Showing posts with label ஹர்சில். Show all posts
Showing posts with label ஹர்சில். Show all posts

Thursday, December 29, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -14





முக்தி தரும் சக்தி ஆலயங்கள் இரண்டையும்  மிகவும் திருப்தியாக தரிசனம் செய்த மகிழ்ச்சியுடன், எங்களது பேருந்து பழுதாகி ஹர்சில் கிராமத்திலேயே நின்று விட்ட காரணத்தினாலும், ஜீப் எதுவும் கிடைக்காத காரணத்தாலும், அரசு பேருந்தில் புறப்பட்டோம், ஆகியாவின் உயர்ந்த பாலமான புது வர்ணத்தில் மிளிர்ந்து கொண்டிருந்த  ஜாட்கங்கா பாலத்தைக் கடந்து வரும் போது பாகீரதியின் மறு கரையில் உள்ள முக்பா கிராமத்தில் கங்கா மாதா வந்து தங்கும் கோயிலை வழிகாட்டி காட்டினார், பேருந்தில் இருந்தே புகைப்படம் எடுத்துக்கொண்டோம். 

 பைரான் காட் பைரவர் ஆலயம்
பின்னர் பைரான்காட் கடக்கும் போது பைரவர் ஆலயத்தையும் புகைப்படம் எடுத்துகொண்டோம். இறங்கி தரிசனம் செய்ய முடியவில்லை. இருபக்கமும் ஓங்கி வளர்ந்த, வானத்தை ஒட்டடை அடிக்கும் தேவதாரு மரங்கள், சல சலவென்று பாய்ந்து ஒடும் பாகீரதி, காற்றில் மென்மையான ஈரம் என்று சுகமான பயணம், மலைப்பாம்பு போல நெளிந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில். நடுவில் ஒரு கிராமத்தில் வண்டி ஓட்டுனர் தேநீர் அருந்த வண்டியை நிறுத்தினார். அங்கு ஆப்பிள் பழங்கள் கிலோ 20 ரூபாய்க்கும், பேரிக்காய்  கிலோ 15  ரூபாய்க்கும் தொட்டுக்கொள்ள  மிளகாய்ப்பொடியுடன் விற்றுக்கொண்டிருந்தார்கள், நாம் இங்கு புகைவண்டியில் பயணம் செய்யும் போது கொய்யாப்பழம் வாங்கி சாப்பிடுவது போல அங்கு ஆப்பிள் பழத்தை வாங்கி சாப்பிட்டுக்கொண்டே பயணத்தை தொடர்ந்தோம். 
 
 வழியெங்கும் தேவதாரு மரங்கள் 


ஹர்சில் என்னும் இந்த கிராமம் ஹரி-சிலா என்பதின் திரிபு என்று கூறுகிறனர். ஜாலந்தரின் மனைவி மஹா தன்னை ஏமாற்றி ஜாலந்தரன் வதமாக காரணமாக இருந்ததால்  கல்லாக போக சாபம் கொடுத்தாள் எனவே மஹாவிஷ்ணு பாறையானதால் இவ்விடம் ஹரிசிலா ஆனதாம்.

முன்னரே கூறியது போல நாங்கள் பதிவு செய்திருந்தது அனைவரும் சேர்ந்து தங்கும் அறைகளுக்குத்தான், உத்தரகாசியில் உள்ள GMVN தங்கும் விடுதியில் இருவர் தங்கும் அறைகள்தான் உள்ளன , எனவே நாங்கள் கங்கோத்ரியில் இருந்து திரும்பி வரும் போது பட்வாரி என்னும் ஊரில்தான் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பட்வாரிக்கும் உத்தரகாசிக்கும் இடையே 30 கி.மீ தூரம். பட்வாரியிலிருந்து ஒரு நடைபாதை வழி கங்கோத்ரிக்கும், மற்றொரு நடைபாதை கேதார்நாத்திற்கும் உள்ளது.    எங்கள் வழிகாட்டி அங்கேயே நாம் இறங்கிக்கொள்ளலாம் என்று கூறினார், முதலிலேயே பிரம்மகாலில் மாட்டிக்கொண்டது போல இங்கு மாட்டிக்கொண்டால் என்ன செய்வது என்று பயந்து, உத்தரகாசி சென்று விடலாம் என்று அடம் பிடித்து, GMVN கூடுதல் மேலாளரிடம் பேசி, உத்தரகாசி செல்வதற்கு அனுமதி பெற்று இரவில் உத்தரகாசி அடைந்தோம். ஆனால் உத்தரகாசியிலிருந்தும் இரண்டு நாட்கள் வெளியே செல்ல முடியாமல் மாட்டிக்கொண்ட கதையை தொடர்ந்து படியுங்கள். 

 
  
எழில்மிகு உத்திரகாசி GMVN  சுற்றுலா இல்லம்




எழிலார்ந்த பூந்தோட்டம்



  

சுற்றுலா இல்ல தோட்டத்தில் திரு.இரவி

யமுனோத்ரி தீர்த்ததை  அடைக்கும் 
தேவராஜன், தனுஷ்கோடி, சொக்கலிங்கம்

மறு நாள்  காலை பேருந்து  இல்லை என்பதால் இங்கேயே  இன்று தங்கி உத்தரகாசியை சுற்றிப் பாருங்கள் என்று வழிகாட்டி கூறினார் எனவே அதற்கு ஒத்துக்கொண்டு அங்கு தங்கினோம். அன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி தினமாகும் என்பதால் இங்குள்ள கோவில்களை காணச் சென்றோம். முதலில் உத்தரகாசி நகரைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோமா? இந்நகரம் ஒரு மாவட்ட தலை நகரம். கங்கோத்ரி செல்பவர்களுக்கு இந்நகரம் நுழைவாயிலாக உள்ளது. இந்நகரமே ஒரு புண்ணிய ஸ்தலம் உத்தர் என்றால் வடக்கு உத்தர காசி என்பது  வடக்கு காசி என்று பொருள்.  புராணங்களில் இவ்விடம் பாராஹாத் என்று அறியப்பட்துள்ளது. காசியில் உள்ளது போல் இரண்து ஆறுகள் இங்கு பாகீரதியுடன் கலக்கின்றது இந்த சங்கமங்களுக்கு இடையே இந்நகரம் அமைந்துள்ளது.  எனவே இந்நகரம் சௌமிய காசி அதாவது புனித காசி என்றும் அழைக்கப்படுகின்றது. கங்கையின் கரையில் உள்ள ஐந்து காசிகளில் இதுவும் ஒன்று. காசியில் உள்ளது போலவே  விஸ்வநாதர் ஆலயமும், மணிகர்ணிகா ஸ்நான கட்டமும் உத்திர காசியிலும் உள்ளது. 

இந்நகரம் பாகீரதியின் கரையில் ஐந்து யோசனை தூரம் பரவியுள்ளது என்று புராணங்களில்  கூறப்பட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தில் கேதார் காண்டத்தில் கலியுகத்தில் தெய்வங்கள் வாசம் செய்யும் இவ்விடத்தில் தங்குவது முக்தி நல்கும் என்று கூறப்பட்டுள்ளது.   கடல் மட்டத்திலிருந்து 1150 மீ உயரத்தில் இமயமலையின் மடியில் பாகீரதியின் கரையில்   இந்நகரம் அமைந்துள்ளது. 
 

 உத்தரகாசியில் பாகிரதியின் அழகு




 இரண்டு நாட்கள் உத்தர காசியில் தங்கினோம்
என்ன செய்தோம்?
மோகன், வைத்தி, தனுஷ்கோடி, தேவராஜன்

 சொக்கலிங்கம், இரவி, கணேசன்,  கோபாலன், ரேணுகா, இராதாகுமாரி, தேவேந்திரன், மனோகரன் 

(நன்றாக சாப்பிட்டுத் தூங்கினோம்) 

பாண்டவர்களின்  பாதம் பட்ட புண்ணிய பூமி இது.  முன்னர் நாம் பார்த்த லாக்ஷாகிரகத்தில் (அரக்கு மாளிகையில்) இருந்து ஸ்ரீகிருஷ்ணரின்  ஆலோசனைப்படி  சுரங்கத்தின் மூலமாக தப்பித்த பாண்டவர்கள் வெளியே வந்த இடம் உத்தரகாசி. மேலும் அர்ச்சுனன் தவம் செய்து பாசுபதஸ்திரம் பெற்ற  இடம் உத்தரகாசி.      ஜமதக்னி முனிவரின் ஆசிரமம் இங்குதான் அமைந்திருந்தது, பரசுராமர் தந்தையின் ஆனைப்படி தன் தாயார் ரேணுகாதேவியின் சிரம் கொய்த பூமியும் இதுதான். ஆயிரமாயிரம் தபோவானர்கள் தவம் செய்த பூமி இந்த பூமி. ஆதி காலத்தில் பாதைகள் இல்லாத போது இந்நகரம்தான் சார்தாம் யாத்திரையின் நுழைவாயிலாக இருந்துள்ளது.  பாகில்ய, இந்திரகீல், வருணாவத், ஐராவத மலைகள் இந்நகரின் நான்கு திசை காவல் அரணாக உள்ளன. இவற்றுள் வருணாவத்   மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.  சித்திரை மாதத்தின்  கிருஷ்ணபக்ஷ திரயோதசியன்று வாருணி என்னும் இந்த வாருணாவத் மலையை கிரி வலம் வரும் விழா நடைபெறுகின்றது.  அன்றைய தினம் முப்பத்து முக்கோடி தேவர்களும் இம்மலையில் வந்து அருளுகின்றனர். தேவர்கள் கூடும் சமௌ கி சௌரி  என்னும் இடம் இந்நகரில் அமைந்துள்ளது. இன்றும் இந்நகரத்தில் உள்ள தெய்வ மூர்த்தங்கள் வருடத்தில் ஒரு நாள் இங்கு கூடி பக்தர்களுக்கு  நடனக்காட்சி அருளுகின்றார்கள்.  ஆதிகாலத்தில் இருந்தே  திபெத்திய வணிகர்கள் இந்நகரத்தில்  கணவாய் வழியாக வந்து வணிகம் செய்துள்ளனர்.  
 
விஸ்வநாதர் ஆலய முன் வாயில் 
 
 உத்தரகாசி விஸ்வநாதர் சன்னதி

உத்தரகாசியில் பல் வேறு திருக்கோயில்கள் உள்ளன. இவற்றுள் முதன்மையானது காசி விஸ்வநாதர் ஆலயம் ஆகும் இங்கு அன்னை திரிசூல வடிவில் வணங்கப்படுகின்றாள். மேலும் ஜெய்ப்பூர் மன்னர் கட்டிய  ஏகாதச ருத்ரர் ஆலயம், ஞானேஸ்வரர் ஆலயம், காளி மாதா ஆலயம்,  பரசுராமர் கோயில். குடேடி தேவி ஆலயம் ஆகிய பல ஆலயங்கள் உள்ளன. ஜடபரதர் மற்றும் பல ஆசிரமங்களும் உள்ளன.  மேலும்  ஜவஹர்லால் நேரு மலையேற்ற பயிற்சிப் பள்ளியும் இவ்வூரில் உள்ளது. இந்நகரம் சில வருடங்களுக்கு முன் கடுமையான நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டு  ஏராளமான சேதம் ஏற்பட்டது. ஆனால் பீனீக்ஸ் பறவையைப் போல எல்லாம் சரி செய்யப்பட்டு இன்று முன்னை விட பொலிவாக விளங்குகின்றது இந்நகரம். 
 மார்க்கண்டனுக்காக யமனை உதைத்த பரமன் சன்னதி

GMVN சுற்றுலா இல்லங்கள் எல்லாம் மிகவும் சிறப்பான முறையில் அருமையான பூங்காக்களுடன் பராமரிக்கப்படுகின்றன. இந்த உத்தரகாசி சுற்றுலா பாகீரதி நதிக்கரையோரம் அருமையான மலர்தோட்டத்துடன் புல்வெளியுடனும் அமைந்துள்ளது. காலை எழுந்தவுடன்  சன்னலை திறந்து சூரிய ஒளியில் மின்னும் பாகீரதியின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அவ்வளவு இரம்மியமான காட்சி பாகீரதி பாயும் அழகை நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம், ஆனால் நாங்கள் தேவையில்லாமல் பேருந்து பழுதாகி விட்டதால் இங்கு மாட்டிக்கொண்டதால் மனது அதில் ஒன்றவில்லை. வழிகாட்டி இங்குள்ள கோவில்களுக்கு சென்று வரலாம் என்று கூறியதால் அப்படியே நடந்து காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு புறப்பட்டு சென்றோம். 
 விஸ்வநாதர் விமானம்

மிகவும் புராதமான ஆலயம், சிவபெருமான் மார்க்கண்டேயனுக்காக யமனை உதைத்த மிருத்யுஞ்செய மூர்த்தியாய் தெற்காக சாய்ந்த வண்ணமும் அன்னை  மலைமகள் பார்வதி பிரமாண்ட திரிசூல வடிவிலும் அருள் பாலிக்கின்றனர் இந்தக்கோவிலில்.  ஸ்கந்த புராணத்தில் கேதார் காண்டத்தில் உத்தர காசியின்  மகிமை இவ்வாறு கூறபப்ட்டுள்ளது.  கலி காலத்தின் காசி இது.  பூமியில் பாவம் அதிகரித்து அரக்கர்கள் நடமாடும் காலத்தில் நான் இமய மாலியில் தங்குவேன் கலை காலத்தில்  கிழக்கு காசியைப் போல வடக்கு காசியும் பெருமை மிக்கதாகவும் விளங்கும் என்று சிவபெருமான் கூறுகின்றார்.  இங்கே சிவபெருமான் சுயம்பு லிங்க ரூபத்தில் அருள் பாலிக்கின்றார். கருவறையில் பார்வதி மற்றும்  கணேசர் சிலைகளும் உள்ளன. வெளியே நந்தியெம்பெருமான் காவல் காக்கின்றார்.  தற்போது உள்ள இக்கோவிலை தெஹ்ரி இராச்சியத்தின் அரசன்  சுதர்சன் சாவின் பாரியாள்  இராணி    கானேடி தேவி 1857l இக்கோவிலை கத்யூரி  அமைப்பில் கற்றளியாக கட்டினாள். பின்புறத்தில் வாரணாவது மலை அருமையான் பின்புலமாக விளங்குகின்றது.  மார்க்கண்டனுக்காக யமனை உதைத்த வரலாறு இத்தல ஐதீகமாக விளங்குகின்றது. எனவே சிவலிங்கம் தெற்கு நோக்கி சாய்ந்துள்ளது, வடநாட்டுக்கோயில்களில் நாமே, பால் , தண்ணீர் அபிஶேகம் சிவபெருமானுக்கு செய்யலாம். இங்கும் நாங்கள் பால் அபிஷேகம் செய்து வில்வம் சார்த்தி விஸ்வநாதரை வழிபட்டோம். 

விஸ்வநாதர் விமானம்
பின் புறத்தில் வார்ணாவத பர்வதம் 

அன்னை இங்கே பிரம்மாண்ட 19.5 அடி உயர திரிசூலமாக வணங்கபப்டுகின்றாள்.  இந்த திரிசூலம்  விஸ்வநாதர் சன்னதிக்கு  நேரெதிராக அமைந்துள்ளது. ஒரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நடந்த போது இந்த திரிசூலம் பய்ன்படுத்தப்படது. இந்த யுத்ததில் திரிசுலம், பரசு, சுதர்சனம் ஆகிய மூன்று ஆயுதங்களின் சக்தி உள்ளது  எனவே தேவர்கள் வெற்றி பெற்ற பின் இந்த திரி சூலத்தை இங்கே ஸ்தாபிதம் செய்தனர்.  அன்றிலிருந்து  இத்திரிசூலம் அம்மனாக வணங்கப்படுகின்றாள்.  நாம் கையால் இந்த சூலத்தை தொட்டால் அது ஆடும் ஆகவே இதன்  அடியைக் காண பிரிட்டிஷார்கள் முயற்சி செய்தார்களாம் ஆயினும் இந்த திரிசூலத்தின் அடியை காண முடியவில்லையாம்.  பிரம்மாண்ட மூன்று தலைகளுடன் பரசு ஒரு பக்கத்துடன்  அருமையாக  அருட்காட்சி தருகின்றது திரிசூலம். மகர சங்கராந்தி சமயத்தில் இங்கு மாஹ் மேளா என்னும் விழா ஒரு வாரகாலம் நதைபெறுகின்றது. அப்போது லக்ஷ கணக்கில் பக்தர்கள் இங்கு கூடி பாகீரதியில்  ஸ்நானம் செய்து விஸ்வநாதரை  வழிபடுகின்றனர். 

திரி சூல ரூபத்தில் பார்வதி மாதா

வெளிப்பிரகாரத்தில் பிரம்மாண்ட அரசமரம் உள்ளது. மேலும் சாக்ஷி கோபால் ஆலயம் மற்றும் மார்க்கண்டேயர் சன்னதி உள்ளன. மேலும் விநாயகருக்கும் துண்டி ராஜனுக்கும் தனி சன்னதிகள் உள்ளன. இங்கு விநாயகர் சதுர்த்திக்கு அதிக முக்கியத்துவம் இல்லை போல தோன்றியது.  அருகில் இருந்த ஒரு இராமர் கோவிலுக்கு சென்று விட்டு வரும் போது  இக்கோவிலின் மரத்தடியில் இரண்டு சாதுக்களை பார்த்தோம் அதில் ஒருவர் 10  அடி ஜடாமுடியுடன் அமர்ந்திருந்தார்.  இவர் தமிழில் பேசி எங்களை ஆச்சிரியப்படுத்தினார். சிறு வயதில் பஞ்சகாலத்தில் இங்கு ஓடி வந்தவர்,   இங்கேயே சந்நியாசி ஆகி தங்கி விட்டாராம். அவர் அருகில் இருந்தவர் வங்காளத்தை சேர்ந்தவராம் இவர்கள்  அமாவாசையன்று  அன்னதானம் செய்து வருகின்றோம் என்று கூறினார். நாங்கள் அன்னதானத்திற்கு பணம் கொடுத்த போது அதை கைகளினால் வாங்கவில்லை. தரையில் வைத்துவிடச்சொன்னார். பூமியில் பட்ட எதுவும் தானம் இல்லையாம் எனவே தரையில் வைக்க சொன்னார்.


ஒரு அழகிய ரோஜா மலர்  

விஸ்வநாதரை திவ்யமாக தரிசனம் செய்துவிட்டு வந்த பிறகு  சுற்றுலா இல்லம் சென்றோம். மதிய உணவு உண்ட பின் மற்ற கோவிகள்ளையும் நேரு மலையேற்ற பயிற்சி பள்ளியையும் சென்று காணலாம் என்று வந்தோம், ஆனால் உணவு உண்டபின், உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்றபடி ஒரு வாரமாக பயணம் செய்து கொண்டு இருப்பதால் மிகவும் அசதியாக இருந்ததால் சென்று ஒய்வெடுத்தோம்.   இன்றைய தினம் இவ்வாறு உத்தர காசியில் கழிந்தது. இனி அடுத்த நாள் என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் காணலாமா? அன்பர்களே.

Wednesday, November 23, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -6


ஓம் நமசிவாய


பர்கோட்டிலிருந்து யமுனோத்ரி பயணம்



பர்கோட் GMVN சுற்றுலா விடுதி


பர்கோட் என்னும் இந்த சிறு நகரம் ஒரு சந்திப்பு ஆகும். ரிஷிகேசிலிருந்து யமுனோத்ரி செல்பவர்கள் இரு வழியாக இவ்விடத்தை அடையலாம். முதலாவது நாங்கள் பயணம் செய்த முசோரி, யமுனா பாலம், டம்டா, நௌகான் வழியாக 157 கி.மீ பயணம். இரண்டாவது வழி . நரேந்திரநகர், சம்பா, தெஹ்ரி, தாராசு, பிரம்மகால் வழியாக 175 கி.மீ பயணம்.

இந்த பாதை வழிகளின் விவரம்

புறப்படும் இடம்- செல்லும் இடம்- தூரம் கி.மீ - உயரம் மீ
ரிஷிகேஷ் - முசோரி- 36- 1921
முசோரி- கெம்ப்டி அருவி- 12- 1524
கெம்ப்டி அருவி- யமுனா பாலம்- 16- 772
யமுனா பாலம்- டம்டா- 25- 1372
டம்டா- நௌகான்- 28- 1524
நௌகான்- பர்கோட்- 11- 1828
பர்கோட்- சயானாசட்டி- 29 -1982
சயானாசட்டி- ஹனுமான்சட்டி- 5 -2134
ஹனுமான்சட்டி- பூல்சட்டி- 5- 2561
பூல்சட்டி- ஜானகிபாய் சட்டி- 3- 2576
ஜானகிபாய் சட்டி-யமுனோத்ரி- 5- 3323 (நடை)

இரண்டாவது வழி

ரிஷிகேஷ்- நரேந்திர நகர்- 16-1067
நரேந்திர நகர்-சம்பா- 46- 1524
சம்பா- தெஹ்ரி- 21- 770
தெஹ்ரி- தாராசு- 37- 1036
தாராசு- பிரம்மகால்- 15- 1158
பிரம்மகால்- பர்கோட்- 40- 1828
பர்கோட்டிலிருந்து மேலே சொன்ன வழிதான். இதில் தற்போது ஜானகிபாய் சட்டி வரையிலும் வண்டியில் செல்ல இயலும் அதற்கு மேல் நடை பயணம்தான். (சட்டி : என்றால் தங்கும் இடம் என்று பொருள்)

உயரத்தைப்பார்த்தால் நாம் எவ்வாறு , மலை மலையாக ஏறி இறங்கி பயணம் செய்கின்றோம் எனப்து விளங்கும்.

மேலும் இவ்வூரிலிருந்து கங்கோத்திரிக்கும் ஒரு பாதை செல்கின்றது இரண்டாவது வழியில் பர்க்கோட்டிலிருந்து தெஹ்ரி வரை சென்று பின்னர் உத்தரகாசி சென்று கங்கோத்ரியையும் அடையலாம். இப்பதிவில் நான்கு தலங்களுக்கு செல்லும் பாதை வரைபடமும்(Road Map) கொடுத்துள்ளேன்.


சார்தாம் பாதை வரைபடம்
(படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)


பர்கோட் அருமையான இயற்கை சுழ்நிலையில் அமைந்துள்ளது. ஒரு பக்கம் ஓங்கி உலகளந்த உத்தமன் போல பச்சை மேனியுடன் நெடிதுயர்ந்த இமயமலை கீழே பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது இந்நகரம். இங்கிருந்து பந்தர்ப்பூஞ்ச் மலையை பார்க்க முடியும். முதலிலேயே சொல்லிவிட்டதால் உணவு தயாராக இருந்தது, ஒன்றை மட்டும் இங்கே குறிப்பட விரும்புகிறேன். சாதத்திற்காகவும் இவர்கள் நாம் பிரியாணி செய்ய பயன்படுத்தும் பாஸ்மதி அரிசியைத்தான் பயன்படுத்துகின்றனர். சுவையானதாக இருந்தாலும் அதிகம் சாப்பிடமுடியாது. மேலும் குளிர்பிரதேசம் என்பதால் கோதுமை சப்பாத்தி சாப்பிடுவது நல்லது. எங்கள் குழுவில் சிலருக்கு இந்த உணவு சேரவில்லை. யமுனோத்ரி தரிசித்து விட்டு திரும்பி வரும் போது இங்கு ஒரு நாள் இரவு தங்க வேண்டும் என்று எங்கள் வழிகாட்டி கூறினார். பர்கோட் ஒரு சிறிய நகரம் யமுனோத்ரி செல்லும் வழியில் எதுவும் கிடைக்காது என்பதால் உங்களுக்கு வேண்டிய மருந்து மற்றும் அவசிய பொருட்களை இங்கேயே வாங்கிக்கொள்ளுங்கள்.

பர்கோட் GMVN சுற்றுலா விடுதி பூங்கா

தாங்கள் காண்கின்ற இந்த கட்டிடம்தான் பர்கோட்டில் உள்ள GMVN தங்கும் விடுதி. விடுதியின் வர்ணத்தைப் பாருங்கள் பச்சை நிறம். எங்கிருந்தாலும் நீங்கள் உடனடியாக அடையாளம் கண்டு கொள்ளலாம். அதே சமயம் மழை இவ்வாறு தாறுமாறாக பெய்வதற்கு உலக வெப்பமயமாதல் (Global Warming) ஒரு காரணம் அல்லவா? ஆகவே காடுகளை நாம் காக்க வேண்டும், மரங்களை வெட்டக்கூடாது, சுற்றுசூழலை மாசு படாமல் காக்க வேண்டும் என்பதையும் இது குறிப்படுகின்றது.

மதிய உணவிற்குப்பின் யமுனோத்திரிக்காக வண்டியில் கிளம்பினோம்.கிளம்பும் போதே ராணா சட்டி அருகில் ஒரு நிலச்சரிவு என்ற செய்தி கிடைத்தது. சிறிது தூரம் சென்றதும் பாதை இரண்டாகப் பிரிந்தது இடப்பக்கம் செல்லும் பாதை யமுனோத்திரிக்கும், வலப்பக்கம் செல்லும் பாதை கங்கோத்திரிக்கும் செல்கின்றது. இடப்புறம் செல்லும் பாதையில் திரும்பி சிறிது கீழே இறங்கி யமுனை நதியை கடந்து பயணம் தொடர்ந்தது. இதற்கப்புறம் பாதை ஒரே எற்றம் யமுனையும் மெலிந்து கொண்டே ஒடிக்கொண்டிருந்தாள் ஏனென்றால் உற்பத்தி ஸ்தானத்திற்கு அருகில் செல்கின்றோம் அல்லவா?


அஸ்னால் காட் சுற்றுலா விடுதி

உயரம் அதிகமாகிக்கொண்டே வந்ததால் மலைகள் செங்குத்தாகவும் மற்றும் குறுகலாகவும் ஆனது. மரங்கள் நெட்டையாகிக்கொண்டே வந்தன. வெறும் கூம்பு வடிவ பைன் மரங்களும், தேவதாரு மரங்களும் தான் மேலே உள்ளன. நடுநடுவே சிறு கிராமங்கள், பாலங்களில் பல இடங்களில் யமுனையை கடந்து இரு கரையிலுமாக பயணம் செய்தோம். மலைப் பிரதேசம் மாசு படாத சுத்தமான ஈரகாற்றை சுவாசித்து தெம்படைந்தோம். நம் நகரங்களில் வெறும் பெட்ரோலியம் புகையைத்தானே சுவாசிக்கின்றோம். பாதை மலை பெய்ததினாலோ என்னவோ? என்று நினைத்தோம் ஆனால் பாதை இரட்டிப்பு வேலை நடைபெறுவதால் பாதை தோண்டப்பட்டதாலும் மழை அதிகமாக பெய்ததாலும் பாதை இவ்வாறு இருப்பதாக வழிகாட்டி கூறினார் மிகவும் மோசமாக இருந்தது. தார் சாலையே இல்லை வெறும் சேறும் சக்தியுமாகத்தான் இருந்தது. வண்டி ஒட்டுனர் எறும்பு ஊர்வது போல வண்டியை உருட்டிகொண்டே சயானாசட்டியை கடந்து ராணாசட்டி அடைந்தார். நிலச்சரிவை சரி செய்திருந்தனர். அதற்கு மேல் வண்டியை ஓட்ட பயந்தார் ஏனென்றால் மறுபடியும் நிலச்சரிவு ஏற்பட்டால் திரும்பி பெரிய வண்டியில் வருவது கடினம் என்று. ஆகவே வழிகாட்டில் அங்குள்ள இரண்டு ஜீப்களில், அவர்கள் செலவில் எங்களை அஸ்னால் காட் என்னும் இடத்தில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்றார் ஏனென்றால் ஜானகி பாய் சட்டியில் 13 பேர் தங்கும் வசதியில்லை.


காலையில் பனி மூட்டம்

யமுனோத்ரி கிளம்புகின்றோம்

இரவு குடும்பத்தினர் ஒரு அறையிலும் மற்றவர்கள் Dormitaryயிலும் தங்கினோம். இரவு வெகுநேரம் மின்சாரம் இல்லாமல் இருந்தது. சாப்பிடும் சமயம் ஒரு மணி நேரத்திற்கு மட்டும் ஜெனரேட்டரை போட்டனர். அப்போது எங்களுடைய கைப்பேசிகள், புகைப்படக் கருவிகளை சார்ஜ் செய்து கொண்டோம். எனவே இந்த யாத்திரையின் போது டார்ச் லைட் அல்லது மெழுகுவர்த்தி, தீப்பெட்டி வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். சிறிது நேரம் ரஜாய்க்குள் குளிருக்கு இதமாக பயண களைப்பு தீர ஒய்வு எடுத்துக் கொண்டு சுட சுட ரொட்டி (சப்பாத்தி) தயார் ஆனவுடன் சாப்பிட்டு விட்டி சிறிது நேரம், இந்த க்ஷேத்திரங்களின் புராணங்களைப் பற்றி விவாதித்து விட்டு படுக்க சென்றோம். நாம் எந்த ஸ்தலத்திற்கு சென்றாலும் அந்த தலத்தின் புராண வரலாற்றை அறிந்து கொண்டால், எதோ எம்புருஷனும் கச்சேரிக்குப் போறான் என்பது போல இல்லாமல் யாத்திரை மிகவும் பொருள் பொதிந்த்தாக இருக்கும் எனவே இப்பதிவுகளில் தங்களுக்கு இந்த ஸ்தலங்களைப் பற்றிய பல தகவல்கள் கிட்டும்.


ஜானகி சட்டி சுற்றுலா மாளிகை

இரவே மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. காலையில் எழுந்து பார்த்தால் ஒரே பனி மூட்டம் எதிரே இருந்த மலை சிகரங்கள் கண்ணில் படவில்லை. உயர் மட்டங்களில் எவ்வளவு சீக்கிரம் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விடுகின்றோமோ அவ்வளவு நல்லது. எனவே ஆறு மணிக்கெல்லாம் வெந்நீரிலே குளித்து அனைவரும் தயாராகி விட்டு மழை சிறிது குறைவதற்காக காத்திருந்தோம். மலையேறும் போது அதிக சாமான்களை எடுத்து செல்ல வேண்டாம். சுமார் ஏழு மணி அளவில் மழை கொஞ்சம் மட்டுப்பட்டது வெளிச்சமும் கூடியது ஜீப் மூலம் மழைக்கோட் அணிந்து கொண்டு ஜானகி சட்டி அடைந்தோம்.



ஜானகிபாய் சட்டி அடைவதற்கு முன் ஹனுமான் சட்டி என்ற இடம் உள்ளது. அஷ்ட சஞ்ஜீவிகளில் ஒருவரான அனுமன் இலங்கையை எரித்த பின் தனது வாலை இங்கு வந்து அணைத்ததாக ஐதீகம். மேலும் கங்கோத்ரியையும் யமுனோத்ரியையும் இணைக்கும் மலைத்தொடர் பார்ப்பதற்கு குரங்கின் வால் போல் உள்ளதால் இந்த மலை பந்தர்பூஞ்ச் ( பந்தர்= குரங்கு, பூஞ்ச் = வால்) என்றும் அழைக்கபப்டுகின்றது. இம்மலையிலிருந்து ஹனுமான் கங்கா நதி ஒடி யமுனையில் கலக்கின்றது. ஜானகி பாய் என்னும் மூதாட்டி யமுனா மய்யா ( யமுனை அன்னை )விடம் மிகவும் பக்தி கொண்டு அன்னையை வணங்கி வந்ததால் இந்த கிராமத்திற்கு அவர் ஞாபகார்த்தமாக ஜானகிபாய் சட்டி என்னும் பெயர் வந்தது. சட்டி என்றால் யாத்திரிகள் தங்கும் இடம் என்று முன்பே பார்த்தோமல்லவா? இங்கிருந்து இரண்டு கி.மீ தூரத்தில் கர்சாலி என்ற கிராமம் உள்ளது. யமுனை அன்னை குளிர் காலத்தில் இக்கிராமத்தில்தான் வந்து தங்குகின்றாள்.


ஜானகிபாய் சட்டி சுற்றுலா விடுதி



ஜானகி சட்டியில் காலை உணவை முடித்துக்கொண்டு யமுனோத்திரிக்கான நடைபயணத்தை துவங்கினோம். அகலமான பாதைதான் பல இடங்களில் படிகளும் உள்ளன. ஆனால் ஒரே ஏற்றம் சுற்றி சுற்றி மலையேற வேண்டும். நடக்க முடியாதவர்களுக்கு என்ன வசதிகள் உள்ளன என்ற எண்ணம் தோன்றுகிறதா? முதலில் போனிகள் எனப்படும் (கோவேறு) குதிரைகள் உள்ளன. குதிரையில் பயணம் செய்யும் போது ஜாக்கிரதையாகதான் பயணம் செய்யவேண்டும். இயல்பிலேயே இவை மலையை ஒட்டி செல்லுகின்றன. ஏற்றத்தில் முன்னால் குனிந்து கொண்டும், இறக்கத்தில் பின்னால் சய்ந்து கொண்டும் எப்போதும் கால்களை சேணத்தில் சரியாக வைத்துக்கொண்டும் பயணம் செய்வது நல்லது. முதலில் பயம் இருக்கக்கூடாது. மலையை ஒட்டி குதிரை செல்லும் போது மேலே உள்ள பாறைகளை கவனித்து தலையையும் உடலையும் வளைத்து நாம்தான் சமாளித்துக்கொள்ள வேண்டும். நாம் நம்முடைய போர்வை ஒன்று எடுத்து சென்றால் அதை நாம் சௌகரியமாக குதிரையின் மேல் அமர்வதற்கு பயன்படுத்திக்கொள்லலாம். குதிரையிலும் முடியாத வயோதிகர்கள் தண்டியில் பயணம் செய்யலாம். இது பல்லக்கு போன்றது.

தண்டியில் ஒரு மூதாட்டி

இதை நான்கு பேர் சுமந்து செல்கின்றனர். நான்கு பேரும் ஒருமித்து இராணுவ வீரர்கள் நடை போட்டு செல்வது போல செல்லும் அழகே ஒரு அழகு. அதுவும் அடங்காமல் குதிரைகள் இவர்கள் மேல் மோதுவது போல் வருவதைப் பார்க்கும் எவரும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. இதல்லாமல் பிட்டு என்னும் கூடையில் சிறு குழந்தைகளை உட்கார வைத்து ஒருவர் தூக்கிச் செல்லும் வசதியும் உள்ளது. அதுவே பெரியவர்களாக இருந்தால் காலை தொங்கவிட்டுக் கொண்டு அமர்ந்து செல்லலாம் இதற்கு கண்டி என்று பெயர். சாமான்களை எடுத்துச்செல்ல கூலிகள் கிட்டுவார்கள். இவர்கள் எல்லாரிடமும் அரசு வழங்கிய அடையாள் அட்டை இருக்கும் அதை வேண்டுமென்றால் வாங்கி பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வோரு ஆண்டும் உத்தராகாண்ட் அரசு இவற்றுக்கான கட்டணம் நிர்ணயம் செய்கின்றது அதிக கிராக்கி இருந்தால் கட்டணம் அதிகமாகும் என்பது போல் யாத்திரிகளின் கூட்டத்தை பொறுத்து விலை மாறுபடுகின்றது. சீசன் சமயத்தில் கட்டணம் அதிகமாக இருக்கும் அதே செப்டெம்பர் அக்டோபர் மாதங்களில் கட்டணம் குறைவாக இருக்கும்.


20ரூபாய் மழைக்கோட்டில் இருவர்


அழகிய வெள்ளை செம்பருத்திப்பூ

நாங்கள் நடை பயணத்தை துவக்கும் போதும் மழை தூறிக்கொண்டு இருந்தது. இங்கு 20 ரூபாய்க்கு ஒரு தடவை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக மழைக் கோட்டுகள் கிடைக்கின்றன. மழைக்கோட்டு கொண்டு வராதவர்கள் அதை வாங்கிக்கொண்டனர். எங்களில் மூன்று பேர் குதிரையிலும் மற்றவர்கள் நடந்தும் யமுனோத்திரிக்கு கிளம்பினோம். செல்லும் வழியில் யமுனையைப் பற்றிய கதைகள் சிலவற்றை சொல்லுகிறேன். கேட்டுக்கொண்டே தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.


யாத்திரை இன்னும் தொடரும்.......