Thursday, June 25, 2009

அங்காள பரமேஸ்வரியின் ஆனந்த கும்பாபிஷேகம் -2


விமானத்தின் நடு தளத்தில் அருள் பாலிக்கும்
அன்னை அங்காளபரமேஸ்வரி

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்த பூரணிக்கு ஆகமவிதிப்படி நடைபெற்ற பூர்வாங்க பூஜைகள். முதல் நாள் காலை விக்னங்கள் அனைத்தையும் போக்கும் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், பின் கோ பூஜை, அஸ்வ பூஜை நடைபெற்றன. அன்று மாலை ப்ரவேச பலி - பூத, பிசாச, பிரம்மராக்ஷஸர்களுக்கு பலி (நைவேத்யம் முதலாகிய உபசார பொருட்கள்) கொடுத்து அவற்றை ஏற்றுக் கொண்டு வேறிடம் செல்லுமாறு அவர்களை வேண்டிக் கொண்டு இடையூறுகளை நீக்கிக் கொள்ளும் நிகழ்ச்சியும், ரக்ஷோக்ன ஹோமம் எனப்படும் ஆலயத்தின் உள்ளிருக்கக்கூடிய துர்தேவதைகளை சாந்தி செய்து அகற்றும் ஹோமமும் நடைபெற்றது.

இரண்டாம் நாள் காலை நவக்ரஹ பிரீத்திக்காக நவக்ரஹ ஹோமம் நடைபெற்றது. அன்று மாலை வாஸ்து சாந்தி - என்னும் இடத்தை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷேகஹ்திற்க்கு முன் இடத்திற்க்கு தேவதையாக உள்ள வாஸ்து புருஷனையும், அவரது அதி தேவதையான ப்ரம்ம தேவரையும் சக்திகளையும் பூசித்து , ஏணைய தெய்வங்களையும் வழி்பட்டு திருப்தி செய்வதே வாஸ்து சாந்தி. மகிழ்வித்த வாஸ்து புருஷனை ஹோமாக்னியால் எரியூட்டி, ஆலயம் முழுதும் இழுத்து சென்று சுத்திகரித்து , இறுதியாக புண்யாஹவாசன கலச நீரால் அவ்விடங்களை சுத்தி செய்வது வாஸ்து சாந்தியின் நிறைவு.

மூன்றாம் நாள் காலை அனைவரும் அறம் செய்து நல்ல பொருள் பெற வேண்டி மஹாலக்ஷ்மி ஹோமம் மற்றும் தன பூஜை சிறப்பாக நடைபெற்றது. மேலும் திசா ஹோமம் மற்றும் சாந்தி ஹோமமும் சிறப்பாக நடைபெற்றது.





நவ யாக குண்டங்கள்

நவ சக்தியாக அருள் பாலிக்கும் அன்னை அங்காளபரமேஸ்வரிக்கு யாக சாலையில் நவ குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. எட்டு திசைகளுக்கு எட்டு யாக குண்டங்கள் மற்றும் ஒரு பிரதான யாக குண்டம் சேர்த்து மொத்தம் ஒன்பது யாக குண்டங்கள்.

மூன்றாம் நாள் மாலை பூர்வாங்க பூஜையின் நிறைவாக அங்குரார்ப்பணம் என்னும் முளைப்பாலிகை இடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவாசாரியார் 5 நாள் முன்னதாக மங்கள முறைப்படி முளையிட்டு நன்கு வளர்ந்திருந்த பயிர்கள் யாக சாலையை சுற்றி வைத்து அலங்கரித்தோம். அடுத்து ரக்ஷா பந்தனம் என்னும் காப்புக்கட்டு நடைபெற்றது. விழாவின் தொடக்கம் முதல் நிறைவு வரை, வெளி உலக உபாதைகள் ஒன்றும் தீண்டக்கூடாது என்பதற்காக சிவாசாரியார்கள் மற்றும் ஐந்து பேருக்கும் மூல மூர்த்திக்கும் மற்ற பரிவார தேவதைகளுக்கும் தத்தம் இடத்தில் ரக்ஷா பந்தனம் செய்தனர். இனி வரும் படங்கள் கும்பாலங்காரம் மற்றும் கும்பஸ்தான நிகழ்ச்ச்சிகளின் படங்கள்.

இங்கே மூலவர் அம்மன், விமான கலசம் மற்றும் விநாயகர்
ஆகிய மூன்று கும்பங்களுக்கு அலங்காரமும் ஸ்தானமும் நடைபெறுகின்றது.


இறைவனை தற்காலிகமாக உருவேற்றி பூஜிப்பதற்கென கும்பங்கள் கலாகர்ஷணப் பொருளாக ஸ்தாபிக்கப் படுகின்றன. இது அல்லது கடஸ்தாபனம் அல்லது ஸ்நபனம் எனப்படும். இப்படி ஸ்தாபிக்கப் பட்ட கும்பமே மூர்த்தியாக பாவிக்கப்படுகின்றது.

கும்ப பாத்திரம் மண் ( உலோகம்) உடலுக்கு உரிய அம்சம், அதில் சுற்றியுள்ள நூல் எழுபத்து இரண்டு ஆயிரம் நாடிகள், அதில் சுற்றப்படும் வஸ்திரம் தோல், கும்பத்தில் நிரப்பப் படும் புனித நீர் இரத்தம் மற்றும் மேதை எனப்படும் ஏழு தாதுக்கள், கும்பத்தில் இடப்படும் நவரத்தினம், பொன், வெள்ளி முதலியன சுக்கிலம், உள்ளே இடப்படும் கூர்ச்சம் முள்ளந்தண்டு எனப்படும் முதுகெலும்பு, மாவிலை அன்னையின் ஜடாமுடி, தேங்காய் அன்னையின் திருமுகம், மேலே இடப்படும் கூர்ச்சம் குடுமி, கீழே பரப்பப்படும் தானியங்கள் ஆசனம், உத்தரீய மாலைகள் மலர்கள் முதலியன அலங்காரப் பொருட்கள். கும்பத்தில் அம்மனை ஆவாஹனம் செய்து நியாஸங்கள், முதலான மந்திரங்களின் மூலம் பிராணப் பிரதிஷ்டை செய்யப்படுகின்றது. கும்பாபிஷேகத்தின் போது கும்பத்திலிருந்து இந்த சக்தி பிம்பத்திற்க்கு மாற்றப்படுகின்றது.

பூரண கும்பங்கள்

அன்னைக்கு இமய முதல் குமரி வரையில் உள்ள அனைத்து தீர்த்தங்களும் வந்து சேர்ந்தன. இது மிகையாக கூறப்படவில்லை உண்மைதான். பாதத்திலிருந்து ஆரம்பிப்போம். நீலக்கடல் ஒரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி அன்னைனையின் பாதம் வருடும் முக்கடலும் சங்கமிக்கும் தீர்த்தம் வந்தது. திருச்செந்தூரிலிருந்து முருகன் தீர்த்தம் வந்தது. இராமேஸ்வரத்தின் அக்னி தீர்த்தம் முதலான 32 தீர்த்தங்களும் வந்தன. தண் பொருநை என்னும் தாமிரபரணி நதி தீர்த்தம் வந்தது. மீனாக்ஷி அம்மனின் வைகை நதி தீர்த்தம் வந்தது. கொங்கு மண்டலமாம் கோவை மாவட்டத்தின் தீர்த்த ஸ்தலங்களான, திருமூர்த்தி மலை, கொடுமுடி காவிரித் தீர்த்தம் வந்தது, அன்னையின் தாய் வீ டு மேல் மலையனூர் அங்கிருந்து அன்னை பித்தம் தெளிய நின்ற அக்னி தீர்த்த நீர் வந்தது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அன்பர்கள் கிருஷ்ணா நதி நீரைக் அன்னைக்கு அர்பணித்தனர். கங்கா தீர்த்தம் இல்லாமல் இருக்குமா கங்கை தீர்த்தமும் வந்தது.
மலைகளுக்கு அரசன் இமயமலையில் இருந்து கேதார்நாத் பத்ரிநாத் கங்கை தீர்த்தமும் வந்தன.

திருக்கயிலாயம் முடியல்லவா, அத்திருக்கயிலாயத்தின் உள்ள , அன்னை மலையரசன் பொற்பாவை, மலைமகள், கிரிஜா, கிரி கன்யா, பார்வதி, இமவான் புத்ரி, கௌரி தானே தன் சேடிகளுடன் நீராடும் கௌரி குள தீர்த்தமும், அன்னை தானே ஆன மானசரோவர் தீர்த்தமும் அன்னையின் ஆனந்த அபிஷேகத்திற்க்காக வந்தது.

பாரத தேசத்தின் அடி முதல் முடி வரை உள்ள தீர்த்தங்கள் நிரப்பப்பெற்று கும்ப அலங்காரம் நிறைவு பெற்று கலாகர்ஷணம் இனிதே நிறைவு பெற்றது.

அம்மன் திருக்கோயில் புதிதாக கட்டப்பட்டதால் அன்னை பாலாலயம் என்னும் இளங்கோவிலில் கடந்த ஒரு வருட காலத்திற்க்கும் மேல் இருந்து அருள் பாலித்துக்கொண்டு இருந்தாள். கும்பம் அங்கு எடுத்து செல்லப்பெற்று பாலாலயத்திலிருத அம்மன் கும்பத்திற்க்கு மாற்றப்பட்டாள். பின் யாக சாலை பிரவேசம் செய்து யாக பீடத்தில் குண்டலினி சக்தியாக குரு தக்ஷிணா மூர்த்தியாக நான்கு கால பூஜை கண்டருள அன்னை ஆசனம் கொண்டாள்.


விமானத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ள
திக் பாலக சக்திகள் இருவர்

அடுத்த பதிவில் நான்கு கால யாக பூஜை நிகழ்ச்சிகளையும் மற்றும் நிறைவாக கும்பாபிஷேகம் காட்சிகளையும் வந்து தரிசியுங்கள்.

கும்பாபிஷேகத்தின் முதல் பகுதியை இங்கே தரிசியுங்கள்

(படங்களின் மேல் கிளிக்கினால் அவற்றை முழுதாக பார்க்கலாம்)

மஹா கும்பாபிஷேக காட்சிகள் தொடரும்...........

No comments: