Wednesday, June 22, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 23

 சிவன்மலை ஆண்டவர் தரிசனம்



அடியோங்கள் இந்த யாத்திரையின் போது சிவன் மலை செல்ல வாய்ப்பு அமையவில்லை என்றாலும், சென்னிமலை, சிவன்மலை என்று இப்பகுதியில் இரண்டு முருகன் ஆலயங்களையும் சேர்த்தே சொல்லுவர் என்பதால் சிவன்மலை ஆண்டவரையும் தரிசிக்கலாம் அன்பர்களே.  இத்தலத்தின் தனி சிறப்பு உத்தரவுப் பெட்டியாகும்.

சிவன் மலை என்பதாலும் ஆண்டவர் என்று அழைப்பதாலும் இம்மலையில் இருப்பது சிவன் கோவில் அல்ல மாறாக இங்கு முருகன் கோவில் இருப்பது சிறப்பு. திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ளது.  கங்கையால்  தாங்கப்பட்டதால் முருகருக்கு காங்கேயன் என்ற திருநாமமும் உண்டு அப்பெயரே ஊருக்கு ஏற்பட்டு இன்று காங்கேயம் என்று அழைக்கப்படுகின்றது. கங்கை குல வேளிருக்கு உரியது, கங்கர்கள் ஆண்டது என்பதால் இப்பெயர் பெற்றது. காங்கேய நாடு கோவில்கள் நிறைந்த நாடு; இன்றும் பல ஆயிரம் ஆண்டு பழைமையான கோவில்கள் காங்கேயம் பகுதிகளில் காணப்படுகின்றன. சிவன் மலை குன்றாகவும், வனமாகவும் இருந்துள்ளது. பட்டாலியே குடியிருப்பாக இருந்துள்ளது. சிவமலை முருகனை பட்டாலியூரன், பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் பாலன் என அழைக்கின்றனர். அடிவாரத்திலுள்ள பட்டாலி வெண்ணீஸ்வரர் கோவில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகவும், ஏழு ஸ்வரங்கள் இசைக்கும் தூண், அற்புதமான சிற்பங்கள் கொண்டது.  

அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்டது இத்தலம்.  மூன்று பாடல்களில் இத்தலத்தை பாடியுள்ளார் அருணகிரிநாதர். மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

சிவபெருமானின் அஷ்டவீர செயல்களுள் ஒன்றான  திரிபுர சம்ஹாரத்தின்  சமயம் மேரு மலையை வில்லாகப் பயன்படுத்திய போது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. இவ்வரலாறு ’சிவமலைக் குறவஞ்சிப் பாடலில்’ குறிப்பிடப்படுகின்றது.

அந்த மேரை ஈசன் திரிபுர சம்ஹாரம்

செய்ய வளைக்குங் காலை

முந்து கொடுமுடியுள் ஒன்று சிந்தி இங்கு

வந்த சிவமலை இம்மலையே! ’  -  புராணங்கள், கல்வெட்டுகள் போன்றவற்றிலும் சிவ மலை என்றே உள்ளது. 

 18 சித்தர்களின் சிறப்பு பெற்றவரும், சிவ வாக்கியம் என்ற நூலை இயற்றிய சிவஞானியும், சித்தருமாகிய சிவவாக்கியர் அமைத்த கோவில் ஆகும். சிவ வாக்கியர், முருகனின் உபதேசத்தால், இக்கோயிலை அமைத்ததால், சிவமலை என பெயர் பெற்று, நாளடைவில், சிவன் மலை என பெயர் மருவியுள்ளது. பழனியாண்டவரை எவ்வாறு போகர் என்னும் வடிவமைத்தாரோ அது போல சிவவாக்கியர் சிவன்மலை ஆண்டவரை வடிவமைத்தார் என்றொரு நம்பிக்கையும் உள்ளது. வெகு  காலத்திற்கு முன்னர் இந்த சிவன்மலை அடிவாரத்தில் சில சித்தர்கள் தங்கி இருந்தார்கள்  அப்படி தங்கி இருந்தவர்களில் சிவவாக்கிய சித்தர் என்ற ஒருவரும்  இருந்தார்.  இவர் அதிகாலை சூரியன் உதிக்கும் முன்பே,  சித்தர்கள் ஆசிரமத்தில் இருந்து வெளியே சென்றுவிடுவார். சூரியன் மறைந்த பின்பே ஆசிரமத்திற்கு திரும்புவாராம். உடன் இருக்கும் சித்தர்கள் உட்பட யாரிடமும் பேசாமல் மௌனவிரதம் இருந்து வந்தாராம். எங்கே செல்கிறீர்?! என்ன செய்கிறீர்கள்?! சாப்பிட்டீர்களா என  யார் என்ன கேட்டாலும் அமைதியாவே இருப்பாராம். இப்படியே ஆறுமாத காலம் கழிந்தது. ஆறு மாதத்திற்கு பிறகு, மௌனம் கலைத்து, எல்லோரையும் அழைத்துக்கொண்டு  சிவன்மலையின் உச்சிக்கு சென்றாராம் . அங்கு, கள்ளி மரத்தடியில், தான் வடிவமைத்திருந்த சிவன்மலை ஆண்டவர் சிலையை  அனைவருக்கும் சிவவாக்கிய சித்தர் காட்டினாராம். ஆண்டவரின் சிலையின் தெய்வாம்சம் அனைவரையும் கவர்ந்தது. பின்னர் நல்லதொரு நாளில் சிவன்மலை ஆண்டவர் சிலையை அவரே பிரதிஷ்டையும் செய்து வைத்தாராம்.  அதனால் சித்தரின் பேரினால் சிவமலை என அழைக்கப்பட்டு இப்போது சிவன்மலை ஆகிவிட்டது.  

  சிவாசலம், சிவராத்திரி, சிவமாமலை. சிவசைலம், சிவநாகம், சிவகிரி எனவும், புலவர்கள் தெளி தமிழ்தேர் சிவமலை, செல்வ சிவமலை, கல்யாண சிவமலை, மகிமை சேர் சிவமலை, தவசு புரி சிவமலை என புகழ்ந்து பாடியுள்ளனர்.

 பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த இத்தலத்திற்கு, வள்ளி மலைச்சாரலில் தினைப்புனம் காத்துக் கொண்டிருந்த வள்ளியம்மையை, காதல் மணம் புரிந்து திருத்தணியில் கோவில் கொண்ட பிறகு  முருகன் இங்கு  முதன் முதலாக வந்து சில காலம் தங்கியிருந்தார் என்று  தல வரலாறு கூறுகிறது. எனவே இத்தலத்தில் முருகன், சுப்பிரமணியராக வள்ளியுடன் காட்சி தருகிறார்.  

வள்ளியை முருகன் கவர்ந்து வந்தபோது, வேடுவர்களுடன் ஏற்பட்ட போரில் இறந்த வேடர்கள், முருகன்- வள்ளி திருமணத்திற்கு பிறகு உயிர் பெற்று எழுந்து, மகிழ்ச்சி கூத்தாடி, பேரொலி எழுப்பியதால் பட்டாலி என பெயர் பெற்றது.

இம்மலையை சுற்றிலும், அஷ்ட துர்க்கைகள் காவல் காப்பதாக  கூறப்படுகிறது. ஆலாம்பாடி வனசாட்சி (காட்டம்மை), பாப்பினி அங்காள பரமேஸ்வரி, காங்கயம் ஆயி அம்மன், வலுப்பூரம்மன், தங்கம்மன், அந்தனூரம்மன், கரியகாளியம்மன், செல்வநாயகி அம்மன் என எட்டு அம்மன்கள் இம்மலையை சூழ்ந்துள்ளதாக, சிவமலை குறவஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அருணகிரிநாதர் ஒரு திருப்புகழில் “பயிரவி யருள்பட் டாலி யூர்வரு  பெருமாளே” என்று பாடியுள்ளார்.

முசுகுந்தன் என்ற அரசன் தீராத நோயால் அவதிப்பட்டார். இதற்கு பல மருந்துகள் உட்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதனால் கௌதமகரிஷி முனிவரிடம் சென்ற முசுகுந்தன், தன் உடல் உபாதையை தீர்க்கும்படி வேண்டினார். சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும் என்றார் கௌதமகரிஷி. முனிவர் கூறியது போல் முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசித்து பின் முசுகுந்தனை வதைத்த நோய் விலகியதாக தல புராணம் தெரிவிக்கிறது.   

உமையம்மனின் திருப்பாதங்களில் உள்ள அணிகலன்களிலிருந்து தெறிந்து விழுந்த நவரத்தினங்கள் நவகன்னியராகி, அவர்கள் வயிற்றிலிருந்து முருகனின் போர்ப்படை தளபதிகளாக திகழ்ந்த நவ வீரர்கள் தோன்றியதால்  வீரமாபுரம் என பெயர் பெற்றதாகவும்  நம்பிக்கை உள்ளது.

இத்தல முருகரின் பக்தையான ஒரு பெண் காசி சென்று நீராட விரும்பியும் காசி செல்ல வசதியில்லாததால் மனம் வருந்த, தம் பக்தைக்காக முருகப்பெருமான் காசித் தீர்த்தத்தை இத்தலத்திற்கே வரவழைத்தார்.


சிவமலை முருகனைச் சுப்பிரமணியர், சிவசுப்பிரமணியர், கல்யாண சிவசுப்பிரமணியர், காங்கயன், கந்தசுவாமி, வேலன், வேலுசாமி, முத்தய்யன், முருகையன், சிவாசலபதி, குகன், சிவாசலவேந்தன், சிவாத்திரிநாதன், வள்ளிமணாளன், கந்தவேள், குமரன், துரைசாமி, மரகதமயூரன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். இப்பெயர்களில் எப்பெயரிட்டு அழைத்தாலும் சுப்பிரமணியர் அதனை மிக உவப்பாக ஏற்றுக்கொள்கிறார். மலையை வணங்கினாலே சிவன்மலையாண்டவரை வணங்கிய பேறு பெறலாம் என்பது ஐதீகம்.

10-13ம் நூற்றாண்டில் இப்பகுதி மிகப்பெரிய வணிக நகரமாக இருந்ததை கோவில் கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.! கொங்கு நாட்டின் 24 நாடுகளின் தலைமையானதாக காங்கேய நாடும், அதன் தலைநகராக பட்டாலியூர் சிவன்மலை இருந்ததாம்.  வீதிகள் தோறும் தேர்கள், அன்னதானத்தில் சிறந்த நாடு; கலை வளரும் நாடு; சிவன் மலையில் சீருடன் தேரோட்டும் நாடு, செல்வம் சிறக்கும் நாடு முத்துரத்தினம் விளையவுள்ள நாடு என பழங்கால பாடல்களில் சிவன்மலையைப்பற்றி குறிப்பு உள்ளது. அதற்கு தகுந்தமாதிரி இப்பகுதியில், அரிய வகை கற்கள், நவரத்தின கற்கள் எடுக்கப்பட்டு, பட்டை தீட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பழங்காலத்தில், இங்கிருந்து நவமணிகள் பெரு வழியில் சென்று, கப்பல்கள் மூலம் ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது, கொடுமணல் ஆய்வு மூலம் தெரிந்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் மலை அமைந்துள்ளது.  496 படிகள் உள்ளன. அடிவாரத்தில் பாலவிநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. பதினெட்டாம் படியைச் சத்தியப்படி என அழைப்பார். அங்கு வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. இப்பதினெட்டாம்படி புராணப்படி என்றும் அழைக்கப்பெறும். இங்குதான் சடைச்சியம்மன் வழிபட்டதும், குடியிருப்பதுமாகும் என்று குறவஞ்சியில் கூறப்படுகிறது. இங்கு அர்த்தமேரு அமைக்கப்பட்டுள்ளது அதன்மேல் திருவடிகள் உள்ளன. மேலே வண்டியில் செல்ல முடியும், தேவஸ்தான பேருந்தும் உள்ளது.

இக்கோயிலின் தலவிருட்சமாக தொரட்டி மரம் உள்ளது. சிவன்மலையில் இன்றும் ஏராளம் சித்தர்கள் தவம் செய்துகொண்டிருக்கின்றனர். புண்ணியம் செய்தோர் கண்களில்அவ்வப்போது சில சித்தர்கள் புலப்படுவதுண்டு.

தல இறைவன் : சுப்பிரமணிய சுவாமி.

தல இறைவி: வள்ளி, தெய்வானை.

தல விருட்சம் : தொரட்டி மரம்.

தல தீர்த்தம் : காசி தீர்த்தம்.

இராஜகோபுரம், தீபஸ்தம்பம், கொடிமரம், முன் மண்டபம், சுற்று பிரகாரம், மூலவர் என ஆகமவிதிப்படி கட்டப்பட்ட இக்கோவில் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டது. சிவன்மலை கோயிலுக்கு வெளியே தீபத்தூண் உள்ளது. அத் தூணின் அடிப்புறத்தில், விநாயகர்  சூலம், மயில் மற்றும் தண்டபாணி வடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே தெற்குப் பிரகாரத்தில், கைலாசநாதர், ஞானாம்பிகை சன்னிதிகள் கிழக்கு முகமாக உள்ளன. நவகன்னியருக்கும், நவவீரர்களுக்கும், இங்கு தவமிருந்த உமாதேவியாருக்கும் கைலாசத்திலிருந்து எழுந்தருளி அருள் கொடுத்தவர் கைலாசநாதர். மேற்குப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கன்னி மூலை விநாயகரும், வடமேற்கில் தண்டபாணியும், கருவறையின் வெளிச்சுவற்றில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, துர்க்கைக்கு எதிரில் சண்டிகேஸ்வரர் அருள் பாலிக்கின்றனர். சனிபகவானுக்குத் தனி சன்னிதியும் அது தவிர நவக்கிரக சன்னிதியும் அடுத்து பைரவர் சன்னிதியும் அமைந்துள்ளன. பிரகாரம் சுற்றிவந்து, கொடிமரம், மயில்வாகனக் குறடு, பலிபீடம் கடந்தால், சுமுகர், சதேகர் துவாரபாலகர்கள். அடுத்து உள்ளே கருவறையில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி சமேதராக அருட்காட்சி தருகின்றார். கருவறைக்கு அருகில் சிவவாக்கியர் குகை.  சிவன்மலை ஆண்டவரை அருணகிரி நாதர் இவ்வாறு பாடியுள்ளார்.

இருகுழை யிடறிக் காது மோதுவ

     பரிமள நளினத் தோடு சீறுவ

          இணையறு வினையைத் தாவி மீளுவ ...... வதிசூர

 எமபடர் படைகெட் டோட நாடுவ

     அமுதுடன் விடமொத் தாளை யீருவ

          ரதிபதி கலைதப் பாது சூழுவ ...... முநிவோரும்

 உருகிட விரகிற் பார்வை மேவுவ

     பொருளது திருடற் காசை கூறுவ

          யுகமுடி விதெனப் பூச லாடுவ ...... வடிவேல்போல்

 உயிர்வதை நயனக் காதல் மாதர்கள்

     மயல்தரு கமரிற் போய்வி ழாவகை

          உனதடி நிழலிற் சேர வாழ்வது ...... மொருநாளே

 முருகவிழ் தொடையைச் சூடி நாடிய

     மரகத கிரணப் பீலி மாமயில்

          முதுரவி கிரணச் சோதி போல்வய ...... லியில்வாழ்வே

 முரண்முடி யிரணச் சூலி மாலினி

     சரணெனு மவர்பற் றான சாதகி

          முடுகிய கடினத் தாளி வாகினி ...... மதுபானம்

 பருகினர் பரமப் போக மோகினி

     அரகர வெனும்வித் தாரி யாமளி

          பரிபுர சரணக் காளி கூளிகள் ...... நடமாடும்

 பறையறை சுடலைக் கோவில் நாயகி

     இறையொடு மிடமிட் டாடு காரணி

         பயிரவி யருள்பட் டாலி யூர்வரு ...... பெருமாளே.

பொருள்: காதிலுள்ள இரண்டு குண்டலங்களையும் மீறி காதுகளை மோதுவன. மணம் மிகுந்த தாமரை மலர்களை சீறிக் கோபிப்பன. நிகர் இல்லாத முந்தை வினைகளையும் தாவி மீள்வன. மிக்க சூரத்தனம் உடைய யமனுடைய தூதர்களாகிய சேனை அஞ்சிப் பின்னடைந்து ஓடும்படி வழி தேடுவன. அமுதமும் விஷமும் கலந்தன போன்று ஆளையே அறுத்துத் தள்ளுவன. இரதியின் கணவனான மன்மதனுடைய காம சாஸ்திர நூலிலிருந்து சிறிதும் பிறழாத வண்ணம் எவரையும் சூழ்வன. முனிவர்களும் காமத்தால் உருகும்படியாக, தந்திரத்துடன் கூடிய பார்வையை உடையன. பொருளைக் கவரும் பொருட்டு ஆசை மொழிகளைப் பேசுவன. யுக முடிவு தானோ என்று சொல்லும்படி சில சமயம் போர் விளைவிப்பன. வேலாயுதத்தைப் போல உயிரை வதைக்கும் இத்தகைய கண்களை உடைய ஆசை மாதர்களின்  காம மயக்கம் தருகின்ற பெரும் பள்ளத்தில் போய் விழாமல் இருக்கும் பொருட்டு, உனது திருவடியின் நிழலில் பொருந்தி வாழும் வாழ்க்கை என்றொரு நாளாவது கிடைக்குமோ?

நறு மணம் வீசும் மாலையை அணிந்து, உனக்கு வாகனம் ஆகும்படி விரும்பின பச்சை ஒளி வீசும் தோகையைக் கொண்ட சிறந்த மயிலின் மேல், முற்றின ஒளி கொண்ட சூரியனுடைய ஒளியைப் போல் விளங்கி வயலூரில் வாழும் செல்வமே.

வலிமை வாய்ந்த முடியை உடைய, போர்க்கு ஏற்ற சூலாயுதத்தை ஏந்தியவள், மாலையை அணிந்தவள், உனக்கு அடைக்கலம் என்று நிற்கும் அடியார்களுக்கு பற்றாக இருக்கும் குணத்தினள், வேகமாகச் செல்லும் கடினமான பெண்சிங்க வாகனம் உடையவள்,  கள்ளுணவை உண்பவர்களுக்கு மேலான போகத்தை அளிக்கும் அழகி, அரகர என்று நிரம்ப ஒலி செய்பவள், சியாமளப் பச்சை நிறத்தை உடையவள், சிலம்பு அணிந்த கால்களை உடைய காளி, பேய்கள் நடனமாடும், பறைகள் ஒலிப்பதுமான, சுடு காட்டுக் கோயிலின் தலைவி,  சிவ பெருமானோடு, அவரது இடப்பாகத்தில் இருந்துகொண்டே, காரணமாக நடனம் செய்பவள், அத்தகைய பைரவியாம் பார்வதி தேவி பெற்றருளியவனும், பட்டாலியூரில் (சிவன்மலையில்) வீற்றிருப்பவனுமான, பெருமாளே.

 

 திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, நோய் பாதிப்பு என அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் அற்புதமலையாக விளங்குகிறது.  மலை மேல், சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார். காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து, இங்கு வந்து பூஜை செய்து உண்டால், காய்ச்சல் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது.

மற்ற திருத்தலங்களில் முதல் வழிபாடு பிள்ளையாருக்கு நடைபெறும் ஆனால்  இத்தலத்தில்  முதல் வழிபாடு முருகப்பெருமானுக்கே. நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியபகவானைப் பார்த்து நிற்கின்றன. நவக்கிரக சன்னதியை, ஒன்பது முறை சுற்றி, வழிபட்டு வந்தால் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அதிலிருந்து விடுபடலாம். சனி பகவான் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளார். அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பாகும். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும் இங்கு கிடைக்கும்.

வேறெந்த முருகன் கோவில்களிலும் இல்லாத வகையில் பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு இங்கு வேட்டு வைத்து வழிபடுகின்றனர். இதற்கு ‘பொட்லி’ என்று பெயர். இதற்கான இடம் மலை மீது உள்ளது.

உத்தரவு பெட்டி : சிவன்மலை கோவில் சிறப்புகளில், பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு “காரண மூர்த்தி” என்ற பெயர் உள்ளது. சிவன்மலை கந்தன் பாதம் கனவிலும் காக்கும் என்று வழிபடுகின்றனர் பக்தர்கள்.  சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, தனக்கு இன்ன பொருளை வைத்து பூஜை செய்யுமாறு கூறுவார். அதன்படி, சுவாமியின் பாதத்தில் மலர் வைத்து  உத்தரவு கேட்கப்பட்டு, வெள்ளைப்பூ வந்து  உத்தரவானதும் குறிப்பிட்ட பொருள் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும். இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரை, பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். சிவன்மலை ஆண்டவன் உத்தரவுபெட்டியில் பக்தர்களின் கனவில் வந்ததாக கூறி ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. ஆண்டவர் உத்தரவு உடன் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தண்ணீர் வைத்து பூஜை செய்யப்பட்ட காலத்தில் சுனாமி வந்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடில் மஞ்சள் விலை ஏறியபோது மஞ்சளும், வைத்து பூஜை செய்யப்பட்டது. இந்தியா, சீனா யுத்தம் வந்தபோது துப்பாக்கி வைத்து பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது. பாலை வைத்து பூஜை நடந்த போது பால் தட்டுப்பாடு ஏற்பட்டது.

 திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, நோய் பாதிப்பு என அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் அற்புதமலையாக விளங்குகிறது சிவன்மலை.

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்தர் சஷ்டி, தை பூசம்,  மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன

சிவமலை என்று சொன்னால் என்னென்ன நடக்கும் என்று ஒரு பாடல்.

 சிவமலை என்றிடத்  சிதையுந்தீவினை

 சிவமலை என்றிடத் திருவந்தெய்திடும்

 சிவமலை என்றிடத் சேரும் புண்ணியம்

 சிவமலை என்றிடத் சித்தியாகுமால்.

சென்னிமலை தரிசனத்திற்குப்பின் ஈரோடு சென்றோம், முதலில் அங்கு தங்க திட்டமிட்டிருந்தோம், ஆனால் விடுதி முன் பதிவு செய்திருக்கவில்லை எனவே  அதை மாற்றி நேராக திருச்செங்கோடு சென்று அங்கு தங்கினோம்.

இப்பதிவில் உள்ள படங்கள் அனைத்தும் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டவை, அவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

3 comments:

கோமதி அரசு said...

//வேறெந்த முருகன் கோவில்களிலும் இல்லாத வகையில் பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு இங்கு வேட்டு வைத்து வழிபடுகின்றனர். இதற்கு ‘பொட்லி’ என்று பெயர். இதற்கான இடம் மலை மீது உள்ளது//

கேரளாவில் ஒரு அம்மன் கோயில் போனோம், அங்கு வேட்டு வைத்து வழிபாடு செய்வார்கள். அர்ச்சனை டிக்கெட் வாங்குவது போல வேட்டுக்கு காசு கொடுக்கவேண்டும்.
தீபாவளி சமயம் ஒலி,(வாணங்கள் வைப்பது) ஒளி (தீபங்கள் வைப்பது)என்று இறைவனை வணங்குவது போல கோயிலில் வேட்டு வைத்து ஒலி எழுப்பி இறைவனை வேண்டுதல் செய்யும் வழக்கம் இருக்கிறது.

கோமதி அரசு said...

சிவமலை என்றிடத் சிதையுந்தீவினை

சிவமலை என்றிடத் திருவந்தெய்திடும்

சிவமலை என்றிடத் சேரும் புண்ணியம்

சிவமலை என்றிடத் சித்தியாகுமால்.//

இந்த பாடலை பாடி சிவன்மலை முருகனை தரிசனம் செய்து கொண்டேன்.

அருமையான திருப்புகழ, படங்கள், செய்திகள் என்று பதிவு அருமை.
நன்றி, வாழ்த்துகள்.

S.Muruganandam said...

பொதுவாக கேரள ஆலயங்களில் நாம் வெடி வழிபாடு உண்டு. தமிழக ஆலயங்களில் இத்தலத்தில் உள்ளது. செய்திக்கு மிக்க நன்றி.