திருநல்லம் சுயம்பு நடராஜப்பெருமான்

ஒரு சிறு போட்டி:
இப்படங்கள் எக்கோவிலில் எடுக்கப்பட்டன?
நடராச பெருமானின் திருவுருவில் பஞ்ச பூதங்கள், அஷ்ட மூர்த்திகள், அனைத்து தெய்வ அம்சம், அண்ட சராசரங்கள், அனைத்து தெய்வ தத்துவங்களும் அடக்கம் அவற்றை விரிவாக காண்போம்.
தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பு
சாற்றிடும் அங்கையிலே சங்காரம்- ஊற்றமாய்
ஊன்று மலர்பதத்தே உற்ற திரோதன் முத்தி
நான்ற மலர் பதத்தே நாடு
திருவடிவே பஞ்ட்சாட்சரம் திருப்பாதம் - ந , உதரம் -ம , தோள் - சி, முகம் - வ , திருமுடி -ய எனலாம்.
உடுக்கை - சி, வீசிய கரம் -வ அபய கரம் - ய , அக்னி - ந, முயலகன் - ம எனலாம்.
வலப்பக்கம் - சிவாய , இடப்பக்கம் - நம எனலாம்
திருவாசி ஓம் என்னும் பிரணவம். சடைமுடி- ஞானம். சடை விரித்தாடுவது ஞானத்தை வழங்குவதற்காக. வீசிய கரம் மாயையை உதறித்தள்ளுவதையும் ஊன்றிய பாதம் மலத்தினை நீக்குவதையும், தூக்கிய திருவடி அருளை அளித்து ஆன்மாக்களை ஆனந்தக்கடலில் அழுத்துவதையும் குறிக்கும்.
பஞ்ச பூதங்களை குறிக்கும் வண்ணம் எம் ஐயனின் சிலை வடிக்கப்படுகின்றது. பஞ்ச பூதத் தத்துவராகவும் எம் ஐயன் விளங்குகின்றார். மூக்கு காற்றையும் , முகம் பூமியையும், நெற்றிக்கண் அக்னியையும், முகத்தின் காந்தி ஆகாயத்தையும், விரி சடை நீரையும் குறிக்கின்றது.

1. இளம் பிறை : தக்கன் சாபம், காம தகனம், உயிர் வளர்ச்சி, ஒளஸதி நாதன்.
2. மயிலிறகு : கிராதார்ஜுனம், பார்த்தனுக்கு அருளிய பரம மூர்த்தி.
3. கொக்கிறகு : குண்டாசுரவதம், அரசத்தன்மை.
4.இடக்கண் : சந்திர மண்டலம், இடநாடி, இச்சா சக்தி.
5.வலக்கண் : சூரிய மண்டலம், பிங்கலை நாடி, ஞான சக்தி.
6. நுதல் விழி : அக்னி அம்சம், கழுமுணை நாடி, காம தகனம், கிரியா சக்தி.
7.திருநீறு : பிருத்வி தன்மை, லய சிருஷ்டி, திரிபுரமெரித்தல், திரி சத்யம், சுடலையாடல்.
8. பிரம்ம கபாலம்: பிரம்மச் சிரச்சேதம், பிக்ஷாடணர்.
9. ஊமத்த மலர் : அஷ்ட மூர்த்தம்.
10.கங்கை : ஜலமய மூர்த்தம், கங்காதரர், பாவ விமோசனம்.
11.நுண் சிகை : தக்ஷிணா மூர்த்தி, ஞானம்.
12.கொன்றை மலர்: கற்பக வல்லி
13. குழை - இடது காது, சக்தி அம்சம், அர்த்தநாரீஸ்வரர், பிரக்ருதி.
14:தோடு - வலது காது, சிவ அம்சம்.
15. நீலகண்டம் - அமிர்தம் கடைதல்,சமன் பாட்டு நிலை, தீதகற்றல், அமரத்துவம், தியாக ராஜ மூர்த்தம்.
16.தோள்கள் - திரிவிக்ரம நிலை, திசைகள், காற்று.

17: துடி : தோற்றம், ஆக்கல் தொழில், துடியாடல்.

17. தீயகல் : சம்ஹாரம், அழித்தல் தொழில், தீ-எரியாடல்.
18.திருவாசி சுடர் - த்வனி, பீஜ மந்திரங்கள்.

19 அபய கரம் - காத்தல் தொழில், சுப மூர்த்தம்.
20. அரவணி - நாக சக்தி, ஜ“வாத்மா, குண்டலிணி.
21.கரங்கள் - விராட புருடத்தன்மை.
22. கஜ ஹஸ்தம் (வீசு கரம்): திருவடி காட்டல், இன்ப வழி காட்டி.

23.ஸ்தித பாதம் - ஊன்றிய திருவடி, காலாந்தகர், மறைத்தல் தொழில், பதி நிலை, நிலம், வினைப்பயன் ஊட்டல்.
24முயலகன் - கோயிற் புராணம், தாருகா வனம், மும்மலம்.
25.கமல பீடம் - தகராலயம், இதய கமலம், சகஸ்ராரம்.

27.சிலம்பு - வேதங்கள் (இடது), கேளா ஒலி
28. கழல் - வீரட்டம், பிறப்பறுத்தல், பதிநிலை, புருடன்.
29.வீர கண்டாமணி - வீரம், திருவுரு, வெற்றித் திறன்.
ஐயனின் அற்புத தரிசனத்தை வள்ளலார் பெருமான் இப்படிப் பாடுகின்றார்.
தனித்தனிமுக் கனிபிழிந்து
வடித்தொன்றாக் கூட்டிச்
சர்க்கரையும் கற்கண்டின்
பொடியுமிகக் கலந்தே
தனித்தநறுந் தேன்பெய்து
பசும்பாலுந் தெங்கின்
தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம்
பருப்பிடியும் விரவி
இனித்தநறு நெய்யளைந்தே
இளஞ்சூட்டின் இறக்கி
எடுத்தசுவைக் கட்டியினும்
இனித்திடுந்தெள் ளமுதே
அநித்தமறத் திருப்பொதுவில்
விளங்கு நடத் தரசே
அடிமலர்க்கென் சொல்லணியாம்
அலங்கணிந் தருளே.
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா!
நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா! என்று புலம் பெயர்ந்து சென்றாலும் குலம் பெயரவில்லை என்று அன்புடன் தமிழர்கள் மலேசியாவில் திருமுருகனுக்கு கட்டிய பத்துமலைக் கோவிலில் உள்ள பிரம்மாண்ட நடராஜப்பெருமானின் அருட் காட்சிகளைத்தான் இப்பதிவில் கண்டீர்கள். பிரம்மாண்ட சிவகுமாரனையும் தரிசியுங்கள்.