Wednesday, June 24, 2009

அங்காள பரமேஸ்வரியின் அற்புத கும்பாபிஷேகம் -1

"கல்லால் கோவில் அமைத்தோர் கயிலை விட்டு அகலார்" என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு திருக்கோவில் அமைத்து கும்பாபிஷேகம் செய்வது என்பது ஒரு பெறர்கரிய பேறு. எங்கள் குல தெய்வத்திற்க்கு 28-05-09 அன்று நான்கு கால யாக பூஜைகள் நிறைவேறி அற்புதமாக மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அம்மனின் அருகிலேயே இருந்து பெற்ற அந்த தெய்வீக அனுபவத்தை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவுகள் அனைவரும் வந்து தரிசித்து அம்மன் அருள் பெறுமாறு தாழ்மையுடன் அழைக்கின்றேன்.

அடியேனின் குல தெய்வம் அங்காள பரமேஸ்வரி. அம்மன் கோவில் கொண்ட இடம் தற்போதைய திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், காரத்தொழுவு கிராமம். அமராவதி ஆற்றங்கரையில் அன்னை கோவில் கொண்டிருக்கின்றாள். அந்த அன்னைக்கு பல வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த கும்பாபிஷேகத்தின் சில காட்சிகள்.

புதுப் பொலிவுடன் வர்ண கலாபங்களுடன் மின்னும்
நூதன விமானத்தில்
அன்னை அங்காள பரமேஸ்வரி

பஞ்ச கிருத்ய பாராயணி அன்னை பராசக்தி பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களில் கோவில் கொண்டு நம் அனைவருக்கும் நலம் அருளும் பொருட்டு பக்தர்கள் அனைவரின் குறைகளையும் களையும் பொருட்டு கருணையே வடிவாகி அன்பே உருவாகி ஓங்காரரூபமாய் அவதரித்து அன்னையாய் அரவணைத்து அனைத்து உலகங்களையும் படைத்தல், காத்தல், அழித்தல் மறைத்தல், அருளல் எனும் ஐம்பெரும் தொழில் தன்னகத்தே கொண்டு உலக உயிர்கள் இன்புற்று வாழ ஆதிபராசக்தி, அங்கயற்கண்ணி, நாரணன் சோதரி, பத்ரகாளி, வனதுர்கா, வாமா, ஜேஷ்டா, ரௌத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலபிரதமனி, சர்வபூதமணி, மனோன்மணி என்னும் ஆயிரமாயிரம் நாமம் தாங்கி வேண்டுவோர்க்கு வேண்டிய வண்ணம் அருள்பாலிக்கும் பொருட்டு குலம் தழைக்கவும், குழந்தைச் செல்வம் தரும் பொருட்டும், கன்னிப் பெண்களுக்கு திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெறும் பொருட்டும், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பயன் பொருந்தும் பொருட்டும் கும்பாபிஷேகம் கண்டருகின்றாள்.


அம்மன் விமானத்தில் அமைக்கப்பட்ட கலசங்கள்

கர்ப்பகிரகத்தில் இருந்த கோணவட்டக் கல்லில் பிளவு ஏற்பட்டதால் பழைய ஆலயம் முழுவதையும் பிரித்து எடுத்து அந்த கற்களைக் கொண்டே நூதன ஆலயம் அமைக்கப்பட்டது. கர்ப்பகிரம், அர்த்த மண்டபம் கட்டி, மஹா மண்டபத்துடன் நூதன விமானமும் கட்டப்பட்டு பால முருகன் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு அம்மனின் ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம் விரோதி வருடம் வைகாசி மாதம் 14ம் தேதி வியாழக்கிழமை சுக்ல பக்ஷ பஞ்சமி திதியும், புனர்பூச நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய சுபயோ சுப தினத்தில் சிறப்பாக நடைபெற்றது.


விமானத்தின் முன் பக்க தோற்றம்


கிழக்கு நோக்கிய விமானம் மூன்று அடுக்காக அமைந்துள்ளது, கீழ் அடுக்கில் முன் பக்கம் அங்காளபரமேஸ்வரி அம்மன் மற்றும் அஷ்ட திக் பாலக சக்திகளின் சுதை சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. இரண்டாம் அடுக்கிலும் அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பூதம் பூதகிகள் விமானத்தை தாங்குவது போல் அமைக்கப்பட்டிருக்கின்றது. மேல் அடுக்கில் அம்மனின் வாகனம் நந்தி வாகனம் அமைக்கப்படுள்ளது. பெரும்பாலான திருக்கோவில்களில் அம்மனின் வாகனமாக அன்னைக்கு இமவான் அளித்த சிம்மமே வாகனமாக இருக்கும். வெகு சில தலங்களில்தான் அன்னைக்கு நந்தி வாகனம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும், இத்தலத்தில் நந்தி வாகனமாக இருப்பது ஒரு சிறப்பு. நந்தி வாகனம் அன்னை ஈஸ்வரி அம்சமாக இருப்பதை குறிக்கின்றது.



விமானத்தின் தெற்கு தோற்றம்

கீழ் தளத்தில் கொண்டை முடி அலங்கரித்து கொஞ்சும் கையில் வைத்த மதுரை அரசாளும் மீனாக்ஷி அம்மன். இரண்டாம் தளத்தில் மான் மழுவேந்திய சங்கரி.



விமானத்தின் பின் பக்க தோற்றம்

பின் புறத்தில் காசியிலே அருள்பாலிக்கும் விசாலாக்ஷி அம்மன் கீழ் தளத்தில் நடு தளத்தில் சர்வ ஐஸ்வர்யங்களையும் வழங்கும் மஹாலக்ஷ்மி அம்மன் அலங்கரிக்கின்றாள்.


விமானத்தின் தெற்கு பக்க தோற்றம்

கீழ் தளத்தில் மஹா லக்ஷ்மியையும், மஹா சரஸ்வதியையும் தன் கண்களாகக் கொண்டு கடாக்ஷிக்கும் மாநகர் காஞ்சி காமாக்ஷி. நடு தளத்தில் நான்கு முகங்களுடன் பிராஹ்மி, மேல் தளத்தில் வீணையுடன் மஹா சரஸ்வதியும் அலங்கரிக்கின்றனர்.

அம்மனின் விமானம் கண்டோம் இனி அம்மனின் கும்பம் ஸ்தாபிக்கப்படும் பிரதான யாக சாலையின் பீடத்தைக் காண்போம்.

யாக சாலை பீடத்தின் முன் பக்க தோற்றம்

இப்பூமியை தாங்கும் மஹா கூர்மம் இங்கு அம்மனின் பீடத்தையும் தாங்குகின்றது. மஹா கூர்மத்தின் மேல் குண்டலினி சக்தியாக அம்மன் ஆதி சேஷனாக காட்சி தருகின்றாள். மஹா நாகத்தின் மேல் அம்மனின் வாகனமான சிம்மம் எட்டு திக்கையும் காவல் காக்கின்றது. என் கோண மேல் தளத்தில் சனகர், சனந்தர் , சனாதனர், சனத் குமாரர் ஆகிய நான்கு சனகாதி முனிவர்கள் யோக கோலத்தில் காட்சி தருகின்றனர். மேல் தளத்தில் அம்மனுக்கு பத்ம பீடம். இவ்வாறு குண்டலினி சக்தியாக சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் மௌனமாகவே உண்மைப் பொருளை உணர்த்திய் ஆதி குரு தக்ஷிணா மூர்த்தி ரூபிணியாகவும் அன்னை விளங்கும் வண்ணம் அன்னைக்கு பீடம் அமைக்கப்பட்டது.

யாக சாலை பீடத்தின் தெற்கு தோற்றம்

பீடத்தின் பின் பக்க தோற்றம்

யாக சாலை பீடத்தின் வடக்கு தோற்றம்

பீடத்தில் தாங்கள் பார்க்கும் கலசங்கள் எல்லாம் பரிவார தேவதைகளுக்கான கலசங்கள். பிரகாரத்தில் நிருதி விநாயகர், கருப்பணசாமி, மன்மதன்- ரதி, பைரவர் ஆகிய பரிவார தேவதைகள் அருள் பாலிக்கின்றனர் இத்தலத்தில்.

மஹா கும்பாபிஷேக காட்சிகள் தொடரும்...........

2 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

படங்களுடன் மிக அருமை....அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.

S.Muruganandam said...

வாருங்கள் மௌலி ஐயா. பதிவுகள் அனைத்தும் முடிந்த பின் அன்னையின் மஹா கும்பாபிஷேகத்தை தரிசிக்க அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்ப இருந்தேன் தாங்களே வந்து விட்டீர்கள் இன்றும் நாளையும் மற்ற பதிவுகள் தொடர்கின்றன.