ஆனி உத்திர நன்னாளில் ஆடல் காணீரோ.
சித்தமும் ஆடச் சிவசக்தி தான் ஆட
வைத்த சராசரமும் ஆட மறை ஆட
அத்தனும் ஆடினான் ஆனந்த கூத்தன்றே.
அம்பலத்தாடும் என் ஐயனுக்கு ஆனந்த கூத்தனுக்கு வருடத்திலே ஆறு திருமுழுக்குகள். அவை தேவர்கள் அண்டர் நாயகனுக்கு செய்யும் பூஜை என்பது ஐதீகம். அவற்றில் மூன்று நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டவை அவையாவன உதய கால பூஜை மார்கழித் திருவாதிரை, பிரதோஷ கால பூஜை ஆனி உத்திரம், மற்றும் உச்சிக்கால பூஜை சித்திரைத் திருவோணம் ஆகும். திதிகளை அடிப்படையாக கொண்டவை மற்ற மூன்று பூஜைகளான மாசி, ஆவணி மற்றும் புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி திருமுழுக்குகள் ஆகும். இவற்றுள் மார்கழித் திருவாதிரையும், ஆனி உத்திரமும் பத்து நாள் விழாவாக சிறப்பாக தில்லையிலே ஐயன் ஆனந்த தாண்டவ மூர்த்தியாக, பஞ்ச கிருத்திய பாராயணனாக ஆடிடும் தில்லை பொன்னம்பலத்திலே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. தினமும் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தரிசனம் தந்து அருள் பாலிக்கின்றனர். ஒன்பதாம் நாள் எளி வந்த கருணையினால் ஆனந்த நடராசரும், சிவகாமியம்மையுமே பொன்னம்பலத்தை விடுத்து வெளியே வந்து திருத்தேரோட்டம் கண்டு பின் பத்தாம் நாள் காலை அருணோதய காலத்தில் மஹா அபிஷேகம் கண்டருளி சித்சபைக்கு திரும்புகின்றனர். இந்த வருடம் ஆனி திருமஞ்சனம் 09/07/08 அன்று. ஆகவே அடுத்த பத்து நாட்களில் ஐயன் ஆடும் பஞ்ச சபைகளையும் வலம் வந்து மை கலந்த கண்ணி பங்கன் அருள் பெறுவோம் வாருங்கள்.

தென்னாடுடைய சிவனுக்கு, எந்நாட்டவர்க்கும் இறைவனுக்கு, திருக்கயிலை நாதனுக்கு முகங்கள் ஐந்து, அவர் புரியும் தொழில்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று ஐந்து. அவருடைய திருமந்திரமும் ஓம் நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து. அவர் ஆடும் ஐந்து அவையாவன
1.பொன்னம்பலம் - கனக சபை - தில்லை சிதம்பரம் - ஆனந்த தாண்டவம்- ஐயன் ஐந்தொழில் புரிவதைக் குறிக்கும்- மூவுலகையும் சிருஷ்டித்த போது ஆடிய தாண்டவம்.
2. வெள்ளியம்பலம் - ரதஜ சபை - மதுரை- சந்தியா தாண்டவம் - காத்தல் தொழிலை குறிக்கும் - பலவித தாளம் இசை வாத்தியங்களை உருவாக்க மாலையில் ஆடிய ஆட்டம்.
3.செப்பம்பலம் - தாமிர சபை - திருநெல்வேலி - முனி தாண்டவம் - படைத்தல் தொழிலைக் குறிக்கும் - பதஞ்சலி முனிவர் தாளம் இசைக்க ஆடிய ஆட்டம்.
4.சித்ரம்பலம் -சித்திர சபை - திருக்குற்றாலம் - திரிபுர தாண்டவம் - மறைத்தல் தொழிலைக் குறிக்கின்றது - திரிபுரம் எரித்த போது பூமியையும் ஆகாயத்தையும் அடக்கிய போது ஆடிய ஆட்டம்.
5.மணியம்பலம் - இரத்தின சபை - திருவாலங்காடு - ஊர்த்துவ தாண்டவம் - அருளல் தொழிலைக் குறிக்கின்றது - காளியின் செருக்கை அடக்க காலை தலைக்கு மேலே தூக்கி ஆடியது.
இவற்றுள் பொன்னம்பத்தைப்பற்றி முதலிலேயே கண்டுள்ளதால் மற்ற நான்கு அம்பலங்களைப்பற்றி இந்த ஆனி உத்திர சமயத்தில் காணலாம். ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனித் திருமஞ்சன தரிசனம் இரண்டுக்கும் உள்ள சிறு வித்தியாசம். ஆருத்ரா தரிசனம் மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில் வரும் என்பதால் மாணிக்க வாசகரின் திருவெம்பாவை நாள் தோறும் அம்பலவாணர் திருமுன்பு இசைக்கப்படுகின்றது. மேலும் தரிசனம் தந்து கனக சபைக்கு எழுந்தருளும் போது ஐயன் ஆனந்த தாண்டவக் காட்சி தந்தருளுகின்றார். ஆனி திருமஞ்சன திருவிழாவின் போது மாணிக்க வாசகரின் குரு பூஜை நாளான ஆனி மாமகம் வருகின்றது. அன்றுதான் ஆண்டவன் தன் கரம் வருந்த மணிவாசகரின் திருவாசகத்தை தானே சுவாமிகள் கூற ஓலைச் சுவடியில் எழுதி "மாணிக்க வாசகர் சொல்ல அழகிய திருச்சிற்றம்ப்லமுடையார் எழுதியது" என்று கைசாத்திட்டுப் சிற்சபையின் பஞ்சாக்கரப் படியில் ஒருவருங்காணாதவாறு வைத்தனன்.
நாம் எல்லோரும் உய்ய அகிலமனைத்தும் தனது இயக்கத்தால் ஆட்டி வைக்கும் ஐயன் ஆடும் அழகை நேரில் கண்டு களிக்கும் பேறு பெற்ற காரைக்காலம்மையார் இவ்வாறு பாடுகின்றார்.
அடிபேரில் பாதாளம் பேரும் அடியார்
முடி பேரில் மா முகடு பேரும் தொடிகள்
மறிந்தாடும் கைபேரில் வான் திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆறு என் அரங்கு.
ஐயா தங்களது ஒரு அடி மாறினால் பாதாளம் மாறும், மற்றோரு அடி மாறினால் மலை முகடுகள் இடம்மாறும், திருகரங்கள் மாறினால் திசைகள் அனைத்தும் இடம் பெயரும், ஆயினுன் அளவில்லாத கருணையினால் தாங்கள் அம்பத்துல் ஆனந்தமாக ஆடி அனைத்தையும் சீராக வைத்திருக்கும் மாபெரும்கருணைதான் என்னே? என்று வியக்கிறார் இன்றும் தாளம் இசைத்துக்கொண்டு திருவாலங்காட்டில் ஐயன் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் அம்மையார்.
திருஅருட்பா பாடிய வள்ளலார் சுவாமிகள் ஆடையிலே அவரை மணந்த மணவாளராக அம்பலத்தரசை பொது நடத்தரசை போற்றி பாடிய பாடல்.
கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல் கனிந்த கனியே
ஓடையிலே ஊருகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே
உகந்த தண்ணீரிடை மலர்ந்த சுகந்த மண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே
மென்காற்றில் விளை சுகமே சுகத்திலுறும் பயனே
ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கணிந்தருளே.
கோடைக்காலத்தில் குளிர் நிழல் வழங்கும் வள்ளல், உண்ணத் தெவிட்டாத கனி, தீஞ்சுவைத் தண்ணீர், மணம் வீசும் மலர், மலரிலிருந்து வீசும் தென்றல் அந்த அம்பல வாணர்.

ஆனி திருமஞ்சன பெருவிழா: சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ ஆன்ந்த நடராஜ சுவாமி ஆனித்திருமஞ்சன மஹோற்சவம் இன்று நலமலி தில்லையில் இன்று தொடங்குகின்றது. விக்னேஸ்வர பூஜை, ஐயனிடம் அனுமதி பெறுதல், மண் சேகரித்தல், முளைப்பாலிகை இடுதல் ஆகிய வைபவங்கள் முடிந்து இன்று காலை கொடியேற்றம், உமாபதி சிவம் தில்லை நடராசர் அருளால் பாடி கொடி உயர்ந்த கொடிக்கவி பாடி கொடியேற்றி விழா தொடக்கம். இரவு பஞ்ச மூர்த்திகள் பவனி. விநாயகர் மூஷிகம், சோமாஸ்கந்தர் வெள்ளி மஞ்சம், சிவானந்த வல்லி, அன்னம், முருகர் மயில் , சண்டிகேஸ்வரர்-ரிஷப வாகன சேவை. இரண்டாம் நாள் இரவு சோமாஸ்கந்தர் வெள்ளி சந்திரப் பிறை சேவை.
இந்த புண்ணிய ஆனித்திருமஞ்சன நாட்களில், இனி வரும் பதிவுகளில் பஞ்ச சபைகளின் தரிசனம் பெறுவோம்.