Showing posts with label குப்தகாசி. Show all posts
Showing posts with label குப்தகாசி. Show all posts

Thursday, November 10, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -54

குப்தகாசி 


உத்தராகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாகை மாவட்டத்தின் ஒரு பெருநகரம் குப்தகாசி. திருக்கேதாரத்திற்கு 47 கி.மீ தூரத்தில் 1319மீ உயரத்தில் சௌகம்பா பனிச்சிகரங்களின் மடியில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரில் காசிக்கு சமமான விஸ்வநாதர் ஆலயம்  உள்ளது. பாண்டவர்கள் தங்கள் பாவம் தீர சிவபெருமானை தேடி காசி சென்ற போது அவர்களுக்கு காட்சி தராமல் திருக்கயிலாயத்திற்கு வந்து விட்டார். அவரைத் தேடி இமயமலை வந்தபோது ஐயன் இவ்விடத்தில் நந்தி ரூபத்தில் மறைந்ததால் இவ்விடம் மறைவு என்ற பொருளில் குப்த்(காசி) என்ற திருப்பெயர் பெற்றது. பின்னர் பாண்டவர்கள் கௌரிகுண்டத்தின் அருகில் எம்பெருமானைக் கண்டனர்.




காசியில் உள்ளது போலவே எம்பெருமான் விஸ்வநாதராக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். வாருங்கள் விஸ்வநாதரை சேவிக்கலாம். சாலையிலிருந்து மிக உயரத்தில் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 100  படிகள் ஏறிச்செல்ல வேண்டும் சந்து போன்ற வழி இரு பக்கமும் கடைகளும், வீடுகளும் அமைந்துள்ளன. வீட்டிற்கு தண்ணீர் கொண்டு வரும் குழாய்கள் சேதமடைந்து தண்ணீர் ஒழுகுவதால் பாதை முழுவதும் ஈரமாக இருந்தது. 


 திரிவேணி சங்கமம்

சுவின் வாய் வழியாக கங்கையும், யானையின் வாய் வழியாக யமுனையும் அந்தர்வாகினியாக சரஸ்வதியும் சங்கமம் ஆவதாக ஐதீகம்  

இமயமலை ஆலயங்களைப் போல நெடிய கோபுரம், அர்த்தமண்டபத்துடன் அமைந்துள்ளது குப்தகாசி ஆலயம். கோபுர கோட்டத்தில் சிம்மம். தாமரை மலர்கள் கோபுரத்தை அலங்கரிக்கின்றன. சிங்கி-பிங்கி எனும் துவாரபாலகர்கள் ஆலயத்தை காவல் காக்கின்றனர்.  கருவறையில் சிவலிங்க ரூபத்தில் அருள்பாலிக்கின்றார் விஸ்வநாதர். அவருக்கு எதிரே அருமையான  மாலை மற்றும் நுண்ணிய  வேலைப்பாடுகளுடன் பஞ்சலோக சிறிய  நந்தியெம்பெருமான்.  அர்த்தமண்டபத்தில்  இடப வாகனத்தில் வராகர் மற்றும்  யானை வாகனத்தில் மஹாலக்குமி சிற்பங்கள் அருமை.


ஆலய வளாகத்தில் உள்ள சில சிலைகள்


சிவபெருமான் கௌரியன்னையை இங்குதான் பெண் கேட்டார் என்று ஒரு ஐதீகம் உள்ளது. அவுரங்கசீப் காசி ஆலயத்தை அழித்து மசூதியாக மாற்றியபோது விஸ்வநாதர் இங்கு வந்தவர் இங்கேயே தங்கி விட்டார் என்று ஒரு சாரார் நம்புகின்றனர்.


அர்த்தநாரீஸ்வரர்

ரிஷபத்தின் மேல் அமர்ந்த கோலம்  ஒரு தனி சிறப்பு
திருமுகத்தில் ஒரு புறம் வீரமும் மறுபுறம் நளினமும் தோன்றும் அழகை கவனியுங்கள்

விஸ்வநாதர் ஆலயத்திற்கு இடப்பக்கம்  இன்னொரு சிறு சன்னதி உள்ளது. அது அர்த்தநாரீசுவரர் சன்னதி. இவ்வாலயத்தில் இடபத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் ஆண்பாதி பெண்பாதி கோலத்தில் சிவசக்தின் பளிங்குமூர்த்தமாக அருள் பாலிக்கின்றார். இடப்பக்கம் மூக்குத்தி, அக்கமாலை, சுவடி திருப்பாதங்களில் கொலுசு, வலப்பக்கம் நாகம், இளம்பிறை,  திரிசூலம் திருப்பாதங்களில் நாகம்  என்று அருமையாக அமைத்துள்ளார் சிற்பி. மிகவும் அருமையான மூர்த்தம். சிவசக்தி மேல் வைத்த கண்ணை அவ்வளவு சீக்கிரம் எடுக்க முடியவில்லை அவ்வளவு அழகு. பின்புறம் அன்னபூரணிக்கு ஒரு சிறு சன்னதி உள்ளது.


அருமையான கலைநுணுக்கத்துடன் கூடிய நந்தி


இவ்வாலயத்தின் சிறப்பு மணிகர்ணிகா குண்டம் ஆகும். இக்குண்டம் திரிவேணி சங்கமம் என்றும் அழைக்கப்படுகின்றது. ஐயன் பாண்டவர்களுக்கு தரிசனம் தந்து மறைந்தபோது அவர் சடாமுடியில் இருந்த கங்கையும் யமுனையும் இன்றும் இக்குண்டத்தில் பாய்கின்றனர் என்று ஐதீகம். கோமுகத்திலிருந்து கங்கையும், யானை முகத்திலிருந்து யமுனையும் குண்டத்தில் பாய்கின்றனர். அந்தர்வாகினியாக சரசுவதி சங்கமம் ஆகின்றாள் என்பது ஐதீகம். எனவே இக்குண்டத்தில் நீராடினால் திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். 


பாண்டவர்கள் ஐயனைத்தேடிய புராணத்தை கூறுகின்றார்

அடியோங்கள் சென்ற சமயம் மதில் சுவர் மராமத்து வேலைகள் நடந்து கொண்டிருந்தன, காசி விஸ்வநாதரை அருமையாக தரிசித்தபின் காளிதாசனுக்கு அருளிய காளியை தரிசிக்க சென்றோம் தாங்களும் உடன் வாருங்கள் அன்பர்களே. 
                                                            யாத்திரை தொடரும் . . . . . . .

Sunday, October 30, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -48

2016 வருட யாத்திரை

இத்தொடரை சென்ற தடவை முடித்த போது எழுதிய வார்த்தைகள் இவை.

இத்துடன் இத்தொடர் நிறைவு பெற்றது.  இன்னும் பஞ்ச கேதார் யாத்திரை, டோலி யாத்திரை, நந்தா தேவி உற்சவம் என்று  எத்தனையோ யாத்திரைக்கான  செய்ய வாய்ப்புக்கள் உள்ளன.அவன் அருள் இருந்தால் அந்த யாத்திரை விவரங்களையும் அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


இமயமலை  என்பது ஒரு காந்தம் போல  ஒரு தடவை அங்கு சென்றவர்கள் மறுபடியும், மறுபடியும் அங்கு செல்வார்கள். மும்முறை தொடர்ச்சியாக  இமயமலையில் இனிய யாத்திரை  செல்ல வாய்ப்புக் கிட்டியது. 2013ல் இமாலய பெருவெள்ளம் ஏற்பட்டது எனவே இருவருடங்கள் பத்தியுலா தடைப்பட்டது. 

பெருவெள்ளத்தால் தடைபட்ட யாத்திரை பின்னர் 2015ல் தொடர்ந்தது. இவ்வருடம் நான்கு நாட்கள் பத்தியுலாவாக  அமைந்தது,   பத்ரிநாத் மட்டுமே சென்றோம். டெல்லியில் இருந்தே வாகனம் அமர்த்திக்கொண்டோம், வழக்கம் போல் ரிஷிகேசத்தில் போக்குவரத்து அலுவலகத்தில் தாமதம் ஆனது. செல்லும் வழியில் ஒரு குருத்துவாராவில் இலங்காரில் பிரசாதம் உண்டோம். இரவு பீப்பல்கோட்டிற்கு சற்று முன்னர் உள்ள ஒரு தர்மசாலையில் தங்கினோம். மறுநாள் திருவதரி அடைந்து  பத்ரிநாதரை தரிசித்தோம். மாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் சேவித்தோம். மானா கிராமம் சென்று வந்தோம். சயன ஆரத்தி சேவித்தோம். காலையில் திருமஞ்சனகோலம் சேவித்து வெளியே வந்த போது இந்திரநீல பருபதத்தின் அருமையான வர்ண ஜாலத்தை தரிசித்தோம்.  கருக்கலில் பனியில் மின்னிய சிகரம் அருணன் உதிக்க மெல்ல மெல்ல இளஞ்சிவப்பாக மாறி பின்னர் பொன் போல மின்னி இறுதியில் அன்னத்தூவிப்போல  தூயவெள்ளை நிறமாகிய   வர்ண ஜாலத்தை, இந்திர ஜாலத்தை அருமையாக தரிசித்தோம். பின்னர் வரும் வழியில் தேவப்பிரயாகையில் புருடோத்தமனை சேவித்தோம். மெல்ல மெல்ல இம்மாநிலம் வெள்ள சேதத்திலிருந்து மீண்டு வருவது தெரிகின்றது.

மறு வருடமும் (2016) இறைவன் அருள்பாலித்தார் இவ்வருடம் பெங்களூர் அன்பர் சதோபந்த் யாத்திரை செல்ல விழைந்தார், ஒரு சிலர் மறுமுறை கேதாரீஸ்வரரை தரிசிக்கலாம் என்று கூறினர். ஆகவே அவரவர் விருப்பபடி செல்ல முடிவானது. இவ்வருடம் மொத்தம் ஒரு வாரம் யாத்திரை என்பதால் திருக்கேதாரம் சென்றவர்கள் திரியுக நாராயணன், குப்தகாசி, காளிமத், ஊக்கிமத், கோபேஸ்வர்,  பஞ்ச பத்ரிகளில் ஒன்றான தியானபத்ரி, பஞ்சகேதாரங்களில் ஒன்றான கல்பேஸ்வரம், ஆகிய முன்னர் தரிசிக்காத தலங்களை  தரிசிக்க முடிந்தது. இத்தலங்களின்  சிறப்பை இனி வரும் பதிவுகளில் காணலாம் அன்பர்களே. 


வழக்கம் போல் டெல்லிக்கு விமானத்தில் கிளம்பினோம்




டெல்லியில் சப்தர்ஜங் என்க்லேவ் கிருஷ்ண மந்திரத்தில்  உடுப்பி ஸ்ரீகிருஷ்ணரையும்   ஹனுமனையும், இராகவேந்திரையும் தரிசித்தோம் 


உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் 



ஹனுமன் 

இராகவேந்திரர் பிருந்தாவனம் 







யாத்திரை குழுவினர் 

டெல்லியிலிருந்து ஜன்சதாப்தி  தொடர்வண்டி மூலம் ஹரித்வாருக்குச் சென்றோம். 


ஹரித்வாருக்கு   தொடர்வண்டிப்பயணம் 


ஹரித்வாரத்தில்  மத்வாசிரமத்தில் தங்கினோம், 
கங்கையில் நீராடினோம். 

டெல்லியிலிருந்து வாகனம் அமர்த்திக்கொண்டு சென்றால் ரிஷிகேசத்தில் போக்குவரத்து அலுவலகத்தில் தாமதம் ஆகிவிடுகின்றது என்பதால் இவ்வருடம் ஹரித்துவாரத்தில் இருந்து வாகனம் அமர்த்திக் கொண்டோம். அதிகாலையில் ஹரித்வார் மத்வாவச்ரமத்திலிருந்து புறப்பட்டு வழியில் உள்ள பிரயாகைகளை பார்த்துக்கொண்டு சுமார் ஒரு மணி அளவில் ருத்ரப்பிரயாகையை அடைந்தோம். ஒரு வாகனம் நேரே பத்ரிநாத் செல்ல இன்னொரு வாகனம் திருக்கேதாரத்திற்காக திரும்பியது. 

வழியில் மழை பொழிந்தது 



பாகீரதியும் அலக்நந்தாவும் ச‘ங்கமமாகி கங்கையாக மாறும் புனித இடம் தேவப்பிரயாகை என்று அழைக்கப்படும் கண்டம் என்னும் கடிநகர்  திவ்யதேசம் 


 ஓர் அருவி 



 குப்தகாசிக்கு அருகில் உள்ள ஃபடா கிராம ஹெலிகாப்டர் தளம்.




மாலை 4மணி அளவில் குப்தகாசியை அடைந்தது. அங்கு திருகேதாரத்திற்கான கட்டாய வருகைப் பதிவை முடித்துக்கொண்டு  ஃபடா என்ற இடத்திலிருந்து  மறுநாள் திருக்கேதாரம் செல்வதற்கு   ஹெலிகாப்டருக்காக  முன்பதிவு செய்தோம். ஒருவருக்கு ரூ 7000/-  வானிலை சரியாக இருந்தால் அதிகாலையிலேயே அனுப்பிவிடுகிறோம் என்று உறுதியளித்தனர். உடல் எடை  90கிலோவிற்கு அதிகமாக உள்ள அடியார்களுக்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டது. சமயம் இருந்ததால் வெகு நாட்களாக செல்லவேண்டும் என்று நினைத்த திரியுக நாராயணர் ஆலயம் சென்றோம். 


யாத்திரை தொடரும் . . . . . . .