண்டான். திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் எழுதிய பின்னர், ஈசன் மணிவாசகரிடம், "பாவை பாடிய வாயால், கோவை பாடுக!", என்று கேட்டுக் கொண்டான். மணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட, ஈசன் அதையும் ஏட்டில் எழுதிக்கொண்டான். எழுதி முடித்தவுடன் இறுதியில், "இவை திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து", என்று கைச்சாத்துச் சாற்றி திருச்சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து மறைந்தான். வாசற்படியில் ஏட்டுச்சுவடி இருப்பதைக்கண்ட அர்ச்சகர், தில்லைமூவாயிரவர் ஆகியோர் மாணிக்கவாசகரிடம் அந்தப்பாடல்களுக்குப் பொருளைக் கேட்டனர். அவனே அதற்கு அர்த்தம் மாணிக்கவாசகர், அவர்களை அழைத்துக்கொண்டு திருச்சிற்றம்பலத்தை யடைந்து, "அந்நூலின் பொருள் இவனே!", என்று சிற்சபையில் நடனமாடும் நடராசப் பெருமானைக் காட்டியவாறு, சிற்றம்பலத்துள் தோன்றிய பேரொளியில் ஆனி மாத மூலத்தன்று கலந்து, கரைந்து, மறைந்தார்.

மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு: 1.திருவாசகம்; 2. திருக்கோவையார். இவற்றுள் திருவாசகம் என்பது ஒரு பெரிய தொகுப்பு நூல். இதில் மொத்தம் 51 பாடல் நூல்கள் உள்ளன. அவற்றுள் பத்துப்பத்துப் பாடல்களாகப் பாடிய பதிகநூல்களே அதிகம். நீண்ட பாடல்களாக விளங்குபவை சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் ஆகியவை. இவற்றில் பல பாடல்கள் புகழ்பெற்றவையாய் விளங்கிடினும், மிக அதிகமாக வழங்கப்படுபவை, சிவபுராணமும் திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியும் தான். திருவெம்பாவை, தொள்ளாயிரம் ஆண்டுகளாக சைவக்கோயில்களில் ஓதப்படும் பெருமையுடையது. "தமிழ் மந்திரம்" என்ற பெயரில் அந்தக்காலத்தில் அது கடல் கடந்து சயாம் நாட்டிற்குச் சென்றிருக்கிறது. அரசனுக்கு முடிசூட்டும் காலத்திலும், சில திருவிழாக் காலத்திலும், சயாமியர் திருவெம்பாவையை ஓதுகின்றனர். ஒவ்வொரு திருவெம்பாவைப்பாடலின் முடிவிலும் "ஏலோர் எம்பாவாய்!" என்ற சொற்றொடர் காணப்படும். அது மருவி வந்து இப்போது சயாமியரால், " லோரி பாவாய்" என்று அழைக்கப்படுகிறது.

"வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை


நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே


தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்


ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!" வள்ளலார் சுவாமிகள்



நாளை முதல் முதலில் திருவெம்பாவையின் இருபது பாடல்களையும் அடுத்து திருபள்ளியெழுச்சியின் பத்து பாடல்களையும்  பொருளுடன் பார்ப்போம்.



**************** 

இது ஒர் மீள் பதிவு  முதலில்http://thiruppavaii.blogspot.in என்ற வலைப்பூவில்  வெளியிட்டேன் தற்போது இந்த வலைப்பூவில் அன்பர்கள் இந்த பிலவ வருட (2021) மார்கழி மாதத்தில் படித்து மகிழலாம். 

ஸ்ரீ:
திருப்பாவை உணர்த்தும் நன்னெறி



பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையிலே உயர்ந்தவற்றைக் கூறும் போது "மாதங்களில் நான் மார்கழி" என்கிறார். திருக்கோவில்களில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் கோவில்களில் இறைவனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகின்றது. மஹா விஷ்ணுவின் வைகுண்ட ஏகாதசி வரும் மாதம் இதுதான். குளிர் காலத்தில் காலை வேளையில் ஓஜோன் என்னும் வாயு மிகுந்து உள்ளதால் உடலுக்கும் மிகவும் நன்மை பயக்கும் என்ற அறிவியல் உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள் நம்மை அதிகாலையில் எழுந்து பயன் பெற இந்த வழக்கத்தை ஏற்படுத்தினர் போலும்.

மானிடர்களாகிய நம்முடைய ஒரு வருடம் தான் தேவர்களுக்கு ஒரு நாள் அவர்களுடைய நாள் தொடங்குகின்ற மாதம் தான் மார்கழி மாதம். எனவே மார்கழி மாதம் நாம் செய்கின்ற பூசை தேவர்களின் அதிகாலை பூசை என்பது ஐதீகம்.

பண்டை காலம் தொட்டே மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் எழுந்து கோலம் இட்டு வாசலை அலங்கரித்து பாவை நோன்பு இருப்பது வழக்கமாக உள்ளது. கோவில்களிலே சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்ஆண்டாள் பாடியருளிய திருப்பாவை இசைக்கப்படுகின்றது. இனி திருப்பாவை வலியுறுத்தும் நன்னெறிகளைப் பற்றி பார்ப்போமா?

இந்த மாய உலகத்திலே சம்சார பந்ததிலே உலலுகின்ற ஜ“வாத்மா, பரமாத்மாவுக்கே உரியாதாயிருக்கையில் அவனையே கரணங்கள் யாவற்றிலும் அனுபவித்து இன்புறுதலும், அவன் பிரிந்த காலத்து துன்புறுதலும் அடையுமாதலால் இறைவனை ஆண்டாள் நாச்சியார் பாடியுள்ள பாடல்களே திருப்பாவை .

திருப்பாவைக்கு அடிப்படையாக விளங்குவது ஜ“வாத்மா பரமாத்மாவுடன் இரண்டறக் கலப்பதுதான். பாவை நோன்பு ஒழிக்க முடியாத உறவு என்பது பகவானுக்கும் உள்ள பரஸ்பர பந்தத்தை நிலை நிறுத்துகிறது. அதாவது இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் எம்பெருமான் , அவனைப் பற்றாகக் கொண்டால் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அவன் துணையாக இருப்பான் என்ற தத்துவத்தை விளக்குவதே பாவை நோன்பு.

திருப்பாவை, "ஆன்ம நேயத்தை" போதிக்கின்றது. ஒரு ஆன்மா பிற ஆன்மாக்கள் மீது நேயம் கொண்டு தன்னோடு அவை அனைத்தும் இறைவனை அடையுமாறு செய்யும் நோக்கில் பாடப்பட்ட பாடல்களே இவை. "வஸுதைவ குடும்பகம்" என்று வட மொழியில் உலகம் எல்லாம் ஒரே குடும்பம் என்றும் நமது தமிழில் " யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் " என்பதும் இந்நெறிதானன்றோ?
 
நோன்பு என்று பெயரிட்டு அல்லலுறும் அடியார்களை முன்னிட்டு தலைமை தாங்கிச்சென்று உறங்குவது போல யோகு செய்யும் உலகலந்தவனை உறக்கத்திலிருந்து எழுப்பி, உனக்கே அடிமைப்பட்ட இவ்வாத்மாக்களை அங்கீகரித்து உங்கள் விஸ்வரூபத்திற்கேற்ற வண்ணம் கைங்கர்யமாகிற திருவருளினை புருஷார்த்தை கொடுத்து காலம் வரும் வரையில் கை நழுவாமல் கிருபை செய்தருள வேண்டும் என்று பிரார்த்திப்பதே இப்பாசுரங்கள் ஆகும்.  

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழத் துயிலனைமேல் கண் வளரும்

மாமான் மகளே மணிக்கதவம் தாழ் திறவாய்என்று ஆண்டாளும் பாடுவது சம்சார பந்தத்திலே உழலும் ஆன்மாவைப்பார்த்து காலம் வந்து விட்டது இப்போதாவது விழித்துக்கொள் இறைவனின் திருப்பாதங்களில் சரணடைந்து விடு என்று கூறுவதல்லவோ.

மேலும் வைகறை துயிலெழும் மிக நல்ல நெறியை நமக்கு உணர்த்துவதை நாம் காணலாம்.


ஒண்ணித் திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?


புள்ளும் சிலம்பின காண்! புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கெட்டிலையே?

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்

என்று ஆண்டாள் பாடுவது பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலையிலே எழுவதும் பின்பு இறைவனை வழிபடுவதும் நமக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை நமக்கு வலியுறுத்தவே.


அடுத்த நெறி உடல் சுத்தி என்னும் நீராடல், இது புற சுத்தி இதை திருப்பாவையும் திருவெம்பாவையும் இரண்டும் மிக நன்றாக வலியுறுத்துகின்றன.


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்

என்று திருப்பாவை தொடங்குகிறது.

நம்மை நல்வழிப்படுத்துகின்ற இந்த சிறு வயது முதலே பாராயணம் செய்து வந்துள்ளேன். அடியேனது ஊர் உடுமலைப்பேட்டையில், பிரசண்ட வினாயகர் கோவிலில் மார்கழி பனி அதிகாலையில் பாராயணம் செய்து பெற்ற இன்பம் அலாதி. அந்த இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த தொடர். இந்த மார்கழி மாதம் முப்பது நாளும் தொடரும்.


திருப்பாவையின் பாடல்களையும் பொருளுடன் ( பல் வேறு புத்தகங்களில் படித்தது) அளிக்க முயற்சி செய்துள்ளேன். முடிந்தவரையில் கண்ணனது லீலைகளையும் அந்தந்த பாசுரங்களில் கொடுத்துள்ளேன். குறை இருந்தால் அது என்னுடைய தவறே அதற்காக மன்னிக்கவும்.

Wednesday, December 15, 2021

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 7

சிந்தலவாடி நரசிம்மர் தரிசனம்

இரண்யனுக்கு அஞ்சி வேறு பகுதிகளில் ஒளிந்து வாழ்ந்த முனிவர்கள், இரண்ய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினர். அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்கு பல தலங்களில் சேவை சாதித்தார். அவ்வாறு காட்சி தந்த தலங்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் உள்ளன.


இவற்றில் பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் அமைந்துள்ளன. இவற்றுள் பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரி கோவில் ஆகிய மூன்று தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இந்த 3 தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் நல்லது என்பார்கள்.


முதலில் அடியோங்கள் தரிசித்த சிந்தலவாடி தலத்தில் தானாக நரசிம்மர் எழுந்தருளிய வரலாற்றைக் காண்போம் பின்னர் மற்ற நரசிம்மர் ஆலயங்களின் சிறப்பைப் பற்றி  சுருக்கமாக பார்த்துவிட்டு நிறைவாக அடியோங்களுக்கு கிடைத்த தரிசனத்தைப் பற்றி காணலாம் அன்பர்களே.


சிந்தலவாடித்தலம் திருச்சி - குளித்தலை சாலையில் 45வது கி.மீ., குளித்தலையில் இருந்து 12 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.  திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் காட்டுப்புத்தூர் அருகில்  காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.


இங்கு மிகப் பின்னாளில்தான் நரசிம்மர் எழுந்தருளினார் என்பது சுவாரஸ்யமான சரிதம். அதற்கு முன்னால், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் மற்றும் அனுமன் ஆகியோர் இங்கு எழுந்தருளியிருந்தனர். இவர்களைப் பிரதிஷ்டை செய்தவர் ஸ்ரீவியாசராஜர்.


ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த விக்கிரகங்களின் பெருமை திசையெங்கும் பரவ, பலரும் இங்கு வந்து தங்கி, இறைவழிபாடு நடத்தினர். அப்படி வந்த பக்தர்களில் ஒருவர் ஹரியாச்சார், அவர் கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரில் வசித்துவந்தார். அவர் கனவில் ஒருநாள் நரசிம்மர் தோன்றி, தான் கருப்பத்தூர் காவிரிக்கரையில் ஒரு கல்லாக கவிழ்ந்து கிடப்பதாகவும், தன்மீது ஒரு சலவையாளர் அனுதினமும் துணி துவைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.


மறுநாள், ஆர்யாச்சார் திருக்காம்புலியூரிலிருந்து கருப்பத்தூருக்குச் சென்றார். கனவில் தெரிந்த வழிகளில் பயணம் தொடர, சலவைத் தொழிலாளர்கள் பணி செய்யும் இடம் வந்தது. குறிப்பிட்ட சலவைத் தொழிலாளியும் ஆர்யாச்சாரை அழைத்துச் சென்று அக்கல்லைக் காண்பித்தார். கல்லைத் திருப்பிப் பார்த்தபோது யோக நரசிம்மர் காட்சியளித்தார்.  ஸ்ரீ ஆர்யாச்சார் பக்தியாக, அந்த விக்கிரகத்தோடு மேற்கு நோக்கி நடந்தார். சிந்தலவாடி அருகே வந்தபோது, நடை நடுங்கியது; கல் பாரமாகத் தெரிய ஆரம்பித்தது.  ஸ்ரீ நரசிம்மரின் எண்ணம் பக்தருக்குப் புரிந்தது. அங்கேயே ஸ்ரீ யோக நரசிம்மரை இறக்கி, காவிரிக்கரையில் அக்கிராமத்தில் முன்பே இருந்த ஸ்ரீ காளிங்க நர்த்தனர் கோயிலில் ஸ்வாமியைப் பிரதிஷ்டை செய்தார்.  அப்போது ஸ்ரீரங்கத்தில் இருந்த ஸ்ரீவியாசராஜர்  சிந்தாலவாடி வந்து ஸ்ரீயோக நரசிம்மரை பூஜித்தார்.  யோக நரசிம்மருக்கு இடப்புறத்தில் ஒரு சிறு சன்னதியில் அனுமனை (பிராண தேவரு) பிரதிஷ்டை செய்து வணங்கினார்.


ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் கரூர், குளித்தலை, திருச்சி, முசிறி பகுதிகளில் வாழும் மத்வ சம்பிரதாயக் குடும்பங்களின் குலதெய்வமாக இருந்து வருகிறது. தங்கள் குழந்தைகளுக்கு முடி இறக்குதல், காது குத்துதல் போன்ற சுப நிகழ்ச்சிகளை இக்கோயிலில் நடத்துகிறார்கள்  மத்வ சம்பிரதாயப் படி தினசரி பூஜைகளும் உற்சவங்களும் இங்கு நடத்தப்படுகின்றன. இனி மற்ற அஷ்ட நரசிம்மர் தலங்களைப் பற்றி காண்போம்.


பூவரசங்குப்பம் : இரண்யகசிபுவை வதம் செய்த பிறகும், கோபம் தணியாத நரசிம்மர், காடுகளிலும், மலைகளிலும் சுற்றித் திரிந்தார். அப்போது இரண்யகசிபுக்கு பயந்து காடுகளில் ஒளிந்தபடி தன்னை வழிபட்ட முனிவர்களுக்கு அவர் காட்சியளித்தார். அந்தத் தலமே இதுவாகும். தட்சிண அகோபிலம் என்ற புராணப்பெயரைக் கொண்டது


தூணிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்ட வரலாற்றின் அடிப்படையில், ஒரு தூணையே நரசிம்மராகக் கருதி இங்கு வழிபாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் பல்லவ மன்னர்கள் காலத்தில் ஆலயம் எழுப்பி, சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவர் லட்சுமிநரசிம்மர், உற்சவர் பிரகலாதவரதன், தாயார் அமிர்தவல்லி.


பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில் அவர் உருவம் பெரியதாகவும், தாயாரின் உருவம் சிறியதாகவும் அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில், ஆணுக்குப் பெண் சரிசமம் என்பதை உணர்த்தும் விதமாக பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல, தாயாரின் திருஉருவமும் அமைக்கப்பட்டிருக்கிறது.


பண்ருட்டியிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சின்னக்கள்ளிப்பட்டு என்ற ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சிறுவந்தாடு என்ற ஊரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் சுவாதி தினத்தில் நரசிம்மர் ஜெயந்தி தின விழா கொண்டாடப்படுவது வழக்கம்.


சிங்கிரிக்குடி : பிரகலாதன் வேண்டு கோளுக்கிணங்கி, 16 கரங்களுடன் உக்கிரமூர்த்தியாக காட்சியளித்த தலம் இது. ராஜராஜ சோழன் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட இவ்வாலயம், 5 நிலை ராஜ கோபுரத்துடன் மேற்கு நோக்கி உள்ளது.
இரண்யகசிபுவை நரசிம்மர் மேற்கு நோக்கி நின்று வதம் செய்ததால், இந்தக் கோவிலும் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளது. நரசிம்மரின் இடதுபுறம் இரண்ய கசிபுவின் மனைவி நீலாவதி, வலதுபுறம் தரிசனம் வேண்டி 3 அசுரர்கள், பிரகலாதன், சுக்ரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். கருவறையின் உள்ளே வடக்கு நோக்கிய நிலையில் சிறுவடிவில் யோகநரசிம்மர், பால நரசிம்மர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஒரு கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிப்பது அரிதான காட்சியாகும்.கடலூர்-புதுச்சேரி சாலையில் தவளகுப்பத்தில் இருந்து அபிஷேகபாக்கம் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது


பரிக்கல் : இதுவும் பிரகலாதனுக்காக நரசிம்மர் காட்சி கொடுத்த தலம் தான். நரசிம்மர் மீது மாறாத பக்திக்கொண்ட விஜயராஜன் என்னும் மன்னன் இங்கு ஆலயம் எழுப்பியுள்ளான். மேலும் ஆலயத்தில் தன் குரு வாமதேவ மகரிஷி உதவியுடன் மூன்று நாட்கள் தொடர் வேள்வி நடத்த ஏற்பாடு செய்தான்.


யாகத்தில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு தேச அரசர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தான். இந்த நேரத்தில் பரிக்காலாசுரன் என்னும் அசுரன், வேள்வியை தடுத்து நிறுத்த அங்கு வந்தான். அசுரன் வருவதை அறிந்த குலகுரு, மன்னனை அருகிலுள்ள புதரில் ஒளிந்துக் கொள்ளுமாறு கூறினார். இருப்பினும் அசுரன் கோடரியால் மன்னனின் தலையை தாக்கினான். இதையடுத்து நரசிம்மர், ‘உக்கிர நரசிம்மராகதோன்றி, பரிக்காலாசுரனை அழித்து மன்னனுக்கு காட்சியளித்தார்.சென்னை--திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டைக்கு வடக்கில் இருந்து இந்த ஆலயத்தை அடையலாம்.


சோளிங்கர் : சப்த ரிஷிகளின் வேண்டுகோளின்படி, நரசிம்மர், யோக நிலையில் காட்சியளித்த தலம் இது. மூலவர் யோக நரசிம்மர், உற்சவர் பக்தோசிதன்,    தாயார் அமிர்தவல்லி.
விசுவாமித்திரர் இங்குள்ள நரசிம்மரை வழிபட்டு பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். கடிகாசலம் எனப்படும், 500 அடி உயரமும், 1305 படிக்கட்டுகளும் கொண்ட பெரிய மலையில் மூலவர் அருள்பாலிக்கிறார். உற்சவருக்கு மலையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி ஊருக்குள் தனிக்கோவில் உள்ளது. தமிழ்நாட்டிலேயே மூலவருக்கு தனியாக மலை மேலும், உற்சவருக்கு தனியாகவும் கோவில் இருப்பது இங்கு மட்டுமே. பெரிய மலைக்கு அருகில் 406 படிக்கற்களைக் கொண்ட சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். வேலூர் மாவட்டம் அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் இந்த மலைக்கோவில் இருக்கிறது.


சிங்கப்பெருமாள் கோவில் : ஜாபாலி என்னும் மகரிஷி, நரசிம்மரை வேண்டி தவம் செய்து, அவரது தரிசனம் பெற்ற தலம் இது. இவர் பாடலாத்ரி நரசிம்மர்என்று அழைக்கப்படுகிறார். (பாடலம் என்றால் சிவப்பு, அத்ரி என்றால் மலை) என்று பொருள். சிவந்த கண்களுடன் மலைமீது அமர்ந்திருப்பதால், இந்த பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறதுபொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில், அவர் இடதுகாலை மடித்து வைத்தும், வலதுகாலை தொங்கவிட்ட நிலையிலும் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் வலதுகாலை மடித்துவைத்தும், இடதுகாலை தொங்கவிட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக நெற்றிக் கண்ணுடன் காட்சியளிக்கிறார். காஞ்சீபுரம் மாவட்ட எல்லைக்குள், தாம்பரம்-செங்கல்பட்டு இடையில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.


நாமக்கல் :  திருமகள், தன் கணவரான மகாவிஷ்ணு எடுத்த நரசிம்மர் அவதாரத்தை காண வேண்டி, தவம் செய்து தரிசனம் பெற்ற தலம் இது. நரசிம்மரை காண வேண்டி இத்தலத்தில் திருமகள் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆஞ்சநேயர், கண்டகி நதியில் இருந்து சாளக்கிராம கல்லை எடுத்துக்கொண்டு வான்வழியே பறந்து சென்றார். இந்த தலத்தின் அருகே வந்தபோது, இங்குள்ள தீர்த்தத்தில் நீராட விரும்பினார் அனுமன்.


கையிலிருந்த சாளக்கிராமத்தைக் கீழே வைக்கமுடியாத நிலையில், என்ன செய்வதென யோசித்தவருக்கு தீர்த்தக் கரையில் தவம் செய்த திருமகள் தெரிந்தார். மகிழ்ச்சியுடன் அவரிடம் அந்த சாளக்கிராமத்தைத் தந்து விட்டு நீராடச் சென்றார். அதை கையில் வாங்கிய திருமகள் குறித்த நேரத்திற்குள் வராவிட்டால் கீழே வைத்துவிடுவேன் என்று கூறினார்.


அதுபோலவே அனுமன் வராதிருக்க திருமகள் அக்கல்லை கீழே வைத்தார். அது பெரியதாக விசுவரூபம் பெற்று பெருமலையானது. அதிலிருந்து நரசிம்மர் தோன்றி திருமகளுக்கும் ஆஞ்சநேயருக்கும் காட்சியளித்தார். சாளக்கிராமத்தைக் கொண்டுவந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில், கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன் நரசிம்மர் ஆலயத்துக்கு எதிரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். நாமக்கல்லில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.


அந்திலி : நரசிம்மர், தன் வாகனமான கருடனுக்கு காட்சி தந்த திருத்தலம் இது. பிரகலாதனை காப்பாற்ற வேண்டிய அவசரத்தில் தன்னிடம் சொல்லாமல் பகவான் புறப்பட்டுச் சென்றதை அறிந்த கருடன், மிகுந்த வேதனை அடைந்தார். பகவானைத் தேடி பூலோகம் வந்து நிம்மதியின்றி தவித்தார்.


எங்குச் சென்றாலும் தன்மீது ஏறிச்செல்லும் பகவான், தன்னை மறந்துவிட்டுப் போனதை எண்ணி வருந்தியவர் இந்த தலம் இருக்கும் இடத்திற்கு வந்து தவம் இருந்தார். இதனால் அவர் உடல் இளைத்தது. அவரது உடலிலிருந்து வெளிப்பட்ட வெப்பம், கயிலாயம் வரை சென்று தாக்கியது. இதையடுத்து தேவர்கள், நாராயணரிடம் சென்று கருடனை காக்க வேண்டி பிரார்த்தித்தனர். கருடனிடம் முன்பாக சென்றார் நாராயணர். அப்போது தனக்கும் நரசிம்மராக காட்சியளிக்க வேண்டும் என்று கருடன் வேண்ட, அவ்வாறே காட்சியளித்தார். திருக்கோவிலூரில் இருந்து முகையூர் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் அரகண்ட நல்லூரை அடுத் திருக்கிறது அந்திலி திருத்தலம்.  இனி சிந்தலவாடியில் தரிசனம் எவ்வாறு கிட்டியது என்று காணலாமா அன்பர்களே.


மாலை 4 மணிக்கு அய்யர் மலை அடிவாரத்திலிருந்து கிளம்பினோம். 4:30  மணி அளவில் சிந்தலவாடி வந்தடைந்தோம். முக்கிய சாலைக்கு மிக அருகிலேயே கோவில் அமைந்துள்ளது. ஆலய முகப்பில் இரு புறமும் அனுமன் வணங்கும் யோக நரசிம்மர், இராம கிருஷ்ணர்கள், மத்வரும், வியாசராஜரும் வணங்கும் காளிய நர்த்தனர் ஆகிய   சுதை சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றன. மூலவர் விமானம் புதுப் பொலிவுடன் திராவிட அமைப்பில் அமைந்துள்ளது.


ஆலயம் திறந்திருக்குமா? இல்லையா? என்று யோசித்துக்கொண்டே வந்தோம். நல்ல வேளையாக கோவில் வெளிக்கதவு  திறந்தே இருந்தது ஆனால் உள் கதவு சார்த்தியிருந்தது. உள்ளே செல்லலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டு தயக்கத்துடன் நின்றிருந்த போது ஒரு அன்பர் உள்ளிருந்து வந்து சன்னதி திறந்திருக்கின்றது செல்லுங்கள் என்றார்.    உள்ளே நுழைந்தவுடன் ஒரு நீண்ட மண்டபம். அதன் கூரையில் அற்புதமான ஓவியங்கள். அதன் நடுநாயமாக மத்வ சம்பிரதாயத்தை துவக்கிய ஹரிவாயு குருவின் அவதாரங்களான அனுமன், பீமன் மற்றும் மத்வரும் ஒன்றாக இருக்கும் ஓவியம், மற்றும் தசாவதாரங்கள் மற்றும் கிருஷ்ண லீலை ஓவியங்கள்,  சமீபத்தில்தான் சம்ப்ரோக்ஷணம் ஆகி இருக்கின்றது. விமானம், முன் முகப்பு வளைவு ஓவியங்கள் எல்லாம் புது வர்ணத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன.


அம்மண்டபத்திலிருந்து பிரகாரத்தை சுற்றிக் கொண்டு யோக நரசிம்மர் சன்னதியை அடைந்தோம். கருவறையில் யோக நரசிம்மரும், காளிங்க நர்த்தன கோலத்தில் கிருஷ்ணரும் (கோபால கிருஷ்ண தேவரு) அருகருகாக சேவை சாதிக்கின்றனர். உற்சவ மூர்த்தியையும், சாளக்கிராமங்களையும் கருவறையில் சேவிக்கலாம். ஆச்சார்யார் எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தார். ஆரத்தி காண்பித்து பிரசாதமும் அளித்தார்.

ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா - என்று போற்றி வணங்கினோம்.  நரசிம்மர் சன்னதிக்கு இடப்புறத்தில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் சன்னதி. பிராண தேவரையும்  வணங்கினோம். கர்ப்பகுடியின்  முகப்பில் அருமையான யோக நரசிம்மர் சுதை சிற்பம் அலங்கரிக்கின்றது. ஆச்சார்யர் ஒரு அன்பர் கல்யாண பத்திரிக்கை பெருமாளுக்கு வைக்க வந்ததால்தான் சன்னதி திறந்திருக்கின்றது என்று கூறிய போதுதான் நாளை என்பது நரசிம்மரிடத்தில் இல்லை என்பது புரிந்தது. அடியோங்களுக்காக எம்பெருமான் காத்திருந்த கருணையை உணர்ந்தோம். இத்தலம் ஒரு சிறந்த பிரார்த்தனை தலம் தங்கள் கோரிக்கைகளை நரசிம்மரிடம் வையுங்கள் அவர் நிச்சயம்
காக்க வைக்காமல் தரிசனம் அளித்த நரசிம்மரை

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
ப்ராதா ந்ருஸிம்ஹ: சகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ வாபி ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ: தேவாத் அபரம் கிஞ்சித்
தஸ்மாத் ந்ருஸிம்ஹ: சரணம் ப்ரபத்யே  என்று சரணாகதி அடைந்தோம்.

 வாயு தேவரு ( அனுமன், பீமன், மத்வர்)


பஞ்சாம்ருத அபிஷேகம் மற்றும் தீர்த்த பிரசாதம் ஆகிய சேவைகள் அன்பர்கள் உபயமாக  செய்யப்படுகின்றது. முன் பதிவு செய்து கொண்டு வர வேண்டும்.  வெளியூரிலிருந்து வருபவர்கள் தங்கிக்கொள்ள ஏதுவாக அருகில் ஒரு சிறு மண்டபம் உள்ளது, ஆலயத்திலும் இரண்டு அறைகள் உள்ளன. அருமையான நரசிம்மரின் தரிசனத்திற்குப்பின் அடுத்த தலத்திற்கு புறப்பட்டு சென்றோம் அது என்ன தலம் என்பதை இதோ சென்று சேர்ந்து விடுவோம் உடன்  வாருங்கள் அன்பர்களே.