Showing posts with label சங்கமேஸ்வரர். Show all posts
Showing posts with label சங்கமேஸ்வரர். Show all posts

Saturday, May 21, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 20

                                                           பவானி தரிசனம் - 1

இத்தலம் சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும் உள்ளது. சத்தியமங்கலத்திலிருந்து கிளம்பிய போது பவானி 54 கிமீ தூரம் தானே சிறிது நேரத்தில் சென்று விடலாம் என்று  வேகமாகவே பயணம் செய்தோம். நடை அடைப்பதற்கு முன்னர் சென்றாலும் திருக்கோவிலை முழுவதுமாக தரிசிக்க சமயம் கிட்டாது  என்பதால்  பிறகு சீர் வேகத்தில் பயணம் செய்து காவிரி நதி ஒருபுறமும், பவானி நதி மறுபுறமும் சூழ்ந்திருக்க, எழிலாக  தீவு போல காட்சியளிக்கும்  ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த  பவானி வேதநாயகி உடனுறை சங்கமேஸ்வரர் ஆலயத்தை  அடைந்த போது நடை சார்த்தியிருந்தனர். எத்தலத்திலும் தீர்த்தத்தில் நீராடவில்லை, இங்கு முக்கூடலில் நீராடட்டும் என்று எம்பெருமான் திருவுள்ளம் என்று எடுத்துக்கொண்டு வடக்கு பக்கம் உள்ள இராஜ கோபுரத்தை முதலில் தரிசனம் செய்தோம். இக்கோபுரத்தையொட்டி பரமபதவாசலும் உள்ளது. சைவமும் வைணவமும் இத்தலத்தில் இணைந்துள்ளன என்பதை உணர்த்தும் வகையில்   இராஜ கோபுரத்திற்கு முன்னர் இருபுறமும் விநாயகர் மற்றும் அனுமன் திருசன்னதிகள் உள்ளன. இராஜகோபுரமே இலிங்கம் என்பதால் கோபுரத்தை  நோக்கியவாறு சிவனாரை என்றும் சேவிக்கும் நந்தி இராஜ நந்தியாக சிறு சன்னதியில் அருள் பாலிக்கின்றார்

இராஜநந்தி

 அவரை தத்புருஷாய வித்மஹே சக்ர துண்டாய தீமஹி  |

தந்நோ நந்தி ப்ரசோதயாத் || என்று வணங்கினோம். பின்னர் மதிய உணவை முடித்துக்கொண்டு கூடுதுறைக்கு சென்றோம்.  

வடக்கிலிருந்து பாய்ந்து வரும் காவிரியும், மேற்கிலிருந்து பாயும்  பவானியும்  மற்றும் அந்தர்வாகினியாக அமுதநதி கூடும் சங்கமத்தில் கை, கால், முகம் கழுவி பின்னர் கரையில் அமர்ந்து சங்கமத்தின் அழகை இரசித்தோம்.  வடநாட்டில் கங்கையும், யமுனையும் அந்தர்வாகினியாக சரஸ்வதியும் சங்கமாகும் அலகாபாத் திரிவேணி சங்கமம் (பிரயாகை) என்றழைக்கப்படுகிறது. எனவே பவானி தக்ஷிண திரிவேணி என்றழைக்கப்படுகின்றது.  தக்ஷிண திரிவேணி மட்டுமல்ல, தக்ஷிணப் பிரயாகை என்றும் மூன்று நதிகளும் கூடுவதால் முக்கூடல், கூடுதுறை என்றும், குபேரன் வழிபட்டதால்  தட்சிண அளகை, தட்சிண கைலாயம், போன்ற சிறப்புப் பெயர்களும் இத்தலத்திற்கு உள்ளது.  வடநாட்டின் திருக்காசியைப் புண்ணியத் தலமாக வழிபடுவதற்கு இணையாகத் தென்நாட்டில் பவானி கூடுதுறையை “இளைய காசி” என்று அழைத்து வழிபடுகிறார்கள். காசியைப் போன்றே இங்கு இறந்தாலும், மோட்சம் என்றும்,  இலந்தை மரம் தல விருட்சம் என்பதால் பத்ரி வனம் என்றும்,    பராசர முனிவரால் வழிபடப்பட்டதால் பராசர தலம் என்றும், குபேரனால் வழிபடப்பட்டதால் குபேரபுரி என்றும் வக்கிராசுரன் இறைவனை வழிபட்டதால் வக்கிரபுரி என்றும், விஜய அரசரால் வழிபடப்பட்டதால் விசயபுரி என்றும் அழைக்கப்படுகிறது.

வேதகிரி (ஊராட்சிக் கோட்டை மலை), சங்ககிரி, நாககிரி (திருச்செங்கோட்டு மலை), மங்களகிரி (பெருமாள் மலை), பதுமகிரி ஆகிய ஐந்து மலைகளுக்கிடையே “பவானி” திருத்தலம் அமைந்துள்ளதால் “பஞ்சகிரி மத்திய பிரதேசம்” என்றும் அழைக்கப்படுகிறது. ஒரே இராஜகோபுரத்தின் கீழ், சிவன் மற்றும் விஷ்ணு கோவில்கள் அமைந்துள்ளதால் “க்ஷேத்திர சங்கமம்” என்றும், அமிர்தலிங்கேஸ்வரர், சகஸ்வரலிங்கேசுவரர் மற்றும் காயத்ரி லிங்கேசுவரர் என பல்வேறு மூர்த்திகள் ஒருங்கிணைந்து உள்ளதால் “மூர்த்தி சங்கமம்” என்றும் வழங்கப்படுகிறது.

கிழக்கு இராஜகோபுரம்

பிறப்பு முதல் இறப்பு வரையான அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரம் செய்யும் கூடுதுறை. பூமிக்குள் பல சிவலிங்கங்களை கொண்ட அற்புதமான தலம். பித்ருக்களுக்கு செய்யவேண்டிய சிரார்த்தங்களை செய்ய உகந்த தலம். இளைய காசி என்பதால் கூடுதுறையில் அஸ்தியை கரைக்க பலர் இத்தலத்திற்கு வருகின்றனர். பரிகாரம் செய்பவர்களுக்காகவே ஒரு மண்டபம் ஆற்றுக்கும் ஆலயத்திற்கும் இடையில் அமைத்துள்ளனர்.

இவ்வளவு சிறப்புப்பெற்ற இத்தலத்தின் இறைவனை தரிசிக்க அடியோங்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்போது கரையில் இருந்த  விநாயகரையும் மற்றும் மூன்று  திருச்சன்னதிகளை தரிசித்தோம்.  நாக தோஷம் உள்ளவர்கள் இவ்விநாயகர் சன்னதியில் கல் நாகர் சிலை பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் விலகும் என்பதால் பல நாகர் சிலைகள் இருப்பதைக் கண்டோம்.  கோயிலுக்கு வெளியில் தெற்கே காவிரிக்கரையில் அமைந்த அச்சன்னதிகள்  காயத்ரிலிங்க சன்னதி, சகஸ்ர லிங்க சன்னதி, அமுதலிங்கேசர் சன்னதி ஆகும். விஸ்வாமித்திரர் ஸ்தாபித்து காயத்ரி மந்திரம் ஓதி வழிபட்ட இலிங்கம் காயத்ரி லிங்கம் என்றழைக்கப்படுகிறது. இச்சன்னதிக்கு  அருகில் காயத்ரி தீர்த்தம் உள்ளது.  ராவணன்  சகஸ்ரலிங்கத்தை பூஜை செய்துள்ளான் என்பது ஐதீகம். இவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் இராகு – கேது தோஷம் விலகும் என்பது ஐதீகம். 

பராசர முனிவர் சங்கமேஸ்வரரை குறித்து தவம் செய்து கொண்டிருந்த காலத்தில் தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற நாகத்தை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். முதலில் ஆலாலம் என்ற விஷம் வந்தது அதை சிவபெருமான் அருந்தி தேவர்களையும் அனைத்து ஜீவராசிகளையும் காத்து தியாகராஜர் ஆனார். பின்னர் அமுதம் வந்தது. மஹாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து சாதுர்யமாக அதை தேவர்களுக்கு மட்டும் அளித்தார்.  பின்னர் அமுத கலசத்தை பராசர முனிவரிடம் அளித்தார், அவரும் அதை இப்பத்ரிவனத்தில் மறைத்து வைத்தார். இதை அறிந்த அசுரர்கள் அமிர்தத்தை கவர்ந்து செல்ல வந்தனர். பாராசரர் வேதநாயகி அம்பாளிடம் வேண்ட அம்மனும் அசுரர்களை அழித்தாள். சிறிது காலம் சென்று அமிர்த கலசம் வைத்திருந்த இடத்தை தோண்டிப்பார்த்த போது அமுதம் காவிரி, பவானி சங்கமத்தில் சென்று கலந்திருந்தது. அமிர்த கலமும் சிவலிங்கமாக மாறி இருந்தது. எனவே அவ்விலங்கம் அமுத லிங்கம் எம்றழைக்கப்படுகின்றது.

கூடுதுறையில்

குழந்தையில்லாதவர்கள் இந்த லிங்கத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு ஆவுடையாரைச் சுற்றி வந்தால் குழந்தை பாக்யம் கிடைக்கும் என்பது பக்தர்களிடையே இருந்து வரும் நம்பிக்கையாகும். ஆலயம் திறப்பதற்காக காத்திருந்த சமயத்தில் இச்சன்னதியின் முன் மண்டபத்தில் அமர்ந்திருந்தோம். இச்சமயத்தில் இத்தலத்தின் மற்ற வரலாறுகளை சிந்திப்போம் பின்னர் ஆலயத்தை தரிசிக்கலாம் அன்பர்களே.

அம்பாள், தலம், நதி ஆகிய மூன்றுக்கும் பவானி என்று பெயர். அம்பாளின் ஆயிரம் நாமங்களில் ஒன்று இந்நாமம்.  "பவானி, பாவனா கம்யா, பவாரண்யா குடாரிகா “ என்பது லலிதா சகஸ்ரநாமத்தின் ஒரு ஸ்லோகம். பவானி என்பதன் பொருள்  பவன் என்ற சிவபெருமானின் பத்னி. பவ: என்பது சம்சார சாகரம் அதற்குப் பிராணனை கொடுப்பவள்.  அதாவது இயற்கையின் சக்தி அல்லது படைப்பு ஆற்றலின் ஆதாரம். தனது பக்தர்களுக்கு அருளை வழங்கும் ஒரு அன்னை என்றெல்லாம் பொருள். அருணகிரிநாதர் வேல் விருத்தத்தில் 

கங்காளீ சாமுண்டி வாராகி யிந்த்ராணி

     கௌமாரி கமலாசனக்

கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவியமலை

      கௌரிகா மாக்ஷிசைவ

சிங்காரி யாமளை பவாநி  கார்த்திகை கொற்றி …… என்று அம்பாளைப் பாடியுள்ளார். 

இனி  பவானியாற்றின் சிறப்பைப் பற்றிக் காணலாம்.  பவானி ஆறு  காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். இது சங்கநூலில் வானி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து சேர மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு, அதில் பெருங்குன்றூர்க்கிழார் என்ற புலவர் இளஞ்சேரல் இரும்பொறை எனும் சேர மன்னனைப் பற்றிய பாடலில்,

புனல்பாய் மகளிராட வொழிந்த

பொன்செய் பூங்குழை மீமிசத்தோன்றுஞ்

சாந்துவரு வானி நீரினுந்

தீந்தன் சாயலன் மன்றதானே  - என அரசனுடைய உடல் வானியாற்று நீரைப் போல் மென்மையும் தூய்மையும் உடையதாக இருந்தது என்று பாடுகிறார். 

பவானி ஆறு  தமிழகத்தின் நீலகிரி மலைத்தொடரில் உள்ள குந்தா மலைப்பகுதியில் தென்மேற்கு மூலை முகட்டில் உருவாகிறது. மலை முகட்டிலிருந்து கீழிறங்கத் தொடங்கும் பகுதியில் மேல் பவானி அணை கட்டப்படுள்ளது. அங்கிருந்து தென்மேற்காக கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி பள்ளத்தாக்கில் பாய்ந்து அங்குள்ள முக்கலி என்னுமிடத்தில் கிழக்கு நோக்கி திரும்பி பாய்கிறது.  கோவை நகருக்கு  சுவையான குடிநீரை  வழங்கும் சிறுவாணி ஆறு பவானியுடன் இணைந்த பின் மீண்டும் தமிழகத்துக்குள் பவானி நுழைகிறது.  பின் குந்தா ஆறு பவானியுடன் இணைகிறது. இதற்கு கீழ் பில்லூர் அணை பவானியில் கட்டப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆறு சமவெளியை அடைகிறது. பின் சிறுமுகை  வழியாக கொத்தமங்கலம் அருகே  கீழ் பவானி அணைக்கட்டு எனப்படும்  பவானி சாகர் அணையை அடைகிறது .பவானி சாகர் நீர்த்தேக்கத்தில் மோயார் ஆறானது இணைந்து கொள்கிறது. இந்த அணையினால் ஈரோடு,  கரூர் மாவட்டங்கள் வளம் பெறுகின்றன. பின் பவானி ஆறு கோபிசெட்டி பாளையம்  வழியாக பாய்ந்து பவானி நகரில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. காவிரி ஆற்றுடன் கலக்கும் முன் இதிலிருந்து  காளிங்கராயன் வாய்க்கால்  தொடங்குகிறது.  

பவானி நகரம் கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. பவானி ஜமக்காளங்கள் உலகப் புகழ்பெற்றவை. இனி இத்தலத்தின் மற்ற வரலாறுகளைப் பற்றிக்காணலாம்.

Monday, July 30, 2018

நாலம்பல யாத்திரை - 4


இரிஞ்ஞாலக்குடா பரதன் ஆலயம்

மற்ற அம்பலங்களின்  தரிசனம்:  




ஓம் நமோ பகவதே சங்கமேஸாயா

துளசிதாசர் தமது ஹனுமான் சாலீசா என்ற ஸ்துதியில் ஸ்ரீராமர்  அனுமனை
ரகுபதி கீனீ பஹுத் படாயீ |
தும் மம ப்ரிய பரத சம பாயீ ||
பொருள்:  அனுமனே நீயும்  பரதன் போன்று எனக்கு  ஒரு பிரியமான சகோதரன் என்று போற்றினார்என்று பாடுகின்றார்.

பறவைப் பார்வையில் பிரம்மாண்ட ஆலயம் 

அது போலவே இராஜகோபாலாச்சாரியார் தமது சக்கரவர்த்தி திருமகன்என்ற இராமாயண நூலில் பரதனை தியானிப்பவர்களுக்கு ஞானமும் பக்தியும் தானே பெருகும் என்று கூறுகின்றார்.

குலிப்பிணி தீர்த்தம்

தன்னலமின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு பரதன் ஆவான்.  பொதுவாக அனைவரும் தாங்கள் செய்த தவறையே இல்லை என்றுதான் சொல்வர்கள் .ஆனால் தான் செய்யாத தப்பையே செய்ததாக ஒப்புக்கொண்ட உயர்ந்தவன் பரதன். ஸ்ரீராமர் கானகம் சென்ற பின் பரதனும் சத்ருகனனும் பேசிக்கொண்டிருந்த போது பரதன் கூறுகின்றான். சத்ருகனா இவ்வாறு நடந்ததற்கு தாயார் கைகேயியோ, தந்தை தசரதரோ, அண்ணன் இராமனோ காரணம் அல்ல  நான்தான் காரணம், எனக்காகத் தானே தாயார் இராச்சியம் வேண்டுமென்று வரம் கேட்டார் என்று பெரும் பழியை சுமந்த பெருந்தன்மையாளன் பரதன். இதைப் போலவே    சூடிக்கொடுத்த  சுடர்க்கொடியாள் ஆண்டாள் தனது திருப்பாவையில் எல்லே இளங்கிளியே பாசுரத்தில்நானே தானாயிடுகஎன்று தான் செய்யாத தவறை ஒத்துக் கொள்கிறாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இருக்கவேண்டிய ஒரு முக்கியமான லட்சணம் இதுவாகும் எனவேதான் ஆண்டாளின் இப்பாசுரம் திருப்பாவை பாசுரம் என்னும் சிறப்புப் பெற்றது.  அனைவரும் இவ்வாறு இருந்தால் எந்தவிதமான சண்டை சச்சரவும் இராதே.

மகாவிஷ்ணு, பூலோகத்தில் ராமனாகப் பிறப்பெடுத்த போது, வைகுண்டத்தில் அவரைத் தாங்கும் அனந்தன் எனும் பாம்பு, லட்சுமணனாகப் பிறந்து, எப்போதும் அவருக்குத் துணையாக இருந்து அவரைக் காத்தது. விஷ்ணுவின் திருக்கரங்களில் விளங்கும் சங்கு பரதனாகவும், சக்கரம் சத்துருக்கனனாகவும் பிறந்து வாழ்ந்தனர்.

ராமனின் மூன்று சகோதரர்களுமே, இராமனின் மீது அதிகமான அன்பு கொண்டிருந்தனர். அவர்களில், இலட்சுமணன் பிறந்தது முதல் ராமனின் நிழலாகவே வாழ்ந்து வந்தான். ராமன் காட்டுக்குச் சென்ற போதும், தன்னுடைய மனைவியைப் பிரிந்து, இராமருடன் காட்டுக்குச் சென்றான். மேலும் காட்டில் ராமனுக்கும் சீதைக்கும் பாதுகாப்பாகவும், பணிவிடை செய்பவனாகவும் இருந்தான். ராமனின் மனைவியான சீதையைக் காட்டிலும், ராமனுடன் அதிகக் காலம் உடனிருந்தவன் என்ற பெருமை லட்சுமணனுக்குக் கிடைத்தது.

கிழக்கு கோபுரம்

கிழக்கு கோபுரத்தில் அமைந்துள்ள 
இராம பட்டாபிஷேக புடைப்பு சிற்பம் 

நந்தி கிராமத்தில் பாதுகை அரசு செய்யும் சிற்பம் 

ராமனை உடனிருந்து பார்த்துக் கொண்ட லட்சுமணனை விட, பரதனே உயர்ந்தவன் என்று பாரதம் சொல்கிறது. பரதன் ஆசையே இல்லாதவன், அண்ணன் காடு சென்றதும், அவனுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்திருக்கலாம், அரசனாகி இருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல், அண்ணனின் காலணியைப் பெற்று வந்து, அதையே அரியாசனத்தில் வைத்து நாட்டை ஆண்டவன் அவன். பக்தனைப் பாகவதன் என்பர். பகவானை விடப் பாகவதனே உயர்ந்தவன் என்பதை உணர்த்தியவன் பரதன்.


 கூத்தம்பலம் 

சகோதர பாசத்திற்கும், தன்னலமின்மைக்கும், பொறுமைக்கும் சிறந்த இலக்கணமாக திகழ்பவன் பரதன். பதினான்கு ஆண்டுகள் நந்தி கிராமத்தில் இராமனை எதிர்பார்த்து காத்திருந்த கோலத்தில் பரதன் க்கூடல் மாணிக்கம்  ஆலயத்தில் சேவை சாதிக்கின்றார்.  பரதனுக்கு நமது பாரத தேசத்தில் உள்ள தனிக்கோவில்கள் சிலவற்றில் இதுவும் ஒன்று என்பது  ஒரு தனி சிறப்பு. அது மட்டுமல்ல இன்னும் பல சிறப்புகளும் உள்ளன அவை என்னவென்று காணலாமா அன்பர்களே.

நெடிதுயர்ந்த பலி பீடம்
கொடி மரம்

பரதன் தவக்கோலத்தில் இருப்பதால் பூஜையின் போது வாசனைத் திரவியங்கள் சேர்ப்பதில்லை. தீபாராதனை வழிபாடும் கிடையாது. இவரே பரப்பிரம்மாக விளங்குவதால் கணேசர் உட்பட வேறு எந்த உபதெய்வமும் இக்கோவிலில் கிடையாது. தாமரை மலர், துளசி, மற்றும் தெச்சி பூக்கள் மட்டுமே பூஜைக்கு பயன்படுத்துகின்றனர். வேறு எந்த மலரும் சார்த்துவதில்லை. இவ்வாலயத்தில் உள்ள  துளசி செடிகளில் விதைகள் தோன்றுவதில்லையாம். பொதுவாக கேரளாவில் எல்லா ஆலயங்களிலும் ஐந்து வேளை பூஜைகள் நடைபெறும் ஆனால் இக்கோவிலில் மூன்று வேளை பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றது. உஷத் பூஜை மற்றும் பந்தீரடி பூஜைகள் நடைபெறுவதில்லை. அது போலவே அனுதின  சீவேலியும் நடைபெறுவதில்லை. சித்திரை உற்சவத்தின் போது மட்டுமே  சுவாமி வெளியே வருவார்





ஆலய ஸ்ரீகோவில் முகப்பு 

ஐப்பசி மாதம் திருவோணத்தன்று புத்தரிசி நைவேத்தியம் உண்டு. புதிதாக அறுவடையான அரிசி உணவு நிவேதிக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மறுநாள் முக்குடி என்ற பிரசித்தி பெற்ற வயிற்று வலியை போக்கும் பிரசாதமும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. ப்பிரசாதம் பல தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினர் ரகசியம் காத்து தயாரிக்கிறார்கள். இவ்வாலயத்தில் கத்திரிக்காய் சிறப்பு  நைவேத்தியம் என்று பல சிறப்புகள் உள்ளன.

இவ்வாலயத்தை அடைய புகைவண்டி மூலம் வருபவர்கள் இரிஞ்ஞாலக்குடா புகைவண்டி நிலையத்தில் இறங்கி பின்னர் ஆட்டோ அல்லது பேருந்து மூலம் 9 கி.மீ தூரத்தில் உள்ள கோவிலை அடையலாம். இத்திருக்கோவில் கொடுங்கல்லூரிலிருந்து திருச்சூர் செல்லும் பாதையில் திருச்சூரிலிருந்து சுமார் 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.   இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட பரதன் ஆலயம் கூடல் மாணிக்கம் ஆலயம் என்றும் அழைக்கப்படுகின்றது. இனி இத்தலத்தின் புராணத்தை பற்றிப் பார்ப்போமா?

விளக்கு மாடம் 


ஆதி காலத்தில் அடர்ந்த வனமாக இருந்த இவ்விடத்தில் குலிப்பிணி என்ற மஹரிஷியின்  தலைமையில் பல ரிஷிகள் தவம் செய்து வந்தனர். அவர்களின் தவத்திற்கு மெச்சி மஹாவிஷ்ணு அவர்களுக்கு பிரத்யக்ஷமாகி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.அவர்களும் தாங்கள் இங்கேயே கோவில் கொள்ள வேண்டும் என்று கேட்க அவ்வாறே வரம் அளித்தார். பின்னர் முனிவர்கள் கங்கையை வேண்ட அவள் அங்கு தோன்றினாள். வ்வெள்ளத்தில் மூழ்கி முனிவர்கள் அனைவரும் பரமபதம் அடைந்தனர். இன்றும் கோவிலின் உள்ளே உள்ள  குலிப்பிணி தீர்த்தத்தில் கங்கை இருப்பதாக ஐதீகம். இக்குளத்தின் நீரே பெருமாளுக்கு நைவேத்தியத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது. பூஜை செய்யும் நம்பூதிரிகள் மட்டுமே இக்குளத்தில் நீராடுகின்றனர்.

ஆதிகாலத்தில் சாலக்குடி ஆறும், குருமலி ஆறும்  சங்கமம் ஆகும் கூடுதுறையில் இக்கோவில் அமைந்திருந்ததால் கூடல் மாணிக்கம் என்றழைக்கப்படுகின்றது என்பது ஒரு ஐதீகம். இரு சால் கூடல் என்பதே இரிஞ்ஞாலகுடா ஆனது என்பர். மற்றொறு ஐதீகம். ஒரு சமயம் பெருமாளின் சிரசிலிருந்து ஒரு அற்புத ஓளி தோன்றியது அப்போதைய காயங்குளம் அரசனிடம் இருந்த அற்புத விலை மதிப்பற்ற மாணிக்கத்தின் ஒளியை இவ்வொளியுடன் ஒப்பிட கொண்டுவந்த போது ம்மாணிக்கம் பெருமாளின் திருமேனியில் மறைந்து விட்டது எனவே கூடல் மாணிக்கம் ஆயிற்று என்பர்.

குலிப்பிணி தீர்த்தம்

மூன்றாவது ஐதீகம் ஒரு சமயம் தலிப்பரம்பா என்ற ஊரின் ஒரு முதியவர் பல் வேறு ஆலயங்களின் சான்னியத்தை ஒரு சங்கில் ஏற்று  தன் ஊரில் உள்ள மூர்த்திக்கு மாற்ற ஆலயம் ஆலயமாக சென்று  வரும் போது இவ்வாலயத்தை அடைந்தார். அப்போது அவர் கையில் இருந்து அச்சங்கு கீழே  விழுந்து சுக்குநூறாக உடைந்து அதில் இருந்த தெய்வ சக்திகள் அனைத்தும் இப்பெருமாளில் இணைந்ததால் இவர் கூடல் மாணிக்கம் என்றழைக்கப்படுகின்றார்.


கேரளப்பாணியில் மூன்று பக்கமும் வாயில்களுடன் பிரம்மாண்டமாக வ்வாலயம் அமைந்துள்ளது.  கிழக்கு கோபுரத்தின் சுவர்களில் புடைப்பு சிற்பங்கள்   வரையப்பட்டுள்ள. ஆலயம் முழுவதும் ஓவியங்களும், அற்புத கற்சிலைகளும், மரச்சிலைகளும் நிறைந்திருக்கின்றன. ஸ்ரீகோவில் வட்ட டிவில் உள்ளது. விமானம் உயரமாக சிறப்பாக இரண்டடுக்கு கூம்பு வடிவத்தில் உள்ளது. விமானத்தில் இராமாயணம் சம்பந்தப்பட்ட காட்சிகள் மர சிற்பங்களாக எழிலாக இடம் பெற்றுள்ளன. கூரையைத்தாங்கும் மரச்சட்டங்களையும் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. த்னத்திற்கு தாமிர தகடு சார்த்தியுள்ளனர். கலசம் ஆறு அடி உயரம். உயர்ந்த மதிற்சுவர் ஸ்ரீகோவிலைச் சுற்றி செவ்வக  விளக்கு மாடம், முன் புறமும் பிறமும்  உயர்ந்த மண்டபங்கள் ஒரு குளம் என்று மிகவும் பிரம்மாண்டமாக ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயத்தை சுற்றி நான்கு திருக்குளங்கள் அமைந்துள்ளன. இவற்றுள்  புனிதமான குலிப்பிணி தீர்த்தம் கோவில் வளாகத்திற்குள் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தெற்கு பிரகாரத்தில் பெரிய கூத்தம்பலமும் உள்ளது. கூத்தம்பலத்தின் கூரை மிகவும் உயரமாகவும், சாய்வாகவும் அமைந்துள்ளது. உட்புறம் பிரம்மாண்ட மரத்தூண்கள் மற்றும் அழகிய மரச்சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. கூத்தம்பலத்தின் வாயிற்படிகளின் இருபுறமும் கஜ லக்ஷ்மி கற்சிற்பம் அலங்கரிக்கின்றது. பலி பீடம் சுமார் 12அடி உயரம் அருகில் தங்கக் கவசம் பூண்ட கொடி மரம் இவ்வாலயத்தின் பிரம்மாண்டத்திற்கு தக்கவாறே அமைந்துள்ளது.

இராம சகோதரர்கள்

இத்தலத்தில் பரதன் சதுர்புஜ விஷ்ணுவாகவே சேவை சாதிக்கின்றார். நின்ற தவத்திருக்கோலம், சதுர்புஜங்கள், வலமேற்கரம் தண்டம், கீழ்க்கரம் அக்ஷமாலை, இடமேற்கரம் சக்கரம். கீழ்க்கரம் சங்கம், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நின்ற கோலத்தில் எழிலாக சேவை சாதிக்கின்றார்.

தீபவழிபாடு, அவல் பாயச வழிபாடு, வெடிவழிபாடு, புஷ்பாஞ்சலி வழிபாடு இத்தலத்தில் பிரபலம். 14 வருடங்கள் கழித்து எப்போது இராமன் திரும்பி வருவார் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கோலம். வனவாசம் முடித்து இராமன் திரும்பி வந்த போது அன்று பரதன் முகம் எவ்வளவு மலர்ச்சியாக இருந்ததோ அவ்வளவு மலர்ச்சியாக பரதன் இன்றும்  அருள் பாலிக்கின்றார் என்பது ஐதீகம். 


பெருமாளுக்கு சங்கமேஸ்வரர் என்றொரு நாமமும் உண்டு.  101 தாமரை மலர்களுக்கு அதிகமாக எண்ணிக்கையில்  12 அடி நீளமான தாமரை மலர் மாலை பெருமாளுக்கு சார்த்தினால், டைகள் எல்லாம் விலகும் நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும் என்பது இங்குள்ளவர்கள் நம்பிக்கை.

மேலும் தீராத வயிற்று வலியை நீக்கும் தன்வந்திரிப் பெருமாளாகவும் இவர் விளங்குகிறார். தீராத வயிற்று வலியால் ஒரு பக்தர் அவதிப்பட்டு வந்தார் அவர் கனவில் தோன்றிப் பெருமாள் அவரது தோட்டத்தில் விளைந்த 101  கத்திரிக்காய்களை நைவேத்யமாக சமர்பிக்குமாறு வேண்டினார். அதற்குப்பின் அவரது வயிற்று வலி மாயமாக மறைந்தது. இது போல பல பக்தர்களின் நோயை தீர்த்து வைத்துள்ளார் பரதப்பெருமாள்

பதினான்கு வருடம் கழித்து  இராமன் வர தாமதமானபோது வந்து நந்திகிராமத்தில் காத்திருந்த பரதன்  தீ மூட்டி அதில் இறங்க தயாரான போது விரைந்து வந்து இராமபிரான், இராவணனை வென்று வாகை சூடி, பிராட்டியுடன் திரும்பி வருகிறார் என்று கூறிய ஹனுமன் திடப்பள்ளியில் (மடப்பள்ளி) இன்றும் அரூபமாக  வசிப்பதாக நம்புகின்றனர்.  பெருமாளை வணங்கிய பின் திடப்பள்ளி சென்று அனுமனையும் வணங்குகின்றனர் பக்தர்கள்.

மேட மாதம் (சித்திரை) பூரம் தொடங்கி திருவோணம் முடிய பெருவிழா மிகவும் சிறப்பாகவும் வேத தந்திரீக முறை வழுவாமலும்  நடைபெறுகின்றது. கேரளாவின் மற்ற கோவில்களை விட இங்கு நடக்கும் திருவிழா மிகவும் வித்தியாசமானது. தினமும் காலையும், மாலையும் 17 யானைகளோடு சுவாமி எழுந்தருளுவார். அதைக் காணக் கண் கோடி வேண்டும். பவனியின் போது நூற்றுக்கணக்கான வாத்தியக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய ஒரு அருமையான கோவில் கூடல் மாணிக்கம் சங்கமேஸ்வர்ர் கோவில் என்பதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை.  வாய்ப்புக் கிட்டினால் அவசியம் சென்று சேவியுங்கள்.


மற்ற அம்பலங்களின்  தரிசனம்:     திருப்பிரயார்,     திருமூழிக்களம்