Sunday, August 15, 2010

திருஆடிப்பூர தரிசனம்

அனைத்து புவனங்களையும் பூக்கும் அன்னை மஹா திரிபுரசுந்தரி, ஜகத்ஜனனி, ஜகன்மாதாவிற்கு , மானிடர்களாகிய நாம் வளைகாப்பு நடத்தும் நாள்தான் திருஆடிப்பூரம். அன்றைய தினம் அன்னை அளித்த சில அருட்காட்சிகள் இப்பதிவில் கண்டு அருள் பெறுங்கள்.

திருமயிலை வெள்ளீஸ்வரம்
காமாக்ஷியம்மன்


கிளி வாகனத்தில் காமாக்ஷி
அம்பாள் அருட்காட்சி


அம்மனின் பின்னழகு


திருமயிலை கபாலீச்சுரம்
கற்பகவல்லி


கந்தருவி வாகனத்தில்
கற்பகாம்பாள் அருட்காட்சி




மேற்கு சைதாப்பேட்டை காரணீஸ்வரம்
சிவசொர்ணாம்பிகை ரிஷப வாகனக் காட்சி



திருஆடிப்பூரத்தன்று அம்மனை மனதார வழிபட அவள் நமது குறைகளையெல்லாம் போக்கி துன்பங்களை நீக்கி சுகானந்த பெருவாழ்வு வழங்குவாள், அவள் தாள் பணிவோம்.

விரைமலர் குழல்வல்லி மறைமலர்பதவல்லி
விமலி கற்பகவல்லியே - நின் பாதம் சரணம் அம்மா.

Wednesday, August 11, 2010

திருமயிலை கபாலீச்சுரம் - 7

கபாலீஸ்வரர் உற்சவர்


ஐயன் சன்னதிக்கு செல்வதற்கு முன்னால் பலி பீடத்தில் நமது ஆணவம் , அகங்காரம் முதலிய மலங்களை பலியிட்டு தூய மனதுடன் பக்தியுடன் செல்லவேண்டும் என்பதை உணர்த்தவே பலிபீடம் கோவில்களில் கொடிமரத்துடன் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளன. தனி சன்னதியில் நந்தி தேவரை வணங்கி பின் துவார பாலகர்களிடம் அனுமதி வாங்கி ஐயன் சன்னதியில் நுழைகின்றோம், படிகளில் ஏறும் பொழுதே ஐயனின், அந்த வென்று வரு சூரனை கொன்று பகவான் சிறை விடுத்த வீரனை, மயூரனை, சிங்கார வேலனை வியந்தளித்த அருள் தெய்வமாம் கற்பக நாதனின், கபாலீஸ்வரரின் முழு தரிசனம் நன்றாக கிடைக்கின்றது, அந்த் சர்வேஸ்வரனை, நீலகண்டனை, அம்மை கற்பகவல்லி நேசனை, காமனை கண்ணால் எரித்த மஹேஸ்வரனை, பிரம்மன் சிரம் கொய்து கபாலமேந்திய கபாலியைக் கண்ணார கண்டு வணங்குகின்றோம், மனது தானாகவே சிவ புராணம் சொல்லத் தொடங்கிவிட்டது. ஐயன் லிங்க ரூபத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். ஆவுடை வட்ட வடிவம், தாரை வலப்பக்கம், மேற்கு நோக்கிய சத்யோஜாத மூர்த்தியாய் எழுந்தருளி இருக்கிறார் ஐயன் இத்தலத்தில் எனவே அவரை

ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி ஸத்யோஜாதாய வை நமோ நம: பவேபவே நாதிபவே பவஸ்வ மாம் பவோத் பவாய நம:


என்னும் பஸ்சிம வக்த்ர ப்ரதி பாதக மந்திரத்தால் துதி செய்து வணங்குகின்றோம்.




ஐயனை மனதார வணங்கி சன்னதியை வலம் வரும் போது கிழக்கு நோக்கி வல்லி தேவசேனா சமேத சிங்கார வேலவர் உற்சவர் சன்னதி , தெற்கு நோக்கி சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சன்னதி, பன்னிருதிருமுறைக் கோவில், மாணிக்க வாசகர், வியாக்ரபாதர். பதஞ்சலியுடன் அருட்காட்சி தருகின்றார் ஆனந்த நடராஜ மூர்த்தி. அதற்கடுத்து மற்ற உற்சவர்கள் கிழக்கு நோக்கி சந்திரசேகரர் அம்பாளுடன், ஆதி சோமாஸ்கந்தர், தேவியர் இருவருடன் மயில் மேல் அமர்ந்த ஷண்முகர், பிக்ஷாடனர் அம்மையுடன், மான் மற்றும் குண்டோதரர்கள் (பூத கணங்கள்) அற்புதம், அடுத்து அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய ஆதி நடராஜர், பின் அறுபத்து மூவர்களின் செப்புத்திருமேனிகள், அஸ்திர தேவர், அருணகிரிநாதர் முதலியோரின் தெய்வ மூர்த்தங்கள் ருத்ராக்ஷ மண்டபத்தில் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.





ஐயன் சன்னதியின் சுவற்றிலும் அருமையான தூண் சிற்பங்கள், வடக்கு கோஷ்டத்தில் ஸ்ரீ துர்க்கை அம்மனும் சிறந்த வரப்பிரசாதி, இராகு காலங்களில் அம்மனின் சன்னதியில் எலுமிச்சை விளக்குப் போட்டால் கேட்டது நடைபெறுகின்றது. ஏழு வாரம் தொடர்ந்து துர்க்கா பூஜை செய்து வந்தால் வேண்டிய குறைகளையெல்லாம் அம்பிகை தீர்த்து வைக்கிறாள் அடுத்த கோஷ்டத்தில் பிரம்மா. கோமுகி மற்றும் சண்டிகேஸ்வரர் சன்னதி வடக்குப் பக்கம் அமைந்துள்ளது. உற்சவர்கள் சன்னதி முடிந்தவுடன், கிழக்கு நோக்கி துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் சன்னதி, நாகங்கள். பைரவர், வீரபத்திரர் சைவ சமயக் குரவர்கள் நால்வர் திருமூர்த்தங்கள், மேற்கு நோக்கி பொள்ளாப் பிள்ளையார், அறுபத்து மூவரின் மூலவர்கள், திருத்தொண்டர் தொகை பாடிய சுந்தர மூர்த்தி நாயனார் , அவர் பாடிய வரிசைப்படி தில்லை வாழ் அந்தணர், திருநீலகண்டத்து குயவனார் தொடங்கி, சடையனார் இசை ஞானியார் ஈறாக அமைந்துள்ளனர் அறுபத்து மூவர் திருமூர்த்தங்கள். இவர்களுடன் சூரியன். பின்புற கோஷ்டத்தில் லிங்கோத்பவர். வடக்கு நோக்கியும் அறுபத்து மூவர்கள் தொடர்கின்றனர், சந்தான குரவர்கள் உமாபதி சிவம், மறை ஞான சிவம், அருணந்தி சிவம், மெய்கண்ட சிவம் ஆகியோர்களின் மூர்த்தங்களும் உள்ளன. தெற்கு கோஷ்டத்தில் ஆலமர் கடவுள் மற்றும் செல்வ கணபதி.

கிழக்கு நோக்கி தனி சன்னதியில் கற்பகாம்பாள் மற்றும் கபாலீஸ்வரர் (சோமாஸ்கந்தர்) உற்சவ மூர்த்திகளின் சன்னதி அன்னையின் பொற்பாதங்களையும் அங்குச பாசத்தையும் அபய வரத ஹஸ்தங்களையும் அற்புத தரிசிக்கலாம். நடுவில் பிரதோஷ நாயகர். ஐயன் கபாலீஸ்வரர் அழகிய சிம்மாதானத்தில் அழகிய பல வர்ண மலர் அலங்காரத்துடன் அற்புதமாக கந்தனுடனும் உமை அம்மையுடன் எழிலாக அருட்காட்சி தருகின்றார். பிரம்மோற்சவ காலங்களில் செய்யப்படும் அலங்காரம் போல இல்லாமல் எளிதாக இருந்தாலும் இந்த அலங்காரமும் அழகே. இப்பொழுது தினமும் இந்த பல வர்ண மலர்களால் அலங்காரம் செய்யப்படுகின்றது ஐயனுக்கு. பின்னும் கபாலீஸ்வரர் சன்னதியின் முன் வந்து நின்று

மயிலையிலே கோயில் கொண்டு அருள் பாலிக்கும் கயிலை நாதனை

சீர்கொண்ட கங்கையும் திங்களும் கொன்றையணி திகழ் கங்கையழகும் சிலைமதனை வென்ற வழிவலரு மிருதுனுதலினிற் திரிபுண்டரத்தினவழகும்

பார்கொண்டதிரு வயற்றரசி கற்பகவல்லி பாதத்திருக்குமழகும் பாதவிரு போதமகும் ஏழையேன் கண்டு முற்பழ வினையொழிப்பதென்றோ

காண்கொண்ட விடமுண்ட கண்ட நீலா இரு கரத்தொரு கபால சூலா கனமூலா
கமநாலா மறைமேலாகிய சீலா களியுடனாடுகாலா

ஆர்கொண்ட கொள்கில்லுமுரிய கோலா சச்சிதானந்தமான லீலா அருமையடியார் நேச திருமயிலையூர் வாச அருள்புரி கபாலீசனே!


என்று மனமுருகப் கபாலீஸ்வரர் அஷ்டகத்தின் ஒரு பாடலை மனமுருகிப் பாடி கற்பூர ஆரத்தியுடன் தரிசித்து அவர் அருள் பெற்று இனி இத்திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களின் பெருமையையும் சிறப்பையும் காணச்செல்வோம் வாருங்கள்

Monday, June 21, 2010

ஆனந்த நடராஜரின் ஆனி திருமஞ்சனம்

அம்பலத்தாடும் என் ஐயனுக்கு வருடத்தில் ஆறு திருமுழுக்குக்கள் அவற்றுள் இரண்டு பத்து நாள் பிரம்மோற்சவமாக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன அவையாவன ஆனித்திருமஞ்சனமும், ஆருத்ரா தரிசனமும் ஆகும். 2010 ஆனி உத்திரத்தன்று நடைபெற்ற ஆனந்த தாண்டவரின் ஆனி உத்திர தரிசனத்தின் சிலகாட்சிகள்.

முந்தைய ஆனி உத்திர பதிவுகளைக் காண சொடுக்குங்கள் இங்கே

http://natarajar.blogspot.com/2008/07/blog-post_11.html








சென்னை மேற்கு சைதாப்பேட்டை
காரணீஸ்வரர் ஆலய தரிசனம்

விநாயகப் பெருமான்


ஆனந்த கூத்தனின் அற்புத தரிசனம்

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட
மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரமனாட


கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சரமுகத்தனாட
குண்டலமிரண்டாட
தண்டைபுலி யுடையாட குழந்தை முருகேசனாட


ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு முனியட்ட பாலகருமாட
நரை தும்பை யறுகாட நந்திவாகனமாட நாட்டியப்பெண்களாட

வினையோட உனைப்பாட யெனைநாடி யிதுவேளை விருதோடு ஆடிவருவாய்

யீசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!


சிவகாமசுந்தரி அம்பாள்

சூரிய பிரபையில் ஆனி உத்திர தரிசனம்


கோபுரத்துடன் ஐயனின் தரிசனம்



அப்பாநான் வேண்டுதல்கேட்
டருள்புரிதல் வேண்டும்

ஆருயிர்கட் கெல்லாம்நான்
அன்புசெயல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும்
எங்கணும்நான் சென்றே

எந்தைநின தருட்புகழை
இயம்பியிடல் வேண்டும்

செப்பாத மேல்நிலைமேல்
சுத்தசிவ மார்க்கம்

திகழ்ந்தோங்க அருட்சோதி
செலுத்தியிடல் வேண்டும்

தப்பேது நான் செயினும்
நீபொறுத்தல் வேண்டும்

தலைவநினைப்பிரியாத
நிலைமையும் வேண்டுவனே!

பல்லக்கில் கண்ணாடியில்
சிவானந்தவல்லி தரிசனம்


*******************

சென்னை மேற்கு சைதாப்பேட்டை செங்குந்த கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம்


இந்திரியவயம்மயங்கி் இறப்பதற்கே காரணம்ஆய்

அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேற்குக்

சிந்தைதனை தெளிவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட

அந்தல் இலா ஆனந்தம் அணிகொள் தில்லைக் கண்டேனே!




ஆர்த்தபிறவித் துயர்கெடநாம் ஆர்த்து ஆடும் தீர்த்தன்;
நல்தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும் கூத்தன்;

இவ்வானுலகும் குவலயமும் எல்லோமும்காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தைகள் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பு அரவம் செய்ய அணிகுழல் மேல் வண்டு ஆர்ப்பப்

பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொன்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோர் எம்பாவாய்!


சிவகாமவல்லி தரிசனம்



அம்பலவாணரின் பின்னழகு

"ஓடும்கவந்தியுமே உறவு" என்றிட்டு உள்கசிந்து;

"தேடும்பொருளும் சிவன் கழலே" எனத்தெளிந்து ;

கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்து: அடியேன்

ஆடும் குலாத்தில்லை ஆண்டானை
க் கொண்டு அன்றே.



Wednesday, April 21, 2010

திருமயிலை கபாலீச்சுரம் - 6


ஐயன் சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது அம்மன் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது இருவருக்கும் சேர்ந்தார்ப் போல ஒரே மஹா மண்டபம். அந்த மஹா மண்டபத்தின் தூண்களிலே அனைத்து கடவுளர்களும் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் பூலோக கயிலாயம். இம்மண்டபத்தில் ஒரு தூணில் எழுந்தருளியுள்ள ஹனுமன் சிறந்த வரப்பிரசாதி. இம்மண்டபத்தில்தான் நந்தி தேவருக்கு கோபுரத்துடன் கூடிய சன்னதி உள்ளது.



மண்டபத்தூண்களில் உள்ள சில சிற்பங்கள்


இவருக்கு பிரதோஷம் தோறும் சிறப்பாக அபிஷேகமும் பூஜையும் நடைபெறுகின்றது. 108 சங்காபிஷேக சங்குகள் பூஜை செய்யப்படுவது நந்தி தேவரின் திருமுன் தான். ஆனி உத்திர பிரதோஷ வேளையிலும், ஆருத்ரா தரிசன அருணோதய காலத்திலும், அநாதிமல மூலனாகிய சிவ பரம்பொருள், அநாதிமல பக்தனாயிருக்கும் ஆன்மாக்கள பந்தம் வீடு என்னும் இருவகை நிலையினையடைந்த அவ்வனாதிமல பந்தத்தினின்றும் நீங்கி, உணர்பொருளும், உணர்வானும், உணர்வானும் உணர்வுமெனும் பகுப்பொழியாது, ஒளிந்த பானுப்புணர விழியும், நீர் நிழலும், தீயிருப்பும், புனல் உருவும், பருதி மீனும், துனைய இரண்டறு கலப்பில் (சிவமாகிய) தன்னுடங்கிய பேரின்பத்தைத் துய்த்து இடையறாமல் கும்பிடும் கொள்கையை பெறுதற் பொருட்டு தோற்றம், நிலை இறுதி, மறைப்பு, இருள் என்னும் பஞ்சகிருத்தியத் தாண்டவம் புரியும் தாண்டவேசனாகிய ஸ்ரீ நடராஜ பெருமானுக்கும் சிவகாம சுந்தரிக்கும் அபிஷேகம் நடப்பதும் இம்மண்டபத்தில்தான், பங்குனிப் பெருவிழா தொடக்கமாக சோமாஸ்கந்தராம் கபாலீஸ்வரருக்கு அபிஷேகமும் இம்மண்டபத்தில்தான். வெள்ளி தோறும், தங்கத்தேர் புறப்பாட்டின் போதும் அம்மன் கொலு வீற்றிருப்பதும் இம்மண்டபத்தில் தான். அம்மைக்கு முக்கியத்துவம் தருவது போல் இம்மண்டபத்தில் தெற்கு வடக்காக ஒன்பது தூண்கள். கிழக்கு வடக்காக நான்கு தூண்கள் என மொத்தம் 36 தூண்கள்.


கருணை தெய்வம் கற்பகவல்லி


கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாய் அம்மா - தேவி

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்

சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோவில் கொண்ட (கற்பகவல்லி)

என்ற படி அம்மண்டபத்தின் தூண்களிளும் தி்ருக்கோவிலெங்கும் பல அழகிய சிற்பங்கள் நிறைந்துள்ளன.

கபாலீஸ்வரரின் சன்னதிக்கு வடப்பக்கம் அம்மையின் சன்னதி, கேட்டவருக்கு கேட்ட வரம் அருளும் கற்பகமாய், பூஜையின் சிறப்பை உலகுக்கு தானே மயிலாய் வந்து உணர்த்தியவளாம், வாயிலார் நாயனார் சிவ பெருமான் திருவடி நிழற்புக, வாயிலாய் நின்றருள் செய்த அம்மை கற்பகவல்லி, பூரணி, மனோன்மணி, தயாபரி, பராபரி புராதனி தராதரம் எல்லாம் பொற்புடன் அளித்த சிவசக்தி இமவான் உதவு புத்ரி, மகமாயி என்று பல் வேறு நாமங்களால் தாச்சி அருணாசல முதலியாரால் பதிகம் பெற்ற அம்மை கருணை முகத்துடன், நான்கு கரங்களுடன் மேற் கரங்களில் அங்குச பாசம் தாங்கி வல கீழ்க்கரத்தால் அபயம் அளித்து இட கீழ்க்கரத்தால் என் பாதமே உங்களுக்கு சரணம் என்று வரத முத்திரையுடன் எழிலாய் நின்ற கோலத்தில் அருட் காட்சி தருகின்றாள். அம்மையைப் தரிசிக்கும் போதெல்லாம் மனதில் பெரிய நிம்மதி, நமது துயரங்களை எல்லாம் அவளது பாதத்தில் இறக்கி வைப்பதே ஒரு பெரிய நிம்மதி. அம்மையின் அருளை உணர கணம் அவள் சன்னதியில் நின்றால் போதும் அம்மைக்கு எவ்வளவு சேலைகள், மாலைகள் வந்து குவிகின்றன என்பதைப் பார்த்தால் போதும் வேறு எதுவும் சொல்ல வேண்டியது இல்லை. வீயாத முக்கண் இடத்தினில் வளரும் விரைமலர் குழல்வல்லி மறைமலர்ப் பதவல்லி, கற்பகவல்லியை வழிபடுவதால் உடல் சம்பந்தமான எந்த நோயானாலும் விரைவில் குணமாகிறது. கல்யாண வரம், குழந்தை வரம், ஐஸ்வர்யம் கிடைக்கும். நாம் கேட்பதை மட்டுமல்ல நமக்கு வேண்டுவது அனைத்தையும் தன் கடைக்கண் பார்வையினால் வழங்குபவள்தான் அன்னை. ஒவ்வொரு வெள்ளியும் சிறப்பானதுதான் மேருவை வளைத்தவன் இடத்தில் வளர் அமுதமாம் அம்மைக்கு,


அதிலும் ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் அந்த அஞ்சுகக் கிளி மொழியாள் ஆனந்த வல்லி, சிங்காரவல்லி, கற்பகவல்லி 1008 தங்க காசுமாலை வைரக்கிளி தடாங்கம் அணிந்து எழிற் பொங்க காட்சி தரும் அம்பிகையை ஒரு தடவை தரிசனம் செய்தவர்கள் மறுபடியும் மறுபடியும் அம்மையை தரிசிக்க வருவார்கள் என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை. அம்மனுக்கு புஷ்பப்பாவாடை சார்த்துவது ஒரு சிறந்த நேர்த்திக்கடன். அன்னையை வேண்டிக் கொண்டால் அந்த வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது கண்கூடு. ஒவ்வொரு முறை செல்லும் போதும் அம்மைக்கு ஒரு வித அலங்காரம் கண்டு களிக்கலாம். அம்மையின் சன்னதியில் வலப்புற மூலையில் பள்ளியறை அமைந்துள்ளது. தினமும் காலையில் திருவனந்தல் பூஜை நடைபெறுகின்றது. ஒரு காலத்தில் அம்மையின் சன்னதியின் உட்பக்கம் முழுவதும் அம்மனின் பல்வேறு ரூபங்களைக் காட்டும் சித்திரங்கள் இருந்தன. ஆனால் தற்போது கற்சுவர்கள் சுத்தம் செய்யப்பட்டபின் அவைகளை எடுத்து விட்டனர். ஆயினும் அம்மையின் பின் பக்கம் அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம், கற்பகாம்பாள் பதிகம் ஆகியவை கல்வெட்டுக்களில் பதியப்பற்றுள்ளன. அம்மன் சன்னதியின் சுவர்களில் அழகான தூண்கள் செதுக்கப்பட்டுள்ளன. அபிராமி பட்டரால் இயற்றப்பட்ட அபிராமி அந்தாதியை அம்மையின் திருக்கோவிலிலே படித்து மனப்பாடம் செய்தவர்கள் பலர் அதில் அடியேனும் ஒருவன் கல்லூரியில் படிக்கும் போது வெள்ளிக்கிழமைகளில் அம்மனை தரிசிக்க சென்று அபிராமி அந்தாதியை மனப்பாடம் செய்தேன். திருக்கோவில் முழுவதும் பல்வேறு பதிகங்கள், ஸ்தோத்திரங்கள் கல்வெட்டுகளாக பதிக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்.அம்மையின் சன்னதியின் முன் நின்று


.... நீ ஆதரித்து என்னை பாதுகாத்தருள் செய்து

நெடுநாட்படும் பாடெல்லாம்

நீக்கி அழியாத சுகமெய்தச் செய்தாலன்றி

நீச்சு நிலை இல்லையம்மா ( அம்மா கற்பகவல்லியே)

வீயாத முக்கண்ணிடத்தினில் வளர் அமுதமே

விரிபொழில் திருமயிலை வாழ்

விரைமலர்க்குழல் வல்லி மரைமலர்ப் பதவல்லி

விமலி கற்பகவல்லியே! என்று மனமுருக பாடி நெஞ்சுருகி வேண்டி கும்பிடும் போது அர்ச்ச்கர் கற்பூர ஆரத்தி காட்டுகின்றார், அம்மனுடைய கருணை ததும்பும் அந்த திருக்கண்கள் நமது சகல துன்பங்களையும் நீக்குகின்றன. அம்மனின் திருப்பாதத்திற்கும் கற்பூர ஆரத்தி காட்டுகின்றார் அர்ச்சகர் பாடகம் தண்டை கொலுசு சிலம்பு என்று சர்வாபரண பூஷிதையாக நிற்கும் இராஜாராஜேஸ்வரி, லலிதாம்பாள். மஹா திரிபுரசுந்தரியின் பொற்பாதங்களில் . இக்கோவிலில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யும் போது குங்குமத்தை அம்மனின் பாதத்தில் தான் செய்கின்றனர், நமக்கு வழங்கப்படும் குங்குமமும் அம்மன் திருப்பாதத்தில் பட்ட குங்குமம் தான்.



நாம் வேண்டுவதை எல்லாம் அன்னை நிறைவேற்றி வைக்கின்றாள் என்பதை அன்னை பல்வேறு முறை உணர்த்தியுள்ளாள். அடியேனுக்கு அம்மையும் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலை செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது, எனவே அம்மையப்பரை தரிசிக்க செல்லும் போது ஒரு ருத்ராக்ஷம் அணிந்து செல்வோம் என்று ஒரு ருத்ராக்ஷம் வாங்கிக் கொண்டு முதன் முதலில் சென்றது அம்மனின் சன்னதிக்குத்தான். அர்ச்சகரிடம் கொடுத்து அம்மன் பாதத்தில் வைத்து எடுத்துத்தருமாறு கேட்டேன். அதை அம்மனின் பாதத்தில் வைத்த அவர் கற்பூர தீபம் கீட்டி விட்டு வெளியே வந்து இன்னும் சிறிது நேரம் அம்மனின் பாதத்திலே இருக்கட்டும் அம்மன் சன்னதியை சுற்றி விட்டு வா என்று கூறியது அந்த அம்மையே என்னை வாழ்த்தியது போல இருந்தது. அம்மன் உணர்த்தியது போல அருமையான தரிசனம் கிடைத்தது. அது போலவே அந்த தெய்வீக அனுபவத்தை அவனருளால் அவன் தாள் வணங்கி எழுதவும் பணித்தான் அந்த தியாகராஜர். ஆனால் அதை பதிப்பிக்க யார் முன் வருவார்கள் என்று தெரியவில்லை, வேறு கதி ஏது அந்த அம்மனிடமே சென்றேன் எழுதிய நூலை எடுத்துக்கொண்டு, அம்மனின் பாதத்தில் வைத்து எடுத்து கொடுத்த போது அம்மனின் மலரும் சேர்த்து கொடுத்தார் அர்ச்சகர், நான் அது வரை கவனிக்காத நான் செல்லலாம் என்று நினைக்காத பதிப்பகத்தாரை கண்ணில் பட வைத்தார் அன்னை, மனதில் சந்தேகத்துடன் அவர்களை அணுகிக் கேட்டேன் அவர்களும் புத்தகத்தை பதிப்பிக்க ஒத்துக்கொண்டனர் அனைத்தும் அம்மையின் திருவருளே.


கற்பகாம்பாள் சன்னதிக்கு தெற்குப்புற தூணில் இராமர், இலட்சுமணன், சீதை அனுமன் ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. அம்மன் உலா வருவதற்காக ஒரு தங்கத்தேர் உள்ளது இவ்வாலயத்தில் உற்சவங்கள் இல்லாத நாட்களில் மாலையில் இந்த 15 அடி தங்க ரதத்தில் உட்பிரகார வலம் வந்து நம்மை எல்லாம் இரட்சிக்கிறாள் மதவேளை முன் வெல்லாமல் வென்றவன் இடத்தில் வளர் அமுதமாம் கற்பகவல்லி அம்மையின் சன்னதியிலிருந்து பிரிய மனமில்லாமல் பிரிந்து இனி ஐயன் சன்னதிக்கு செல்வோமா?.

Saturday, March 27, 2010

திருமயிலை கபாலீச்சுரம் 5


சிவநேச செட்டியார்

என்பாய் இருந்து பெண்ணான அங்கம் பூம்பாவை









அறுபத்து மூன்று நாயன்மார்கள்


ஐயனை வெள்ளி விமானத்தில் தரிசிக்கும் அறுபத்து மூவர்


டற்கரையோரம் அமைந்த தலத்தின் நாயகர் மக்கள் கடலின் நடுவே


கபாலீஸ்வரர்
( நடுவில் ஸ்கந்தரை தரிசனம் செய்தீர்களா?)


கற்பகவல்லி அம்பாள்



அம்பாள் பின்னழகு


சிங்கார வேலவர்

சண்டிகேஸ்வரர்



பெரியநாயகி அம்பாள் சமேத வாலீஸ்வரர்

அறுபத்து மூவர் திருவிழா

திருமயிலையில் நடைபெற்று வரும் பங்குனிப்பெருவிழாவின் மகுடமான அறுபத்து மூவர் திருவிழா எட்டாம் நாள் திருவிழாவாகிய இன்றைய மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள்.குறிப்பாக Logan ஐயா அவர்களின் நேயர் விருப்பமாக இப்பதிவு படங்களுடன் மட்டுமே இப்போது பதிவிடப்படுகின்றது.


Wednesday, March 24, 2010

திருமயிலை கபாலீச்சுரம் -4

கயிலையே மயிலை, மயிலையே கயிலை

இனி இவ்வளவு சிறப்புகள் இத்திருக்கோவிலை வலம் வருவோமா? திருமயிலையின் நடுவே பரந்து விரிந்த மாடவீதிகளுடனும், ஐயன் நோக்கும் மேற்குப்பக்கத்தில் திருக்குளத்துடனும் மூன்று பிரகாரங்களுடன் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கிழக்கு இராஜ கோபுரம் நெடிதுயர்ந்து நம்மை வரவேற்கின்றது இந்த ஏழு நிலைக் கோபுரம். பஞ்ச வர்ணங்களால் வர்ணம் தீட்டப்பட்டு, புராண நிகழ்ச்சிகளை விளக்கும் அழகிய சுதைச் சிற்பங்கள் நிறைந்த 120 அடி உயர கோபுரம். கோபுரத்தில் சிவ சிவ என்னும் நாமமும், அன்னை சிவபூஜை செய்யும் கோலம் நியான் விளக்கில் இரவில் ஒளிரும் வண்ணம் அமைந்துள்ளது.



கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர் அந்த கோபுரத்தை தரிசித்து உள்ளே நுழைந்தால் நர்த்தன வினாயகர் சன்னதி, ஐயனைப் போல கூத்தாடும் பிள்ளையாரைக் கண்டவுடன் ஒரு ஆனந்தம், தானாகவே கைகள் தலையில் குட்டிக்கொள்கின்றன, தோப்புக்கரணம் போடுகின்றோம். வினாயகர் சன்னதிக்கு வலப்புறம் உண்ணாமுலை அம்மை சமேத அண்ணாமலையார் சன்னதி ஐயன் கிழக்கு நோக்கிய முக மண்டலம் அம்மை தெற்கு நோக்கிய முக மண்டலம். பௌர்ணமியன்று இவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றது. நாகாபரணத்துடன் சிறப்பு அலங்காரத்துடன் பௌர்ணமியன்றும் சிறப்பாகவும், மற்ற நாட்களில் தினந்தோறும் அன்பர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று தேவாரம், திருவாசகம் பாடியும் வழிபடும் போது நாமும் இவரை வழிபடுவது ஒரு ஆனந்தம்.

மூஷிக வாகனத்தில் நர்த்தன விநாயகர்

எதிரே பசு மடம். அண்ணாமலையார் சன்னதியை அடுத்து சிங்கார வேலவர் சன்னதி. சக்தி வேல் பெற்ற சண்முகரும் ஐயனைப் போலவே மேற்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு வள்ளி தேவசேனா சகிதம் காட்சி தருகின்றார் ஆறுமுகங்களுடன் மயிலின் பன்னிரண்டு கரங்களுடன் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டுஅமர்ந்த கோலத்தில் தேவியர்கள் இருவரும் யானை வாகனத்தில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் அந்த அழகைக் காண கண் கோடி வேண்டும். கந்தக் கடம்பனை, கார் மயில் வாகனனை கார்த்திகை மைந்தனை கண்டு கண்கள் குளமாகின்றன. இம்முருகன் மீது அருணகிரிநாதர்

அறமி லாவதி பாதக வஞ்சத் தொழிலாலே
அடிய னேன்மெலி வாகிம நஞ்சற் திளையாதே
திறல்கு லாவிய சேவடி வந்தித் த்தருள் கூடத்
தினமு மேமிக வாழ்வுறு மின்பைத் தருவாயே
விறல்நி சாரர் சேணைகளஞ்சப் பொரும் வேலா
விமல மாதபி ராமித ருஞ்செயப் புதல்வோனே
மறவல் வாணுதல் வேடைக் கொளும் பொற் புயவீரா
மயிலை மாநகர் மேவியக் கந்தப் பெருமாளே

என்று திருப்புகழ் பாடியுள்ளார். சிங்கார வேலவர் சன்னதி முன்னர் 16 தூண்கள் கொண்ட முன் பண்டபம் உள்ளது மண்டபத்தின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகன் சுதைச் சிற்பம் அற்புதம் தேவியர் இருவரும் நின்ற கோலம் அற்புதம், மேலும் வீரபாகுவும், சவுந்திர சண்டிகேஸ்வரரும் சிங்கார வேலரை வணங்கிய நிலையில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சிங்கார வேலருக்கு தனி கொடி மரம் உள்ளது. ஸ்கந்தர் சஷ்டி திருவிழாவின் போது கொடியேற்றத்துடன் விழா நடைபெறுகின்றது. அங்குரார்ப்பணம், கொடியேற்றம் விடையாற்றி என்று ஒரு திருவிழாவிற்க்கே உரிய அனைத்து அம்சங்களுடன் சிறப்பாக நடைபெறுகின்றது மஹா கந்த சஷ்டி விழா. முதல் நாள் மயிலுடன் நின்ற கோலத்தில் தேவியர் இருவருடன் சிங்கார வேலவர் யதாஸ்தானம் விடுத்து நவராத்திரி மண்டபத்திற்கு எழுந்த்ருளுகிறார். சிறப்பு அபிஷேகம் கண்டருளி பின் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. தினமும் காலையில் சிங்கார வேலவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை விநாயகர், வீரபாகு, சவுந்திர சண்டிகேஸ்வரர் ஆகியோருடன் வீதி இரண்டாம் பிரகாரம் உலா வருகின்றார். கந்தர் சஷ்டியன்று வடக்கு மாட வீதியில் சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெறுகின்றது. சூர சம்ஹாரத்திற்கு முருகன் திருத்தேரில் எழுந்தருளும் போது அன்னையரும் எழுந்தருளுகின்றார். சூரசம்ஹாரத்திற்கு தேரில் எழுந்தருளும் சுவாமி, சூரசம்ஹாரம் முடிந்த உடனே வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். ஏழாம் நாள் சிங்கார வேலவருக்கு ஏக தின லக்ஷார்ச்சனை, மாலை திருக்கல்யாணம். திருக்கல்யாணம் முடிந்த பின் ஐராவதாமாம் வெள்ளை யானை வாகனத்தில் மாட வீதி உலா வந்து அருள் புரிகின்றார் சிங்கார வேலவர், அடுத்த 6 நாட்கள் விடாயாற்றி உற்சவம். உற்சவ களைப்பு நீங்கிய பின் யதாஸ்தானம் திரும்புகின்றார். சிங்கார வேலவரின் சன்னத்திற்கெதிரே இவரை திருப்புகழால் பாடிப்பரவிய அருணகிரி நாதர் சன்னதியும் உள்ளது.


சிங்கார வேலவர்

சிங்கார வேலவரைத் தவிர மேலும் பழனி ஆண்டவருக்கும் ஒரு தனி சன்னதியுள்ளது. வடக்கு நோக்கி அருள் பாலிக்கின்றார் ஞான தண்டாயுத சுவாமி அருகிலேயே இத்தலத்திலே பிறந்து , வாழந்து

மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல
நன்மைசான்ற நலம்பெறத் தோன்றினார்;
தன்மை வாயிலார் என்னும் தபோதனர்




மாறா அருள் அரன் தன்னை மன ஆலயத்து இருத்தி
ஆறா அறிவாம் ஒளி விளக்கு ஏற்றி அகமலர்வாம்
வீறா மலர் அளித்து அன்பு எனும் மெய் அமிர்தம் கொடுத்தான்
வீறார் மயிலையுள் வாயிலான் என்று விளம்புவதே

என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமாள் பாடிய படி மனத்தையே செம்பொன் கோவிலாக்கி , அதில் உயர் ஞானத்தை விளக்கேற்ற ஆனந்த திருமஞ்சனம் ஆட்டி அன்பாகிய அமுதை நிவேதனமாக செய்து முக்தியும் அடைந்த 63 நாயன்மார்களுக்குள் ஒருவரான வாயிலார் நாயனார் சன்னதி. வாய் பேசாமல் மவுன விரதம் பூண்டு தியானம் செய்து வந்தார், "நான்" என்னும் அகந்தை எழாத அரும் தன்மையைப் பெற்றிருந்தார் எனவே வாயிலார் நாயனார் என்று திருப்பெயர் பெற்றார். வேளாளர் வகுப்பை சார்ந்தவர். மறவாமை என்னும் தியானத்தினால் மனத்திற் கோயில் அமைத்து ஞானம் என்னும் ஒளி விளக்கை ஏற்றி ஆனந்தம் என்னும் திருமஞ்சனம் ஆட்டி, அன்பு என்னும் அமுது படைத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றவர். மார்கழி மாதம் ரேவதி நட்சத்திரத்தன்று இறைவனின் திருவடி அடைந்தார்.

வாயிலார் நாயனாரின் பெருமையை எம்பிரான் தோழர், வண்தொண்டர் சுந்தர மூர்த்தி சுவாமிகள் தமது 'திருத்தொண்டர் தொகையில்' போற்றி உருகிப் பாடும் போது கூறுகிறார்.

" துறைக் கண்ட செம்பவளம் இருளகற்றும் சோதித் தென் மயிலை வாயிலார் அடியார்க்கும் அடியேன்"

அதாவது 'கடற்கரையில் மலிந்து விளைந்திருக்கும் செந்நிறப் பவளங்களின் ஒளியால் இருளகன்று சோதிச்சுடராய் திகழும் மயிலாப்பூரில் அவதரித்த வாயிலார் நாயனாருக்கும் அடியேன் - என்றார் சுந்தர மூர்த்தி சுவாமிகள். வாயிலார் நாயனார் அன்னை கற்பகவல்லியை வணங்கி அமர்ந்திருக்கும் கோலத்தில் இவர் சன்னதி அமைந்துள்ளது.


நவராத்திரி மண்டபத்தூணில் அமைந்துள்ள சில அற்புத சிற்பங்கள்

வாயிலார் நாயனார் சன்னதிக்கு இடப்பக்கம் நவராத்திரி மண்டபம், கொடி மண்டபம் என்று அழைக்கப்படும் மண்டபம். அம்மை மயிலுருவாய் இறைவனை பூசிக்கும் சிற்பம் முதலான பல அழகான சிற்பங்கள் பஞ்ச மூர்த்திகளின் சிற்பங்கள் கொண்ட தூண்களை உடைய இந்த மண்டபத்தில் தான் அம்மை விரைமலர் குழல்வல்லி மறைமலர்ப்பதவல்லி, கற்பகவல்லி, நவராத்திரி கொலு தரிசனம் அருளுகின்றாள். பங்குனிப் பெருவிழாவின் முதல் நாள் கொடியேற்றத்தின் போது பஞ்ச மூர்த்திகள் இம்மண்டபத்தில் தான் எழுந்தருளி கொடியேற்றம் காண்கின்றனர். கார்த்திகை ஐந்தாம் வாரம் (மார்கழியில் வந்தால் கூட) 1008 சங்குகள் இம்மண்டபத்தில் வைத்து இரண்டு காலம் பூசை நடை பெற்று கபாலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது. மற்ற வாரங்கள் 108 சங்காபிஷேகம், சங்குகள் மஹா மண்டபத்தில் நந்திக்கு முன் வைத்து பூஜை செய்யப்பட்டு சுவாமிக்கு சங்காபிஷேகம் நடைபெறுகின்றது. பிரதோஷத்தன்று பிரதோஷ நாயகர் இம்மண்டபத்தில் எழுந்தருளி பின் கோவில் வலம் கண்டருளுகின்றார். கந்தர் சஷ்டி விழாவன்று சிங்கார வேலவர் பூஜை கண்டருள்வதும் இம்மண்டபத்தில்தான். கச்சேரிகள் மற்றும் சொற்பொழிவுகள் இம்மண்டபத்தில் தான் நடைபெறுகின்றது. இம்மண்டபத்தின் வலப்பக்கம் சமய நூல் நிலையம் உள்ளது. மண்டபத்தின் முன்னே அன்பர்கள் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்ய ஒரு பெரிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது.


ஊஞ்சல் சேவை சாதிக்கும் கற்பகவல்லி

இம்மண்டபத்தின் இடப்பக்கம் அம்மன் சன்னதிக்கு எதிரே 4 கால் ஊஞ்சல் மண்டபம். ஊஞ்சல் மண்டபத்திலிருந்து அன்னையை அற்புதமாக தரிசனம் செய்யலாம். தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளியன்று இம்மண்டபத்தில் தான் ஆதி பராசக்தி, ஜகத் ஜனனி, ஜகதாம்பாள், மஹா திரிபுர சுந்தரி, லலிதாம்பாள், அம்பிகை கற்பகாம்பாள் ஊஞ்சல் சேவை தந்தருளுகின்றாள். சிங்கார வேலவர் சன்னதிக்கு எதிரே அருணகிரி நாதர் சன்னதி, அருணகிரி நாதர் சன்னதிக்கு இடப்புறம் மேற்கு இராஜ கோபுரம். இக்கோபுரம் மூன்று நிலை கோபுரம். இக்கோபுரத்தில் நுழைந்தால் கொடி மரம், பலிபீடம். மேலே சுதை சிற்பத்தில் கற்பகாம்பாள் மயிலாய் சிவபூஜை செய்யும் கோலமும், அம்பாளது பூஜைக்கு மனம் மகிழ்ந்த மகேஸ்வரன் தோன்றி அம்மைக்கு அருள் பாலித்து ஏற்றுக் கொள்ளும் சிற்பங்கள் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளன. இராஜ கோபுரத்தின் இடப்புறம் ஞானசம்பந்தர் என்பை பெண்ணுருவாக்கிய அங்கம் பூம்பாவை சன்னதி, திருஞானசம்பந்தரும் இச்சன்னதியில் எழுந்தருளியுள்ளார். அடுத்து மேற்கிலும் வடக்கிலும் வாகன மண்டபம் பல்வேறு பக்தர்கள் வடமேற்கு மூலையில் நின்றால் ஒரே சமயத்தில் அம்மன் கோபுர கலசங்களையும், இராஜ கோபுரத்தையும் தரிசிக்கலாம் எனவே பக்தர்கள் பலர் அங்கு நின்று கோபுர தரிசனம் செய்வதைக் காணலாம்.

திருக்கோவில் வலம் தொடரும் ............