Showing posts with label திருவொற்றியூர். Show all posts
Showing posts with label திருவொற்றியூர். Show all posts

Friday, September 11, 2020

திருப்பாத தரிசனம் - 38

                               


                          தொண்டை மண்டலத்தின் உபவிடங்கத் தலங்கள்


திருவொற்றியூர் - மாணிக்க  தியாகேசர்  (3)

                                 

இத்திருத்தலத்தில் எம் ஐயனின் கருவறை தொண்டை மண்டல அமைப்பான 'கஜ பிருஷ்ட விமானம்' (யானையின் பின் புறம்) என்ழைக்கப்படும் அர்த்த சந்திர அமைப்பில் அமைந்துள்ளது. மூலவர் பிரகாரத்தில் கலிய நாயனார், அறுபத்து மூன்று நாயன்மார்கள், தல விநாயகர் சன்னதிகள் அமைந்துள்ளன. அடுத்து ஆதி சங்கரர் சன்னதி உள்ளது. ஆச்சாரியரின் நான்கு சீடர்களும் பீடத்தில் உள்ளனர். அடுத்து ஏகாதச ருத்ர லிங்கர் சன்னதி. அடுத்து முருகன் சன்னதி. கோட்டத்தில் மஹாவிஷ்ணு பிரயோக சக்கரத்துடனும், துர்க்கை மகிடன் இல்லாமலும் தரிசனம் அளிப்பது ஒரு சிறப்பு. மூலஸ்தானத்திற்கு வெளியே அமைந்துள்ள  64கால் மண்டபத்தின் மையத்தில் ஆடற்கரணங்களின் அற்புதமான சிலைகள் அலங்கரிக்கின்றன. இம்மண்டபத்தில் டராசப்பெருமானின் சன்னதி அமைந்துள்ளது. மூலையில் த்வனி சண்டேஸ்வரர் 6 அடி உயரத்தில் கையில் மழுவுடன் கம்பீரமாக தரிசனம் அளிக்கின்றார்.. ஆடல் வல்லானின்  பின்புற சுவற்றில் ஏகபாத மூர்த்தி சிற்பம் எழிலாக அமைந்துள்ளது.

ஆசையை வென்றால் அனைத்தும் கிடைக்கும் எனும் தாரக மந்திரத்தை கொண்ட பட்டினத்தார் திருவொற்றியூரில் முக்தி பெற்று உயிரோடு ஜீவசமாதியானார். காவிரிப்பூம்பட்டிணத்தில் நகரத்து செட்டியார் மரபில் தோன்றிய இவர், இல்லறவாழ்வில் மகப்பேறு இல்லாமல் மிகவும் வருத்தம் கொண்டு சிவபெருமானை வேண்டிக்கொண்டதின் பேரில் திருவிடைமருதூர் இறைவனே வளர்ப்பு மகனாக “மருதவாணர்” என்ற பெயரில் வளர்ந்து வந்தார். ஒரு சமயம் மருதவாணர் கடல் கடந்து வாணிபம் செய்து வீடு திரும்பிய போது அவர் தனது திருக்கரத்தில் ஒரு காதறுந்த ஊசியும், ஒரு கிழிந்த ஓலையையும் மட்டுமே கொண்டு வந்தார். அவ்வோலையில் காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று எழுதப்பட்டிருந்தது.

சிவபெருமானைத்தவிர மற்ற எல்லா செல்வமும் நிலையற்றது என்ற ஞானம் பெற்று  அனைத்தையும் துறந்து கோவணத்துடன் ஊர் ஊராக சென்று இறைவனைப் போற்றி பாடல்களை பாடி வந்தார். தன்னைப் பெற்ற தாயார் இறந்த போது பச்சை வாழை மட்டையில் அவரை படுக்க வைத்து தனது பாடல்களின் மூலம் அவரது ஈமச்சடங்குகளை செய்தார். காசி மன்னனை உண்மை உணர வைத்தார் அவரும் பத்திரகிரியார் என்று இவரது சீடரானார். இருவரும் பல தலங்களுக்கு சென்று திருவிடைமருதூரில் இருந்த போது பத்திரகிரியாரும் இறைவனடி சேர்ந்தார். பட்டினத்தார் தனக்கு எப்போது முக்தி என்று வினவ இறைவன் அவருக்கு ஒரு பேய்க்கரும்பை அளித்து எத்தலத்தில் இக்கரும்பு இனிக்கின்றதோ அத்தலத்தில் முக்தி என்றார். திருவொற்றியூர் இறைவனை தரிசித்து வரும் வழியில் பேய்க்கரும்பு இனித்தது. எனவே அவர் திருவொற்றியூரில் தங்கினார். ஆடி மாதம் உத்திரடாத்தன்று  கடற்கரை ஓரத்தில் மீனவ சிறுவர்களுடன் சித்து விளையாடல்கள் ஆடினார். தன்னை ஒரு இடத்தில் மண்ணில் புதைக்குமாறு செய்து மற்றொரு இடத்தில் வெளியே வந்தார். இப்படி இருமுறை செய்தார். மூன்றாம் முறையாக புதைத்தபிறகு அவர் வெளியே வரவில்லை. அவர் புதையுண்ட இடத்தில் சிவலிங்கமாக காட்சி அளித்தார்.

                                


இவர் திருவொற்றியூர் இறைவனைப் போற்றி 28 பாடல்கள் பாடியுள்ளார். இவை 11-ம் திருமுறையில் உள்ளன. பட்டினத்தார் முக்தி பெற்றதால் இது முக்தித்தலம். அவருடைய ஜீவசமாதி கடற்கரை ஓரத்தில் அமைதியாக காட்சி தருகின்றது.

ஐயும் தொடர்ந்து விழியும் செருகி அறிவழிந்து

மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன் யான்

செய்யும் திருவொற்றியூருடையீர் திரு நீறும் இட்டு

கையும் தொழப் பண்ணி ஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே!

என்று எழுத்தறியும் பெருமானிடம் பட்டினத்தடிகள் வேண்டுகிறார்.

“அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” எனப்போற்றப்படும் இராமலிங்க அடிகள் பள்ளிப் படிப்பே இல்லாமல் பாடல் இயற்றும் திறமை பெற்றவர். இவர் சிறு வயதிலிருந்தே ஒற்றியூர் இறைவனை வணங்கி இக்கோவிலில் உள்ள தல விருட்சமாகிய அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்து சிவனருள் பெற்றவர். வள்ளலார் தற்போது தங்கசாலை என்றழைக்கப்படும் இடத்திலிருந்து தினமும் நடந்து வந்து வடிவுடையம்மனை வணங்கிய பின் தன் அண்ணியார் வீட்டிற்குச் சென்று உணவருந்துவது வழக்கம். ஒரு நாள் இவர் இவ்வாறு அன்னையை தரிசித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய போது அண்ணியார் வீட்டை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு தூங்கி விட்டார். அடிகளார் தூங்கும் தன்னுடைய அண்ணியை எழுப்ப மனமில்லாமல், பசியுடன் அப்படியே திண்ணையில் படுத்துக்கொண்டார். அன்பனின் பசியை பொறுக்காமல் ஸ்ரீவடிவுடையன்னை அவரது அண்ணியாரின் உருவில் வந்து அவருக்கு உணவு பரிமாறினாள். இவ்வாறு அன்னையில் அருள் பெற்ற வள்ளலார் சுவாமிகள் அம்மனைப் போற்றி “ஸ்ரீவடிவுடை மாணிக்க மாலை” என 101 பாடல்களையும், ஆதிபுரீஸ்வரரின் மீது “எழுத்தறியும் பெருமான் மாலை” என்று 31 பாடல்களையும் பாடியுள்ளார்.  

             

வருடம் முழுவதும் திருநாள்தான் இவ்வாலயத்தில் சித்திரையில் வருடப்பிறப்பு, ஆதி சங்கரர் உற்சவம் மற்றும் வட்டப்பாறை அம்மன் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. வைகாசியில் தியாகராஜ சுவாமிக்கு பதினைந்து நாட்கள் வசந்தோற்சவம். ஆனியில் ஆடல் வல்லானுக்கு ஆனித்திருமஞ்சனமும், ஆடிப்பூரத்தன்று திருவொற்றீசருக்கும், வடிவுடையம்மனுக்கும் சந்தனக் காப்பு விழாவும், அம்மாதத்தில் சுந்தர மூர்த்தி நாயனாருக்கும், கலிய நாயனாருக்கும் உற்சவம் நடைபெறுகின்றது. ஆவணியில் விநாயகர் சதுர்த்தி மற்றும் மூலத்தன்று தியாகராஜர் உற்சவம் கண்டருளுகின்றார். புரட்டாசியில் வடிவுடையம்மன் நவராத்திரி உற்சவம் கண்டருளுகின்றார். விஜய தசமியன்று தியாகேசர் வீதி உற்சவம் கண்டருளுகின்றார். ஐப்பசியில் அன்னாபிஷேகமும், கந்தர் சஷ்டி லக்ஷார்ச்சனையும், பூசத்தன்று திருஞானசம்பந்தர் ஞானப்பால் விழாவும் நடைபெறுகின்றது. கார்த்திகை பௌர்ணமியன்று கவசம் திறந்து புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம், இரவு தியாகேசர் வீதி உற்சவம். மார்கழியில் முழு நிலவன்று காலை மாணிக்கவாசகர் உற்சவம், நடராஜர் ஆருத்ரா தரிசனம், மாலை தியாகேசர் பதினெட்டு நடன உள் உற்சவம். தைப்பூசத்தன்று  காலை சந்திரசேகரர் தெப்பம் இரவு தியாகராஜர் வீதி உற்சவம். மாசிமாதம் பெருந்திருவிழா.

               

தங்கத்தேரில் வடிவுடையம்மன் 

ஒவ்வொரு வருடமும் மாசி மாத முழு நிலவு  நாளை தீர்த்த நாளாகக் கொண்டு பெருந்திருவிழா டைபெறுகின்றது. பிரம்மா, நந்தியெம்பெருமான், உரோமச முனிவர் ஆகியோருக்காக தியாகேசப்பெருமான் டனம் ஆடுவது இத்திருவிழாவின் சிறப்பு. திருவிழாவின் இரண்டாம் நாள் நந்திகேஸ்வரருக்காகவும், ஐந்தாம் நாள் பிரம்மாவிற்காகவும், ஆறாம் நாள் விஷ்ணு மற்றும் உரோமச முனிவருக்காகவும், திருவிழா நிறைவு நாளான பதினொன்றாம் நாள் உமா தேவியாரின் ஊடலை தணிக்க பந்தம்பறி நடனமும் ஆடி அருளுகின்றார். அம்மனின் பின்புறம் இருந்து ஐயனின் நடனத்தை கண்டு களிப்பது அன்பர்களாகிய  நமக்கு பெரும் பேறாகும்.  ஒன்பதாம் நாள் கல்யாண சுந்தரர் அகத்தியருக்கு திருக்கல்யாண காட்சி தந்தருளுகின்றார். உடன் கல்யாண கோலத்தில் சங்கிலியுடன் சுந்தரரும் மற்ற நாயன்மார்களும் திருக்கல்யாணக்கோலம் கண்டு மகிழ்கின்றனர்.

பட்டினத்தார் மரபில் வந்த நாட்டுக்கோட்டை நகரத்தார், இத்தலத்தில் தெற்கு மாட வீதியில் ஒரு மண்டபத்தை நிறுவி, தண்டாயுதபாணி பெயரில் ஆன்மீகப்பணி செய்து வருகின்றனர். மாசிப்பெருவிழாவின் போது பவளக்கார தெருவிலிருந்து தண்டபாணி தெய்வத்தை எழுந்தருளச்செய்கின்றனர். அவர் ஐந்து நாட்கள் திருவொற்றியூரில் தங்கியிருக்கும் போது பூஜை நடத்தி அன்னதானம் செய்கின்றனர்.

மனமெனுந் தோணி பற்றி மதியெனும் கோலை ஊன்றிச்

சினமெனுஞ் சரக்கை ஏற்றிச் செறிகட லோடும் போது

மதனெனும் பாறைதாக்கி மறியும்போது அறிய வொண்ணாது

உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.

என்று அப்பர் பெருமான் பாடிய திருவொற்றியூரில்  ஆதிபுரீஸ்வரையும்,  வடிவுடை நாயகியையும்,  மாணிக்க தியாகரையும் தரிசித்நாம் அடுத்த தொண்டை நாட்டின் உபவிடங்கத்தலமான திருவான்மியூரை தரிசிக்கலாம்.

                                                                                      தியாகேசர் தரிசனம் தொடரும் . . . . .

Saturday, September 5, 2020

திருப்பாத தரிசனம் - 37


                                தொண்டை மண்டலத்தின் உபவிடங்கத் தலங்கள்


திருவொற்றியூர் - மாணிக்க  தியாகேசர்  (2)

வடிவுடையம்மன் 

தொண்டை மண்டலத்தின் மூன்று மகா சக்தி தலங்களில் இத்தலம் ஞான சக்தித் தலம் ஆகும். இங்கே எம் அம்மை வடிவுடை நாயகி ஞாசக்தியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். மற்ற சக்தி தலங்கள் திரு முல்லை வாயிலின் கொடியிடை நாயகி கிரியா சக்தி, மேலூரின் திருவுடை நாயகி இச்சா சக்தி.  "எவரொருவர் பௌர்ணமி அன்று இந்த மூன்று சக்திகளையும் தரிசிக்கின்றார்களோ அவர்களுக்கு எம் அம்மையின் பூரண கடாட்சம் கிட்டும்" என்பது  ஐதீகம். அதுவும் வெள்ளிக் கிழமையன்று பௌர்ணமியும் சேர்ந்து வந்தால் அத்தினத்தில் தரிசிப்பது மிகவும் சிறப்பு.


அம்மைக்கு வட கிழக்கு மூலையில் இங்கே தனிக் கோவில் உள்ளது, அம்பாள் வடிவுடையம்மை, திரிபுர சுந்தரி என்றும் அழைத்து போற்றுகின்றனர் பக்தர்கள்.  தெற்கு நோக்கி  நின்ற கோலத்தில் அருட்காட்சி தருகின்றாள் அன்னை. வள்ளலாருக்கு அவர் அண்ணியைப் போன்ற தோற்றத்தில் வந்து நேரில் உணவளித்த கருணை தெய்வமான, வடிவுடையம்மன் மீது அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள் 100 பாடல்களை கொண்ட "வடிவுடை மாணிக்க மாலையை" பாடியுள்ளார்அதில் ஒரு பாடல் இதோ:

அணியே அணி பெறும் ஒற்றித் தியாகர் தன் அன்புறு சற்

குணியே எம் வாழ்க்கை குல தெய்வமே மலைக்கோன் தவமே

பணியேன் பிழை பொறுத்தாட் கொண்ட தெய்வப்பதி கொள் சிந்தா

மணியே என் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே!

எம் அன்னையின் அழகே அழகு அம்மை பெயருக்கு ஏற்ப அழகின் உருவமாகத் திகழ்கின்றாள். நான்கு திருக்கரங்கள் அபய வரத திருக்கரங்களுடன் பக்தர்கள் குறை கேட்கும் விதமாக தலையை வலப்புறம் சாய்த்தவாறு அருள் பாலிக்கிறாள்.  ஈசன் சன்னதியில் அவ்வளவு கூட்டம் இல்லை ஆனால் தாயின் சன்னதியில் கூட்டம் அலை மோதுகின்றது. ஆதி சங்கரர் ஸ்தாபித்த அம்மன் என்பதால் அவர் நியமித்தபடி எம் அம்மையின் கோவிலில் இன்றும் கேரளாவைச் சேர்ந்த நம்பூதிரிகளே பூஜை செய்கின்றனர். அம்பாளின் பொலிவான திருமுகத்தை பார்த்து விட்டால் நமது கவலைகள் எல்லாம் பஞ்சாக பறந்து விடும்.

இச்சா சக்தி - கிரியா சக்தி - ஞான சக்தி

வெள்ளிக்கிழமை அன்னையை தரிசனம் செய்வது மிகவும் சிறந்த பலனைத்தரும். இன்றும் வெள்ளிக்கிழமைகளில்  விடியல் காலை விசுவரூப காட்சி காணலாம். அது இன்று நேற்றல்ல தொன்று தொட்டு தொடரும் ஒரு மெய்ஞான காட்சி அதை வடிவுடை அம்மன் விருத்தத்தில் வரும் இப்பாடல் மூலம் அறியலாம்

சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி

சோதியாய் நின்ற உமையே

சுக்கிரவார பெருமையும் கண்டு உனது சேவையும்

சொல்லவும் எளிதாகுமோ ......

வடிவுடையம்மன் மேல் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராசரும் ஐந்து கீர்த்தனைகள் பாடியுள்ளார்.  ஞானவடிவாம்பிகே தயாபரி என்று அம்பாளை போற்றியுளார். அதில் வெள்ளிக் கிழமை தரிசனத்தின் சிறப்பைப் பற்றியும் கூறியுள்ளார்.

தொண்டை நாட்டில் சக்தி தலங்கள் அமைந்ததற்கான வரலாறு. பல்லாண்டுகளுக்கு முன்பு மேலூர் திருமணங்கீஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக சிற்பி ஒருவர், பெரிய பாறையைக் கொண்டு சென்றார். வழியில் அப்பாறை வெடித்து மூன்று பாகங்களாக சிதறியது. கலங்கிய சிற்பி, தன் உயிரை விட துணிந்தார். அப்போது அம்பிகை அவருக்கு அருட்காட்சி தந்து, தன்னை மூன்று வடிவில் சிலையாக வடித்து மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்யும்படி அருளினாள். சிற்பியும் அவ்வாறே மூன்று சிலைகளை வடித்து பிரதிஷ்டை செய்தார். இம்மூன்று அம்பிகையரையும் பௌர்ணமியன்று  காலை, மதியம், மாலை என்று மூன்று வேளைகளில் வழிபடுவது சிறந்த பலனைத்தரும். அன்றைய தினம் மூன்று சன்னதிகளும் நாள் முழுவதும் திறந்திருக்கும்.

காலை திருவுடையம்மனை மஞ்சள் வஸ்திரம் சார்த்தி நெய் தீபம் ஏற்றி, வெற்றிலை பாக்குடன் அர்ச்சனை செய்ய திருவாகிய செல்வம், குழந்தைப்பேறு, தொழில் அபிவிருத்தி உண்டாகும். மதியம்   வடிவுடையம்மனுக்கு  சிவப்பு வஸ்திரம் சார்த்தி வழிபட வாக்கு வன்மை , திறமையான கல்வி அளிப்பாள்.  மாலை கொடியுடையம்மனை பச்சை வஸ்திரம் சார்த்தி வழிபட குழந்தைப்பேறு, திருமணத்தடை நீங்கும், தொழில் சிறக்கும், வீரம், தொழில் ஊக்கம், வெற்றி காரிய தடை நீங்கும்.

வடிவுடையம்மனை வழிபட்டு பேறு பெற்றவர்கள், பிரம்மா, இந்திரன், தும்புரு, நாரதர் மற்றும் வருணன் ஆகியோர். க்ஷயரோகத்தினால் அவதியுற்ற சந்திரனின் நிலை கண்டு அவனது மனைவிகள் 27 நட்சத்திரங்களும் இந்திரனிடம் முறையிட, இந்திராணி வெள்ளி மற்றும் பௌர்ணமி நாளில் வடிவுடையம்மனை வழிபட அறிவுறை அளித்தாள். எனவே அவர்கள் வெள்ளி மற்றும் பௌர்ணமி கூடிய நாளில் அம்மனை வழிபட, அம்மன் சந்திரனின் சாபத்தை நீக்கி, ”பெண்கள் அனைவரும் சமமே!, 27 மனைவிகள் இருந்தும் ஒரு பத்னியை விரும்பியது பாவம், அதனால்தான் உனக்கு தண்டனை என்று கூறி, உன் பத்தினிகளின் விரதமே உன்னைக் காத்தது என்றாள் அம்பிகை. பின்னர் சந்திரன் வேண்டிக்கொண்டபடி பௌர்ணமி மற்றும் வெள்ளி கூடிய நாளில் வழிபடுபவர்களின் துயர் தீர்த்தருளுகின்றாள்.

வாழி நின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள்
வாழி நின் தாள்மலர் போற்றிநின் தண்ணளி வாழி நின் சீர்
வாழி என் உள்ளத்தில் நீயுநின் ஒற்றி மகிழ்நரும் நீ
வாழி என் ஆரூயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே!
 

என்று  வடிவுடை அம்மனிடம் தன்னையே சரணாகதி அடைந்திருக்கிறார் வடலூர் வள்ளல் பெருமான்.

மூவரின் தேவாரப்பாடலும் பெற்ற தலம் திருவொற்றியூர். மொத்தம் 8 பதிகங்கள் உள்ளன. ஐயடிகள் காடவர் கோன் க்ஷேத்திரவெண்பா  பாடியுள்ளார். திருஞான சம்பந்தப்பெருமான் ஒரு பதிகமும், அப்பர் 5 பதிகங்களும், சுந்தரர் 2  பதிகங்களும்  பாடியுள்ளனர்.  அமிழ்தினும் இனிய தமிழால் உயிர் வாழ்வதாக கூறிய முதுபெரும் கவிர் மறைமலை அடிகள் தனக்கேற்பட்ட கொடிய நோயை விலக்க வேண்டி, திருவொற்றியூர் முருகக்கடவுளை வேண்டி அவர் மீது “திருவொற்றியூர்  முருகன் மும்மணிக் கோவை” என்ற பாடல் தொகுப்பினை பாடி நோய் நீங்கப்பெற்றார். அருணகிரிநாதரும் இம்முருகன் மேல் இரண்டு திருப்புகழ் பாடியுள்ளார். தியாகராஜ சுவாமிகள் வடிவுடையம்பாள் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியுள்ளார், முத்துசுவாமி தீட்சிதர் ஆதிபுரீஸ்வரம் எனும் ஒரு கீர்த்தனை பாடியுள்ளார். கவி காளமேகம், இரட்டைப் புலவர்கள், பாம்பன் சுவாமிகள், ஸ்ரீ சிதம்பர நாத முனிவர் ஆகியோரும் மற்றும் பல அன்பர்களும் இத்தலத்தைப் பாடியுள்ளனர்.

தொண்டை நாட்டுத் தலங்களுள் திருவொற்றியூரின் தலமரமான மகிழ மரமும், காஞ்சிபுரத்தில் மா மரமும் சிறப்பு பெற்றவை.  மகிழ மரத்தினடியில் எம்பெருமான் தியாகேசர் தன் தோழன் சுந்தரனிடம் ஒரு திருவிளையாடல் நடத்தினார்.  அது என்ன என்று பார்ப்போமா? நாடும் உய்ய நாமுய்ய நம்பி சைவ நன்னெறியின் சீலம் சிறக்கவும், மாதவம் செய்த தென் திசை வளர்ந்திடவும், தீதிலா திருத்தொண்டர் தொகை பாடிடவும் அதன் வழி அடியார்களை போற்றும் பண்பு நெறியினை காட்ட வந்த சுந்தரர், எம் ஐயனாலே நீ எனது அடிமை என்று தடுத்தாட்கொள்ளப்பட்டவர். அவர் திருவாரூரிலே பரவையாரை மணந்திருந்தார். ஒரு சமயம் தல யாத்திரையின் போது  திருவொற்றியூர் வந்து தங்கி இருந்தார்.

அதே சமயம்  ஞாயிறு கிராமத்தை சார்ந்த  சங்கிலி என்ற பெண் திருவொற்றியூரில் ஒரு கன்னி மாடத்தில் தங்கி  தியாகராச பெருமானுக்கு புஷ்ப கைங்கரியம் செய்து வந்தார், அப்பெண் மீது இவருக்கு காதல் பிறந்தது. ஆனால் சங்கிலியாருக்கு மண வாழ்விலே நாட்டம் இல்லாமலிருந்தது, எனவே தம்பிரான் தோழன்,  தம் தோழனாகிய இறைவனிடம் சென்று, "தியாகேசா! நீர் எமக்காக தூது சென்று சங்கிலியின் மனதை மாற்றி எம்மை மணக்க சம்மதிக்க வைக்க வேண்டும் "என்று கோரிக்கை வைத்தார்.

பரம கருணைக் கடலான எம்பெருமான் தனது அன்பனின் வேண்டுகோளை நிராகரிப்பாரா? அவர் அதை ஏற்றுக் கொண்டார். ஆயினும் தன் தொண்டன் ஆருரனுக்கு படிப்பினையை தர விரும்பிய எம் ஐயன் ஒரு திருவிளையாடலையும் அங்கே நடத்தினார். சங்கிலியாரிடம் தூது சென்ற பரமன் அவள் கனவிலே சென்று " சுந்தரன் எனது பரம பக்தன் எனவே நீ அவனை மணந்து கொள்வாயாக " என்று கூறினார்.

அவருக்கு இன்னொரு மனைவி இருக்கின்ற போது "நான் எவ்வாறு அவரை மணந்து கொள்ள முடியும்?" என்று சங்கலி வினவ, எம்பெருமான் நீ சுந்தரரிடமிருந்து அவர் உன்னை பிரிந்து செல்ல மாட்டார் என்று என் சன்னிதானத்தில் சத்தியம் வாங்கிக்கொள் என்று கூறினார்.  இறைவனே கூறும் போது சங்கிலியார் மறுப்பாரா? அவர் கூறியவாரே சுந்தரரிடம் தன்னை எப்போதும் பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து தருமாறு கேட்டார்.

பரவையாரை முழுதும் மறக்க முடியாத சுந்தரர், இறைவன் முன் சத்தியம் செய்ய விரும்பாமல், அவரை 'இறைவனே தாங்கள் நான் சத்தியம் செய்யும் போது தங்கள் சன்னிதியில் இருக்க வேண்டாம் திருக்கோவிலில் உள்ள மகிழ மரத்தினில் இருந்து கொள்ளுங்கள்' என்று வேண்ட, இறைவனும் ஒப்புக்கொண்டார். ஆனால் சங்கிலியாரின் கனவிலே சென்று நாளை நாம் சன்னிதியில் இருக்க மாட்டோம் மகிழ மரத்தில் இருப்போம், எனவே நீ மகிழ மரத்தினடியிலே வைத்து சத்தியம் வாங்கிக் கொள் என்று கூறினார்.


சங்கிலி நாச்சியார் உடனுறை சுந்தர மூர்த்தி நாயனார்

மறு நாள் பரவையார் சன்னதியில் வேண்டாம் மகிழ மரத்தடியில் வைத்து சத்தியம் செய்து தாருங்கள் என்று கேட்க உண்மையை அறிந்திருந்த சுந்தரர்  வேறு வழியில்லாமல் மகிழ மரத்தினடியில் வைத்து சங்கிலியாருக்கு, "அவளை பிரியமாட்டேன் அவ்வாறு பிரிந்தால் கண் பார்வை இழப்பேன்" என்று சத்தியம் செய்து கொடுத்தார். பின்னர்  இருவருக்கும் திருமணம் இனிதே நடந்தது. சில வருடம் கழித்து திருவாருர், வீதி விடங்கரின் ஆழித் தேரோட்டத்தை காண விரும்பிய வன்தொண்டர், திருவொற்றியூர் எல்லையைத்தாண்ட அவர் கண் பார்வை பறிபோனது. தோழனே ஆயினும் கூட தவறு செய்தால் தண்டனை பெறுவார் என்பதை இறைவன் இங்கே நடத்தி காட்டினார்.

பின்னர் சுந்தரர் காஞ்சி சென்று கச்சி ஏகம்பனை பாடி வலக்கண் பார்வையும், திருவாரூரிலே தியாகேசரைப்பாடி இடக்கண் பார்வையும் பெற்றார். மாசி மாத பிரம்மோற்சவத்தின் போது மக நட்சத்திரத்தன்று கோவிலின் வடக்கு பக்கம் உள்ள இந்த கற்பக விருட்சமான மகிழ மரத்திற்கு அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் கல்யாண சுந்தரர் பார்வதி அம்பாள் திருக்கல்யாண உற்சவம்  சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

காலையில் கோலாகலமாக திருக்கல்யாணம் டைபெறுகின்றது. மாலை கல்யாண கோலத்தில் சுந்தரரும் சங்கிலியாரும் முன் செல்ல, எம்பெருமான்  அகத்தியருக்கு அன்று அருட்காட்சி கொடுத்த கல்யாண சுந்தரராக பின் செல்கின்றார். இவர்களைத் தொழுதவாறு அறுபத்து இரண்டு நாயன்மார்கள், அகத்தியர் லோபாமுத்திரை, பிரம்மன், விஷ்ணு, அதிகாரநந்தியெம்பருமான் ஆகியோர் எழுந்தருள்கின்றனர். வீதி வலம் முடித்து திருக்கோவிலில் மகிழ மரத்தினடியில்  கல்யாண சுந்தரர்,   சுந்தரருக்கும் சங்கிலியாருக்கும் தரிசனம்  ந்தருளுகின்றார். அன்று நடந்த சபத நிகழ்ச்சி இன்றும் நடத்திக் காட்டப்படுகின்றது. இந்நிகழ்ச்சி மகிழடி சேவை என்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

அறுபத்து நாயன்மார்களுள் கலிய நாயனார் வழிபட்ட தலம் இது.  படம்பக்க நாதரின் திருக்கோவிலுக்கு விளக்கிடும் திருப்பணி செய்து வந்தார் கலிய நாயனார்.  தனது அன்பனின் பக்தியை உலகுக்கு உணர்த்த விரும்பிய  எம் ஐயனின் திருவுள்ளத்தால் கலியனார் வறுமை வாய்பட்டார், வறுமையிலும் தனது பணியை  தொடர்ந்து வந்தார் கலியனார். இருந்த செல்வம் எல்லாம் கரைந்து விட, வேறு வழியில்லாமல் தனது மனைவியையே விற்க முயன்றார் , ஆனால் யாரும் அவளை வாங்க முன் வர வில்லை. எனவே ஒரு நாள் விளக்கிட எண்ணையே இல்லாத்தால் "உடலின் உதிரத்தையே விளக்கிலே எண்ணையாக இட்டு விளக்கேற்ற முயன்றார்அப்போது கருணைக்கடலாம் எம்பெருமான் அவருக்கு ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்து அவருக்கு சிவ லோகப் பதவி தந்தருளினார்.  படம்பக்க நாதர்  கருவறை சுற்று மண்டபத்தில் கலிய நாயனாருக்கு தனி சன்னதி உள்ளது.

                                            

கல்யாண சுந்தரர்

7ம் நூற்றாண்டில் தொண்டைமான் சக்கரவர்த்தி காளியை  இங்கு வட்டப்பாறை அம்மனாக வழிபட்டார். உக்ர ரூபிணியாக இருந்த அம்மனை சாந்தப்படுத்துவதற்காக ஆதி சங்கரர் அமைத்த ஸ்ரீசக்ரம் ஒரு வட்டப்பாறையின் கீழே உள்ளதால் அம்மனுக்கு இப்பெயர்.  வட்டப்பாறையம்மன் சன்னதிக்கு எதிரே சூளாமணி பைரவருக்குத் தனிகோயில் உள்ளது. ஒரு காலத்தில் இவ்விடத்தில் உயிர்பலிகள் இருந்துள்ளன. ஆதிசங்கரர் இத்தலம் வந்த போது அவற்றை நிறுத்தினார் என்று கூறப்படுகிறது.

கவிச்சக்கரவர்த்தி கம்பர், வடமொழி வால்மீகி இராமாயணத்தை தமிழில் எழுத திருவொற்றியூர் வந்தார். இவர் வட்டப்பாறை அம்மனின் பக்தர். இவர் பகல் முழுவதும் சதுராரன பண்டிதரிடம் இராமாயணத்தை செவி வழியாகக் கேட்டு இரவு முழுவதும் இராமாயணத்தை எழுதுவார். இப்படி எழுதுவதற்கு முன் வட்டப்பாறை அம்மனை வணங்குவார். அம்மனும் தன் பக்தனின் தமிழ்த்தொண்டினை வளரச் செய்ய சாதாரணப்பெண் போல் வந்து தீப்பந்தம் எந்தினார் என்கின்றனர்.

கிழக்கு வெளிப்பிரகாரத்தில் வகிரக சன்னதி, குழந்தையீஸ்வரர் சன்னதி, சித்தி விநாயகர், பால சுப்பிரமணியர் சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.  கொடி மரம், பலி பீடம், உயரத்தில் நந்தி தேவர், ஜகந்நாதர், எதிரே சிவ சூரியன், நால்வர், சகஸ்ர லிங்கம் இவருக்குதான் பிரதோஷ காலத்தில் அபிஷேகம் நடைபெறுகின்றது, இராமநாதர் அமிர்த கண்டேஸ்வரர் சன்னதிகள்.  தெற்குப் பிரகாரத்தில் அஸ்வினி முதல் ரேவதி ஈறாக 27 நட்சத்திரங்களுக்குமாக 27 லிங்கங்களை ஒரே நேர் வரிசையில் அமைத்து அதன் முன்னே அருமையான நந்தவனமும் அமைத்துள்ளனர். மேற்கு வெளிப் பிரகாரத்தில் காளி, ஆகாசலிங்கம், அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர், நாகலிங்கேஸ்வரர், காளத்திநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர்  சன்னதிகள் அமைந்துள்ளன.           

                         

அதிகாரநந்தி தேவர் 

ஆலயத்தின் வடமேற்கு மூலையில் அற்புத கலை நுணுக்கம் மிக்க கற்சிலைகளுடன் கூடிய முன் மண்டபத்துடன் திருவொற்றீஸ்வரர் கோயில் எழிலாக அமைந்துள்ளது. இப்பெருமானுக்குத்தான் நான்கு கால பூஜைகளும் டைபெறுகின்றன. இக்கோவிலின் முன்மண்டபத்தின் தூண்களில் கலை நுணுக்கத்துடன் கூடிய அற்புதமான சிற்பங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து. பிரம்மா-விஷ்ணு, விநாயகர்-முருகர், ஊர்த்துவத்தாண்டவர்–காளி, பட்டினத்து அடிகள்-பத்திரகிரியார், தும்புரு–நாரதர், வியாக்ரபாதர் – பதஞ்சலி, நந்தி–பிருங்கி, என்று எதிரெதிர் தூண்களில் அருமையாக இணையாக அமைத்துள்ளனர். துவாரபாலகர்கள் அழகும் சொல்லி மாளாது. மேலும் பிரம்மாவின் மானச புத்திரர்களும்,  தென்முகக் கடவுளிடம் மௌன உபதேசம் பெற்ற  சனகாதி முனிவர்கள் நால்வரும், தேவாரமும்,  திருவாசகமும் பாடியருளிய சைவ சமயக் குரவர்கள் நால்வரும் பெரிய சிற்பங்களாகவும், சிவ பெருமானின் திருக்கோல வடிவ மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்கள், சுந்தரர் - சங்கிலி நாச்சியார் ஆகியோரின்  சிறிய சிற்பங்களாகவும் கண்டு களிக்கலாம். சிம்மத்தின் வாயில் இரு கல் வளையங்கள் அக்கால சிற்பிகளின் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.  தியாகராஜர் என்றாலே யோகம் தானே நுழைவாயிலின் கூரையில் ஒரு சூரிய சந்திரர்களுக்கு இடையே மனிதனுடைய உடல் அமைக்கப்பட்டு, அவ்வுடலில் உடற்சக்கரங்களின் விளக்கம் அமைத்துக் காட்டப்பட்டுள்ள அழகு கண்டுணரத்தக்கது. சன்னதியின் முகப்பில் திருக்கயிலாயக் காட்சியை கண்டு களிக்கலாம். 

வடக்கு வெளிப் பிரகாரத்தில் நந்தவனேஸ்வரர், நந்தவனம் சூளாமணி, பைரவர் சன்னதி, கல்யாண சுந்தரர் சன்னதி அமைந்துள்ளது. மகிழ மரத்தை சுற்றி இரும்பு கம்பிகளினால் வேலி அமைத்துள்ளனர். அதற்கு அருகில் அழகிய சிற்பங்களுடன் கூடிய தியாகரின் வசந்த மண்டபம் உள்ளது.  வசந்த மண்டபத்தை அடுத்து சுந்தர மூர்த்தியார் மண்டபம் உள்ளது அதில் சுந்தரர் சங்கிலியாருடன் திருக்கல்யாண கோலத்தில் காட்சி தருகின்றார். இன்றும் இம்மண்டபத்தில் பல்வேறு திருமணங்கள் டை பெறுகின்றன. மகிழ மரத்தின் அருகே தியாகப்பெருமானின் திருப்பாதங்களை தரிசிக்கலாம்.

இத்தலவிநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார் முருகர் குமாரசாமித் தேவன் என்றும் அழைக்கப்படுகிறார்.

கரியமுகில் போலு மிருளளக பார
     கயல்பொருத வேலின் ...... விழிமாதர்

கலவிகளில் மூழ்கி ம்ருகமதப டீர
     களபமுலை தோய ...... அணையூடே

விரகமது வான மதனகலை யோது
     வெறியனென நாளு ...... முலகோர்கள்

விதரணம தான வகைநகைகள் கூறி
     விடுவதன்முன் ஞான ...... அருள்தாராய்

அரிபிரமர் தேவர் முனிவர்சிவ யோகர்
     அவர்கள்புக ழோத ...... புவிமீதே

அதிகநட ராஜர் பரவுகுரு ராஜ
     அமரர்குல நேச ...... குமரேசா

சிரகரக பாலர் அரிவையொரு பாகர்
     திகழ்கநக மேனி ...... யுடையாளர்

திருவளரு மாதி புரியதனில் மேவு
     ஜெயமுருக தேவர் ...... பெருமாளே

 

என்று அருணகிரி நாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார். இப்பாடலில் திருவொற்றியூரை திரு வளர் அதாவது லட்சுமி கடாட்சம் நிறைந்த ஊர் என்று போற்றியுள்ளார்.  கோவிலின் முன் பக்கம் அமர்ந்து இறைவனை தியானம் செய்வதற்கு ஏற்றார் போல பெரிய மணல் வெளி உள்ளது.

                                                                                      தியாகேசர் தரிசனம் தொடரும் . . . . .

Sunday, August 23, 2020

திருப்பாத தரிசனம் - 36

தொண்டை மண்டலத்தின் உபவிடங்கத் தலங்கள்


திருவொற்றியூர் - மாணிக்க  தியாகேசர்

கல்யாண சுந்தரர்

சோழ மண்டலத்தின் சப்தவிடங்க தலங்களைப் போல தொண்டை மண்டலத்தில் தியாகேசர் அருள் பாலிக்கும் மூன்று தலங்கள் உபவிடங்கத் தலங்கள்  என்று போற்றப்படுகின்றன இத்தலங்களின் சிறப்பை இப்பாகத்தில் காணலாம் அன்பர்களே.  

வடவேங்கடம் முதல் தென் குமரி ஆயிடை செந்தமிழ் நாட்டின்  ஓர் மண்டலம்,  பல்லவர்கள் சிறப்புடன் ஆண்ட தொண்டை மண்டலம். தொண்டை மண்டலம் சான்றோருடைத்து என்பது சான்றோர்களின் வாக்கு. இத்தொண்டை மண்டலத்தில் முப்பத்திரண்டு சிவாலயங்கள் மூவரால் பாடல் பெற்ற தலங்கள் ஆகும்.  அவற்றுள் தர்மமிகு சென்னையில் கடற்கரையோரம் அமைந்த தலங்கள் மூன்று. அவையாவன திருவான்மியூர், திருமயிலை, மற்றும் திருவொற்றியூர் ஆகும். இவற்றுள் திருவான்மியூரும், திருவொற்றியூரும் தொண்டை நாட்டின்  உபவிடங்க தலங்கள். எம்பெருமான் இருந்தாடும் அழகராக, தியாகராஜராக அருள் பாலிக்கும் தலங்கள். மற்றொரு உபவிடங்கத்தலம் திருக்கச்சூர் ஆகும். இவற்றுள் திருவொற்றியூரும், திருக்கச்சூரும் எம்பிரான் தோழர்  சுந்தரருடன் தொடர்பு கொண்டவை.

சப்த விடங்கத்தலங்களைப் போலவே இந்த உபவிடங்கத்தலங்களுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. அவையாவன இவை மூன்றும் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள். பௌர்ணமியன்று தியாகராசருக்கு சிறப்பு அபிஷேகமும் நடனக்காட்சியும் சிறப்பாக நடைபெறுகின்றது.  பெருவிழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன. மாசி முழு நிலவை ஒட்டி திருவொற்றியூரிலும், பங்குனி முழு நிலவை ஒட்டி திருவான்மியூரிலும், சித்திரை முழுநிலவை ஒட்டி திருக்கச்சூரிலும் தியாகேசப்பெருமான், நடனக்காட்சியுடனும் உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றது. தியாகராஜ தலம் என்பதால், சோமாஸ்கந்தர் பஞ்சமூர்த்தியாக வலம் வருவதில்லை, சந்திரசேகரரே  பல்வேறு வாகனங்களில் காலையும் மாலையும் திருஉலா வருகின்றார். பஞ்ச மூர்த்திகளில் அம்மையும் தனியாக வலம் வருவதில்லை. தியாகராஜர் இரவு பஞ்சமூர்த்திகள் திருஉலா முடிந்தபின் அம்மையுடன்  மாட வீதி உற்சவம் கண்டருளுகிறார்.  இனி திருவொற்றியூரின் சிறப்புகளை முதலில் காணலாம் அன்பர்களே.

உலகம் தோன்றிய போது, தோன்றிய முதல் ஊர் திருவொற்றியூர்,   எனவே இத்தலத்திற்கு ஆதி புரி என்ற பெயர் உண்டு. திருவொற்றியூர் ஞான பூமி, முக்தி ஸ்தலம், சிவபெருமான் தமது இருந்தியக்கும் கூத்தை (அமர்ந்நிலையில்) பத்மதாண்டவம் என்னும் அனுக்கிரக டனத்தை நந்தியெம்பெருமானுக்கு ஆடி அருள் பாலித்த தலம்.  திருக்கயிலை நாதர் - மலையரையன் பொற்பாவை பார்வதியின் திருமணத்தின் போது வடக்கு உயர்ந்து, தெற்கு தாழ, இறைவன் பணிக்க தென் திசையை சமன் செய்ய வந்த அகத்தியருக்கு இறைவன் கல்யாண சுந்தரராக அருட்காட்சி ல்கிய தலம்.

இறைவன் தன்னை பூசித்து வந்த வாசுகி என்னும் பாம்பை தன்னுள் ஒற்றிக்கொண்டதால் “ஒற்றீசர்” என்றும் அழைக்கப்படுகிறார், எனவே இத்தலம் ஒற்றியூர் ஆனது. பிரம்மா, மஹா விஷ்ணு, ஆதி சேஷன், வாசுகி என்ற இரு நாங்கள், சந்திரன் ஆகியோருக்கு சிவசாயுஜ்ஜியப்பதவி அளித்த தலம். இராமரின் திருக்குமாரன் இலவன் பிரதோஷ காலத்தில் பூஜித்த தலம். காசிக்கு நிகராக ஸ்வர்ண பைரவர் தனிக்கோவில் கொண்டு அருள் பாலிக்கும் தலம்.

இக்கலிகாலத்தில் கருணைக் கடலான  வடிவுடையம்மன், பசியோடிருந்த வள்ளலாருக்கு அவரது  அண்ணி ரூபத்தில் வந்து அமுது படைத்தத் தலம். 27 ட்சத்திர லிங்ங்களை தன்னகத்தே கொண்ட தலம். முசுகுந்தன், ஐயடிகள் வழிபட்ட தலம்.  முற்றுந்துறந்த முனிவராகிய பட்டினத்தடிகள் இறைவன் அருள் பெற்று கடற்கரையில் சமாதி அடைந்த தலம். உதிரத்தால் விளக்கெரிக்க முயன்ற கலிய நாயனார் முக்தி பெற்ற தலம்.

எம்பிரான் தோழர் சுந்தரர் சங்கிலி நாச்சியாரை, சிவபெருமான் மகிழ மரத்தில் சாட்சியாக இருக்க மணம் புரிந்த தலம்.  ஆதி சங்கரர் 8 பாடல்கள் பாடிய தலம்.  தொண்டைமான் சக்கரவர்த்தி வழிபட்ட காளி வட்டப்பாறை அம்மனாக அருள் பாலிக்கும் தலம். அம்மனின் 51 சக்தி பீடங்களில் ஒன்றான தலம். ஓம் என்ற பிரணவத்தின் உட்கருத்தை விளக்கும் ஏக பாத திருமூர்த்திகளின் திரு வடிவம் அமையப் பெற்ற தலம். பிரளயக் கால அக்னி குண்டம் அமைந்துள்ள தலம் என பல சிறப்புகள் இத்தலத்திற்கு உண்டு.

தேவாரப் பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் இது 253-து தலம் ஆகும். தொண்டை நாட்டுத்தலங்களில் 19வது தலம். சிவபுரி, பத்மபுரி, வசந்தபுரி, பிரம்மபுரி, நிந்தரபுரி, கவசபுரி, பூலோக சிவலோகம், அழியா கரம், ஔதம்பர க்ஷேத்திரம், குணாலயம் என்றெல்லாம் போற்றப்படும் தலம். நினைத்தாலே யமபயம் நீக்கும் தலம், இத்தலத்தின் எல்லையை மிதித்தாலே துன்பம் விலகும். இறந்தால் பிரம்மனுக்கும் எட்டாத சிவபதம் கிட்டும். அன்னதானம் செய்தால் இந்திரப்பதவி கிட்டும். இத்தலத்திலுள்ள கல் எல்லாம் சிவலிங்கம், நீரெல்லாம் கங்கை, உணவெல்லாம் அமிர்தம் என்று தலபுராணம் பேசுகின்றது.

பாட்டும் பாடி பரவித் திரிவார்

ஈட்டும் வினைக டீர்ப்பார் கோயில்

காட்டும் கலமுந் திமிலும் கரைக்கே

ஓட்டும் திரைவா வொற்றியூரே!

என்று சுந்தர மூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற இத்தலத்தின் தலவரலாறு. 

பிரளய காலத்தில் உலகம் அழிவுற்று மீண்டும் புதிதாக உலகம் தோன்றும், அப்போதெல்லாம் பிரம்மா தோன்றி, உயிர்களைப் படைப்பார். ஒரு பிரளய காலத்தின் போது உலகம் அழிவதை பிரம்மா விரும்பவில்லை, எனவே உலகம் அழியாமல் காக்கும்படி அத்தி வனத்தில்  சிவனை வேண்டி யாகம் டத்தினார். யாகத்தின் மத்தியில் அக்னி வடிவில் தோன்றிய சிவபெருமான் அவரது வேண்டுகோளை ஏற்றார். பின் பிரம்மாவின் வேண்டுதலுக்காக இலிங்க ரூபமாக எழுந்தருளினார். அக்னி குண்டமே கோயிலாக உருவானது.  பிரளயம் நீங்கி உலகம் தோன்றிய வேளையில் இங்கு எழுந்தருளியதால் இத்தலத்து இறைவர் ஆதிபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார் என்பது ஒரு ஐதீகம்.

பிரம்மா வேண்ட சிவபிரான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார். வெப்பம் ஒன்று கூடி சிறு கோள வடிவமானது. அக்கோள வடிவம், மகிழ மரத்தடியில் சிவலிங்கமாகத் தோன்றியது. பிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் இத்தலத்திற்கு ஒற்றியூர் என்ற பெயர் என்றாயிற்று என்பது இன்னொரு ஐதீகம். வடமொழியில் ஔதம்பர க்ஷேத்திரம் என்றழைக்கப்படுகின்றது.

நாகராஜவான ஆதிசேடன் வழிபட்டதால் "படம்பக்க நாதர்" என்றும் அழைக்கப்படுகின்றார். இறைவன் தன்னுடைய பூதப்படைகளை இத்தலத்திற்கு காவலாக அமைத்ததால் பூலோக சிவலோகம் என்றும் அறியப்படுகின்றது.

உபமன்யு முனிவரிடம் சிவதீட்சை பெற்ற வாசுகி என்ற நாகம் சுயம்பு மூர்த்தியை தினந்தோறும் வழிபட்டு வந்தது, அதனால் மனம் மகிழ்ந்த ஈசன் வாசுகிக்கு அருள புற்று வடிவாகத்தோன்றி தன்னுள் ஐக்கியப்படுத்திக்கொண்டார். ஒற்றியூர் வாழ் இறைவன் பாம்பையும் மதியையும் சூடி,  அவரே பாம்பாகி; படம்பக்க நாதராகி அருள் பாலிக்கின்றார். பாம்பும், மதியும் பற்றுக்கொண்டு சிவபெருமான் முடியை அலங்கரிப்பது போல் பக்தியுடன் அவன் பாதங்களை பிடித்து தொழுதால் மக்கு ற்கதி கிடைக்கும் என்று பாடுகிறார் அப்பர் பெருமான்.

ஏட்டு வரியில் நீங்கல் என்ன எழுத்தறியும்

நாட்டமலரும் திருநுதலார் -  என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் பாடியபடி இறைவன் எழுத்தறியும் பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றார். ஒரு சமயம் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் அயோத்தியை ஆண்ட  சூரியகுல  மன்னனான மாந்தாதா எல்லாத் தலத்தின் படித்தரத்தையும் குறைத்து அனுப்பிய கட்டளை ஓலையில் இவ்வூர்  இறைவனே ஒருவரும் அறியாதபடி "ஒற்றியூர் நீங்கலாக மற்றையூர்க்கிக்கட்டளை" என்று  அரசனுக்கும், ஓலை நாயகத்திற்கும் தெரியாதவாறு வரி பிளந்து எழுதி அனுப்பியதால் இவர் "எழுத்தறியும் பெருமாள்".

வள்ளலார் சுவாமிகள் எழுத்தறியும் பெருமாளைப் பற்றி பாடிய ஒரு பாடல் இதோ

உண்ணாடும் வல்வினையால் ஓயாப் பிணி உழந்து

புண்ணாக நெஞ்சம் புழுங்கி நின்றேன் புண்ணியனே

கண்ணான உன்றன் கருணை எனக்களிக்க

எண்ணாயோ ஐயா எழுத்தறியும் பெருமாளே!.

ஈசர்  லிங்க ரூபமாக புற்றிலே சுயம்புவாக உருவானவர், எனவே இவர் "வன்மீக நாதர்" என்றும்  "புற்றிடம் கொண்டார்"  என்றும் அழைக்கப்படுகிறார்.  மேலும் மகாதேவ பட்டாரகர், திருவொற்றியூர் மகாதேவர், ஒற்றியூர் ஆழ்வார், திருவொற்றியூருடைய  நாயனார், ஆதிபுரீஸ்வரர், எழுத்தறியும் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். திருவொற்றியூரிலே எம்பெருமான் "மாணிக்க தியாகராகவும்" எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். ஐயனின் சபை ஔதம்பர சபையாகும்.  தியாகேசரின் மற்ற திருநாமங்கள் காரணி விடங்கர், இளமை தந்த நாயனார், கொழுந்தீஸ்வரர். ஐயனின் நின்றாடும் கூத்தை கண்டு மகிழ்ந்த நந்தியெம்பெருமான், இறைவனின் இருந்தாடும் அழகைக் காண விழைந்தார். இறைவனும் “பாலாறு பாயும் தொண்டை நாட்டில் நான் சுயம்புவாக தோன்றிய திருவொற்றியூரில் சென்று தவம் செய்தால் ஆசை நிறைவேறும் என்றார்.  நந்தியும் ஒற்றியூர் வந்து நந்தி தீர்த்தம் உண்டாக்கி தவம் புரிந்து ஐயனின் பத்மதாண்டவத்தை தரிசிக்கும் பேறு பெற்றார்.

நாள் தோறும் சிவபெருமானின் நடனம் கண்ட திருமால் ஒரு நாள் அந்நடனக்காட்சி மனதில் தோன்றாது வருந்தி நிற்க  மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று திருவொற்றியூர் வந்தால் எமது பத்மதாண்டவ  நடனக்காட்சி கிடைக்கும் என்ற ஒலி கேட்டு திருவொற்றியூர் வந்து தவம் செய்து ஐயனின் நடனத்தை திருமகளுடன் கண்டு களித்தார்.

ஒரு சமயம் காசி மன்னன் இறைவனின் திருநடனம் காண ஆவலுடன் ஒற்றியூர் வந்தான். அவன் வருவதற்கு முன்பே நடனம் முடிந்து விட, மனம் வருந்திய மன்னனை அமைதியுறச் செய்து மீண்டும் அவனின் அன்பு உள்ளத்திற்காக திருநடனம் காட்டியருளினார். தான் இருக்கும் இடத்தில் கங்கையும் இருக்க வேண்டும் என்று மன்னன் வேண்ட இறைவனும் அவ்வாறே அருள் செய்தார். இத்தீர்த்தத்திற்கு காசி தீர்த்தம் என்று பெயர்.


திருவொற்றியூர் மாணிக்க தியாகர்

இறைவர் தீண்டாத் திருமேனியர். நான்கு யுகங்களுக்கும் முற்பட்ட இத்தலத்தின் மூலவரை தொட்டு பூசை செய்ய முப்பத்து முக்கோடி தேவர்களும் பேரவா கொள்கின்றனர். இறைவன் தான் சுயம்புத்திருமேனி என்பதால் தன்னை பூஜிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று மறுத்து விடுகிறார். ஆயினும் பிரம்மா, மஹா விஷ்ணு, வாசுகி என்கிற நாகம்  இம்மூவரும் இறைவனை  பூஜிக்க கடும் தவம் செய்கின்றனர். இறைவன் கருணைக் கடல் அல்லவா! எனவே அம்மூவர் மட்டும் கார்த்திகை பௌர்ணமி தொடங்கி  மூன்று நாட்கள் பூஜிக்க அனுமதி அளித்தார் என்பது ஐதீகம்.

எனவே ஆதிபுரீஸ்வரருக்கு  நித்ய அபிஷேகம் கிடையாது, எப்போதும் சுவாமிக்குங்கக்கவசம் பூட்டப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று கவசம் கலையப்பட்டு சுவாமிக்கு புனுகு, ஜவ்வாது பூசப்பட்டு சாம்பிராணி தைலத்தினால் மூன்று நாட்களுக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது, இந்நாட்களில் மட்டுமே சுவாமியை  கவசம் இல்லாமல்  அப்படியே புற்றாகவே முழுமையாக கண்டு தரிசிக்க இயலும்.

சுவாமி மீது சார்த்தி எடுத்துக் கொடுக்கப்படும் தைலம் மிகவும் சிறப்பானது. அதை பூஜை அறையில் வைக்க வேண்டும். குழந்தைகளின் கண் திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, போன்ற அனைத்தையும் நீக்கும் அற்புத மருந்து அது. இச்சாந்தை நெற்றியில் அணிய சகல தோஷங்களும் அகலும். 

ஆதிசங்கரர் ஒரு சமயம் ஆதிபுரீசரை வணங்க ஒற்றியூர் வந்தார். அருகே கொற்றவை தெய்வமான வட்டப்பாறை அம்மனைக் கண்டார். தனயனைக் கண்ட தாயாருக்கு மகனுடன் சற்று விளையாட ஆவல். சன்னதியின் எதிரில் உள்ள கிணற்றின் மேல் பாயை விரித்து அதில் அமர்ந்து சொக்கட்டான் ஆட விரும்பினாள். அச்சமயம் கவுளி சொல்லியது. சாத்திரங்களுக்கு விளக்கம் கண்ட ஆதிசங்கரர், அக்கவுளியின் அருகில் சென்றார், என்ன அதிசயம்! ஆதிப்புரீசர் கௌலீசராக வந்து சங்கரருக்கு உபதேசம் அளித்தார். அதனை அருகே இருந்து திருமால்  செவி மடுத்தார்.

படம்பக்கநாதருக்கு தெற்குப்புறத்தில் கௌலீசர் சன்னதியும், அதில் தட்சிணா மூர்த்தி ரூபத்தில் ஆதிசங்கரருக்கு உபதேச காட்சியும் பின்புறமுள்ள திருமாலின்  இடது திருவடியில் மது வலது காதை வைத்து கேட்டால் அலை ஓசை கேட்கும் என்பது ஐதீகம். காபாலிகர் வழிபட்டவர் கௌலீஸ்வரர் என்பது சிலரது கூற்று.  சொக்கட்டானை இறைவன் திருவுள்ளப்படி ஆதிசங்கரர் கிணற்றில் தவற விட்டார். சொக்கட்டனை எடுக்க வட்டப்பாறையம்மன் கிணற்றில் இறங்க, சிவனாரின் உபதேசப்படி கிணற்றை மந்திர சாசனத்தால் மூடி  அம்மனின் உக்கிரத்தை ஆதி சங்கரர் குறைத்தார்.

ஆதிசேஷன் மகனான தொண்டைமான் சக்கரவர்த்தி காஞ்சியை தலை கராகக் கொண்டு ஆண்டு வந்தான். அச்சமயம் உரோமச முனிவர் பேரும் புகழுடன் விளங்கினார். குறும்பர்களோடு போரிட்டு செல்வம் இழந்து நின்ற தொண்டைமானுக்கு உரோமச முனிவர் தன் கையிலுள்ள தர்ப்பைப்புல்லை ஆதிபுரீசராக நினைத்து போரிடு என்றார். தொண்டைமானும் அவ்வண்ணமே செய்ய குறும்பர்கள் தோற்று ஓடினர். இறைவனுக்கு ன்றி கூறும் விதமாக தொண்டைமான் இக்கோவிலை கற்றளியாக மாற்றினான் என்று செவிவழி புராணம் கூறுகின்றது.  முதலாம் குலோத்துங்கன்  திருக்கோவில் முழுவதும் திருப்பணி செய்துள்ளான். இரண்டாம் குலோத்துங்கன் வட்டப்பாறை அம்மன் திருமதில், மண்டபம் கோபுரம் அமைத்தான்.

இத்திருவொற்றியூர் திருத்தலத்தில் எல்லாம் இரண்டு என்று இயம்பும் வண்ணம் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர், என இரண்டு, அம்பாள் வடிவுடையாம்பிகை, வட்டபாறையம்மன் என இரண்டு, அத்தி, மகிம் என இரண்டு தல விருட்சம்  இரண்டு, பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம் என இரண்டு,  காரணம்,  காமீகம் என இரண்டு ஆகம  பூஜைகள், இறைவன் மற்றும் இறைவிக்கு தனி கொடி மரங்கள்  என,  இத்தலத்தில் இரண்டு என் எண்ணிக்கை பிரதானம் பெற்றிருக்கிறது.

அரசனுக்கு அளிக்கும் பொருட்டு, தம்மிடம் நிறைந்த அன்புடைய ஏலேல சிங்கனுக்கு மாணிக்கங்களை அருளியதால் ஐயனுக்கு மாணிக்க தியாகர் என்னும் திருநாமம். எல்லா தியாக விடங்க தலங்களைப் போலவே இங்கும் மாணிக்க தியாகருக்கு மூலவரின் வலப்பக்கத்திலே தனி சன்னதி அமைந்துள்ளது.  நாரதர், தும்புரு, தேவர்கள் ஆகியோரின் கலை நயம் மிகுந்த சிற்பங்களுடன் அமைந்த முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது இவரது தனிக் கோவில். தியாகர் என்றாலே நடனம் தானே இங்கு எம்பெருமான் ஆடும் நடனம் "பத்ம தாண்டவம்"  ஆகும். இத்தலத்தில் எம் ஐயன் ஆருத்ரா தரிசனத்தின் போதும், மாசி பிரம்மோற்சவத்தின் போதும் " பதினெட்டு வகை நடன திருக்காட்சி" தந்து அருளுகின்றார். வைகாசி மாத வசந்தோற்சவத்தின் போது ஒன்பது வகை நடனக்காட்சி அருளுகின்றார்.

... தத்தமி தாள மொடு மருமலர் தியாகர் மகிழ் தரணி புகழ் ஒற்றியூர் வாழ்

தங்க மலர் நாதர் சடை கங்கை உருவான கொடி திங்கள் ஒளிவான வடிவே!

என்று தியாகரும் எம் அம்மை வடிவுடை நாயகியும் ஆடி வரும் நடனத்தை காண கண் கோடி வேண்டும்.

தியாகேசர் தரிசனம் தொடரும் . . . . .

Saturday, September 9, 2017

பட்டினத்தார்

குருபூசை 

ஆடி மாதம் உத்திராட நட்சத்திரத்தன்று பட்டினத்தார் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். அவரது குரு பூசை,  அன்றைய தினம்  திருவொற்றியூரில் அவரது திருக்கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் அவரை அவரது குருபூசையன்று தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது அப்போது எடுத்த படங்களின் தொகுப்பே இப்பதிவு.


நந்தி மண்டபம் 

இவரது இயற்பெயர் சுவேதாரண்யர், (திருவெண்காடர்)  காவிரிப்பூம்பட்டினத்திற்கு அருகில் உள்ள சாயாவனம் என்றழைக்கப்படும் திருசாய்க்காடு திருத்தலத்தில் திருவெண்காட்டில் உறையும் சிவபெருமானின் அருளினால் சிவநேசர், ஞானகலை ஆகியோருக்கு மகவாக  வ்ந்து சேர்ந்தார்.  .

தமது ஐந்தாவது வயதில் தந்தையாரை இழந்தார். தாயார் தக்க ஆசிரியர்களைக் கொண்டு இவருக்கு கல்வி கற்பித்தார். திருமணப் பருவம் அடைந்தபோது சிவகலை அம்மையாரை திருமணம் புரிந்தார். வெகு நாள் குழந்தைப் பேறு இல்லாமல் இருக்க, சிவப்பெருமானை மனமுருகி வழிபட எம்பெருமானே இவரிடம் குழந்தையாக வந்து சேர்ந்தார். அக்குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு போற்றி வளர்ந்தார்.


பட்டினத்தடிகள் 

 இளமைப் பருவம் அடைந்த மருதவாணர் குல வழக்கப்படி அயல்நாடு சென்று வணிகம் செய்ய விழைந்தார். திருவெண்காடரும் வேண்டியன செய்து தந்தார்.  மற்ற வனிகர்களூடன் புறப்பட்டு சென்றார். பொருள் ஈட்ட சென்ற மருதவாணர் கொண்டு சென்ற பொருட்களை  எல்லாம் கோவில், மடம் முதலான அற்ச்செயல்களில் செலவழித்துவிட்டு மீதமிருந்த செல்வத்தைக் கொண்டு எரு முட்டைகளையும் அவல் மூட்டைகளையும் வாங்கிக்கொண்டு கப்பலில் திரும்பி வரும் போது காற்றினால் கப்பல்கள் திசை மாறின. எனவே மற்ற கப்பல்களில் இருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் தீர்ந்து விட,  மருதவாணர் கொணர்ந்த அவலை உண்டு எப்படியோ புகார் திரும்பினர்.

நூதன விமானம் 

மற்றவர்கள்  தங்கள் பொருட்களையெல்லாம் இழந்தனர், ஆனால் மருதவாணர் கொணர்ந்த எரு முட்டைகள் மட்டும் தப்பியது. மற்றவர்கள் திருவெண்காடரிடம் சென்று தங்கள் மகனுக்கு சித்த பிரமை பிடித்து விட்டது என்று புகார் கூறிவிட்டு சென்றனர். அவரும் மகன் கொணர்ந்த எருமுட்டைகளை சினத்துடன் வெளியே எறிந்தார். உடைந்த எரு முட்டைகளில் இருந்து விலையுயர்ந்த கற்கள் சிதறின. திருவெண்காடர் மைந்தனது வணிகத்திறமை கண்டு வியந்து அவனைக் காண ஆவலுடன் வீடு திரும்பினார்.
எங்கு தேடினும் அவனை காணாது மனம் வருந்தினார்.  அச்சமயம் அவரது மனைவி ஒரு சிறு பெட்டியை கொணார்ந்து, இப்பெட்டியை தங்களிடம் சேர்பிக்கச் சொல்லிவிட்டு நம் பிள்ளை சென்று விட்டான் என்றார்.


வெண்காடர் அப்பெட்டியை திற‘ந்து பார்த்தபோது  அதில் ஒரு காதற்ற ஊசியும், அதனுடன் ஒரு ஓலையும் இருந்தது.அவ்வோலையில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்ற வாசகம் காணப்பட்டது.

 மகனாக வந்த சிவபெருமான் வெண்காடருக்கு உணர்த்திய உண்மை, ஒருவர் தன்து இறுதி பயணத்தின் போது எம்பெருமான் திருவடிதுணையே அன்றி அவனுடன் தன் மனைவி, மக்கள், உற்றார், உறவினர் யாரும் உடன் வர மாட்டார்கள், மேலும் தேடித்தேடி சேர்த்த பொன், பொருள், வீடு, மனை, எதுவும் உடன் வராது. ஏன் சிறு காதறுந்த ஊசி கூட உடன் வாராது. அவன் செய்த புண்ணிய பாவங்களின் விளைவுகள் மட்டுமே அவனுடன் வரும். என்பதை திருவெண்காடருக்கும் அதன் மூலம் நமக்கும் உணர்த்தினார்.
காதறுந்த  ஊசி



உண்மையை உணர்ந்த பட்டினத்தார் துறவறம் மேற்கொண்டார் தன்னுடைய செல்வத்தை எல்லாம் சிவனடியார்களுக்கு பிரித்துக் கொடுக்குமாறு கூறிவிட்டு, அன்னைக்கு மட்டும் இறுதி கடனை செய்வதாக உறுதி மொழி தந்து ஊரை விட்டு ஒது‘ங்கி பிச்சை கொண்டு வாழ்ந்து வந்தார். .

அதில் சிவபெருமான் தனக்கு உணர்த்திய உண்மையை பட்டினத்தார்  இவ்வாறு பாடுகின்றார்.

பிறக்கும் பொழுது கொடுவந்த(து)
      இலை பிறந்துமண்மேல்
இறக்கும் பொழுது ஒடுபோவ(து)
      இல்லை இடைநடுவில்
குறிக்கும் இச்செல்வஞ் சிவன்தந்த
      தென்றுகொடுகறியா(து)
இறக்கும் குலாமருக்(கு) என் சொல்லுவேன்
      கச்சி ஏகம்பனே

தன்னுடைய இளவல் இவ்வாறு இரந்துண்ணுவதை அவமானமாக கருதிய பட்டினத்தாரின் தமக்கை நஞ்சு கலந்த ஒரு அப்பத்தை உண்ணூம்படி  அடிகளுக்கு கொடுத்தார், இறையருளால் அதையறிந்த அவர் அந்த அப்பத்தை தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச்  சுடும் என்று கூறி, கூரையில் எறிய அவ்வீடு தீப்பற்றி தீக்கிரையானது.

சிறிது காலம் சென்றது பட்டினத்தடிகளின் தாயார் சிவபதம் அடைந்தார். இதை இறையருளால் திருவெண்காட்டில்  இருந்த அடிகள் அறிந்து காவிரிபூம்பட்டினம் வந்து தாயின் உடல் கட்டையிலும், வரட்டியாலும் மூடியிருந்ததை தாங்க முடியாமல், அவைகளை நீக்கி பச்சை வாழை மட்டைகளில் தன் தாயின் உடலைக் கிடத்தி “ஐயிரண்டு திங்களா அங்கமெலாம் நொந்து பெற்று” என்று பாடத்தொடங்கி அதில் “முன்னையிட்ட தீ முப்புரத்திலே, பின்னையிட்ட தீ தென் இலங்கையிலே, அன்னையிட்ட தீ அடிவயிற்றினிலே, யானும் இட்ட தீ மூள்க மூள்கவே  என்று பாடிய போது அனல் மூண்டு  சிதை கொழுந்து விட்டு எறிந்தது. தன் தாய்க்கு கொடுத்த வாக்கினை நிறைவேற்றிய பின் ஊர் ஊராக சென்று இறைவனை தொழுது பாடல்கள் பாடலானார்.

பேய்க்கரும்பு 


திருவாரூர், மதுரை, கொங்கு நாடு, துளுவநாடு கடந்து உஜ்ஜயனியை அடைந்து  ஒரு விநாயகர் ஆலயத்தில் நிஷ்டையில் அமர்ந்திருந்தார். அவ்வேளையில் அரண்மணையில் கொள்ளையடித்த திருடர்கள் திருடிய முத்து மாலையை இவர் கழுத்தில் மாட்டி விட்டு சென்றனர். காலையில்  அரச சேவகர்கள் பட்டினத்தடிகளை அரசனிடம் கொண்டு சென்று நிறுத்தினர். அரசனும் தீர விசாரிக்காமல் அடிகளை கழுமரத்தில் ஏற்றுமாறு ஆணையிட்டான்.  அவரை கழுமரத்திடம் அழைத்துச்சென்ற போது  அக்கழுமரத்தைப் பார்த்து “என் செயல் ஆவதினி யாதொன்றுமில்லை” என்ற பாட்டினைப்பாட அக்கழுமரம் தீப்பற்றி எரிந்தது.

அரசனைக் கண்ட பட்டினத்தார் அவன் ஞானவழியில் செல்ல பக்குவம் அடைந்திருப்பதும், அவன் மனைவி அவனை ஏமாற்றுவதையும் தெரிய வரவே, அதை மன்னனுக்கு உணர்த்தினார். மன்னனும் உண்மையை அறிந்து கொண்டு  துறவறம் பூண்டு பத்திரகிரியானார்.


திருவொற்றியூர் சிறப்பு 


பத்திரகிரியாரை  திருவிடைமருதூருக்கு போகும்படி பணித்து தாம் பல தலங்களை வணங்கித் திருவிடைமருதூரை அடைந்தார்.  அரசியும் இறந்து மறு பிறவியில் நாயாகப் பிறந்து பாத்திரகிரியாரிடம் வந்து சேர்ந்தது. திருவிடை மருதூரின் கீழ் கோபுர  கோபுர வாசலில் அமர்ந்து ஒரு திருவோட்டில்  பிச்சை எடுத்து பத்திரகிரியார் தாமும் உண்டு தம் மேல் கோபுர வாசலில் அமர்ந்திருந்த குருவுக்கும் உணவிட்டு தன்னை சுற்றிவந்த நாய்க்கும் உணவிட்டு வந்தார்.
ஒரு நாள் ஒரு சித்தர் வந்து பட்டினத்தாரிடம் பிச்சை கேட்க  அவரோ சிரித்துக்கொண்டே, நானோ சந்நியாசி,  கீழ் கோபுர வாசலில் அமர்ந்திருக்கிறானே என்  சீடன் சம்சாரி ஒரு திருவோட்டையும், கூடவே ஒரு நாயையும் கூட்டிக்கொண்டு அலைகிறான். அவனிடம் சென்று கேளுங்கள் என்றார்.


                 


இதை சித்தர் மூலமாக அறிந்த  பத்திரகிரியார் சந்நியாசியாக மாறிய எனக்கு இந்த திருவோடும் நாயும் எதற்கு என்று திருவோட்டை தூக்கிப்போட்டு நாயின் மேல்  உடைக்கிறார் அதில் நாயும் இறந்து விடுகின்றது.   பத்திரகிரியாரும் சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இவ்வற்புதத்தைக் கண்ட பட்டினத்தார் சிவச‘ந்நிதியடைந்து “அருட்கடலே, அடியேனை இவ்வுலகில் இன்னும் இருத்தியிருப்பதின் குறிப்பு என்னவோ அறிகிலேன்” என்று முறையிட்டார்.


இறைவனும் திருவுளம் கொண்டு காட்சி தந்து ஒரு பேய்க்கரும்பை அளித்து எம் அன்பே! வருந்தாதே! எத்தலத்தில் பேய்க்கரும்பு இனிக்கிறதோ அங்கே முக்தி என்று அருள் செய்தார். பட்டினத்த்தாரும் திருக்கச்சி சென்று

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப்பிழையும் துதியாப் பிழையும் தொழாப்பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே.


என்று பல பாடல்களினால்  பாடிப்பரவி பின்னர் பல தலங்களுக்கு  சென்றார் எங்கும் பேய்க்கரும்பு இனிக்கவில்லை. நிறைவாக திருவொற்றியூர் தலத்தை அடைந்து தியாகராஜப்பெருமானையும், வடிவுடையம்மனையும் பணிந்தார் திருவொற்றியூரில் பேய்க்கரும்பு இனித்ததால் தனக்கு முக்தி விரைவில் சித்திக்கும் என்று உணர்ந்தார்.


பட்டினத்தடிகள் கடலோரம் சென்று அங்கே  மாடு மேய்க்கும் சிறார்களோடு கூடி விளையாடிக்கொண்டிருக்கும் வேளையில்  அதியற்புத ஆடல்கள் பல புரிந்தார். ஒரு நாள் அவர் ஒரு குழியிலறங்கி மறைந்தார்.  அவரைக் காணோம், எங்கு சென்றார்? என்று தேடுகையில்  சுவாமிகள் ஒரு மணற்குன்றின் மேல் தோன்றினார்.  இங்ஙனம் அடிகள் சிறார்களுக்கு  ஆடல் காட்டி ஒரு முறை குழியிலிறங்கி உட்கார்ந்து சிறுவர்களை நோக்கி “ நண்பர்களே என் மீது ஒரு சாலைக் கவிழுங்கள் (சால் என்பது சலவைத் தொழிலாளர்கள் பயம் படுத்தும் ஒரு பெரிய அண்டா)  என்றார், சிறுவர்களும் அவ்வாறே செய்தனர். சிறிது நேரம் கழித்து சாலைப் புரட்டிப் பார்த்தபோது  அவ்விடத்தில்  அவரது திருமேனி (ஸ்தூல தேகம்) மறைந்து, லிங்க வடிவமாக காட்சி அளித்தார்.  பரமனை அவர்

மாதா உடல் சலித்தாள்
    வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவுங் கைசலித்து
    விட்டானே – நாதா
இருப்பையூர் வாழ்சிவனே
    இன்னமோர் அன்னை
கருப்பையூர் வராமற் கா!  

- என்று வேண்டியபடி இறைவனுடன் இரண்டறக் கலந்தார். தாயுமான சுவாமிகள் “பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளைப் போல் – ஆருந்துறக்கையறிது”  என்று பாடியபடி முற்றுந்துறந்து பரமனை எண்ணி எண்ணி அவன் திருவடிகளில் இரண்டறக் கலந்து, பரமனின் அருவுருவ திருமேனியாகவே மாறினார்.


விமானத்தில் பட்டினத்தார் 


வங்கக் கடல் அலைகள் தாலாட்ட திருவொற்றியூர் கடற்கரையில் அவர் ஆலயம் அமைந்துள்ளது.  முன்னர் எளிமையான ஓட்டு கட்டிடமாக இருந்தது. தற்போது கற்றளியாக மாறியுள்ளது. கவின்மிகு விமானம் ஒன்றும் அமைத்துள்ளனர். எதிரே ஒரு தியான மண்டபமும் புதிதாக அமைத்துள்ளனர். சதுர பீடத்தில் லிங்க வடிவில் அருள் பாலிக்கின்றார்.  நாகாபரணம் சார்த்தியுள்ளனர். விநாயகர் முருகன், நந்தியெம்பெருமான், சண்டிகேஸ்வரரும் உடன் அருள்கின்றனர். 

இவரை வேண்டிக்கொள்ள அறிவான குழந்தைகள் பிறக்கும், உலக ஆசை மறியும் என்பது ஐதீகம். இவர் முக்தியடைந்தது ஆடி மாதம் பௌர்ணமியையொட்டிய உத்திரட்டாதி நட்சத்திரம் என்பதால் ஒவ்வொரு மாத உத்திரட்டாதி நட்சத்திரத்தன்றும், வியாழக்கிழமைகளிலும் சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன.


சண்டிகேஸ்வரர் சன்னிதி


ஆடி உத்திராடத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதணை சொற்பொழிவு, அன்னதானம் நடைபெறுகின்றது. மஹா சிவராத்திரி இரவில் நான்கு கால சிறப்பு அபிஷேக ஆராதனையும் அன்னதானம் நடைபெறுகின்றது. ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகமும், பிரதோஷ பூஜையும் சிறப்பாக நடைபெறுகின்றது. சமயம் கிட்டும் போது திருவொற்றியூர் சென்று பட்டினத்தாரை வணங்கி வாருங்கள்.