Thursday, May 14, 2009

திருக்காரணி தீர்த்தவாரி

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் காரணீஸ்வரப்பெருமான் கோபதி சரஸ் என்று அழைகப்படும் இந்திர தீர்த்தத்தில் தீர்த்தம் அளிக்கின்றார். எல்லா திருவிழாக்களும் தீர்த்த நாளை முக்கியமாகக் கொண்டே நடத்தப்படுகின்றன. திருகாரணியில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தை தீர்த்த நாளாகக் கொண்டு பெருவிழா நடக்கின்றது. காலை 11 மணியளவில் தீர்த்த வாரி ‘நடைபெறுகின்றது. பஞ்ச மூர்த்திகளும் இந்திர தீர்த்தத்திற்கு எழுந்தருளுகின்றனர்.


தீர்த்தம் கொடுக்க வரும் காரணீஸ்வரப் பெருமான்

ருதுக்களில் சிறந்தது வசந்தருது. திதிகளில் சிறந்தது பௌர்ணமி. சித்திரையில் பௌர்ணமியன்று சித்திரை நட்சத்திரமும் கூடி வரும். சித்திரை சித்திரையில் இறைவனை கண்டு தொழ, ஆண்டு முழுவதும் பூஜை செய்த பலன் கிடைக்கும் என்று திருவிளையாடற்ப் புராணம் கூறுகின்றது. பிள்ளை வரம் பெற, பாவங்கள் நீங்க சித்ரா பௌர்ணமி விரதம் சிறந்தது.


சிவ சொர்ணாம்பிகை அம்மன்

அஸ்திர தேவர்


குளக்கரையில் அஸ்திர தேவருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. முளைப்பாலிகை இட்ட மண் மற்றும் கங்கணங்கள் கங்கை சேர்க்கப்படுகின்றன. திருக்குளத்தில் திருமுழுக்கிட்டு குளத்தை தூய்மைப்படுத்துகிறார் அஸ்திர தேவர் அப்போது பக்தர்களும் குளத்தில் மூழ்குகின்றனர்.

இந்திரக் குளக்கரையில் பஞ்ச மூர்த்திகள்

அடுத்த பதிவில் அம்மையப்பரின் திருக்கல்யாண கோலத்தைக் காணலாம்.

திருக்காரணி நடராஜர் உற்சவம்

பத்தாம் நாள் அதிகாலை ஆனந்த கூத்தர் தரிசனம்

எட்டாம் திருநாள் பகலில் ஆதி சோமாஸ்கந்தர் உற்சவம் நடைபெற்றது ஐயன் அபிஷேகம் கண்டருளி வெள்ளி சிறிய ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். அன்று இரவு சந்திரசேகரர் உற்சவம், அம்மையப்பர் அபிஷேகம் கண்டருளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருளினார். ஒன்பதாம் திருநாள் மாலை பிக்ஷாடணர் உற்சவம் ஐயனும் அம்மையும் விமானத்தில் எழுந்தருளி மாட வீதி வலம் வந்தனர் நாம் எல்லோரும் உய்ய.

கோபுரத்துடன் ஆடல்வல்லான் தரிசனம்

பத்தாம் திருநாள் அதிகாலை 4 மணியளவில் ஆனந்த நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும், மற்றும் மாணிக்க வாசகர், காரைக்காலம்மையார், பதஞ்சலிமுனிவர்,வியாக்ரபாதருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது . பின்னர் விநாயகர் முன் செல்ல சித்சபேசர் இந்திர வினாமத்திலும் . சிவானந்த வல்லி அம்மை அஸ்தமான கிரி விமானத்திலும் அருட்தரிசனம் தந்து மாட வீதி உலா வருகின்றனர்.
ஆனந்தத் தாண்டவ நடராஜர்



சிவகாம சுந்தரி அம்பாள்

தனத்தால் இயன்ற தனிச்சபையில்
நடிக்கும் பெருமான் தனக்கென்றே

இனத்தால் உயர்ந்த மணமாலை
இட்டுக்க்களித்த துரைப் பெண்ணே

மனத்தான் விளங்கும் சிவகாம
வல்லிக்கனியே மாலொடும் ஒர்

அனத்தான் புகழும் அம்மே இவ்
வடியேன் உனக்கு அடைக்கலமே.

Wednesday, May 13, 2009

திருக்காரணி 9ம் நாள் உற்சவம்

9ம் நாள் காலை அஸ்தமான கிரி உற்சவம்

அம்மையப்பரின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்

விமானத்தில் சொர்ணாம்பிகை அம்பாள்


விமானத்தில் சிவ சுப்பிரமணியசுவாமி
**********

9ம்நாள் மாலை பிக்ஷாடணர் உற்சவம்


மாலை ஆறு மணியளவில் பிக்ஷாடணர் உற்சவம் ( இரவலர் திருக்கோலம்) . தாருகா வனத்து இருடிகளின் கர்வத்தை அடக்க மஹா விஷ்ணு மோகினியாகவும், சிவ பெருமான் சுந்தரராக , பிட்சாடனராகவும் ( எழுந்தருளி முனிவர்களின் செருக்கை அடக்கியதை கூறும் வகையில் பிக்ஷாடணர் உற்சவம் நடைபெறுகின்றது. அன்னை பார்வதி அன்னபூரணி கோலத்தில் அன்னம் பாலிக்கும் கோலத்தில் ஐயனை பார்த்தவாறு திருவீதி உலா வருகின்றார்.குண்டோதரனும் மானும் பிச்சையப்பரை எப்போதும் பிரிவதில்லை.

மேலும் பிச்சாண்டவரைப் பற்றி அறிந்து கொள்ள கிளிக்குக இங்கே பிச்சைத் தேவர்





அன்ன பூர்ணே சதாபூர்ணே சங்கரப் பிராண வல்லபே

ஞான வைராக்ய சித்தர்த்யம் பிக்ஷாம் தேஹி பார்வதி


சகல ஜீவராசிகளுக்கும் பூரணமாக அன்னம் பாலிக்கும் அன்னபூரணியே,

சகல் சம்பத்துக்களும் பூரணமாக வழங்குபவளே. சங்கரனாம் பரமசிவனின் உயிரானவளே. இமவான் மகளே, பார்வதி தேவியே, அம்மா ஞானத்தையும், வைராக்கியத்தையும் பிச்சையாகக் கொடு தாயே.



இன்றைய ஒன்பதாம் நாள் அன்னையை வைடூரியம் சூடும் வைணவியாக வழிபடுவோம்.

வைடூரியம்


நளிகொள் நின்னை நாடுகின்ற

நசையை யென்றும் நல்கிடுவாய்

நடஞ்செய் கோனை நினைவார்க்கு

நாளும் நிறைசேர் நாரியளே


களிகொள் உள்ளந் தூய்மையுறக்

கருணை தந்தீர்த் தாள்பவளே

கனலும் மண்ணும் குளிர்கின்ற

காற்றும் புனலும் கூடுகின்ற


வெளிகொள் பஞ்ச பூதமுறும்

வினையேன் வாழ்வில் வாழ்பவளே

விரைகொள் பாதாம் புயத்தாளே

வைடூரியங் கொள் வைணவியே


அளி கொள் நெல்லை காந்திமதி

அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே

அடிமை கொண்டாய் அருள்வாமி

அன்னாய் சிவசொர் ணாம்பிகையே


நூற்பயன்:

பத்தியால் அன்றிசேர் சொற்கவிப் பாங்கொடே

உத்தியால் செய்திடா ஒண்மணிமாலையாய்

கத்திடுங் கார்கடல் சூழுல காள்பவர்

நித்தமும் நாரி கொள் நெஞ்சினால் நல்லவரே.


அன்னம் பாலிக்கும் அன்னபூரணி

கோலத்தில் சொர்ணாம்பாள்
கோபுர வாசல் தரிசனம்

ஒன்பதாம் திருநாள் தாத்பர்யம்: பக்தியில் ஒன்பது வகை உண்டு. அவையாவன 1.ச்ரவணம் - கேட்டல். 2. கீர்த்தனம் - புகழ் பாடுதல், 3.ஸ்மரணம் - மனதில் சிந்தித்தல், 4. பாத ஸேவனம் - திருவடி பிடித்து அடிமை செய்தல், 5. அர்ச்சனம் - மலர்கள் கொண்டு அர்சித்தல். 6.வந்தனம் -ஸாஷ்டாங்கவர்தம், 7.தஸ்யம் - தாசனாக இருந்து பணி புரிதல், 8.ஸக்யம் - நண்பனாக இருந்து பழகுதல், 9. ஆத்ம நிவேதனம் - தன்னைத்தானே அர்பித்தல். இந்த நவ விதமான பக்தியில் ஏதாவது ஒன்றால் அம்மையப்பா உம்மை பற்றி இனி பிறப்பு இல்லா நிலை அருள் என்று வேண்டுவதே ஒன்பதாம் நாளின் தாத்பர்யம்.

Tuesday, May 12, 2009

திருக்காரணி அறுபத்து மூவர் பெருவிழா

எட்டாம் நாள் இரவு அறுபத்து மூவர் திருவிழா

சிவனடியே சிந்தையில் வைத்து உடல் பொருள் ஆவி அனைத்தையும் சிவ பெருமானுக்கே தத்தம் செய்து, சிவத்தொண்டுக்காகவே வாழ்ந்து சிவ தரிசனம் பெற்ற அடியார்கள்தான் அறுபத்து மூவர்கள். பல்வேறு குலங்களில் பிறந்திருந்தாலும், பல் வேறு சோதனைகள் வந்த போதும் சிவ சேவையே வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் என்று வாழ்ந்து புகழ்பெற்றவர்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள். இந்த அருந்தொண்டர்களை சிறப்பிக்கும் வகையில் பெருந்திருவிழாவில் அறுபத்து மூவர் திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது எட்டாம் நாள் மாலை 6 மணியளவில். சிறப்பு அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகள் புஷ்ப அலங்காரத்துடன் கூடிய இந்திர விமானத்தில் எழுந்தருளி அறுபத்து மூவர்களும் அம்மையப்பரை வலம் வந்து வணங்குகின்றனர். அம்மையப்பருக்கும் நாயன்மார்களுக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை நடைபெறுகின்றது. பின்னர் அறுபத்து மூவரும் அம்மையப்பரை வணங்கிய நிலையில் முன் செல்ல பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து அருள் பாலிக்கின்றனர். அந்த அறுபத்து மூவர் திருவிழாவை கண்டு களியுங்கள்.




முழுமுதற்க் கடவுள் முன் செல்ல


ஐயனை வணங்கியவாறு சைவ சமயக் குரவர்கள்
அப்பர், சுந்தரர் மாணிக்க வாசகர்

சேக்கிழார் பெருமான் உடன் வருகின்றார்

மற்ற நாயன்மார்கள் மும்மூவராய்
அருட்காட்சி தருகின்றனர்

தில்லைவாழ் அந்தணர்தன் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்


இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்


வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்கடியேன்


அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


ஐயனின் அருட் கோலம்

சிறப்பு மலர் அலங்காரத்துடன் இந்திர விமானத்தில்
காரணீஸ்வரப்பெருமான்

அறுபத்து மூவருக்கு அருட்காட்சி தரும் காரணீஸ்வரர்

63 நாயன்மார்கள் முக்தி பெற்ற வகை

குருவை வழிபட்டவர்கள் - 12
லிங்கத்தை வழிபட்டவர்கள் - 31
சிவனடியாரை வழிபட்டவர்கள் - 20



இவர்கள் அல்லாமல் தொகையடியார்கள் 9 பேர்

1.தில்லை வாழ் அந்தணர்கள்

2.பொய்யடிமையில்லாத நாயனார்.

3.பத்தராய்ப் பணிவார்.

4.பரமனையே படுவார்.

5.சித்தத்தை சிவன்பாலே வைத்தார்.

6.திருவாரூர் பிறந்தார்.

7.முப்போதும் திருமேனி தீண்டுவார்.

8. முழு நீறு பூசிய முனிவர்.

9.அப்பாலும் அடி சார்ந்தார்.

சொர்ணாம்பாள்

எட்டாம் திருநாளான இன்று கோமேதகம் சூடும் கோகிலமாய் வணங்குகின்றோம்.

கோமேதகம்
சிலையை யெடுத்த மன்மதனைச்
சினந்து சுட்ட சங்கரனார்
சிறிதும் ஆலம் விழுங்காதே
சித்தஞ் செய்யுநற் சங்கரியே


மலையை யெடுத்த மாவரக்கன்
மதத்தோள் நைய ஊன்றியதுன்
மலராய்த் தோன்றும் பதமென்று
மறைகள் மொழியும் மேன்மையளே


கலையைக் கொழிக்கும் தண் கதிரின்
கவிணைக் கூட்டுங் கூன்பிறையைக்
கனிந்தே சூடும் கலாவல்லி
கோமே தகங் கொள் கோகிலமே


அலைசூழ் மயிலை கற்பகமே
அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி

அன்னாய் சிவசொர் ணாம்பிகையே (8)




சிவசுப்பிரமணிய சுவாமி

சண்டிகேஸ்வரர்

கடிசேர்ந்த போது மலரன்ன கைக்கொண்டு நல்ல

படிசேர்ந்த பால்கொண்டங்கு ஆட்டிடத் தாதை பண்டு

முடிசேர்ந்த காலை அற வெட்டிட முக்கண் மூர்த்தி

அடி சேர்ந்த வண்ணம் அறிவார் கேட்டுமன்றீ


எட்டாம் நாள் திருவிழாவின் தாத்பர்யம்: அம்மையப்பரிடம் முற்றும் உணர்தல், வரம்பில் இன்பமுடைமை, முடிவில் ஆற்றலுடைமை, பேரருள் உடைமை, இயற்கை உணர்வுடைமை, தூய உடம்புடையவனாதல் ஆகிய எட்டு குணங்களையும் அளித்து எங்களை நல்வழிப்படுத்தி உன் திருவடிகளில் சேர்த்துக் கொள் என்று வேண்டுவதே இந்த எட்டாம் திருநாளின் தாத்பர்யம்.