Friday, October 26, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -31


தேவப்ரயாகையென்று வழங்கும்

கண்டமென்னுந் திருப்பதி

பாகீரதியும் அலக்நந்தாவும் சங்கமமாகி 
கங்கையாகப் பாயும் அழகு 


தேவபிரயாகையின் எழிற் தோற்றம்  



செந்தூர அனுமன் 

இவ்வாறு கட்டு ஷ்யாமின் கதையைகேட்டுக் கொண்டே தேவப்பிரயாகையை அடைந்தோம். ஹரித்வாரிலிருந்து பத்ரிநாத் அல்லது கேதார்நாத் நோக்கி செல்லும் போது நாம் முதலில் தரிசிக்கும் ப்ரயாகை( சங்கமம்) தேவப்ரயாகையாகும். ரிசிகேசிலிருந்து 70 கி..மீ தூரத்தில் உள்ளது.  கோமுக்கில் உற்பத்தியாகும் பாகீரதியும் வஸுதராவில் தோன்றி பல்வேறு சங்கமங்களைக் கண்டு பாய்ந்து வரும் அலக்நந்தாவும் சங்கமமாகி  புனித கங்கையாக மாறுவது இந்த தலத்தில்தான்.  பத்ரிநாத்திலிருந்து ஹரித்வார் வரை பெருமாளின் விராட ரூபம் என்பது ஐதீகம். அந்தப்பெருமானின் நாபிக்கமலம்தான் தேவப்ரயாகை. தசரத சக்ரவர்த்தியும், பின்னர்  இராம பிரான் இராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் தீரவும் தவம் செய்த தலம் தேவப்ரயாகை. இதனால் இங்கு இராமருக்கு ஒரு கோவில் உள்ளது. இது இரகுநாத்ஜீ ஆலயம் என்று அறியப்படுகின்றது.  பெரியாழ்வார் இந்த இராமபிரானை புருடோத்தமன் என்றும் தேவப்ரயாகையை  கங்கைக் கண்டம் என்னும் கடிநகரே என்றும் மங்களாசாசனம் செய்துள்ளார். தேவசர்மா என்ற முனிவர் தவம் செய்த தலம் என்பதால் அவர் பெயரால் தேவ பிரயாகை என்று அழைக்கப்படுகினறது. இயற்கை எழில் கொஞ்சும் இத்தலம் 618 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து டேராடூனுக்கும், தேஹ்ரிக்கும் பாதைகள் செல்கின்றன.



கண்டமென்னும்  கடிநகர்
மஹாதுவாரம் 


இரகுநாதர் ஆலயம் 

இரம்மியமாக இருக்கின்றது தேவப்ரயாகை, இரு வேறு வண்ணங்களாக ஓடி வரும் இரு ஆறுகள் ஒன்றாக இணைந்து வேறு வண்ணமாக பாயும் அழகை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். நெடுஞ்சாலையில் இருந்து கீழே இறங்கி அலக்நந்தா ஆற்றின்  குறுக்காக உள்ள பழைய பாலத்தை கடந்து மறு கரையில் கீழிறங்கி சென்றால் நாம் சங்கமத்தை அடையலாம். தண்ணீர் பாயும் அளவில் பக்தர்கள் சங்கமத்தில் நீராட ஏதுவாக பல அடுக்குகளாக படித்துறைகள் அமைத்துள்ளனர். இரகுநாத்ஜீ ஆலயம் இக்கரையில்தான் அமைந்துள்ளது. முதலில் அலகாபாத் திரிவேணி சங்கமத்திரற்கு இணையான  புனிதமான  தேவ பிரயாகை சங்கமத்தில் நீராடி விட்டு பின் இராமசந்திர மூர்த்தியை சேவிக்கலாமா?  நாங்கள் சென்ற சமயம் தண்ணீர் மிகவும் கீழாகத்தான் ஒடிக்கொண்டிருந்து. சங்கமத்திற்கு  அருகில் கங்கா மாதாவின் அழகிய சிலை உள்ளது. மகர வாகினியாக வெள்ளைப் பளிங்கில் ஒளிர்கின்றாள் முக்திதாயினி கங்கம்மா.  அருகில்  பாறையில் செதுக்கப்பட்ட செந்தூரம் பூசிய அனுமன் சிலையையும்  தரிசனம் செய்கின்றோம்.  பாகீரதியின் எதிர்கரையில் ஒரு மணிக்கூண்டு உள்ளது.


பாகீரதியின் அக்கரை மணிக்கூண்டு 

 விஷ்ணுவின் நாபிக் கமலமான இந்த சங்கமத்தில் பித்ருகளுக்கு பிண்டஸ்ரார்த்தம் செய்வது மிகவும் உத்தமமானது. அதற்காகவே பல பண்டாக்கள் யாத்திரிகளுக்காக இங்கு காத்திருக்கின்றனர். வேண்டுபவர்கள் அவர்களின் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் சிறிது கவனமாக இருக்கவும். கங்கையில் நீராடி விட்டு  புருசோத்தமனை சேவிக்க மேலேறி சென்றோம்.  பல ஆயிரம் வருடங்கள் பழமையான ஆலயம். முழுவதும் கல்லால் ஆன ஆலயம். இமயமலைக்கோவில் போல கோபுரம் மேலே வட்ட வடிவக்கல், மேலே கலசம்  காவி வர்ணக்கொடியுடன் எழிலாக நிமிர்ந்து நிற்கின்றது ஆலயம். ஒரு பிரகாரம். பெருமாளுக்கு எதிரே பெரிய திருவடி கருடன். உயரமான கருவறையில் இலக்குவணுடனும் மைதிலியுயுடனும்  15 அடி உயரத்தில் சேவை சாதிக்கின்றார் கோதண்டராமர். மூவரும் சாளக்கிராம மூர்த்திகள், முகமண்டலங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு.

தங்கையைமூக்கும் தமயனைத்தலையும்
தடிந்த எந்தாசரதிபோய்
எங்கும்தன்புகழாவிருந்தரசாண்ட
எம்புருடோத்தமனிருக்கை
கங்கைகங்கை யென்னவாசகத்தாலே
கடுவினைகளைந்திடுகிற்கும்
கங்கையின்கரைமேற்கைதொழநின்ற
கண்டமென்னுங்கடிநகரே.  

மூன்றெழுத்த்தனைமூன்றெழுத்ததனால்
மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை
ஏற்றுக்கொண்டிருப்பார்க்குஇரக்கநன்குடைய
எம்புருடோத்தமனிருக்கை
மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி
மூன்றினில்மூன்றுருவானான்
கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல்
கண்டமென்னுங்கடிநகரே.     

என்னும் பெரியாழ்வாரின் பாசுரங்களின் இரு பாசுரங்களை எழுதி வைத்திருக்கின்றர்.

தேவப்ரயாகையென்று வழங்கும் கண்டமென்னுந் திருப்பதியின் மகிமையை பெரியாழ்வார் எப்படி பாடியுள்ளார் என்று பார்க்கலாமா?

சதுமுகன்கையில்சதுப்புயன்தாளில் சங்கரன்சடையினில் தங்கி
கதிர்முகமணிகொண்டிழிபுனற்கங்கைக் கண்டமென்னுங்கடிநகரே...

 வாமனனாக வந்து மாபலியிடம் மூவடி மண் கேட்டு, பின்  அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உத்தமனாக மூவுலகையும் அளந்த போது பெருமாளின் திருப்பாதத்தில், பிரம்மதேவன் செய்த அபிஷேக நீர்தான் பின்னர் சிவபெருமானின் சடையில் தங்கி பின் கங்கையாக பூமியில் பாய்ந்தாள் அந்த கங்கையின் கரையில் கண்டமென்னும் கடிநகரில், தங்கையாகிய சூர்ப்பணகையின் மூக்கையையும், மூத்தவனான இராவணனின் பத்து தலைகளையும் அறுத்த புருடோத்தமனான ராமபிரான் எழுந்தருளியுள்ளார் என்று பாடுகின்றார் வேயர் குலத்துதித்த விஷ்ணுசித்தர்.  மேலும்

இமவந்தந்தொடங்கியிருங்கடலளவும் இருகரையுலகிரைத்தாட
கமையுடைப் பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னுங்கடிநகரே..

உயர்ந்த இமயமலையில் தொடங்கி கடல் வரையும் இரு கரைகளும் அகலமாக விளங்கும் கங்கையின் கரையில் வலம்புரி கையில் ஏந்தி அசுரர்களின் தலைகளை இடரும் புருடோத்தமன் கோயில் கொண்டு சேவை சாதிக்கின்றான் என்று பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

சிவபெருமானின் சடையின் கொன்றை மலர், திருமாலின் பாத திருத்துழாய், ஐராவதத்தின் மதநீர், கற்பக மலர், நீராடும் தேவ மங்கையரின் சாந்து ஆகியவை சேர்ந்து பாயும்

எழுமையுங்ககூடியீண்டியபாவம் இறைப்பொழுதளவினிலெல்லாம்
கழுவிடும்பெருமை கங்கையின்கரைமேல் கண்டமென்னுங்கடிநகரே

 என்றும் பாடுகின்றார் வில்லிபுத்தூர்க்கோன்.

இராமபிரான் அமர்ந்த கல் சிம்மாசனம் 

இவ்வாறு பெரியாழ்வாரின் பாசுரம் சேவித்து  மனதார பெருமாளை வணங்கிவிட்டு கோவிலை வலம் வரும் போது இராமர் அமர்ந்திருந்த கல் சிம்மாசனத்தை கண்டோம். கோவிலின் சுவர்களில் அருமையான சிற்பங்கள் உள்ளன. குளிர் காலத்தில் பத்ரிநாத்தின் பண்டாக்கள் இங்கு வந்து தங்குகின்றனர்.



 பழைய தொங்கு பாலத்தில் தேஷ்பாண்டே

இனி இத்தலத்திற்கு அருகில் உள்ள இன்னும் சில ஆலயங்கள்.   தற்போது ரிஷிகேசத்தில் பரதன் ஆலயத்தில் உள்ள பரதன் சிலையை முஸ்லிம் படையெடுப்பின் போது  காப்பாற்ற மறைத்து வைத்திருந்த அழகிய சிறிய  பரதன் ஆலயமும் இங்குள்ளது. கோவிலிருந்து சிறிது தூரத்தில் வாமனரின் குகை உள்ளது.மேலும் இங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் பாகீரதியின் நடுவில் தசரதர்  தன் முன்னோர்கள் முக்தியடைய அமர்ந்து தவம் செய்த சந்திர சிலா எனப்படும் பாறை உள்ளது. இதன் அருகில் நீராடுபவர்கள்களின் எல்லா எண்ணமும் ஈடேறும் என்பது ஐதீகம்.   இங்கிருந்து தெஹ்ரி செல்லும் பாதையில் சுமார் 30  கி. மீ தூரத்தில் மலை மேல் சந்திரபதனி கோயில் அமைந்துள்ளது.   

மிகவும் திருப்தியாக  பின் திரும்பி வந்து சென்றபோது மறந்து தேநீர் குடித்த இடத்தில் மறந்து விட்டு போன செல்போனை திருப்பிவாங்கிக்கொண்டு சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்து ரிஷிகேசத்தை அடைந்து சென்ற வருடம் தங்கிய திருக்கோவிலூர் மடத்தில் தங்கினோம். 

Wednesday, September 12, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -30

காலை சூரிய ஓளியில்  மிளிரும் நீலகண்ட சிகரம் 

சென்ற வருடம் எவ்வளவு இன்னல்கள் ஏற்பட்டதோ அதற்கு எதிர்மாறாக இந்த  வருடம் தரிசனம் மிகவும் சிறப்பாக அமைந்தது அவனருளால். திருமஞ்சன சேவை மட்டும் கொடுக்காமல் விட்டு விடுவாரா? இன்று அருமையான இரு தரிசனம் கிட்டியது ஒன்று பத்ரிநாதரின் நிஜஸ்வரூபம், மற்றொன்று நீலகண்டரின் அருமையான தரிசனம் மிகவும் திவ்யதரிசனம் கிடைத்தது. திருமஞ்சன காலத்தில் மட்டுமே பெருமாளின் நிஜ ஸ்வரூபத்தை நாம் சேவிக்க முடியும். சிருங்காரம்(அலங்காரம்) முடிந்தபின் முக மண்டல தரிசனம் மட்டுமே கிட்டும். பத்ரிநாதரின் யோக கோலத்தைக் கண்ட அந்த இனிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வாருங்கள் அன்பர்களே.

ஓம் நமசிவாய 

அதிகாலையே எழுந்து திருக்கோவிலுக்கு சென்றோம். சபா மண்டபம் முழுவதும் அனுமதி சீட்டு வாங்கிய பக்தர்களால் நிறைந்திருந்தது ஆனால் துவாரத்திற்கு வெளியே அந்நேரத்தில் கூட்டம் இல்லை. அருமையாக நின்று திருமஞ்சனத்தை சேவித்தோம். முதலில் அலங்காரத்தை களைந்து முதல் நாள் சாத்திய சந்தனத்துடன் சேவிக்கின்றோம். தலைமை பூசாரி ராவல் அவர்கள் வரும் வரை மற்ற பூசாரிகள் எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக்கொள்கின்றர். பெருமாளுக்கு சுடு நீரால்தான் திருமஞ்சனம் நடைபெறுகின்றது அதில் பச்சைக்கற்பூரம் மற்றும் குங்குமப்பூ சேர்க்கப்படுகின்றது. . தனக்கே உரிய கருப்பு கம்பளி ஆடையில் தொப்பியுடன் ராவல் அவர்கள் சகல மரியாதையுடன் வந்து சேர்ந்தவுடன் திருமஞ்சனம் துவங்குகின்றது. முதலில் அவர் சந்தனத்தில் மேல் உள்ள சல்லாத் துணியை எடுத்து விட்டு சந்தனத்தை களைகின்றார். அந்த சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படுகின்றது. பின்னர் பெருமாளுக்கு எண்ணெய்க்காப்பு. சாளக்கிராம மேனியராக விளங்கும் பெருமாளின் பத்மாசன கோலத்தையும் சதுர் புஜங்களையும் திவ்யமாக சேவிக்கின்றோம். பின்னர் பாலாபிஷேகம், கங்கை நீரால் அபிஷேகம் மற்றும் பல்வேறு  திரவியங்களினால் முதலில் பத்ரிநாதருக்கும் பின்னர் மற்ற மூர்த்திகளுக்கும் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. பார்த்து பார்த்து யசோதை கண்ணனுக்கு திருமஞ்சனமாட்டியது போல இங்கே பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கின்றது.

கன்றுகளோடச்செவியில் கட்டெறும்புபிடித்திட்டால்
தென்றிக்கெடுமாகில் வெண்ணெய்திரட்டிவிழுங்குமாகாண்பன்
நின்றமராமரம்சாய்த்தாய்! நீபிறந்ததிருவோணம்
இன்று, நீநீராடவேண்டும் எம்பிரான்! ஓடாதேவாராய்.

என்ற பெரியாழ்வார் பாசுரம்தான் நினைவிற்கு வந்தது. திருவோண நாளில் பெருமாளின் திருமஞ்சனம் சேவிக்கும் பாக்கியமும் கிட்டியதுநதியாய்ப் பாயும் திரவியங்கள் மற்றும் மந்திரத்தால் உருவேற்றப்பட்ட ஏழு வெள்ளி கலச புண்ணிய தீர்த்தத்தால் திருமஞ்சனம் முடிந்தபின் சிருங்காரம் துவங்குகின்றது. முதலில் பெருமாளுக்கு அத்தர் சார்த்தப்படுகின்றது. பின்னர் திருமேனி முழுவதும் சந்தனம் சார்த்தப்படுகின்றது. அதன் மேலே மெல்லிய வெள்ளைத்துணி சுற்றி பின்னர் பட்டுப்பீதாம்பரங்கள் சார்த்தப்படுகின்றது. அதன் மேலே வெள்ளிக்கவசம். பின்னர் மற்ற முர்த்திகளுக்கு சிருங்காரம். குபேரனுக்கு மகுடம் மற்றும் மலர் மாலைகள், வெள்ளி நின்ற கோல கருடனுக்கு பட்டு சார்த்தி, மலர்  மாலைகளால் அலங்காரம், அடுத்து நாரதருக்கு மகுடம், பட்டு மலர் மாலை அலங்காரம், பின்னர் உத்தவருக்கு கவசம் மலர் மாலை, பின்னர் நரநாராயணர்களுக்கு பட்டாடைகள், மலர் மாலைகள் என்று அலங்காரம் செய்தபின், பெருமாளுக்கு வைரம் பதித்த தங்க மகுடம் சூட்டி இரு பக்கமும் மயிற்பீலீ சார்த்தி, பெரிய மலர்மாலையால் அலங்காரம் செய்கின்றார் ராவல் அவர்கள். பின்னர் பெருமாளின் திருமுகமண்டலத்தில் சந்தனம் சார்த்தி வைர திருமண் சார்த்தினார். பின்னர் மேலும் மலர்மாலைகளால் மேலும் அலங்காரம்  செய்தபின் சிருங்கார தரிசனம் தொடங்கியது. அலங்காரம் செய்யும் போது இவர்கள் திரையிடுவதில்லை. முதலில் வேத பாராயணம், பின்னர் பாகவத பாராயணம். உள்ளே சென்று பெருமாளை திவ்யமாக சேவித்துவிட்டு மிகவும் மனசாந்தியுடன் வெளியே வந்தோம்.   

நீலகண்ட சிகரம் 

வெளியே வந்தவுடன் ஒர் ஆச்சரியம், அதி காலை சூரிய ஒளியால் அருண நிறத்தில்  அற்புதமாக ஒளிந்து கொண்டிருந்தது நீலகண்ட சிகரம்அந்த சிவப்பு வர்ணம் மாறி தூய வெள்ளை நிறத்தில் ஐயன் மின்னும் அழகையும் கண்டு ஆனந்தம் அடைந்தோம். வானத்தில் மேகமே இல்லை, வானம் நிர்மலமாக இருந்தது. சென்ற வருடம் வந்தபோதும், நேற்றைய தினம் முழுவதும், மஞ்சு மறைத்த எம்பெருமானை இன்று முழுவதுமாக தரிசனம் செய்தோம். முன்னரே கூறியது போல நீலகண்ட சிகரம், தேவாரப் பாடல் பெற்ற தலம் ஆகும். பாலறவாயர் இத்தலத்தை இந்திரநீலபர்ப்பதம் என்று பாடியுள்ளார். வெள்ளியை வார்த்து ஊற்றியது போல மிளிரும் அந்த அழகு மிகவும் இரம்மியமாக இருந்தது.   மனதார சிவபெருமானையும் , உமையம்பிகையும் வணங்கி விட்டு மிக்க மன நிறைவுடன் மடத்திற்கு வந்தோம். அற்புதமான தரிசனத்திற்கு பிறகு ஹரித்வாரத்திற்கு புறப்பட்டோம்.  பத்ரிநாத்தை விட்டு கிளம்பி வரும் வழியில் லம்பா பகட் என்ற கிராமத்தில்  எப்போதும் நிலச்சரிவு ஏற்படும் இடம் என்று முட்கல் அடையாளம் காட்டினார். பின்னர் Jaypee குழுமத்தினரின் சிறு புனல் மின்  நிலயத்தை கண்ணுற்றோம். இவ்வாறு எங்கள் பயணம் தொடர்ந்த்து. முதலில் ருத்ரப்ரயாகையை வண்டியை நிறுத்தி தரிசனம் செய்தோம். பின்னர்  மதிய உணவை ஸ்ரீநகரில் முடித்துக்கொண்டு தேவப்பிரயாகைக்குச் சென்று கொண்டிருந்த போது திரு.முட்கல் அவர்கள் ஒரு அருமையான கதை ஒன்றைக் கூறினார், இது வரை நாங்கள் அறியாத கதையாக இருந்தது. என்ன உங்களுக்கும் அந்த கதையை கேட்க ஆசையாக உள்ளதா? இதோ சொல்கிறேன் கேளுங்கள்.

நாம் எல்லோரும் கடோத்கஜனைப் பற்றி அறிவோம் அல்லவா? ஏனென்றால் மாயா பஜார் படத்தில் கல்யாண சமையல் சாதம் என்ற பாட்டை நாம் எல்லோரும் அறிவோமே.  அந்த கடோத்கஜனின் மகன் பார்பரிக்கை பற்றிய கதைதான் இது. பீமனுக்கும் ஹிடும்பிக்கும் பிறந்தவன் தான் கடோத்கஜன். அரக்கு மாளிகையிலிருந்து உயிர் தப்பிய பஞ்ச பாண்டவர்கள், தாய் குந்தியுடன் ஹிடும்பிவனம் என்ற காட்டிற்கு வந்தார்கள். அந்த வனத்தை ஆண்டு வந்த ஹிடும்பன், பஞ்ச பாண்டவர்களைக் கொன்று வருமாறு, தன் தங்கை ஹிடும்பியை அனுப்பினான்.ஹிடும்பி, அரக்கி உருவத்தை, அழகான இளம்பெண் உருவமாக மாற்றிக் கொண்டு சென்றாள். பாண்டவர்களுக்காக, நீர் கொண்டு வருவதற்காகக் கிளம்பிய பீமனை ஹிடும்பி பார்த்தாள். பீமன் மீது காதல் கொண்டு அவனை மணக்க விரும்பினாள். ஹிடும்பியைத் தொடர்ந்து, ஹிடும்பன் வந்தான். பாண்டவர்களுடன் யுத்தம் செய்தான், உயிரிழந்தான். ஹிடும்பி, பீமனை மணம் புரிந்து கொண்டாள். அவர்களுக்குப் பிறந்த பிள்ளை கடோத்கஜன்.


கட்டு ஷ்யாம் 

அர்ஜுனன்  கர்ணனால்  கொல்லப்படாமல் காத்தவன் கடோத்கஜன் . வீரமும் தீரமும்  கீர்த்தியும் நிறைந்தவன். பாண்டவர்களின் அன்புக்கும் அபிமானத்திற்கும் உரியவன் . அரக்கர் குலத்திலே தோன்றினாலும் பீமனின் மகனானதால் உத்தமமான பண்புகள் நிறைந்தவனாகத் திகழ்ந்து தியாகம் புரிந்தவன். பாண்டவர் பரம்பரையில்      முதலில் பிறந்தவன் கடோத்கஜன்.  ஆனால் எந்தவிதமான உரிமையையோ பதவியையோ அவன் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம், கடோத்கஜன் உயிர்த் தியாகம் செய்யவில்லை என்றால், பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது. அர்ஜுனன் வாழ்வும் முடிந்திருக்கும்.அப்படி   நடக்காமல், தன் வாழ்வையே முடித்துக் கொண்ட, மிகவும் உயர்ந்ததான ஒரு புண்ணிய ஆத்மாதான் கடோத்கஜன்.

கிருஷ்ணபரமாத்மாவின் ஆலோசனைப்படி கடோத்கஜன் மணிப்பூரின் அரசன் முரண் என்பவனின் மகள் கரகண்கடியை வென்று வந்து அவளை திருமணம் செய்து கொண்டான். அரசளங்குமரி மிகவும் புத்திக் கூர்மை மிக்கவள். ஆகவே அவள் தன்னை யார் வெல்கிறார்களோ அவரைத்தான் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்திருந்தாள். பலர் முயன்று அவளிடம் தோற்று அவளுக்கு அடிமையாயினர். கிருஷ்ணரின் ஆசியுடன்  கடோத்கஜன் அவளுடன் போட்டியிட வந்தான்யார் முதலில் பதில் உடனே பதில் சொல்ல தயங்குகிறார்களோ அவர்கள் தோற்றவர்கள் என்பது போட்டிகளின் விதி. அரச குமாரி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் கடோத்கஜன் டாண் டாண் என்று பதில் சொல்லி விட்டான். பின் அவன் அரசகுமாரியிடம் ஒரு கதை சொன்னான்மனைவி ஒருவர் இல்லாத ஒருவர் தனது பெண் குழந்தையை தனது நண்பனின் குழந்தையை தனது நண்பனின் குழந்தை என்று  தானே வளர்த்து வந்தார்.   அந்த குழந்தையும் வளர்ந்து பெரியவளானாள். அவரே அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கும் ஒரு பெண் பிறந்தாள்.

அந்த பெண்ணுக்கு அவர் என்ன உறவு? என்று கடோத்கஜன் கேட்டார்.  நாங்கள் எல்லாரும் இளவரசி என்ன பதில் சொன்னாள் என்று அவரிடம் கேட்டோம். அவர் முதலில் நீங்கள் சொல்லுங்கள் என்றார். நாங்கள் குழம்பி ஙே!” என்று முழிக்க. அவரும் குறும்பாக அந்த இளவரசியும் இது போலத்தான் முழித்தாள் என்று கூறினார். இதனால் அந்த அரசகுமாரி தோல்வியடைய அவளை  கிருஷ்ண பரமாத்மா கூறியபடி இந்திரபிரஸ்தம் அழைத்துவந்து திருமணம் செய்து கொண்டான். இவர்களின் குழந்தைதான் பார்பரிக். இவன் பிறந்தவுடன் இவன் தலை முடி சிம்மத்தின் பிடரி மயிர் போல இருந்ததால் வலிமை மிக்கவன் என்ற பொருளில் இவனுக்கு இந்தப் பெயர் வைத்தனர்.


இவன் கிருஷ்ணபரமாத்மாவின் ஆலோசனைப்படி துர்கா தேவியை உபாசித்து யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்றான். மேலும்  மிகவும் விசேஷமான மூன்று அம்புகளைப் பெற்றான். முதல் அம்பு இவனது எதிரிகளின் மேல்  அடையாளமிடும். இரண்டாவது அம்பு இவனது நண்பர்களை அடையாளமிடும். மூன்றாவது அம்பு அடையாளம் இட்ட பகைவர்கள் அனைவரையும் அழித்து விடும். இதனால் இவன். மூன்று அம்புக்காரன் என்றும் அழைக்கப்பட்டான். அக்னி பகவான் இவனுக்கு இந்த அம்புகளை எய்ய வல்ல ஒரு திவ்ய அம்பை அளித்தார்.

மஹாபாரதப்போர் முடிவான போது பார்பரிக் அந்த யுத்தத்தில் கலந்து கொள்ள விரும்பினான் அவன் தன் தாயிடம் அதற்காக அனுமதி கேட்ட போது அவள் யார் நலிவுற்றிருக்கிறார்களோ அவர்கள் பக்கம் நீ சேர்ந்து போரிடு என்று ஆசி அளித்தாள். தன் தாய்க்கு அது போலவே செய்வதாக வாக்களித்துவிட்டு, வீரதீர, பார்பரிக் தனது நீலக்குதிரையில் ஏறி குருஷேத்திரத்தை நோக்கி பாய்ந்து வந்து கொண்டிருந்தான்அவன் வருவதை தனது ஞான திருஷ்டியால் அறிந்துகொண்ட கண்ணபிரான் அவனை சோதிக்க வந்தார். கிருஷ்ணர் பிராமண வேடத்தில் அவன் காற்றென பாய்ந்து வரும் பாதையில் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்து கொண்டார். ஒரு பிராமணரை ஆலமரத்தடியில் கண்ட பார்பரிக், குதிரையை விட்டு இறங்கி அவருக்கு நமஸ்காரம் செய்தான்பிராமணராக கள்ள வேடம் பூண்ட பகவான் ஏதும் அறியாதது போல, இளைஞனே! இவ்வளவு வேகமாக எங்கு செல்கின்றாய்? என்று வினவினார். அதற்கு பார்பரிக் மஹாபாரதப் போரில் கலந்து கொள்ள செல்கின்றேன் என்று பதிலிறுத்தான்அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே கண்ணன், மூன்று அம்புகளை மட்டும் வைத்துக்கொண்டு நீ என்ன செய்து விட முடியும் என்று கேட்டார். அதற்கு அவன் என் ஒரு அம்பு போதும் இப்போரில் ஈடுபடும் அத்தனை வீர்ர்களையும் கொல்ல, என்னுடைய மூன்று அம்புகளை நான் பயன்படுத்தினால் மூன்று உலகங்களிலும் பிரளயமே ஏற்பட்டு விடும் என்று பெருமையாக கூறினான். வீணாக மார் தட்ட வேண்டும், முடிந்தால் இந்த ஆலமரத்தின் அத்தனை இலைகலையும் உனது அம்பால் ஒன்றாகக் கட்டு பார்க்கலாம் என்று கிருஷ்ணர் கூறினார். அதற்கு பார்பரிக் இது வெறும் தற்பெருமை அல்ல எனது கடுமையான தவத்தின் பலன் மற்றும் அம்பாளின் அருள், இப்போதே நான் அதை செய்து காட்டுகின்றேன் என்று கண்ணை மூடி அம்பாளை தியானித்து அம்பை எய்தான். அதற்குள் கிருஷ்ணர் அந்த ஆலமரத்தின் ஒரு இலையை பறித்து தனது வலது கால் கட்டை விரலின் கீழே மறைத்து வைத்துக்கொண்டார். பார்பரிக் எய்த முதல் அம்பு ஆலமரத்தின் அனைத்து இலைகளையும் கட்டி விட்டு  பிராமணனாக வந்த மாய கண்ணனின் கட்டை விரலை சுற்றி வட்டமிட்டது. அம்பு ஏன் இன்னும் உனது அம்புறாதூணிக்கு வரவில்லை என்று பிராமணன் கேட்க, உங்களது பாதத்தின் அடியில் ஒரு இலை இருக்க வேண்டும்  ஆகவே தான் அம்பு தங்கள் பாத்ததை வட்டமிடுகின்றது என்றான். எனது கட்டை விரலை துளைத்து செல்ல்லாமே என்று பிராமணர் கேட்க, அந்த அம்பு இலைகளை மட்டுமே கட்டுவதற்காக எய்யப்பட்டது தங்கள் கட்டை விரலை துளைக்க அல்ல என்றான் பார்பரிக். எனவே கிருஷ்ணர் தந்து பாதத்தை உயர்த்த அந்த இலையையும் கோர்த்துக் கொண்டு அவனது அம்புறாத்தூணிக்கு  திரும்பியது. பார்பரிக்கின் அம்பின் திறத்தை அறிந்து கொண்டார் கிருஷ்ணர்.

மூன்று அம்புகள் 

பிறகு பிராமணர் பார்பரிக்கிடம் நீ எங்கு செல்கிறாய் என்று கேட்டார். பாரதப்போரில் கலந்து கொள்ள செல்கிறேன் என்றான். பிறகு கண்ணன், வீரனே !, நீ  யார் பக்கம் சேர்ந்து போரிடப்போகிறாய்என்று கேட்டார். அதற்கு அவன் நான் போரில் கலந்து கொள்ள செல்லவில்லைஆனால் யார் தோற்கும் நிலையில் இருக்கின்றார்களோ அவர்கள் பக்கம் சேர்ந்து கொள்வேன் என்று கூறினான். எப்படியும் கௌரவர்கள்தான் தோல்வியடையப் போகிறார்கள் என்பதை அறிந்த கண்ணபிரான் இந்த வீரன் கௌரவர்கள் பக்கம் சேர்ந்து போரிட்டால் பாண்டவர்கள் வெல்வது கடினம் என்பதை உணர்ந்து கள்ளத்தனமாக,   ஒரு சத்திரியன்  மிக சிறந்த வீரனாக இருந்தால் மட்டும் போதாது, சிறந்த தர்மவானாகவும் இருக்க வேண்டும் என்று கூறினான்அதற்கு பார்பரிக், பிராமணரே! தங்களுக்கு என்ன வேண்டுமோஅதைக் கேளுங்கள் நான் அதை தானமாகத் தருகிகின்றேன் என்று கூறினான். முதலில் நீ என்ன கேட்டாலும் தருவதாக சத்தியம் செய்து தருமாறு கேட்டார் கபட வேடதாரி கிருஷ்ணர். அவனும் என்ன கேட்டாலும் தருவதாக வாக்களித்தான்கண்ணன் நீ உனது தலையை தானமாக கொடு என்று கேட்க, பார்ப்பரிகிற்கு தூக்கிவாரி போட்டது. அவர் வெறும் பிராமணரில்லை என்பதை உணர்ந்து கொண்டு தாங்கள் யார்? எதற்காக எனது தலையை தானமாக கேட்கின்றீர்கள் என்று வினவினான். கிருஷ்ணரும் தந்து திவ்ய மங்கள சொரூபத்தை பார்பரிக்கிற்கு காட்டி அருளினார். போர் துவங்குவதற்கு முன் ஒரு மிகச் சிறந்த வீரனை பலியிடுவது வழக்கம் உன்னை விட சிறந்த வீரன் யார் உள்ளார் எனவேதான் உனது தலையை தானமாகக் கேட்டேன் என்றான் கிருஷ்ணபரமாதமா. அதற்கு பார்பரிக் கிருஷ்ணா, மஹாபாரதப் போரை பார்க்க வேண்டும் என்ற என்னுடைய ஆசையை மட்டும் நிறைவேற்றித் தரவேண்டும் என்று கோரினான். கிருஷ்ணரும் அவ்விதமே வரம் தந்தார்.

ருத்ர ப்ரயாகை 

( அலக்நந்தா + மந்தாங்கினி சங்கமம்)

அதற்கு பிறகு பந்குனி மாதம் சுக்லபக்ஷ ஏகாதசியன்று விரதம் இருந்து துவாதசியன்று  தான் வாக்களித்தபடி தனது அரிந்து கண்ணனுக்கு தானமாக அளித்தான். அதனால் அவர் தலை அளித்த வீரன் என்றும் போற்றப்படுகிறார். கிருஷ்ணா ஏன் இவ்வாறு ஒரு அருமையான வீரனின் தலையை நீ தானமாகப் பெற்றாய் என்று பாண்டவர்கள் கேட்க, கண்ணபிரான் கூறினார். சென்ற பிறவியில் இவன் சூரியவசன் என்ற கந்தர்வன். ஒரு சமயம் அனைத்து தேவர்களும் மஹாவிஷ்ணுவிடம் சென்று பூலோகத்தில் பாவம் பெருகிவிட்டது. துஷ்டர்கள் அதிகமாகி விட்டனர் தாங்கள் தான் இரட்சித்து அருள வேண்டும் என்று விண்ணப்பம்ச் செய்தனர். மஹா விஷ்ணுவும் தானே அவதாரம் செய்து  துஷ்டர்களை அழித்து பூபாரம் குறைப்பதாக அருளினார். அப்போது இந்த கந்தர்வன் மஹா விஷ்ணு எதற்காக அவதாரம் எடுக்க வேண்டும் தான் மட்த்உம் போதுமே அந்தக் காரியத்தை முடிக்க என்று அகங்காரமாக பேசினான். இதனால் கோபம் கொண்ட பிரம்மதேவன்பெருமாள் அவதாரம் செய்யும்   போது உன் தலை  அவரால் கொய்யப்படும் என்று. சாபம் கொடுத்தார். ஆகவே தான் இவ்வாறு நடந்த்து என்று விளக்கமளித்தார்பார்ப்பரிக்குக்கு வரம் தந்தபடி அவனது தலையை ஒரு மலை உச்சியில் வைத்து மஹா பாரதப்போரை அவன் பார்க்குமாறு அருளினார் கிருஷ்ணர்.  

பாரதப்போர் முடிந்த பிறகு பாண்டவர்கள் தங்களுள் யார் மிகவும் வீரமாக போரிட்டனர் என்று கேட்டனர். அதற்கு கிருஷ்ணரும் பார்பரிக்கிடம் கேட்கலாம் என்று அழைத்து சென்றார்.   பார்பரிக் பாரதப் போர் முழுவதும் நான் சுதர்சன  சக்கரத்தையும் துர்க்கையின்   கப்பரையையும்தான் கண்டேன் என்று பதில் கூறினான். அனைத்தையும் ஆட்டுவிப்பவன் அவனே மற்றவர்கள் எல்லாம் ஆட்டுவிப்பவர்களே என்பதை உணர்த்தினான். (இங்கு துர்க்கை எனக்குறிப்பிடப்பட்டது திரௌபதி). இதற்குபிறகு   கண்ணபிரான்  கொடுத்த வரத்தின்படி கலியுகத்தில்  கட்டு என்னும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டு கண்ணனின் பெயரான ஷ்யாம் என்ற பெயரிலேயே வணங்கப்படுகின்றார். இராஜஸ்தான் மாநிலத்தில் சிகார் மாவட்டத்தில் இந்தக்கோவில் அமைந்துள்ளது. இவர் கட்டு ஷ்யாம் என்று வணங்கப்படுகன்றார். ஹோலியை ஓட்டி மிகப்பெரிய விழா இங்கு  நடைபெறுகின்றது. இவ்வாறு பார்பரிக்கின் கதையைக் கேட்டுக்கொண்டே தேவப்ரயாகையை வந்தடைந்தோம். இனி வரும் பதிவில் தேவப்ரயாகையின் பெருமைகளைக் காணலாம் அன்பர்களே.   






ருத்ரப்ரயாகையில் குழுவினர் 



Friday, August 3, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -29

அந்தக் கதை பஞ்சபாண்டவர்கள் சொர்க்கம் சென்ற கதையாகும்.  மஹா பாரதப்போரில் வென்ற பஞ்சபாண்டவர்கள் சிறப்பாக இராஜ்ய பரிபாலனம் செய்து இறுதியாக சொர்க்கம் செல்லுவோம் என்று இராஜ்யத்தை பரிக்ஷித்திடம் ஒப்படைத்து விட்டு இமயமலைக்கு வந்து கேதாரீஸ்வரரை பணிந்து கோத்ரஹத்யா (தன் உறவினர்களை கொன்ற பாவம்), பிராமணஹத்யா (பிரமாணர்களை கொன்ற பாவம்) நீங்கப்பெற்று பின் நிறைவாக  பத்ரிநாதரை தரிசனம் செய்து விட்டு சொர்க்கம் செல்ல புறப்பட்டனர். சரஸ்வதி நதியை பீமன் அமைத்த பாலத்தினால் கடந்து யோகத்தை மனதில் நிறுத்தி அவர்கள் கடந்தனர்.  

பீமன் பாலம்
பாலத்தை கடந்த சிறிது நேரத்தில்  திரௌபதி கால்கள் தள்ளாடி கீழே விழுந்தாள். அதைக்கண்ட பீமசேனன் தர்மபுத்திரரிடம், தவத்தில் சிறந்தவரே, அரசகுமாரி திரௌபதி   ஒரு பாவமும் செய்யவில்லையே  அவள் விழுந்ததற்குக் காரணமென்ன? என்று வினவினான். 
மானா கிராமத்தின் முட்டைக்கோஸ் தோட்டம்
பீமனுடைய கேள்வியைக் கேட்ட தர்மபுத்திரர் பின்னால் திரும்பாமல் நடந்து கொண்டே பதில் கூறினார் – “அவளுடைய உள்ளத்தில் அர்ஜுனனிடம் மட்டும் மிகுதியான அன்பு இருந்தது.” சிறிது நேரம் கழித்து லக்ஷ்மி வனத்தை அடைந்த போது சகதேவன் பூமியில் விழுந்தான். அதைப் பார்த்த பீமன்- அண்ணா சகதேவனின் மனதில் சிறிதும் அகந்தை இருந்ததில்லை அவன் ஏன் இறந்தான் என்று கேட்டான். அதற்கு தர்மபுத்திரர், “தன்னைப் போன்ற புத்திமான் வேறு யாரும் இல்லை" என்ற அகந்தையினால்தான் அவன் விழுந்தான் என்று பதிலிறுத்துவிட்டு தொடர்ந்து நடந்தார் தர்மர். மற்ற சகோதரர்கள் மற்றும் தொடர்ந்து பின் வந்த நாயுடன் தர்மர் சென்று கொண்டிருந்த போது சகஸ்ரதாராவின் அருகே மற்றொரு மாத்ரி புத்திரனான நகுலனும் கீழே விழுந்தான். பீமன் மீண்டும் – அண்ணா அறத்திலிருந்து வழுவாத நம்முடைய  பிரியமான  நகுலன் ஏன் விழுந்தான்? என்று கேட்டான்.  அதற்கு  தர்மர்  “ தன்னைப் போன்ற அழகன் வேறு யாருமில்லை" என்ற அகந்தைதான் காரணம் , வா தம்பி என்று தொடர்ந்தார் தர்மர், சிறிது தூரம் சென்று   சக்ரதீர்த்த்தின் அருகே வில் வீரன் அர்ச்சுனனும் விழுந்தவுடன் பீமன்,  அரசே,அர்ஜுனன் விளையாட்டாக கூட பொய் பேசியதில்லையே அவன் ஏன் விழுந்தான் என்று வினவ தரிமபுத்திரர் அர்ஜுனனுக்கு தன் வீரம் பற்றிய அகந்தை இருந்தது என்றார். சிறிது தூரம் சென்று சதோபன்த் ஏரியை அடைந்த போது இது வரை கேள்வி கேட்டுக்கொண்டிருந்த பீமசேனனும் விழுந்தான். விழுந்ததும் அவன் தர்மரை அழைத்து, இதோ பாருங்கள் நானும் விழுந்து விட்டேன். இதற்கு என்ன காரணம் என்று வினவ, தர்மபுத்திரர் கூறினார் தம்பி "உனக்கு உணவில் மிக்க விருப்பம். மேலும் மற்ரவர்களை நீ துச்சமாக நினைத்து தற்பெருமை பேசிக்கொண்டிப்பாய்". அதனால்தான் நீ கீழே விழ வேண்டி வந்தது என்று கூறி விட்டு முன்னே நடந்தார். ஸ்வர்க்காரோகணி என்னும் மலை சிகரத்தில் ஏறி  நின்ற தர்மரை சொர்க்கம் அழைத்து செல்ல புஷ்பக விமானம் வந்தது. தர்மருடன் நாயும் விமானத்தில் ஏற முயன்ற போது தேவ தூதர்கள அதை தடுத்தனர். தர்மர் இந்த நாய் என்னுடனே வந்து கொண்டிருக்கின்றது எனவே அதையும் சொர்க்கத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்றார். அதற்கு தேவதூதர்கள் மறுப்புக்கூற தர்மர் விமானத்தில் இருந்து இறங்கி, நாய் வரவில்லையானால் நானும் வரவில்லை என்று கூறி நின்றார். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது நாய் எமதர்மராஜனாக மாறி, தர்மம் தவறாத, தன்னலமில்லாத  நீயே எனக்கு ஏற்ற மகன் என்று வாழ்த்தி தர்மபுத்திரரை  பூத உடலுடன் சொர்க்கம் அழைத்து சென்றார். இவ்வாறு  மஹாபாரதத்தின் நூலும் பாவும் இமயமலையுடன்  இனைந்துள்ளது.  
சரஸ்வதி அன்னை ஆலயம்
இவ்வாறு பஞ்ச பாண்டவர்கள் சென்ற இந்த வழியில் ஸ்வர்க்காரோகிணி வரையில்  மிகவும் கடினமான சதோபந்த (சத்தியத்தின் பாதை) யாத்திரையை மேற்கொள்ளும் அன்பர்கள் இருக்கின்றனர். பனி உருகிய பின் பத்ரிநாத்திலிருந்து பீமன் பாலத்தின் மூலம் சரஸ்வதி நதியை கடந்து மாதா மூர்த்தியின் அருள்பெற்று, மானாவிலிருந்து 3  கி.மீ தொலைவில் உள்ள, 122  மீ உயரத்தில் இருந்து விழும்  வசுதாரா நீர் வீழ்ச்சியை கண்டு களித்து லக்ஷ்மி தவம் செய்த  லக்ஷ்மி வனம், குபேரனின் அளகாபுரி பளிங்குப்பாறை பகுதி என்று நான்கு நாட்கள் நடைபயணம் மேற்கொள்கின்றனர். மிகவும் கடினமான பாதை, சில இடங்களில் கத்தி முனை போல இருக்கும் மலை முகட்டில் நடந்து செல்ல வேண்டும் கரணம் தப்பினால் மரணம் தான். வழிகாட்டி மிகவும் அவசியம். சாப்பிட வேண்டிய பொருட்களை போர்ட்டர்கள் மூலமாக கொண்டு செல்ல வேண்டும். மேகி(Maggie), பிரசர் குக்கர், ஸ்டவ்  என்று எல்லா பொருட்களையும் உடன் எடுத்து செல்ல வேண்டும். சதோபந்த் ஏரி 4000  அடி உயரத்தில் அமைந்துள்ளது. அருகே சோன்குண்ட், விஷ்ணுகுண்ட், சூரிய குண்ட் என்னும் சிறிய குளங்கள் உள்ளன. ஸ்வர்க்காரோஹன் சிகரம் பனிச்சிகரமாகும். தர்மர்,  எறிச்சென்ற எழு படிகளை மேகம் இல்லாவிட்டால் தரிசிக்கலாமாம்.  எங்களுடன் பயணம் செய்த முட்கல் இந்த வருடம் மே மாதம்,  சதோபந்த யாத்திரையை முடித்திருந்தார் அவரது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். தர்ம புத்திரர் புண்ணியம் செய்தவர் அவர் ஒரு தடவை சென்றவர் திரும்பி வரவில்லை, நான் திரும்பி இந்த கர்மபூமிக்கு வந்துள்ளேன் என்று வேடிக்கையாகக் கூறினார்.  
இந்திய திருநாட்டின் இறுதிக் கிராமம்  

இந்த கிராமத்திலும் இந்திய ஸ்டேட் வங்கி

மானா கிராமத்தின் வளத்தையும் மக்களின் வாழக்கை முறையையும் பார்க்க கிட்டியது. வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் அதிகமாக முட்டைகோஸ் கடுகு பயிரிட்டிருந்தனர் அதிலே  சிறு முயல்கள் துள்ளி ஓடிக் கொண்டிருந்தன. வழியெங்கும் இமய மலைக்கே உரித்தான  வண்ண வண்ண  ஆர்க்கிட் மலர்கள்.  ஆடு மேய்த்து அதன் முடியை  எடுத்து கம்பளி  ஆடைகள் தயாரிக்கின்றனர். மலையில் கிடைக்கும் மூலிகைகளை கொண்டு வந்து விற்கின்றனர். இங்கு கிடைக்கும்  வாடா மலர்களை இடித்து பனிக்காலத்திற்காக  சேர்த்து வைக்கின்றர்.  பனி காலத்தில் மானா கிராமத்தை காலி செய்து விட்டு கீழே வந்து  வசிக்கின்றனர்.  இவர்களுடைய குல தெய்வம்தான் கண்டா கர்ணன், இவரது சன்னதி பத்ரிநாதர் ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில்  உள்ளது.


பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள மானா கிராமத்து முதியவர்கள்

சுமார் 2 கி.மீ தூரம் நடந்து பீமன் பாலத்தை அடைந்தோம். சுவர்க்கத்திற்காக பஞ்ச பாண்டவர்கள் புறப்பட்ட போது முதலில் அவர்கள் சரஸ்வதி நதியை அடைந்தபோது சரஸ்வதி ஆறு நுப்பும் நுரையுமாக ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டு பயந்த திரௌபதி எப்படி இந்த நதியைக் கடப்பது என்று தயங்கி நின்ற போது பீமன் ஒரு பெரிய பாறையை எடுத்து நதியின் குறுக்கே அநாயாசமாக வைத்தார், பஞ்ச பாண்டவர்கள் பின் சரஸ்வதி நதியை கடந்து சென்றனர்.  இன்றும் அந்தப் பாறையை நாம் பாலமாக  காணலாம். தற்போது கீழிறங்கி சென்று  பீமன் பாலத்தையும் கேசவ ப்ரயாகையைய்ம் காணும் வகையில் படிகள் அமைத்துள்ளனர்.
சரஸ்வதி நதி

  குகைகளில் சாதுக்கள்





இந்த இடம்தான் நமது இந்திய நாட்டின் இறுதி கிராமம் ஆகும் ஏனென்றால் இது சீன இந்திய எல்லையில் அமைந்துள்ளது. இங்கு ஒரு தேநீர்க்கடைக்காரர் அனைத்து இந்திய மொழியிலும் இது தான் இந்தியாவின் கடைசி டீக்கடைக்கு வரவேற்கின்றோம் என்று அனைவரையும் வரவேற்று தேநீர் அளிக்கின்றார். சரஸ்வதி நதியின் கரையில் சரஸ்வதி தேவிக்கு ஒரு ஆலயம் அமைந்துள்ளது. நதியாக ஓடி வரும் அன்னையை இங்கு மூர்த்தியாக (சிலையாக) தரிசனம் செய்கின்றோம்.   கலைமகளை   மனதார   வழிபட்டோம். சரஸ்வதி நதி
அலக்நந்தாவின் சங்கமம் கேசவப்ரயாகை  என்று அழைக்கப்படுகின்றது. வழியில் குகைகளில் பல்வேறு சாதுகளை தரிசித்தோம்.  அருகே ஒரு குறும்பு தேநீர்க்கடைக்காரர் இந்தியாவின் நிறை தேநீர்க்கடை, ஒரு இந்திய சகோதரனுக்கு சேவை  செய்யும் வாய்ப்பை அளியுங்கள் என்று வேண்டு்கின்றார்.  திரும்பி வரும் வழியில் மலை உச்சியில் ஆடுகளை மேய்க்கும் பாங்கை கண்டோம்.

பீமன் பாலம்
பீமன் பாலத்தில் தேஷ்பாண்டே குடும்பத்தினர்




அலக்நந்தா நதிக்கரையோரம் பீமன் லம் செல்ம் பாதை

னாவில் இருந்து திரும்பி வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துகொண்டு பின்னர் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்திற்காக மீண்டும் ஆலயம் சென்றோம். மதியத்திற்குப்பின் கட்டண சேவைகள் துவங்குகின்றன. அப்போது சென்றால் பத்ரிநாதரை மிக அருகில் சென்று  தரிசனம் செய்யலாம். நாங்கள் சென்று வரிசையில் நின்றோம். மழை பெய்தது அப்படியே வரிசையில் தங்க ஆரத்தி, வெள்ளி ஆரத்தி சேவைகள் முடிந்தபின் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்திற்க்காக  மண்டபத்தில் அமர்ந்தோம். விஜயதசமி, திருவோண நாளில் பூலோக வைகுண்டமான பத்ரிநாதத்தில் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. ஒரு பட்டர் நாமங்களை சேவிக்க அனைவரும் உடன் சேவித்தோம். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்திற்கு பிறகு திவ்யமாக கற்பூர ஆரத்தியில் பத்மாசனத்தில் வைர மகுடத்துடன் சேவை சாதிக்கும் பெருமாளை திவ்யமாக சேவித்தோம்.
மின்னொளியில் பத்ரிநாத் சிம்மதுவாரம்  
 பின்னர் வெளியே வந்து மின்னொளியில் சிங்கதுவாரம் ஒளிரும் அழகைக் கண்டு களித்தோம். காலை அபிஷேகத்திற்கான அனுமதி சீட்டு வாங்க முயற்சி செய்தோம் ஆனால் முடிந்து விட்டிருந்தது. இவ்வாறு இன்றைய தினம் மிக்க அருமையான நாளாக நிறைவு பெற்றது.   காலையில் அபிஷேகம் பார்க்க முடிந்ததா? என்று அறிந்து கொள்ள அடுத்த பதிவு வரை பொறுத்திருங்கள் அன்பர்களே.