Showing posts with label மஹா கும்பாபிஷேகம். Show all posts
Showing posts with label மஹா கும்பாபிஷேகம். Show all posts

Thursday, October 31, 2013

முத்தான முத்துக் குமரன் கும்பாபிஷேகம் -3

முன் பதிவில் மூலவர் கந்த சுவாமி எவ்வாறு தானே தன் அன்பனுருக்கு கனவில் வந்து தன்னை காட்டி இங்கு வந்து கோவில் கொண்டார் என்பதையும், மஹா கும்பாபிஷேகத்தன்று மாலை வன வள்ளி திருக்கல்யாண காட்சிகளையும், உற்சவ மூர்த்திகளின் அலங்காரத்தையும் கண்டு களித்தீர்கள்.  

இப்பதிவில் உற்சவர் முத்து குமார சுவாமி ஏன் முத்துக்களுடன் விளங்குகின்றார் என்ற உண்மையையும், அனைத்து மூர்த்திகளின் தங்க வாகன சேவைகளையும் கண்டு களியுங்கள்.  

அன்பர்களின் தோளில் ஆடி ஆடி புறப்பாடு கண்டருளும் 
சிவசக்தி


முத்துக்குமார சுவாமி புறப்பாடு


புதிதாக வர்ணம் தீட்டப்பட்டுள்ளதால் எழிலாக ஒளிரும் சுதை சிற்பங்களை காணுங்கள் அன்பர்களே.


தங்க சிம்ம வாகனத்தில்   விநாயகர்  முன் செல்ல ....

தங்க யாணை வாகனத்தில் அம்மையப்பர் திருவீதி உலா 


எழிலாக மலர்கள்களால் அமைக்கப்பட்டுள்ள பிரபையை பாருங்கள், கால புருஷன் மற்றும் பறக்கும் பச்சை கிளிகள் அருமையோ அருமை. படங்களை  பெரிதாக்கிப் பாருங்கள்.





தங்க கேடயத்தில் மீனாக்ஷி அம்பாள் 
அம்மனுக்கு வேறு மலர் அலங்காரம் 




சிறந்த சிற்பத்திற்காக ஜனாதிபதி பரிசு பெற்ற சூரபத்மன் வாகனம். வாகனத்தின் சிரசிலிருந்து பாதம் வரை செய்துள்ள வேலைப்பாட்டை கவனியுங்கள் அன்பர்களே. 


சூரபத்மன் வாகனத்தில் வீரபாகு

முருகனுக்காக சூரபதமனிடம் தூது சென்ற  நவ வீரர்களின் முதல்வரான வீரபாகு தேவர் இன்றைய தினம் சூரபத்மன் வாகனத்தில் திருவீதி உலா கண்டருளுகிறார்.  



சூரபதமன் வாகனத்தின் பின்னழகு


மூலவராக எம்பெருமான் இக்கோவில் வந்து எழுந்தருளியதும் ஒரு அற்புத லீலை, அதே போல உற்சவராக முத்துக்குமார சுவாமியாக எழுந்தருளி அருள் பாலிப்பதும் ஒரு அற்புத லீலைதான். அந்த அழகன் முருகனை, சிங்கார வேலனை, உற்சவராக வார்த்தெடுத்து எழில் கொஞ்சும் அந்த திருமுகத்தை அமைக்க தலைமை சிற்பி உளி கொண்டு செதுக்க முற்பட்டார், ஆனால் அவருக்கு கிடைத்ததோ ஒரு மின்னல் அதிர்ச்சி, அலமலந்து விட்டார் அவர் அப்படி ஒரு அதிர்ச்சி அவருக்கு கிடைத்தது. எனவே அவர் சிலையை செப்பனிடுவதை விடுத்து அப்படியே கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டார். அவர்களும் உற்சவர் உக்ரமாகவும், சக்தி உடையவராகவும் அமைந்து விட்டார் என்று எண்ணி அவரை வணங்க அஞ்சி ஒரு அறையில் வைத்து வெகு நாட்கள் பூட்டி வைத்து விட்டனர். பின்பு அந்த எம்பெருமானின் அருளால் ஒரு முருக பக்தர் வந்து பல் வேறு பூஜைகள் சாந்திகள் செய்து முத்துக் குமார சுவாமியின் உக்ரத்தை குறைத்த பின் மீண்டும் அவரை வழிபடத் தொடங்கினர். இன்றும் முத்து குமார சுவாமியின் உடம்பு முழுவதும் முத்துக்களாக இருப்பதையும், வலது கண் அப்படியே முழுமை பெறாமல் இருப்பதையும் இன்றும் நாம் காணலாம். தாயார் இருவரும் அவ்வாறே சிறு சிறு முத்துக்களுடன் விளங்குவதையும் காணலாம். எனவே மூலவரைப் போலவே இத்தலத்தில் உற்சவரும் சிறப்பு வாய்ந்தவர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கச்சி வரதராஜப்பெருமாள்கள் ஆகியோரின் திருமுக மண்டலங்களில் முத்துக்கள் உள்ளது போல அந்த மால் மருகன் முகத்திலும் முத்துக்கள், எனவே அந்த அழகன் முருகனை தங்கக் கவசம் பூட்டி பாதுகாக்கின்றனர் இத்தலத்தில், கந்த வேளுக்கு வருடத்தில் ஒன்பது நாட்கள் மட்டுமே முழு அபிஷேகம் மற்ற நாட்களில் ஐயனின் பாதங்களில் மட்டும் பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகின்றது. அபிஷேகம் நடக்கும் சில நாட்கள் சித்திரை வருடப்பிறப்பு, ஆனி திருமஞ்சனம், ஆவணி அவிட்டம், கார்த்திகை ஏகாந்த சேவை தை பிரம்மோற்சவத்தின் முதல் நாள், தேரிலிருந்து இறங்கிய பின் , பிரம்மோற்சவம் முடிந்து உற்சவ சாந்தி அபிஷேகம் முதலியனஇனி இவ்வளவு சிறப்புப் பெற்ற இக்கோவிலை வலம் வரலாமா?

வாகன சேவை தொடரும்............

Tuesday, October 29, 2013

முத்தான முத்துக் குமரன் கும்பாபிஷேகம் -2

முத்துக்குமார சுவாமி தேவஸ்தானம்


இப்பதிவில் கும்பாபிஷேகத்தன்று மாலை நடைபெற்ற வள்ளி நாயகி திருக்கல்யாணம் மற்றும் அனைத்து மூர்த்திகளின் தங்க வாகன சேவை காட்சிகளையும் இப்பதிவில் காண்கின்றீர்கள்.  அத்துடன் இவ்வாலயத்தின் சிறப்புகளையும் படியுங்கள் அன்பர்களே.

விநாயகப் பெருமான் 

 உற்சவர் முத்துக் குமார சுவாமி 

முத்துக் குமார சுவாமிக்கு சிறப்பாக பாதாம் பருப்பால் ஆன  மாலையையும்  அம் பாள் இருவருக்கும்  கூடுதலாக ஆப்பிள்ப் பழங்களுடன் கூடிய மாலையையும்  கவனியுங்கள் அன்பர்களே. ( படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)

வடிவேல் அரசே சரணம் சரணம்
கோலக் குறமான் கணவா சரணம்
ஞாலத்துயர் நீர் நலனே சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த திவ்ய தேஜோமய சொரூபியாய் விளங்கும் மணிமிடற்றண்ணலாம் சிவபெருமானது பால நேத்ர உத்பவராய்சரவணப் பொய்கையிலே திருஅவதாரம் செய்துகார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டுதிருவிளையாடல் புரிந்துஅம்மை உமாதேவியாரிடம் சக்தி வேல் பெற்று சூரர் குலத்தை கருவறுத்து தேவர் குழாத்தைக் காத்தருளித் தம்மை வழிபடும் அடியவர் துயர் நீங்க போகாங்க மூர்த்த மாஞ்சகஉருவந்தாங்கி ஆங்காங்கு திருக்கோவில் கொண்டருளியிருக்கும் படைவீடு முதலான தலங்களைப் போல தொண்டைமண்டலத்திலேதருமமிகு சென்னையிலேஇராசப்ப செட்டி தெருவிலேஅருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப் பெருங்கருணை என்றும் வாடிய பயிரைக் கண்ட போது வாடினேன் என்று பாடியவள்ளலார்சுவாமிகளால் " திரு ஓங்கு புண்ணிய செயல் ஓங்கி " என்று பாடல் பெற்ற தலம் தான் சென்னை ஸ்ரீ கந்தசுவாமி கோவிலென வழங்கப்படும் ஸ்ரீ முத்துக்குமார சுவாமிதேவஸ்தானம்ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள்வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள்சிதம்பரம் சுவாமிகள் முதலாய ஞானியர்களால் பெரிதும் புகழ்ந்து பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் முருகப்பெருமான் கஜவல்லிவனவள்ளி சமேதராய் கந்தசுவாமி என்னும் திருப் பெயருடன் மூலவராகவும்உடம்பு முழுவதுடம் முத்துக்கள் பெற்றிருப்பதால் முத்துக் குமார சுவாமி என்ற திரு நாமத்துடன் உற்சவராகவும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்

வன வள்ளி திருக்கல்யாணம் 


கஜவள்ளி -  வன வள்ளி

இந்த ஆலயம் சுமார் 360 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வரலாறு மிகவும் சுவையானது, அவரது திருவிளையாடல் மூலமாகவே இவ்வாலயம் இங்கு உண்டானது, அதற்கு அவர் தேர்ந்தெடுத்தவர்தான் பேரி செட்டியார் வகுப்பைச் சார்ந்த மாரி செட்டியார். மாரி செட்டியார் தனது நண்பர் கந்தப்பச்சாரி செட்டியாருடன் ஒவ்வொரு கிருத்திகை தோறும் சென்னையிலிருந்துதிருப்போரூர் சென்று ஒரு கை முகன் இளவலை, கந்தக் கடம்பனை, கார் மயில் வாகனனை, விளங்கு வள்ளி காந்தனை, மாயோன் மருகனை, பாம்பன் சுவாமிகள் வழிபடும் சுயம்பு கந்தவேளை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தன்னைக் காண வரும் அன்பனின் அருகிலேயே கோவில் கொள்ள விரும்பிய அழகன் ஒரு திருவிளையாடலை நடத்தினான். ஒரு கார்த்திகையன்று மாரி செட்டியாரும் அவரது நண்பர் கந்தசுவாமி தம்பிரானும் ஒரு மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்த போது வெகு காலமாக ஒரு புற்றில்  தான் இருப்பதாகவும் தன்னை எடுத்துச் சென்று ஒரு கோவில் கட்டுமாறும் அசரீரியாக கூறினார். உறக்கத்தில் இருந்து எழுந்த இருவரும் அருகில் இருந்த புற்றில் அடியில் கந்த வேளை தேவியர் இருவருடனும் கண்டெடுத்தனர். முருகன் மயிலுடன் நின்ற கோலத்தில் தன் தேவியருடன் இருந்ததைக் கண்டு அதிசயித்து விழுந்து வணங்கி அந்த விக்கிரகத்தை பயபக்தியுடன் சென்னை கொண்டு வந்து தற்போது கோவில் உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தார்.

ஆறுமுகப் பெருமான்

பால சுப்பிரமணியர் 

சுந்தரேஸ்வரர்


மீனாக்ஷி அம்பாள்

அன்பர் ஒருவர் தன்னுடைய பூந்தோட்டத்தை கோவில் கட்ட இலவசமாக கொடுத்தார், ஆதிகாலத்தில்  குளக்கரை சித்தி விநாயகர் ஆலயம் மட்டும் தான் இவ்விடத்தில் இருந்தது. தன் மனைவியின் நகைகளை விற்று இத்திருக்கோவிலை உண்டாக்கினார் மாரி செட்டியார். பிறகு ஆயிர வைசிய பேரி செட்டியார் சமூகத்தினரிடம் கோவிலை ஒப்படைத்தார். அவர்களும் இராஜ கோபுரத்தைக் கட்டி கோவிலுக்கு நித்ய கட்டளைகள் ஏற்படுத்தி கோவிலை மேலும் விரிவு படுத்தினர். தொடர்ந்து இவர்களின் வாரிசுகள் இன்றும் எண்ணற்ற திருப்பணிகள் செய்து வருகின்றனர். மேலும் தங்களுக்கு வாரிசு இல்லாதவர்கள் பலர் தங்கள் சொத்தை இக்கோவிலுக்கு எழுதி வைத்து அறப்பணிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். பள்ளிகள், கல்லூரிகள், நூல் நிலையம், கலாலயம், மருத்துவமனை, கருணை இல்லம் என்று பல் வேறு சமுதாயப்பணிகள் இத்திருக்கோவில் சார்பாக நடத்தப்பட்டு மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர் என்றால் அது அந்த முருகனின் அபார கருணையினால்தான். இவ்வாறு ஒரு திருவிளையாடல் புரிந்து தானே வந்து கோவில் கொண்டார் கந்தவேள். கந்தன் வந்து குடி கொண்டதால்  இவ்வாலயம் கந்த சுவாமி என்றும், குமரன் குடி கொண்ட கோவில் என்பதால் கந்த கோட்டம் என்றும் அழைக்கப்படுகின்றது.   


வீரபாகுத் தேவர்

சுமித்ர  சண்டிகேஸ்வரர் 

குலகுரு - மாரி செட்டியார்


உற்சவ  மூர்த்திகள் பூரண அலங்காரத்தில் விளங்கும் அழகை இப்பதிவில்  கண்டீர்கள் இனி அவர்களின் வாகன சேவைகளை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே. 

Tuesday, January 22, 2013

காளிகாம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்



விநாயகர் 

தருமமிகு சென்னையில் பாரி முனையில் அருள் பாலிக்கும்,  மராட்டிய  சிவாஜி மன்னன் வழிபட்ட,  மஹாகவி பாரதியார் யாதுமாகி நின்றாய் காளீ  என்று பாடிப்பரவிய   அன்னை கமடேச்வர நாயகியாம் காளிகாம்பாளுக்கு   ஸ்வர்ணபந்தன மஹா கும்பாபிஷேகம் நாளை 23.01,2013 அன்று காலை 9.00 மணி முதல் 9.45 மணிக்குள்  சிறப்பாக நடை பெறவுள்ளது. விரும்பும்  அன்பர்கள் சென்று தரிசனம்  செய்யுமாறு  தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.  

பரிவார தேவதைகளுக்கான கும்பாபிஷேகம் சென்ற 17.01.2013 அன்றே நடைபெற்று விட்டது. நாளை காளிகாம்பாளுக்கும் இராஜ கோபுரங்களூக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  

இப்பதிவில் யாக  சாலை பூஜைகள் சிறப்பாக நடந்து வருகின்றன. யாக சாலை யில் அமைத்துள்ள தெய்வ மூர்த்தங்களின் ஒரு தொகுப்பே இப்பதிவு.


நடராஜர்,  விநாயகர்,  உண்ணாமுலையாள் சமேத அண்ணாமலையார், 
வள்ளி தெய்வாணை சமேத முருகன்,  அகோர வீரபத்திரர்

 உற்சவர் சின்னம்மன்



  வேத மாதா காயத்ரி 

 விஸ்வ கர்மா

 கமடேஸ்வர நாயகி அன்னை காளிகாம்பாள்

உண்ணாமுலையம்மன்

இனி இக்திருக்கோவிலின் சிறப்புகளைப் பற்றி காணலாமா அன்பர்களே?


கமடேஸ்வர நாயகி அன்னை காளிகாம்பாள்

காளிகாம்பாள் மூலவர்


கற்பனைக்கும் எட்டாத அருள் தரும் சிவசக்தித்தலம். சென்னை என்று இந்த நகருக்கு பெயர் வர காரணமாக இருக்கும் அன்னை குடி கொண்டிருக்கும் தலம். வீர சிவாஜியும், மஹா கவி பாரதியாரும் வழிபட்ட தலம், விஸ்வ கர்மாவிற்கு தனி சன்னதி உள்ள தலம், ஆதி சங்கரர் ஸ்ரீ சக்ரம் ஸ்தாபித்த தலம் என்ற அனைத்து பெருமைகளையும் கொண்ட தலம் தான் சென்னை பூங்கா நகரில் அமைந்துள்ள காளிகாம்பாள் திருக்கோவில்.

காமாக்ஷி,  கமடேஸ்வரி, கோட்டையம்மன், சென்னியம்மன், நெய்தல் நில காமாட்சி என்றும் ஆயிரம் திருநாமம் அம்பாளுக்கு இத்தலத்தில். மச்ச புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஷ்ய புராணம் முதலிய புராணங்களில் இத் திருக்கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. வாருங்கள் இத்திருகோவிலின் பெருமைகளை பார்ப்போம்.


அகில புவனங்களையும் படைத்தும், காத்தும் கரந்தும் விளையாடும் அந்த ஆதி பராசக்தியானவள் நாம் உய்யக் கொள்ளும் வேடங்கள் அநேகம் அவற்றுள் ஒன்றுதான் காளி. துஷ்டர்களை அழித்து பக்தர்களை காக்க அம்மை கொள்ளும் கோலமே காளி ரூபம். காலம் என்பதன் தெய்வீக ரூபமே காளி. இந்த பூவுலகிலே பிறந்த எந்த உயிரும் வளர்ந்து பின் இறந்து மறுபடியும் பிறக்கும் என்பது நியதி. இவ்வாறு புதிதாய் தோற்றுவிக்க சக்தி வடிவம் கொள்பவள் ஒரே அன்னையே!. கோரமும் இறைவன் செயலே என்பதை எடுத்துக் காட்டவே, சௌந்தர்யமான அன்னை சக்தி, குரூரமான காளி உருவம் கொள்கிறாள். அழிவு இல்லாமல் ஆக்கம் ஏது? இரவை அழித்து பகலையும் பகலை அழித்து இரவையும் உண்டு பண்ணுபவள் அன்னையே.




காளிகாம்பாள் உற்சவர்



தர்மமிகு சென்னை என்று போற்றப்படும் சென்னை மாநகரிலே தம்பு செட்டி தெருவிலே நாம் விரும்பும் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றும் காமாக்ஷியாய், தீயவர்களை அழிக்கும் காளிகாம்பாளாய், உலகையாளும் தேவியாய், தன்னை வணங்குபவர்களின் துன்பம் நீக்கி இன்பம் அளிக்கும் கமடேஸ்வரி அன்னையாய் கொலு வீற்றிருக்கிறாள் அந்த பராசக்தி. அவள் குங்குமம் பெற்றாலே முக்தி.





மிகவும் புராதனமான கோவில், சுமார் 400 வருடங்கள் பழமையானது. சிவாஜி மஹாராஜா வழிபட்ட பவானி ஸ்ரீ காளிகாம்பாள், யாதுமாகி நின்றாய் காளி என்று பாரதியாருக்கு நா வன்மையை கொடுத்த ஸ்ரீ சாரதை காளிகாம்பாள், தன்னை வணங்கும் அன்பர்களின் செல்வ நிலயை உயர்த்தும் ஸ்ரீ மஹா லக்ஷ்மி கல்வியை கலைகளை வழங்கும் ஸ்ரீ மஹா சரஸ்வதி இருவரையும் தன் கண்களாகக் கொண்டவள் காளிகாம்பாள். தனது இச்சா மந்திர சக்தியால் பன்னிரண்டு ஸ்தலங்களில் காட்சி தந்து வரும் காமாட்சி அன்னை, அவற்றுள் ஒன்றான இத்திருக்கோவிலில் மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் வலக்கால் தொங்கவிடப்பட்ட நிலையில், அங்குச பாசம் மேற்கையில் ஏந்தி, தாமரை வரத முத்திரையுடன், மூக்குத்தி மின்ன, மரகத பதக்க பொன் தாலியும், ஒட்டியாணம், கொப்பு, குழை, கங்கணம், பாதச்சிலம்பு மின்ன, காலை மூன்று அரக்கர்களின் மேல் வைத்த நிலையில் எழிற் கோலம் காட்டுகின்றாள். நாம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் நீக்கினாலே அந்த பரம் பொருளுடன் சேர முடியும் என்பதை குறிப்பாக காட்டுகின்றாள் அன்னை. காளி என்றாலும் சாந்த ரூபத்தில் காமாக்ஷியாக எழிற் கோலம் காட்டுகின்றாள் அன்னை. அவள் சன்னதியில் நின்றாலே ஒரு நிம்மதி அம்மையை தரிசித்தவுடன் நம் பாவமெல்லாம் விலகுகின்றன. ஆதி சங்கர பகவத் பாதாள் ஸ்தாபித்த ஸ்ரீ சக்ர அர்த்த மேருவும் அம்மையின் முன் உள்ளது. அர்ச்சனை அர்த்த மேருவிற்க்குத்தான் நடைபெறுகின்றது.


ஸ்ரீ காளிகாம்பாள் திருப்பல்லாண்டிலிருந்து ஒரு பாடல்


கலைமகளே திருமகளே மலைமகளே
காலை கதிரொளியே!
குலக்கொழுந்தே கொற்றவையே காளிஎனும்
கலைக்கடலே கருணை ஈவாய்
சிறந்தொளிசேர் செம்பூவும் பசுந்தழையும்
சேர்ந்தன போல் சிவமும் தாயும்
அறந்தழைக்க நேர் பாதி கலந்த கோல
அழகினுக்கு ஆயிரம் பல்லாண்டு.

இந்திரன், குபேரன், வருணன், விராட புருஷன் விஸ்வகர்மா, வியாசர், பராசரர், அகத்தியர், ஆங்கிரேசர், புலஸ்தியர் ஆகியோர் வழிபட்ட தலம். கி.பி 1639 -ம் ஆண்டுக்கு முன்பே விஸ்வ கர்மா குலத்தினரால் இவ்வாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. பரதபுரி, ஸ்வர்ணபுரி என்றெல்லாம் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இப்புராதன ஆலயம். விஸ்வ கர்மாக்கள் கோட்டையிலே வழிபட்டதால் கோட்டையம்மன். முற்காலத்தில் கடல் ஓரத்தில் இருந்திருக்கலாம் ஆங்கிலேயர் காலத்தில் இப்போது உள்ள இடத்திற்கு மாறியிருக்க வேண்டும். செம்படவர்களும் மற்றவர்களும் செந்தூரம் பூசி வழிபட்டதால் இவ்வன்னைக்கு சென்னியம்மன் என்ற திருநாமமும் உண்டு. சென்னம்மன் குப்பமே, சென்னை ஆயிற்று.

 "ஸமாசர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண சேவிதா" என்ற லலிதா சகஸ்ரநாம நாமாவின் படி ஸ்ரீ மஹா லக்ஷ்மியும், ஸ்ரீ மஹா சரஸ்வதியும் தன் இரு கண்களாய் அமையப் பெற்ற காளிகாம்பாள் இவளாவதால் செல்வமும் கல்வியும் குவிந்துள்ள நகரமாய் சென்னை விளங்குகின்றது.


தெற்கு இராஜ்ஜயங்களை தன்வயப்படுத்தி திக்விஜயம் செய்த மராட்டிய மாமன்னன் வீர சிவாஜி 1667ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் நாள் இவ்வாலயத்திற்கு விஜயம் செய்து அன்னையை வழிபட்ட செய்தியை வரலாற்று ஏடுகளில் நாம் காணலாம். பிராட்வேயில் சுதேச மித்திரனில் பணி செய்து கொண்டிருந்த போது மஹாகவி பாரதியார்


யாதுமாகி நின்றாய் காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மையெல்லாம் - நின்றன்
செயல்களின்றி இல்லை
போதும் இந்த மாந்தர் வாழும்
பொய்மை வாழ்க்கையெல்லாம்
ஆதி சக்தி தாயே - என் மீது
அருள் புரிந்து காப்பாய்


என்று அன்னையின் மேல் பாடல்கள் புனைந்துள்ளார். பாரதியார் பாடிய காளி பாடல்கள் அனைத்தும் அன்னையைப் பற்றியதே. சிவபெருமானின் அம்சமாக காலடியில் தோன்றி நமது சனாதன தர்மமான இந்து மதத்திற்க்கு புத்துயிரூட்டிய ஆதி சங்கர பகவத் பாதாள் இவ்வாலயத்திற்கு எழுந்தருளி அன்னையை வழிபட்டு ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்திருக்கின்றார் இந்த சரித்திர சிறப்பு பெற்ற நிகழ்ச்சிகளும் இத்திருகோவிலில் சுதை சிற்பங்களாக விவரிக்கப்பட்டுள்ளன.


அன்னையின் சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது, கோஷ்டத்தில் வித்யேஷ்வரி, பிரம்ம வித்யா, வைஷ்ணவி, தாக்ஷ‘யணி, மற்றும் மஹாலக்ஷ்மி எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். அம்மனுக்கு வலப்புறத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் கமடேஸ்வரர் சன்னதி. ஐயனின் கோஷ்டத்திலும் சிறிதாக துர்க்கை, பிரம்மா, விஷ்ணு, ஆலமர் கடவுள் மற்றும் வினாயகர் அருள் பாலிக்கின்றனர். திருக்கோவிலில் உள்ளேயே கிழக்கு நோக்கி அருணாச்சலேஸ்வரர் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதியும் உள்ளது. சிவசக்தித்தலமான இத்தலத்தில் எம்பெருமான் கமடேஸ்வரராகவும், அருணாச்சலேஸ்வரராகவும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதியும் உள்ளது.. எனவே இத்தலத்தில் வழிபட்டால் காஞ்சி, அருணை ஆகிய இரு தலங்களையும் வழிபட்ட பலன் உண்டு.மேலும் கோவிலின் உள்ளேயே சிவ விஷ்ணு பிரம்மா ஸ்வரூப  வீர பிரம்மேந்திர குரு சனனதியும், பள்ளியறையும் உள்ளன.

நெரிசல் மிகுந்த பாரி முனைப் பகுதி என்பதால் ஒரே ஒரு பிரகாரம்.  ஆர்மேனியன் சாலையயும்  தம்பு செட்டிதெருவையும் இனைக்கும் வண்ணம் கோவில் அமைந்துள்ளது.  மேற்கிலும் கிழக்கிலும் கோபுரங்கள் உள்ளன. தெற்கு பிரகாரத்தில் தென் கிழக்கு மூலையில் கிழக்கு நோக்கிய சித்தி புத்தி வினாயகர் சன்னதி. சுப்பிரமணியர் வட கதிர் காம முருகராகவும், அகோர வீர பத்திரர், மஹா காளி, வேத மாதா காயத்ரி, துர்கா, விஸ்வ கர்மாஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள், வீரபத்திரர் சன்னதியின் விமானத்தில் ஆட்டுத்தலையுடன் கூடிய ஆணவம் நீங்கிய தட்சன் வீர பத்திரரை வணங்கும் சுதை சிற்பம் அற்புதமாக உள்ளது. வீர பத்திரருடன் அன்னை காளியும் அருள் பாலிக்கின்றாள். வடக்கு நோக்கிய துர்க்கை அம்மன் செப்புத் திருமேனி, எழிலாக அருட்காட்சி தருகின்றாள் அன்னை. அருகில் வேத மாதா காயத்ரிக்கும் ஒரு சன்னதி.   பிரகாத்தில் வட கிழக்கு முலையில் ஆடல் வல்லான் சன்னிதி பிரம்மோற்சவ காலங்களில் அம்மனின் அலங்கார மண்டபமாகவும் விளங்குகின்றது. பரிவார தேவதை கடல் கண்ணி, கடல் தீர்த்தம் எனவே அன்னை நெய்தல் நில காமாட்சி என்றும் அழைக்கப்படுகின்றாள் , தல விருட்சம் மா மரம்.




ஸ்ரீசக்ர நாயகிக்கு கிண்ணித் தேர்




வேறு எந்த ஆலயங்களுக்கும் இல்லாத பல சிறப்புகள் இவ்வாலயத்திற்கு உள்ளன. ஸ்ரீ சக்ர நாயகியாம் அன்னைக்கு ஸ்ரீ சக்ரமே இங்கு தேராக அமைந்துள்ளது. இந்த சக்ரராஜ விமானம் எனப்படும் இத்தேர் கிண்ணித்தேர் என்று அழைக்கப்படுகின்றது. வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் போது ஒன்பதாம் நாள் இரவு வெண்கல கிண்ணிகளால் நிறைந்த இத்திருத் தேரிலே மின் விளக்கு ஒளியில் பவனி வருகின்றாள் அன்னை. நடராஜருடன் இத்தலத்திலே எலும்பும் தோலுமாய் , மூன்று கால்களுடன் பிருங்கி முனிவர் எழுந்தருளியுள்ளார். ஐயனை மட்டுமே வலம் வருவேன் அம்மையையும் சேர்த்து வலம் வர மாட்டேன் என்று அறியாமையால் தவறு செய்த பிருங்கி முனிவர் அன்னையின் சாபத்தினால் இவ்வாறு ஆனார். பின் அம்மை கேதார கௌரி விரதம் மேற்கொள்ளவும் இடப்பாகம் பெறவும் காரணமாய் இருந்தவர் பிருங்கி முனிவர். இன்றும் ஆருத்ரா தரிசனம் திருவுலா முடிந்து ஐயனும் அம்மையும் திரும்பி வரும் போது இந்நிகழ்ச்சியை குறிக்கும் வகையில் ஊடல் உற்சவம் நடைபெறுகின்றது.





பிரம்மோற்சவத்தின் போது அம்மனின் எழிற்கோலம்


உற்சவ மூர்த்திகள் இருவர் பெரிய நாயகி மஹா லக்ஷ்மியும், மஹா சரஸ்வதியும் தோழியராக நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகின்றாள்  சிறிய நாயகி பிரகாரத்தில் 16 கால் மண்டபத்தில், அருட்காட்சி தருகின்றாள். அகோர வீரபதித்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்து 6 மாதம் பௌர்ணமியன்று வழிபட்டால் இஷ்ட சித்தியாகும். விராட புருஷன் விஸ்வ கர்மாவுக்கு தனி சன்னதி உள்ளது.  இவரை

ஓம் சத்யோஜாத முகாய பிரம்மதேவனே நம:
ஓம் வாமதேவ முகாய விஷ்ணு தேவனே நம:
ஓம் அகோர முகாய ஈஸ்வர தேவனே நம:
ஓம் ஈசான்ய முகாய இந்திர தேவனே நம:
ஓம் தத்புருஷ முகாய சூரிய தேவனே நம

:ஓம் தேவ தேவ மஹா தேவ விஸ்வப்பிரம ஜகத் குருவே நம:


என்று அகில ஜகத்திற்கும் குருவாகவே விஸ்வ கர்மா பெருமக்கள் இவரை வணங்குகின்றனர்.



நாளெல்லாம் திருநாளே நமை காக்க வருவாளே என்றபடி திருக்கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாதான். சித்திரையிலே குங்கும லட்ச்சார்சனை. சித்ரா பௌர்ணமியன்று திரு விளக்கு வழிபாடு. வைகாசியிலே வைகாசி விசாகத்தை ஒட்டி 10 நாள் பிரம்மோற்சவம். முதல் நாள் வினாயகர் உற்சவம், துவஜாரோகணம், தினமும் காலையிலும் மாலையிலும் திரு வீதி உலா, காலை 3வது நாள் பூத வாகனம், 7ம் நாள் பூத்தேர் மிகவும் விசேஷம். மாலையிலே 2ம் நாள் காமதேனு வாகனம், 4ம் நாள் ரிஷப வாகனம், 5ம் நாள் சிம்ம வாகனம், 6ம் நாள் தும்பிக்கையும், காதும் ஆடும் யானை வாகனம், 9 நாள் கிண்ணித்தேர் என்று சர்வ அலங்காரத்துடன் அருட்காட்சி தந்து மாட வீதிகளில் உலா வருகின்றாள் அன்னை. ஆனியிலே வசந்த விழா. அன்னைக்கு உகந்த ஆடி பெருவிழா 10 ஞாயிற்றுக் கிழமைகள், வெள்ளிக்கிழமையிலே ஊஞ்சல் உற்சவம். ஆவணியிலே வினாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி 9 நாட்களும் பல்வேறு அலங்காரங்களில் கொலுவிருக்கும் அன்னை விஜய தசமியன்று வீதி உலா வருகின்றாள். ஐப்பசியில் ஸ்கந்த சஷ்டி விழா. கார்த்திகை சோம வாரம் மற்றும் கார்த்திகை தீபம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம் 10 நாட்களும் மாணிக்கவாசகர் உலா பத்தாம் நாள் காலையில் நடராஜர் சிவகாமசுந்தரி அபிஷேகம் மற்றும் தீபாரதனை பின் புறப்பாடு, கோவிலுக்கு திரும்பி வரும் போது அம்மை முதலில் உள்ளே வந்து பின் கதவை சாத்துகின்றனர் பின் திருஊடல் உற்சவம், அம்மை சமாதானம் ஆன பின் சபைக்கு எழுந்தருளுகின்றார் எம்பெருமான் . மாலையிலே காளிகாம்பாள் திருவீதி உலா. தை மாதம் பொங்கல், பூச்சொரிதல், மூன்றாம் வெள்ளி பட்டாபிஷேகம், 4வது வெள்ளி 108 திருவிளக்கு வழிபாடு, வெள்ளி ஊஞ்சல். தைப்பூசத்தன்று தெப்பம் கச்சாலீஸ்வரர் கோவிலில். மாசி மகத்தில் கடலாடல் மற்றும் சிவராத்திரி. பங்குனியில் வசந்த நவராத்திரி. அம்மை உலா வர நு‘தன வெள்ளி ரதம் பக்தர்களால் சமர்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அம்மனுக்கு இத்தலத்தில் பூந்தேர், கிண்ணித்தேர், வெள்ளித்தேர் என்று மூன்று தேர்கள.





பிரம்மோற்சவத்தின் போது 7ம் நாள் பூத்தேர் கமடேஸ்வரிக்கு


அம்மையின் அபிஷேக மஞ்சள் பெற்றால் தீராத வினை தீரும், பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு அக்குறை விலகும். அன்னையின் குங்குமம் பெற்றாலே முக்தி. அன்னைக்கு உகந்த வெள்ளிக் கிழமைகளிலே ஆயிரம் ஆயிரமாம் பக்தர் கூட்டம் அலை கடல் என பொங்கி வந்து அன்னையை பணிகின்றனர் அதுவும் ஆடி மற்றும் தை வெள்ளிகளில் அன்னையை தரிசிக்கும் அன்பர் பல கோடி . அன்னையின் அருள்பெற முடிந்தவர்கள் நாளை பாரிமுனை செல்லுங்கள். குடமுழுக்கு கண்டு களியுங்கள்.

ஓம் சக்தி