Showing posts with label திரிபுரசுந்தரி. Show all posts
Showing posts with label திரிபுரசுந்தரி. Show all posts

Sunday, September 27, 2020

திருப்பாத தரிசனம் - 39

                                              திருவான்மியூர் தியாகேசர் -2

                           

தொண்டை நாட்டுத் தேவாரத்தலங்களுள் இத்தலம் 25வது தலம் ஆகும்.  இன்று கான்க்ரீட் காடாக இருக்கும் திருவான்மியூர் அக்காலத்தில் ஒரு பக்கம் கடல் சூழ , ஒரு பக்கம் வயல்கள் சூழ நெய்தலும், மருதமும் இணைந்து காட்சியளித்த அழகை ஆளுடையப்பிள்ளையாம் அம்மையின் ஞானப்பாலுண்ட திருஞான சம்பந்தர் இவ்வாறு பதிகம் பாடியுள்ளார்

கரையு லாங்கட லிற்பொலி சங்கம் வெள் ளிப்பிவன்

திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர் – என்றும் திருவான்மியூரின் கீழ்திசையில் கடல் இருப்பதால் கடலிலிருந்து முத்துக்களும், பவளங்களும் வந்து உப்பங்கழிகளில் ஒதுங்கும் அழகுடையதாகவும் கடல் மீன்கள் துள்ளி வந்து கரையில் கிடந்து உகளும் சிறப்புடையதாகவும், கடல் சூழ்ந்த நெய்தல் நிலத்திற்குரிய மலர்கள் தேன் சொரியும்படி பூத்திருக்கும் அழகுடையதாகவும்  இருந்திருக்கின்றது என்றும்

கானயங்கிய தண்கழி சூழ் கடலின் புறம்

தேனங்கிய பைம்பொழில் சூழ் திருவான்மியூர் – என்றும் புகழ்ந்து பாடி இத்திருவான்மீயூர் இறைவனை வழிபடுபவர்கள் யாவரும் தேவர் உலகத்தினையும் ஆளும் வல்லமை உடையவர்கள் ஆவார்கள் என்று பலன் கூறியுள்ளார்.

மனதில் ஆயிரமாயிரம் கவலைகள், எத்தனையோ துன்பங்கள், குடும்ப பாரம், வேலையின்மை, உடல்நோய் எத்தனையோ சஞ்சலங்கள் இருந்தும் அதற்கு விடைகிடைக்காமல் திணறும் நேரத்தில்  இத்தலத்து இறைவனை சம்பந்தப்பெருமான் பாடியபடி

திரையார் தென்கடல் சூழ் திருவான்மீயூர் உறையும்

அரையா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – என்று பாடி சரணடைய உங்கள் துன்பங்கள் அனைத்தும் தீயினில் தூசாகும்.

வாழ்வினில் எத்தனை துன்பம் வந்தாலும் பரவாயில்லை, ஒரு முறை இத்திருவான்மீயூர் தலம் வந்து ஈஸனை வலம் வந்து வழிபடுங்கள் “வாட்டம் தீர்த்திடும் வான்மீயூர் ஈசன் என்று அப்பர் பெருமானும்  ஒரு பதிகம் பாடியுள்ளார்.  சேக்கிழார் பெருமான் தமது  பெரிய புராணத்தில் திருவான்மியூர் தலப் பெருமை குறித்தும் பாடியுள்ளார்.

அதிகார நந்தி சேவை 

அருணகிரிநாதர் இத்தலத்து முருகன் மேல்

  ....  திசைமாமு காழியரி மகவான்மு  னோர்கள்பண

சிவநார்  ஆலமயில்               - அமுதேசர                    

திகழ்பால  மாகமுற மணிமாளி   மாடமுயர                      

திருவான்மி  யூர்மருவு             - பெருமாளே!     

என்று  திருப்புகழ் பாடியுள்ளார். அக்காலத்திலேயே மாட மாளிகைகள் திருவான்மீயூரில் நிறைந்திருந்தது என்பதை இப்பாடல் மூலம் அறிந்து கொள்கிறோம்.

அப்பைய தீக்ஷிதர், வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள்  மற்றும் பாம்பன் ஸ்ரீமத் குமர குருதாச  சுவாமிகளும்  இத்தலத்தைப் பாடியுள்ளனர். ஸ்தல புராணம் அஷ்டாவதானம் பூவை கல்யாண சுந்தர முதலியார் பாடியுள்ளார்.

கிழக்கில்  ஏழு நிலை மற்றும் ஐந்து நிலை இராஜ கோபுரங்கள்,  மேற்கில் ஐந்து நிலை கோபுரம். கிழக்கு கோபுரம் வழியாக நாம் கோவிலின் உள்ளே நுழைந்தால் நேர் எதிரே   அருணகிரியாரால் பாடல் பெற்ற முருகர் வள்ளி, தேவ சேனா சமேதராக அழகிய தூண்களுடன் கூடிய  தனி  சன்னதியிலே காட்சியளிக்கிறார். வலப்பக்கம்  முழுமுதற் கடவுளான விஜய கணபதியை தனி சன்னதியில்  கண்டு வணங்கலாம். அம்மன் சன்னதி எதிராக நான்கு தூண் ஊஞ்சல் மண்டபம் அமைந்துள்ளது.

அவருக்கு வலப்பக்கம் அற்புத சிற்பங்கள் நிறைந்த தூண்கள் நிறைந்த தியாகராஜ மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தூண்களில் பல எழிலான சிற்பங்கள்.  ஒரு தூணில் அனுமனும் அவருக்கு எதிரே தண்டபாணியும் எழுந்தருளியுள்ளனர்.  தனி சன்னதியில் கிழக்கு நோக்கி எம்பெருமான் மான், மழு ஏந்தி அபய, வரத ஹஸ்ததுடனும், வலக்காலை தொங்கவிட்டு அமர்ந்த நிலையிலும், நடுவில் ஸ்கந்தன் நின்ற நிலையிலும், இடப்புறம் அம்மை கையில் மலர் ஏந்தி இடது காலை தொங்கவிட்ட நிலையிலும் சோமாஸ்கந்தராக, இருந்தாடும் அழகராக, தியாகராஜராக அருள் பாலிக்கிறார் அம்மையும் திரிபுர சுந்தரியும் தனி காட்சி தருகின்றார். பௌர்ணமி மற்றும் சிறப்பு நாட்களில் தியாகராஜரின் திருவீதியுலாவும் மற்றும் 18 திருநடனக் காட்சியும் சிறப்பாக நடைபெறுகின்றது. எம்பெருமானின் நடனத்தை காணப்பெற்றோர் பேறு பெற்றோர் என்பதில் ஐயமில்லை. தியாகராஜர் இத்தலத்தில் ஆடும் நடனம் அஜபா நடனமாகும்.

சந்திரசேகரர்

அனைத்து தியாகவிடங்க தலங்களிலும் தியாகராஜர் சன்னதி   மூலவரின் வலப்பக்கம், மூலவர் நோக்கும் திசையை நோக்கியவாறு  அமைந்திருக்கும் ஆனால் இத்தலத்தில் மாறாக, எதிரே மூலவரை பார்த்தவாறு அமைந்துள்ளது. இவ்வாறு அமைந்திருப்பதற்கான காரணம் அப்பைய தீக்ஷிதர்.   ஒரு காலத்தில் திருவான்மீயூர் ஆலயம் மங்கள ஏரியின் பெரு வெள்ளத்தால் சூழப்பட்டு இருந்தபோது இங்கு வந்த அப்பைய தீக்ஷிதர் மூலவரை தரிசிக்க முடியாமல் போக, அவருக்காக மேற்கே திரும்பினாராம் ஈசன்.

தியாகராஜர் மண்டபத்திலுள்ள நுழைவாயில் வழியாக  நுழைந்தால்  மருந்தீசர் சன்னதியை அடையலாம்.  சன்னதி கருவறை மற்றும் அர்த்த மண்டபம் என்னும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. மூலஸ்தானத்தில் ஆலமுண்ட நீலகண்டர், சுயம்புவாக, அருவுருவ லிங்க ரூபமாக, மருந்தீசராக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இமண்டபத்தின் தெற்குப்பகுதியில் வினாயகருடன் துவங்கி 63நாயன்மார்கள் எழுந்தருளியுள்ளனர். அடுத்து தாமரை மலரை ஏந்திய கஜலட்சுமி எழுந்தருளியுள்ளார். பின் சைவ சமய குரவர்கள், அதையடுத்து  வீரபாகு, அருணகிரிநாதர் இருபுறமும் கைகூப்பி நிற்க முத்துக் குமார சுவாமி  இரு தேவியருடன் எழிற்காட்சி தருகின்றார்.

வடக்கில் உற்சவ திருமேனிகள் அனைத்தும் அமைந்துள்ளன. அதையடுத்து  சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சன்னதி உள்ளது. அதையடுத்து 108 சிவலிங்கங்கள் பன்னிரெண்டு வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியின் இறுதியில் கால பைரவர் காட்சியளிக்கிறார்.

இம்மண்டபத்தின் கிழக்குப்பகுதியில் பஞ்சலிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன, இவற்றுள்  முதலாவதாகப் பெரிய அளவில் உள்ளவர் கேதாரீஸ்வரர். தீபாவளி சமயத்தில்  கேதார கௌரி விரதம் இருப்போர் இவரை பூசிப்பது வழக்கம். தீபாவளியன்று (ஐப்பசி அமாவாசை) கேதாரீஸ்வரரை வழிபட பித்ரு சாபம் தீரும், அன்று பல வட மாநிலத்தவர்களும் வந்து சிறப்பாக வழிபடுகின்றனர். உண்ணாமுலையம்மை சமேத அண்ணாமலையாரும், நின்ற கோலத்தில் சூரியனும் உள்ளனர். ருத்ராக்ஷ மண்டபத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். தெற்கிலே அறுபத்து மூவர் தொடர்கின்றனர். வடக்கு கோஷ்டத்தில் துர்க்கையம்மனும், பிரம்மாவும் அருட்காட்சி தருகின்றனர். கிழக்கு கோஷ்டத்தில் திருமால்  காட்சியளிக்கிறார். தெற்கு கோஷ்டத்தில்  ஆலமர் கடவுளும், நர்த்தன விநாயகரும் அருட்காட்சி தருகின்றனர்.

சுவாமி சன்னதியை விட்டு வெளியே வந்து தியாகர் மண்டபத்தைக் கடந்து வெளியே வந்து வலம் வந்தால் கொடிமரம், பலி பீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். மிகவும் பழமையான கோவில் என்பதை உணர்த்தும் வகையில்   நந்தீஸ்வரரின் திரு முகம் நேராக உள்ளது. அவரை  வணங்கி மேற்கு கோபுரத்தையும் வணங்கி   திரும்பினால்  தல விருட்சமான வன்னி மரத்தை காணலாம் அதன் அடியில் நின்றாலே மெய் சிலிர்க்கின்றது எம்பெருமான் சுயும்புவாக இருந்த இடமல்லவா அங்கிருந்தே அனைத்து விமானங்களையும், கோபுரங்களையும் தரிசித்து    பாப விமோசனம் அடையலாம்.  பின் யாக சாலையை கடந்து வலம் வந்தால் அம்மனின் சன்னதியை அடையலாம்.


த்ரிபுர சுந்தரி அம்பாள்

அம்பாள் சன்னதி கருவறை, அர்த்த மண்டபம்,  முன் மண்டபம், வெளி மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு  தனி பிரகாரத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் நின்ற கோலத்தில் நம்மை எல்லாம் காக்க அம்மை அஞ்ச வேண்டாம் என்று அபய கரத்துடனும், என்னை சரணடை என்று இடது கரத்தால் தனது திருவடியைக் காட்டும் வரத கரமாகவும், பக்தர்களை காப்பதோடு மட்டுமல்லாமல் துஷ்டர்களை அழிக்கவும் என்பதை உணர்த்தும் விதமாக மேற்கரங்களில் அங்குச பாசமும் ஏந்தி நளினமாக சாய்ந்த நிலையில் எழிற்காட்சி தருகின்றாள். அந்த ஜகத்ஜனனியை கண்டவுடன் நம் கவலைகள் எல்லாம் ஓடுகின்றன. என்னே நம் தாயின் எழில் பிறவி எடுத்ததின் பயனை நாம் அடைந்து விட்டதாக உணரலாம். அம்மையைக்காண பல கோடி தவம் செய்திருக்க  வேண்டும். அம்மையின் சன்னதிக்கு முன் சிம்ம வாகனமுள்ளது, அம்பாள் ஓளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறையும்  ஸ்ரீசக்ரமும் நிறுவப்பட்டுள்ளது. உட்பிரகார சுவர்களிலே அபிராமி அந்தாதி  ஒவ்வொரு பாடலுக்கும் தனித் தலைப்புடன் கல்வெட்டாகப் பதிக்கப்பட்டுள்ளன. “சோதி மாதவமே! யோகச் சுடரொளி விளக்கே! ஞான போகமே!  அகங்கனிந்த புனிதமே! நிறைவே! அன்பே! தீதிலாது உயிர்கள் ஓங்கு திருவான்மியூருள் மேவு நாதநாதாந்த சொக்க நாயகி” என்று துவாதாசாந்த முனிவர் இத்தல அம்பிகையைப் போற்றிப் பாடியுள்ளார்.

Sunday, September 20, 2020

திருப்பாத தரிசனம் - 38

                                     

 விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றியனே

 உரையார் பல்புகழாய் உமை நங்கையோர் பங்குடையாய்

 திரையார் தென் கடல்சூழ் திருவான்மியூர் உறையும்

அரையா உன்னையல்லால் அடையாது எனது ஆதரவே  -       என்று                         திருஞானசம்பந்தர் பாடிய தலம்     திருவான்மியூர்  ஆகும்.       இத்தலமும் சென்னையில் கடற்கரை ஓரமாக அமைந்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள மூன்று பதிகம் பெற்ற தலங்களுள் தென் பகுதியில் அமைந்துள்ளது இத்தலம்.

பிரம்மாவின் வாரிசான பிரதேச குமாரர் வேடுவர்களுடன் கூடி  தீய குணமுடையவராக விளங்கினார். ஒரு சமயம் தலைகீழாகத் தவம் செய்யும் ஒரு முனிவரைப் பார்த்து அவரைக் கொல்ல நினைத்து தோல்வி அடைந்து மனம் மாறி அவர் தவம் முடிக்கும் வரை காத்திருந்து அறிவுரைகள் கேட்டு கங்கைக்கரையில் தவக்கோலம் பூண்டு  முனிவரானார். அப்போது சத்திய லோகத்தில்  பிரம்மா மூலம் இராம காதையை அறிந்த நாரதர் மூலம் உபதேசம் பெற்று  இவ்வுலகுக்கு இராமாயணம் என்னும் இன்னமுதத்தை  குயிலாக மாறி கூவி  வழங்கிய வால்மீகி முனிவரானார். பின்னர் தவம் செய்யும் போது மார்க்கண்டரை சந்தித்து முக்தி அடையும் முறையைக் கேட்க அவரும் தென் திசை நோக்கி செல். ஒரு புண்ணிய இடத்தில் "நான் இருக்கிறேன்" என்ற அசரீரி ஒலி கேட்கும். வ்விடத்தில் இறைவன் தங்களுக்கு முக்திப்பேறு அளிப்பார்  என்று கூறினார்.  அவ்வாறே தென் திசை நோக்கி வந்த வால்மீகி முனிவர் கிழக்கு கடற்கரை ஓரத்தில் நான் இங்கிருக்கிறேன் என்ற ஒலியை கேட்டு  வன்னி மரத்தடியில் சுயம்புவான மூர்த்தியை கண்டெடுத்து வழிபட, மனம் மகிழ்ந்த இறைவன் தியாகராஜராக அவருக்கு பங்குனி பௌர்ணமியன்று 18 வகை நடன காட்சி தந்தருளினார். அவர் வேண்டிக்கொண்டபடி பவளக்கொடியாம்  உமையம்மையுடன்  பக்தர்களுக்கு அருள் புரிய இத்தலத்திலே கோவில் கொண்டார். வான்மீகி  வேண்டிக் கொண்டபடி கோவில் கொண்டதால்  அவர் பெயரால் இத்தலம் வான்மியூர் என்றாயிற்று  தேவாரப்பாடல்  பெற்றதால் திரு என்னும் அடைமொழியும் சேர்ந்து திருவான்மீயூராயிற்று.

வசிஷ்ட முனிவர் நடு மண்டலத்தில் விசுவநாதருக்கு பூஜை செய்ய காமதேனுவின்  உதவியை வேண்டினார், காமதேனுவும் நாள் தோறும் அபிஷேகத்திற்கு பாலை சொரிந்து வந்தது. ஒரு நாள் அது மலையிலேயே தங்கி விட்டதால் பூஜை செய்ய முடியாமற் போனதால்  அவர் இட்ட சாபத்தால், தனது புனிதத் தன்மை நீங்கி காட்டுப்பசுவாகி, அலைந்து திரிந்து,   பழைய ஞானத்தால் மருந்தீசரின் திருமேனி மீது தினம் பால் சொரிந்து பாவ விமோசனம் பெற்றது. எனவே இறைவனுக்கு பால் வண்ண நாதர், கோகரந்தீஸ்வரர் என்ற திருநாமங்களும் உண்டு. காமதேனுவின் குளம்பு பட்ட வடு இன்னும் எம்பெருமானின் திருமேனியில் உள்ளது. பாலபிஷேகத்தின் போது வடுவை தரிசிக்க இயலும்.

மலையரையன் பொற்பாவை பார்வதி திருக்கல்யாணத்தின் போது அனைத்து  சீவ கோடிகளும் கயிலையில் கூடியதால்  வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது அப்போது பூமியை சமன் செய்ய  வேண்டி  தென் திசை வந்த கும்ப முனி அகத்தியருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் அவர் இறைவனை நினைக்க அம்மாதொரு பாகர் உமையம்மையுடன் தோன்றி மருந்தும் அதன் வகைகளையும் கூற அகத்தியரும் நலம் பெற்றார். எனவே இறைவர் ஒளஷதீஸ்வரர், அதாவது மருந்தீஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார். மருந்தீசரை வழிபட்டு  அவரின் திருநீறு, அபிஷேகப் பால் ஆகியவற்றை உண்டு தங்கள் நோய் தீரப்பெற்றோர் ஏராளம். எனவே பக்தர்கள் அனைவரும் இறைவனை “திருவான்மியூர் மருந்து” என்று கொஞ்சியழைக்கின்றனர்.

மந்தமா கியசிந்தை மயக்கறுத்

தந்தமில் குணத்தானை யடைந்து நின்

றெந்தை யீசனென்றேந் திட வல்லிரேல்

வந்துனி ன்றிடும்வான் மியூரீசனே 

என்று திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற வான்மீக நாதர் எழுந்தருளியுள்ள இத்தலம், மூர்த்தி,  தலம்,  கீர்த்தி என்ற மூன்றும் ஒரு சேர அமைந்த தலம். பிறக்க, இறக்க முக்தி அளிக்கும் தலம், நினைத்தாலே வீடு பேறு அளிக்கும் தலம் என்று தல புராணம் கூறுகின்றது. சிறந்த பிரார்த்தனைத் தலம்.  திருவல்லிக்கேணி, திருமயிலை, வாலீஸ்வரர், கங்காதேஸ்வரர், தாண்டீஸ்வரர் ஆலயங்களின் கல்வெட்டுகளில் திருவான்மியூர் பற்றிய குறிப்புகள் உள்ளன.

வேத ஆகமப்படி தேவமுனிகள் மூலம் பிரம்மாவால்  அமைக்கப்பெற்ற தலம். பிரம்மாவே திருக்கோவில், மாடவீதி, மாடமாளிகைகள், கூட கோபுரங்கள் திருத்தேர் மற்றும் உற்சவ விக்கிரங்கள் அமைத்து பங்குனி மாதத்தில் ஆண்டுப்  பெரு விழா   (பிரம்மோற்சவம்)  செய்து வழிபட்டார். திருமால், போர் முடித்த  பார்த்த சாரதி ஆகியோர் வழிபட்ட தலம். இராமர் சீதா பிராட்டியை தேடி வரும் வழியில் இத்தல இறைவனை வழிபட்டு வரம் பெற்றார். சந்திரன் குரு பத்தினியை சேர்ந்ததால் குரு சாபம் பெற்று இத்தலத்தை அடைந்து இறைவனை வழிபட்டு குரு சாபம்   நீங்க பெற்ற தலம். மருந்தீசர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளதால் மாலை சூரியன்  பூஜை செய்வதாக ஐதீகம்.

சூரியனும் சந்திரனும் எம்பெருமானை இத்தலத்தில் பூசிப்பதால் இத்தலத்தில் தனி சூரியன் மற்றும்  நவக்கிரக சன்னதி கிடையாது.  இந்திரன் தான் செய்த பாவத்தின் காரணமாக பெற்ற சாபங்கள் நீங்க இத்தலத்தின் தீர்த்தங்களில் நீராடி  சிவ பூஜை செய்து தனது பாவங்களை போக்கிக் கொண்ட தலம்.  வேதங்கள் இங்கு சிவபூஜை செய்து புனிதமடைந்தன. யமன் இங்கு சிவபூஜை செய்து பழி நீங்கப்பெற்றார்.   குரங்குருவம் பெற்ற இரக்ஷகன் என்பவன் பிரம்ம லோகத்திலுள்ள கல்யாண தீர்த்தத்தில் மூழ்கியதால் பெண்ணுருவம் பெற்று,  இத்தலத்தை அடைந்து ஜென்ம நாசினியில் மூழ்கிப் பழைய வடிவத்தை பெற்ற தலம். 

பிருங்கி மகரிஷி இப்பெருமானையும் உமையம்மையும் வழிபட்டு சக்தியை நீக்கி சிவனை மட்டும் வழிபட்ட பாவம்  நீங்கப்பெற்ற தலம். நான்கு வேதங்களும் பூசித்த வேதபுரீஸ்வரர், அனுமன் பூசித்த லிங்கமும், இந்திரனது சாபம் நீக்கிய மீனாட்சி சுந்தரேஸ்வரரும், பரத்துவாசர்  பூசித்த லிங்கமும் இத்தலத்தில் உள்ளன.

வான்மீகம்என்று சொல்லப்படும் புற்றுகள் நிறைந்த இடம் என்பதால், இது `வான்மீகியூர்என்றானது என ஒரு  வரலாறு கூறுகிறது. வால்மீகி முனிவரின் சாபம் நீங்க, இந்த ஆலயத்தின் வடமேற்கு மூலையில் இருக்கும் வன்னி மரத்தடியில்தான் தவமிருந்து, ஈசனைத் தரிசித்து சுயம்புலிங்கத்தை பெற்றார் எனவும், அது இன்றும் ஆலயத்தின் வெளிப்புறம் கிழக்கு கடற்கரை சாலையின் ஆரம்பத்தில் மார்க்கெட் அருகே, ஆலயத்தின் வடக்குப் பிரகாரம் மற்றும் மேற்குப்பிரகாரம் சந்திக்கும் மூலையில் இருக்கும் வால்மீகி முனிவரின் ஜீவசமாதியில் இருந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

திரிபுரசுந்தரி அம்பாள்


விரிசடையண்ணல் இங்கே கருவறையில்  சுயம்பு மூர்த்தியாக, அருவுருவமாக  காமதேனுவின் குளம்படியின் வடுவுடன்  சிறிது வடபுறம் சாய்ந்த நிலையில் மேற்கு நோக்கி அருட்காட்சியளிக்கிறார்.  வான்மீகி முனிவருக்கு முக்தி அளித்ததால் இவர் வான்மீக நாதர் என்ற நாமமும், காமதேனு தன் பாலை சொரிந்து வழிபட்டதால் பால் வண்ண நாதர், கோகரந்தீஸ்வரர் என்றும். உலகில் உள்ள நோய்களின் தன்மையையும், அவற்றை தீர்க்கக் கூடிய மூலிகைகளின் இயல்புகளையும் அகத்தியருக்கு உபதேசித்ததால் மருந்தீசர் என்றும், நான்கு வேதங்கள் பூசித்ததால் வேதபுரீசுவரர் என்றும்,  பாற்கடலில் தோன்றிய அமுதத்தால் வானவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டமையால் அமுதீசுவரர் என்றும் நாமம் ஏற்பட்டது.  இவருக்கு பாலாபிஷேகம் மிகவும் விசேஷமானது.

வேதபுரீஸ்வரர், வான்மீகநாதர், ஆமுக்தீஸ்வரர், பால்வண்ண நாதர், தேனுமுக்தீஸ்வரர்,  திரிபுராந்தகர்,  சித்தநாதர் என வணங்கப்படும் ஈசர் இங்கு `தியாகராஜ பெருமான்என்ற பெயரில் உற்சவராகவும் கொண்டாடப்படுகிறார். இவர் ஆடும் தியாகர் என்றழைக்கப்படுகிறார். பௌர்ணமியன்றும், பெருந்திருவிழாக் காலங்களிலும் இவர் ஆடி வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.  அதிகாலை கோபூஜையும், அர்த்தஜாம பால் அபிஷேகமும் இங்கு கண்டு வழிபடத்தக்க பூஜைகள்.

அபிஷேகப்பால் சகல வியாதிகளுக்கும் மருந்தாக பக்தர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இத்தலத்தின் பெருமையை சொல்ல சொல்ல நீளும். ஈசனையும், இறைவியும் ஒரு முறை தரிசிக்கும் போதே குணமளிக்கும் எளிய வைத்தியர்கள். ஒரு முறை வந்து தரிசித்துப் பாருங்கள். அதன் பிறகு அவரே உங்கள் குடும்ப வைத்தியராக மாறி விடும் அதிசயத்தை உணர்வீர்கள்.


உடல் நோயை மட்டுமல்ல பிறவி என்னும் நோயையும் தீர்ப்பவர் மருந்தீஸ்வரர். உயிர்களின் உறக்கத்தைக் களைத்து, அறிவுத் தெளிவை ஏற்படுத்தும் வல்லமை உடையவர் இவர்.   நவகிரகங்களுக்கு தனிச்சன்னதி இன்மையால் இத்தலம் நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்களை நீக்கவல்ல கோளிலித் தலமாகும்.

மார்க்கண்டேயர் இத்தலத்தில் தவமிருந்து, வன்னி மரத்தடியில் இறைவன் இடபாரூடராகக்  காட்சி தந்து வரம் அருளியபடி கிழக்கில்  பிறவா வரமளிக்கும் ஜென்மநாசினி,  தெற்கில்  மனதில் உள்ள கேடு விளைவிக்கும் காமத்தை அகற்றும் காம நாசினி, மேற்கில் செய்த பாவங்களை அழிக்கும் பாப நாசினி,  வடக்கில் ஞானத்தை நல்கும் ஞானதாயினி, நடுவே   மோட்சப்பேறு வழங்கும் மோட்சதாயினி  என்னும் ஐந்து தீர்த்தங்கள் அமைந்த தலம். இவை ஐந்தும் எம்பெருமானின் சடாமுடியில் வீற்றிருக்கும் கங்கையிலிருந்து தெரித்த ஐந்து துளிகளிலிருந்து உண்டாயின என்பது ஐதீகம். சூரியன், பிரம்மா, யமன், பார்த்தசாரதி, இந்திரன், இராமர், சந்திரன் ஆகியோர் இத்தீர்த்தங்களில் நீராடி சிவபூஜை செய்து பாவ விமோசனம் பெற்றனர் என்று தல புராணம் கூறுகின்றது.

வன்னி மரம்  இத்தலத்தின்  தல விருட்சமாகும். கோவிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது இவ்விருட்சம். இம்மரத்தின் அடியில் எம்பெருமான் அகத்தியருக்கு திருமணக்காட்சியருளினார் பங்குனி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் கல்யாண சுந்தரர் இம்மரத்தடியில் திருமணக் காட்சி இன்றும் அகத்தியருக்கு அருளுகின்றார். வான்மீகி முனிவர் சுயம்புவான மூர்த்தியை இம்மரத்தடியில் கண்டார் என்பதும் ஐதீகம்.  வைகாசி வசந்தோற்சவத்தின் போது 18 நடனக் காட்சி வன்னி மரத்தடியில் நடைபெறுகின்றது. வசந்தோற்சவத்தால் நல்ல மழை பொழியும் என்பது ஐதீகம்.

இத்தலம் மிகவும் பழமையான தலம் புராண வழி நோக்குமிடத்து பார்த்தசாரதி, இராமர், வான்மீகி முனிவர் ஆகியோர் வழிபட்டமையால் அக்காலத்தே இத்தலம் சிறப்புற்று விளங்கியமை  தெளிவு. கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் ஆகியோர் இத்தலத்து இறைவன் மேல் பதிகங்கள் பாடியுள்ளனர். பத்தாம் நூற்றாண்டின் சோழர் கால கல்வெட்டுக்கள் அம்மன் கோவில் சுவற்றில் உள்ளன. இறைவன் திருவான்மியூருடைய மகாதேவனென்றும், இவ்வூரை ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர் என்றும் குறித்துள்ளனர்.