Showing posts with label கற்பகவல்லி அம்மன் பதிகம். Show all posts
Showing posts with label கற்பகவல்லி அம்மன் பதிகம். Show all posts

Saturday, October 8, 2016

நவராத்திரி அம்மன் தரிசனம் -7


                                                               கருமாரி திரிபுரசுந்தரி 
வைஷ்ணவி அலங்காரம் 

சங்க சக்ர கதாஹஸ்தே
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

சப்தமி நாளான இன்று அன்னை ஆதி பராசக்தியை மது கைடபரை சம்ஹாரம் செய்த மஹா துர்க்கையாக வழிபடுகின்றோம். இதனால் சத்ரு பயம், தீவினை, கெடுதிகள் விலகி இன்பம் உண்டாகும்.

                                                                    **************** 


பிரஹத் சுந்தர குசாம்பாள்
கருமாரி அலங்காரம் 


நவராத்திரியின் ஏழாம் நாள் அன்னையை எட்டு வயது குழந்தையாக பாவித்து சாம்பவி என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் க்ஷேம விருத்தி ஏற்படும் . இன்றைய ஸ்லோகம்

அகாரணாத் சமுத்பத்திர் யந்மயை பரிகீர்த்திதா யஸ்யாஸ்தாம் ஸுகதாந் தேவீம் சாம்பவீம் பூஜயாம்யஹம் ||


(மிகுந்த ஒளிமயமான பரமாத்மாவின் இச்சைப்படி எந்த சக்தி திருவுருவங்களைத் தரிக்கின்றதோ அந்த சாம்பவியாகிய சக்தியை வணங்குகிறேன்.)

*************************



காலராத்ரி துர்க்கா 

அசுரர்களை வதம் செய்து பிரபஞ்சத்தைக் காப்பதற்கு காலராத்ரி தேவி அவதாரம் எடுத்தாள். பரட்டை முடி, கருத்தமேனி, மூன்று கண்கள், கழுதையின் மீது அமர்ந்தவாறு நெருப்பைக் கவசமாகக் கொண்டு கோபமான கோலத்தில், காலதாத்ரி தேவி காட்சி கொடுக்கிறாள். காலத்தை வென்றவளான இவள் இரவைப் போன்ற கரிய நிறத்துடன் சற்று அச்சம் தரும் கோலத்திலேயே காணப் படுகின்றாள். 

இரவு நேரத்தில் இறந்த உடலான சவத்தின் மேல் அமர்ந்து, மின்னல் போன்ற ஒளி வீசும் ஆபரணத்தை அணிந்துகொண்டு, நெருப்பைக் கக்கும் வாயுடன் பவனி வருவாள் என்றும் கூறுவர். சுபாங்கி என்ற மற்றொரு பெயரைக் கொண்ட காலதாத்ரி தேவி தீமைகளை அழித்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நல்லாசிகள் தந்து அருள் புரிகிறாள் . 

பொன்னிறமான கௌரி (பார்வதி) அசுரர்களை அழிக்க பொன்னிறத்தை மாற்றி கருப்பு வர்ணத்தவளாக காட்சி தருகின்றாள். சும்ப நிசும்பர்களை அழிக்க அன்னை காளியாக தோன்றினாள். 

வாமபாதோல்லஸத் லோஹலதா கண்டக பூஷணா |
வர்த்தந் மூர்த்தத்வஜா க்ருஷ்ணா காலராத்ரிர் பயங்கரீ ||

(கழுதை வாகனத்தில் பெரிய உதடுகளுடன், பளபளக்கும் ஆபரணங்கள் அணிந்து பிரகாசமாக பவனி வரும் பயங்கரீ துர்கா என்னுடைய அறியாமையை போக்கட்டும்.)

********************


சொர்ணாம்பாள் 
மஹாலக்ஷ்மி அலங்காரம் 


ஸ்ரீ கற்பகவல்லியம்மன் பதிகம் 

நெஞ்சத்திற்கும் வெகு வஞ்சத்திற்கும் அறநெறியில் வீழ்ந்திடுமயக்கும், நீசப்பிசாரரொடு நேசித்து நன்னெறியில் நிலையாத பெருமயக்கும்

அஞ்சத்தெழுநீத குழல்மங்கையர்கள் உந்தியெனு மடுவில் வீழ்ந்திடு மயக்கும் மாயைக்கு வித்தான நீள்நிதியின்மேலாசைமைத்துழன்றிடு மயக்கும்

கொஞ்சத்திலுனதருளை அன்றி விட்டொழியாது கோதற்ற ஞான நிலையும், கூடாது வாடுமெனை அஞ்சலென்றுன்னடியார் கூட்டமொடுகூட்டு கண்டாய்,

விஞ்சச் சிறந்தவனிடத்தில் வளரமுதமே விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க் குழல்வல்லி மரைமலர்ப்பதவல்லி விமலி கற்பகவல்லியே! (7)

பொருள்: அம்மா கற்பகவல்லியே! உன்னுடைய அருளால் குற்றமற்ற  ஞானம் பெறாமல் தடுக்கின்ற; நெஞ்சில் வஞ்சம் கொண்டு அற வழியில் செல்லாத மயக்கமும், தாழ்ந்தவர்களுடன் சேர்ந்து  நன்னெறியில் செல்லாத பெரு மயக்கமும், அஞ்சத்தக்க பெண்ணாசை என்னும் மயக்கமும்,  மாயைக்கு காரணமான செல்வத்தின் மேல் ஆசை வைத்து துன்பத்தில் உழலும்  மயக்கம்  ஆகியவற்றால்,  வாடுகின்ற அடியேனை அஞ்சாதே நீ எனது அடியவன் என்று உன்னுடைய அடியார் கூட்டத்தில் சேர்த்துக்கொள்வாயாக. யாரும் வெல்ல முடியாத சிறப்பையுடைய சிவபெருமான் இடப்பாகம் கொண்ட  அமுதானவளே! சோலைகள் நிறைந்த  திருமயிலையில் கோயில் கொண்ட மணம் வீசும் மலர்களை அணிந்த சடையாளே! தாமரை மலர் பதத்தாளேபரிசுத்தமானவளே! கற்பகவல்லியே!   

முந்தைய பதிவு                                                                                                                                             அடுத்த பதிவு   


                                                                                                                                               அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

Friday, October 7, 2016

நவராத்திரி அம்மன் தரிசனம் -4

கற்பகவல்லி அம்மன் காமதேனு வாகனத்தில் 
மஹா கௌரியாக கொலு


நவராத்திரியின் நான்காம் நாள் அன்னை ஜகத் ஜனனியை சோடசாக்ஷரி என்னும் சுமங்கலிப் பெண்ணாக, சர்வ மங்கள மாங்கல்யையாக பூஜிப்பதால் கல்வி, ஞானம் பெருகும்.



பின்னழகு

நவராத்திரியின் நான்காம் நாள் அன்னையை ஐந்து வயது குழந்தையாக பாவித்து ரோகிணி என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் கல்வி வளர்ச்சி உண்டாகும். இன்றைய ஸ்லோகம்

ரோஹயந்தீச பீஜாநி பிராக்ஜன்ம ஸஞ்சிதாநிவ யாதேவிஸர்வபூதானாம் ரோஹிணீம் பூஜயாம்யஹம் ||

(எல்லா ஜீவரசிகளின் பாவங்களையும் எந்தச் சக்தியினால் நிவர்த்தி செய்கிறாளோ அந்த சக்தியாகிய ரோகிணியை வணங்குகிறேன்.)

*********************


கூஷ்மாண்டா துர்கா

நவராத்திரியின் நான்காம் நாள் அன்னை நவதுர்கைகளில் , சூரிய மண்டலத்தின் நடுவில் அமர்ந்து கொண்டு இந்த புவனம் முழுவதற்கும் வெப்பத்தை வழங்கிக்கொண்டிருக்கும் கூஷ்மாண்டா துர்காவாக வழிபடுகின்றோம். இந்த பிரம்மாண்டம் முழுவதையும் சிருஷ்டிப்பவள் இவளால்தான்.

கமண்டலம், வில், அம்பு, தாமரை, அமிர்தகலசம், சக்கரம், கதை, ஆகியவைகளை ஏழு கரங்களில் ஏந்தியபடி எட்டாவது கரத்தில் எட்டு சித்திகள், ஒன்பது நிதிகள் அடங்கிய ஜப மாலையோடு, சிம்மத்தை வாகனமாகக் கொண்டு திவ்யமாகக் காட்சி கொடுக்கிறாள் அன்னை. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நோயற்ற வாழ்க்கையைக் கொடுத்து அருள் புரிகிறாள். எல்லாவற்றிக்கும் ஆதியாக ஊதா வண்ணத்தவளாக விளங்குகின்றாள் இந்த துர்கா.

அன்னை தன் சக்தி முழுவதையும் சூரியனுக்கு அளித்து சிருஷ்டியை துவக்குகிறாள் அன்னை.

ஸுராஸம்பூர்ண கலசம் ருதிராப்லுத மேவசம் |
ததாநா ஹஸ்த பத்மாப்யாம் கூக்ஷ்மாண்டா சுபதாஸ்துமே ||

என்பது கூஷ்மாண்டா துர்காவின் ஸ்லோகம் ஆகும்.

(தனது இரு தாமரைத் திருக்கரங்களில்   இரத்தம் நிரம்பிய இரு பூரண கலசங்களை ஏந்தி, சிருஷ்டியை ஸ்திதி  சம்ஹாரத்தை தனது கண் இமைப்பில் நடத்தும் கூஷ்மாண்டா தேவி அடியேனுக்கு எல்லா வளங்களையும் வழங்கட்டும். )

**********************



முண்டக கண்ணியம்மன் 
சரஸ்வதி அலங்காரம் 

*********************
ஸ்ரீ கற்பகவல்லியம்மன் பதிகம் 

பொய்வைத்த சிந்தை மடமங்கையர்கள் வாசனைப் பூங்குழலிலே நிழலிலேபொழியம்புபோலமிரு விழியம்பிலே பொடிப்பூச்சிலே கைவீச்சிலே

செய்தொப்பமிட்ட செப்பெனுமுலையிலே, துடிசிற்றிடையிலே, உடையிலே, தெட்டிலே, நந்நுதற் பொட்டிலே வெண்ணகைச் செம்பவள வாயிதழிலே,

பைவைத்த விடவரவமெனு நிதம்பத்திலே பாழறி வழிந்து மூழ்கிப் பரகதிக்கொரு தவிச்செய்கையிமிலாக் கொடும் பாதகனையாள்வதன்றோ

மெய்வைத்தகையானிடத்தில் வளரமுதமே, விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க்குழல் வல்லி மரைமலர்ப்பதவல்லி விமலி கற்பகவல்லியே! (3)

பொருள்: பொய்யை மனதில் கொண்ட மங்கையர்களின் மணம் மிகுந்த  கரிய கூந்தல், அம்பு போன்ற கூரிய இரு  கண்கள், பொடிப்பூச்சு, ஒயிலான கை வீச்சு, மதர்த்த செப்புக்கலசம் போன்ற கொங்கைகள், உடுக்கை போன்ற இடை, அணிந்திருக்கும் ஆடைகள், நெற்றிப் பொட்டு, முறுவலிக்கும் செம்பவளம் போன்ற இதழ், விடம் கொண்டப் பாம்பைப் போன்ற அல்குல் ஆகியவற்றில் மூழ்கி அறிவிழந்து தடுமாறும், பரகதி அடைய நினையாத பாதகனை, என்று ஆள்வாய், அம்மா கற்பகவல்லியேமெய்யிற்கே இருப்பிடமான சிவபெருமானின் இடப்பாகம் கொண்ட  அமுதானவளே! சோலைகள் நிறைந்த  திருமயிலையில் கோயில் கொண்ட மணம் வீசும் மலர்களை அணிந்த சடையாளே! தாமரை மலர் பதத்தாளேபரிசுத்தமானவளே! கற்பகவல்லியே!   
  


முந்தைய பதிவு                                                                                                                                  அடுத்த பதிவு   


                                                                                                                            அம்மன் அருள் தொடரும். . . . .. ...