Showing posts with label Kurralam. Show all posts
Showing posts with label Kurralam. Show all posts

Sunday, July 6, 2008

பஞ்ச சபைகள் - சித்திர அம்பலம் - திருக்குற்றாலம்

அம்பலத்தாடும் எம் ஐயன் ஆடல் காணீரோ
ஆனி உத்திர நன்னாளில் ஆடல் காணீரோ.








சித்திர சபை




அருவியை ஒட்டி குறும்பலாவின் ஈசர் ஆலயம்







மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்

தான் அந்த மானிடத்தே தங்கி விடும் - ஆனந்தம்

மொண்டு அருந்த நின்றாடல் காணும் அருள் மூர்த்தியாக

கொண்ட திருஅம்பலத்தான் கூத்து.

உரையும் உணர்வும் அற்று நிற்கும் ஞானியர் தம் மும்மலங்களின் வாசனையை முழுவதுமாக நீக்கி, ஆணவம் முழுவதும் ஒழிந்த நிலையில் கிடைக்கின்ற பேரின்பத்தை துய்த்து இன்புறுவதன் பொருட்டு உமையம்மை தம் ஆடலைக் கண்டு வழிபடுமாறு செய்தருளும் கூத்தப்பெருமான் ஆடும் ஐந்து அம்பலங்களுள் நான்காவது அம்பலம் திருக்குற்றாலத்தின் சித்திர அம்பலம்.


குறும்பலாவின் ஈசர் குற்றாலநாதர் அருள் பாலிக்கும் திரி கூட மலை என்றழைக்கப்படும் திருகுற்றாலமலை மூன்று சிகரங்களை உடையது இவை மும்மூர்த்திகளை குறிக்கின்றது. எனவே மலையே இங்கு திருத்தலம். சித்ரா அருவியே தீர்த்தம். குழல்வாய்மொழி அம்மையின் கருணையே அருவி வெள்ளம். செண்பக மரம் நிறைந்த மலை பராசக்தியின் பச்சைத்திருமேனி, கருமேகம் அன்னையின் கடைக்கண்கள். பொதிகை மலையிலிருந்து வீசுகின்ற தென்றல் அன்னையின் அருள். கு+ தாலம் அதாவது பிறவிப்பிணியை நீக்கும் தலம் சித்ர அம்பலம் கொண்டுள்ள திருகுற்றாலம்.

திருக்குற்றாலம் பண்டை காலத்தில் மாலவன் கோவிலாக இருந்தது. அது எவ்வாறு மஹேஸ்வரன் ஆலய்மாக மாறியது, அவ்வாறு மாற்றியது யார் என்று பார்ப்போமா? அன்னை தாக்ஷாயணி, தட்சனுக்கு மகளாக பிறந்து அவனின் இச்சைக்கு புறம்பாக சிவபெருமானை மண்ந்து கொண்டதால் ஆணவம் கொண்ட தட்சன் சிவபெருமானை இழிவு படுத்துவதாக நினைத்துக்கொண்டு ஒரு யாகம் நடத்துகின்றான், அதற்கு அம்மையப்பருக்கு அவன் அழைப்பும் அனுப்பவில்லை, சிவ பெருமானுக்கு தர வேண்டிய அவிர்பாகத்தையும் தர மறுக்கின்றான். ஆயினும் பாசத்தால் தந்தை நடத்தும் யாகத்திற்கு செல்கின்ற சதி தேவி, அவ்னால் அவமானபடுத்தப்பட அவன் யாகத்தை அழிக்க யாக குண்டத்தில் குதிக்கின்றாள். பின் அம்மைர் இமவானுக்கு மகளாக பிறந்து பார்வதியாக வளர்ந்து சிவபெருமானை குறித்து தவம் இருந்து ஐயனை மணக்கும் பேறைப் பெறுகின்றார். சிவ பார்வதி திருக்கல்யாணம் திருக்கையிலையிலே நடைபெறும் போது அனைத்து தேவர்களும், முனிவர்களும், திருக்கைலாயத்திலே கூட வடக்கு திசை தாழ்ந்து தெற்கு திசை உயர்கின்றது. எனவே உலகை சமப்படுத்த ஐயன் அகத்திய முனிவரை தென் திசைக்கு அனுப்புகின்றார். தான் மட்டும் அம்மையப்பரின் திருக்கல்யாணத்தை காண முடியாமல் போய் விடுமே என்று அகத்தியர் வேண்ட, தகுந்த சமயத்தில் உமக்கு நான் திருமணக் காட்சியை தந்தருளுவோம் என்று ஐயன் அவரை சமானப்படுததி அனுப்ப்புகின்றார். இவ்வாறு மலைமகள் தன்னை தாம் மணந்த திருமணக்கோலத்தை அகத்தியருக்கு காட்டிய தலம் தான் திருக்குற்றாலம். அகத்தியரும் இந்த பொதிகை மலையிலே தங்கி தவம் செய்து தமிழ் வளர்த்தார்.





ஆனந்த நடராஜேஸ்வரர் அம்மை சிவகாமியுடன்






ஒரு சமயம் குறு முனி அகத்தியர் திருமால் கோவிலில் உள்ளே சென்று வழிபட முயன்ற போது அவர் உடலில் சிவ சின்னமான திருநீறு இருந்ததால் அவரை வைஷ்ணவாச்சாரியார்கள் அனுமதிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட அகத்தியர் தன் உடலில் வைணவ சின்னமான திருமண் இட்டு மிகவும் கோபத்துடன் கோவிலின் உள்ளே சென்று நீண்டு நெடுமாலாக நின்ற இறைவன் தலையில் அழுத்தி "குறுகுக குறுகுக "என்று கொட்டியதால் மாலவனும் குறுகி மஹாலிங்கமானதாக ஐதீகம். கோவிலும் சங்கு அமைப்பில் இருப்பதும் இதற்கு ஒரு சான்று. பெருமாளின் இரு தேவியரில் ஸ்ரீ தேவியை குழல் வாய் மொழி அம்மையாகவும், பூ தேவியை பராசக்தியாக மாற்றினார் அகத்தியர். குழல் வாய் மொழி அம்மை ஐயனுக்கு வலப்பக்கத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். பராசக்தி யோக பீட நாயகியாய் எழுந்தருளியுள்ளாள், எனவே இத்தலத்தை தரணி பீடம் என்றும் சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதுகின்றனர்.

அகத்தியர் அழுத்திய வடுக்கள் இன்றும் ஐயன் திருமேனியில் உள்ளது. அவர் அழுத்தியதால் ஏற்பட்ட தலை வலியைப் போக்க இன்றும் மருந்து சரக்குகள், வேர்கள் சேர்த்து காய்ச்சப்படும் சந்தனாதி மூலிகை தைலத்தால் தினமும் லிங்கத்திருமேனிக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. மிகுந்த கோபத்துடன் அகத்தியர் உள்ளே நுழைந்ததால் துவார பாலகர்கள் அவரை தடுக்க முடியாமல் கையிலிருந்த ஆயுதங்களை கீழே போட்டு விட்டதால் இன்றும் அவர்கள் ஆயுதங்கள் இல்லாமலேயே காட்சி தருகின்றனர். தீர்த்தம் அருவியே. சிவனை மதியாது பூமிக்கு வந்த கங்கையை தனது சடையில் தாங்கினார் இங்கு. சிவபெருமானின் சொல்லை மதியாதற்கு பிராயசித்தமாக மூன்று மலைகள் கூடும் திரிகூட மலையில் உள்ள லிங்கத்தை தேன் கொண்டு பூஜித்து நற்கதி பெற்றாள்.கங்கை இவ்வாறு தேன் கொண்டு பூஜித்ததால் இத்தல தீர்த்தம் சிவ கங்கையாயிற்று. இதுவே இன்று தேனருவியாக பாய்கின்றது. அருவிக்கரையின் அருகில் இருப்பதால் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சளி பிடிக்கக்கூடாது என்று இரவில் சுக்கு கஷாயம் நைவேத்தியம் செய்யப்படுகின்றது.

ஐயன் அம்மைகள் இருவர் மூன்று சன்னதிகளையும் உள்ளடக்கி செல்லும் திருச்சுற்றுக்கு சங்க வீதி என்று பெயர்.கோவிலும் சங்ககோவில்.முதலில் அகலமான மணி மண்டபம், நேர்த்தியான தூண்கள், வாயிலில் அம்பல விநாயகர், சுப்பிரமணியர், நடுவில் கொடிமரம், பலி பீடம் நந்தி. அலங்கார மண்டபத்தில் தென்புற வாயில் வழியாக சென்றால் அர்த்த மண்டபம். ஆயுதம் இல்லாமல் துவார பாலகர்கள். அகத்தியரின் கை ரேகைகளை தன் திருமேனியில் தாங்கிய குறும்பலாவின் ஈசரை, குற்றால நாதரை, கூத்தரை, திரிகூடாசலேஸ்வரரை தரிசனம் செய்கின்றோம். இவரை மாணிக்க வாசகர் திருவாசகத்தில் " குற்றாலத்து குறியாய் இருந்தும்" அதாவது திருக்குற்றாலத்திலே சிவலிங்கமாக எழுந்தருளியுள்ள கூத்தனே என்று பாடுகின்றார்.

திருசுற்றில் அதிகார நந்தி சூரியன், தக்ஷிணா மூர்த்தி, பஞ்சபூத லிங்கங்கள் சுப்பிரமணியரை தரிசித்து பின் அன்னை குழல்வாய் மொழி அம்மையை தரிசிக்கின்றோம், நின்ற கோலத்தில் கருணை முகத்துடன் எழிலாக அருட்காட்சி தருகின்றாள் அருளை அருவியாகப் பொழியும் அன்னை. திருசுற்றில் கயிலாயநாதர் துர்க்கையம்மன் சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. வடப்புறம் பள்ளியறை. இடப்பக்கம் யோக பீட நாயகி பராசக்தி. தலமரம் குறும்பலா.

அரவின் அனையானும் நான்முகனும் காண்பரிய அண்ணல் செக்கி





விரவி மதி அணிந்த விகிதர்க்கு இடம் போலும் விரி பூஞ்சாரல்



மரவம் இருகரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்தகீ



குரவமறு வலி செய்யும் குன்றிடம் சூழ் தண் சாரக் குறும்பலாவே.




என்று சம்பந்தப்பெருமான் குறும்பலாவின் மீது ஒரு 11 பாடல்கள் கொண்ட முழுப்பதிகமே பாடியுள்ளார். நான்கு வேதங்களுமே பலா மரமாக நின்று தவம் செய்திருப்பதாக ஐதீகம்.





சித்திரம்பலம்







மஹா மண்டபத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் அன்னை சிவகாமி சமேதராக அருட்காட்சி தருகின்றார். மார்கழித்திருவாதிரையன்று இத்திருமேனியையே சித்திர சபைக்கு எடுத்து சென்று அபிஷேக ஆராதணைகள் நடத்துகின்றனர். முதல் பூஜை ஆன்ந்த நடராஜேஸ்வரருக்கே நடைபெறுகின்றது









திரிபுர தாண்டவ மூர்த்தி





குற்றாலத்து எம் கூத்தா போற்றி




காவாய் கனகக் கடலே போற்றி




கயிலை மலையானே போற்றி போற்றி.

கோவிலின் வடக்கே அருகில் சித்திர சபை உள்ளது . இரு மண்டபங்கள் உள்ளன, கேரளப்பாணியில் கட்டப்பட்டுள்ளன்.ஒரு மண்டபத்தில் நிறைய சாளரங்கள் உள்ளன. நடுவே ஒரு சிறு வசந்த மேடை. மரக்கூரை கூரை செப்புத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது. எட்டு கலசங்கள்.சித்திர சபையெங்கும் சித்திரங்கள் மூலிகைகளை குழைத்து தீட்டிய வண்ணம். தஞ்சாவூர் ஓவியம் போன்று சிவப்பு, நீலம், தங்க நிறத்தில் அற்புதமான சித்திரங்கள்.யமனை வென்ற மிருத்யுஞ்சய மூர்த்தியாக , ஆனந்த நடராஜேஸ்வரராக தலையில் பிறை சூடி , அம்மை சிவகாம சுந்தரியை இடப்பக்கதில் சுமந்து மார்க்கண்டனுக்க்கு அருளிய மூர்த்தியாக ஆன்ந்த தாண்டவம் ஆடும் சித்திரம் அருமை. முப்பத்து முக்கோடி தேவர்களும் ஐயனின் அடிபணிந்து ஆனந்த தாண்டவத்தை கண்டு களிக்கின்றனர். தாமரைகள் மலர்ந்திருக்க, வண்டுகள் ரீங்காரமிட மயில்கள் ஆட அருமையாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சித்திர சபையில் ஐயன் திரிபுர தாண்டவம் ஆடுவதாக ஐதீகம். பிரம்மன் தான் கண்ட அந்த தாண்டவத்தை தானே வரைந்ததாக ஐதீகம். புராண நிகழ்ச்சிகளை ஒட்டிய சித்திரங்களும், 64 திருவிளையாடல்களை விளக்கும் சித்திரங்கள் என்று சபை எங்கும் நிறைந்திருக்கின்றன. ஸ்படிக லிங்கமும் சக்கரமும் உள்ளன. திருவாதிரை உற்சவ பத்து நாள் உற்சவத்தின் போது தினமும் காலையிலும் மாலையிலும் திருவெம்பாவை, தேவாரம், பல்லாண்டு பாடப்பட்டபின்னரே ஆசிர்வாத நிகழ்ச்சி வட மொழியில் நிகழ்த்தப்படுகின்றது. ஆருத்ரா தரிசனத்தன்று தாண்டவ தீபாரதனை நடைபெறுகின்றது.





சித்திர சபையில் உள்ள சித்திரங்கள்


உற்றாரையான் வேண்டேன்
ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்




கற்றாரையான் வேண்டேன்
கற்பனவும் இனியமையும்



குற்றாலத்து அமர்ந்துறையும்
கூத்தாஉன் குரைக்கழற்கே



கற்றாவின் மனம் போலக்
கசிந்துருக வேண்டுவனே.




என்று மாணிக்க வாசகர் பாடிய குற்றாலத்து கூத்தனைக் கண்டு ஆன்ந்த பாஷ்பம் கண்ணில்வழிய வணங்குகின்றோம்,

தேவார மூவர்கள், மாணிக்க வாசகர், அருணகிரிநாதர் ஆகியோர் பாடல் பாடியுள்ளனர். திரிகூட ராசப்ப கவிராயர் தலபுராணம் பாடியுள்ளார். கந்த புராணம், திருப்பத்தூர் புராணத்தில் குற்றாலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சித்திர சபைக்கு எதிரே தெப்பக்குளம் உள்ளது. இவ்வாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று புகழ் பெற்ற குற்றாலத்தானை

காலன் வருமுன்னே
கண்பஞ் சடை முன்னே



பாலுண் கடைவாய்
படு முன்னே - மேல் விழுந்தே



உற்றார் அழுமுன்னே
ஊரார் சுடுமுன்னே



குற்றாலத்தானையே கூறு



என்றபடி பட்டினத்தடிகள் பாடிய்படி நாளைக்கென்று ஒதுக்கி வைக்காமல் இன்றே ஆனந்த நடராஜேஸ்வரரின் தரிசனம் பெற்று முக்தியடைவோமாக.






தில்லை ஆனி உத்திரப்பெருவிழா: ஏழாம் நாள் தங்க கைலாய வாகனக் காட்சி. எட்டாம் நாள் தங்க இரதத்தில் பிக்ஷாடணர் வெட்டுங்குதிரைக் காட்சி. இன்று சித்சபையில் அம்மையப்பரின் முக தரிசனம் மட்டுமே கிட்டும்.


அடுத்த பதிவில் திருவாலங்காட்டில் இரத்தின சபையில் ஊர்த்துவத் தாண்டவம் ஆடும் ஐயனின் தரிசனம் பெறுவோம்.


Saturday, June 28, 2008

ஆடல் காணீரோ

அம்பலத்தாடும் எம் ஐயன் ஆடல் காணீரோ
ஆனி உத்திர நன்னாளில் ஆடல் காணீரோ.





தத்துவம் ஆடச் சதாசிவந் தான் ஆட


சித்தமும் ஆடச் சிவசக்தி தான் ஆட


வைத்த சராசரமும் ஆட மறை ஆட


அத்தனும் ஆடினான் ஆனந்த கூத்தன்றே.

அம்பலத்தாடும் என் ஐயனுக்கு ஆனந்த கூத்தனுக்கு வருடத்திலே ஆறு திருமுழுக்குகள். அவை தேவர்கள் அண்டர் நாயகனுக்கு செய்யும் பூஜை என்பது ஐதீகம். அவற்றில் மூன்று நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டவை அவையாவன உதய கால பூஜை மார்கழித் திருவாதிரை, பிரதோஷ கால பூஜை ஆனி உத்திரம், மற்றும் உச்சிக்கால பூஜை சித்திரைத் திருவோணம் ஆகும். திதிகளை அடிப்படையாக கொண்டவை மற்ற மூன்று பூஜைகளான மாசி, ஆவணி மற்றும் புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி திருமுழுக்குகள் ஆகும். இவற்றுள் மார்கழித் திருவாதிரையும், ஆனி உத்திரமும் பத்து நாள் விழாவாக சிறப்பாக தில்லையிலே ஐயன் ஆனந்த தாண்டவ மூர்த்தியாக, பஞ்ச கிருத்திய பாராயணனாக ஆடிடும் தில்லை பொன்னம்பலத்திலே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. தினமும் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தரிசனம் தந்து அருள் பாலிக்கின்றனர். ஒன்பதாம் நாள் எளி வந்த கருணையினால் ஆனந்த நடராசரும், சிவகாமியம்மையுமே பொன்னம்பலத்தை விடுத்து வெளியே வந்து திருத்தேரோட்டம் கண்டு பின் பத்தாம் நாள் காலை அருணோதய காலத்தில் மஹா அபிஷேகம் கண்டருளி சித்சபைக்கு திரும்புகின்றனர். இந்த வருடம் ஆனி திருமஞ்சனம் 09/07/08 அன்று. ஆகவே அடுத்த பத்து நாட்களில் ஐயன் ஆடும் பஞ்ச சபைகளையும் வலம் வந்து மை கலந்த கண்ணி பங்கன் அருள் பெறுவோம் வாருங்கள்.





தென்னாடுடைய சிவனுக்கு, எந்நாட்டவர்க்கும் இறைவனுக்கு, திருக்கயிலை நாதனுக்கு முகங்கள் ஐந்து, அவர் புரியும் தொழில்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று ஐந்து. அவருடைய திருமந்திரமும் ஓம் நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து. அவர் ஆடும் ஐந்து அவையாவன



1.பொன்னம்பலம் - கனக சபை - தில்லை சிதம்பரம் - ஆனந்த தாண்டவம்- ஐயன் ஐந்தொழில் புரிவதைக் குறிக்கும்- மூவுலகையும் சிருஷ்டித்த போது ஆடிய தாண்டவம்.

2. வெள்ளியம்பலம் - ரதஜ சபை - மதுரை- சந்தியா தாண்டவம் - காத்தல் தொழிலை குறிக்கும் - பலவித தாளம் இசை வாத்தியங்களை உருவாக்க மாலையில் ஆடிய ஆட்டம்.

3.செப்பம்பலம் - தாமிர சபை - திருநெல்வேலி - முனி தாண்டவம் - படைத்தல் தொழிலைக் குறிக்கும் - பதஞ்சலி முனிவர் தாளம் இசைக்க ஆடிய ஆட்டம்.

4.சித்ரம்பலம் -சித்திர சபை - திருக்குற்றாலம் - திரிபுர தாண்டவம் - மறைத்தல் தொழிலைக் குறிக்கின்றது - திரிபுரம் எரித்த போது பூமியையும் ஆகாயத்தையும் அடக்கிய போது ஆடிய ஆட்டம்.

5.மணியம்பலம் - இரத்தின சபை - திருவாலங்காடு - ஊர்த்துவ தாண்டவம் - அருளல் தொழிலைக் குறிக்கின்றது - காளியின் செருக்கை அடக்க காலை தலைக்கு மேலே தூக்கி ஆடியது.

இவற்றுள் பொன்னம்பத்தைப்பற்றி முதலிலேயே கண்டுள்ளதால் மற்ற நான்கு அம்பலங்களைப்பற்றி இந்த ஆனி உத்திர சமயத்தில் காணலாம். ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனித் திருமஞ்சன தரிசனம் இரண்டுக்கும் உள்ள சிறு வித்தியாசம். ஆருத்ரா தரிசனம் மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில் வரும் என்பதால் மாணிக்க வாசகரின் திருவெம்பாவை நாள் தோறும் அம்பலவாணர் திருமுன்பு இசைக்கப்படுகின்றது. மேலும் தரிசனம் தந்து கனக சபைக்கு எழுந்தருளும் போது ஐயன் ஆனந்த தாண்டவக் காட்சி தந்தருளுகின்றார். ஆனி திருமஞ்சன திருவிழாவின் போது மாணிக்க வாசகரின் குரு பூஜை நாளான ஆனி மாமகம் வருகின்றது. அன்றுதான் ஆண்டவன் தன் கரம் வருந்த மணிவாசகரின் திருவாசகத்தை தானே சுவாமிகள் கூற ஓலைச் சுவடியில் எழுதி "மாணிக்க வாசகர் சொல்ல அழகிய திருச்சிற்றம்ப்லமுடையார் எழுதியது" என்று கைசாத்திட்டுப் சிற்சபையின் பஞ்சாக்கரப் படியில் ஒருவருங்காணாதவாறு வைத்தனன்.


தில்லை வாழ் அந்தணர் இவ்வேட்டை மணிவாசகரிடம் காட்டி , இப்பாடல்களின் பொருளைத் தெரிவிக்க வேண்டுமென்று வேண்ட அவ்ரும் அவ்ர்களை அழைத்து சென்று தில்லைத் திருக்கூத்தனைக் சுட்டிக் காட்டி இவனே பொருல்ளெனக் காட்டி அவன் திருவடியில் இரண்டறக் கலந்தார். எனவே அன்றைய தினத்தில் ஐயனுடன் மாணிக்க வாசகரும் திருவலம் வருகின்றார்.




நாம் எல்லோரும் உய்ய அகிலமனைத்தும் தனது இயக்கத்தால் ஆட்டி வைக்கும் ஐயன் ஆடும் அழகை நேரில் கண்டு களிக்கும் பேறு பெற்ற காரைக்காலம்மையார் இவ்வாறு பாடுகின்றார்.

அடிபேரில் பாதாளம் பேரும் அடியார்


முடி பேரில் மா முகடு பேரும் தொடிகள்


மறிந்தாடும் கைபேரில் வான் திசைகள் பேரும்


அறிந்தாடும் ஆறு என் அரங்கு.

ஐயா தங்களது ஒரு அடி மாறினால் பாதாளம் மாறும், மற்றோரு அடி மாறினால் மலை முகடுகள் இடம்மாறும், திருகரங்கள் மாறினால் திசைகள் அனைத்தும் இடம் பெயரும், ஆயினுன் அளவில்லாத கருணையினால் தாங்கள் அம்பத்துல் ஆனந்தமாக ஆடி அனைத்தையும் சீராக வைத்திருக்கும் மாபெரும்கருணைதான் என்னே? என்று வியக்கிறார் இன்றும் தாளம் இசைத்துக்கொண்டு திருவாலங்காட்டில் ஐயன் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் அம்மையார்.



திருஅருட்பா பாடிய வள்ளலார் சுவாமிகள் ஆடையிலே அவரை மணந்த மணவாளராக அம்பலத்தரசை பொது நடத்தரசை போற்றி பாடிய பாடல்.

கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல் கனிந்த கனியே

ஓடையிலே ஊருகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே
உகந்த தண்ணீரிடை மலர்ந்த சுகந்த மண மலரே

மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே
மென்காற்றில் விளை சுகமே சுகத்திலுறும் பயனே

ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கணிந்தருளே.



கோடைக்காலத்தில் குளிர் நிழல் வழங்கும் வள்ளல், உண்ணத் தெவிட்டாத கனி, தீஞ்சுவைத் தண்ணீர், மணம் வீசும் மலர், மலரிலிருந்து வீசும் தென்றல் அந்த அம்பல வாணர்.





ஆனி திருமஞ்சன பெருவிழா: சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ ஆன்ந்த நடராஜ சுவாமி ஆனித்திருமஞ்சன மஹோற்சவம் இன்று நலமலி தில்லையில் இன்று தொடங்குகின்றது. விக்னேஸ்வர பூஜை, ஐயனிடம் அனுமதி பெறுதல், மண் சேகரித்தல், முளைப்பாலிகை இடுதல் ஆகிய வைபவங்கள் முடிந்து இன்று காலை கொடியேற்றம், உமாபதி சிவம் தில்லை நடராசர் அருளால் பாடி கொடி உயர்ந்த கொடிக்கவி பாடி கொடியேற்றி விழா தொடக்கம். இரவு பஞ்ச மூர்த்திகள் பவனி. விநாயகர் மூஷிகம், சோமாஸ்கந்தர் வெள்ளி மஞ்சம், சிவானந்த வல்லி, அன்னம், முருகர் மயில் , சண்டிகேஸ்வரர்-ரிஷப வாகன சேவை. இரண்டாம் நாள் இரவு சோமாஸ்கந்தர் வெள்ளி சந்திரப் பிறை சேவை.

இந்த புண்ணிய ஆனித்திருமஞ்சன நாட்களில், இனி வரும் பதிவுகளில் பஞ்ச சபைகளின் தரிசனம் பெறுவோம்.