Showing posts with label பூங்கோயில். Show all posts
Showing posts with label பூங்கோயில். Show all posts

Sunday, March 8, 2020

திருப்பாத தரிசனம் - 13

ஸ்ரீதியாகராஜர் திருக்கோயில் முதல் திருசுற்று



முசுகுந்தரும் இந்திரனும் தியாகேசரை வழிபடும் காட்சி


தொண்டை மண்டலத்தின் உபவிடங்கத்தலங்களின் ஒன்றானதும் சுந்தருக்காக சங்கலியிடம் தூது சென்ற தியாகேசப்பெருமான் எழுந்தருளியுள்ள திருவொற்றியூரில் தற்போது மாசிப் பெருவிழா  சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்பெருவிழாவின் போது தியாகேசரின் அற்புத நடனத்தை முதலில் தரிசித்து  பின்னர் திருவாரூரின் பூங்கோவிலை சுற்றி வந்து திருமூலட்டானத்தாரையும், தியாகேசரையும் அற்புதமாக தரிசிக்கலாம் அன்பர்களே.



திருவொற்றியூர் சுந்தரநடனம்

நமது உடலில் ஐந்து சுற்றுகள் அமைந்துள்ளது போல திருவாரூர் கோயிலும் ஐந்து சுற்றுகளைக் கொண்டுள்ளது. திருவீதிகள் அன்னமய கோசம், மடவிளாகங்கள் – பிராணமய கோசம், பெரிய சுற்று – மனோமய கோசம்,   இரண்டாம் சுற்று – விஞ்ஞானமய கோசம்,   கருவறை திருச்சுற்று – ஆனந்தமய கோசம்.

இவ்வாலயத்தில் மொத்தம் 7 இராஜ கோபுரங்கள் அலங்கரிக்கின்றன. தென்வடலாக 656 அடி அகலமும், கிழமேற்காக   846 அடி நீளமும் சுமார் 30 அடி உயரமுள்ள பிரம்மாண்ட வெளி மதிலில் மொத்தம் 4 பெரிய கோபுரங்கள், மற்றும் ஒரு சிறு கோபுரமும் அணி செய்கின்றன. இரண்டாம் மதிலை இரண்டு திருக்கோபுரங்களும், மூன்றாம் மதிலை அணுக்கன் திருக்கோபுரமும் அலங்கரிக்கின்றன.



திருவாரூர் ஆலய கிழக்கு கோபுரம்



திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 118 அடி உயர அதன் கிழக்கு   இராஜகோபுரமாகும். இக்கோபுரம் மகாமதுரம் என்று வாஸ்து நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கட்டப்பட்டுள்ளது. மேல் தளம் வரை கருங்கல் அதற்கு மேல் 6 பிரஸ்தலங்கள் 7 துவாரங்களுடன் எழிலாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரம் ஒரு கலை களஞ்சியம் என்றால் அது மிகையாகாது. கோட்டங்களில் தெய்வத்திருவுருவங்கள் அமைந்துள்ளது இக்கோபுரத்தின் ஒரு சிறப்பு. சிவபெருமானின் பல்வேறு கோலங்கள், எண் திசைக் காவலர்கள், ஆதித்தன், திருமால் திருவுருவங்கள், நாட்டியச் சிற்பங்கள், யாளி வரிசையின் எழிற்கோலம் ஆகியவை இக்கோபுரத்தை அலங்கரிக்கின்றன. இக்கோபுரத்தை அமைத்தவன் நம் தோழன் என்று இறைவனால் அழைக்கப்பட்ட மூன்றாம் குலோத்துங்கன், “திருக்கயிலை சிவனருளால் தேசமெல்லாம் புகழ்ந்து பாட அரசோச்சிய” பெருமகன்.  அவனது சிற்பமும்  மற்றும் அவரது குரு, பதினெட்டு சிவபுராணங்களை தெளிவாக அறிந்த, சித்தாந்த ரத்னாகரம் என்னும் நூலை இயற்றிய ஈஸ்வர சிவர் எனும் சோமேஸ்வரர்  ஆகிய இருவரது சிலைகள் மற்றும்  பல கல்வெட்டுகளும்  அமைந்துள்ளன என்று இக்கோபுரத்தில் உள்ள கல்வெட்டுகளில் உள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர். வெளிப்புற வாயிலின் வலப்புறம் விநாயகர் திருக்கோவிலும், இடப்புறம் முருகர் திருக்கோவிலும் உள்ளன.  கிழக்கு கோபுரத்தின் உட்புறத்தில் உள்ள 1000 கால் தூண்கள் முற்காலத்தில் திருவிழாவின் போது பந்தல் போட அமைக்கப்பட்டது. காவணம்  என்று  பண்டைக் காலத்தில் அழைக்கப்பட்டது.

மேலைக் கோபுரம் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இரு புறமும் நாட்டிய மங்கைகள் மற்றும் புராண சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கமலாலயத் திருக்குளத்தை ஒட்டி ஏழு நிலை மேலைக்கோபுரம் அமைந்துள்ளது. இக்கோபுரம், கமலாலயம் மற்றும் ஆழித்தேர் மூன்றையும் ஒரே நேரத்தில் தரிசிப்பது பரவசமூட்டும் காட்சியாகும். இக்கோபுரத்தை சுமார் 650 எழிலார்ந்த சுதை   சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. அவற்றில் சிவகதைகளும், மாலவன்,  நான்முகன், சரபமூர்த்தி, மற்ற தேவர்களின் சுதை சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன  தென்புறத்தில் சரபரையும் தரிசிக்கலாம். இக்கோபுரத்தின் நுழை வாயிலில்  சொல்லின் செல்வர் அருள்பாலிக்கின்றார்.

மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள  வடக்கு கோபுரம் நீலகண்ட யாழ்ப்பாணர் தன்னை வந்து வணங்குவதற்காக எம்பெருமான் வகுத்த வாசலில் அமைந்த கோபுரம் ஆகும். இக்கோபுர நுழை வாயிலின் கூரையில் நவக்கிரக சிற்பங்கள் அடங்கிய இராசிச் சக்கரம் உள்ளது. இக்கோபுரத்தில் தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கர் மற்றும் கமலை ஞானப்பிரகாசர் சிலைகள் இடம் பெற்றுள்ளன. மூன்றாம் பிரகாரத்தின் கிழக்கு மதிலில் வட கீழ்த்திசையில் கீழைச்சிறிய  கோபுரம் உள்ளது, இக்கோபுரம் தேவாசிரிய மண்டபத்தின் கிழக்கு வாயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. உட்பகுதியில் சண்டிகேஸ்வரர் சிற்பம் இடம் பெற்றுள்ளது.  வடமேற்கு மூலையில் தெற்கு கோபுரமும் அமைந்துள்ளன.



இரண்டாம் பிரகாரத்தில் இரண்டு கோபுரங்கள் கிழக்கு மற்றும் மேற்கில் அழகு செய்கின்றன. மேலைக்கோபுரத்தை விஜயநகர மன்னர் இலக்கண்ண தண்ணநாயகர்  சார்பாக நாகராசர் அமைத்ததாக கல்வெட்டு  பகர்கின்றது. கீழைக் கோபுரம் ஆரியன் கோபுரம் என்றழைக்கப்படுகின்றது. இக்கோபுரத்தின் வெளிப்புறம் விநாயகர் மற்றும் முருகர் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. வெளி கோட்டத்தில் வலப்புறம் கண்ணப்பர் சிற்பமும், இடப்புறம் விறன்மிண்ட நாயனாரின் சிற்பமும் இடம் பெற்றுள்ளது. தம்பிரான் தோழரையும், இறைவனையும் விலக்கிய இந்நாயானாரை வணங்கிய பிறகே திருக்கோவிலின் உள்ளே புக வேண்டும் என்பது மரபு.

மந்திரமயமான கருவறை திருச்சுற்றாகிய ஆனந்தமய கோசத்திற்குள் செல்ல அமைந்த கோபுரம் “அழகியான் கோபுரம்”. புற்றிடங்கொண்டார் சன்னதிக்கு எதிராக இக்கோபுரம் அமைந்துள்ளது.  கோபுர வாசலில் சுதையாலாகிய பிரம்மாண்ட   கம்பீரமும், கர்வமும் நிறைந்த துவாரபாலகர்கள். எதிரே கொடிக்கம்பம் இக்கொடிக்கம்பத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் முதலாம் சரபோஜியின் சிலை இடம் பெற்றுள்ளது.  கருவறையில் திருமாலின் கர்வத்தை நீக்க புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றிய புற்றிடம்கொண்டார். இவருக்கு தெற்கே ஐங்கலப் பொற்காசு விநாயகர், இவருக்கும் தெற்கே விண் துறந்து ஆருர் மண் உவந்து  வந்தமர்ந்து அருள் புரியும் கமல வசந்த தியாகேசர்.




திருவாரூர்க் கோயில் வரைபடம்

அழகியான் கோபுரத்தை அமைத்தவன் சுந்தர சோழன்.  இவனே   ஐந்து கலம் பொன் கொண்டு விநாயகரை அமைத்தான் எனவே இவர் அழகிய சோழ விநாயகர் என்றும் அழைக்கப்படுகின்றார். வாயிற்கூரையில் 27 நட்சத்திரங்களின் தேவதைகளும், 12 இராசிகளில் மூன்று சக்கர கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ள அருமையான சிற்பம். ஐங்கல பொற்காசு விநாயகருக்கு வடப்புறம் புற்றிடங்கொண்ட ஈசர் சுயம்புவாய்  எழுந்தருளி அருள் பாலிக்கும் பூங்கோயில். 

“ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ”
“நிலந்தரத்து நீண்டுருவம் ஆன நாளோ”
“கோலமே நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக்கொண்ட நாளோ”
என்று பலவிதமாகப் பாடி இறைவன் அருவமாயும், உருவமாயும் கோயில் கொண்டது முதலில் ஆரூரில்தான் என இத்தலத்தின் தொன்மையைப் பாடுகிறார்.

அப்புராதனன், திருமூலட்டானன், திருமகளின் தவத்திற்கிணங்கி திருமாலை அவளுக்களித்த பெருமான், கற்றவர்கள் உண்ணும் அருட்கனி, கழலடைந்தார் செல்லும் கதி, அற்றவருக்கு ஆரமுதமானவர் அருள் பாலிக்கின்றார். திருவாரூர் சக்திபுரம் என்பதால் இம்மூர்த்தம் சற்றே வாமபாகத்தில் அமைந்துள்ளது. எத்தலத்தும் தீராத சாபம், தோஷம் இத்தலத்தில் இவர் முன் தீரும், இவர் முன் தீரா சாபம் எத்தலத்தும் தீராது என்று தலபுராணம் கூறுகின்றது. ஒரு கோடி முனிவர்கள் பெருமானை போற்றி துதித்த போது அனைவருக்கும் பொதுவாக காட்சி தராமல் முனிவர்தம் வகையறிந்து தவமறிந்து தனித்தனியாக காட்சி தந்தருளிய தக்கார்க்கு தக்கான். வெள்ளிக் கவசமிட்டு புற்றுரையும் பெருமான்.

 இவரை
கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி
      கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட் காரமுதமா னாய் போற்றி
      அல்லலறுத் தடியேனை யாண்டாய் போற்றி
மற்றவ ரொப்பில்லா மைந்தா போற்றி
      வானவர்கள் போற்று மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
      திருமூலட் டானனே போற்றி போற்றி
என்று போற்றிப் பாடியுள்ளார் நாவுக்கரசப்பெருமான்.

புற்றிடங்கொண்டார் எனும் திருமூலட்டானேசுவரர், பெரிய லிங்க வடிவில் முப்பட்டை பூண்டு, அகன்ற ஆவுடையாரில் திருக்காட்சி தருகிறார். அது தரிசிக்கும் பக்தர்களை மெய் சிலிர்க்கவைக்கும் திருமூலட்டானர், வன்மீக நாதர், திருமூலஸ்தானமுடையார், ஆரூர் அதிபதி, பூர்வாரூர்வாசி, ஸ்ரீஆரூரதிபஸ்ய என்று பல திருநாமங்களில் அழைக்கப்படுகின்றார்.  ஐயனுக்கு வெள்ளிக்கவசம் சார்த்தியுள்ளனர்.  ஐயனுடன் போக சக்தி - பிரியாவிடை அம்மை,   சோமகுலாம்பிகை என்ற திருநாமத்துடன் பிருத்வி தலம் என்பதை உணர்த்தும் விதமாக அமர்ந்த நிலையில் ஒரு திருக்கரத்தை முழங்காலில் அமர்த்தி, மறு திருக்கரத்தை தரையில் ஊன்றிய கோலத்தில் நான்கு யாளிகள் தாங்கிய மேடை மேல் கம்பீரமாக அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.

கருவறையுடன் அமைந்த அந்தராளம் நான்கு கற்றூண்களை உள்ளே பெற்று திகழ்கிறது. அந்தராள வாயிலின் வெளிப்புறம் துவார பாலகர்கள், நிலையின் மேல்  சிவபெருமானின் திருமணக்காட்சி இடம் பெற்றுள்ளது. இவரின் முக மண்டபமும், தியாக விநோதரின் முக மண்டபமும் இணைந்துள்ளது.

மஹாமண்டபத்தில் இருந்து நாம் பெருமானை தரிசிக்கின்றோம். நந்தி மண்டபத்தின் கூரையில் 11X11 சிறு சதுரங்களில் 27 நட்சத்திரங்கள், 12 இராசிகளின் நுண்ணிய சிற்பங்கள் அருமை. நந்தியெம்பெருமான் அவருக்கு பின்னே பித்தளைக் கண்ணாடி போன்ற அமைப்பு. இது எதற்கென்று விசாரித்தபோது பிரம்மஹத்தி போன்ற பெரும்பாவம் செய்தவர்கள் ஆலயத்திற்குள் நுழையும் போது அவர்களின் பாவத்தை இக்கண்ணாடி இழுத்துவிடுமாம் அதன் பிறகு அவர்கள் இறைவனை தரிசிக்கலாம் என்று கூறினார்கள். 

ஐயனின் கருவறைச் சுவர்களிலும் கூரையிலும் அருமையான ஓவியங்கள். சிவ மூர்த்தங்கள் அனைத்தும் அப்படியே தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. அவற்றை பாதுகாப்பதற்காக கண்ணாடி சட்டம் அமைத்திருக்கின்றனர்.  கோட்டத்தில் கோட்ட தேவதைகள் முறைப்படி எழுந்தருளியுள்ளனர். கோட்டங்களின் மேல்புறத்தில் எழிலுறு மகரதோரணங்கள் அணி செய்கின்றன. ஐம்பதற்கும் மேற்பட்ட சிற்பதொகுதிகளும் பூங்கோயிலில் இடம்பெற்றுள்ளன அவற்றுள் துர்க்கை, ஆலிலைக் கண்ணன், கஜசம்ஹார மூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. 

பூங்கோயிலாம் இப்புனிதத் திருக்கோயிலுக்கு மாமன்னன்  மூன்றான்  குலோத்துங்கன் பொன் வேய்ந்து பொற்கோயிலாக்கினான். பாண்டிய நாட்டை வெற்றி கொண்டு திரிபுவன வீரதேவன் என்று பட்டம் சூடிப் பெருமையோடு திரும்பிய இம்மன்னர், பாண்டி நாட்டு பண்டாரத்திலிருந்து கொண்டு வந்த பொன்னால் புற்றிடங்கொண்டாரின் திருக்கோயிலை பொன்மயமாக்கினான் என்றும் மற்றும் அவன் செய்த பல்வேறு திருப்பணிகளையும் கல்வெட்டுகள் இயம்புகின்றன.



வன்மீகர் எழுந்தருளும் பூங்கோயில் அருகே  பொற்கோயிலில் வீதி விடங்க தியாகேசப் பெருமான் எழுந்தருளியுள்ளார்.  கருவறை விமானத்திற்கு மாமன்னன்  இராசேந்திர சோழன் பொன் வேய்ந்தான். ஒரு காலத்தில் தியாகேசர் சன்னதி பொற்கோயிலாக இருந்துள்ளது. “கங்கை நதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காசனத்திருந்த செம்பியர் கோன்” – என்னும் இராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழீச்சரம் என்னும் பெருங்கோவிலை எடுத்த பெருமையுடையவன். இப்பெருமகன் தன் ஆருயிர் காதலி அனுக்கியார் பரவை என்னும் நங்கையோடு தேரில் திருவாரூர் திருவீதிகளில் பவனி வந்தான்.  பரவை நங்கையார் எல்லையற்ற சிவபக்தி உடையவள்.  அவளுக்கு உடனிருக்கை அளித்து தேரில் பவனி வந்ததன் நினைவாக ஒரு குத்துவிளக்கும் திருவாரூர் கோவிலில் வைத்தான் இராஜேந்திர சோழன். இதை கல்வெட்டிலும் பொறித்தான்.

பரவை நங்கை அதுவரை செங்கற்கட்டாக இருந்த வீதிவிடங்க தேவரின் கோவிலை கருங்கற்கோவிலாக புதுப்பித்து 20634 கழஞ்சு எடையுள்ள பொன்னால் கர்ப்பகிரகம் முழுவதையும் பொற்தகடு போர்த்தி அலங்கரிக்க செய்தாள். 42000 பலம் எடையுள்ள பொற்தகடுகளைக் கொண்டு கதவுகள், மண்டபத்தூண்கள் மற்றும் விதானங்களை அலங்கரித்தாள் என்று கல்வெட்டிலிருந்து அறிய முடிகின்றது. மேலும் அப்பெருமாட்டி தியாகப்பெருமானுக்கு இரண்டு  சாமரங்கள் அளித்தாள்.  பச்சை பாவை உமை நங்கை, பாவை சரியா முலை நங்கை என்ற இரு பாவை விளக்குகளை வீதிவிடங்கர் முன் வைக்க அளித்தாள். மேலும் பாவைகளுக்கு பொன்னணிகளை அளித்த செய்தியையும் கல்வெட்டில் காணலாம்.

ஆனால் இன்று வெறும் கற்கோவிலாகத்தான் உள்ளது. இப்பொற்கோவில் எம்பெருமான் எழுந்தருளும் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபத்துடன் விளங்குகின்றது. மகா மண்டபத்தில் நின்ற நந்தியும் பலி பீடமும் உள்ளன.


பாற்கடலில் தனது மார்பில் வைத்து திருமால் தியாகரை வழிபடும் காட்சி


பாற்கடலில்  திருமால் மார்பில் விளங்கியது போல பெருமாளின் சிரசாகிய கருவறை விடுத்து, திருமாலின் திருமார்பாகிய அர்த்தமண்டபத்தில்  ராஜகம்பீர ராஜராஜேஸ்வர கோலம் கொண்டு,

“சிங்கஞ் சுமந்த செழுமணித் தவிசிற்
கங்குலும் பகலுங் கலந்தினி திருத்தாங்
கிடவலம் பொலிந்த விறைவியும் நீயும்
நடுவண் வைகு நாகிளங் குழவியை
ஒருவிரினெரு விருள்ள நெக்குருக . . . . என்று திருவாரூர் நான்மணி மாலையில் குமரகுருபர சுவாமிகள் பாடியபடி இளமுருகு உடனுறையும் அம்மையப்பராக, திருக்கயிலை நாதராக  தியாகவினோதர்  தரிசனம் அருளுகின்றார்.  திருமாலின் சிரசாகிய கருவறை ஸ்ரீவாசம் அல்லது லட்சுமி வாசம் என்கிற விலாசத்துடன் தாழிடப்பட்டு விளங்குகிறது.  மகா மண்டபம் பெருமாளின்   வயிறு,  தொடை, திருப்பாதம் என்று ஐதீகம். 


தென்னன் திருவாசல் எனப்படும் தென்புற வாயில் வழியாக எம்பெருமான் திரிபுர சம்காரத்திற்காக வெளியே வருவார். இத்திருவாசல் பித்தளை கவசம் பூண்டுள்ளது.  வாசல் பக்க சுவற்றின் இரு புறமும் இந்திரனும், முசுகுந்தனும் புடைப்புச் சிற்பங்களாய் தியாகேசரை தொழுத வண்ணம் காட்சி தருகின்றனர்.
சித்தந் தெளிவீர்காள், அத்த னாரூரைப்
பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.
என்று அம்மையின் ஞானப்பாலுண்ட திருஞானசம்பந்தர் பாடிப் பரவிய  ஆயிரம் திருநாமம் கொண்ட பெருமான் ஸ்ரீபீடத்தில் இரத்தின சிம்மாசனத்தில் முகம் காட்டி, உடல் மறைத்து தரிசனம் தருகின்றார். உடனுறையும் அம்பிகை கொண்டியம்மையும் இவ்வாறே. இருவருக்கும் இடையில் கந்தன் தன்னுரு காட்டாது அமர்ந்துள்ளார்.


தியாகேசப்பெருமான்

தியாகேசர் கங்கை மற்றும் வளர் பிறையை இருபக்கமும் தரித்திருக்கின்றார். இவரின் முன்புறம் இவரது பராக்கிரமத்தை உணர்த்தும் வீரகட்கம் மற்றும் அஞ்ஞானத்தை   வேரறுக்கும் ஞானகட்கம். பெருமான் எழுந்தருளும் மண்டப விதானத்தை தாங்கும் நான்கு தூண்களும் நான்கு வேதங்கள். இவையும் பித்தளை கவசம் பூண்டுள்ளன. தியாக கற்பத்தின் சிரசிற்கு மேலே அக்னி பந்தல்; திருநீற்றுப் பந்தல்; முத்து விதானம் என்கிறது அப்பர் தேவாரம்.

காமகலா சொரூப அதி ரகசிய மூர்த்தமாகிய இவரை நடை சார்த்தும் முன்னர் மறைத்துச் சூழ வெளிர் சிவப்பிலான திரஸ்கரணி என்ற திரையால் மறைக்கின்றனர். கண்டவர் தம் மனத்தை கவர்ந்திழுக்கும் மந்தகாச புன்னகையுடன் தியாக விநோதம் என்னும் நறுந்திலகத்துடன், பொன்னாலும், மணியாலும், மணங்கமழ் மலர்களாலும் திருமேனி மறைத்து கலாதீதன்; தத்வாதீதனை மனமார தரிசிக்கின்றோம். ஐயனின் திருக்கோலம் கண்டு நெஞ்சு நெகிழ்கின்றது, கண்ணீர் மல்குகின்றது. 

தியாகேசர் சந்நிதியில் மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் பெருமானை வழிபடுவதாக ஐதீகம்! பெருமானுக்கு முன் ஆறு மற்றும் ஐந்து அடுக்குகள் கொண்ட இரு விளக்குகள் உள்ளன. இவை ஏகாதச ருத்திரர்களைக் குறிக்கின்றது.


ஐயனுக்கு வலப்புறத்தில்  ஒரு இரும்புப்பெட்டியில் பாதுகாப்பாக   வெள்ளிப் பேழையில் மரகத வீதி விடங்கப்பெருமான் எழுந்தருளுகிறார். அனு தினமும் காலசந்தி, உச்சிக்காலம், மாலை இரண்டாம் காலம் என்று  மூன்று முறை அபிஷேகம் கண்டருளுகின்றார். பின்னர் சந்தனம் சாற்றப்பட்டு மலருடன் பேழையில் எழுந்தருளுகின்றார்.

மஹா மண்டபத்தில் உலோக நின்ற நந்தி   அதன் பின்னர் பித்தளை கண்ணாடி அமைப்பு. இருவருக்கும் இடையில் ஐங்கலக்காசு விநாயகர். உற்சவ காலங்களில் பஞ்ச மூர்த்தியாக உலா வருபவர் இவரே.

தியாகேசப்பெருமானின் கோட்டத்தில் ஐந்து தலை பாம்பு சுருண்டு படுத்துக் கிடக்க அதன் நடுவில் தாமரையின் மேல் பாசம் அங்குசம் மோதகம் தந்தத்துடன் நர்த்தன கணபதியாக மூலாதார கணபதி,   தட்சிணா மூர்த்தி, மஹா விஷ்ணு,   பிரம்மா,   மகிஷாசுரமர்த்தினி ஆகியோரை சேவிக்கலாம். இரு பெருமான்களையும் தரிசித்த பின்னர் வாருங்கள் அன்பர்களே திருச்சுற்றை வலம் வரலாம்.




பூங்கோயிலில் உள்ள ஒரு நடராஜர் ஓவியம்


இத்திருச்சுற்றின் பெரும்பகுதி மண்டபங்களால் சூழப்பட்டுள்ளது.  கிழக்கு திருச்சுற்றில்  அழகியான் கோபுரத்திற்கு அருகே மிகப்பெரிய சிவசூரியன், அருகே சூரியன் நிறுவிய ஆதித்த லிங்கம், அடுத்து தியாகேசரை தொழுதவாறு எம்பிரான் தோழர் சுந்தரர் பரவை நாச்சியாருடனும் தன் தோழர் சேரமான் பெருமாளுடனும் அருள் பாலிக்கின்றார். சாயரட்சை பூசையின் போது தியாகராஜப்பெருமானுக்கும் எம்பிரான் தோழர் சுந்தரருக்கும் ஒரே சமயத்தில் ஆரத்தி நடைபெறுகின்றது.  அடுத்த சன்னதி கமலாலய திருக்குளத்தை செப்பனிட்ட தண்டியடிகள். இத்திருசுற்றின் தென்கிழக்கு மூலையில் இத்தலத்திற்கே உரிய   குடமுழா என்கிற பஞ்சமுக வாத்தியம்.

 அடுத்து
சைவத்தின் மேற்சமயம் வேறில்லை அதில்சேர் சிவமாம்
தெய்வத்தின் மேல்தெய்வம் இல்லெனும்  நான்மறை செம்பொருள்
வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும், திருவாசகமும்
உய்வைத் தரச்செய்த நால்வர்  பொன் தாள் எம் உயிர்த்துணையே என்று நாம் பாடிப்பரவும், அப்பர், சம்பந்தர்,  மாணிக்கவாசகர் சன்னதி.  அக்னி மூலையில் மணித்தண்டு பாதுகாக்கும் அறை.

திருச்சுற்றின் தென்புறம் நடைமேடையில் “அரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே” என்று சுந்தரர் பணிந்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் பஞ்சலோகத் திருமேனிகள். அடுத்து விலாசமான பிறை மாடத்தில் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான். அடுத்து அறுபத்து மூவர் மற்றும் தொகையடியார்களின் கற்திருமேனிகள். எதிரே  தெற்கு வாயில். பித்தளை கவசம் பூண்டுள்ளது. ஒரு புறம் இந்திரனும், மறுபுறம் முசுகுந்தனும் தியாகேசரை வணங்கும் புடைப்பு சிற்பம். தியாகேசர் அஜபாநடனமிட்டு இவ்வாசல் வழியாக வெளியே வருவார். கருவறை சுவரில் திருமால் பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் தன் மார்பில் தியாகேசரை வைத்து பூசிக்கும் சுதை சிற்பம். கண்ணாடி கொண்டு பாதுகாப்பு செய்திருக்கின்றனர். அருகில் தென்றல் வரும் சாளரம். கோட்டத்தில் அன்று நால்வருக்கு அறம் அருளிய  ஆலமர் செல்வர்.


மேலை பிரகாரத்தில் ஐயன் அளந்த படி இருநாழி கொண்டு உய்ய அறம் வளர்த்த அன்னபூரணி. அடுத்து அழகுத் திருமேனியாக இடபத்தின் மேல் ஒயிலாக சாய்ந்து கொண்டு நிற்கும் “காட்சி கொடுத்தார்”. அடுத்து தல விநாயகர் என்றழைக்கப்படும் வாதாபி கணபதி. முத்துசாமி தீட்சிதரின் “வாதாபி கணபதிம் பஜேஹம்” என்கிற கிருதி இவர் திருமுன்னே பிறந்தது. பஞ்ச முக விநாயகர், அடுத்து ஆயிரம் லிங்க உருவங்கள் அமைந்த சகஸ்ரலிங்கம், விசுவநாதர், அடுத்து சித்திர பீடம். அகத்தியர் நிறுவிய இப்பீடத்தில் சப்த கோடி மந்திர சாரம் ஆவாகனம் செய்யப்பட்டுள்ளது. தீயசக்திகளால் துன்புறுவோர் இங்கு வழிபட ஆபிச்சார பிரயோகங்களை எதிர்கொள்ள இயலும். அடுத்து பிட்சாடனர் – உற்சவ மூர்த்தி.

மின் ஒளியில் கமலாலயக்குளமும் மேற்கு கோபுரமும்


அடுத்து வருணன் மகளாக பிறந்து திருமாலின் கரம் பற்ற வேண்டி தவம் இயற்றிய திருமகள் சன்னதி. தனி சன்னதியில் திருமகளை சன்னல் வழியாகத்தான் சேவிக்க இயலும். இனி பராசக்திபுரம் என்கிற ஆரூருக்குகமலாலயம்என்ற பெயர் வரக் காரணமான புராண சம்பவம் பற்றிப் பார்ப்போமா?  . வடமேற்கில்
நீதானெத் தணையாலும்- நீடுழிக் க்ருபையாகி;
மாதானத் தனமாக- மாஞானக் கழல்தாராய்
வேதாமைத் துனவேளே- வீராசற் குணசீலா;
ஆதாரத் தொளியானே- ஆரூரிற் பெருமாளே – என்று திருப்புகழில் அருணகிரிநாதர் பாடிய   வள்ளி தெய்வானை உடனாய  சுப்பிரமணியர் சன்னதி.   அடுத்து சந்தனாச்சாரியார் கற்திருமேனிகள்.

இத்திருச்சுற்றின் வடமேற்கு மூலையில் நவக்கிரகங்கள் நேர் வரிசையில் காணப்படுகின்றன. திருவாரூர் பிறந்தவர்கள் அனைவரும் சிவகணங்கள் என்பதால் அவர்களின் மீது தங்களின் ஆணை செல்லாது என்று திகைத்து நிற்கின்றனரோ? அருகே சனிபகவான் பூசித்த லிங்கம், அதன் அருகே சனியின் ஆலோசனையினால் நளன் பூசித்த லிங்கம். நவக்கிரக மாடத்தூண் ஒன்றில் சிறிய பிறையில் நெல்லிக்கனி பிள்ளையார்.

வடக்கு திருச்சுற்றில் இரண்டு துர்க்கைகள், திருநீலகண்டர், லிங்கோத்பவர் எழுந்தருளியுள்ளனர்.  சண்டிகா மகிஷாசுரமர்த்தினி தனிக் கோட்டத்தில் எட்டுக்கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றாள். நுணுக்கமான வேலைப்பாடுகளுடன்  கூடிய அற்புதத் திருமேனி. திருவிழிகளில் அபார கருணையும், நாசி வளைவில் ரௌத்ரமும் கலந்த தோற்றம், இவளை வழிபட சத்ரு பயம், வழக்கு, நோய், தீய சக்திகளின் பாதிப்பு சூரியனைக் கண்ட பனி போல விலகும். நவமியில் பூசித்தால் நன்மை அனைத்தும் வழங்குகின்றாள். பௌர்ணமியன்று பூசித்தால் பரிபூரண வாழ்வளிப்பாள்.

இச்சுற்றில் ஆதி சங்கரரின் கற்திருமேனி உள்ளது. அவரின் ஆணவம் களைய கமலாம்பிகை சுவடி ஒன்றை கருவறையில் வைத்து அதனை குருக்கள் கனவிலும் எடுத்துரைத்து மறுநாள் அச்சுவடியின் விளக்கத்தை ஆதிசங்கரரிடம் குருக்கள் கேட்க  சரஸ்வதியின் அருள் பெற்ற சங்கரர் புரியாமல் சங்கடப்பட கமலாம்பிகையின் சரண் பணிந்து ஆணவம் நீங்கினார் என்கிறார்கள்.

புற்றிடங்கொண்டாரின் சன்னதியின் வடபுறம் நிர்மால்ய வாசலுக்கு நேராக ருணஹரேஸ்வரர். பிறவிக் கடனை தீர்ப்பதுடன்,  தீராத நோய்களையும், திரும்பி வராத கடனையும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், இவரை வழிபடும் பக்தர்களுக்கு தீர்த்து வைப்பதால் இவர் ருண விமோசனர் என்றழைக்கப்படுகிறார். இலிங்க ரூபத்தில் அருள் பாலிக்கும் இவரை அமாவாசையன்று அபிஷேகம், உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபட்டால் மிகவும் பலன் கிட்டும். தற்போது பித்தளைக் கவசத்தில் ஒளிர்கின்றது இவர் சன்னதி.

இவருக்கு அருகே ஆதி சண்டிகேஸ்வரர். அற்புதமான செப்புத்திருமேனி. வீதி விடங்கப்பெருமான் திருவீதி வலம் வரும் போது பஞ்சமூர்த்திகளில் ஒருவராக வலம் வருபவர்,  பங்குனி உத்திரப் பெருவிழாத் திருநாள் குறித்து ஓலை அறிவிப்பவர்,  எம்பெருமானின் ஆழித்தேரோட்டத்தின் போது உடன் வலம் வருபவரும் இவரே. இவர் பூசித்த லிங்கத்திருமேனி இவரது சன்னதிக்கு  அருகில் உள்ளது.

அனைத்து சிவஸ்தலங்களிலும் ஒரு சண்டிகேஸ்வரர் மட்டுமே அருள் பாலிப்பர் ஆனால் திருவாரூரில் மட்டுமே இரண்டு சண்டிகேஸ்வரர்கள் அருள் பாலிக்கின்றனர். முதலாமவர் ஆதி சண்டிகேஸ்வரர், இரண்டாமவர் எம சண்டிகேஸ்வரர்.  திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவரும் சிவகணங்களே ஆவர். ஆதலால் எமனுக்கு இவ்வூரில் வேலை இல்லை என்பதால் அவன் தியாகேசரிடம் முறையிட  எம்பெருமானும் கருணையுடன் எமனுக்கும்                          சண்டிகேஸ்வரப் பதவி அளித்தார் என்பது ஐதீகம்.

எமனுக்கு சண்டிகேஸ்வர பதவி கொடுத்த தலம் என்பதால், எமபயமுள்ளவர்கள் இத்தலத்தில் வழிபடுவது நலம் பயக்கும். எமசண்டிகேஸ்வரர் சடை, தாடியோடு ஒரு காலை ஊன்றி முழங்காலில் முகம் வைத்து,   நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார். மனு வேந்தனை சோதிக்கப் புறப்பட்ட தியாகேசப் பெருமான் தாய்ப்பசு வேடம் கொண்டார். எமனை அழைத்தார், ஆணையிட்டார். எமன் கன்றாகினான். வீதிவிடங்கன் தேர்க்காலில் கன்று (எமன்) மாய்ந்தது. எமன் உயிர்த்தெழும் வரை சண்டிகேஸ்வரரை எமன் பதவிக்குரிய பணியை பார்க்கப் பணித்தார் பெருமான் என்பர் பெரியோர்.



பூங்கோவிலின் கூரை ஓவியம்


வடக்குத் திருச்சுற்றின் இறுதியில் கிளிக்குறடு மேடையில் சந்திரசேகரர், தருணேந்து சேகரியுடன் அருள் பாலிக்கின்றார். தியாகேசர் திருமுன் பட்டம் புனைந்து திருக்கோயில் உற்சவங்களில் எழுந்தருளுபவர் இவர். சந்திரனுக்குரிய இவ்வாலயத்தில் ஈசான மூலையில் எழுந்தருளியுள்ள இவர் சாதகனின் சிரசில் ஈசான அனுபவத்தை உணர்த்துகிறார்.

வடகிழக்குப்பகுதியில் காலபைரவர் அருள் பாலிக்கின்றார். இவரது திருமேனியில் 12 இராசி சக்கரங்களும் உள்ளன என்பர். அடுத்து ஐயனின் ஐம்முகங்களைக் குறிக்க பஞ்ச லிங்கங்கள். இவர்கள் வன்மீகர் எழுந்தருளும் பூங்கோயில், தியாகேசர் எழுந்தருளும் பொற்கோயில் முதல் திருசுற்றில் அருள் பாலிப்பவர்கள். 

புற்றிடங்கொண்டார் மற்றும் தியாகேசரின் கருவறை சுற்றுச்சுவரில் பெருமானின் பல ஆடற்கரணங்கள் அவரே ஆடுவது போல அருமையான ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. அஷ்டபுஜங்களுடன் ஸ்வதிக்க கரணத்திலும், விஷ்ணுக்கிராந்த கரணம், ஊர்த்வஜானு கரணம், நிகுஞ்சிதம், லலிதம், ஊர்த்துவதாண்டவம் என்று பல் வேறு ஆடற்கரணங்களின் ஓவியங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து. அவையனைத்தையும் இப்போது புதிதாக வர்ணம் தீட்டி கண்ணாடி காப்பிட்டு காப்பாற்றியுள்ளனர். இனி இரண்டாம் சுற்றில் அமைந்துள்ள சன்னதிகள் எவை என்று காணலாம் அன்பர்களே.


                                                           திருப்பாத தரிசனம் தொடரும் . . . . 

Tuesday, February 25, 2020

திருப்பாத தரிசனம் - 10



திருவாரூர் திருத்தலத்தின் சிறப்புகள்

சுந்தரரும் பரவையாரும் தியாகராஜப்பெருமானை 
வணங்கும் கோலம்


நாம் முதலில் தரிசிக்கின்ற தலம் சப்தவிடங்க தலங்களில் முதன்மைத் தலமான திருவாரூர் ஆகும். நுண் மணலால் ஆன புற்றாக சுயம்புவாக மூலவராக அருள் பாலிக்கின்றார். திருமாலும், வாசவனும்  பூசித்த மூலமூர்த்தி உற்சவராக இத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.வாருங்கள் திருவாரூரின் சிறப்புகளை முதலில் காணலாம்.  

பாடிளம் பூதத்தினானும் பவளச்செவ்வாய் வண்ணத்தினானும்
கூடிளமென் முலையாளைக் கூடிய கோலத்தினானும்
ஓடிளவெண் பிறையானும் ஒளிதிகழ் சூலத்தினானும்
ஆடிளபாம் பசைத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே.

என்று அப்பர் பெருமான் பாடிய சிவபெருமான், நம்மை எல்லாம் உய்விக்க ஆலமுண்ட நீலகண்டனாக, தியாகராஜ மூர்த்தியாக,  அம்மையுடனும், ஸ்கந்தனுடனும் அருள் பாலிக்கும் தலமே திருவாரூர். சப்தவிடங்க ஸ்தலங்களுள் முதன்மையானது இத்தலம். சைவ சமய மரபில் பெரிய கோவில் என்றால் அது திருவாரூரைக் குறிக்கும்.

விராட் புருஷனுடைய மூலாதாரத் தலமாகவும், பூமிதேவியின் ஹிருதய கமல தலமாகவும் விளங்கும் தலம்.  

திருமாலும் நான்முகனும் காண முடியாத திருவடிகளால் ம்மண்ணுலகில் தன் தோழனான சுந்தரருக்காக  எம்பெருமான் பரவையாரிடம்  தூது சென்ற  பெருமையுடையது சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குகின்ற இத்தலம்.

முக்தி தலங்களுள் பிறக்க முக்தி தரும் தலம். எனவே வன்தொண்டரும், எம்பிரான் தோழருமான சுந்தர மூர்த்தி நாயானார் "திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்"  என்று தனது திருத்தொண்டர் தொகையிலே பாடுகின்றார்.

மாணிக்கவாசகரும்
திருவார் பெருந்துறை மேய பிரான் என்பிறவிக்
கருவேரறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை
அருவாய்ரூருவமுன் ஆய பிரான் அவன் மருவும்
திருவாரூர் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமே
என்று கொண்டாடுகிறார். திருவாரூர் பிறந்தவர்களிடம் எமன் வரமாட்டான். முக்திப்பேறு தந்து இறைவனே அழைத்துக்கொள்வார் என்பதால் திருவாரூர் பிறக்க முக்தித்தலம் ஆகும். ஆம் ஆரூர் பெருமானை வழிபட்டால் எல்லாம் கிட்டும் அவர் ஒன்றை மட்டும் அளிக்க இயலாதவராய் இருக்கிறார். என்ன அது மறு பிறவி!. எனவே இது முக்தித் தலம். ஆம் “உதித்தவர் உதித்திடாத ஆரூர்” ஆகும்.

நமி நந்தி அடிகளுக்கு இறைவன் திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவரையும்  சிவகணங்களாகக் காட்டினார், இதனை   “ஞான மறையோய்! ஆரூரில் பிறந்தாரெல்லாம் நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய்” என்றருளிச் செய்கின்றார் பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான்.

மற்ற முக்தித்தலங்கள் தில்லையில் தரிசிக்க முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி, காசியில் இறக்க முக்தி. மற்ற தலங்களில் நாம் முயன்றால் முக்தி பெறுவது சாத்தியம். திருவாரூரில் பிறந்து முக்தி பெறுவதென்பது பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மட்டுமே சாத்தியம். ஏனெனில் பிறப்பினை நிர்ணயிப்பது,  மது நிலைக்கு அப்பாற்பட்டது. இதனால்தான் திருவாரூர் பிறந்தார்கள் அனைவரும் தொகையடியார்களாக போற்றி வணங்கப்படுகின்றனர்.

மக்கள் கல்லாலும் உலோகத்தாலும் கடவுளர் உருவத்தை அமைத்து வழிபடுவதற்கு முன்னர் மரத்தையும், புற்றுகளையும் வழிபட்டனர். ஆதலின் புற்று வழிபாடு தொன்மையானது.  எனவே 
சொன்ன நாட்டிடைத் தொன்மையில் மிக்கது
மன்று மாமலராள் வழிபட்டது
வன்னி யாறு மதி பொதி செஞ்சடைச்
சென்னியார் திருவாரூர் திருநகர் - என்று பாடல்பெற்ற திருவாரூர்   பஞ்ச பூதத்தலங்களில் பிருத்வி தலம் ஆகும்.

இறைவன் வெள்ளை மணலாலான இலிங்க ரூபத்திலேயே சுயம்புவாக  இத்தலத்தில் தோன்றியதால், இத்தலம்  பஞ்ச பூதத்தலங்களில் பிருத்வி (நிலம்) தலமாகும்.  திருவாரூரில் உள்ள ஆர் என்னும் விகுதி -பிருத்வி (பூமி)  இதையே குறிக்கின்றது. தேவேந்திரன் அமைத்த அயிர் எனும் ஒருவகை நுண்மணல் புற்றில் தோன்றியவரே மூலவர் வன்மீகநாதர். “அயிராவணமே எம் அம்மானே” என்பது அப்பர் வாக்கு.

ஆறதனில் மணல் குவித்து   காமாட்சி அம்பாள்   அரிய தவம் புரிந் திருக்கச்சி என்னும் காஞ்சி தலத்தையும் பிருத்வி தலமாக கருதுகின்றனர். அத்தலத்திலும் ஐயன் சுயம்பு, மணலால் ஆனவர்.  மற்ற பஞ்சபூத்தலங்கள் அப்புத்தலம் (நீர்) - ஜம்புகேஸ்வரம் என்னும் திருவானைக்கா, அக்னித்தலம் - திருவண்ணாமலை, ஆகாயத்தலம் – சிதம்பரம், வாயுத்தலம் – திருக்காளத்தி ஆகும்.

ஆதாரத் தலங்களுள் குண்டலினி சக்தியின் மூலாதாரமாக விளங்கும் தலம் திருவாரூர். பூமியாகிய விராட புருஷனின் மூலாதாரச் சக்கரமாக இத்தலம் விளங்குகின்றது. எனவே இத்தலம் திருமூலட்டானம் என்றும் வழங்கப்படுகின்றது. மற்ற ஆதாரத்தலங்கள் சுவாதிஷ்டானம் - திருவானைக்காவல், மணிபூரகம் (நாபி) - திருவண்ணாமலை, அநாகதம் (இதயக் கமலம்) - சிதம்பரம், விசுத்தி (கழுத்து) - திருக்காளத்தி, ஆக்ஞை (புருவ மத்தி) - காசி, சகஸ்ராரம் (உச்சி) - திருக்கயிலாயம்.

நமது பாரதநாடு முழுவதும் சக்தி பீடங்களென்று அம்பிகை சிறப்புடன் விளங்கும் 64 பராசக்தி பீடங்களுள் முதன்மையானதாகவும் ஆதார பீடமாகவும் போற்றப்படுகின்றது திருவாரூர். மேலும் அம்பாளின் அக்ஷித்தலங்களுள் ஒன்று. அம்மை இத்தலத்திலே கமலாம்பாளாக யோக நிலையிலே கோவில் கொண்டுள்ளாள். திருமகளும் அலைமகளும் வழிபட்டதால் கமலாலயபுரம் என்று புகழ் பெற்ற தலம்.

திருவாரூர் ஆழித்தேர்

இத்தலத்தின் விரிந்து பரந்த திருக்குளமான கமலாலயத்தின் பரப்பளவு கோவிலின் அளவே. கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை நந்தவனம் ஐந்து வேலி என்பது பழமொழி. (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம், 700 அடி அகலம் ஆகும்)
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகள் மட்டுமல்ல தமிழகத்திலேயே மிகப்பெரியதான ஆழித்தேரை உடைய தலம். பெரிய தேரான ஆழித்தேரில் அஜபா நடனமிட்டு தியாகேசர்  உலா வரும் தலமும் இதுவே.

சங்கர சேவகனென்னும் சோழ அரசனது வேண்டுகோளின்படி ஸ்ரீதியாகேசர் அரச வடிவங்கொண்டருளி பல வருடங்கள் அரசாட்சி செய்த தலம்.

திருமால், திருமகள், பிரம்மா, மன்மதன், இந்திரன், யமன், அகத்தியர், விசுவாமித்திரர், மகாபலி, துர்வாசர், முசுகுந்தன், தசரதன், ஸ்ரீராமன், லவ-குசர். புரூரவசு, தேவர், யட்சர், கின்னரர், கிம்புருடர், சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்,  மாணிக்க வாசகர், தண்டி அடிகள், சோமாசி மாற நாயனார், விறண்மிண்டர் என பலரும் தியாகேசரை வழிபட்டு வரம் பெற்ற திருத்தலம்.

திருவந்திக்காப்பழகர் என்ற திருநாமத்திற்கேற்ப தியாகராஜப் பெருமானுக்கு செய்யப்படும் அறுகால பூசைகளுள் சாயரட்சை பூஜை மிகவும் சிறப்பானது. இப்பூசை நித்திய பிரதோஷ பூசை எனறழைக்கப்படுகிறது இப்பூசையின் போது தேவேந்திரன், தேவர் குழாத்துடன் கலந்து கொள்கிறான் என்பது ஐதீகம். தியாகராஜப்பெருமானின் மாலை பூஜை பிரதோஷ பூஜைக்கு இணையானது.  எனவே த்தலம் நித்ய பிரதோஷ தலம் ஆகும். அர்ச்சகர் நீண்ட அங்கி, தலைப்பாகை அணிந்து தேவேந்திரன் கோலத்தில் பூசிக்கின்றார். மற்ற தலங்களின் சிறப்பு பூசைகள் திருக்குற்றாலத்தில் திருவனந்தல் பூசையும், இராமேஸ்வரத்தில் காலை பூசையும், திருவானைக்காவில் மதிய பூசையும், மதுரையில் இராக்கால பூசையும், தில்லையில் அர்த்தஜாம பூசையும் சிறப்பு.


33 ஏக்கர் பரப்பளவில் (14 லட்சம் சதுர அடி) நிலப்பரப்பில் அமைந்துள்ள இவ்வாலயம் இந்தியாவின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட ஆலயம் ஆகும்.

திருவாரூர் கோபுரங்கள்

திருவாரூரில் கோவிலில் மொத்தம் 84 விநாயகர்கள் உள்ளனர். அம்மன் சன்னதி பிரகாரத்திலுள்ள நடுக்கம் தீர்த்த விநாயகர் நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள், மனப்படப்பு இருப்பவர்கள் வழிபட நன்று.  கமலாலய குளக்கரையில் உள்ள மாற்றுரைத்த பிள்ளையாரை பெண்கள் பொன் நகை வாங்குவதற்கு முன் வணங்குகின்றனர். சிவன் சன்னதி முதல் பிரகாரத்தில் ஐந்து தலை நாகத்தின் நடுவில் விரிந்த தாமரைப்பூவின் மீது நடனம் ஆடும் நிலையில் உள்ள மூலாதார விநாயகரை யோகம் பயில்பவர்கள் வழிபட நன்று. மூலாதாரத்தின் அதி தெய்வமான கணபதியே, பரமானந்தத்தின் உருவகமான ஆடல்வல்லான் போன்று நடனமாடி மூலாதாரத்தின் (குண்டலியின்) poruபெருமையை உலகுக்கு உணர்த்துகின்றார்.   வாதாபி கணபதி முத்துசுவாமி தீட்சிதரின் பாடல் பெற்றவர். சேரமான் பெருமாள் அளித்த 120 பட்டிணப்படி பொற்காசுகளால் உருவானவர் ங்கலக்காசு பிள்ளையார் இவர் தியாகராஜஸ்வாமிக்கும் வான்மீகநாதருக்கும் இடையில் அமர்ந்திருக்கின்றார். பிரம்மோற்சவத்தின் போது பஞ்சமூர்த்தியாக வலம் வருபவர் இவரே.  ஆகாய விநாயகர் மூன்றாம் சுற்றில் தென்புற   வளாகத்தில் எழுந்தருளியுள்ளார். சுந்தரர் வெள்ளை யானையில் கயிலை செல்வதை அறிந்த பரவை நாச்சியார் விநாயக அவசர அவசரமாய்   பூசை செய்ய   பிள்ளையார் எப்போதும் போல பூசிக்கப் பணிந்தார். பூசை முடிந்த பின் பரவையை துதிக்கையால் தூக்கி   கயிலையின் வாயிலில் சேர்ப்பித்தாராம். தட்டஞ்சுற்றி மண்டபத்தில் பத்து திருக்கரங்களுடன் மடியில் தேவியை அணைத்த வண்ணம்  அருட்காட்சி நல்குகிறார் வல்லப கணபதி.  மேலும் வீதி விடங்க விநாயகர், வாதாபி கணபதி, ஆசை விநாயகர், உச்சிஷ்ட கணபதி, பொற்கம்ப விநாயகர், ஆகியோர் சிற்ப சிறப்பாலும், பக்திச் சிறப்பாலும் போற்றப்படுகின்றனர்.

திருவாரூர் ஆலயத்தில் 8 துர்க்கைகள் அருள் பாலிக்கின்றனர். முதல் பிரகாரத்திலுள்ள மகிசாசுரமர்த்தினியே முக்கிய பிரதான துர்க்கை. இத்துர்க்கை நுளம்பபாடியிலிருந்து வெற்றிச் சின்னமாகக் கொண்டு வரப்பட்ட அம்மன். மேலும் இரண்டு துர்க்கை சன்னதிகள் முதல் பிரகாரத்திலும், இரண்டாம் பிரகாரத்தில் நான்கு துர்க்கைகளும், கமலாம்பாள் சன்னதியில் ஒரு துர்க்கையுமாக எட்டு துர்க்கை சன்னதிகள் சிறப்பாக திருவாரூரில் அமைந்துள்ளன.

எம்பெருமான் இத்தலத்திலே விடங்கராகவும், இருந்தாடும் அழகாராக, தியாகராஜப் பெருமானாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். டங்கம் என்றால் உளி, உளியால் செதுக்கப்படாமல் தானே தோன்றியதால் இவர் விடங்கர். திருவாரூர் வீதி விடங்க செண்பக தியாகர்,  மரகத மேனியர் ஆவார். திருவீதியில் வரும் இறைவன் அழகைக் கண்டு பக்தர்கள் காமுறும் செயலைக் கொண்டே இறைவனுக்கு வீதி விடங்கர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கவேண்டும் என்பது ஆன்றோர் கருத்து.

நித்தியப்படி அபிஷேகம் இவருக்குத்தான்.  தினமும் மூன்று முறை காலை, உச்சிக்காலம் மற்றும் அர்த்தசாம பூசையின் போது மரகத வீதி விடங்கருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. இவருக்கு வெள்ளிக் கவசம் சார்த்தி பாதுகாத்து வருகின்றனர்.

சேலை யுடையழகா தேவரகண் டாகழுநீர்
மாலை யழகா மணிமார்பா - வேலை
அடங்கார் புரமெரித்த வாரூரா வீதி
விடங்கா பிரியா விடை -   என்று காளமேகப்புலவர் தியாகேசனைப் போற்றுகின்றார்.

மதுரையில் எம்பெருமான் 64 திருவிளையாடல்கள் புரிந்தருளினார், திருவாரூரிலோ எம்பெருமான் 364 திருவிளையாடல்கள் புரிந்து அருளியுள்ளார்.

ஆழித்தேர் - கமலாலய குளம் - மேற்கு கோபுரம்


நந்தி இத்தலத்திலே தியாகராஜபெருமானுக்கு எதிரிலே மற்ற சிவாலயங்களில் உள்ளது போல் படுத்த கோலத்தில் இல்லாமல் நின்ற கோலத்திலே விளங்குகின்றார் தியாகராஜபெருமானுக்கு முன்னால் படுக்கக்கூடாது என்ற மரியாதையின் நிமித்தம் இவ்வாறு நின்ற நிலையில் உள்ளார் என்பர். இவ்வாறு நந்தியெம்பெருமான் நிற்பதைக் கண்டு மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்

பிணை அடியார் குறைக்கிரங்கிப் பெருமான்நீ எழுந்தருளின்
துணையடிகள் கன்றமுனம் தூது சென்றார் போலடையாது
அணைகுதியென் வெரிநிவர்ந்தென் றருள்நோக்கி நிற்பது போல்
இணையில் விடங் கப்பெருமான் எதிர்நிற்கும் மால்விடையே

பெருமானே! முன்பொருகால் தோழன் சுந்தரருக்காக பாத மலர்கள் நோக, மண் தோய தூதுவனாய் நடந்து சென்றாயே! அது போல் இனி நடந்து போகக் கூடாது. அப்படி செல்வதென்றால் என் முதுகில் ஏறிக்கொண்டுதான் செல்ல வேண்டும்” என்கிற குறிப்போடு நின்ற கோலத்தில் நந்தியெம்பெருமான் காட்சி தருகின்றார் என்று பாடுகின்றார்.

நவக்கிரகங்கள் தியாகராஜரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தலம். இப்பதி பூலோக கயிலாயம் என்பதால் இத்தலத்தில் நவக்கிரகங்களும் ஒரே வரிசையில் கிழமைக்கேற்ப தியாகராஜரை வழிபடும் நிலையில் விளங்குகின்றன. தியாகேசர் சன்னதியில் மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்கள் இவ்வாறு தீபவடிவில் தியாகேசரை வழிபடுவதாக ஐதீகம்.

சதயகுப்தன் என்ற அசுரன், தேவர்களுக்கு தொந்தரவு கொடுத்தான். இவனை சனிதோஷம் பிடித்தது. எனவே அவன்  நவக்கிரகங்களை எதிர்த்து போரிட்டான். பயந்து போன கிரகங்கள் திருவாரூர் சிவனிடம் முறையிட்டனர். சிவன், “என்னை நாடி வரும் பக்தர்களுக்கு த்தொந்தரவும் கொடுக்கக்கூடாதுஎன்ற நிபந்தனையின்படி நவக்கிரகங்களைக் காப்பாற்றினார். எனவே, நவக்கிரகங்கள் திருவாரூரில் நேர்கோட்டில் சிவனை நோக்கியபடி அமைந்துள்ளன. கிரகங்கள் பக்தர்களுக்குத் தொல்லை கொடுக்கிறதா?  என்பதைக் கண்காணிக்க விநாயகர் சிலை, கிரகங்களின் சன்னதியில் உள்ளது. எனவேதிருநள்ளாறு சென்றாலும் திருவாரூர் செல்ல வேண்டும்என்பார்கள் என்றொரு ஐதீகமும் உண்டு. நவகிரகத்தலங்களுள் திருவாரூர் சந்திரன் பரிகாரத்தலம்.
வ்வாலயத்தில் இரண்டு சண்டிகேஸ்வரர்கள் சன்னிதி உள்ளது. இத்தலத்தில் பிறக்க முக்தி என்பதால் எமனுக்கு இங்கு வேலையில்லை என்பதால் எமனே இங்கு சண்டிகேஸ்வரராக எமசண்டிகேஸ்வரராக எழுந்தருளியுள்ளான். எமசண்டிகேஸ்வரரின் திருவுருவம் ஜடாமுடி தாடியுடன் உள்ளது.  

பூங்கோவில் என்றும் நடுவண நாதர் கோவில் என்றும் அழைக்கப்படும் இத்திருக்கோவிலில் 100 க்கு மேற்பட்ட சன்னதிகள், 5 திருச்சுற்றுகள் அவற்றில்  3 பெரிய பிரகாரங்கள், 12 பிரம்மாண்டமான மதில்கள்,  9 இராஜ  கோபுரங்கள், 80 விமானங்கள், வரலாறு கூறும் 13 மண்டபங்கள்,   14 மதில்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 84 விநாயகர்கள், 365 சிவலிங்ங்கள், 80 தனித்துவம் கொண்ட விமானங்கள், ஆயிரம் கற்தூண்கள்,  என்று 15 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து அமைந்திருக்கின்றது. ஏழு கோபுரங்களையும் இந்திர லிங்கத்தின் அருகில் உள்ள கல்லின் மேல் நின்று தரிசிக்கலாம். இவ்வாலயத்திற்குள் சென்று விட்டால் குவிந்த கரங்களை விரிப்பதற்கு வழியே இல்லை. அவ்வளவிற்கு அடுத்தடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட சன்னதிகள் அமைந்துள்ளன. கும்பாபிஷேகத்தின் போது மூன்று நாட்களில்தான்  அனைத்து சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் செய்ய இயலும். அவ்வளவு சன்னதிகளை கொண்ட தலம்.

அரசர்களும் எண்ணற்ற பக்தர்களும் காலந்தோறும் திருவாரூர்ப் பெருமானைப் பூஜித்து வாழ்வும் வளமும் பெற்றுள்ளனர். இவ்வாறு ஆயிரக்கணக்கானவர்களால் நிறுவப்பட்டு பூஜிக்கப்பட்ட லிங்கங்களைக் காட்டும் வகையில் ஆயிரம் சிறு சிறுலிங்கங்களை கொண்ட சகஸ்ரலிங்கம் உட்பிரகாரத்தில் அமைந்துள்ளது.





சுந்தரமூர்த்தி நாயனார் இவ்வூர் இறைவர் தியாகராஜரிடம் தோழமை கொண்டு பழகினர் என்பது வரலாறு. இவரது தாயார் இசை ஞானியார் மற்றும் இல்லாள்  பரவை நாச்சியாரின் அவதாரத்தலமும் திருவாரூர். சுந்தரர் பரவையார் திருமணம் நடந்த தலம், பின்  திருவொற்றியூரிலே தான் இழந்த இடக்கண்ணை பதிகம் பாடி சுந்தரர் பெற்ற தலம். சுந்தருக்காக எம்பெருமானே தன் திருப்பாதம்  நிலத்தில் பதிய பரவையாரிடம் தூது நடந்த தலம். நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த தலம்.
தேவார பாடல் பெற்ற அறநெறி என்னும் அசலேஸ்வரம், ஆனந்தேஸ்வரம், ஆடகேஸ்வரம், சித்தீஸ்வரம், விஸ்வகாமதேஸ்வரம் என்று எண்ணற்ற சிவ சன்னதிகளையும் கொண்ட தலம்.  ஸ்ரீகமலாம்பாள் திருவாரூக்கு எழுந்தருளி தவக்கோலம் கொண்ட போது தோன்றிய மூர்த்தமே ஆடகேஸ்வரம் ஆகும். அருகே பரவை நாச்சியார் மண்ணால் கட்டி வழிபட்ட பரவையுண் மண்டலி திருக்கோவிலும் உள்ளது.

சக்தி வாய்ந்த தியாகராஜ சக்கரம் தியாகேசரின் வலப்பக்கத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் நம்முடைய பாவங்களையெல்லாம் நீக்கி அருளும் விமோசன தலம்.

திருவாரூர் தலத்தின் தலவிருட்சம் சிவப்பு பாதிரி மரம் ஆகும். இம்மரம் பூக்கும் ஆனால் காய்க்காது. இம்மரம் விதையின்றி ஒரு கிழங்கிலிருந்து வெடித்து வந்து நான்கு கிளைகளாக அமைந்துள்ளன. நால் வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களின் ஆணவத்தைக் களைந்து விருட்சமாகின.

திருவாரூர் ஆலயத்தில் யாக சாலை, மகா யாக சாலை, பிள்ளையார் யாக சாலை, முருகன் யாக சாலை என்று பல  யாக சாலைகள் உள்ளன.

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் காப்பியமான திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணத்தின் மூலமான திருத்தொண்டர் தொகை பாடப்பட்ட தலம். இப்பாடலுக்கு “தில்லை வாழ அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று முதல் அடி எடுத்துக்கொடுத்தவர் ஆருர் தியாகேசர் ஆவார்.

இத்திருத்தலத்தின் தேரும் திருவிழாவும் திருக்கோயிலும் திருக்குளமும் இவ்வூர் பஞ்சமுக வாத்தியம் எனப்படும் குடமுழாவாத்தியமும் இவ்வூர்த் தேவாரங்களில் வைத்துப் பாடப் பெற்றுள்ளன.

திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சைவசமய குரவர் நால்வராலும் பாடல் பெற்றது இத்தலம்.  330 தேவாரப் பாடல்களும், திருவாசகப் பாடல்களும் இத்தலத்தைப் போற்றுகின்றன.  மொத்தம் 41 திருப்பதிகங்கள் பெற்ற தலம், பதிகங்களின் எண்ணிக்கையில் சீர்காழிக்கு அடுத்ததாக இரண்டாவதாக விளங்குகின்ற தலம். காவிரித் தென்கரைத் தலங்களில் மிகவும் அதிகமான பாடல் பெற்ற தலம். அப்பர் பெருமானின் அதிகமான பாடல் பெற்ற தலம். எங்குமே கண்டறிய முடியாத எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருளை திருவாரூரில் கண்டு கொண்டேன். கண்டவுடன் அவன் ஒருவனைத்தவிர மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டேன் என்று அப்பர் பெருமான் இத்தலத்தைப் பாடிப் பரவுகிறார். ஒன்பது திருமுறைகளிலும் பாடல் பெற்ற தலம். மூவர் முதலிகள் பாடிய முதல் ஏழு திருமுறைகளில் இடம் பெற்ற  தலங்கள் மூன்றினுள் ஒன்று.  மற்ற தலங்கள் திருமறைக்காடு மற்றும் கச்சி ஏகம்பம் ஆகியவை ஆகும்.



இது தவிர திருவிசைப்பா, திருப்பல்லாண்டு பெரியபுராணம், பன்னிரு திருமுறைகளில் நெடுகிலும் போற்றி பாடப்பட்டு உள்ளது. அருணகிரிநாதர்,  சங்கீத மும்மூர்த்திகள் - தியாகையர், முத்துசாமி தீட்சதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோரும் கயிலை ஞானப்பிரகாசர், குருஞானசம்பந்தர், இரட்டைப்புலவர், அந்தககவி வீரராகமுதலியார்,  மாமன்னர் சகாஜி,  வள்ளலார் ராமலிங்க அடிகள் ஆகியோரும் திருவாரூரைப் பாடியுள்ளனர். கலம்பகம், பிள்ளைதமிழ், குறவஞ்சி போன்ற மற்றும் எண்ணிறந்த செந்தமிழ் இலக்கியங்களிலும் இவ்வாலயம் போற்றிப் பாடி சிறப்பிக்கப் பெற்றுள்ளது.

அஜபா ரஹஸ்யம், ஆடகேச்வர மஹாத்மியம், கமலாலய மஹாத்மியம், நாகர கண்டம், தியாகராஜ லீலை, சமத்காரபுர மஹாத்மியம், தியாகராஜ மஹாத்மியம், தேவயாகபுர மஹாத்மியம், தேவாஸ்ரய மஹாத்மியம், முசுகுந்தபுர மஹாத்மியம், ரமாகயா மஹாத்மியம், ஸ்ரீபுர மஹாத்மியம், ஸ்கந்தபுர மஹாத்மியம், க்ஷேத்திரவர மஹாத்மியம் என்று பல சமஸ்கிருத நூல்கள் இத்தலத்தை பற்றி உள்ளன.  இது தவிர தெலுங்கு, மராட்டி ஆகிய மொழிகளிலும்  இத்தலத்தைப் பற்றி  நூல்கள் உள்ளன.

தேரூரார் மாவூரார் திங்களூரார்  திகழ் புன்சடைமுடி மேல் திங்கள் சூடி
கார் ஊரா நின்ற கழனிச்சாயல் கண்ணார்ந்த நெடு மாடம் கலந்து தோன்றும்
ஓரூரா உலகெலாம் ஒப்பக்கூடி உமையாள் மணவாளா என்று வாழ்த்தி
ஆரூரா! ஆரூரா!  என்கின்றார்கள் அமரர் தம் பெருமானே எங்குற்றாயே! – என்று தேவர்கள் யாவரும் உலகெங்கும் தேடி பல உலகத்தவரும் திருவாரூக்கே வந்து விட்டார்கள் என்று அப்பர் பெருமான் இத்தலத்தின் பெருமையை சம்பந்தப் பெருமானுக்கு விளக்குகின்றார். சம்பந்தர் தொலைவில் இருந்து திருவாரூரை தரிசித்த போது பொன்னுலகம் போல் அவருக்கு காட்சி தந்ததாம். சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் திருமலை சிறப்பாக கயிலை மலையையும், திருநாட்டு சிறப்பாக சோழ நாட்டையும், திருநகர சிறப்பாக திருவாரூரையும் அதன் நடுநாயகமாக அமைந்துள்ள பூங்கோயிலையும் சிறப்பித்து பாடியுள்ளார். அதில் திருவாரூர் மிகவும் தொன்மையானது என்றும், திருமகளால் வழிபடப்பெற்றது, என்றும் சுந்தரர் பொருட்டு பரவையிடம் தூது சென்ற போது இறைவனின் தாமரையடிகளின் மணம் தெருவில் வீசுகின்றது என்றும் போற்றுகின்றார். 

திருவாரூரின் நடுநாயகமாக விளங்கும் பூங்கோவிலை
இனையவகை அரநெறியில் எண்ணிறந்தோர்க் கருள்புரிந்து
முனைவரவர் மகிழ்ந்தருளப் பெற்றுடைய மூதூர்மேல்
புனையும் உரை நம்மளவில் புகலலாந் தகமையதோ?
அனையதனுக் ககமலராம் அறவனார் பூங்கோயில் - என்று சிறப்பித்துப் பாடுகின்றார்.

சோழ மன்னர்களின் இராஜதானி அதாவது  தலைநகரங்கள் ஐந்தினுள் ஒன்று திருவாரூர். பிற்காலச் சோழர்கள் முடிசூடிக் கொள்ளுமிடமாகவும் விளங்கிய தலம். சோழர்கள் மட்டுமல்லாமல் பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், தஞ்சை நாயக்கர் மற்றும் மராட்டிய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இவ்வாலயத்தை சிறப்பாக நிர்வகித்துள்ளனர்.

சோழ மண்டலத்தை ஒரு சிவாலயாமாகக் கருதினால் கருவறை (மகாலிங்கம்) திருவிடைமருதூர் என்றும் அதன் பரிவாரத்தலங்களில் சோமாஸ்கந்தர் தலமாக திருவாரூர் விளங்குகின்றது. மற்ற பரிவாரத்தலங்கள் திருவலஞ்சுழி – விநாயகர், சுவாமிமலை – சுப்பிரமணியர், சிதம்பரம் – நடராஜர், சீர்காழி – பைரவர், சேய்லூர் – சண்டிகேஸ்வரர், ஆலங்குடி – தக்ஷிணாமூர்த்தி, திருமாந்துறை – சூரியன்   என்பது ஐதீகம்.

மாணிக்க வாசகர் பாடிய திருவாசகத்தலங்கள் எழினுள் ஒன்று,  மற்றத் தலங்கள் தில்லை, திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், திருத்தோணிபுரம் என்னும் சீகாழி, திருப்பெருந்துறை, உத்திரகோச மங்கை ஆகும்.

நமிநந்தி அடிகள், செருந்துணை நாயனார், தண்டி அடிகள், கழற்சிங்க நாயனார், விறன்மிண்டர், போன்றோர் திருத்தொண்டு செய்து முக்தி அடைந்தது இத்தலத்தில்தான். 
சோழ மன்னர்களுள் தன்னிடம் சரணடைந்த ஒரு புறாவுக்காக தன் தசையையே அறிந்து கொடுத்த சிபி சக்கரவர்த்தியும், ஒரு பசுவின் துயர் துடைக்க தன் குலத்திற்கு ஒரே மகன் என்ற போதும் அவனையே  தேர்க்காலில் பலியிட்ட மனு நீதி சோழனும் தலை நகராகக் கொண்டு ஆண்ட தலம்.

ராஜராஜ சோழனின் பாட்டியார் செம்பியன் மாதேவி அவர்களால் மண்தளியாயிருந்த அசலேஸ்வரர் சந்நிதியை கற்றளியாகக்  கட்டப்பட்டதாக கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.  ச்சந்நிதியை பார்த்தே பிற்காலத்தில் தஞ்சை பெரியகோயில் கட்டப்பட்டதாக ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுகிறார்கள்.

அனைத்து புகழ் மிக்க மன்னர்களின் கை வண்ணமும் கல்வெட்டும் இத்திருக்கோவிலில் உள்ளன. அவர்களின் 91 கல்வெட்டுகள் ஆரூரின் பெருமைகளையும், தியாகராஜரின் லீலைகளையும், கோயிலுக்கு அவர்கள் செலுத்திய நன்கொடைகளைப் பற்றியும், திருவிழாக்களின் சிறப்புகளைப் பற்றி அறியவும் உதவுகின்றன. செப்பேடுகளில் ஸ்ரீதியாகராஜ சுவாமிக்கு அளித்த  அறக்கட்டளைப் பற்றிய செய்திகள் உள்ளன.

இத்தலத்தில் தருமபுர ஆதீன குரு முதல்வர் ஸ்ரீஞானசம்பந்த சுவாமிகள், கமலை ஞானப்பிரகாசரை தம் குருவாக ஏற்றுகொண்டு உபதேசம் பெற்று சொக்கலிங்க மூர்த்தி பூசையினை ஏற்றுக்கொண்டார்கள்.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகையர், சியாமா சாஸ்திரி மற்றும் முத்துசுவாமி தீக்ஷிதர் வாழ்ந்த தலம் திருவாரூர். முத்துசுவாமி தீக்ஷிதர் கமலாம்பாள் நவாவரண கீர்த்தனை இயற்றியுள்ளார். பராசக்தியை ஸ்ரீசக்கர வடிவில் வழிபடுவது மரபு.  ஸ்ரீசக்கரத்தின் ஒன்பது ஆவரணங்களையும் ஒவ்வொன்றாக பூஜிக்கும் முறைகளையும் அவற்றில் எழுந்தருளியிருக்கும் ஆவரண தேவதைகளின் சக்திகளையும் தெளிவாக விளக்குகின்றன நவாவரண கீர்த்தனைகள்.

தெய்வக் கைங்கரிய பணிகளுக்கு ஏற்ப ஆலயப்பணியாளர்களுக்கு பட்டப் பெயர்கள் சூட்டப்பட்டன.  தியாகரஜரை பூஜை செய்வோர் நயினார் எனவும், ஆபரணங்களை பாதுகாப்போரை பொற்பண்டார் எனவும், தீப விளக்கு கைங்கரியம் புரிவோரை பரமராயர், சுவாமி திருவுருக்களை சுமப்போரை விழா பிரமராயர், பாரி நாயனம் இசைப்போரை நயினார் அடியார், அபிஷேக தீர்த்தம் சுமந்து வருவோரை திருமஞ்சனர், நைவேத்தியம் தயாரிப்போரை பரிசாரகாரர் னவும்,. இறைவர்  முன் தேவாரம் ஓதுபவர்கள் கொண்ட சிறப்பு பெயர் திருப்பதிகம் விண்ணப்பிப்பார் னவும் அழைக்கப்படுகின்றனர்.  இத்தேவாரப் பதிகங்களின் சிறப்புப் பெயர்கல்வெட்டுகள் திருப்பதிகம்ஆகும்.

திருவாரூர் ஆலயத்தில் இன்றளவும் பணியாற்றி வரும் பணியாளர்கள் நாயன்மார் பெயர்களால் சுட்டப்பெறுவது மரபாக உள்ளது.


1. மெய்க்காவலர் – விறண்மிண்டர்
2. திருமாலைத்தொடுப்பவர் – செருந்துணைநாயனார்.
3. ஆலயத்தில் தீபமிடுபவர் – நமிநந்தியடிகள்.
4. ஆலய நிர்வாக அதிகாரி – தண்டியடிகள்.
5. அடியார் உபசரிப்பு – ஏயர் கோன் கலிக்காமர்
6. தூதுவளை இலை அளிப்பவர் – சோமாசி மாறனார்.  


தியாகேசர் அஜபா நடனமாடி  ஆலய உட்பவனி வரும் போது செண்டை மாலை (ஒரு ஜான் நீள மல்லி, செவ்வந்திப் பூ, மலர்களால் கட்டியது.) அணிந்திருக்க ஒவ்வொரு திசைக்குரிய தேவதை குறித்து, ஆலயத்தில் பணிபுரியும் ஒருவர் உரத்த குரலில் சொல்லி வரும் வழக்கம் இன்றும் தொடர்கிறது. அவர் கொண்ட பெயர் பூத நிருத்தம் என்பதாகும். இதன் தொடர்பாக ஈசான திசையில் உற்சவர் வரும்பொழுது ஆலய முட்டுக்காரர் என்பவர் சுத்த மத்தளத்தை தன் தலை மீது கட்டியுள்ள பரிவட்டத்தில் வைத்து மேலே இருகைகளையும் தூக்கியவாறு அதனை வாசிப்பார்.
எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவை யாய பராபரன்
அந்த மில் பக ழாரூ ரானெறி
சிந்தை யுள்ளும் சிரத்துள்ளுந் தங்கவே – என்று அப்பர் பெருமான் பாடிய இத்தனை சிறப்புகள் பெற்ற திருவாரூரில்
இறைவர்: புற்றிடங்கொண்டார், தியாகராஜர், அசலேஸ்வரர்.
இறைவி: சோமகுலாம்பிகை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள், கொண்டி அம்மன்,  வண்டார்குழலி.
தல விருட்சம்: சிவப்பு பாதிரி மரம்.
தீர்த்தம்: கமலாலயம், சங்கு தீர்த்தம், காய தீர்த்தம், வாணி தீர்த்தம் முதலியன
ஆகமம் : காமிகம்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் மற்றும் பலர்.

                                                       திருப்பாத    தரிசனம் தொடரும் . . . . . .