Sunday, November 13, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 30

 

பேரூர் பட்டீஸ்வரர் தரிசனம்


அழகிய கலை நுட்பங்கள் கொண்ட அற்புத சிற்பங்கள் நிறைந்த காலத்தால் அழியாத கனக சபையில் ஆனந்த தாண்டவ நடராசர் சிவகாமியம்மையுடன் தாண்டவம் முடியும் கோலத்தில் அருள் பாலிக்கும் மேலைச் சிதம்பரத் தலம்.

காஞ்சி மா நதி என்னும் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த தேவார வைப்புத்தலம். 

சுந்தரர், அப்பர், அருணகிரிநாதர் பாடிய தலம். கச்சியப்ப சிவாச்சாரியார் தலபுராணம் பாடிய தலம். 

பிறவாப்புளி, இறவாப்பனை, எலும்பை கல்லாக்கும் ஆறு, புழுக்காத சாணம் முதலியன விளங்கும் முக்தி தலம்

வாகனமான நாய் இல்லாமல் பைரவர் ஞான பைரவராக அருள் பாலிக்கும் தலம்

காமதேனு வழிபட்ட தலம், அதன் கன்று பட்டியின் குழம்புத் தழும்புடன் தேவ தேவன் மஹா தேவன் இன்றும் திருக்காட்சி தரும் தலம்.  

விஷ்ணுவாகிய பட்டிமுனியும், பிரம்மாவாகிய கோமுனியும் வழிபட்ட தலம்.

இறைவனும் இறைவியும் சேற்றில்  இற~ க்லி நாற்று நட்டு உழவின் பெருமையை உணர்த்திய  தலம். இவ்வளவு பெருமைகளும் கொண்ட  பேரூர் திருத்தலத்தை  தரிசிக்கலாமா அன்பர்களே?

பாலக்காட்டு கணவாய் வழியாக மலய மாருதம் தவழ்ந்து குளிர்வித்துக் கொண்டிருக்கும் கொங்கு மண்டலத்தின் தலை நகரான கோவை மாநகரின் அருகில் அமைந்த தலம். கோவை மாநகரிலிருந்து சுமார் 10 கி,மீ தூரத்தில் சிறுவாணி  செல்லும் வழியில் அமைந்துள்ளது இவ்வளவு சிறப்புகள் பெற்ற இத்தலம்.

 இத்திருக்கோயிலின் புராதனப் பெயர் பிப்பலாரண்யம் (பிப்பலம் - அரச மரம்; ஆரண்யம் -  காடு). மேலும், காமதேனுபுரி, பட்டிபுரி, ஆதிபுரி, தட்சிண கயிலாயம், தவசித்திபுரம், ஞானபுரம், சுகலமாபுரம், கல்யாணபுரம், பிறவா நெறித்தலம், பசுபதிபுரம், மேலை சிதம்பரம் போன்ற மற்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.

 சுந்தரர் இரண்டு பாடல்களாலும், அப்பர் பெருமான் மூன்று பாடல்களிலும் இத்தலத்தை  வைப்புத் தலமாக பாடியுள்ளனர்,  அதில் அப்பரின் ஒரு பாடல்

 அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற் றுள்ளார்

    ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார்

தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார்
    சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்
நஞ்சைத் தமக்கமுதா வுண்ட நம்பர்
    நாகேச் சரத்துள்ளார் நாரை யூரார்
வெஞ்சொற் சமண்சிறையி லென்னை மீட்டார்
    வீழி மிழலையே மேவி னாரே.

வெள்ளியங்கிரி என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஐந்து மலைகள் அரணாக சூழ இயற்கை சூழலில் எழிலாக அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம். ஆதி காலத்தில் நாரதர் தக்ஷிண கைலாயமான இத்தலத்தில் உமா மஹேஸ்வரரை வெள்ளியங்கிரியில் வழிபட்டு இங்கு சிவலிங்கத்தை ஸ்தாபிதம் செய்து வழிபட்டார். ஒரு சமயம் பிரம்ம தேவர் படைப்புத்தொழில் செய்யும் போது சோர்வுற்று கண்ணயர்ந்து விட்டாராம். இதை அறிந்த மஹா விஷ்ணு காமதேனுவை அழைத்து “ நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத் தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட, காமதேனுவும் இமயமலையில் அருந்தவம் இருந்தும் சிவன் அருள் சித்திக்காததால் நாரதர் ஆலோசனைப்படி தக்ஷிண கைலாயமான பேரூரில் வந்து தவம் செய்து வரும் போது ஒரு நாள் அதன் கன்றான பட்டியின் கால் குளம்பு பெருமானின் மேனியில் சிக்கிக் கொள்ள அதை தன் கொம்பினால் விடுவித்தது, இறைவன் தோன்றி இருவருக்கும் அருளினான். பட்டி வழிபட்டதால் தான் பட்டீஸ்வரர் என்று அழைக்கப்படுவேன் என்று வரம் அருளினார். மேலும் முக்தி தலம் என்பதால் இங்கு உனக்கு சிருஷ்டி இரகசியத்தை அருள முடியாது நீ திருக்கருவூர் சென்று தவம் செய் என்று அருளினார். காமதேனு மட்டும் அல்ல, வியாசர், விஸ்வாமித்திரர், யமன் ஆகியோர்கள் இப்பெருமானை வழிபட்டுள்ளார். நான்கு யுகங்களிலும் வெவ்வேறு பெயர்களில் இத்தலம் விளங்கியுள்ளது.

இன்றும் ஐயனின் திருமேனியில் பட்டியின் குளம்பு காய தழும்பையும், காமதேனுவின் கொம்பின் நுனித்தழும்பையும் தரிசிக்கலாம். சிவபெருமான் பட்டீசர், பட்டி நாதர், கோட்டீசர் என்று அழைக்கப்படுகின்றார். இன்றும் கருவறையில் இலிங்கமூர்த்திக்கு பின்புறம் காமதேனுவை தரிசிக்கலாம். எனவே இத்தலம் காமதேனுபுரம் என்றும் பட்டீஸ்வரம் என்றும் தேனுபுரம் என்றும் அழைக்கப்படுகின்றது.  "தழும்புடைய நம்பனை நாத்தழும்பேற ஓம்பினால் ஓடுமே நம் வினை." என்றபடி இத்தலத்தில் ஐயனை தரிசிக்க இனி பிறவி என்பது கிடையாது.



மரகதாம்பாள் என்னும் பச்சை நாயகி உடனுறை பட்டீஸ்வர சுவாமி அருள்பாலிக்கும் இத்தலம் ஒரு முக்தித் தலம் ஆகும். அதற்கு ஐந்து சான்றுகள் உள்ளன. அவையாவன முதலாவது பிறவாப்புளி, இது பூப்பூக்கும் காய் காய்க்கும் பழம் பழுக்கும் ஆனால் விதை மட்டும் முளைக்காது. இராஜ கோபுரத்தின் எதிரில் உள்ளது இப்பிறவாப்புளி. இரண்டாவது இறவாப்பனை, பெரிய கோவிலின் வடக்கே உள்ள காஞ்சிமா (நொய்யல்) ஆற்றின் தென் கரையிலுள்ள பிரம்மன் பூஜித்த வடகயிலாயம் என்னும் சிறு கோவிலின் வெளி முகப்பில் உள்ளது இந்த இறவாப்பனை, எத்தனை யுகங்களாகவோ இம்மரம் அங்கேயே உள்ளது. பேரூரில் ஆன்மாக்களுக்கு அழியாத நிலையான வாழ்வைத் தந்தருளுபவர் இறைவன். அழியாத்தன்மைக்கு சான்றாக இவ்விறவாப்பனை உள்ளது.

அறவாணர்கள் போற்றிடும் பேரூர் அழியாமெகக்கோர் இடமாகி உறவாம் அதனால் எமைப்போல உலவாததனுக்கு ஒரு சான்றாங்கு இறவாப்பனை ஒன்றுள்ளது.

இப்பனை மரத்தின் மேல் பட்டையை கஷாயம் வைத்துக் குடித்தால் தசை சம்பந்தமான நோய்கள் விலகும். மூன்றாவது இத்தலத்தின் சாணத்தில் புழுக்கள் உற்பத்தி ஆவதில்லை. நான்காவது நொய்யல் ஆற்றில் கரைக்கப்பட்ட எலும்புகள் வெண் கற்களாக மாறுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் தங்கள் இறந்த உறவினர்களின் அஸ்தியை இக்காஞ்சிமா நதியில் கொண்டு வந்து கரைக்கின்றனர். ஐந்தாவது,  சிவபெருமான் ஓம் என்னும் ஐந்தெழுத்தை ஓதி தன்னடியில் சேர்த்துக் கொள்வார் என்பதால் இத்தலத்தில் இறப்பவர்கள் வலது காது எப்போதும் மேலே இருக்கும்படி வைப்பர். எனவே இத்தலத்தில் பட்டீஸ்வரரை தரிசிப்பவர்களுக்கு மறு பிறவியில்லை. ஆதி சங்கரர் தன் தாய் முக்தி அடைய இத்தலத்தில் பிரார்த்தனை செய்துள்ளார்.

 ஆரூர் அத்தா ஐயாற் றமுதே     அளப்பூர் அம்மானே

காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற்     கருகா வூரானே

பேரூர் உறைவாய்பட்டிப் பெருமான்     பிறவா நெறியானே

பாரூர் பலரும் பரவப் படுவாய்     பாசூர் அம்மானே – என்று  இத்தலத்தைப் பாடிய சுந்தரருக்காக ஐயன் ஒரு திருவிளையாடலை  நடத்தினார் அது என்ன தெரியுமா? ஐயனும் அம்மையும் சேற்றில் இறங்கி நாற்று நட்ட லீலைதான் அது. ஒரு சமயம் சுந்தரர் பரவையாருடன் ஐயனை தரிசித்து பொருள் பெற பேரூர் வந்தார். எம்பிரான் தோழர் அல்லவா சுந்தரர், பெருமான் அவருடன் சிறிது விளையாட விழைந்தார். சர்வமும் தானே என்று சுந்தரருக்கு உணர்த்த தான் விவசாயியாக பள்ளனாகவும், அம்மை பச்சை நாயகி பள்ளியாகவும், மற்ற சிவகணங்கள் உழவர்களாகவும் நாற்று நட சென்றனர். அப்போது ஐயன் நந்தியிடம் நானும் அம்மையும் வயல் வெளிக்கு செல்கின்றோம், சுந்தரன் வந்தால் எனக்கு தெரியாது என்று சொல்லி விடு என்று சொல்லிவிட்டு சென்றார். திருக்கோவிலுக்கு வந்த சுந்தரர் ஐயனைக் காணாது திகைத்து நந்தியிடம் வினவ, நந்தியும் ஐயனின் ஆணையை மீறமுடியால் தெரியாது என்று கூறியது ஆனால் சுந்தரர் வண்தொண்டர் அல்லவா எனவே குறிப்பால் வயலைச் சுட்டியதை கிரகித்துக் கொண்டார்.


வயல் பக்கம் சென்ற சுந்தரர் அங்கு ஈசனும், அம்பாளும் விவசாயி கோலத்தில் சேற்றில் தங்கள் திருப்பாதம் பதித்து நாற்று நட்டுக் கொண்டிருப்பதையும், கூடவே இந்திரன், பிரம்மன், விஷ்ணுவும் வயலில் நீர் பாய்ச்சி, வரப்புகளை சீர்செய்வதையும் கண்டார். அப்போது பார்வதி தேவி பச்சை ஆடை உடுத்தி இந்திராணி, சரஸ்வதி,  இலட்சுமியுடன் சேர்ந்து கும்மியடித்து நாற்று நடவுப் பாடல்கள் பாடி நாற்று நட்டுக்கொண்டிருப்பதையும் கண்டு துதித்து நின்றார். விநாயகரும், முருகரும் விவசாயக் குழந்தைகளாய் வந்து அங்கே வயலில் உள்ள ஆமைகளையும், மீன்களையும் எடுத்தெடுத்து வயற்புறத்தில் வீசி குறும்பாக விளையாடிக் கொண்டிருப்பதையும் கண்டார். வயலில் சாதாரண மக்கள் போல சேற்றில் இறங்கி நெல் நாற்று நட்டுக்கொண்டிருந்த ஐயனையும் அம்மையும் வீழ்ந்து வணங்கி, "ஐயனே எமக்காக தாங்கள் இவ்வாறு துன்பப்படவேண்டுமா? என்று அழ,  கருணாமூர்த்தியான எம்பெருமானும் சுந்தரனே யாம் உம்முடன் விளையாடவே இவ்வாறு செய்தோம் என்று கோவிலுக்கு சுந்தரருடன் திருக்கோவிலுக்கு திரும்பி வந்து அவருக்கு ஆனந்த தாண்டவக் காட்சியும் தந்தருளினார். பின்னர் சேரமான் பெருமாளிடம் சென்று பொருள் பெறவும் அருள் புரிந்தார். இந்த நாற்று நடவு விழா ஆனி மாதம் இத்தலத்தில் கொண்டாடப்படுகின்றது. ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி பூராட நட்சரத்தில் நாற்று நடவும், உத்தரத்தில் ந்டராசருக்கு திருமஞ்சனமும் கோலாகலமாய் நடைபெறுகின்றது. இனி இவ்வளவு சிறப்புகள் கொண்ட இத்தலத்தை வலம் வரலாமா அன்பர்களே?



இத்தலமே ஒரு கலைப் பொக்கிஷம், கலை நுணுக்கம் நிறைந்த கற்சிற்பங்கள், வர்ண ஓவியங்கள் நிறைந்து காட்சியளிக்கின்றது ஆலயம். கிழக்கு ஐந்து நிலை இராஜகோபுரம் நம்மை வரவேற்கின்றது, கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று இறைவனின் ஸ்தூல ரூபமாக விளங்கும் கோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் தூண்கள் நிறைந்த மண்டபம், இம்மண்டபத்தின் கூரையில் பேரூர் புராணத்தின் கதைகளையும், அறுபத்து நாயன்மார்களின் கதைகளையும் விளக்கும் அருமையான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் இறுதியில் கொடிகம்பம் மற்றும் நந்தியம்பெருமான்.

முதலில் கரிகால் சோழன் கருவறையை கட்டியுள்ளான், பின் 9ம் நூற்றாண்டில் சுந்தரர் இத்தலத்தைப் பாடியுள்ளார். 11-13ம் நூற்றாண்டுகளில் கொங்கு சோழர்கள் அர்த்த மண்டபம் மற்றும் மஹா மண்டத்தை கட்டியுள்ளனர். பின்னர் 14-17 நூற்றாண்டுகளில் ஹொய்சால, விஜயநகர மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர் “ஆரூரார் பேரூரார்” என்றும் “பேரூர் பிரம்மபுரம் பேராவூர்” என்றும் அப்பர் பெருமான் தமது ஷேத்திரக்கோவையில் இரண்டு இடங்களில் பாடிப்பரவிய இத்தலத்தில் அவர்களின் பல்வேறு கல்வெட்டுகள் நிறைந்துள்ளன.

மஹா மண்டபத்தில் நுழைந்தால் சிருங்க தீர்த்தத்தை காணலாம். ஐயனின் அபிஷேகத்திற்காக காமதேனு தன் கொம்பினால் (சிருங்கம்-கொம்பு) உருவாக்கிய இத்தீர்த்த நீரே பயன்படுத்தப் படுகின்றது. கருவறையில் காமதேனுக்கும் பட்டிக்கும் அருளிய பரமன் இலிங்க ரூபத்தில் கிழக்கு திருமுக மண்டலத்துடன் அருட்காட்சி தருகின்றார். ஒரு கன்றுக்கும் அருளிய ஐயனின் எளிமையை என்னவென்று சொல்லுவது. அவரை ஐந்தெழுத்து நாமத்தால் மனதார வணங்கி முதல் பிரகாரம் வலம் வந்தால் 63 நாயன்மார்களை தரிசனம் செய்கின்றோம், சக்தியின்றி சிவமில்லை என்பதன் அடிப்படையில், சிவன்கோயில்களில் மூலஸ்தானத்திற்குள்ளேயே ஒரு அம்பிகை இருப்பாள். இவளை வெளியிலிருந்து தரிசிக்க முடியாது. ‘சிவனின் மனதிற்குள் இருப்பவள்’ என்ற பொருளில் இவளை “மனோன்மணி” என்று அழைப்பர். இந்தக் கோயிலை பொறுத்தவரை இவளை நம்மால் தரிசிக்க முடியும். பிரகாரத்தில் மனோன்மணி அம்மைக்கு ஒரு சன்னதி இருக்கிறது. மேலும் சூரிய சந்திரர், சகஸ்ரலிங்கம், நாய் வாகனம் இல்லாத ஞான பைரவர் ஆகியோரை தரிசிக்கலாம். கோஷ்டத்தில் துர்க்கை, தக்ஷிணாமூர்த்தி அருள் பாலிக்கின்றனர். விஜய தசமியன்று தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் குழந்தைகளுக்கு நாக்கில் எழுத்தாணியால் எழுதி அக்ஷராப்பியாசம் செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது.

இரண்டாம் பிரகாரமாம் வெளிப்பிரகாரத்தில் இருந்து ஐயனின் விமானத்தை அற்புதமாக தரிசனம் செய்யலாம். அஷ்டதிக்கு பாலகர்கள் சுதை வடிவத்தில் எட்டு திசைகளிலும் அருள் பாலிக்கின்றனர். வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் நிருதி விநாயகர், மேற்குப் பகுதியில் சொர்க்க வாசல் மேற்கு நோக்கிய வாயிலைக் கொண்ட மண்டபத்துடன் விளங்குகின்றது. இச்சுற்றில் ஐயன் சன்னதிக்கு பின்புறம் சோமாஸ்கந்த ரூபத்தில் காசி விஸ்வநாதர், வள்ளி தெய்வாணை சமேத முருகர், விசாலாட்சி  சன்னதிகள். மேற்கு முகமாக (பழனி முருகன் போல) அருள் பாலிக்கின்றனர் முருகர். அருணகிரி நாதர் இவரை

 தீராப் பிணிதீர சீவாத் துமஞான

ஊராட் சியதான ஒர்வாக் கருள்வாயே

பாரொர்க் கிறைசேயே பாலாக் கிரிராசே

பேராற் பெரியோனே பேருர்ப் பெருமாளே  - என்று பாடியுள்ளார்.

பொருள்: ஒரு ஜீவாத்மாவிற்கு இருக்கும்  பெரிய தீராத நோயான  பிறவி நோய் தீர, ஜீவனாகிய ஆத்மவைப் பற்றிய இந்தச் சிற்றுயிர் ஞான நிலை பெற உலகெல்லாம் ஆட்சி செய்யக் கூடிய ஒப்பற்ற உபதேச மொழியொன்றை நீ எனக்கு ஓதி அருள்வாயாக. பெரிய உலகத்தின் இறைவன் சிவனின்  புதல்வன்  முருகனே, என்றும் இளையவனே, குன்று தோறாடும் குமரனே,   முருகன் எனும் பெரும் பெயர் பெற்றவனே பேருரில் வாழ்பவனே.

பெரிய உலகத்தின் இறைவனின் மிகப்பெரிய பெயருடைய முருகன் பெரிய நோயான பிறவி நோயை பெரிய ஊரான பேரூரில் தீர்ப்பார் என்பதுதான் இத்திருப்புகழ் பாடலின் அதி உன்னத செய்தியாகும்.

தங்கள் உறவினர்கள் யாரேனும் அகால மரணமடைந்து ஆன்மா சாந்தியில்லாமல் அலைந்து வந்தாலும், ஜாதகத்தில் எத்தகைய பித்ரு சாபங்கள் இருந்தாலும் பேரூர் சென்று இத்திருப்புகழைப் பாடி ஒரு மோட்ச தீபத்தை ஏற்றினால் நிச்சயம் அச்சாபங்கள் நீங்கும். முருகர் சன்னதிக்கு அருகில் உள்ள வில்வ மரத்தடியில் கோரக்க சித்தர் அருவ வடிவில் உள்ளார். வடகிழக்கு மூலையில் யாகசாலை அமைந்துள்ளது.

இச்சுற்றில்தான் அம்பாள்   மரகதவல்லி என்னும் பச்சைநாயகி  தனிக்கோவிலில் அருட்காட்சி தருகின்றாள். அம்மையும் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் எழிலாக அபய வரத ஹஸ்தங்களுடனும் அங்குசம், பாசம் ஏந்தி அருள் பாலிக்கின்றாள். விவசாயியாகச் சென்ற சிவனுடன் வயலில் வேலை செய்ததால், இத்தல அம்பிகைக்கு பச்சைநாயகி என்று பெயர் என்பார்கள். நல்ல மகசூல் பெறவும், பயிர்கள் குறையின்றி செழிப்பாக வளரவும் இங்கு விதை நெல், தானியத்துடன் பூஜிக்கிறார்கள். அம்மன் விமானம் ஒரு கலசத்துடனும், நந்தி வாகனத்துடனும் உக்ரமில்லாத வடிவாக ஈஸ்வரி ரூபமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது ஒரு தனி சிறப்பு. அம்மனின் கருவறையின் முன்மண்டபத்தில் வலப்புறம் துர்க்கை சன்னதியும். இடப்புறம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாளும் அருள் பாலிக்கின்றனர். அம்மனின் தூண்கள் நிறைந்த இம்மஹாமண்டபத்தில் அஷ்டலக்ஷ்மி மற்றும் தசாவதார ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இப்பிரகாரத்தில் ஈட்டி மரத்தாலான ஆஞ்சனேயர் சன்னதியும் உள்ளது. இவளின் ஆலயத்தின் முன்பு சிங்கமொன்று சிலை வடிவில் காட்சித் தருகின்றது. அதன் வாயினுள் உருண்டைக் கல்லொன்று உருளுகின்றது. கல்வெளியில் வராதவாறு சிங்கத்தின் பற்கள் நிற்கின்றன. அற்புதமாக கலை நுட்பத்துடன் காண்போர் வியக்கும் வண்ணம் சிங்கத்தின் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.



ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சுழல் தாமரை, நான்குபுறமும் தொங்கும் கல்லால் ஆன சங்கிலிகள். இதுபோன்ற ஏராளமான சிற்பங்கள் ஆலயத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இனி இத்தலத்தின் சிறப்புமிக்க கனக சபையை தரிசிக்க செல்வோமா? சுந்தரர் சிதம்பரத்தில் நடராஜப்பெருமானை தரிசனம் செய்யும் போது

 பாரூரும் அரவல்குல் உமை நங்கை அவள் பங்கன் பைங்கண் ஏற்றன் ஊரூரன் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான் ஆரூரன் தம்பிரான் ஆருரன் மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப் பேரூரர் பெருமானைப் புலியூர்சிற் றம்பலத்தே பெற்றா மன்றே.

என்று பேரூர் பெருமானை நினைத்துப் பாட அங்குள்ளவர்கள் பேரூர் அவ்வளவு சிறப்பானதா? என்று வினவ சுந்தரரும் ஆம் சென்று பாருங்கள் என்று கூற அவர்களும் வந்து ஆடல் வல்லானை கனக சபையில் தரிசனம் செய்து பின் சிதம்பரத்தில் உள்ளது சிற்றம்பலம் இங்குள்ளது அழகிய சிற்றம்பலம் என்று கூறிய பெருமையுள்ளது.

இக்கனகசபை. 17ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கருடைய சகோதரர் அழகாத்திரி நாயக்கன் நடராஜப்பெருமானின் காலத்தால் அழியாத கனக சபையைக் கட்டினான். வெளியே இருந்து பார்க்கும் போது இச்சபை ஒரு கலச விமானத்துடன் எழிலாக விளங்குவதை காணலாம். மொத்தம் 36 தத்துவங்களை குறிக்கும் வகையில் 36 தூண்களுடன் எழிலாக விளங்குகின்றது கனகசபை. ஒவ்வொரு தூணின் மேல் முகத்தில் ஒரு முக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தூணின் மேல் உள்ள சிங்கத்தின் கம்பீரமும் அருமை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முக பாவத்தை காட்டுகின்றது. கண், பல், வாய், நெற்றியில் உள்ள குறி, வடிவம் எதுவுமே ஒன்று போல இல்லை, இது சிற்பியின் கை வண்ணத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு. கனக சபையின் ஒவ்வொரு ஜன்னலிலும் ஒவ்வொரு ஜாலி வேலைப்பாடு நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது.

கனக சபையில் மூன்று பஞ்சாட்சரப் படிகள் உள்ளன, மஹா மண்டபத்தில் இருந்து கனக சபைக்கு செல்ல உதவும் முதல் பஞ்சாட்சரப் படிகளை தாண்டினால் கூரையில் கல் சங்கிலி, சுழல் தாமரை போன்ற அற்புதங்கள், இருபக்க தூண்களிலும் அற்புதமான சிற்பங்கள்.


அவைகளாவன நிருத்த கணபதி, மூஞ்சூறு வாகனத்தில் நடனமாடிய நிலையில் முதல்வன் கணேசன் தாண்டவ கோலத்தில் அருட்காட்சி தருகின்றார், மூஞ்சூறுவின் காதின் மேல் வலக்கால், மூஞ்சூறு வாகனத்தின் நகங்கள் அப்படியே தத்ரூபம். 



அடுத்து வீறு மயில் வாகனத்தில் ஆறுமுகன் இளையவன் ஸ்கந்தன். மயிலின் ஒய்யாரமும், மார்புப் பதக்கமும் அருமை.


 கனல் உமிழும் கண்களுடன் அக்னி வீரபத்திரர். தக்ஷன் செய்த முறையற்ற யாகத்தை அழிக்க 16 வீரபத்திரர்கள் தோன்றினர். அவர்களுள் இவர் ஒருவர், கண்களும், மீசையும் ஜடாமுடியில் சிலந்தியின் அழகையும் என்னவென்று சொல்ல வார்த்தைகள் தான் இல்லை. தட்சன் யாகம் அழித்த அகோர வீரபத்திரரும் உள்ளார் அவர் கையில் உள்ள வாள், வீசும் வேல் அப்படியே அற்புதம்.



யானையை விரித்து போர்த்துக் கொண்ட கிருத்திவாஸன், யானையின் கால்கள், ஐயனின் திருவடியில் உள்ள யானையின் தலை, ஐயனின் கைகளில் உள்ள ஆயுதங்கள் அனைத்தும் அப்படியோர் அற்புதம். 


தாருகாவனத்து முனி பத்தினிகளின் கற்பு நிலையை சோதிக்க திகம்பரராய், பிக்ஷாடண கோலம் தாங்கிய பிஞ்ஞகன், குண்டோதரனுடன், நகு வெண்டலை மானுக்கு புல்லுறுத்தும் அற்புதம், அதை வாங்க இரண்டு கால்களுடன் அது தாவி வரும் பாங்கு, முனி மகளிர் நிறையழிந்த நிலைமையும் அற்புதம்.



நடனத்தில் தனக்கு நிகர் எவருமில்லை என்ற அகந்தையுடன் ஆடல் புரிந்த ஆலங்காட்டிக் காளிக்கு எதிரே அவள் கர்வம் அடங்க தாளொன்றால் பாதாளம் நீள் வலது காலால் தலைக்கு மேல் உள்ள பூவை எடுக்கும் பதினாறு கர ஊர்த்துவ தாண்டவர் வடிவழகை எப்படி வர்ணனை செய்ய, 108 நடனக்கோலங்களுள் இதுவும் ஒன்று. ஐந்து தலை பிரம்மனும், உடுக்கை கொட்டியபபடி விஷ்ணுவும், காரைக்காலம்மையார் அடிக்கீழும், குழந்தையாக முயலகனும் அருமையோ அருமை.



ஊர்த்துவதாண்டவருக்கு எதிரே உள்ள ஆலங்காட்டு காளியை பக்கவாட்டில் இருந்து பார்த்தால் கோபம் தெரியும் அதே ஊர்த்தவதாண்டவரிடமிருந்து பார்த்தால் கண்களில் தோற்று விட்டோமே என்ற நாணம் தெரியும் இவ்வாறு செதுக்கிய சிற்பியின் திறமையை வியக்காமல் இருக்க முடியாது. அம்மையின் ஜ்வாலா மகுடம், கால்களின் கோலம், ஆபரணங்கள், ஆடை அற்புதம் அற்புதம். ஒவ்வொரு சிற்பமும் 6 அடி உயரம், 3 அடி அகலம், ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த அருமையான சிற்பங்களை செதுக்கியவர் செம்மனாச்சாரி என்ற சிற்பி, அவர் மறைந்து விட்டார் ஆனால் அவரின் உயிரோவிய சிற்பங்கள் அப்படியே உள்ளன. கம்பி வலையிட்டு பாதுகாத்து வைத்துள்ளனர் இவ்வற்புத சிற்பங்களை.

சிற்பங்களை அடுத்து இரண்டாவது பஞ்சாட்சரப்படி இதன் அருகே யாளியின் வாயும், யானையின் தும்பிக்கையும் இணைவது போன்ற சிலை. அதைத் தாண்டினால் குதிரை வீரன் சிலை ஒரு பக்கத்தில் முழுதாகவும் ஒரு பக்கம் உடைந்தும் காணப்படுகின்றது. மூன்றாவது பஞ்சாட்சரப்படியில் பட்டி முனி, கோ முனி அம்மையப்பரை சேவிக்கும் நிலையில். பிரம்மனும் விஷ்ணுவுமான இவர்களுக்கு இத்தலத்தில் நடராஜப் பெருமான் ஆனந்த தாண்டவக் கோலக் காட்சி தந்து அருள் பாலித்திருக்கின்றார். மூன்றாவது பஞ்சாட்சரப்படியை தாண்டினால் ஆனந்தத் தாண்டவ நடராஜரையும், அம்மை சிவானந்த வல்லியையும் தரிசனம் செய்யலாம்.


சபையில் ஆனந்த கூத்தர் ஆனந்த தாண்டவம் ஆடி,  ஆட்டத்தை நிறுத்தும் கோலத்தில் சிவகாமியம்மையுடன் ஆனந்த தரிசனம் தருகின்றார். ஐயனின் முகத்தில் உள்ள குறும் சிரிப்பு, கதுப்பு கன்னங்கள், சடை பின்புறம் தாழ்சடையாக (சிதம்பரம் போலவே) மொத்தம் பதினாறு சடைகளுள் பதினைந்து கீழ் நோக்கி தொங்குகின்றன, ஒன்று கட்டப்பட்டுள்ளது, குஞ்சித பாதமும் நிலத்தை நோக்கி தாழ்ந்துள்ளது, இடக்கரத்தில் ஊழித்தீ, வீசுகரம், வலக்கரத்தில் உடுக்கை, அபய கரம், முயலகன் மேல் ஊன்றிய பாதத்தில் வார்க்கப்பட்ட நிலையில் சலங்கை உள்ளது. தோளில் துண்டும், இடையில் புலியதளாடையும் அணிந்துள்ளார். ஐயனின் வீசும் கரத்தின்( நீட்டிய) நீர் குஞ்சித பாதத்தின் மேல் (தூக்கிய) பாதத்தின் மேல் விழும் விழும்படியான அற்புதமான அமைப்பில் அருள் பாலிக்கின்றார் கூத்த பிரான். பிரம்மா, விஷ்ணு, அதி உக்ர காளி சுந்தரர் நந்தி ஆகியோருக்கு ஆனந்த கூத்தர் இத்தலத்தில் ஆனந்த தாண்டவத்தை காட்டி அருளியுள்ளார். பர சமய இருள் அழிய ஞான சம்பந்த பெருமானுக்கு தன் முலைப்பால் சுரந்தளித்த மாப்பெரும் கருணை கொண்ட சிவகாமியம்மை வலக்கரத்தில் நீலோற்பவ மலர் ஏந்தி, இடக்கரம் டோலஹஸ்தமாக அருள் பாலிக்கின்றாள்.

இத்தலத்தில் கூத்தப்பிரானை சுற்றி வந்து வழிபட முடியும், அடியேன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐயனின் தாழ் சடையை தரிசனம் செய்திருக்கிறேன் நேரிலும் தரிசிக்கலாம் என்று நினைத்து வலம் வந்தேன், ஆனால் தரிசனம் கிட்டவில்லை, அபிடேக காலங்களில் மட்டும்தான் தரிசிக்க முடியும் என்று எண்ணுகிறேன். அம்பலவாணரை  வலம் வரும் போது ஜன்னல் வழியாக துர்க்கையம்மனை நேராக தரிசனம் செய்ய முடிகின்றது. நடராஜரின் மண்டபத்தின் நான்கு தூண்களும் நான்கு வேதங்கள் என்பது ஐதீகம். அவை சிறிது வளைந்து ஐயனை பணியும் நிலையில் உள்ளன.

பொதுவாக நடராஜத் தலங்களில் வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறும், இத்தலத்தில் மொத்தம் பத்து தடவை நடைபெறுகின்றது. தீபாவளி, ஆருத்ரா தரிசனத்திற்கு அடுத்த நான்காம் நாள், பங்குனி உத்திரம் அதை அடுத்த இரண்டாம் நாள் ஆகிய நாட்களே அந்த அதிகப்படியான நாட்கள், பங்குனி உத்திரத்தன்று நடன சேவை தந்தருளுகின்றார் மேலைச் சிதம்பரமாம் பேரூரில் ஆருத்ரா தரிசனமும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

காப்புக் கட்டுதலுடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்குகின்றது. அடுத்த ஒன்பது நாட்கள் காலையும் மாலையும் திருவெம்பாவை விழா நடைபெறுகின்றது. மாணிக்க வாசகர் திருவீதி உலா வருகின்றார். ஒன்பதாம் நாள் இரவு பச்சை நாயகி அம்மன் கிளி வாகனத்தில் எழுந்தருளி திருவீதிவுலா வந்து அருள் பாலிக்கின்றார். அம்மனுக்கு நொய்யலாற்றங்கரையில் நிறை நாழி பூஜை நடைபெற்று பெண்மணிகளுக்கு மங்கல நாண் கயிறு வழங்கப்படுகிறது. இரவு அம்மனும் ஐயனும் அன்னூசல் ஆடி அருளி மாணிக்கவாசகருக்கு அனுக்ரகம் செய்து கயிலாயப் பதவி வழங்கும் விழா நடைபெறுகின்றது. ஆருத்ரா தரிசனத்தன்று காலை 4.00 மணியளவில் ஆனந்த தாண்டவருக்கும் சிவானந்த வல்லிக்கும் அற்புத மஹாபிஷேகம் நடைபெறுகின்றது. பஞ்ச கவ்யம், சந்தனம், மாவுப்பொடி, திருமஞ்சனப்பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கருப்பஞ்சாறு, பழச்சாறுகள், தேன், பன்னீர் என பல்வேறு திரவியங்கள் நதியாக அபிஷேகமாகின்றது அம்மையப்பருக்கு. தொடர்ந்து விலை உயர்ந்த நகைகள் மலர்களால் அலங்காரம் நடந்து வேத கோஷம், தேவார திருவாசகம் முழங்க மஹா தீபாராதனை நடைபெறுகின்றது. பின்னர் ஐயன் வெள்ளி சப்பரத்திலும், அம்மை தங்க சப்பரத்திலும் வெளிப்பிரகாரமும், பட்டி சுற்றும் மேடையை மூன்று முறையும், இரத வீதி வலம் வந்து அருள் பாலிக்கின்றனர். சொர்க்க வாசல் பூஜை, இராஜ கோபுர வாசல் பூஜை கண்டருளி, கனக சபையின் முன் மண்டபத்தில் ஆருத்ரா தரிசனம் தந்தருளுகின்றனர்.

கிராமங்களில் விழா கொண்டாடும்போது மக்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் நீர் தெளித்து மகிழ்வர். இதைப்போலவே இக்கோயிலில் மார்கழி திருவாதிரை விழாவின்போது சுவாமி மீது மஞ்சள் நீர் தெளித்து, பின் அதையே பக்தர்கள் மீது தெளிக்கின்றனர். இந்த மஞ்சள்நீருக்கு, “திருப்பொற்சுண்ணம்’ என்று பெயர். இதற்காக பிரத்யேகமாக உள்ள உரலில்மஞ்சளை பொடியாக்குகின்றனர்

இனி இத்தலத்தின் சிறப்பு நாட்களை காண்போமா? தினமும் ஐந்து காலப் பூஜை நடைபெறுகின்றது. ஆனியில் நாற்று நடவு உற்சவம், கார்த்திகை சோமவாரங்களில் காலை சங்காபிஷேகம், மாலை அன்னாபிஷேகம், பங்குனியில் பத்து நாள் பெருவிழா, ஏழாம் நாள் திருத்தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பங்குனி உத்திரத்தன்று நடராஜர் உற்சவம்.

திருக்கோவிலுக்கு வெளியே கொங்கு மண்டலத்திற்கே உரித்தான தீப ஸ்தம்பம்.  இறந்தோர் எலும்பை வெண் கல்லாக மாற்றும் காஞ்சிமா நதி என்னும் நொய்யல் நதியில் அமைந்துள்ள சோழன் படித்துறை அங்கு செல்லும் வழியில் உள்ள அருள்மிகு பட்டி விநாயகர் திருக்கோயில், பட்டி விநாயகரை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். அரசம்பலவாணர் திருக்கோயில் மற்றம் அருள்மிகு பட்டீசவரர் கோயிலுக்கு அதன் இருமருங்கும் அமைந்துள்ள வடகயிலாயம், தென் கயிலாயம், திருக்கோயில் ஆகியவை எழிலுடன் அமைந்துள்ளன.

அருகே பித்ருகளுக்கான தர்ப்பணம், அஸ்தி கரைத்தல்  முதலியன செய்யும் மண்டபம் நொய்யலாற்றங்கரையில் அமைந்துள்ளது. காக்கைக்கு சாதம் வைக்கும் போது சிறிது காராபூந்தி தூவி வைக்கின்றனர், அதற்காகவே காகங்கள் வந்து அந்த சாதத்தை உண்கின்றன, பக்தர்களும் தங்கள் முன்னோர்கள் தங்கள் முன்னோர்கள் தங்கள் பிண்டத்தை ஏற்றுக்கொண்டனர்   என்ற மனதிருப்தியுடன் இல்லம் திரும்புகின்றனர்.

இத்தலத்தின். தலபுராணம், பேரூர் புராணம் கச்சியப்ப சிவாச்சாரியர் இயற்றியுள்ளார். மேலும் ஏயர்க்கோன் கலிக்காமர் சரிதத்தில் பெரிய புராணத்திலும், மும்மணிக் கோவையிலும் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இது வரை ஆன்பட்டி பேரூரை தரிசித்தோம் வாருங்கள் இனி முருகனின்  மருதமலையை தரிசிக்கலாம்.  

 

 

மருதமலை தரிசனம்





கொங்கு மண்டலத்தில்   கந்தன் கருணை புரியும்   திருத்தலங்களில் சிறப்பு வாய்ந்தது மருதமலை முருகன் கோவில். ஆறுபடை வீடுகளைக் கொண்டு குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கேற்ப இம்மண்டலத்தில் எண்ணற்ற மலை மேல் அமைந்த குமரன் தலங்கள் உள்ளன.  அவற்றுள் ஒன்று,  ஏழாம் படை வீடு என்று போற்றப்படும் அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற மருதமலை. இத்தலத்தில் முருகர் பழனி முருகரைப் போல  தண்டாயுதபாணியாக அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் சிவ புதல்வர்களான விநாயகரும், முருகரும் சுயம்பு என்பது சிறப்பு. பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர் வடித்த முருகர் மூலவராக அருள் பாலிக்கின்றார்.

 இம்மலை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைச் சேர்ந்தது. கோயம்புத்தூர் பேருந்து நிலையத்திலிருந்தும், தொடருந்து நிலையத்திலிருந்தும் இங்கு செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன. மலை அடிவாரம் வரை பேருந்துகள் செல்கின்றன. மலையின் மீது படியேறி கோவிலுக்கு நடந்து செல்லலாம்; அல்லது கோயில் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கட்டணச் சிற்றுந்துகளில் மலைப்பாதையில் செல்லலாம். தனியார் இரு சக்கர வாகனங்களும் மகிழுந்துகளும் கட்டணம் செலுத்தி மலைப்பாதை மூலம் மேலே கோயிலுக்குச் செல்ல இயலும்.

முற்காலத்தில் இத்தலம் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. தேவாரப் பாடல் பெற்ற தலமான திருமுருகன்பூண்டி கோயில் கல்வெட்டுகளில், மருதமலை கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தகவல்கள் உள்ளன. அக்கல்வெட்டில் முருகப் பெருமானை, மருதமலை நாயகன், குலோத்துங்க சோழன், மருதமலையனான குலோத்துங்க சோழ விக்ரமாதித்திய தேவன் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மருத மரங்கள் அதிகமாக காணப்படுவதால் இந்த மலை மருதமலை என வழங்கப்படுகிறது. மேலும் மருதமால்வரை,    மருதவரை, மருதவெற்பு,  மருதக்குன்று,  மருதலோங்கல்,  கமற்பிறங்கு,  மருதாச்சலம்  வேள்வரை என்றெல்லாம் பேரூர் புராணத்தில் கூறப்படுகிறது.  எனவே மருதமரங்கள் அடர்ந்த மலை என்ற பொருளில் மருதாச்சலம் என்ற பெயர் ஏற்பட்டது. 

 மருத மரங்கள் நிறைந்ததும், நோய் நீக்கும் மருந்து குணங்களை உள்ளடக்கிய மூலிகைகளைக் கொண்டதுமான மலையில் அருள்பவர் என்பதால், இவருக்கு மருதாச்சலமூர்த்தி என்ற பெயரும், ’மருதமலையான்’  என்ற திருநாமமும் உண்டு. மருத மரமே இத்தலத்தின் விருட்சம். மருதம் என்றால் கம்பீரம் என்று பொருள். மருத மரம் வடமொழியில் அர்ஜுனம் என்று அழைக்கப்படுகிறது. மருத மரத்தைத் தல மரமாகக் (ஸ்தல விருட்சம்) கொண்டு சிறப்புற விளங்குகின்ற சிவன் கோயில்கள் இந்தியாவில் மூன்று. முதலாவது ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள மல்லிகார்ஜுனம் எனும் திருக்கோயில். இரண்டாவது மத்தியார்ஜுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர். மூன்றாவது புடார்சுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு திருநெல்வேலிக்கு அருகே அம்பாசமுத்திரம் அருகில் உள்ள திருப்புடைமருதூர். இவை முறையே மல்லிகார்ஜுனம், மத்தியார்ஜுனம், புடார்சுனம் (தலைமருது, இடைமருது, கடைமருது) எனப் புகழப்பெறுகின்றன.

இத்தலத்தின்   தீர்த்தத்தின் பெயர் மருது சுனை. இந்த தீர்த்தம் பிரசித்தி பெற்றது. கோயிலுக்கு தென்மேற்கே மலையின் கீழாக சற்று தூரம் சென்றால் இத்தீர்த்தம் உள்ளது.  மலையில் உள்ள ஒரு மருத மரத்தின் அடியில் இருந்து இந்த தீர்த்தம் உற்பத்தியாகி வருவதாக சொல்கிறார்கள். இந்த தீர்த்தமே சுவாமியின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. காமதேனு இம்மலையில் பசி நீங்க மேய்ந்து மருத மரத்தின் கீழ் இருந்த நன்னீரை பருகியதாக பேரூர் புராணம் பகர்கின்றது.

ஆலயம் தரை மட்டத்திலிருந்து சுமார் 500 அடி உயரத்தில் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 837 படிகள் ஏற வேண்டும்.  மலையின் அடிவாரத்திலிருந்து நடைப்பயணமாகப் படிகளில் ஏறிச் செல்லும் போது, பாதையின் தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. இவரை முதலில் வணங்கி பின்னரே முருகரை வணங்க வேண்டும் என்பது மரபு. இவர் சுயம்புவாக தோன்றியவர். எனவே யானைத் தலை மட்டுமே உள்ளது. இவரது தும்பிக்கை மூலவரை நோக்கியவாறு உள்ளது சிறப்பு. அருகில் மற்றொரு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுயம்பு விநாயகருக்கு பூஜை செய்த பின்பே, பிரதான விநாயகருக்கு பூஜை நடக்கிறது. முருகனுக்கு உகந்த நாட்களான கிருத்திகை, சஷ்டி, விசாகம் மற்றும் அமாவாசை நாட்களில் இவருக்கும் விசேஷ பூஜை நடக்கிறது. எனவே இவரை, ‘தம்பிக்கு உகந்த விநாயகர் என்றும் அழைக்கிறார்கள்.

இவரை   வணங்கி சற்று மேலே படி ஏறி சென்றால் ’பதினெட்டாம் படிகள்’. மலை ஏறும்போது மலைப்பாதையின் நடுநடுவே சிறுசிறு மண்டபங்கள் காணப்படுகின்றன.  இன்னும் சிறிது உயரம் ஏறினால் இடும்பன் சன்னிதியை தரிசிக்கலாம். இடும்பன் காவடி தூக்கியபடி சின்னஞ்சிறு பாலகனாக காட்சி தருகிறார். பிள்ளை வரம் வேண்டுவோர் இங்கு தொட்டில் கட்டி வழிபடுகிறார்கள். இவருக்கு எதிரே புலி வாகனம்.

அடுத்து வருவது  ‘குதிரைக்குளம்பு கல், இதற்கான வரலாறு,  முற்காலத்தில் இக்கோவிலில் திருடர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பினர். அப்போது, முருகன் குதிரை மீதேறிச் சென்று அவர்களை மறித்து, பொருட்களை மீண்டும் கோவிலில் சேர்க்கச் செய்தார். அதோடு திருடர்களை பாறையாகவும் மாற்றி விட்டார். முருகன் குதிரையில் வேகமாகச் சென்றபோது, குதிரை மிதித்த இடத்தில் பள்ளம் உண்டானது. மலைப்பாதையில் உள்ள ஒரு பாறையில் இந்த தடம் இருக்கிறது. இம்மண்டபத்தில் முருகன், குதிரை மீது வந்த சிற்பம் உள்ளது. 

மலையின் மீது சென்றதும் அங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் இறுதிப் படிக்கட்டுகள் ஆதிமூலஸ்தானத்திற்கு நேரெதிராக உள்ளன. இப்பாதை வழியே  செல்பவர்கள் ஆதி மூலஸ்தானத்தில் சுயம்புவாக உள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையையும் அதற்கடுத்து, பஞ்சமுக விநாயகரையும் வழிபட்டபின் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம்.

புதியதாக அமைக்கப்பட்ட பாதை இராஜகோபுரத்தின் ஊடே செல்லும் வழி நேராக தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்கிறது. இராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர், அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கு, அடுத்து உலோகக் கொடிமரம், மயில்வாகனம், முன்மண்டபத்தில் வரதராஜப்பெருமாள் சன்னிதி, அர்த்தமண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறத்திலும் விநாயகரும் (இடப்புறம்) வீரபத்திரரும் (வலப்புறம்), கருவறையில் ஞானதண்டத்துடன் காட்சிதரும் தண்டாயுதபாணி என இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கொடிமர மண்டபத்தில் வலம்புரி விநாயகர், அவருக்கு முன்னுள்ள மயில்முக விளக்கின் அடிப்புற ஆமைவடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் கேரள பாணியில் எழிலாக அமைந்துள்ளது.



மருதமலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார். இந்த சிலையே கருவறையில் உள்ளது. இரண்டு திருக்கரங்களுடன் உள்ள இந்த முருகப்பெருமான், பழநி முருகனைப் போலவே, வலது திருக்கரத்தில் ஞானதண்டத்துடன், இடது திருக்கரத்தை இடுப்பில் வைத்தபடி, ஞானதண்டாயுதபாணியாக தரிசனம் அளிக்கிறார். சிரசில் கண்டிகையும் தலைக்கு பின்புறம் குடுமியும் உள்ளது. காலில் தண்டை அணிந்திருக்கிறார். வினைகளை வேரறுத்து, எமபயம் தீர்த்து, உண்மை அறிவை உணரச்செய்யும் வெற்றி வடிவேலுடன் கந்தனை தரிசிப்பதே ஒரு பரவசம்.    தினமும் இராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்று வித அலங்காரங்களுடன் தரிசனம் தந்தருளுகிறார். விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை மற்றும் தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் அணிவிக்கப்படுகிறது. அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இவரை தண்டாயுதபாணியாக சுய ரூபத்தில் தரிசிக்க முடியும். அப்போது இறைவனுக்கு ஆபரணம், கிரீடம் என எதுவும் இல்லாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர். கோஷ்டத்தில் சிஹி வாகனர் (மயில் வாகனர்) மற்றும் சேனானி (தேவ சேனாதிபதி) வடிவத்தில் முருகரை தரிசிக்கலாம்.

 திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்

எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!

சினமுடைஅசுரர் மனமது வெருவ

மயிலது முடுகி விடுவோனே!

பருவரை யதனை உருவிட எறியும்

அறுமுகமுடைய வடிவேலா!

பசலையொ டணையும் இளமுலை மகளை

மதன்விடு பகழி தொடலாமோ!

கரிதிரு முகமும் இடமுடை வயிறும்

உடையவர் பிறகு வருவானே!

கனதனமுடைய குறவர்தம் மகளை

கருணையொ டணையும் மணிமார்பா!

அரவணை துயிலும் அரிதிரு மருக

அணிசெயு மருத மலையோனே!

அடியவர்வினையும் அமரர்கள்

துயரும் அற அருள் உதவு பெருமாளே!

பொருள்: முப்புரத்தை ஒரு நொடியில் எரித்து அருளிய சிவனின் குமாரனே, கோபமுடைய அசுர்ர்கள் மனம் வெருவ மயிலை வேகமாக செலுத்துபவனே, பெரிய மலைகளை ஊடுருவக்கூடிய வேலை செலுத்தும் ஆறு முகம் உடைய வடிவேலனே, காமன் விடும் பாணத்தால், இளமையான தனங்களை உடையவர்கள் மீது நான் காம வயப்படலாமோ,  யானை முகமும் பெரிய வயிரும் உடைய கணபதிக்கு இளையவனே, பருத்த தனங்களை உடைய குறமகளாகிய வள்ளியை கருணையோடு அணைக்கும் மணிகள் அணிந்த மார்பை உடையவனே,  பாம்பணையில் அரி துயில்  கொள்ளும்  ஹரியின் திரு மருகனே, மருதமலைக்கு அணியாக இருப்பவனே, அடியவர்கள் வினையும், அமரர்கள் துயரும் நீங்கும்படியாக அருளி உதவும் பெருமாளே. அடியவர்களின் வினையையும் தேவர்களின் தீர்க்கும் பெருமாளே.

மருதமலைத்தலமே சோமாஸ்கந்த மூர்த்தமாக அமைந்து தனிச்சிறப்பிடம் பெறுகிறது. வெள்ளியங்கிரி மலை சிவன் வடிவமாகவும், நீலிமலை உமாமகேஸ்வரி வடிவமாகவும், மருதமலை முருகன் வடிவமாகவும், இம்மூன்று மலையும் சேர்ந்து சோமாஸ்கந்த மூர்த்தமாகவும் அமைந்து காணப்படுவதாக பேரூர்ப் புராணம் கூறுகின்றது.

மருதமலையிலும் சன்னதிகளும்  சோமாஸ்கந்த  அமைப்பில் உள்ளது. பிரதான மூர்த்தி  முருகன் சன்னதி நடுவிலும் வலப்புறம் பட்டீசுவரர், இடப்புறம் மரகதாம்பிகை சன்னிதிகளுடன் அமைந்துள்ளது.   மரகதாம்பிகை சன்னிதிக்கு எதிராக வெளி மண்டபத்தில் நவகிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளது. மற்றும் தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் ஆகியோருக்கும் வெளிமண்டபச் சுவற்றில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. மலைக்கோயிலுக்கு பின்புறம் சரவணப் பொய்கை காணப்படுகிறது. மலைக்கோயிலைச் சுற்றி மடங்கள் காணப்படுகின்றன. இம்மலையில் தேவர்கள் தவம் செய்து முருகனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. இத்திருக்கோயில் ஒரே பிரகாரத்தில் அமைந்திருக்கிறது. பிரகாரத்தில் சுற்றுச் சுவர்கள் இல்லாமல் திறந்த வெளியாயிருந்தாலும் மலையின் இயற்கையான அமைப்பு சுவர்போல் நிற்கிறது. உள்ளது. ஆலயத்திற்கு பின்புறம் பச்சை பசேலென  அடர்ந்த காடுகள் கொண்ட மலையுடன்  காணும் போது  மயில் தோகையை விரித்து ஆடுவது போல உள்ளது. 

ஆதிமூலஸ்தானத்திற்கும் முன்மண்டபத்திற்கும் தண்டாயுதபாணி சன்னிதி மண்டபத்திற்கும் இடையே பஞ்ச விருட்ச விநாயகர் சன்னிதி உள்ளது. பொதுவாக அரச மரத்தின் அடியில் தான் விநாயகப்பெருமான் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்கள் இணைந்து வளர்ந்திருக்கும் மரத்தின் அடியில் விநாயகப் பெருமான் இருந்து அருள் பாலிக்கிறார். ஐந்து மரங்கள் இணைந்த ஒரே மரத்தின் அடியில் இருப்பதால் இவரை, ‘பஞ்ச விருட்ச விநாயகர்’ என்று அழைக்கிறார்கள். இவருக்கு அருகில் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்தபடி, கையில் வேலுடன் காட்சி தருகிறார். நடைப்பயணமாக மலையேறி வருவோர் இந்த விநாயகரைத் தாண்டிதான் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்ல வேண்டும்.

மூலவர் சன்னதிக்கு வலப்புறம் உள்ள ஆதி மூலஸ்தானத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வயானை மூவரும் சுயம்பு ரூபத்தில் அருள் பாலிக்கின்றனர். முருகனுக்கு பின்புறத்தில் ஒரு பிளவு இருக்கிறது. இங்கு வள்ளியின் சுயம்பு உருவம், தெய்வயானையை விட சற்று உயரமாகக் காணப்படுகிறது. இவருக்கு முதல் பூஜை செய்யப்பட்ட பின்பே, மூலவர் முருகனுக்கு பூஜை நடக்கிறது. கிருத்திகையன்று  பக்தர்கள் இவருக்கு அதிகளவில் பாலாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். ஆதிமூலஸ்தான கருவறை விமானமும், முன்புறம் தைப்பூசக் கல்யாண உற்சவ மண்டபமும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.

முருகன் கோவிலின் தெற்கு மூலையில் பாம்பாட்டி சித்தர் குகைக்கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் கீழிறங்குகின்றன. வரலாற்று சிறப்புமிக்க பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர், இந்த குகையில் சில காலம் வசித்து வந்தார். பல மூலிகைகளின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பற்றிய அவரது குறிப்புகள் மிகவும் சிறப்பானவையாகக் கருதப்படுகிறது.

பாம்பாட்டிச் சித்தர் என்னும் சித்தர் இளவயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரை பாம்பு வைத்தியர் என்றே அழைத்தனர். ஒருசமயம் இவர் நாகரத்தின பாம்பு ஒன்றைத்தேடி மருதமலைக்கு வந்தார். அப்போது சட்டை முனிவர் அவருக்கு காட்சி தந்து உடலுக்குள் இருக்கும் பாம்பை (குண்டலினி சக்தி) கண்டறிவதுதான் பிறப்பின் பயனாகும். அதைவிடுத்து காட்டில் திரியும் பாம்புகளை தேடி அலைவது வீண் வேலையே என்றார். அவரது சொல் கேட்ட பாம்பாட்டிச் சித்தர் ஞானம் பெற்றார். உயிர்களைத் துன்புறுத்துவதில்லை என்ற முடிவுக்கு வந்தார். முருகனை வணங்கி தியானத்தில் ஈடுபட்டார். முருகன் அவருக்கு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தந்து ஞான உபதேசம் செய்தார். பின்னர் முருகன் இங்கேயே கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

மலைப்பாறைகளுக்கு மத்தியில் உள்ள இக்குகைக்கோயில் சிறு குடைவரை அமைப்பில் உள்ளது.  உட்புறத்தில் ஒரு பாறை பாம்பு வடிவில் உள்ளது. பாம்பாட்டி சித்தருக்கு முருகன் பாம்பு வடிவில் காட்சியளித்ததார் என்பது மரபு வரலாறு. இந்த நாகத்தை முருகப்பெருமானாகவே பாவித்து பக்தர்கள் அனைவரும் வழிபாடு செய்கிறார்கள். பாம்பாட்டி சித்தர் வலது  கரத்தில்  மகுடி, இடது கரத்தில்  தடியும் கொண்டு  அருள்ம்பாலிக்கிறார். இவருக்கு அருகில் சிவலிங்கம், நாகர் திருமேனிகள் உள்ளன. இதன் பின்புறம் பீடம் போன்ற அமைப்பில் மூன்று வடிவங்கள் உள்ளன. இவற்றை சிவன், கணபதி, அம்பிகையாக கருதி பூஜை செய்கிறார்கள். அனைத்து தலங்களிலும் சிவ பெருமானை சோமாஸ்கந்தராக  முருகர்,   சிவன், அம்பாளுக்கு  இருவருக்கும் இடையில் இருக்கும் கோலத்தில் வழிபடுவர். ஆனால்  இங்கு விநாயகர், சிவசக்திக்கிடையில்  காட்சியளிப்பது சிறப்புக்குரியதாகும். முருகப்பெருமானுக்கு பூஜை முடிந்ததும், பாம்பாட்டி சித்தருக்கும் பூஜை செய்யப்படுகிறது.

பாம்பாட்டி சித்தர் சன்னிதி முன்புறமுள்ள தியான மண்டபத்தில் இங்கு வருகை தருவோர் அமர்ந்து அமைதியாக தியானம் செய்து வழிபடுகின்றனர்.  பாம்பாட்டி சித்தர் தற்போதும் இங்கு முருகனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். தினமும் இவரது சன்னிதியில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்து விடுகிறார்கள். மறுநாள் இந்த பால் குறைந்திருக்குமாம். சித்தர், இந்த பாலை முருகனுக்கு அபிஷேகம் செய்து  பூஜை செய்வதாக நம்பப்படுகிறது.  இவரது சன்னதியில் வழங்கப்படும் விபூதி விஷக்கடிக்கு  மருந்து என்பது பக்தர்களின் நம்பிக்கை. தண்டாயுதபாணி கோயில் தலவிருட்சம் மருதமரம்  இச்சன்னதிக்கு  முன்னால் உள்ளது. இக்கோயிலுக்கு இறங்கி வரும் பாதையில் சப்த கன்னியருக்கு ஒரு சிறு சன்னிதி அமைந்துள்ளது. ஆடிப்பெருக்கன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது.

தண்டாயுதபாணி சன்னிதிக்கு நேராக புதியதாக ஏழுநிலை இராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இராஜகோபுர கல்ஹாரம், ஏழுநிலை கோபுரம், தங்கமுலாம் பூசிய ஏழு கலசங்கள், மேல்மண்டபம், இராஜகோபுரத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் மற்றும் இராஜ கோபுரத்திலிருந்து மேல் மண்டபத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் புதியதாய் நிர்மாணிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு இக்கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.  இக்காலத்திலும் சாண்டோ சின்னப்பா தேவர், பித்துக்குளி முருகதாஸ் போன்றவர்களுக்கு முருகப்பெருமான் அனுக்கிரகம் புரிந்த தலம் இந்த மருதமலை.

வைகாசி விசாகத்தன்று 108 பால் குட அபிஷேகம் நடைபெறுகின்றது. தைப்பூசத்தை ஒட்டி 10 நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. தைபூசத்தன்று காலை திருக்கல்யாணம், மாலை தேரோட்டம், சுவாமி யானை வாகனத்தில் தரிசனம் தருகின்றார். சஷ்டி, மற்றும் கார்த்திகை தினங்களும் சிறப்பு. இத்தலத்தில் தங்கத்தேர் உள்ளது. தினமும் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறுகிறது.

கொங்கு மண்டலத்தின் பல சிறப்புப் பெற்ற தலங்களை இது வரை தரிசனம் செய்தோம். சமயம் கிடைத்தால் தாங்களும் சென்று தரிசித்துவிட்டு வாருங்கள். செல்வதற்கு முன்னர் இப்புத்தகத்தில் உள்ள தகவல்களை ஒரு முறை படித்து விட்டு செல்லுங்கள். இந்நூல் தங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள் அவர்களுக்கும் உபயோகமாக இருக்கக்கூடும்.

இப்பதிவுடன் இத்தொடர் நிறைவு பெறுகின்றது. அடுத்து ஐயப்பனின் பதிவுகளுடன் சந்திக்கின்றேன் அன்பர்களே.


சுபம்

3 comments:

கோமதி அரசு said...

இத்தலமே ஒரு கலைப் பொக்கிஷம்,//

நீங்கள் சொல்வது உண்மை. பேரூர் அடிக்கடி போன கோயில்
மருதமலை , பேரூர் தல வரலாறு அருமையாக் சொன்னீர்கள்.
படங்கள் எல்லாம் அழகு.
கொங்கேழ் தலங்கள் பக்தியுலா மிக நன்றாக இருந்தது.
அனைத்து செய்திகளும் அங்கு செல்ல விரும்புவர்களும் உதவும் கையேடூ.
வாழ்த்துகள், பாராட்டுக்கள்.
அடுத்த பதிவை தொடர்கிறேன்.

S.Muruganandam said...

தொடர் முழுவதும் தொடர்ந்து வந்து பின்னூட்டங்களும் இட்டு உற்சாகப்படுத்தியதற்கு மிக்க நன்றி கோமதி அரசு அம்மா. சிவனருளால் தாங்களும் தங்கள் குடும்பமும் நீடுடி வாழ பிரார்த்திக்கிறேன்.

திருசிற்றம்பலம்.

கோமதி அரசு said...

உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.