Showing posts with label சாளக்கிராமம். Show all posts
Showing posts with label சாளக்கிராமம். Show all posts

Monday, July 13, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 15

முக்திநாதர் தரிசனம் 


ஸ்ரீ மூர்த்தி


இவ்வளவு சிரமங்களுக்குப்பின் முக்திநாத்தை அடைந்தாலும் முக்திநாதரின் தரிசனம் திவ்யமாக கிட்டியது.  108  திவ்ய தேசங்களைக் குறிக்கும் 108 தாரைகளில் நீராடி, பின்னர் புண்ணிய - பாவ குளங்களில் மூழ்கி எழுந்து மிகவும் அருமையாக முக்திநாதரை தரிசனம் செய்தனராம். பின்னர் ஜுவலா மாயி எனப்படும் ஜோதியையும் தரிசனம் செய்தனர்.   

ஆலய வளாக முகப்பு வளைவில் கருடன் 


முன் மண்டப முகப்புப் பதாகை 


கதவின் ஒரு அழகிய சிற்பம் 

 புண்ணிய குளம் 


முக்திநாதர் சன்னதி 



முக்திநாத் கிராமம் 

 ஜோம்சமில் இருந்து  போக்ரா திரும்பி வரும் போது விமானம் கிடைத்ததாம். முதலில்  போக்ரா சென்றதால் திரும்பி வரும் போது மனோமாம்னா மற்றும் காத்மாண்டு சென்றனர். அந்த காட்சிகளை வரும் பதிவுகளில் காணலாம். 

 புனித கண்டகி நதி 


இராமானுஜர் 

யாக குண்டம்  

 அணையா ஜோதியுள்ள புத்த விகாரம்



Wednesday, May 27, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 6

முக்தி நாதர் தரிசனம்

முக்திநாதர் ஆலய வளாகத்தின் நுழைவு வாயில்
(கருடனும் நாக கன்னிகைகளும்)

முக்திநாதர் ஆலயம் மிகப்பெரிய வளாகம் ஆகும். இந்து மற்றும் பௌத்த அம்சங்கள் இணைந்த பல சன்னிதிகள் இவ்வளாகத்தில் உள்ளன. ஆலய வளாகத்தை சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அலங்கார வளைவில் கருடனும் நாக கன்னிகைகளும் முக்திநாதரை சேவிக்க வரும் நம்மை வரவேற்கின்றனர். 


முக்திநாதர் ஆலய வளாக வரைபடம்

அருகில் மூன்று   பெரிய பிரார்த்தனை உருளைகள் உள்ளன. இந்த உருளைகளின் உள்ளே மந்திரங்கள் எழுதிய காகிதங்கள் வைத்துள்ளனர். நாம் அந்த உருளைகளை சுற்றும் போது அவ்வளவு மந்திரங்களை ஜபித்த பலனை நாம் பெறுகின்றோம் என்பது இவர்கள் ஐதீகம்.



நுழைவு வாயில் அருகே உள்ள பிரார்த்தணை உருளைகள்
(அருகே உயர்ந்த மதில் சுவரைக் காணலாம்)

நுழைவு வாயிலைத் தாண்டியவுடன் சாங்தோ புத்தவிகாரம் அமைந்துள்ளது. இவ்விகாரத்தில் புத்தர்,  அவலோகிதேஸ்வரர் மற்றும் திபெத்திற்கு புத்தமதத்தை கொணர்ந்த பத்மசம்பவரும் அருள் பாலிக்கின்றனர். முக்திநாத்தின் லாமாக்களும், இங்கு பூசை செய்கின்ற  புத்த பிக்குணிகளும் இதன் அருகில் உள்ள கட்டிடத்தில்  தங்குகின்றனர். 



விஷ்ணு பாதம் - சுவாமி நாராயண்
( இவரது பக்தர்கள்தான் மதில் சுவரை எழுப்பினார்களாம்)


அடுத்து இடப்பக்கத்தில்   சுவாமி நராயண் என்று தற்போது அழைக்கப்படும் சுவாமிகளின் நினைவிடம் உள்ளது அதில் விஷ்ணு பாதம் அமைத்துள்ளனர். இவர் தனது பதினோராவது வயதில் முக்திநாத் வந்து சில காலம் இங்கு கடுமையான தவத்தில் இருந்து சித்தி பெற்றார். பின்னர் சபீஜ் யோகத்தை உலகெங்கும் பரப்பினார். இவ்வாலயத்தின் இப்போதுள்ள  சுற்று மதிலை இவரின் சீடர்கள்தான் கட்டினார்களாம். 


யக்ஞ சாலை - திருமங்கையாழ்வார் பாசுரங்கள்


அடுத்து யக்ஞசாலை அமைந்துள்ளது. அதன் முகப்பில் திருமங்கையாழ்வாரின் பாசுரங்கள் எழுதிய  பலகை வைத்துள்ளனர். இமயமலையில் இவ்வளவு உயரத்தில் தமிழ் படித்தபோது மிகவும் பெருமையாக இருந்தது.
சிவ பார்வதி சன்னதி - பெரிய சாளக்கிராமம்


அடுத்து நாம் சேவிப்பது சிவபார்வதி சந்நிதி. நடுநாயகமாக இரண்டடுக்கு பகோடா அமைப்பில்   பெரிய சிவன் சன்னதியும் அதன் நான்கு திசைகளிலும் சிறிய இராமர், கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் கணேசர்களுக்கு சிறு சன்னதிகள் என்றபடி பஞ்சாயதன அமைப்பில் அமைந்துள்ளது. சிவபார்வதி பளிங்குச்சிலை பெரிய சாளக்கிராமம் ஒன்றும் சன்னதியில் உள்ளது. சிவபெருமானுக்கு எதிரே சிறு நந்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. புத்தமத கலப்பில்லாமல் இந்த வளாகத்தில்  முழுதும் இந்து கோவிலாக அமைந்துள்ள சந்நிதி இது ஒன்றுதான். சிவபார்வதியை வணங்கிவிட்டு முக்கிய மைய  சன்னதியை நோக்கி சென்றோம். இருபுறமும் பெரிய மரங்கள் வளர்ந்திருக்கின்றன என்பது இத்தலத்தின் ஒரு தனி சிறப்பு ஆகும். பொதுவாக இந்த உயரத்தில் (3750 மீ) மரங்கள் வளராது. வளாகத்திற்ககுள் சிறு ஆறு ஒடுகின்றது.



முக்திநாதர் சன்னதி

ஒரு முன் மண்டபம் ஒரு பிரகாரத்துடன் மூன்றடுக்கு பகோடா அமைப்பு




இந்த ஆலயத்தை நேபாள அரசர் ஷா ராணா பகதூரின் பட்டமகிஷி சுவர்ணா பிரபா தனது கனவில் வந்து முக்திநாதர் கட்டளையிட்டபடி 1815ல்  கட்டி முடித்தார்.  நேபாளக் கோவில்களைப்போலவே மூன்றடுக்கு பகோடா அமைப்பில் எழிலாக அமைந்துள்ளது முக்திநாதர் ஆலயம். ஆலயத்திற்கு முன் புறம் இரண்டு குளங்கள் புண்ணிய-பாவ குளங்கள் உள்ளன.

புண்ணிய பாவ குளங்கள்

அரை வட்ட  வடிவில்    108 நீர் தாரைகள்

கோ முகத்து ஓர்  நீர் தாரை

 கோவிலைச் சுற்றி அரை வட்ட வடிவத்தில் 108  நீர் தாரைகள் விழுந்து கொண்டிருக்கின்றன. பக்தர்கள் இந்த 108 தாரைகளில் நீராடி பின்னர் இரு குளங்களிலும் முழுகி எழுந்து உடல் தூய்மையான பின் முக்திநாதரை சேவிக்க செல்கின்றனர். இந்துக்களுக்கு இந்த 108 தாரைகள் 108  திவ்ய தேசங்களை குறிக்கின்றது. பௌத்தர்கள் பத்ம சம்பவருடன் வந்த  84  சித்தர்கள் உருவாக்கிய புனித தாரைகள் இவை என்று நம்புகின்றனர். இந்த புனித நீரானது மானசரோவரின் தீர்த்தம் என்றும், வரும் காலத்தில் பாவம் செய்தவர்கள் பாவத்திலிருந்து விடுபட இந்த தீர்த்தங்களை அவர்கள் ஆசீர்வதித்து சென்றுள்ளனர் என்பதும் இவர்கள் ஐதீகம். எனவே இந்த 108  தாரைகளில் நீராட ஒருவரது கன்ம வினைகள் அனைத்தும் நீங்கும்.   தண்ணீர் விழும் தாரைகள் பசு முகம் போல உள்ளன, முதல் மற்றும் கடை தாரைகள் மட்டும் ட்ரேகன் போல உள்ளன. சங்பா ரின்போசே அவர்கள் இவைகளை அமைத்தாராம். மிகவும் குளிர்ந்த தண்ணீர்தான் இவைகளில் இருந்து வருகின்றன மேலும் எப்போதும் தண்ணீர் விழுந்து கொண்டிருப்பதால் பாசமும் பிடித்துள்ளது. கவனமாக நீராடவும். பாதுகாப்பிற்காக  தடுப்புக் கம்பி வளையம் அமைத்துள்ளனர் அதை பிடித்துக்கொள்ளலாம்.  முதல் தாரையில் கீழ் வந்த உடனே அந்த சீதள நீரினால் உடல் சில்லிட்டு விட்டத. ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை பாசுரங்களை சேவித்துக்கொண்டே ( முதல் பாசுரத்திலிலேயே மார்கழி நீராடத்தானே அழைக்கின்றாள் கோதை)  அவசர அவசரமாக மற்ற தாரைகளில் தலையை நனைத்துக்கொண்டே ஓடினோம். பாவக்குளத்தில் இறங்கியவுடன் உடல் அப்படியே உறைந்து விட்டது போல உணர்ந்தோம், அவசர அவசரமாக வெளியே வந்து புண்ணிய குளத்தில் மூழ்கி நீராடினோம். இரண்டும் நீங்கப்பெற்றோம். வெளியே வந்து தலை துவட்டி புது ஆடை அணிந்தவுடன் புது ஜென்மம் பெற்றது போல புத்துணர்வு பெற்றோம்.  வாருங்கள் இனி முக்திநாதரை சேவிப்போம்.

முன் மண்டபக் கதவின் ஒரு அருமையான சிற்பம்

முன் மண்டபத்தின் கதவில் அருமையான சிற்பங்கள் மற்றும் அருமையான மரவேலைப்பாடுகள் அமைந்துள்ளன. ஒரே பிரகாரம் சுற்றி வந்து முக்தி நாதரின் எதிரே நின்றோம்.
முக்தி நல்கும் ஸ்ரீமூர்த்தி


முக்தி நாராயணரின் திருமுக மண்டலம்

புத்தர் - நர நாராயணர்          

இராமானுஜர், விநாயகர், பத்மசம்பவர், கருடன்

பெரிய திருவடி
அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களில் சங்கு சக்கரம், பத்மம், கதை தாங்கி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார் முக்தி நாதர். அப்படியே நம்முடன் பேசுவது போல உள்ளது பெருமாளின் திருவழகு. பெருமாள் மற்றும் உபய நாச்சியார்களின் திருமேனிகள் செப்பு சுயம்பு திருமேனியாகும். அந்த ஆரவமுதை அப்படியே பருகினோம். கண்ணீர் மல்க அப்படியே நின்றோம்  நேரம் சென்றதே தெரியவில்லை. முதலில்
சிற்றஞ்சிறு காலே வந்துன்னை சேவித்து உன்
பொற்றாமறையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றமேய்துண்ணூம் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளமல் போகாது
இற்றைப்பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ்  பிறவிக்கும் உந்தன்னோடு
உற்றோமேயாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்  என்று சரணாகதி செய்தோம். கண் குளிர சேவித்தோம் மனம் குளிர நன்றி கூறினோம்.

ஒரு வகையில் பார்த்தால் முக்திநாதர் தரிசனம் மிகவும் துர்லபமானது, வானிலை, உடல் நலம், நிலசரிவுகள், விமானப்பயணம் என்று ஏதாவது ஒன்றில் பிரச்சினை ஏற்பட்டாலும் நாம் இங்கு வரமுடியாது, பெருமாளின் அருள் பூரணமாக இருந்தால் தான் நாம் இங்கு வரவே முடியும் அதற்கு அவருக்கு நன்றி செலுத்தினோம்.


விஷ்ணு சகஸ்ரநாமம் சேவிக்கின்றோம்

முன்பே கூறியது போல நேபாள நாட்டில் மஹா விஷ்ணுவிற்கும் புத்தருக்கும் இடையே  இவர்கள் வேறுபாடு காண்பதில்லை. முக்தி நாதர் நமக்கு பெருமாள், புத்தர்களுக்கு அவலோகிதேஸ்வரர், ஆதி சேஷன் குடைபிடித்து, பிரபையாகவும் விளங்க, வெள்ளி கிரீடம், காதுகளில் குண்டலங்கள், பட்டுப்பீதாம்பரம், முத்துமாலைகள் என்று அற்புதமான அலங்காரத்தில்  தாமரை  மலரில் பத்மாசனத்தில்  அமர்ந்த கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கும் முக்தி அளிக்கும் பெருமாளை திவ்யமாக  சேவிக்கின்றோம்.  நாம் உபய நாச்சியார்கள் என்று வணங்கும் தாயார்கள் இருவரும்  சாமரம் வீசும் பாணியில் நின்ற கோலத்தில் எழிலாக  சேவை சாதிக்கின்றனர். புத்தர்கள்  தாயார்களை டாகினிகள் என்று வணங்குகின்றனர். மேலும் புத்தர், நர நாராயணர்கள் (சிலர் லவ குசர்கள் என்கின்றனர்), இராமானுஜர், கணேசர், அஞ்சலி ஹஸ்தத்துடன் கருடன் ஆகிய மூர்த்திகளும் சேவை சாதிக்கின்றனர். பெருமாளுக்கும், உபய நாச்சியார்களுக்கும், கருடன், இராமனுஜர் ஆகியோருக்கு  திருமண் அழகு சேர்க்கின்றது. மேலும் பெரிய நரசிம்ம சாளக்கிராமமும் உள்ளது. புத்த சந்நியாசிநிகள் தீர்த்தப்பிரசாதம், சடாரி சாதிக்கின்றனர்.  பெருமாளின் திருமூக்கு சிறிது வித்தியாசமாக பட்டது, காரணம் பின்னால் தெரிய வந்தது முற்காலத்தில் நாம் கர்ப்பகிரகத்தின் உள்ளேயே சென்று  பெருமாளை ஆலிங்கனம் செய்ய முடியுமாம். 2004 முதல் அந்த வழக்கத்தை நிறுத்தி விட்டனராம். 

இங்கு வந்து சேவித்த அருளாளர்களில் திருமங்கையாழ்வாரையும் இராமனுஜரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். விசிஷ்டாத்வைத்தை நிலை நாட்டிய இராமானுஜர் கர்ப்பகிரகத்தில் எழுந்தருளியுள்ளார். மேலும் ஆண்டாள் மற்றும் மணவாள மாமுனிகளுடன்   பிரகாரத்தில் உள்ள யக்ஞ சாலையிலும் எழுந்தருளியுள்ளார்.     விமானம்  வாகனங்கள் என பல வசதிகள் மிக்க இந்த காலத்திலேயே சாளக்கிராமத்தை தரிசிக்க  நாம் பெரும் பிரயத்தனம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், இவர்கள்  எவ்வாறு  பல நூற்றாண்டுகளுக்கு முன்னால்  எப்படி இங்கு வந்து, பெருமாளை தரிசனம் செய்து, மங்களாசாசனமாக பாசுரங்களை இயற்றினார் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.  


யாக சாலையில் யாகம்

திருமங்கையாழ்வார்  சாளகிராமத்தை பத்துப் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். இவற்றில் கடைசி பாசுரம் தவிர மற்றவற்றில் எல்லாம், சாளக்கிராமம் அடை நெஞ்சே என்று சொல்லி முடிக்கிறார் ஆழ்வார். சாளக்கிராமத்தை அடைவது அத்தனைக் கடினமானது என்று மறைமுகமாக உணர்த்தினாலும், அந்த சிரமம் தெரியாமலிருக்க, இராம, கிருஷ்ண காலத்துச் சம்பவங்களைச் சொல்லி, ‘அந்தப் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் சாளக்கிராமத்தை அடைவாயாகஎன்று  நமக்கு அறிவுறுத்துகின்றார்.  நம்முடைய பயணச் சோர்வை நீக்க முயன்றிருக்கிறார் நம் கலியன்.  மேலும்  திருவூரகத்தானையும், குடந்தை உத்தமனாம் சார்ங்கபாணியையும், திருப்பேர்நகர் எம்பெருமானையும் குறிப்பிட்டு அந்தப் பெருமாள்களைப் போல பல பெருமாள்களைத் தரிசித்திருக்கிறீர்களே, அதேபோல இந்த ஸ்ரீமூர்த்திப் பெருமாளையும் தரிசிக்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்தாற் போலவும் பாசுரங்களை அமைத்திருக்கிறார் என்பது சிறப்பு

தாராரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலிசெய் தமிழ்மாலை
ஆரார் உலகத்து அறிவு உடையார் அமரர் நல்நாட்டு அரசு ஆளப்
பேராயிரமும்  ஓதுமின்கள் அன்றி இவையே பிதற்றுமினே  என்று ஆழ்வார் பாடியபடி பிரகாரத்தில் அமர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமத்தின் ஆயிரம் நாமங்களால் பெருமாளை போற்றினோம், ஆழ்வாரின் பாசுரங்களையும் சேவித்தோம் (பிதற்றினோம்). ஆழ்வார்களின் பாசுரங்களையும் சேவித்தோம்.  
யாக சாலையில் இராமனுஜர், ஆண்டாள், மணவாள மாமுனிகள்


சந்நிதிக்கு எதிரே யாக சாலை அதில் குழுவினர் சார்பாக யாகம் நடத்தினோம். இந்த யாக சாலையில் இராமனுஜர், ஆண்டாள், மணவாள மாமுனிகள் மூர்த்தங்கள் உள்ளன. சின்ன ஜீயர் சுவாமிகள் இந்த மூர்த்தங்களை இங்கு பிரதிஷ்டை செய்தாராம்..

மேலும் இரண்டு புத்தவிகாரங்களை நாம் முக்திநாத்தில் தரிசிக்கலாம். முதலாவது நரசிங்க கோம்பா. இந்த சன்னதி முக்திநாதர் சன்னதியை விட   சிறிது உயரத்தில் வளாகத்தின்  வடக்கு மூலையில் அமைந்துள்ளது. இந்த புத்தவிகாரத்தில் பத்மசம்பவர் தன்னைப்போலவே உருவாக்கிய சிலை அமைந்துள்ளது. அடுத்து நாம் தரிசிக்கும் புத்த விகாரத்தில் ஒரு ஜுவாலை எப்போதும் எரிந்து கொண்டிருக்கின்றது எனவே இது “ஜ்வாலாமாயி” என்றும் அழைக்கப்படுகின்றது.  இந்த புத்தவிகாரம் வளாகத்தின்  தெற்கு மூலையில் அமைந்துள்ளது  மெபர் லகாங் கோம்பா (Mebar Lakhang Gompa) என்றும் அழைக்கப்படுகின்றது



அணையாது எரிந்து கொண்டிருக்கும் ஜுவாலை( நீல நிறம்)

 இந்த முக்திநாத் தலத்தை பராமரிக்கும்  “லாமா  வாங்யால்”  புத்த பிக்குணிகள் இங்குதான் தங்களது புனித நூல்களை கற்கின்றனர். இங்கு தண்ணீரில் நீல நிறத்தில் எப்போதும் ஒரு ஜ்வாலை எரிந்து கொண்டிருக்கின்றது. ஜ்வாலையை தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தால்  அந்த ஜுவாலை எரியும் நீர் சேரும் “துர்கா  குண்டத்தை” தரிசிக்கலாம். இவ்வாறு நீர், நிலம், அக்னி, காற்று வாயு என்று பஞ்ச பூத சம்பந்தமும் பெற்றுள்ளது முக்திநாத் தலம்.  இவ்வாறு முக்திநாதர் சேவை  அருமையாக அமைந்தது பின்னர் இரு சக்கர வண்டிகள் மூலம் அனைவரும் கீழே கிராமத்தை வந்தடைந்தோம்

Sunday, May 24, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 2

முக்திநாத் யாத்திரை


ஸ்ரீமூர்த்தி

பக்தர்கள் அனுபவித்து ஆராதனம் / வழிபாடு செய்ய எம்பெருமான் சாளக்கிராம மூர்த்தியாக விளங்கி அருள்பாலித்து வரும் சாளக்கிராம திவ்ய தேசத்தின்

மூலவர் : ஸ்ரீமூர்த்தி - (முக்திநாத் / முக்தி நாராயணன்) (ஸ்வயம்பு மூர்த்தி) நின்ற திருக்கோலம், மேற்கே திருமுகமண்டலம்.

தாயார் : ஸ்ரீதேவி நாச்சியார்

தீர்த்தம் : ஸ்ரீசக்ர தீர்த்தம்

விமானம் : கனக விமானம்

பிரத்யக்ஷம் : ப்ரம்மா, ருத்ரர், கண்டகி

ஆழ்வார் பாடல்கள்:
 பெரியாழ்வார் - பாசுரங்கள், திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்.


அர்ச்சாமூர்த்திகளில் (விக்ரகம்) ஸான்னித்யம் ஏற்பட முதலில் பிரதிஷ்டை செய்யப்படவேண்டுவது மிகவும் அவசியம். ஆராதனம் செய்பவர்கள் ஆசார்யர்களிடம் இதற்கான தீக்ஷை பெறவேண்டும். தீக்ஷை பெற்றவர்கள்தான் அர்ச்சா மூர்த்தியை ஆராதனம் செய்யத் தகுதிபெற்றவர்கள். ஆனால் எம்பெருமானின் ஸான்னித்யமுள்ள சாளக்கிராமமூர்த்தியை ஆராதிக்க பிரதிஷ்டையோ, இதற்கான விசேஷ தீக்ஷையோ பெற வேண்டிய அவசியம் போன்ற கடினமான நியதிகள் கூறப்படவில்லை. ஆசார்ய அனுக்கிரகமும், மேலும் ஆசார்யன் மூலம் ஆராதன மந்திரங்களை உபதேசம் பெற்று, ஆராதனம் செய்யலாம்.

முக்திநாத் ஆலய நுழைவு வாயில்

சாளக்கிராம மூர்த்திகள், ஹிமாலயத்திலிருந்து (சாளக் கிராம சிகரம்) உற்பத்தியாகும் கண்டகி நதிப்படுகையில்  சக்ர தீர்த்தம்  என்ற புனிதமான இடத்தில் அதிக அளவில் கிடைக்கின்றன. இதன் அளவு சிறிய மிளகிலிருந்து பெரிய மாம்பழம் வரை பெரிதாகவும், அபூர்வமான சில சாளக்கிராம மூர்த்திகளில் ஸ்வர்ணரேகையும் இருக்கும். இதனால் அந்த நதி அங்கு ஹிரண்யவதி என்றும் கூறப்படுகிறது.நேபாளத்தில் உள்ள "மஸ்டாங்" என்னும் மாவட்டத்தில் சுமார் 5,000 மீட்டர் உயரத்தில் உள்ள "தாமோதர் பீடபூமி"யில் 60-க்கும் மேற்பட்ட பனிச்சிகரங்கள் உள்ளன. 

அன்னை தாட்சாயணியின் வலது கன்னம் துண்டு துண்டாக வீழ்ந்ததாயும், அப்படி வீழ்ந்த இடங்கள் பள்ளங்கள் ஆனதாயும், அந்தப் பள்ளங்களில் இந்தப்பனிச்சிகரங்களில் இருந்து உருகி ஓடிய நீர் வழிந்து ஏரிகளாய் மாறினதாயும் சொல்கிறார்கள். இந்த ஏரிகள்  "தாமோதர் குண்டங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. திபெத் நாட்டின் எல்லைக்குப் பக்கத்தில் இருக்கும் இந்தக் குண்டத்தில் இருந்து உற்பத்தி ஆகும் நதிகளில் ஒன்றுதான் கண்டகி நதி. இந்த நதியின் வேறு பெயர்கள் ஸம்ட கண்டகி, நாராயணி, காளி கண்டகி என்பது ஆகும். இதன் அருகில் தான் பிரசித்தி பெற்ற "சாளக்கிராம மலை"யும் அதன் அருகிலே உள்ள கிராமம் "சாளக்கிராமம்" எனவும் அழைக்கப்படுகிறது.

கண்டகி நதி

கண்டகி நதியைப் பற்றி , அங்கே உலவும் ஒரு செவி வழிக் கதை இது.வேசி குலப் பெண்ணான "கண்டகி" என்னும் அழகான பெண்ணிடம் ஒரு விசித்திரமான குணம் இருந்தது. அது என்ன வென்றால், தன்னை நாடி வரும் ஒவ்வொரு ஆணையும் தன் மணாளனாகவே பாவித்து, ஒரு தர்ம பத்தினியைப் போல் அவனிடம் நடந்து கொண்டு அவனுடைய எல்லாத் தேவைகளையும் முழு மனத்துடன் செய்து வந்தாள். இதைப் பார்த்த ஊரார் அவளை எள்ளி நகையாடினர். இருந்தாலும் அவள் தன் குணத்தில் இருந்து மாறவில்லை. ஒருநாள் ஒரு கட்டழகு வாலிபன் மாலைப் பொழுதில் அவளிடம் வந்து பொன்னும், மணியும் கொடுத்துவிட்டு அவளை ஏறிட்டுக் கூடப் பாராது சென்று விட்டான். வருந்திய கண்டகி செய்வதறியாதுதிகைக்கஅதே வாலிபன் அன்று நடுநிசியில் திரும்ப அவளிடம் வருகிறான்.உற்சாகத்துடன் அவனை உபசரித்த கண்டகி அன்றிரவு அவனைத் தன் பதியாக மனத்தால் வரித்து அவனுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய முற்பட்டாள். அப்போது அவன் உடல் வியர்வையால் நனைந்திருப்பது கண்டு நறுமணத்தைலம் தடவி அவனைக் குளிக்க ஆயத்தம் செய்ய யத்தனித்தவளுக்கு அவன் ஒரு குஷ்டரோகி எனத் தெரிய வருகிறது.

அதிர்ச்சி அடைந்தாலும் அவனைத் தன் பதியாக வரித்த காரணத்தால் வெறுக்காமல் அவனைத் தொட்டு வேண்டிய உதவிகள் செய்து அவனுக்கு வேண்டிய பணிவிடைகள் புரிந்தாள். உண்மை தெரிந்த அவள் வீட்டார் அவனை அப்போதே விலக்கச் சொல்ல மறுத்தாள் கண்டகி.

அன்றிரவை அவனுடன் கழிக்க, மறுநாள் பொழுது விடிகிறது. அவனை எழுப்புகிறாள் கண்டகி. என்ன பரிதாபம்! வாலிபன் உயிரோடு இல்லை. இதைக் கண்டு வருந்திய கண்டகி, அவன் தன் பதி என்று சொல்லி அவனுடைய இறுதிச் சடங்குக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டுப் பின் அந்நாளைய வழக்கப்படி தானும் அவனுடன் உடன்கட்டை ஏறுகிறாள். திகைத்த உறவினர் செய்வதறியாமல் விழிக்க சிதைக்குத் தீ மூட்டும் நேரம் அற்புதம் நிகழ்கிறது. இறந்த வாலிபன் உடல் மறைய அங்கே சங்கு, சக்ர, கதாபாணியான, ஸ்ரீமந்நாராயணன் கௌஸ்துப, வனமாலா விரதிஜனாக கோடி சூர்ய பிரகாசத்துடனும், மன்மத லாவண்யத்துடனும் பிரசன்ன வதனத்துடன் மஹா விஷ்ணு அங்கே சேவை சாதித்தார்.
புண்ணிய - பாவக் குளங்கள்

கண்டகி ஒவ்வோர் இரவிலும் ஒரு ஆணைத் தன் கணவனாக வரித்து வந்த போதிலும் அந்த ஆணுக்கு உண்மையான பத்தினியாக அவள் அனுஷ்டித்த பதிவிரதா தர்மத்தை உலகுக்கு எடுத்துக் காட்டவே இவ்வாறு நடந்ததாய் ஸ்ரீமந்நாராயணன் சொல்லிக் கண்டகிக்கு மூன்று வரங்கள் அளிப்பதாய்ச் சொல்கிறார். கண்டகி கேட்டதோ ஒரே ஒரு வரம் மட்டும் தான். அதுவும் என்ன? எப்போதும் ஸ்ரீமந்நாராயணன் பக்கத்திலேயே தான் இருக்க வேண்டும் என்பது தான் அது. அப்போது ஸ்ரீமந்நாராயணன் சொல்கிறார்" ஒரு பக்தனின் சாபத்தால் தான் மலையாக மாற வேண்டி இருப்பதால் மலையோடு சார்ந்த நதியாகக் கண்டகி எப்போதும் தன்னுடன் இருக்கலாம் என்று சொல்லுகிறார். சாபம் பெற்ற நாராயணன் சாளக்கிராம மலையாக மாறக் கண்டகி அதே பெயரோடு நதியாக ஓடுகிறாள். ஒரு மாலைபோல் மலையைச் சுற்றிக் கொண்டு ஓடுவதாய்ச் சொல்கிறார்கள்.

பெருமாள் சாளக்கிராமக் கல்லாக இருப்பதற்கான இன்னொரு கதை. சிவபெருமானுக்கும் ஜலந்திரனுக்கும் போர் நடந்து கொண்டிருந்த சமயம், மகாவிஷ்ணுவே ஜலந்திரன்போல் வடிவம் கொண்டு அவன் மனைவி மஹா திவிரதை  பிருந்தையிடம் வந்து, “”தேவி, போரில் நான் வென்று விட்டேன்”என்றார்.    மகிழ்ச்சி கொண்ட பிருந்தை  அவருக்கு பாதபூஜை செய்து நெற்றியில் திலகமிட்டாள். பிருந்தை திலகமிட்டதும், மகாவிஷ்ணுவாகக் காட்சி கொடுத்தார் பகவான். அதைக் கண்ட பிருந்தை,
”பிற ஆடவரைத் தொடும்படி நேரிட்டதே” என்று துடிதுடித்து, ”கல்மனம் கொண்ட நீர், உருவமற்ற சாளக்கிராமக் கல்லாக மாறி கண்டகி நதியில் கிடக்கக் கடவீர்” என்று சாபமிட்டாள்.



“”பிருந்தை,  உன் சாபம் பலிக்கும். ஆனால் நீ எனக்கு அன்புடன் பாதபூஜை செய்தாய். எனவே நான் சாளக்கிராமக் கல்லில் உறைந்திருக்கும் போது, நீ துளசியாக மாறி எனக்கு மகிழ்ச்சியூட்டுவாய். அப்போது உன்னை எல்லாரும் போற்றுவர்” என்றார்.


புனித சாளக்கிராமங்கள்

சாளக்கிராம மலையைப் பூச்சிகள் துளைத்தெடுத்ததால் சாளக்கிராமங்கள் உருவாகி நதியிலும், நதிக்கரையிலும் கிடைப்பதாய்ச் சொல்கிறார்கள். இமயமலையின் இந்தப் பகுதியில் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்னால் சமுத்திரம் இருந்ததாயும், அது வற்றி போய்க் கடல்வாழ் பூச்சிகளின் ஓடாக இருக்கலாம் எனவும் சொல்லப் படுகிறது. சாளக்கிராமம் மூன்று வகைப்படுகிறது.

முதல் வகை: உடையாமல், துவாரம் இல்லாமல், கூழாங்கல் போல் இருக்கும். குளிர்ச்சியாக இருக்கும்.

2-ம்வகை: சரி பாதி உடைந்து உள்ளே சக்கரம் போன்ற அமைப்புடன் கூடியது

3-ம் வகை:துவாரம், சக்கரம் இவற்றுடன் ரேகைகளும் தென்படும்.

எந்தச் சாளக்கிராமமாய் இருந்தாலும் தினமும் பூஜை செய்ய வேண்டும். தினமும் சாளக்கிராம ஆராதனை செய்தால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும்.

இச்சாளக்கிராமங்களை விலை கொடுத்து வாங்குவதை விட வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்து போனாலும் அதில் சக்கர ரேகைகள் இருந்ததால் சிறப்பாகும். சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் . சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். 12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்வியதேசத்தகுதியில் வைத்து பாவிக்க வேண்டுமென்பர். 12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குல தனச் சொத்தாக கருதுவர். சாளக்கிராமத்தை இருமுறை வழிபடுதல் வேண்டும். சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன. வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.

நீலநிறம் - செல்வத்தையும், சுகத்தையும் தரும்
பச்சை - பலம், வலிமையைத் தரும்

கருப்பு - புகழ், பெருமை சேரும்

புகை நிறம் - துக்கம், தரித்திரம்.

சாபத்தினால் மலையாக மாறிய விஷ்ணுவை, மஹாலக்ஷ்மித்தாயார் கண்டகி நதியாக ஓடி அறுத்துத் தள்ளுவதால் சாளக்கிராமங்கள் உருவாகின்றன. எப்போது மலை முழுவதுமாக அறுக்கப்படுகின்றதோ அன்று மஹா விஷ்ணுவின் சாப விமோசனம் என்பது ஒரு ஐதீகம்.

இது ஹிந்துக்களைத் தவிர பௌத்த மதத்தவர்களுக்கும் புனித க்ஷேத்ரமாக விளங்குகிறது. பௌத்தர்கள் இதை திபெத் மொழியில்
 சம்மிங்க்யாஸ்தா - மோட்சமளிக்கும் பள்ளத்தாக்கு என்று அழைக்கிறார்கள். இங்கு பெருமாளுக்கு பூஜை செய்பவர்கள் புத்த சந்நியாசினிகள் ஆவர்.
ஜோம்சமில் கண்டகி நதி தீரத்தில் சாளக்கிராமம் தேடுகின்றோம்

முக்திநாத் செல்லும் பக்தர்கள் கண்டகிநதி தரிசனம் செய்து முக்திநாத் கோயில், 108  தீர்த்தத்தில் மற்றும் பாவ புண்ணிய  சீதள தீர்த்தங்களில் நடுங்கும் குளிரில் நீராடி, பின்னர்  சாளக்கிராம மூர்த்தியை  தரிசனம் செய்கின்றனர்.  பின்னர் மலையடிவாரத்தில் உள்ள புத்தர், ஜ்வாலாமுகி  தரிசனம் செய்து பின்னர் ஜீப் மூலம்     ஜோம்சம் அடைந்து ஹோட்லில் தங்குகின்றனர்.

மறுநாள் காலை ஜோம்சமிலிருந்து விமானம் மூலம் போக்ரா வந்து அங்குள்ள டேவிஸ் பால்ஸ், லேக்வராகி, பிந்துவாசினி மற்றும் வராஹி கோயில் தரிசனம் செய்து போக்ராவில் தங்கி மறு நாள் காலை போக்ராவிலிருந்து பேருந்து மூலம் காத்மாண்டு அடைகின்றனர்.

நேபாளத்தின் தட்பவெப்பமும், சூழ்நிலைகளும் திடீரென்று மாறக்கூடியது. திட்டமிட்டது போல எதுவுமே நடக்க வாய்ப்புகள் குறைவு. 2012ல் அடியோங்களின் முக்திநாத் யாத்திரை எவ்வாறு அமைந்தது என்பதை இனி வரும் பதிவுகளில் காணலாம் அன்பர்களே.