Showing posts with label thiruvalangadu. Show all posts
Showing posts with label thiruvalangadu. Show all posts

Saturday, July 5, 2008

பஞ்ச சபைகள் - மணியம்பலம் - திருவாலங்காடு



அம்பலத்தாடும் எம் ஐயன் ஆடல் காணீரோ
ஆனி உத்திர நன்னாளில் ஆடல் காணீரோ.







இரத்தின சபை







தோலுந் துகிலும்
குழையும் சுருள் தோடும்






பால் வெள்ளை நீறும்
பசுஞ் சாந்தும் பைங்கிளியும்






சூலமும் தொக்க
வளையுடைத் தொன்மைக்






கோலமே நோக்கிக்
குளிந் தூதாய் கோத்தும்பி.


என்றுபடி ஒரு காதில் தோடும் மறு காதில் குழையும் அணிந்து ஆணோ, பெண்ணோ, அரிவையோ என்று யாரும் உணரா மாதொருபாகத்தன், மஞ்சாடும் மங்கை மணாளன், வேயுறு தோளி பங்கன், ஆனந்த கூத்தாடும் பஞ்ச சபைகளுள் ஐந்தாவது சபை ஐயன் ஊர்த்துவத் தாண்டவம் ஆடும் திருவாலங்காடு.



திருவாலங்காடு இராஜ கோபுரம்


ஒரு காலத்தில் அடர்ந்த ஆலங்காடாக இருந்த இத்தலத்தில் கார்கோடகன் மற்றும் முஞ்சிகேசர் என்ற இரு முனிவர்கள் ஐயனின் ஆனந்தத் தாண்டவத்தைக் காண வேண்டி கடுமையான தவம் செய்து வந்தனர். இவர்கள் தில்லையில் ஐயனின் ஆனந்த தாண்டவம் கண்ட பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாதர் என்பாரும் உண்டு. இவ்வாறு அவர்களும் மற்ற பல ரிஷிகளும் தவம் செய்து கொண்டிருந்த போது அக்காட்டில் இருந்த அசுரர்கள் அவர்களுக்கு பெரும் துன்பம் தந்து கொண்டிருந்தனர். அசுரர்களை அழிக்கவும் அதே சமயம் முனிவர்களுக்கு அருளவும் திருவுள்ளம் கொண்ட ஐயன் அம்மையின் அம்சமான காளியை எட்டுக் கரங்களுடன் திருக்கயிலாயத்திலிருந்து ஆலங்காட்டிற்க்கு அனுப்பினார். காளியும் வந்து அசுரர்களுடன் போர் புரிந்த போது ஒரு அசுரனின் இரத்த துளியிலிருந்து மேலும் அசுரர்கள் தோன்றிக்கொண்டிருந்தனர். அவனை அழிக்க காளி கபாலத்தில் அரக்கனின் அசுரனுடைய இரத்தம் பூமியில் விழாதவாறு பிடித்து அப்படியே குடித்து விட்டாள். அசுரர்கள் அனைவரும் அழிந்தனர், ஆனால் அசுர இரத்தத்தால் அம்மைக்கு ஆங்காரம் அதிகமாகியது, காக்க வந்த அன்னையே தாக்கத் தொடங்கினாள் ஆலங்காட்டில் உள்ளவர்களை. எனவே முனிவர்கள் அனைவரும் ஐயனிடம் சரணடைந்து தங்களைக் காக்க வேண்டினர். அனைவரையும் காக்க ஐயன் தன் வீரக்கழலணிந்த திருப்பாதம் பூமியில் பட சுந்தரராக இறங்கி வந்தார்.

ஐயனைக் கண்ட காளி ஐயனுடன் போருக்கு வந்தாள். இது தன்னுடைய இடம் எங்கிருந்தோ வந்த நீ சென்று விடு என்றாள் காளி, இல்லை இது என்னுடைய இடம் என்றார் ஐயன். இறுதியில் இருவருக்கும் ஒரு போட்டி வைப்பது அதில் வென்றவரே தலைவர் என்று முடிவானது. நடனப் போட்டி நடத்த முடிவு செய்யபட்டது. மிக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டது. முனிவர்கள் அனைவரும் கூடி நின்றனர் அற்புத நடனப்போட்டியைக் காண, தேவர்கள் அனைவரும் வானத்தில் குழுமினர். நடனப் போட்டி ஆரம்பமானது. முதலில் மெல்ல தொடங்கியது, ஐயனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே பிரதிபலித்தாள் காளி ஆக்ரோஷமாக. மெல்ல மெல்ல சூடு பிடித்தது ஆட்டம். அனைவரும் தம்மை மறந்து பார்க்க ஆரம்பித்தனர் போட்டியை. "சபாஷ் சரியான போட்டி" என்று சிலாகித்தன்ர். மெள்ள மெள்ள வேகம் கூடியது பார்ப்பவர்கள் இதயமும் வேகம் கூடியது. உச்சத்தை நோக்கி நடன் வேகம் சென்ற நேரத்தில் ஐயன் தன் இடது காதில் இருந்த குண்டலததை விழ வைத்தார், குண்டலம் நிலத்தைத் தொடுவதற்கு முன் சர்ரென்று ஐயனின் கால் கீழே இறங்கியது அடுத்த க்ஷணமே மேலே உயர்ந்து ஐயனின் காதை அடைந்தது. அப்படியே அண்டத்தை அளப்பது போல ஐயனின் திருப்பாதங்கள் செங்குத்தாக ஊர்த்தவ தாண்டவ கோலத்தில் நின்றது. அந்தக்கணமே அனைத்து அண்டங்களும் அசையாமல் நின்றன, ஐயனின் திருப்பாதத்தை உற்று நோக்கிய காளி தான் தோற்றதை உணர்ந்தாள். அவ்ரைப் போல காலை தூக்க முடியாமையால் அப்படியே நின்றாள். நக்கீரர் ஐயன் அவ்வாறு ஊர்த்துவத்தாண்டவ்ராய் நின்று வென்ற அழகை இப்படிப் பாடுகின்றார்.

தாளொன்றால் பாதாளம் ஊடுருவி நீள் விசும்பில்


தாளொன்றால் அண்டம் கடந்துருவி தோள் ஒன்றால்

திக்கனைத்தும் பேரும் திறன் காளி காளத்தி

நக்கனைத்தான் கண்ட நடம்

அம்மையை கோபம் தணிந்து அங்கேயே வட பத்ர காளியாய் கோவில் கொள்ள பணித்தார் ஐயன் தானும் ஆலங்காட்டப்பராயாய், ஊர்த்துவதாண்டவேஸ்வரராய் மணியம்பலத்தில் திருக்கோவில் கொண்டார். இன்றும் ஊர்த்துவ தாண்டவராய் நம்க்கு அருட் காட்சி தருகின்றார். கார்கோடகருக்கும், முஞ்சிகேஸ்வரருக்கும் அருளிய மாப்பெருங் கருணைக் கடல்.



ஊர்த்துவ தாண்டவேஸ்வரர்

காரைக்காலம்மையார் இன்றும் ஐயனின் திருவடி நிழலில் அமர்ந்து தாளம் இசைத்துக் கொண்டிருக்க அதற்கு மகிழ்ந்து ஐயன் ஆடிக்கொண்டிருக்கும் தலம் இந்த வடவாரண்யேஸ்வரம். அவருடைய கணவர் தன்னை தெய்வமென கால்களில் வீழ்ந்து வணங்கியவுடன் ஊனுடைவனப்பை எல்லாம் உதறி ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப் பாங்குற வேண்டும் என்று பரன் தாள் பரவி நின்றார். அந்நிலையில் அவருக்கு உலக பந்த பாசங்கள் அனைத்தும் நீங்கி உணர்வெல்லாம் சிவமேயாகும் ஒப்புயர்வற்ற ஞானம் உதித்ததுஅந்த அற்புத ஆனந்த ஞான நிலையிலேயே அம்மையார் அற்புதத்திருவந்தாதி பாடியருளினார்.பொற்பதம் போற்றும் நற்கணங்களுள் நாமும் ஒன்று ஆனேன் என்று மகிழ்ச்சி கொண்டார். வானவர் பூமாரி பொழிந்தனர். சிவகணங்கள் ஆனந்த பெருங்கூத்து ஆடின. வானவரெல்லாம் மகிழ்ந்து பாரட்டும் போது, அம்மையார் முன்னே நின்றிருந்த மானுடமாகிய சுற்றத்தார் எல்லாம் அஞ்சி அகன்றனர். பேய் உரு ஏற்று திருக்கைலாயம் ஏகினார்.



திருக்கைலாய மலையிலே தன் கால்கள் படக்க்கூடாது என்று தலையாலே நடந்து செல்லும் போது




இவரை பார்த்த உமையம்மை, " இறைவா வருவது யார்" ? என்று வினவ,




எம் ஐயனும் "வருமிவள் நம்மைப் பேணும் அம்மை காண்" என்று கூறினார்.





மேலும் "அம்மையே வருக" என்று அழைத்து,





வேண்டும் வரம் யாது ? என வினவ,


இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்.


பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல் உன்னை
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி


"அறவா நீ ஆடும் போதுன் அடியின் கீழ் இருக்க"





என்று எப்போதும் தங்களின் பாத மலரடிகளிலேயே அமர்ந்து தங்களின் பெருமையை பாடிக்கொண்டிருக்க வேண்டும் என்ற வரம் கேட்க, ஐயனும் அவ்வாறே ஆகட்டும், "திருவாலங்காட்டிலே எம் திருவடிக்கீழ் வந்து சேர்க" என்று பணிக்க இன்றும் அம்மையார் இறைவனின் திருவடி நிழலில் அங்கு வாழுகின்றார்.








இம்மையிலே புவியுள்ளோர் யாரும் காண

ஏழுலுகும் போற்றிசைப்ப எம்மை ஆளும்

அம்மைத் திருத் தலையாலே நடந்து போற்றும்

அம்மையப்பர் திருவாலங்காடாம் - திருஞான சம்பந்தர்


காரைக்காலம்மையார் திருக்கயிலாய மலையிலிருந்து மயான பூமியான திருவாலங்காட்டில் வந்து கால் பதித்த போது அவர் கால் பட்ட இடத்தில் சிவ லிங்கம் தோன்றியதாம், எனவே அம்மை தலையால் நடந்த தலம் இது என்பதால் திருஞான சம்பந்த பெருமான் இத்தலத்தில் கால் பதிக்காமல் இத்தலத்தை விடுத்து பழையனூர் சென்று தங்குகிறார். இறைவன் அவரது கனவில் சென்று எம்மை மறந்தனையோ? என்று வினவ , ஆளுடையப்பிள்ளையும் ஆலங்காட்டப்பர் மேல் பதிகம் பாடியுள்ளார்.

பழனை என்னும் பழையனூர் என்னும் தலம் திருவாலங்காட்டிற்க்கு கிழக்கே 1 கி.மீ தூரத்தில் உள்ளது. பழையனூர் நீலியின் சாகசத்தால் கணவனை இழந்த செட்டிப்பெண்ணுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு இணங்க வேளாளர்கள் 70 பேர் தீப்பாய்ந்து தங்கள் வாக்கை மெய்ப்பித்தனர், அவர் வம்சா வழியினர் இன்றும் ஆலங்காட்டப்பரை வழிபட்டு வருகின்றனர். சோழர் காலத்திய திருவாலங்காட்டு செப்பேடுகள் மிகவும் பிரசித்தம் இவ்வாறு பண்டைத் தொன்மையுடன் வரலாற்று பொக்கிஷமாகவும் விளங்குகின்றது இரத்தின சபை அமைந்துள்ள திருவாலங்காட்டு திருத்தலம். செப்பேடுகளில் ஐயன் "அரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

இனி வடவாரண்யேஸ்வரம் என்றும் போற்றப்படும் இத்தலத்தை வலம் வருவோம். நம்மை முதலில் வரவேற்பது மூன்றாவது சுற்றின் நெடிதுயர்ந்த மதில்களும் ஐந்து நிலை இராஜ கோபுரமும் . இத்தலத்தில் காளிக்குத் தான் முதல் மரியாதை, தன்னை வணங்க வருபவர்கள் முதலில் காளியம்மனை தரிசனம் செய்த பின்னரே தனனை தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐயன் வாக்கு என்பதால் திருக்கோவிலை வலம் வந்து காளியம்மன் சன்னதி அடைவோம். வட பத்ர காளியம்மன் சன்னதி, முக்தி தீர்த்தம் என்னும் குளக்கரையின் கரையில் அமைந்துள்ளது. திருவாரூர் கமலாலயதிற்க்கு அடுத்த இரண்டாவது பெரிய திருக்குளம் இது. அன்னையின் சன்னதிக்கு செல்லும் கோபுரத்தில் ஐயன் ஊர்த்துவத்தாண்டராய் காளியை தோற்க்கடித்த சுதை சிற்பம் எழிலாக விளங்குகின்றது. ஒரு சுற்று சன்னதி வடக்கு நோக்கி ஆக்ரோஷத்துடனும், அதே சமயம் அன்பர்களுக்கு அருள் புரியும் திறத்திலும் ஐயனின் உயர்த்திய காலை பார்க்கும் வகையில் நாட்டிய கோலத்தில் மேல் நோக்கி அருள் பாலிக்கின்றாள் அன்னை.



முக்தி தீர்த்தம்


அன்னைக்கு எதிரே சிம்ம வாஹனம் மற்றும் திரிசூல மேடை. அன்னையை தரிசித்து விட்டு மணியமபலத்திற்குள் நுழையும் போது இராஜ கோபுரத்தின் இடப்புறம் வல்லப கணபதி, வலப்புறம் ஸ்ரீ சண்முகர் மூன்று நிலை இரண்டாவது இராஜ கோபுரத்தைக் காணலாம். இருபுறமும் காரக்காலம்மையார் சரிதத்தை விளக்கும் சுதை சிற்பமும், மீனாக்ஷி அம்மன் திருக்கல்யாணக்கோல சுதை சிற்பமும் நம்மை மகிழ்விக்கின்றன. இரண்டாவது சுற்றில் வண்டார் குழலி அம்மன் திருச்சன்னதி அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நின்ற கோலத்தில் அருட்கோலம் காட்டுகின்றாள் அன்னை தயாபரி, பிரம்மராளகாம்பாள் என்றும் போற்றப்படும் அன்னை பார்வதி.

மூன்றாவது சுற்றுக்கு உள் செல்லும் வாயிலில் ஐந்து சபைகளில் ஐயனின் திருநடனக் காட்சி சுதை சிற்பம். இந்த பஞ்சசபை பதிவுகளில் தாங்கள் காணும் படம்தான் இந்த சுதை சிற்பம். திருக்கோவிலின் உள்ளே நுழைந்தால் தெற்கு நோக்கி இடது காலை அண்டமுற தூக்கிய நிலையில் எட்டுக் கரங்களுடன் அருட்காட்சி தருகின்றார் ஊர்த்துவதாண்டவேஸ்வரர் இரத்தின சபையில். அபயகரம், உடுக்கை, திரிசூலம்,மான், அக்னி, நாக பாசம், அருள் கரம், நாட்டிய முத்திரை என்று தரிச்னம் தரும் ஐயனை கண்டவுடன் உள்ளம் சிலிர்க்கின்றது, கண்ணில் ஆனந்தக் கண்ணீர் எத்தனை கோடி யுக தவமோ ஐயா உனது தரிசனம் பெற என்று மனது நிறைவடைகின்றது. திருவாலங்காட்டில் சிவகாம சுந்தரிக்கு சமிசீனாம்பிகை என்று திருநாமம். சீனம் என்றால் ஆச்சரியம். ஐயனின் ஆட்டத்திற்கு இனையாக காளி ஆட இப்படியும் ஒரு பெண்ணால் ஆட முடியுமா என்று மலைத்தாளாம் மனை அன்னை பார்வதி. அப்போது இடது கை நடு விரலை மடக்கி கன்னத்தில் கை வைக்கப்போகும் ஆச்சாரியமான முக அமைப்புடன் உள்ளதால் அம்பாளுக்கு இத்திருநாமம்.
சபையில் பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகத லிங்கமும், திருமுறைக்கோவிலும் உள்ளன. ஐயனின் திருவடி நீழலில் தாளம் இசைத்த வண்ணம் பேயுருவில் காரைக்காலம்மையார். அந்த அற்புத பக்தரின் மனத்தினமைதான் என்னே? அவர் சரிதத்தை படிக்க சுட்டியை அழுத்துங்கள்.
திருவாலங்காட்டில் பெருமாள் கோவில்கள் போல தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகின்றது. சுவாமி ஊர்த்துவத்தாப்டியம் ஆடிய போது அவரது உக்கிரம் தாங்க முடியாமல் தேவர்கள் மயக்க நிலைக்கு சென்றார்களாம். அப்போது பரம கருணாமூர்த்தியான தியகராஜர் தமது ஜடாமுடியிலிருந்து கங்கையை தெளித்து அவர்களை எழுப்பியதால் இவ்வாறு இன்றும் தீர்த்தம் வழங்கப்படுகின்றதாம்.
வீடு நமக்குத் திருவாலங்
காடு விமலர் தந்த

ஓடு நமக்குண்டு வற்றாத
பாத்திரம் ஓங்குசெல்வம்

நாடு நமக்குண்டு கேட்டதெல்லாம்
தர நன்னெஞ்சமே

ஈடு நமக்கு சொலவோ
ஒருவரும் இங்கில்லையே




என்று ஐயனை துதித்து எதிரே நோக்கினாள். காளியம்மன் உற்சவ மூர்த்தியாய் எழுந்தருளியுள்ளாள். அம்மையின் கண்களில் தெரிவது ஆச்சரியமா? கோபமா? வெட்கமா? அத்தனையும் கலந்த ஒரு கலவை. ஐயனின் திருப்பாதத்தை ஊர்த்துவ தாண்டவத்தை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு தரிசனம் தருகின்றாள் அன்னை.

காளி அம்மன்


கூடினார் உமை தன்னோடே குறிப்புடை வேடம்கொண்டு


சூடினார் கங்கையாளை சுவரிடு சடையர் போலும்

பாடினார் சாமவேதம் பைம்பொழிற் பழனை மேயார்


ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே



ன்னும் அப்ப்ர் பெருமானின் பதிகம் நெஞ்சில் ஓடுகின்றது. அம்மையை வணங்கி விட்டு உள்ளே சென்று உள் சுற்றை வலம் வந்து பஞ்ச பூத லிங்கங்களை வணங்கி அர்த்த மண்டபத்தில் நுழைந்தால் உள்ளே ஆனந்த நடராஜரின் இன்னொரு சபை, இடது பதம் தூக்கிய ஆனந்த தாண்டவத்தில் அம்மை சிவானந்த வல்லியுடன் காட்சி தருகின்றார். கருவறையில் பெரிய லிங்கத் திருமேனியாக அருள் பாலிக்கின்றார் ஆலங்காட்டப்பர். தேவர் சிங்கப்பெருமான், வடவாரண்யேஸ்வரர் என்று ஆயிரம் திருநாமம் ஐயனுக்கு. ஐப்பசி முழுநிலவன்று ஐயனை தரிசனம் செய்ய எல்லா இன்பங்களும் அருளுவார் என்பது ஐதீகம். வெளி சுற்றில் தலமரம் ஆலமரம் வடக்கு பக்கத்தில் உள்ளது நாகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. அங்கிருந்து ஐயனின் அம்பல செப்புக்கூரையையும் ஐந்து கலசங்களையும் தரிசனம் செய்யலாம்.

தில்லை ஆனி உத்திரப்பெருவிழா: விழாவின் ஒன்பதாம் நாள் ஆனந்த நடராஜரும், சிவகாமி அம்மையும் எளி வந்த கருணையினால் தாங்களாகவே சித் சபையை விடுத்து வெளியே வந்து திருத்தேருக்கு எழுந்தருளுகின்றனர்.

அத்தனை முப்பத்து முக்கோடி
தேவர்க்கதிபதியை

நித்தனை அம்மை சிவகாம
சுந்தரி நேசனைஎம்

கத்தனை பொன்னம்பலத்தாடும்
ஐயனைக் காணக் கண்கள்

எத்தனை கோடி யுகமோ
தவம்செய் திருக்கின்றவே

என்ற படி அம்பலத்தாடும் ஐயனை தேரில் கண்டு தரிசனம் பெறுவோர் பேறு பெற்றோர் என்பதில் ஐயம் இல்லை. மாலை வரை திருத்தேரில் தரிசனம் தந்த பக்தி வலையில் படும் அம்மையப்ப்ர் மாலை திருத்தேரிலிருந்து இராஜ சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்திற்கு ஆனந்த தாண்டவத்துடன் எழுந்தருளுகின்றனர் . அங்கு அண்டர் கோனுக்கு ஏக தின லக்ஷார்ச்சனை நடைபெறுகின்றது.


இது வரை பஞ்ச சபைகளின் தரிசனம் கண்ட அன்பர்களுக்கு நன்றி நாளை ஆனித்திருமஞ்சனம் ஐயனின் அருள் தரிசனம் பெற வாருங்கள்.

Saturday, June 28, 2008

ஆடல் காணீரோ

அம்பலத்தாடும் எம் ஐயன் ஆடல் காணீரோ
ஆனி உத்திர நன்னாளில் ஆடல் காணீரோ.





தத்துவம் ஆடச் சதாசிவந் தான் ஆட


சித்தமும் ஆடச் சிவசக்தி தான் ஆட


வைத்த சராசரமும் ஆட மறை ஆட


அத்தனும் ஆடினான் ஆனந்த கூத்தன்றே.

அம்பலத்தாடும் என் ஐயனுக்கு ஆனந்த கூத்தனுக்கு வருடத்திலே ஆறு திருமுழுக்குகள். அவை தேவர்கள் அண்டர் நாயகனுக்கு செய்யும் பூஜை என்பது ஐதீகம். அவற்றில் மூன்று நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டவை அவையாவன உதய கால பூஜை மார்கழித் திருவாதிரை, பிரதோஷ கால பூஜை ஆனி உத்திரம், மற்றும் உச்சிக்கால பூஜை சித்திரைத் திருவோணம் ஆகும். திதிகளை அடிப்படையாக கொண்டவை மற்ற மூன்று பூஜைகளான மாசி, ஆவணி மற்றும் புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி திருமுழுக்குகள் ஆகும். இவற்றுள் மார்கழித் திருவாதிரையும், ஆனி உத்திரமும் பத்து நாள் விழாவாக சிறப்பாக தில்லையிலே ஐயன் ஆனந்த தாண்டவ மூர்த்தியாக, பஞ்ச கிருத்திய பாராயணனாக ஆடிடும் தில்லை பொன்னம்பலத்திலே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. தினமும் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தரிசனம் தந்து அருள் பாலிக்கின்றனர். ஒன்பதாம் நாள் எளி வந்த கருணையினால் ஆனந்த நடராசரும், சிவகாமியம்மையுமே பொன்னம்பலத்தை விடுத்து வெளியே வந்து திருத்தேரோட்டம் கண்டு பின் பத்தாம் நாள் காலை அருணோதய காலத்தில் மஹா அபிஷேகம் கண்டருளி சித்சபைக்கு திரும்புகின்றனர். இந்த வருடம் ஆனி திருமஞ்சனம் 09/07/08 அன்று. ஆகவே அடுத்த பத்து நாட்களில் ஐயன் ஆடும் பஞ்ச சபைகளையும் வலம் வந்து மை கலந்த கண்ணி பங்கன் அருள் பெறுவோம் வாருங்கள்.





தென்னாடுடைய சிவனுக்கு, எந்நாட்டவர்க்கும் இறைவனுக்கு, திருக்கயிலை நாதனுக்கு முகங்கள் ஐந்து, அவர் புரியும் தொழில்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று ஐந்து. அவருடைய திருமந்திரமும் ஓம் நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து. அவர் ஆடும் ஐந்து அவையாவன



1.பொன்னம்பலம் - கனக சபை - தில்லை சிதம்பரம் - ஆனந்த தாண்டவம்- ஐயன் ஐந்தொழில் புரிவதைக் குறிக்கும்- மூவுலகையும் சிருஷ்டித்த போது ஆடிய தாண்டவம்.

2. வெள்ளியம்பலம் - ரதஜ சபை - மதுரை- சந்தியா தாண்டவம் - காத்தல் தொழிலை குறிக்கும் - பலவித தாளம் இசை வாத்தியங்களை உருவாக்க மாலையில் ஆடிய ஆட்டம்.

3.செப்பம்பலம் - தாமிர சபை - திருநெல்வேலி - முனி தாண்டவம் - படைத்தல் தொழிலைக் குறிக்கும் - பதஞ்சலி முனிவர் தாளம் இசைக்க ஆடிய ஆட்டம்.

4.சித்ரம்பலம் -சித்திர சபை - திருக்குற்றாலம் - திரிபுர தாண்டவம் - மறைத்தல் தொழிலைக் குறிக்கின்றது - திரிபுரம் எரித்த போது பூமியையும் ஆகாயத்தையும் அடக்கிய போது ஆடிய ஆட்டம்.

5.மணியம்பலம் - இரத்தின சபை - திருவாலங்காடு - ஊர்த்துவ தாண்டவம் - அருளல் தொழிலைக் குறிக்கின்றது - காளியின் செருக்கை அடக்க காலை தலைக்கு மேலே தூக்கி ஆடியது.

இவற்றுள் பொன்னம்பத்தைப்பற்றி முதலிலேயே கண்டுள்ளதால் மற்ற நான்கு அம்பலங்களைப்பற்றி இந்த ஆனி உத்திர சமயத்தில் காணலாம். ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனித் திருமஞ்சன தரிசனம் இரண்டுக்கும் உள்ள சிறு வித்தியாசம். ஆருத்ரா தரிசனம் மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில் வரும் என்பதால் மாணிக்க வாசகரின் திருவெம்பாவை நாள் தோறும் அம்பலவாணர் திருமுன்பு இசைக்கப்படுகின்றது. மேலும் தரிசனம் தந்து கனக சபைக்கு எழுந்தருளும் போது ஐயன் ஆனந்த தாண்டவக் காட்சி தந்தருளுகின்றார். ஆனி திருமஞ்சன திருவிழாவின் போது மாணிக்க வாசகரின் குரு பூஜை நாளான ஆனி மாமகம் வருகின்றது. அன்றுதான் ஆண்டவன் தன் கரம் வருந்த மணிவாசகரின் திருவாசகத்தை தானே சுவாமிகள் கூற ஓலைச் சுவடியில் எழுதி "மாணிக்க வாசகர் சொல்ல அழகிய திருச்சிற்றம்ப்லமுடையார் எழுதியது" என்று கைசாத்திட்டுப் சிற்சபையின் பஞ்சாக்கரப் படியில் ஒருவருங்காணாதவாறு வைத்தனன்.


தில்லை வாழ் அந்தணர் இவ்வேட்டை மணிவாசகரிடம் காட்டி , இப்பாடல்களின் பொருளைத் தெரிவிக்க வேண்டுமென்று வேண்ட அவ்ரும் அவ்ர்களை அழைத்து சென்று தில்லைத் திருக்கூத்தனைக் சுட்டிக் காட்டி இவனே பொருல்ளெனக் காட்டி அவன் திருவடியில் இரண்டறக் கலந்தார். எனவே அன்றைய தினத்தில் ஐயனுடன் மாணிக்க வாசகரும் திருவலம் வருகின்றார்.




நாம் எல்லோரும் உய்ய அகிலமனைத்தும் தனது இயக்கத்தால் ஆட்டி வைக்கும் ஐயன் ஆடும் அழகை நேரில் கண்டு களிக்கும் பேறு பெற்ற காரைக்காலம்மையார் இவ்வாறு பாடுகின்றார்.

அடிபேரில் பாதாளம் பேரும் அடியார்


முடி பேரில் மா முகடு பேரும் தொடிகள்


மறிந்தாடும் கைபேரில் வான் திசைகள் பேரும்


அறிந்தாடும் ஆறு என் அரங்கு.

ஐயா தங்களது ஒரு அடி மாறினால் பாதாளம் மாறும், மற்றோரு அடி மாறினால் மலை முகடுகள் இடம்மாறும், திருகரங்கள் மாறினால் திசைகள் அனைத்தும் இடம் பெயரும், ஆயினுன் அளவில்லாத கருணையினால் தாங்கள் அம்பத்துல் ஆனந்தமாக ஆடி அனைத்தையும் சீராக வைத்திருக்கும் மாபெரும்கருணைதான் என்னே? என்று வியக்கிறார் இன்றும் தாளம் இசைத்துக்கொண்டு திருவாலங்காட்டில் ஐயன் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் அம்மையார்.



திருஅருட்பா பாடிய வள்ளலார் சுவாமிகள் ஆடையிலே அவரை மணந்த மணவாளராக அம்பலத்தரசை பொது நடத்தரசை போற்றி பாடிய பாடல்.

கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல் கனிந்த கனியே

ஓடையிலே ஊருகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே
உகந்த தண்ணீரிடை மலர்ந்த சுகந்த மண மலரே

மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே
மென்காற்றில் விளை சுகமே சுகத்திலுறும் பயனே

ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கணிந்தருளே.



கோடைக்காலத்தில் குளிர் நிழல் வழங்கும் வள்ளல், உண்ணத் தெவிட்டாத கனி, தீஞ்சுவைத் தண்ணீர், மணம் வீசும் மலர், மலரிலிருந்து வீசும் தென்றல் அந்த அம்பல வாணர்.





ஆனி திருமஞ்சன பெருவிழா: சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ ஆன்ந்த நடராஜ சுவாமி ஆனித்திருமஞ்சன மஹோற்சவம் இன்று நலமலி தில்லையில் இன்று தொடங்குகின்றது. விக்னேஸ்வர பூஜை, ஐயனிடம் அனுமதி பெறுதல், மண் சேகரித்தல், முளைப்பாலிகை இடுதல் ஆகிய வைபவங்கள் முடிந்து இன்று காலை கொடியேற்றம், உமாபதி சிவம் தில்லை நடராசர் அருளால் பாடி கொடி உயர்ந்த கொடிக்கவி பாடி கொடியேற்றி விழா தொடக்கம். இரவு பஞ்ச மூர்த்திகள் பவனி. விநாயகர் மூஷிகம், சோமாஸ்கந்தர் வெள்ளி மஞ்சம், சிவானந்த வல்லி, அன்னம், முருகர் மயில் , சண்டிகேஸ்வரர்-ரிஷப வாகன சேவை. இரண்டாம் நாள் இரவு சோமாஸ்கந்தர் வெள்ளி சந்திரப் பிறை சேவை.

இந்த புண்ணிய ஆனித்திருமஞ்சன நாட்களில், இனி வரும் பதிவுகளில் பஞ்ச சபைகளின் தரிசனம் பெறுவோம்.