Showing posts with label யமுனோத்ரி. Show all posts
Showing posts with label யமுனோத்ரி. Show all posts

Monday, November 28, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -8



யமுனா மய்யா கீ ஜே!





யமுனோத்ரி ஆலய கோபுரம்




யமுனையுடன் இனைந்த சில புராணக்கதைகளைப் பார்த்தோம் இனி வாருங்கள் மலை ஏறி சென்று யமுனை அம்மனை தரிசித்துவிட்டு வரலாம். ஜமுனாபாய் சட்டியிலிருந்து 6 கி.மீ நடைப்பயணத்தை துவக்கினோம். சிறிது காலம் முன்வரை ஹனுமான் சட்டியிலிருந்து 13 கி.மீ நடைப்பயணமாக் இருந்தது இப்போது பாதை சரி செய்யப்பட்டு ஜான்கி சட்டிவரையில் வண்டிப் பாதை உள்ளது.

யமுனோத்ரி கிராமம் இமயமலையின் மடியில் அமைந்துள்ள அழகைக் காணுங்கள்

லேசாக மழை தூறிக்கொண்டுதான் இருந்தது ஆகவே அனைவரும் மழைக்கோட்டு அணிந்து கொண்டோம் எங்கள் குழுவில் ஒருவர் மலையேற வரவில்லை, மூன்று பேர் குதிரையிலும் மற்றவர்கள் நடந்தும் மலையேற முடிவு செய்தனர். பாதை நான்கு அடி அகலம். ஒரு பக்கம் மலை மறுபக்கம் யமுனை ஆறு , அற்றின் பக்கம் தடுப்பு உள்ளது. ஆற்றின் பக்கம அருமையான மலர்கள், நெடிதுயர்ந்த மரங்கள் என்று அற்புதமான இயற்கை காட்சிகளை பார்த்துக்கொண்டே மலை ஏறுகின்றோம்.

குதிரை வேணுமா ? குதிரை

தொங்கும் பாறை
நெளிந்து வளைந்து செல்லும் பாதை


நடுநடுவே பாலங்கள்



யமுனையில் கலக்கும் அருவிகள்



இவற்றை எல்லாம் இரசித்துக்கொண்டே மலையேறும்

சொக்கலிங்கம், இரவி, கணேசன், மனோகரன்,
தனுஷ்கோடி, மோகன், தேவராஜ் ஆகியோர்


சலசலத்துக் கொண்டே ஓடும் யமனையின் சத்தம். மலையேறும் குதிரைகளின் குளம்படி சத்தம். யமுனா மய்யாக் கீ ஜே என்று எழும்பும் பக்தர்களின் சத்தம் என்று அற்புதமான சூழல். மழைநாளாக இருந்தும் கூட கூட்டம் இருந்தது. வழியில் இவ்வளவு பேரை பார்க்கவில்லை எப்படி இவ்வளவு கூட்டம் வந்தது என்று வியந்தோம்.

அனைத்து வயதினரும், பாரத் தேசத்தின் அனைத்து பிராந்தியத்தில் இருந்து வந்திருந்த மக்கள் மழைக்கோட்டிடன் மிகவும் பக்தி சிரத்தையுடன் மலையேறினர். சில இடங்களில் தொங்கும் பாறைகள், சில இடங்களில் பாலங்கள் என்று மெள்ள மெள்ள ஏறினோம். யமுனையில் பல் நீர் வீழ்ச்சிகள் வந்து விழுவதையும் கண்டோம். குதிரைகள்,கண்டிகள், தண்டிகள், மலை ஏறுபவர்கள், இறங்குபவர்கள் என்று எல்லோரும் ஒரே வழியில் பயணம் செய்வதால் ஒருவர் மேல் ஒருவர் இடித்துக்கொள்ளாமல் பார்த்துத்தான் செல்ல வேண்டும்.
கண்டி - பிட்டு என்னும் கூடையில் பயணிக்கும் இரு சிறுவர்கள்

மலையேறும் போது மெள்ள மெள்ள ஏறுவதுதான் சிறந்தது. இயற்கை காட்சிகளை இரசிக்கும் போதோ, புகைப்படம் எடுக்கும் போதோ பாதையின் ஓரத்தில் செல்லாதீர்கள், அதே சமயம் ஒரே இடத்தில் நின்று இரசித்து விட்டு பின்னர் முன்னே செல்லுங்கள். நடு நடுவே ஒய்வெடுத்துக்கொள்ள வசதிகள் உள்ளன. மேலும் இரு புறமும் டீ, டிபன் சாப்பிட கடைகள் உள்ளன. வழியெங்கும் பல கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. சுமார் 2.00 மணி நேரத்தில் யமுனோத்ரி கோயிலை அடைந்து விட்டோம்.


யமுனாஷ்டகத்திலிருந்து ஒரு பாடல்

Kalindagirimastake patadamanda poorojvalaa
Vilasagamanollasat Prakataganda shailonnata I
Saghoshagati danturaa samadhiroodha dolottamma
Mukundarativardhini jayati padmabandhosuta II2II
"Falling forcefully on Mount Kalinda Shri Yamunaji appers to be crystal white and looks beautiful with her luxurious flow through cheek like rocks of mountain. Shri Yamunaji follows a zig-zag path noisily and while she flows up and down she looks as if sitting on a beautiful swing. Shri Yamunaji is superior as she enhances our love towards lotus-feet of Lord Mukund. II2II
நன்றி: http://www.shreevallabh.com/Works/yamunashtak.htm




யமுனோத்ரி ஆலயம்

மேலேறி செல்ல செல்ல ஆலயம் நம்மருகே வரும் காட்சி

மேலே செல்ல செல்ல மேக கூட்டம் வந்துவிட்டதால் வெளிச்சம் குறைந்து கொண்டே வந்தது. யமுனோத்ரியை நெருங்கும் போது முதலில் மஞ்சள் நிற கோபுரம் மேகமூட்டங்களுக்குிடையில் மங்கலாக தெரிந்தது. கோபுரம் இமய மலைப்பிரதேசத்தில் உள்லது போல ஒற்றை கூம்பு வடிவில் உள்ளது. சிறிது நேரத்தில் முழுவதுமாக மேகம் மறைத்துவிட்டது. சரியான மழை பிடித்துக்கொண்டது. அரை மணி நேரத்திற்கு நல்ல மழை பெய்தது. கரங்களில் கையுறை அணியாமல் சென்றதால் கைகள் விறைத்து விட்டன. பின்னர் மழை நின்ற பின் யமுனை ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தை கடந்து யமுனோத்ரியை அடைந்தோம்.

சூரிய குண்டம்
( அரிசி வேக வைக்க ஏதுவாக கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன)

யமுனோத்ரியில் இரண்டு ஊற்றுகள் உள்ளன ஒன்று யமுனோத்ரி பனி ஆறு இது மேலே 12 கி.மீ உயரத்தில் உள்ளது, காளிந்தி சிகரத்திலிருந்து ஓடி வருகின்றாள் யமுனை இங்கிருந்து செங்குத்தான மலை என்பதால் இங்கு செல்வது கடினம் மலையேற்ற வல்லுனர்களும், மிகுந்த பக்தி கொண்டவர்கள் மட்டுமே இங்கு செல்கின்றனர். இரண்டாவது ஊற்று வெந்நீர் ஊற்று சூரியன் தன் புதல்விக்கு ஒரு கிரணத்தைக் கொடுத்தால் உண்டாகியது சூரிய குண்டம். முதலில் நாங்கள் தப்த குண்டத்தில் வெந்நீரில் புனித நீராடினோம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாக கட்டங்கள் உள்ளன. பாறைகளில் இருந்து வரும் வெந்நீர் மிகவும் சூடாக இருப்பதால் நாம் குளிப்பதற்கு ஏற்றவாறு செய்து இக்கட்டங்களில் தண்ணீரை நிரப்பித்தருகின்றனர். கந்தக பூமியில்தான் இவ்வாறு வெந்நீர் உற்றுகள் வரும். அதனால் நிறைய நேரம் தண்ணீரில் இருக்க வேண்டாம்.
தர்ம சிலா
புனித நீராட்டம் முடித்த பின் புது ஆடை அணிந்து கொண்டு அங்கு கடைகளில் கிடைத்த அரிசி பொட்டலத்தை வாங்கி சூரிய குண்டத்தில் வேக வைத்து பிரசாதத்திற்காக எடுத்துக்கொண்டோம். சூரிய குண்டத்திற்கு அருகில் தர்ம சிலா உள்ளது. இந்த பாறையிலிருந்து வெந்நீர் வந்த வண்ணம் உள்ளது. இந்தப் பாறைதான் யமுனையாக வணங்கப்படுகின்றாள். அர்ச்சனை இங்குதான் நடைபெறுகின்றது. நாங்களும் அங்கு குழுவாக அமர்ந்து சங்கல்பம் செய்து கொண்டு அர்ச்சனை செய்து யமுனை அன்னையை வணங்கினோம். இந்த வெந்நீர் உற்றுகளால் இவ்வளவு குளிரிலும் இந்த மலைப்பகுதி முழுவதுமே சூடாக உள்ளது. ஹரித்வாரில் உள்ளது போல் யமுனோத்ரி செல்லுபவர்கள் தங்கள் வருகையை புத்தகத்தில் பதிவு செய்யும் வழக்கம் இங்கும் உள்ளது.ஆலயத்திற்கு அருகே விஷ்ணு குண்டம் என்னும் இன்னொரு வெந்நீர் குண்டம் உள்ளது.

விஷ்ணு குண்டம்

பின்னர் யமுனோத்ரி ஆலயத்தில் அன்னையை வணங்கச்சென்றோம். உற்பத்தி ஸ்தானத்தை நோக்கியவாறு அன்னை அருள் பாலிக்கின்றாள். கர்ப்பகிரகத்தில் மத்தியில் கரிய நிறத்தில் கூர்ம வாகினியாகிய ( ஆமை வாகனம்) யமுனை அருள் பாலிக்கிறாள். அன்னையின் இடப்பக்கம் சிவப்பு நிறத்தில் மகர வாகினியாக ( முதலை வாகனம்) கங்கை, மற்றும் இடப்பக்கம் சரஸ்வதி என்று முப்பெரும் தேவியரும் அருட்காட்சி தருகின்றனர். யமுனைக்கு மங்களப் பொருட்களான, வளையல், கண் மை, குங்குமம் மற்றும் சாதம் படைத்து வழி படுகின்றனர். கோவில் சுவர் முழுவதும் ஸ்டிக்கர் பொட்டு ஒட்டப்பட்டிருப்பதை காணலாம். கூட்டம் அதிகமாக இருக்கவில்லை எனவே அற்புதமான தரிசனம் செய்தோம். லலிதா சகஸ்ரநாமம் சேவித்துக்கொண்டே வலம் வந்து அன்னையரை வணங்கினோம்.



யமுனையாற்றிலிருந்து ஆலயத்தின் காட்சி


யமுனையாற்றில் குளிக்கச்செல்ல அமைக்கப்பட்டுள்ள படிகள்

யமுனைக்கரையில் அடியேன், சொக்கலிங்கம்,மற்றும் ரவி

பின்னர் யமுனையாற்றுக்கு சென்று கேதாரீஸ்வருக்கு அபிஷேகம் செய்யவும் வீட்டில் வைத்துக்கொள்ளவும் தண்ணீர் சேகரித்துக்கொண்டோம். நடு நடுவே மழை பெய்தது, பனி மூடியது சமயம் கிடைத்த போது புகைப்படம், சலனப்படம் எடுத்துக்கொண்டோம்.

ஹனுமன் ஆலயம்

பின்னர் ஹனுமன் ஆலயம் சென்று இராமதூதன், சொல்லின் செல்வன், சுந்தரனை வணங்கினோம். இச்சன்னதியில் இளைய பெருமாள், சீதா பிராட்டி சகிதமாக இராமபிரானும், இளையாழ்வார் அம்சமான இராமானுஜரும் அருள் பாலிக்கின்றனர். மூன்று கோபுரங்கள் உள்ளன இச்சன்னதியில். முகப்பில் விநாயகரும் யமுனை அன்னை சுதை சிற்பங்கள் உள்ளன. ஆனால் அங்கே டிஷ் ஆன்டனாவை அமைத்துள்ளது அவ்வளவு சரியாக படவில்லை.

இறங்கும் பொழுது மலைப்பாதையின் ஒரு பார்வை

பின்னர் ஆரம்பித்த யாத்திரயின் முதல் ஆலயத்தின் தரிசனம் மிக அற்புதமாக அமைந்ததற்கு அந்த ஆண்டவனுக்கு அனந்த கோடி நன்றிகள் கூறி ஆனந்தத்துடன் மலை இறங்கி ஜானகி சட்டியை அடைந்தோம். வரும்வழியில் சப்தரிஷி குண்ட சென்று வந்த சாது ஒருவரை குதிரைக்காரர் காட்டினார்.

தங்குவதற்கேற்றவாறு பலவேறு சத்திரங்கள் உள்ளன. இரவி தங்குபவர்கள் தங்கலாம். குளிர் காலத்திற்காக யமுனை அன்னை பல்லக்கில் செல்லும் திருவிழா மற்றும் துவாரம் திறக்கும் விழா வெகு சிறப்பாக நதைபெறுகின்றது.

எங்கள் பேருந்து ஓட்டுனர் பேருந்தை ஜானகி சட்டிகே கொண்டு வந்திருந்தார். அங்கிருந்தே அஸ்னால் காட் சென்று உடமைகளை எடுத்துக்கொண்டு பர்கோட் வந்து சேர்ந்தோம். பர்கோட்டில் சிறிது அவசியான பொருட்களை வாங்கினோம். பின்னர் இரவு தூங்கசென்றோம். நடுவில் திடீரென்று முழிப்பு வந்தது, வெளியே பெஉம் சத்தத்துடன் மழை பெய்து கொண்டிருந்தது. யாத்திரையின் கால்வாசி பாகம் தானே முடிந்திருக்கின்றது இன்னும் முக்கால்வாசி பாகம் யாத்திரை உள்ளதே என்னவாகுமோ என்ற கவலை மன்தில் தோன்றியது. என்ன ஆயிற்று என்று அறிந்து கொள்ள தங்களுக்கும் ஆவலாக உள்ளதா? சற்றுப்பொறுங்களேன் பொழுது விடியட்டும் அதற்குள் நானும் மீதி தூக்கத்தை முடித்துக்கொள்கிறேன்.

Wednesday, November 23, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -6


ஓம் நமசிவாய


பர்கோட்டிலிருந்து யமுனோத்ரி பயணம்



பர்கோட் GMVN சுற்றுலா விடுதி


பர்கோட் என்னும் இந்த சிறு நகரம் ஒரு சந்திப்பு ஆகும். ரிஷிகேசிலிருந்து யமுனோத்ரி செல்பவர்கள் இரு வழியாக இவ்விடத்தை அடையலாம். முதலாவது நாங்கள் பயணம் செய்த முசோரி, யமுனா பாலம், டம்டா, நௌகான் வழியாக 157 கி.மீ பயணம். இரண்டாவது வழி . நரேந்திரநகர், சம்பா, தெஹ்ரி, தாராசு, பிரம்மகால் வழியாக 175 கி.மீ பயணம்.

இந்த பாதை வழிகளின் விவரம்

புறப்படும் இடம்- செல்லும் இடம்- தூரம் கி.மீ - உயரம் மீ
ரிஷிகேஷ் - முசோரி- 36- 1921
முசோரி- கெம்ப்டி அருவி- 12- 1524
கெம்ப்டி அருவி- யமுனா பாலம்- 16- 772
யமுனா பாலம்- டம்டா- 25- 1372
டம்டா- நௌகான்- 28- 1524
நௌகான்- பர்கோட்- 11- 1828
பர்கோட்- சயானாசட்டி- 29 -1982
சயானாசட்டி- ஹனுமான்சட்டி- 5 -2134
ஹனுமான்சட்டி- பூல்சட்டி- 5- 2561
பூல்சட்டி- ஜானகிபாய் சட்டி- 3- 2576
ஜானகிபாய் சட்டி-யமுனோத்ரி- 5- 3323 (நடை)

இரண்டாவது வழி

ரிஷிகேஷ்- நரேந்திர நகர்- 16-1067
நரேந்திர நகர்-சம்பா- 46- 1524
சம்பா- தெஹ்ரி- 21- 770
தெஹ்ரி- தாராசு- 37- 1036
தாராசு- பிரம்மகால்- 15- 1158
பிரம்மகால்- பர்கோட்- 40- 1828
பர்கோட்டிலிருந்து மேலே சொன்ன வழிதான். இதில் தற்போது ஜானகிபாய் சட்டி வரையிலும் வண்டியில் செல்ல இயலும் அதற்கு மேல் நடை பயணம்தான். (சட்டி : என்றால் தங்கும் இடம் என்று பொருள்)

உயரத்தைப்பார்த்தால் நாம் எவ்வாறு , மலை மலையாக ஏறி இறங்கி பயணம் செய்கின்றோம் எனப்து விளங்கும்.

மேலும் இவ்வூரிலிருந்து கங்கோத்திரிக்கும் ஒரு பாதை செல்கின்றது இரண்டாவது வழியில் பர்க்கோட்டிலிருந்து தெஹ்ரி வரை சென்று பின்னர் உத்தரகாசி சென்று கங்கோத்ரியையும் அடையலாம். இப்பதிவில் நான்கு தலங்களுக்கு செல்லும் பாதை வரைபடமும்(Road Map) கொடுத்துள்ளேன்.


சார்தாம் பாதை வரைபடம்
(படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)


பர்கோட் அருமையான இயற்கை சுழ்நிலையில் அமைந்துள்ளது. ஒரு பக்கம் ஓங்கி உலகளந்த உத்தமன் போல பச்சை மேனியுடன் நெடிதுயர்ந்த இமயமலை கீழே பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது இந்நகரம். இங்கிருந்து பந்தர்ப்பூஞ்ச் மலையை பார்க்க முடியும். முதலிலேயே சொல்லிவிட்டதால் உணவு தயாராக இருந்தது, ஒன்றை மட்டும் இங்கே குறிப்பட விரும்புகிறேன். சாதத்திற்காகவும் இவர்கள் நாம் பிரியாணி செய்ய பயன்படுத்தும் பாஸ்மதி அரிசியைத்தான் பயன்படுத்துகின்றனர். சுவையானதாக இருந்தாலும் அதிகம் சாப்பிடமுடியாது. மேலும் குளிர்பிரதேசம் என்பதால் கோதுமை சப்பாத்தி சாப்பிடுவது நல்லது. எங்கள் குழுவில் சிலருக்கு இந்த உணவு சேரவில்லை. யமுனோத்ரி தரிசித்து விட்டு திரும்பி வரும் போது இங்கு ஒரு நாள் இரவு தங்க வேண்டும் என்று எங்கள் வழிகாட்டி கூறினார். பர்கோட் ஒரு சிறிய நகரம் யமுனோத்ரி செல்லும் வழியில் எதுவும் கிடைக்காது என்பதால் உங்களுக்கு வேண்டிய மருந்து மற்றும் அவசிய பொருட்களை இங்கேயே வாங்கிக்கொள்ளுங்கள்.

பர்கோட் GMVN சுற்றுலா விடுதி பூங்கா

தாங்கள் காண்கின்ற இந்த கட்டிடம்தான் பர்கோட்டில் உள்ள GMVN தங்கும் விடுதி. விடுதியின் வர்ணத்தைப் பாருங்கள் பச்சை நிறம். எங்கிருந்தாலும் நீங்கள் உடனடியாக அடையாளம் கண்டு கொள்ளலாம். அதே சமயம் மழை இவ்வாறு தாறுமாறாக பெய்வதற்கு உலக வெப்பமயமாதல் (Global Warming) ஒரு காரணம் அல்லவா? ஆகவே காடுகளை நாம் காக்க வேண்டும், மரங்களை வெட்டக்கூடாது, சுற்றுசூழலை மாசு படாமல் காக்க வேண்டும் என்பதையும் இது குறிப்படுகின்றது.

மதிய உணவிற்குப்பின் யமுனோத்திரிக்காக வண்டியில் கிளம்பினோம்.கிளம்பும் போதே ராணா சட்டி அருகில் ஒரு நிலச்சரிவு என்ற செய்தி கிடைத்தது. சிறிது தூரம் சென்றதும் பாதை இரண்டாகப் பிரிந்தது இடப்பக்கம் செல்லும் பாதை யமுனோத்திரிக்கும், வலப்பக்கம் செல்லும் பாதை கங்கோத்திரிக்கும் செல்கின்றது. இடப்புறம் செல்லும் பாதையில் திரும்பி சிறிது கீழே இறங்கி யமுனை நதியை கடந்து பயணம் தொடர்ந்தது. இதற்கப்புறம் பாதை ஒரே எற்றம் யமுனையும் மெலிந்து கொண்டே ஒடிக்கொண்டிருந்தாள் ஏனென்றால் உற்பத்தி ஸ்தானத்திற்கு அருகில் செல்கின்றோம் அல்லவா?


அஸ்னால் காட் சுற்றுலா விடுதி

உயரம் அதிகமாகிக்கொண்டே வந்ததால் மலைகள் செங்குத்தாகவும் மற்றும் குறுகலாகவும் ஆனது. மரங்கள் நெட்டையாகிக்கொண்டே வந்தன. வெறும் கூம்பு வடிவ பைன் மரங்களும், தேவதாரு மரங்களும் தான் மேலே உள்ளன. நடுநடுவே சிறு கிராமங்கள், பாலங்களில் பல இடங்களில் யமுனையை கடந்து இரு கரையிலுமாக பயணம் செய்தோம். மலைப் பிரதேசம் மாசு படாத சுத்தமான ஈரகாற்றை சுவாசித்து தெம்படைந்தோம். நம் நகரங்களில் வெறும் பெட்ரோலியம் புகையைத்தானே சுவாசிக்கின்றோம். பாதை மலை பெய்ததினாலோ என்னவோ? என்று நினைத்தோம் ஆனால் பாதை இரட்டிப்பு வேலை நடைபெறுவதால் பாதை தோண்டப்பட்டதாலும் மழை அதிகமாக பெய்ததாலும் பாதை இவ்வாறு இருப்பதாக வழிகாட்டி கூறினார் மிகவும் மோசமாக இருந்தது. தார் சாலையே இல்லை வெறும் சேறும் சக்தியுமாகத்தான் இருந்தது. வண்டி ஒட்டுனர் எறும்பு ஊர்வது போல வண்டியை உருட்டிகொண்டே சயானாசட்டியை கடந்து ராணாசட்டி அடைந்தார். நிலச்சரிவை சரி செய்திருந்தனர். அதற்கு மேல் வண்டியை ஓட்ட பயந்தார் ஏனென்றால் மறுபடியும் நிலச்சரிவு ஏற்பட்டால் திரும்பி பெரிய வண்டியில் வருவது கடினம் என்று. ஆகவே வழிகாட்டில் அங்குள்ள இரண்டு ஜீப்களில், அவர்கள் செலவில் எங்களை அஸ்னால் காட் என்னும் இடத்தில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்றார் ஏனென்றால் ஜானகி பாய் சட்டியில் 13 பேர் தங்கும் வசதியில்லை.


காலையில் பனி மூட்டம்

யமுனோத்ரி கிளம்புகின்றோம்

இரவு குடும்பத்தினர் ஒரு அறையிலும் மற்றவர்கள் Dormitaryயிலும் தங்கினோம். இரவு வெகுநேரம் மின்சாரம் இல்லாமல் இருந்தது. சாப்பிடும் சமயம் ஒரு மணி நேரத்திற்கு மட்டும் ஜெனரேட்டரை போட்டனர். அப்போது எங்களுடைய கைப்பேசிகள், புகைப்படக் கருவிகளை சார்ஜ் செய்து கொண்டோம். எனவே இந்த யாத்திரையின் போது டார்ச் லைட் அல்லது மெழுகுவர்த்தி, தீப்பெட்டி வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். சிறிது நேரம் ரஜாய்க்குள் குளிருக்கு இதமாக பயண களைப்பு தீர ஒய்வு எடுத்துக் கொண்டு சுட சுட ரொட்டி (சப்பாத்தி) தயார் ஆனவுடன் சாப்பிட்டு விட்டி சிறிது நேரம், இந்த க்ஷேத்திரங்களின் புராணங்களைப் பற்றி விவாதித்து விட்டு படுக்க சென்றோம். நாம் எந்த ஸ்தலத்திற்கு சென்றாலும் அந்த தலத்தின் புராண வரலாற்றை அறிந்து கொண்டால், எதோ எம்புருஷனும் கச்சேரிக்குப் போறான் என்பது போல இல்லாமல் யாத்திரை மிகவும் பொருள் பொதிந்த்தாக இருக்கும் எனவே இப்பதிவுகளில் தங்களுக்கு இந்த ஸ்தலங்களைப் பற்றிய பல தகவல்கள் கிட்டும்.


ஜானகி சட்டி சுற்றுலா மாளிகை

இரவே மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. காலையில் எழுந்து பார்த்தால் ஒரே பனி மூட்டம் எதிரே இருந்த மலை சிகரங்கள் கண்ணில் படவில்லை. உயர் மட்டங்களில் எவ்வளவு சீக்கிரம் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விடுகின்றோமோ அவ்வளவு நல்லது. எனவே ஆறு மணிக்கெல்லாம் வெந்நீரிலே குளித்து அனைவரும் தயாராகி விட்டு மழை சிறிது குறைவதற்காக காத்திருந்தோம். மலையேறும் போது அதிக சாமான்களை எடுத்து செல்ல வேண்டாம். சுமார் ஏழு மணி அளவில் மழை கொஞ்சம் மட்டுப்பட்டது வெளிச்சமும் கூடியது ஜீப் மூலம் மழைக்கோட் அணிந்து கொண்டு ஜானகி சட்டி அடைந்தோம்.



ஜானகிபாய் சட்டி அடைவதற்கு முன் ஹனுமான் சட்டி என்ற இடம் உள்ளது. அஷ்ட சஞ்ஜீவிகளில் ஒருவரான அனுமன் இலங்கையை எரித்த பின் தனது வாலை இங்கு வந்து அணைத்ததாக ஐதீகம். மேலும் கங்கோத்ரியையும் யமுனோத்ரியையும் இணைக்கும் மலைத்தொடர் பார்ப்பதற்கு குரங்கின் வால் போல் உள்ளதால் இந்த மலை பந்தர்பூஞ்ச் ( பந்தர்= குரங்கு, பூஞ்ச் = வால்) என்றும் அழைக்கபப்டுகின்றது. இம்மலையிலிருந்து ஹனுமான் கங்கா நதி ஒடி யமுனையில் கலக்கின்றது. ஜானகி பாய் என்னும் மூதாட்டி யமுனா மய்யா ( யமுனை அன்னை )விடம் மிகவும் பக்தி கொண்டு அன்னையை வணங்கி வந்ததால் இந்த கிராமத்திற்கு அவர் ஞாபகார்த்தமாக ஜானகிபாய் சட்டி என்னும் பெயர் வந்தது. சட்டி என்றால் யாத்திரிகள் தங்கும் இடம் என்று முன்பே பார்த்தோமல்லவா? இங்கிருந்து இரண்டு கி.மீ தூரத்தில் கர்சாலி என்ற கிராமம் உள்ளது. யமுனை அன்னை குளிர் காலத்தில் இக்கிராமத்தில்தான் வந்து தங்குகின்றாள்.


ஜானகிபாய் சட்டி சுற்றுலா விடுதி



ஜானகி சட்டியில் காலை உணவை முடித்துக்கொண்டு யமுனோத்திரிக்கான நடைபயணத்தை துவங்கினோம். அகலமான பாதைதான் பல இடங்களில் படிகளும் உள்ளன. ஆனால் ஒரே ஏற்றம் சுற்றி சுற்றி மலையேற வேண்டும். நடக்க முடியாதவர்களுக்கு என்ன வசதிகள் உள்ளன என்ற எண்ணம் தோன்றுகிறதா? முதலில் போனிகள் எனப்படும் (கோவேறு) குதிரைகள் உள்ளன. குதிரையில் பயணம் செய்யும் போது ஜாக்கிரதையாகதான் பயணம் செய்யவேண்டும். இயல்பிலேயே இவை மலையை ஒட்டி செல்லுகின்றன. ஏற்றத்தில் முன்னால் குனிந்து கொண்டும், இறக்கத்தில் பின்னால் சய்ந்து கொண்டும் எப்போதும் கால்களை சேணத்தில் சரியாக வைத்துக்கொண்டும் பயணம் செய்வது நல்லது. முதலில் பயம் இருக்கக்கூடாது. மலையை ஒட்டி குதிரை செல்லும் போது மேலே உள்ள பாறைகளை கவனித்து தலையையும் உடலையும் வளைத்து நாம்தான் சமாளித்துக்கொள்ள வேண்டும். நாம் நம்முடைய போர்வை ஒன்று எடுத்து சென்றால் அதை நாம் சௌகரியமாக குதிரையின் மேல் அமர்வதற்கு பயன்படுத்திக்கொள்லலாம். குதிரையிலும் முடியாத வயோதிகர்கள் தண்டியில் பயணம் செய்யலாம். இது பல்லக்கு போன்றது.

தண்டியில் ஒரு மூதாட்டி

இதை நான்கு பேர் சுமந்து செல்கின்றனர். நான்கு பேரும் ஒருமித்து இராணுவ வீரர்கள் நடை போட்டு செல்வது போல செல்லும் அழகே ஒரு அழகு. அதுவும் அடங்காமல் குதிரைகள் இவர்கள் மேல் மோதுவது போல் வருவதைப் பார்க்கும் எவரும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. இதல்லாமல் பிட்டு என்னும் கூடையில் சிறு குழந்தைகளை உட்கார வைத்து ஒருவர் தூக்கிச் செல்லும் வசதியும் உள்ளது. அதுவே பெரியவர்களாக இருந்தால் காலை தொங்கவிட்டுக் கொண்டு அமர்ந்து செல்லலாம் இதற்கு கண்டி என்று பெயர். சாமான்களை எடுத்துச்செல்ல கூலிகள் கிட்டுவார்கள். இவர்கள் எல்லாரிடமும் அரசு வழங்கிய அடையாள் அட்டை இருக்கும் அதை வேண்டுமென்றால் வாங்கி பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வோரு ஆண்டும் உத்தராகாண்ட் அரசு இவற்றுக்கான கட்டணம் நிர்ணயம் செய்கின்றது அதிக கிராக்கி இருந்தால் கட்டணம் அதிகமாகும் என்பது போல் யாத்திரிகளின் கூட்டத்தை பொறுத்து விலை மாறுபடுகின்றது. சீசன் சமயத்தில் கட்டணம் அதிகமாக இருக்கும் அதே செப்டெம்பர் அக்டோபர் மாதங்களில் கட்டணம் குறைவாக இருக்கும்.


20ரூபாய் மழைக்கோட்டில் இருவர்


அழகிய வெள்ளை செம்பருத்திப்பூ

நாங்கள் நடை பயணத்தை துவக்கும் போதும் மழை தூறிக்கொண்டு இருந்தது. இங்கு 20 ரூபாய்க்கு ஒரு தடவை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக மழைக் கோட்டுகள் கிடைக்கின்றன. மழைக்கோட்டு கொண்டு வராதவர்கள் அதை வாங்கிக்கொண்டனர். எங்களில் மூன்று பேர் குதிரையிலும் மற்றவர்கள் நடந்தும் யமுனோத்திரிக்கு கிளம்பினோம். செல்லும் வழியில் யமுனையைப் பற்றிய கதைகள் சிலவற்றை சொல்லுகிறேன். கேட்டுக்கொண்டே தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.


யாத்திரை இன்னும் தொடரும்.......

Monday, November 14, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1

ஓம் நமசிவாய



யமுனோத்திரி ஆலயம்

நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியின் தாய் வீடான இமயமலையில் சிவசக்தி வாசம் செய்யும் திருக்கயிலாயம் மற்றும் அநேக புண்ணிய தலங்கள் அமைந்துள்ளன அவற்றுள் நான்கு முக்கிய தலங்களான யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு தலங்களுக்கு ஒரே சமயம் தலயாத்திரை செல்வது சார்தாம் யாத்திரை என்றழைக்கப்படுகின்றது. இந்த தலங்கள் அனைத்தும் உத்தரகாண்ட பகுதியில் அமைந்துள்ளதால் இந்த யாத்திரை உத்தரகாண்ட யாத்திரை என்றும் அழைக்கப்படுகின்றது. ஆதிகாலத்தில் இருந்தே இந்த தேவபூமியில் பனி மூடிய சிகரங்களின் அருகாமையில் அமைந்துள்ளன இந்த புண்ணிய தலங்களுக்கு அநேகம் பக்தர்கள் யாத்திரை செய்து ஆண்டவன் அருள் பெற்றுள்ளனர். அவனருளால் அடியேனுக்கும் அந்த அரிய வாய்ப்பு கிட்டியது, அந்த ஆனந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வாருங்கள் ஜெகத்தீரே.


கங்கோத்ரி ஆலயம்

சார்தாம் (நான்கு ஆலயங்கள் அல்லது பீடங்கள்) எனப்படுகின்ற மிகவும் புனிதமுடைய மற்றும் மதிப்பிற்குரிய நான்கு திருத்தலங்கள் இந்த பரதகண்டத்தின் நான்கு திசைகளிலும் எல்லைக் காவலாக அமைந்துள்ளன. அவையாவன வடக்கில் உள்ள பத்ரிநாதம், தெற்கில் உள்ள இராமநாதம் – இராமேஸ்வரம், கிழக்கில் உள்ள துவாரகை மற்றும் கிழக்கில் உள்ள ஜெகந்நாதம் - பூரி ஆகிய ஆலயங்கள் சார்தாம் என்றழைக்கப்படுகின்றன. சிவபெருமானின் அம்சமாக காலடியில் அவதரித்த, ஹிந்து மதத்திற்கு புத்துயிரூட்டிய ஆதி சங்கர பகவத்பாதாள் தனது பீடங்களை இந்த நான்கு தலங்களில் ஸ்தாபனம் செய்தார். இந்த தலங்கள் அனைத்திற்கும் ஒவ்வொரு இந்துவும் தனது வாழ்நாளில் ஒரு தடவையாவது சென்று வழிபட வேண்டும் என்பது நியதி.


கேதார்நாத் ஆலயம்

அது போல உத்தராகாண்ட மாநிலத்தின் சோட்டா சார்தாம் ( சிறிய நான்கு பீடங்கள்) என்று அழைக்கப்படும் யமுனோத்திரி, கங்கோத்ரி, திருக்கேதாரம், பத்ரிநாதம் ஆகிய நான்கு தலங்களுக்கு செல்லும் யாத்திரையே அடியேன் மேற்கொண்ட சார்தாம் யாத்திரை. உத்தராகாண்ட மாநிலத்தில் இந்த தலங்கள் அமைந்துள்ளதால் இந்த யாத்திரையை உத்தராகாண்ட் யாத்திரை என்றும் இமயமலையில் அமைந்துள்ளதால் இமயமலை யாத்திரை என்றும் அழைக்கின்றனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் குறிஞ்சி நிலமான இமயமலையும் அதைச் சார்ந்த பகுதிகளும் உத்தரக்காண்ட (உத்தராஞ்சல்) என்று தனி மாநிலமாக இப்போது பிரிக்கப்பட்டிருக்கின்றது. உத்தராகாண்ட் மாநிலம் இந்தியக் குடியரசின் 27 ஆவது மாநிலமாகும். பனி ஆறுகள், கம்பீரமான பனியடர்ந்த மலைகள், பிரம்மாண்டமான மற்றும் களிப்பூட்டும் சிகரங்கள், மலர்களின் பள்ளத்தாக்குகள், ஸ்கையிங் இடங்கள் மற்றும் அடர் வனங்கள், மேலும் புனித யாத்ரீகர்கள் தங்கிச்செல்வதற்கான பல மடங்கள் மற்றும் பல கோவில்கள் ஆகிவற்றை இம்மாநிலம் உள்ளடக்கியுள்ளது.

இந்த உத்தராக்காண்ட மாநிலம் இரண்டு மண்டலங்களாக அமைந்துள்ளன கிழக்குப்பகுதி குமோன் என்றும் மேற்குப்பகுதி கர்வால் என்றும் அழைக்கப்படுகின்றது. சார்தாம் யாத்திரையின் ஆலயங்கள் அனைத்தும் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளன. இந்த நான்கு ஆலயங்களில் இரண்டு புண்ணிய நதிகளான கங்கை மற்றும் யமுனையின் உற்பத்தி ஸ்தானமான சக்தி தலங்கள், ஒன்று சிவபெருமானின் ஜோதிர்லிங்க ஸ்தலம், தேவாரப் பாடல் பெற்ற தலம். ஒன்று பூலோக வைகுண்டம் என்று அறியப்படும், பெருமாள் தானே தோன்றிய ஸ்வயம்வக்த ஸ்தலமான ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திவ்யதேசம். ஆதிசங்கரின் பெரிய சார்தாம் யாத்திரையிலும் பத்ரிநாதம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவையல்லாமல் தேவாரப்பாடல் பெற்ற கௌரி குண்டம், மற்றும் இந்திர நீல பர்வதம் மற்றும் பிரயாகைகள் எனப்படும் நதியின் சங்கமங்கள் எனப்படும் பஞ்ச பிரயாகைகளையும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட மற்றும் இரு வடநாட்டுத் திருப்பதிகளான தேவப்ரயாகை எனப்படும் கண்டம் என்னும் கடிநகரையும், திருப்பிருதி எனப்படும் ஜோஷிர்மட்டையும் தரிசனம் செய்கின்றோம்.

பத்ரிநாத் ஆலயம்

இந்த நான்கு தலங்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அவையாவன இவை இமய மலையின் பனி மூடிய சிகரங்களின் மடியில் இவை அமைந்துள்ளன. வருடத்தில் ஆறு மாதத்தில் இவை பனி மூடி இருக்கும் அப்போது இங்குள்ள தெய்வ மூர்த்தங்கள் கீழே இறங்கி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அனைத்து தலங்களும் பல்வேறு புராண கதைகளுடன் தொடர்புள்ளவை. நான்கு தலங்களும் கங்கை நதியின் உப நதிகளில் அமைந்துள்ளன. இத்தலங்களில் அல்லது அருகில் வெநீநீர் ஊற்றுகள் உள்ளன, ஆதி சங்கரருடன் தொடர்புடையவை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒருவர் முயற்சி செய்து அவனருள் இருந்தால்தான் இத்தலங்களுக்கு செல்ல முடியும் மலையேற்றம் அவசியம் என்பதால் நல்ல உடல் நலம் நன்றாக இருப்பவர்கள் மட்டுமே செல்வது புத்திசாலித்தனம். மேலும் ஒரு பனி மூடிய சிகரத்திற்கு சென்று தரிசனம் செய்து விட்டு பின்னும் அடுத்த தலத்திற்கு செல்ல வேண்டும், மேலும் கீழே இறங்கி மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்பதால் நாட்களும் அதிகமாக ஆகும். டெல்லி வரை இரயில் மூலமாக சென்றால் நான்கு தலங்களையும் தரிசனம் செய்துவிட்டு திரும்பிவருவதற்கு குறைந்தது பதினைந்து நாட்களாவது ஆகும்.

இனி வரும் பதிவுகளில் இன்னும் இந்த யாத்திரைகளைப் பற்றிய பல தகவல்களை அறிந்து கொள்ள உடன் வாருங்கள் அன்பர்களே.