Friday, January 27, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -18

பத்ரிநாதர் தரிசனம்

பத்ரிநாதர் -இராவல் அவர்களின் பூஜா மூர்த்தி

நீலகண்ட சிகர வடிவத்தில் மிக்கார் அமுதுண்ண ஆலமுண்ட நீலகண்டனை திவ்யமாக தரிசித்து விட்டு  பத்ரிநாதரை தரிசனம் செய்ய கிளம்பினோம். முதலில் நாரத குண்டத்தில் தீர்த்தமாடி விட்டு பின் பத்ரிநாதரை சேவிக்க செல்வதற்கு முன்,  பத்ரிநாத் தலத்தின் பெருமைகளை முதலில் பார்க்கலாமா அன்பர்களே?

சிம்ம துவாரம் பத்ரிநாத்


வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி பத்ரிநாத் தலத்தின் பெருமைகளை கூறுமாறு கேட்க வசிஷ்டர் கூறுகின்றார். " பத்ரிநாத்தை தரிசிப்பவன், அவன் எப்படிப்பட்ட பாவியாயினும், பக்தியினால் புனிதமடைந்து  மோக்ஷமும் அடைகின்றான். பத்ரிநாதரின் தரிசனம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. எவனொருவன் வாழ்நாள் முழுவதும் இறைவனை பிரார்த்தனை செய்கின்றானோ, அவனுக்குத்தான் பத்ரிநாதரின் தரிசனம் கிட்டுகின்றது. அவனுடைய பாவங்கள் நீங்கும். உள்ளம் தூய்மை பெறும். எந்த குற்றத்தை செய்தவனும், வேறெந்த க்ஷேத்திரத்திலும் அவனுடைய பாவங்களிலிருந்து விடுபட வழியின்றிப் போனவனும் கூட பத்ரிநாதரின் கருணையினால் சுவர்க்க லோகத்தை  அடைகின்றான்எவன் கங்கையில் நீராடி, உடைகளையும், ஆபரணங்களையும் பத்ரிநாதருக்கு சமர்பிக்கின்றானோ அவனுக்கு மோட்ச லோகத்தில் நிச்சயம் இடம் கிட்டும். எவன் அகண்ட தீபம் ஏற்றுகின்றானோ அவன் சிரேஷ்டராகின்றான். எவன் பத்ரிநாதரின் கோயிலை வலம் வருகின்றானோ, அவரது பாதாரவிந்தங்களை பற்றிக் கொண்டு பிரார்த்தணை செய்கின்றானோ அவன் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறுகின்றான்இவ்வாறு  சிறப்பு பெற்ற  பத்ரிநாத் தலத்தின் மற்ற சிறப்புகளைக் காணலாமா?   

நாராயண பர்வதத்தின் மடியில்
அலக்நந்தாவின் கரையில்
பூலோக வைகுண்டம் பத்ரிநாதம்


நமது பாரத தேசமெங்கும் உள்ள அனைத்து தலங்களிலும், நான்கு திசைகளிலும் உள்ள பரம பவித்ரமான ஸ்தலங்கள் சார் தாம் என்று அழைக்கப்படுகின்றன. ஆதிசங்கரர் இந்த நான்கு தலங்களிலும் தமது பீடத்தை ஸ்தாபிதம் செய்தார்.  மேலும் உத்தராகண்ட் மாநிலத்தின் சோட்டா சார்தாம் தலத்திலும் ஒன்று பத்ரிநாத். இந்த சிறப்பு இந்த தலத்திற்கு மட்டுமே உண்டு.

மஹாலக்ஷ்மித் தாயாருக்கு மிகவும் உகந்த தலம். பத்ரி எனப்படும் இலந்தை மரத்தினடியில் மஹாலக்ஷ்மித் தாயார் தவம் செய்ய அதற்கு பிரசன்னமாகி பெருமாள் அதே இலந்தை மரத்தடியில் சேவை சாதித்து நமக்கு முக்தி வழங்கும் முக்தி தாம்.

அஷ்டாத்திர மந்திரத்தை உபதேசம் செய்த தலம். பெருமாள் நர நாராயணகர்களாக அவதாரம் செய்து தவம் செய்து நாம் எல்லோரும் உய்ய நலம் தரும் தானே குருவாகவும், சீடனாகவும் ஒம் நமோ நாராயணா” என்னும் திருமந்திரத்தை அருளிய தலம்.

அலக்நந்தா நதியின் மேற்குக் கரையில் நர நாரயண சிகரங்களுக்கிடையில் அமைந்துள்ள தலம். சங்கராச்சாரியருக்கு பெருமாள் நரசிங்கமூர்த்தியாக சேவை சாதித்த தலம்.

பத்ரிநாதரை தரிசிக்க செல்லும்
சொக்கலிங்கம், வைத்தி, மனோகரன், இரவி

வியாச முனிவர் கூற தந்தத்தை உடைத்து முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான் மஹா பாரதம் எழுதிய தலம்.

 இந்த பூவுலகில் பெருமாள் பிரத்யக்ஷமாக ஆச்சாரியனாக சேவை சாதிக்கும் தலம்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களுள் ஒன்று இந்த பத்ரிகாச்ரமம். .
வடதிசைமதுரைசாளக்கிராமம் வைகுந்தம்துவரையயோத்தி

இடமுடைவதரியிடவகையுடைய எம்புருடோத்தமனிருக்கை
என்று பெரியாழ்வாரும்,

சீராரும்மாலிருஞ்சோலை திருமோகூர்

பாரோர் புகழும் வதரி வடமதுரை
என்று திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.  இவ்வதரி திவ்ய தேசத்தை 22 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார் திருமங்கையாழ்வார்.  

இத்தலம் பெருமாள் தானாகவே எழுந்தருளிய ஸ்வயம்வக்த ஸ்தலங்களுள் ஒன்று. மற்ற தலங்கள் ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, வானமாமலை, புஷ்கரம், நைமிசாரண்யம், சாளக்கிராமம்  ஆகியவை ஆகும்.

நாரதர் குண்டம் 


பத்ரிநாதர் ஆலயம் எப்போது நிறுவப்பட்டது என்பதற்கு வரலற்றுப்பூர்வமான ஆதாரங்கள் ஏதும் இல்லை.  புத்தர் காலத்தில் நாரத குண்டத்தில் வீசிய இந்த சாலக்கிராம மூர்த்தியை ஆதி சங்கரர் கண்டெடுத்து அதை தப்த குண்டத்திற்கும் கருட சிலாவிற்கும் இடையில் பைரவி சக்கரத்தின் மேல்  பிரதிஷ்டை செய்தார். 5ம்  நூற்றாண்டில் குஷ்ட நோயால் அவதிப்பட்ட கர்வால் மஹாராஜா, வரதராஜ ஆச்சாரியார் என்ற குருவின்  யோசனைப்படி இந்த மூர்த்தியை  தற்போது உள்ள இடத்தில் நிறுவினாராம்.  இதனால் அவரது அந்த நோய் நீங்கியது. 

நந்த பிரயாகையிலிருந்து சதோபந்த வரையிலான ஷேத்ரம் பத்ரி விஷால் என்று அழைக்கப்படுகின்றது. சகஸ்ர கவசன் என்ற அரக்கனை வதம் செய்ய  பெருமாள் நர நாராயணர்களாய் பத்ரி ஆசிரமம் வந்து  தவம் செய்த போது மஹாலக்ஷ்மி தாயார் இலந்தை(பத்ரி) மரமாக இருந்து நிழல் கொடுத்தாள், தவம் செய்யும் போது ஸ்திரீகளை தொடுவதில்லை என்ற விரதம் கொண்டதால்,  பெருமாள் வளர வளர மரமும் வளர்ந்தது எனவே விசாலமான என்ற பொருளில் இத்ஷேத்ரம் பத்ரி விஷால் என்றும் அழைக்கப்படுகின்றது. 

  
தப்த் குண்டம்

தவம் செய்யும் பத்ரிநாதரை தரிசனம் செய்யாமல் முக்தி அடைய முடியாது என்று நம்புகிறார்கள். பனிக் காலத்தில் ஆறு மாதங்கள் திருக்கோவில் மூடியிருக்கும், அப்போது உற்சவ மூர்த்தி ஜோஷிமட் நரசிம்மர் ஆலயத்தில் இருப்பார். அப்போது பத்ரி நாதரை நாரதர் பூஜை செய்வதாக ஐதீகம். மஹா லக்ஷ்மித்தாயார் சன்னதியின் உள்ளே இருப்பார்.   திருக்கோவில் மூடும் போது ஏற்றப்பட்ட  அகண்ட தீபம்  ஆறு மாதம் கழித்து மீண்டும் திறக்கும் போது அப்படியே அனையாமல் இருக்கும் அற்புதம் நடக்கும் தலம்.


நீராடிவிட்டு பத்ரிநாதரை தரிசிக்க செல்கின்றோம்

இமயமலைச்சாரலில் அமைந்துள்ள பத்ரிஷேத்ரம் காலம் காலமாகவே ரிஷிகளையும் யோகிகளையும் ஈர்த்து வந்துள்ளது. வசிஷ்டர், காஷ்யபர், அத்ரி, ஜமதக்னி, கௌதமர், விசுவாமித்திரர், அகஸ்தியர் ஆகிய சப்த ரிஷிகள் தவம் செய்த புண்ணிய பூமி இந்த பத்ரிகாஸ்ரமம்.

கடல் மட்டத்திலிருந்து  3100 மீ உயரத்தில் நர நாராயண சிகரங்களுக்கிடையில்  சுற்று சூழல் பாதிக்கப்படாத இயற்கைச் சூழலில், 400 அடி உயர வஸுதரா என்ற அருவியிலிருந்து இறங்கி வரும் அலக்நந்தா ஆற்றின் வலக்கரையில் இத்தலம் அமைந்துள்ளது.

கருட ஷிலா

ஒரு காலத்தில் பத்ரி யாத்திரை வாழ்வின் கடைசி யாத்திரையாக கருதப்பட்டது. எனவே பலர் தங்களது நான்காவது ஆசிரமத்தில்  இங்கு வந்து தவம் செய்ததால் இப்பூமி தபோ பூமி , தபோவன் என்று அழைக்கப்பட்டது. 
 பத்ரிநாதரை சேவித்த பின் மகிழ்ச்சியில் மனோகரன்

பத்ரிநாதர் வைஷ்ணவர்களுக்கு வைகுண்டநாதன், சைவர்களுக்கு பஞ்சமுகி சிவன், சாக்தர்களுக்கு காளி, பௌத்தர்களுக்கு  சாக்கிய முனி, ஜைனர்களுக்கு தீர்த்தங்கரர்.
தமருகந்ததுஎவ்வுருவம் அவ்வுருவம்தானே

தமருகந்தது எப்பேர் மற்றபேர்   என்றபடி எந்த வடிவில் பக்தர்கள் வழிபடுகின்றார்களோ அந்த வடிவில் அவர்களுக்கு காட்சி அளிக்கின்றார் பத்ரிநாதர். 
   

 
 ஆதி சங்கர பகவத் பாதாள்
தமது எட்டாவது வயதில் காலடியிலிருந்து புறப்பட்ட ஆதிசங்கரர் பாரத தேசமெங்கும் நடந்து இமயமலையின் உயரத்தில் அமைந்துள்ள பத்ரிகாசிரமத்தை தனது 14வது வயதில்   அடைந்து நாரத குண்டத்திலிருந்து  பத்ரிநாதரை எடுத்து  புனர் பிரதிஷ்டை செய்தார். இக்கோவிலின் பூஜா முறையையும் இவரே வகுத்துக் கொடுத்தார். பத்ரிநாதருக்கு பூஜை செய்யும் உரிமையை கேரள பிராமணர்களுக்கு அளித்தார் இவர்கள் ராவல் என்று அழைக்கப்படுகின்றனர். அந்த முறை இன்றும் பின்பற்றப்படுகின்றது.   ஆதி சங்கரர் இங்கிருந்த போது வேத வியாசரின்  பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதினார். ஆதி சங்கராச்சாரியருக்கு  தனி சன்னதி உள்ளது. 

 
 அலக்நந்தா படித்துறை

 
 அலக்நந்தா பாலமும்
கோடையில் பக்தர்கள் வரிசையில் நிற்பதற்கான கொட்டகையும் 

இவ்வளவு சிறப்பு வாய்ந்த பத்ரிநாதரை தரிசிக்க புறப்பட்டோம். தப்த் குண்டத்தில் குளிக்க வேண்டும் என்பதால் அதற்கான மாற்று உடைகளையும் , மற்றும் பூஜை பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு சென்றோம். அக்னி தேவன்  தவம் செய்து பத்ரி நாதரை தரிசனம் செய்த போது உண்டாக்கிய குளமே தப்த் குண்டம் ஆகும். இது ஒரு வெந்நீர் குளம், கருட ஷிலாவிலிருந்து உற்பத்தி ஆகி ஓடி வருகின்றது. இது ஒரு குளத்தை அடைகின்றது. அடுத்து நாரத குண்டம், இது நாரத ஷிலாவில் இருந்து உற்பத்தியாகி வரும் வெந்நீர் ஊற்று. இந்த நாரத குளத்தில் இருந்துதான் பத்ரிநாதரை மீட்டு ஆதி சங்கரர் புனர் பிரதிஷ்டை செய்தார். இந்த குளங்களில் முதலில்  நீராடினோம். தப்தகுண்டத்தை சுற்றிலும் ஐந்து பாறைகள் அமைந்துள்ளன அவையாவன நாரத ஷிலா, கருட ஷிலா, மார்க்கண்ட ஷிலா, நரசிங்க ஷிலா, மற்றும் வராஹ சிலாக்கள் உள்ளன. நாரத ஷிலா நாரதர் தவம் செய்த பாறை ஆதியில் கலி கால ஆரம்பத்தில் நாரதர் பத்ரிநாதரை இவர்  பிரதிஷ்டை செய்தார். இப்போதும் பனிக்காலத்தில் கோயில் மூடப்பட்டிருக்கும் போது நாரதர் பத்ரிநாதருக்கு நித்ய பூஜை செய்வதாக ஐதீகம்.   கருடன் தவமிருந்த பாறை கருடஷிலா.   தவத்தின் பயனாக பெரும் பலசாலியாகும் வரமும், மேலும் இத்தலத்தில்  எப்போதும் பெருமாளுடன் சேவை சாதிக்கும் பாக்கியமும் பெற்றான். மேலும்  பிரஹலாதா தாரா, கூர்ம தாரா, ஊர்வசி தாரா, பிருகு தாரா,  மற்றும் இந்திர தாரா என்னும் ஐந்து  நீர் வீழ்ச்சிகளும் உள்ளன. 
  
ஆதி கேதாரீஸ்வரர் சன்னதி

தப்த் குண்டத்தில் நீராடிய பின்னர்  முதலில் ஆதி கேதாரீஸ்வரரை தரிசனம் செய்து விட்டு பத்ரிநாதருக்கு  படைக்க பிரசாதம் வாங்கிக்கொண்டு படிகள் ஏறி சென்றோம். முதலில் நமக்கு காட்சி தருவது அற்புதமான சிம்ம துவாரம் இது போன்ற ஒரு அற்புதமான அமைப்பை வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாது. கிழக்கு நோக்கிய கோவில்  பத்து தூண்கள் உள்ளன அவை விஷ்ணுவின் பத்து அவதாரங்களை குறிக்கின்றன, சிம்மங்கள் , கஜங்கள் தாங்க பல வித மரவேலைப்படுகளுடன்  பல வர்ணத்தில் மூன்று சுவர்ண கலசங்களுடன் எழிலாக விளங்குகின்றது சிம்ம துவாரம். இதன் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளாத அன்பர்களே இல்லை என்று சொல்லலாம். சிம்ம துவாரத்தின் நுழையும் போது கருடாழ்வாரை தரிசனம் செய்கின்றோம். ஒரு பிரகாரம் பிரகாரத்தில், செந்தூரம் பூசப்பெற்ற  விநாயகர், பிரம்மா, விஷ்ணு,  கருடன், சூரிய நாராயணர், ஹனுமன் சிற்பங்கள் அற்புதமாக உட்புற சுவரில் அமைந்துள்ளன. பிரகாரத்தில் வடக்கு நோக்கி  மஹாலக்ஷ்மி தாயாருக்கு தனி சன்னதி, தாயாரின் பெயர் அரவிந்தவல்லி. அம்மன் சன்னதி கோபுரமும் பொன் வேய்ந்த கோபுரம். தீபாவளி பெரிய பிராட்டிக்கு விசேஷம். அம்பாளுக்கு சேலை சார்த்துவது மிகவும் நல்ல பிரார்த்தனை. இங்குள்ள அன்பர்கள் மங்கல பொருட்களான, குங்குமம், மஞ்சள், கண்மை, வளையல் படைத்து தாயாரை வழிபடுகின்றனர்.

 

அடுத்த சன்னதி பத்ரிநாதர் உற்சவர் சன்னதி. இவர் வெள்ளி மூர்த்தம்,  நின்ற கோலத்தில் சதுர்புஜனாய் , சங்கு சக்ரதாரியாய் சேவை சாதிக்கின்றார்.  பனி  காலத்தில் ஜோஷிர்மட் செல்பவர் இவர்தான். அப்போது தாயார் உள் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். எதிரே பெருமாளின்   தங்க கோபுர கலசத்தைக் காணலாம். கர்ப்பகிரக சுவரில் தர்மசீலா, காமதேனு உள்ளன, இவற்றை வணங்கிச் செல்கின்றனர் அன்பர்கள், சன்னதிக்கு பின்புறம் நரநாராயணர் சன்னதி, கையில் சக்கரத்துடன் நாராயணரும், வில்லேந்திய கோலத்தில் நரனும்( கிருஷ்ண – அர்ச்சுனரராக ) சேவை சாதிக்கின்றனர். தெற்கு நோக்கி ஷேத்ரபாலரான கண்டாகர்ணன் மற்றும் ஹனுமன் சன்னதி உள்ளது. கண்டாகர்ணன் இங்குள்ள கிராமமான மானாவின் கிராம தேவதை, இவரை வணங்கிய பிறகே பத்ரிநாத் யாத்திரை நிறைவடைகின்றது என்பது ஐதீகம். 

குபேரன், கருடன், பத்ரிநாதர், உத்தவர், நாரதர், நரநாராயணர்
மாலை சிருங்கார தரிசனம் 

 பின்னர் பத்ரி நாதர் சன்னதிக்கு சென்றோம். மூன்று பகுதிகளாக உள்ளது சன்னதி. மூலஸ்தானம் பொன் வேயப்பட்ட  கோபுரத்தின் கீழே சேவை சாதிக்கின்றார் பத்ரிநாதர்.  வெள்ளி மஞ்சத்தில் உடன்  குபேரன், அஞ்சலி ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் பெருமாளின் வாகனமும் கொடியுமான கருடன், உத்தவர், நாரதர், நரநாரயணர்களுடன் பஞ்சாயாதன் முறையில் சேவை சாதிக்கின்றார் பத்ரிநாதர், அகண்ட தீபம் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கின்றது .  அடுத்த பகுதி தரிசன மண்டபம் இங்குதான் பூஜைகளும் மற்ற சடங்குகளும் நடைபெறுகின்றன. அடுத்து சபா மண்டபம்,  கருங்கல்லால் ஆன தூண்கள், தூண்களில் அற்புதமான சிற்பங்கள் , மேலே தசாவதாரக் கோலங்கள், கர்ப்ப கிரகத்தின் முகப்பில் கஜலக்ஷ்மி,  வெள்ளி கவசம் சார்த்தப்பட்டுள்ளது .  உள் துவாரபாலகர்கள் தென்னக அமைப்பில் உள்ளனர்.  மேலே “ஓம் நமோ  பகவதே வாசுதேவாய:”  என்னும் மந்திரம் . பக்தர்கள் இங்கிருந்து தான் பத்ரிநாதரை தரிசனம் செய்கின்றனர்.


சாலக்கிராம மூர்த்தமான பத்ரி நாராயணர், ஜடா முடியோடு சதுர்புஜனாய், சங்கு சக்கரம் ஏந்தி மடியில் மற்ற இரு கரங்களை யோக முத்திரையுடன் வைத்து பத்மாசன கோலத்தில்- தியான ரூபத்தில் பிரதான சந்நிதியில் சேவை சாதிக்கின்றார். நிஜ ரூபத்தை காலை அபிஷேகத்தின் போது  மட்டுமே சேவிக்கலாம்.  பின்னர் அலங்காரம் ஆகிவிட்டால் முக தரிசனம் மட்டுமே கிட்டுகின்றது. ஆராவமுது பத்ரி நாதரின் அலங்காரம், தலைக்கு மேலே தங்க குடை  தலையிலே தங்க கிரீடம், கிரீடத்தில் வைர மணிகள் மின்னுகின்றன, இரு புறமும் மயில்பீலி, திருமுகத்தில் சந்தன திலகத்தில் வைர திருமண், வெள்ளிக்கவசம்,  திருமார்பில் இரத்தின பதக்கங்கள்,  கௌஸ்துபம், வனமாலை மின்ன சங்கு சக்ரதாரியாய் எழிலாக அழகிய மலர் மாலைகள். துளசி மாலைகள், வாடாத இந்த பத்ரி ஷேத்திரத்தின் மலர் மாலைகளுடன்  சேவை சாதிக்கின்றார் முக்தியளிக்கும் பத்ரிநாதர், பெருமாளை  ஆழ்வார்களின்  பாசுரம் பாடி சேவித்தோம்.

எய்த்தசொல்லோடுஈளையேங்கி இருமியிளைத்துஉடலம்
பித்தர்போலசித்தம்வேறாய்ப் பேசிஅயராமுன்
அத்தன்எந்தைஆதிமூர்த்தி ஆழ்கடலைக்கடைந்த
மைத்தசோதிஎம்பெருமான் வதரிவணங்குதுமே. 
(வயதானபின் சென்று  தரிசித்துக் கொள்ளலாம் என்று நினைக்காமல் இளமையிலேயே, உடல் நலம் நன்றாக உள்ள நிலையில் பெருமாளை தரிசனம் செய்து விடுங்கள் என்று கூறுகின்றார் திருமங்கைமன்னன்)

முதல் தடவை சென்ற போது கூட்டம் அதிகமாக இருந்தது, தரிசனம் முடித்துவிட்டு இன்னொரு முறை சன்னதி வலம் வந்த போது கூட்டம் குறைந்திருந்தது இரண்டாவது முறை உள்ளே சென்று தெவிட்டாத தெள்ளமுதை  இன்னும் அதிகநேரம் சேவித்தோம். அப்போதும் திகட்டவில்லை இன்னொரு முறை வாய்ப்பு கிட்டுமோ தெரியவில்லை இன்னொரு முறையும் சேவித்து விடுவோம் என்று  மூன்றாவது முறையாகவும்  சேவித்து விட்டு மிகுந்த மனமகிழ்ச்சியுடன், வெளியே வந்தோம். மே  ஜூன் மாதங்களில் சென்றால் கூட்டம் அதிகமாக  இருக்கும், வரிசை இரண்டு மூன்று கி.மீ தூரத்திற்கு நிற்கும் அப்போது இவ்வாறு ஆர அமர தரிசனம் செய்ய முடியாது ஆனால் நிலசரிவுகள் இருக்காது.
  இராவல் அவர்களின் பூஜா மூர்த்திகள்

பத்ரிநாதரை திவ்யமாக சேவித்த  பின்னர் ராவல் அவர்களை சென்று தரிசனம் செய்தோம், அவர் பத்ரிநாதருக்கு சாற்றிய சந்தனமும், துணியும், துளசியும் பிரசாதமாக அளித்தார்.  திரு. தனுஷ்கோடி அவர்களுக்கு பரிச்சயமான  திரு.தேஷ்பாண்டே அவர்கள் இங்கு பத்ரிநாத்தில் தங்கி இருக்கின்றார் அவர் ஒரு வழி காட்டியை அனுப்பியிருந்தார் அவர் எல்லா இடங்களையும் சுற்றிக்காண்பித்தார்.   பின்னர் பிரம்ம கபாலம் சென்று ஒரு மிகவும் முக்கியமான கடமையை செய்தோம். 


பிரம்ம கபாலத்தில் பித்ரு தர்ப்பணம் 


வழிகாட்டி, தேஷ்பாண்டே, தனுஷ்கோடி

நாம் எப்போதும் நமது பித்ருக்களுக்கு கடமைப்பட்டவர்கள், வருடம் தவறாமல் அவர்களுக்கு  சிரார்த்தம் கொடுப்பது நமது கடமைகளுள் ஒன்று. இங்குள்ள பிரம்ம கபாலம் என்னும் இடம் மறைந்த நம் முன்னோர்களுக்கு பிண்ட தர்ப்பணம் செய்ய சிறந்த இடம். இந்த பிரம்ம கபாலத்தின் மகிமை என்னவென்று முதலில் காணலாமா? ஆதிகாலத்தில் பிரமனுக்கும் சிவனைப் போல ஐந்து முகங்கள், ஒரு முகம் மிகவும் ஆணவத்துடன் இருந்ததால் சிவபெருமான் அந்த ஐந்தாவது தலையை தனது நகத்தால் கீறி  எடுத்தார். இதனால் அவரை பிரம்மஹத்தி தோஷம் பற்றியது அந்த பிரம்ம கபாலமும் அவர் கையில் ஒட்டிக்கொண்டது. அவர் பல் வேறு தலங்களுக்கு சென்றும் விமோசனம் கிட்டவில்லை. இந்த பத்ரி ஷேத்திரத்தில் அலக்நந்தாவின் கரையில் வந்து பிண்ட தர்ப்பணம் செய்ய பிரம்ம  கபாலம் அவர் கையை விட்டு விலகி அங்கேயே  தங்கி விட்டது . ஆகவே  பித்ருகளுக்கு பிண்டப் பிரதானம் அளிப்பது மிகவும் சிறந்தது. முறையாக வருடாவருடம் சிரார்த்தம் செய்ய முடியாதவர்கள், காசி , கயா முதலிய தலங்களில் செய்யாதவர்கள் இங்கு பிண்டதானம் செய்வது நல்லது.  இங்கு செய்யும் பித்ரு காரியம் கயாவில் ஒரு கோடி முறை செய்வதற்கு ஒப்பானது. இங்கு ஒரு தடவை பிண்டதானம் செய்ய முன்னோர்கள் முக்தியடைகின்றர் எனவே மறுபடியும் அவர்களுக்கு பிதுர் காரியம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சிலர் கூறுகின்றனர்.  குடும்பத்தில் மூத்தவர்களாக இருக்கும்  எங்கள் குழுவின் 8 பேர் இங்கு பிண்டப்பிரதானம் அளித்தோம், மற்றவர்கள் செய்யவில்லை. திரு. தேஷ்பாண்டே அவர்கள் இந்த பிண்டதானத்தை பிரம்ம கபாலத்திற்கருகில் செய்து வைத்தார், அந்த நடுங்கும் குளிரில் தந்தையின் வம்சத்தினர், தாயின் வம்சத்தினர், மாமன்மார் வம்சத்தினர், மனைவி வம்சத்தினர், சகோதரர்கள், சகோதரிகள்,  அவர்களுடன் தொடர்புடையவர்கள், நண்பர்கள், மற்றும் யாரை எல்லாம் நாம் மதித்து போற்றுகின்றோமோ அவர்களுக்கு என்று 32 வகையினருக்கு  மந்திரம் சொல்லி எள் சாதம் தண்ணீர் அளித்து பின்னர் அந்த சாதத்தை பிரம்ம கபாலத்தில் வைத்து அனைவருக்கும் முக்தியளிக்க வேண்டி, அலக்நந்தாவில் அன்னத்தை இட்டு முக்கிய கடமையை முடித்தோம்.
 ஜோஷிர்மட் லக்ஷ்மி நாராயணர் ஆலயம் 


இதற்குள் சீதோஷ்ண நிலை மாறி மேக மூட்டம் அதிகமாகி மழைச்சாரல் துவங்கி விட்டது. அனைவரும் அவசர அவசரமாக இராகவேந்திரர் மடத்திற்கு ஒடினோம். தேஷ்பாண்டே அவர்கள் எங்கள் குழுவினருக்கு மதிய உணவிற்கு அங்கு ஏற்பாடு செய்திருந்தார்.  திரு. தனுஷ்கோடி அவர்கள் பிண்டதானம் செய்யவில்லை என்பதால் அவர் இன்னும் பல முறை பத்ரிநாதரை தரிசனம் செய்து அவருக்கு படைக்கப்பட்ட மஹாபோக் பிரசாதத்தை பெற்றுக்கொண்டு வந்து எங்கள் அனைவருக்கும் வழங்கினார். இவ்வாறு பத்ரிநாதர் தரிசனம் மிகவும் அற்புதமாக முடிந்தது, மழையும் கொட்டத் துவங்கியது. அவசரமாக பேருந்துக்கு ஓடினோம், நடுங்கும் குளிரில் சட்டை இல்லாமல் அமர்ந்து பிண்டதானம் செய்ததால் முதலிலேயே உடல் நிலை சரியில்லாத  திரு. தேவேந்திரரின் உடல் நிலை மிகவும் மோசமாகியது, வழிகாட்டி ஒரு மருத்துவரை அழைத்துக் கொண்டு வந்தார் அவர் வந்து சோதித்துவிட்டு  ஒரு ஊசி போட்டு மருந்து கொடுத்து கீழே இறங்கியவுடன் முடிந்தால் மருத்துவமணையில் சேர்த்துவிடுங்கள் என்று அறிவுரை கூறினார். மதியம் 1:30 மணி வாயில் திறந்திருந்ததால் உடனே கீழே இறங்கினோம்.

ஆதி சங்கரர் தவம் செய்த 2500  வருடங்கள்
பழமையான கற்பக விருக்ஷம் 
 
சிறிது நேரத்தில் மழை நின்று விட்டது.  பின்னர் ஜோஷிர்மட் வந்து ஆதி சங்கரர் அமர்ந்து தவம் செய்த 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்பக விருஷத்தையும், அவர் தங்கியிருந்த குகையையும், அகண்ட ஜோதியையும் அவர் வழிபட்ட லக்ஷ்மி நாராயணரையும், தரிசனம் செய்து பின்னர் பீபல்கோட் வந்து முதல் நாள் தங்கிய அதே இடத்தில் தங்கினோம்.

ஆதி சங்கரர் சன்னதி நந்திகள் 

 பீபல்கோடி சுற்றுலா மாளிகை

இவ்வாறு நான்கு தலங்களுள் மூன்று தலங்களைதான் இந்த வருடம் தரிசிக்க முடிந்தது, திரும்பிவரும் நாள் நாங்கள் பட்டபாட்டையும், பஞ்ச ப்ரயாகை, பஞ்ச பத்ரி பற்றிய தகவல்களையும் அடுத்த பதிவில் காணலாமா அன்பர்களே.                

Saturday, January 21, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -17

பணிக்கு சென்று விட்டதால் உடனடியாக பதிவிட முடியவில்லை இனி யாத்திரையை தொடரலாம் அன்பர்களே. வண்டி ஓட்டுனர் கூறியது போல காலை 4 மணிக்கு  பூலோக வைகுண்டமான பத்ரிநாத்திற்கு கிளம்பினோம். 
ஜோஷிர்மட் நரசிம்மர் ஆலயம் நுழைவாயில்






திருப்பிருதி  திவ்ய தேசம் 



பீப்பல் கோட்டில் இருந்து  முதலில் நாங்கள் கருட்கங்காவை கடந்தோம்.  கருடவாகனத்தில் பத்ரிநாதர் பத்ரி வனத்திற்கு செல்லும் போது கருடனை இறக்கிவிட்டுச் சென்ற இடம் என்பதால் கருட்கங்கா ஆயிற்று. அடுத்த இடம் தங்கானி இந்த ஊரில் நாரினால் பின்னப்பட்ட கூடைகள் மலிவாகக் கிடைக்கின்றன. அடுத்து ஹெலாங், இங்கிருந்து 9 கி.மீ தொலைவில் பஞ்சகேதார்களில் ஒன்றான கல்பேஷ்வர் கோயில் உள்ளது. அடுத்த இடம் ஜோஷிர்மட். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வடநாட்டுத்திருப்பதிகளில் ஒன்றான திருப்பிருதி என்று அழைக்கப்பட்ட ஜோஷிர்மட் என்னும் இத்தலத்தில் பெருமாளை முதலில் சேவித்தோம்



ஜோஷிர்மட் ஆதி சங்கரர் மடம்


வாசுதேவர் ஆலய கோபுரம்

 இந்த ஜோஷிர்மட் ஒரு இமயமலையின் பல தலங்களுக்கு  நுழைவாயில் ஆகும். பத்ரிநாத், ஹேம்குண்ட் சாஹிப் என்னும் சீக்கியர்களின் புனிதத்தலம், மலர் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களுக்கு இங்கிருந்துதான் செல்ல வேண்டும்.  மேலும் திரிசூல், காமெட், நந்தாதேவி மலை சிகரங்களுக்கு மலையேறும் வீரர்களுக்கு ஜோஷிர்மட்தான் ஆதார முகாம். அவுலி என்னும் பனி சறுக்கு விளையாட்டுத்தலம் ஜோஷிர்மட்டின் அருகில் அமைந்துள்ளது. ஆதி சங்கர பகவத் பாதாள் நிறுவிய மடங்களில் ஒன்றான இம்மடம் மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள கல்பவிருக்ஷத்தின் சுமார் 2400 வருடங்கள் பழமையானது. நரசிம்மர், துர்க்கையம்மன் கோவில்கள் முக்கியமானவை. இங்கிருந்து 11 கி.மீ தூரத்தில் தபோவனம் என்னும் பள்ளத்தாக்கில் பஞ்ச பத்ரிகளில் ஒன்றான பவிஷ்ய பத்ரி உள்ளது.

முன்பே கூறியது போல ஜோஷிர்மட்டிலிருந்து மேலே செல்லும் வழியில் போக்குவரத்து ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது காலை 5.30 மணிக்கு கதவு திறந்து  வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. பின்னர் ஒரு மணிக்கு ஒரு முறை கதவு திறக்கப்படுகின்றது, அது போல பத்ரிநாத்தில் இருந்து கிளம்பி வருவதற்கும் குறிப்பிட்ட சமயங்கள் உள்ளன. மாலை ஆறு மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை கதவு அடைக்கப்படுகின்றது. யாத்திரிகளின் நன்மைக்காக இந்த ஏற்பாடு. நாங்கள் சுமார் ஐந்து மணியளவில் ஜோஷிர்மட்டை அடைந்தோம. வண்டி ஓட்டுநர் வண்டியை வரிசையில் நிறுத்தினார். கதவு திறக்க சமயம் உள்ளது என்பதால் நரசிங்கப் பெருமாளை தரிசிக்க சென்றோம்.
 காலை சூரிய ஒளியில் பனிச்சிகரம்

 இந்த கலி காலத்தில் நரசிம்ம மூர்த்தியின் கை உடைந்து விழும்போது ஜய விஜயர்களாகிய இரு மலைகள் இணைந்து தற்போது நாம் பத்ரிவனத்திற்கு பயணம் செய்யும் பாதை அடைபடும் அதற்குப்பின் இந்த பவிஷ்ய (வரும்காலம்) பத்ரியில்தான் நாம் பத்ரிநாதரை நாம் தரிசனம் செய்யமுடியும். குளிர்காலத்தில் பத்ரிநாத் கோயில் மூடப்படும் போது பத்ரிநாதர் இக்கோவிலில்தான் வந்து தங்குகின்றார்.  

ஆதிசங்கரர் ஸ்தாபிதம் செய்த மடத்திற்கு அருகில் நரசிம்மர் சன்னதி அமைந்துள்ளது.  இவர் சாளக்கிராம மூர்த்தி கூடவே, குபேரன், கருடன், பத்ரிநாதர், சீதா லக்ஷ்மணன் சகித இராமர், இராதா கிருஷ்ணர் சேவை சாதிக்கின்றனர்.  இந்த அதிகாலை வேளையிலும் கோவில் திறந்திருந்தது.  அருமையாக பெருமாளை தரிசனம் செய்தோம். 

மறங்கொளாளரியுருவெனவெருவர ஒருவனது அகல்மார்வம்
திறந்து வானவர் மணிமுடிபணிதர இருந்த நலிமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளைமருப்பிடந்திடக் கிடந்தருகெரிவிசும்
பிறங்கு மாமணியருவியொடிழிதரு பிருதிசென்றடை நெஞ்சே!
என்ற திருமங்கையாழ்வாரின் திருப்பிருதி பாசுரம் சேவித்தோம்.

பெருமாளுக்கு எதிரில் பெரிய பிராட்டியார் சேவை சாதிக்கின்றார். தினமும் காலை 7 மணியளவில் நரசிம்மருக்கு அபிஷேகம் நடைபெறும் போது  பெருமாளின் திருக்கரங்களை தரிசனம் செய்யாலாமாம். அதற்காக இரண்டாவது தடவை வாயில் திறப்பதற்காக காத்திருக்க வேண்டும் என்பதால் எங்களுக்கு அந்த பாக்கியம் கிட்டவில்லை.

 ஆதி சங்கரரின் மடம் பூட்டியிருந்ததால் சென்று தரிசனம் செய்ய முடியவில்லை. அருகிலேயே  வாசுதேவர் கோவில் உள்ளது இக்கோவில் வளாகம் பஞ்சாதாயன முறையில் அமைந்துள்ளது. நடுநாயமாக வாசு தேவராக மஹா விஷ்ணுவும்,  நான்கு திசைகளில்  அஷ்டபுஜ கணேசராக விநாயகர், கௌரி சங்கரராக  சிவன், காளியாக  அம்பாள் மற்றும் சூரியன் சன்னதிகள் அமைந்துள்ளன. இவ்வாறு ஐந்து தெய்வங்களையும் வழிபடுவது பஞ்சாயதன முறை ஆகும்.  இக்கோவில் வளாகத்தின் தெய்வ மூர்த்தங்கள் அருமையான கலை நயத்துடன் அமைந்துள்ளன.  மேலும் இக்கோவில் வளாகத்தில் நவதுர்க்கைக்கு தனி சன்னதி உள்ளது. ஷைலபுத்ரி, பிரம்மசாரிணி, சந்தரகாந்தா,  கூஷ்மாண்டா , ஸ்கந்த மாதா ,  காத்யாயனி ,  காலராத்ரி , மஹா கௌரி, சித்திதாத்ரி என்று மலைமகள் அன்னை பார்வதியை வழிபடுவது நவதுர்க்கை வழிபாடு ஆகும்.  அருமையான வெண்கலத்தால் ஆன கருடன் சிலை மஹா விஷ்ணுவின் எதிரில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றார். இவ்வாறு நாங்கள் இரு கோவில்களையும் தரிசனம் செய்து முடிக்கவும், வாயில் திறக்கவும் சமயம் சரியாக இருந்தது. ஓடிச்சென்று பேருந்தில் அமர்ந்து பத்ரிநாத்தை நோக்கிய பயணத்தை தொடங்கினோம். 

 விஷ்ணு  ப்ரயாகை
 
  புனல் மின்நிலையம்
 
 ஜோஷிர்மடத்தை தாண்டியதும் விஷ்ணுபிரயாகையை கண்ணுற்றோம். தவுலி கங்காவும், அலக்நந்தாவும் சங்கமமாகும் இடம் இந்த விஷ்ணுபிரயாகையாகும்.  இங்கு ஒரு பாலத்தை கடந்து அலக்நந்தாவின் மறு கரைக்கு சென்றோம். இங்கு ஒரு தனியார் நிறுவனத்தினரின் அணை மற்றும் நீர்மின் நிலையம் உள்ளது. செல்லும் வழியில் சூரிய உதய நேரத்தில் சூரியன் பனி படர்ந்த சிகரங்களுக்கு தங்க முலாம் பூசிய அழகை கண்டோம்.  வழியில் நந்தா தேவி சிகரத்தை கண்டோம். 

 பாண்டுகேஷ்வர் இராமர் ஆலயம்
 
 ஹனுமன் ஆலயம் 
 பின்னர் கோவிந்த்காட்டை அடைந்தோம். இங்கிருந்துதான் ஹேமகுண்டம், மலர்ப்பள்ளத்தாக்கிற்கு செல்லும் பாதை பிரிந்து செல்கின்றது.  பின்னர் பாண்டுகேஷ்வரை அடைந்தோம். இங்குதான் பாண்டு மஹாராஜா தனது இறுதி காலத்தை  வசித்தாராம். பஞ்ச பத்ரிகளில் ஒன்றான யோகத்யான் பத்ரி இங்குள்ளது. இங்கே யோக தியானத்தில் பத்ரிநாதர் சேவை சாதிக்கின்றார்.  இங்கு மேலிருந்து வரும் வண்டிகளை ஒழுங்கு படுத்துவதற்கு ஒரு வாயில் உள்ளது எனவே எங்கள் வண்டி சுமார் அரை மணி நேரம் நின்றது. அப்போது அங்கிருந்த ஒரு இராமர் ஆலயத்தில்  இராமரையும் அனுமனையும்  தரிசனம் செய்தோம். 

வாயில் திறந்தவுடன்  மேல் நோக்கி பயணத்தை தொடங்கினோம். முதலில் ஹனுமான் சட்டியில் அனுமனை தரிசித்தோம். அனுமன் பத்ரிநாதரை எண்ணி தவம் செய்தார் என்பது ஐதீகம். பீமன் மலர் பறிக்க வந்த போது ஹனுமன் கிழக்குரங்கு வடிவில் அமர்ந்திருந்தாராம், பீமன் தன்  உடல் வலிமையின் மேல் கர்வம் கொண்டு அந்த குரங்கை  தள்ளிப்போக சொல்ல, அதற்கு அந்த குரங்கு முடிந்தால் என் வாலை நகர்த்திப் போட்டுவிட்டு செல் என்று கூற பீமன் எவ்வளவு முயன்றும் வாலை நகர்த்தமுடியாமல் களைத்து நின்ற போது  வாயு புத்திரன் காட்சி தந்து அருள் வழங்கினாராம். எனவே பாண்டவர்கள் பூஜித்த அனுமன் இவர்,. கோவில் அலக்நந்தாவின் கரையில் சிந்தூர வண்ணத்தில் அருமையாக அமைந்துள்ளது.

அடுத்து தேவ்தர்ஷனி இங்கிருந்துதான் பத்ரிவனம் துவங்குகின்றது. பத்ரிநாத்தை நெருங்க நெருங்க நர நாராயண சிகரங்கள் பல் வேறு முகங்களைக் காட்டியது. பத்ரிநாத் பேருந்து நிலயத்தை அடைந்தவுடன் நீலகண்ட சிகரத்தை ஒரு சிறு மணித்துளி நேரம் தரிசனம் செய்தோம். உடனே மேக மூட்டம்  வந்து சிகரத்தை மறைத்துக்கொண்டது.  இமய மலையின் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று இந்த இந்திர நீலபர்வதம்  என்று அம்மையின் ஞானப்பால் உண்ட ஆளுடையபிள்ளையாம் திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற இந்த நீலகண்ட சிகரம்.

  
இந்திர நீல பர்வதம்
  
  நீலகண்ட சிகரம்

அதிகாலை நேரத்தில்தான் இந்த அற்புத சிகரத்தை நாம் முழுமையாக தரிசிக்கமுடியும். இறைவன் இங்கே நீலாம்பிகை உடனுறை நீலாசல நாதராக சேவை சாதிக்கின்றார். இந்திரன் பூஜித்த தலம்.  மேகங்கள் எப்போதும் கவிழ்ந்து  சூழ்ந்திருப்பதால் நீலப்பருப்பதம் கொஞ்சு தமிழில் பாடுகின்றார் ஞானசம்பந்தப்பெருமான். 
என்பொ னென்மணி யென்ன வேத்துவார்
நம்ப னான்மறை பாடு நாவினான்
இன்ப னிந்திரநீலப் பர்ப்பதத்
தன்பன் பாதமே யடைந்து வாழ்மினே
என்று பாடியுள்ளார் ஞானக்குழந்தை சம்பந்தப்பெருமான். 
GMVN சுற்றுலா மாளிகை - பத்ரிநாத் 


  அலக்நந்தா நதிக்கரையில் பத்ரிநாத்

இவ்வாறு பத்ரிநாதரை தரிசனம் செய்வதற்கு முன்  ஒரு வைணவ திவ்ய தேசத்தையும், ஒரு சைவ பாடல் பெற்ற தலத்தினையும் தரிசனம் செய்தோம். எங்கள் பொருட்களயெல்லாம் GMVN சுற்றுலா மையத்தின் ஒரு அறையில் வைத்து விட்டு பத்ரிநாதரை தரிசனம் செய்ய கிளம்பினோம். அந்த தெய்வீக அனுபவத்தை அடுத்த பதிவில் காணலாமா அன்பர்களே?       

Sunday, January 1, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -16

 
 சம்பாவில் ஒரு எலுமிச்சம் காயின் பனித்துளி
(படத்தை பெரிதாக்கி சிலந்தி வலையை பார்க்கவும்)

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை மிகவும் நன்றாக இருக்கிறது. இறைவனை பார்க்க எத்தனை சிரமங்கள்!அவன் அருளால் தான் அவனை வழி பட முடியும் போல.அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்து இருக்கிறேன் என்று உற்சாகப்படுத்திய கோமதி அரசுக்கு மிக்க நன்றி.

 
 வண்டியை பழுதுபார்த்தபின்
  கணேசன், வைத்திலிங்கம்,
வண்டி ஒட்டுநர், சொக்கலிங்கம், வழிகாட்டி

சம்பாவில் மூன்று நாட்களாக அலைந்த களைப்பு தீர நன்றாக தூங்கினோம். வண்டி ஒட்டுனர் வண்டியில் சிறிது பழுது பார்க்கவேண்டும் என்றார் எனவே பழுதுபார்த்துவிட்டு புறப்படும் போது மணி  ஒன்பதாகிவிட்டது. சம்பா ரிஷிகேசத்திலிருந்து 62 கி.மீ தூரத்தில் உள்ளது. இரம்மியமான சீதோஷ்ண நிலையைக்கொண்ட ஊர் இது.  இங்கிருந்து முசோரிக்கு ஒரு பாதை உள்ளது இப்பாதையில் 21 கி.மீ தூரத்தில் இப்பகுதி மக்களின் குல தெய்வமான சூர்காந்தா தேவி கோவில் உள்ளது.  இந்த சுற்றுலா இல்லத்திலும் அருமையான பூந்தோட்டம் இருந்தது வாலாட்டிக் குருவிகள் நிறைய தென்பட்டன. இங்கிருந்து கங்கோத்ரி பனி சிகரங்களை நன்றாக தரிசிக்க முடியுமாம். நாங்கள் இரவில் சென்று அதிகாலையிலேயே கிளம்பி விட்டதால் அந்த அற்புத காட்சி கிட்டவில்லை காலையில் சம்பாவில் பனி அதிகமாக இருந்ததும் ஒரு காரணம்.
 
  ராஜாகேத் இந்தப்பாலத்தை முதலிலேயே 
கடந்திருந்தால் கேதார்நாத் சென்றிருப்போமா??

சம்பாவில் இருந்து புது தெஹ்ரி வந்தடைந்தோம்.  இனி தெஹ்ரி அணையைப்பற்றி சிறிது காணலாமா? ஏனென்றால் பாதை அடைபட்டிருந்ததால் அணையின் மேல் பயணம் செய்தது எங்களுக்கே ஒரு ஆச்சரியமாக இருந்தது. பழைய தெஹ்ரி நகர்  கர்வாலைச் சேர்ந்த சுதர்ஷன் சா மகாராஜாவால் நிர்மாணிக்கப்பட்டது. தேவ பிரயாகை, உத்தரகாசி, ஸ்ரீநகர், தில்வாரா செல்லும் நான்கு பாதைகளும் கூடும் இடம் தெஹ்ரி. பாகீரதி நதியும் பிலன் கங்காநதியும்  சங்கமமாகும் இடத்தில் இப்போது தெஹ்ரி அணை கட்டப்பட்டுள்ளது.   260 அடி உயரத்தில் உலகத்திலேயே உயர்ந்த அணையாக இந்த அணை விளங்கும். இந்த அனையின் மூலமாக சுமார் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க  முடியும். இவ்வளவு உயரமான அணை என்பதால் பழைய தெஹ்ரி நகரம், கர்வால் இராஜ அரண்மணை, கண்டா கர் எனப்படும் மணிக்கூண்டு முதலிய மூழ்கிவிட்டன. முதலில் இந்த அரண்மனையில்தான் புரோகிதர்கள் கூடி பத்ரிநாத் திருக்கோவில் திறக்கும் மற்றும் மூடும் நேரத்தை முடிவு செய்வார்கள். இந்த நகருடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான கிராமங்களும் நீரில் இன்று மூழ்கிவிட்டன. இவ்வணைக்கான பூர்வாங்கப்பணிகள்  1961ல்  போடப்பட்டது, திட்டம் 1972ல் தொடங்கியது. 1976ல் கட்டுமானப்பாணிகள் துவங்கின. 2006ல் அடியேனுடன் பணிபுரியும் டேராடூனில் பணி புரியும் அன்பர்கள் தெஹ்ரி நகரம் முழுகுகின்றது அதை பார்த்துவிட்டு  வருகின்றோம் என்று இங்கு வந்து விட்டுப்போனது நினைவுக்கு   வருகின்றது.  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த அனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் ஆயினும்  தெஹ்ரி அணை வளர்ந்து இன்று நிற்கின்றது. அணை இப்போழுது முழுதுமாக நிறைந்து நிற்கின்றது. மூன்று நாட்களாக பல்வேறு கோணங்களில் இந்த அணையை பார்த்த நாங்கள் இன்று இந்த அணையைக் கடந்தோம்.


 வழியில் ஒரு பள்ளி


 
 இராணுவ வீரர்கள் எங்கள் நண்பர்களானார்கள்

முதலில் தெஹ்ரி அணையை சுற்றிக்கொண்டு செல்லும் பாதையில் சென்றோம் அங்கு பாதை நிலச்சரிவால் பாதை அடைபட்டுக்கிடந்தது.  சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த பிறகு  அன்பு கூர்ந்து அணை அதிகாரிகள் வண்டிகள் அணையின் மேல் செல்ல அனுமதி அளித்தனர். ஆனால் யாரும் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று கூறினார். ஒன்றன் பின் ஒன்றாக மிக மெதுவாக வண்டிகள் செல்ல அனுமதித்தனர்.  நாங்கள் புறப்படும் அவசரத்தில் இரவி சாரை மறந்து விட்டுவிட்டோம், அவர் எப்படியோ முதல் நாள்   நாங்கள்  நட்பு செய்து கொண்ட இராணுவ வாகனத்தில் ஏறி எங்களை வந்தடைந்தார். அணையை கடந்து இராஜாகேத்தை அடைந்தோம்.  நதியின் குறுக்காக இருந்த பாலத்தை வழிகாட்டி  காட்டி நேற்று முன் தினம் நாம் இந்த பாலத்திற்கு  3 கி.மீ தூரத்தில்தான் மாட்டிக்கொண்டோம். அன்று அந்த நிலச்சரிவு இல்லாமல் இருந்திருந்தால் நாம்  கேதார்நாத் தரிசனத்தை முடித்திருக்கலாம் என்று கூறினார். எல்லாம் அவர் செயல் நம் கையில் இருக்கின்றது எப்படியாவது பத்ரிநாதரையாவது தரிசனம் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டோம். அங்கிருந்து  கதோலியா வழியாக  மலேதா என்ற ஊருக்கு அருகில் டெல்லி பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையை அடைந்தோம். நடுவில் நாங்கள் கடந்த பாதை ஒரே சேறும் சகதியுமாக இருந்தது. இரண்டு மூன்று இடங்களில் வண்டி மாட்டிக்கொள்ளும் அபாயமும் இருந்தது. ஆயினும் எப்படியோ வண்டி ஓட்டுநர் சமாளித்து மலேதா கொண்டு வந்து சேர்த்தார். அப்பாடா என்று பெருமூச்சு விட்டோம் அந்த கடவுளுக்கு நன்றி செலுத்தினோம்.
இவ்வழியில் பல வர்ண பட்டாம்பூச்சிகளைக் கண்டோம், பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா, நீ பள பளன்னு போட்ட்டிருப்பது யார் கொடுத்த சொக்கா என்னும் பாடல்தான் நினைனவுக்கு வந்தது.

தெஹ்ரி அணை

(எதிரே உள்ள மலையில் பாதையை  கீழே சென்று கடக்க முடியாததால் பாலத்தின் மூலமாக கடந்தோம்)

 
 கடல் போன்று விளங்கும் தெஹ்ரி அணையின் நீர்.

 
தேசிய நெடுஞ்சாலைதான் (NH-109) என்றாலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளினால் பாதை ஒரு வழிப்பாதையாகத்தான் இருந்தது. அந்த இடங்களில் சிறிது வேகம் குறைந்தது ஆனால் எங்கும் தடைப்படவில்லை. அலக்நந்தா நதியை முதலில் இங்கு தரிசனம் செய்தோம் இனிப்பயணம் இந்த ந்தியின் கரையிலேயே இருந்தது.     முதலில் கர்வாலின் ஸ்ரீநகர் என்னும் ஊரை அடைந்தோம். ஒரு காலத்தில் தெஹ்ரி கர்வாலின் தலைநகராக விளங்கிய நகரம். இந்நகருக்கு ஸ்ரீநகர் என்னும் பெயர் வர ஒரு சுவையான வரலாறு உள்ளது. இங்கு ஸ்ரீயந்திரம் என்னும் ஒரு பெரிய பாறை இருந்தது, அதைப் பார்ப்பவர்கள் கூட துன்பம் அடைந்தார்கள். அதன் மேல் கால் பதித்தவர்கள் மாண்டு போயினர். 8ம் நூற்றாண்டில் ஆதி சங்கர பகவத பாதாள் இங்கு வந்த போது அந்த பாறையைத் தூக்கி அலக்நந்தாவில் தலை கீழாக எறிந்து மக்களுக்கு முக்திஅளித்தார்.  இந்நகரில் கமலேஷ்வர் ஆலயம் உள்ளது. திருமால் ஆயிரம் தாமரை மலர்களாகல் அர்ச்சனை செய்யும் போது ஒரு மலர் குறைந்ததால் தன் கண்ணையே எடுத்து அர்ச்சனை செய்ய அதற்கு மகிழ்ந்த சிவபெருமான் மஹாவிஷ்ணுவிற்கு சுதர்சன சக்கரம் வழங்கிய கோவில் என்பது ஐதீகம். இங்குதான் துணை இராணுவப் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கிருந்த GMVN  அலுவலகத்தில் இது வரை நாங்கள் செலவு செய்த பணத்தைத் திரும்பப்பெற்றுக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். 

 தெஹ்ரி அணையிலிருந்து பாயும் நீர்
பின்னர் நாங்கள் ருத்ரபிரயாகையை அடைந்தோம்.  ப்ரயாகை என்றால் சங்கமம்.  இங்கு கேதார்நாத்திலிருந்து ஓடி வரும் மந்தாங்கினியும், பத்ரிநாத்திலிருந்து ஓடி வரும்  அலக்நந்தாவும் சங்கமம் ஆகின்றன. இங்கிருந்து கேதார்நாத் செல்லும் பாதை பிரிகின்றது. நாங்கள் நேராக பத்ரிநாத் நோக்கி சென்றோம். பஞ்ச பிரயாகை என்னும் ஐந்து சங்கமங்களின் விவரங்களை இன்னொரு பதிவில் காணலாம். நாங்கள் ருத்ரபிரயாகை அதையும் போதே மணி மாலை 4மணியாகி விட்டது, மதிய உணவு ஸ்ரீநகரில் உண்ணலாம் என்று நினைத்தோம் அது முடியவில்லை இங்கும் சாப்பிடாமல் கையில் இருந்த நொறுக்குத் தீனிகளை கொறித்துக்கொண்டே கிளம்பினோம். இதை ஏன் சொல்கின்றேன் என்றால் இது போன்ற பயணத்தின் போது சிறிது, இனிப்பு, காரம், சாக்லெட், பிஸ்கட், ரொட்டி முதலியன கொண்டு செல்வது மிகவும் நல்லது. அதுவும் பெரிய குழுவாக செல்லும் ஆளுக்கு கொஞ்சம் கொஞ்சம் கொண்டி சென்று அனைவரும் கூடி காக்கை போல கூடி உண்டு மகிழலாம். 

 ஸ்ரீநகருக்கு அருகில் அலக்நந்தா நதி
இது ஒரு பொன் மாலைப் பொழுது

 ஒரு அழகிய ரோஜா மொக்கு

கரிய  மலைப்பாம்பு போல வளைந்து நெளிந்து செல்லும் பாதையின் ஒரு பக்கம் அலக்நந்தா துணையாக வர மறுபக்கம் ஓங்கி உயர்ந்த பச்சைக் கம்பளம் போர்த்தியது போல மலைகள் விளங்க    ருத்ரபிரயாகையிலிருந்து பின்னர் கர்ணபிரயாகையை கடந்தோம், பிண்டார் கங்காவும் அலக்நந்தாவும் சங்கமிக்கும் இடம் இது இங்கு வரும் போது அநேகமாக இருட்டிவிட்டது. அடுத்து நந்த பிரயாகையை கடந்தோம். நந்தாதேவி சிகரத்திலிருந்து பாய்ந்துவரும் நந்தாங்கினியும் அலக்நந்தாவும் சங்கமிக்கும் இடம்.  இரவானாலும் எப்படியும் பிபல்கோட் அடைய வேண்டும் என்று வண்டி ஓட்டுநர் வண்டியை ஒட்டிச்சென்றார்.  பின்னர் சமோலி என்னும் ஊரைத் தாண்டி இரவு சுமார் 8 மணியளவில் பீபல்கோட் அடைந்தோம். பசிய மரங்களைக் கொண்ட மலையின் மடியில் பச்சைப் பாய் விரித்தாற் போல  சமவெளி வயல்களின் நடுவில் அமைந்துள்ள அழகான ஊர் இது. இவ்வூரில் இட்லி தோசை கிடைக்கும் என்று கூறினார்கள், உடம்பு சரியில்லாத தேவேந்திரன் மட்டும் வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு வந்தார். காலையில் 4 மணிக்கு புறப்பட்டால் ஜோஷிர்மட்டில் 5:30  மணிக்கு  முதல் கேட் திறக்கும் போது பத்ரிநாத் நோக்கி சென்று விடலாம் என்று வழிகாட்டியல்ல வண்டி ஓட்டுநர் கூறினார். இரவில் வண்டி ஓட்ட அவர் தயாராக இருந்தது குறித்து மகிழ்ச்சியுடன் காலையில் இருந்து பேருந்தில் பயணம் செய்த அலுப்புத்தீர படுக்கச்சென்றோம். தாங்களும் சிறிது ஒய்வெடுத்துக்கொள்ளுங்கள் அன்பர்களே

அன்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு (2012) `நல்வாழ்த்துக்கள்.