Showing posts with label சபரிமலை. Show all posts
Showing posts with label சபரிமலை. Show all posts

Thursday, November 23, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா -4

மணிகண்டன் அவதாரம் 



இப்பதிவுகளையும்  காணலாமே         5   6   7   8   9   10  11   12   13   14   15   16   17   18   19   20   21





ஐயப்ப சுவாமி 


பாண்ட்யேச வம்ச திலகம் கேரளே கேளி விக்ரஹம் |

ஆர்த்த த்ராண பரம் தேவம் சாஸ்தாரம்   ப்ரணமாம்யஹம் ||

பொருள்: பாண்டிய வம்சத்தில் வந்த தலைவரும் கேரள நாட்டில் திவ்ய ரூபத்துடன் திருவிளையாடல் புரிந்தவரும் எளியோர்க்கு உதவும் மேலான தெய்வமும் ஆகிய ஐயப்பனே உன்னை நான் வணங்குகின்றேன்  - . என்பது  ஐயப்ப நமஸ்கார  ஸ்தோத்திரத்தில் ஒரு ஸ்லோகம். 

அங்கற்கண்ணி அம்மையும் ஆலவாய் சொக்கநாதப்பெருமானும் அரசாண்ட பாண்டிய வம்சத்தின் ஒரு கிளையினர் பந்தள தேசத்தை ஆண்டு வந்தனர். அப்பந்தள ராஜனுக்கு பளிஞனும்  பிறந்து வளர்ந்து  ராஜசேகரன் என்னும் பெயருடன் அரசாண்டு வந்தான்.  ராஜசேகர மன்னன் ஒர் சிவபக்தன்.  மகாராணி கோப்பெருந்தேவி விஷ்ணு பக்தை.   விவாகமாகி பல ஆண்டுகள் கடந்தும் தங்களுக்கென ஒரு வாரிசு இல்லையே என்ற பெரும் கவலையோடு பிரார்த்தனை செய்து மக்கட்பேறுக்காக "மகேசன்" பூஜை செய்து வரலாயினான். 
பாண்டி நாட்டில்தான தர்மங்கள் செய்து, தர்மசீலனாய் வாழ்ந்து சர்வேஸ்வரனையே வழிபட்டு வந்த விஜயன் என்னும் பிராமணன்; ஐயனின் அருளினால் பந்தள தேசத்தில்  ராஜசேகரன் என்னும் பெயருடன் பிறந்து அரசாண்டு வந்தான் என கூறுவாருமுளர்.
மன்னனின் மன வேதனைகளையும், அவனது தயாள குணத்தையும் பலவீனமாக உணர்ந்து கொண்ட அந்நாட்டு மந்திரி அதனைச் சாதகமாக வைத்து நாட்டில் பல குழப்பங்களை ஏற்படுத்தி இராச்சியத்தை தானே கைப்பற்றும் நோக்கோடு பல சூட்சிகள் செய்யலானான். 
வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய, இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே? இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும் எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.
மஹிஷாசுரனின் தோற்றமும் மறைவும்

தனு என்ற அரசனுக்கு ரம்பன், கரம்பன் என்ற  இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார் அக்னி பகவான்.  அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான். அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன் பிறப்பான் என்று கூறி மறைந்தார்.


திருமயிலை கற்பகாம்பாள் மஹிஷாசுர மர்த்தினி அலங்காரம் 
உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது ஒரு காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும்காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய்  பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனான ரம்பனுக்கு வாரிசாக மகிஷாசுரன் என்னும் பெயருடன் பிறந்தான்.
மகிஷாசுரன் கடும் தவம் செய்து பிரமதேவனிடம் பல வரங்கள் பெற்றான்.  தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தான். .  மகிஷாசுரன் தனக்கு ஓர் பெண்ணால் அன்றி மரணம் ஒரு போதும் ஏற்படக்கூடாது என்ற வரத்தினையும்; சர்வலோகங்களையும் அரசாளும் வரத்தினையும் பெற்றிருந்தான். ஒரு பெண்ணால் தன்னை வெல்ல முடியாது என்று அகம்பாவம் கொண்டிருந்தான் மகிஷன்.
அறிவு வேண்டாம், அறிவு நூல்கள் வேண்டாம், அறிவுக் கலைகள் வேண்டாம், இசை வேண்டாம். சிற்பம், சித்திரம், கோயில், கோபுரம், ஒன்றும் வேண்டாம். எல்லாவற்றையும் அழித்துப் போடுங்கள் என்று மகிஷாசுரன் கட்டளையிட்டான். தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் எல்லாரும் நடுநடுங்கினார்கள். அவர்களில் பலர் மகிஷாசுரனுக்கு அடிபணிந்து அவனுடைய ஆட்சியை ஒப்புக்கொண்டார்கள். இதனால் மகிஷாசுரனுடைய அகந்தையும், மூர்க்கத்தனமும் அதிகமாயின. மௌடீக மோட்டுத்தனத்தோடு, அகந்தையும் மூர்க்கத்தனமும் சேர்ந்து விட்டால் கேட்க வேண்டுமா? மகிஷாசுரனுடைய கொடுமையைப் பொறுக்க முடியாமல் மூன்று உலகங்களிலும் மக்கள் ஓலமிட்டார்கள்.
மகிஷாசுரனிடம்  தேவலோகத்தையும், சிம்மாசனத்தையும் பறிகொடுத்த  இந்திரன் முதலான தேவர்கள்; மும்மூர்த்திகளிடம் சென்று வணங்கி மகிஷாசுரனால் தமக்கு ஏற்பட்டுள்ள துயரில் இருந்து தம்மைக் காத்தருள வேண்டுமென இறைஞ்சி  நின்றனர்.
தேவர்களை காப்பாற்ற எண்ணிய மும்மூர்த்திகளும்  மகிஷாசுரனை அழிக்க திட்டம் வகுத்தனர். மகிஷாசுரன் பிரமதேவரிடம் பெற்ற வரங்களினால் அவனை ஒரு பெண்ணால்  மட்டுமே கொல்ல முடியும் என்பதனை உணர்ந்து; சிவன், விஷ்ணு,  பிரமா ஆகிய மும்மூர்த்திகளும் மற்ற தேவர்கள் அனைவரும்  தங்கள் சக்திகளினால் சகல அம்சங்களும் பொருந்திய ஒரு "சங்கார மூர்த்தியை" சிருஷ்டித்தார்கள்.
அந்த சங்கார மூர்த்திக்கு சிவன் சக்தி கொடுக்க அதுவே முகமாகவும், பிரம்மாவின் சக்தி உடலாகவும், திருமால் கொடுத்த சக்தி பதினெட்டு கரங்களாகவும், எமதர்மனின் சக்தி கூந்தல், அக்னி பகவானின் சக்தி கண், மன்மதனின் சக்தி புருவம், குபேரனின் சக்தி மூக்கு, முருகனின் சக்தி உதடு, சந்திரனின் சக்தி தனங்கள், இந்திரனின் சக்தி இடை, வருணனின் சக்தி கால் என அனைத்து சக்திகளும் இணைந்த சக்தியாக "துர்கா தேவி"  ஆவிர்பவித்தாள். 
மும்மூர்த்திகளின் ஆணைப்படி துர்காதேவி மகிஷாசுரனுடன் போர்புரிந்து அவனை அழித்ததுடன் தேவர்கள் இழந்த தேவலோக சிம்மாசனத்தையும் பெற்றுக் கொடுத்து காத்தருளினாள். மகிஷாசுரனுடன் போரிட்டு அவனை அழித்ததால்  துர்க்காதேவி  "மகிஷாசுரமர்த்தினி" என்று  பெயர் பெற்றாள்.

மகிஷியின் வரலாறு : 
மகிஷாசுரன் வதத்திற்கு பிறகு  கரம்பன் மகளான மகிஷி தந்தையின் தூண்டுதலினால்;  தன் சகோதரனான  (தந்தையின் சகோதரன் மகனான) மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் எனக் கருதி அவர்களை பழிவாங்க முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற்றுக்கொள்ள அவள் பிரம்மாவை நோக்கி நெடுநாள் கடும் தவம் புரிந்தாள்.   
மகிஷியின் கடும் தவம் கண்டு மகிழ்ந்த பிரம்ம தேவன், அவள் முன் தோன்றி, உன் கடும் தவம் கண்டு மகிழ்ந்தோம்.  வேண்டும் வரம் கேள் என்றார். ஹரியும், ஹரனும் இணைந்து உருவாக்கி பூமியில் 12 ஆண்டுகளாவது வாழ்ந்திருக்கும் பிரம்மச்சாரியான குழந்தையால் மட்டும் அன்றி வேறு எவராலும் தனக்கு மரணம் நேரிடக்கூடாது  என்றும், தான் இறந்த பின்பு தன் உடல் மீது சூரிய வெளிச்சம் பட்டால் என் உடல் வளர வேண்டும் என்னும் வரத்தையும் மகிஷி  கேட்டுப்  பெற்றுக் கொண்டாள்.  
இரண்டு புருஷ மூர்த்திகளால் ஒரு புத்திரன் பிறக்கமாட்டான் என்று எண்ணிய மகிஷி; தான் அழியாவரம் பெற்றுவிட்டதாக கர்வம் கொண்டு  தேவலோக சிம்மாசனத்தை கைப்பற்றியதோடு தேவர்களையும், பூலோகத்தில் முனிவர்களையும், மக்களையும் கொடுமைப்படுத்தி வந்தாள். மகிஷியின் கொடுமையை தாங்க இயலாத தேவர்கள் பரமேஸ்வரனிடம் சென்று  முறையிட்டு தம்மை காப்பாற்ற வேண்டினர் 
யார் இந்த மஹிஷி ?: முற்பிறப்பில் தனது கணவனான தத்தாத்ரேய ரிஷியின் சாபத்தால் அசுர குலத்தில்  பிறந்து வாழ்ந்து வந்தாள். முற்பிறப்பில் அவர்கள் கணவன் மனைவியாக இருந்த போது தத்தாத்ரேய ரிஷிக்கும் அவன் மனையியான லீலாவதிக்கும் இடையில் அவர்களின் பக்தியின் சக்தியை கூறுவதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது லீலாவதி ஆணவ மேலீட்டினால் "நீ மகரிஷி அல்ல மகிஷி" என பழித்தாள். மகரிஷிக்கு கோபம் பொங்கவே  மெளடீகமும், பிடிவாதம் கொண்ட எருமைபோல் இருக்கிறாயே "நீ  அசுரகுலத்தில் மகிஷியாகக் பிறக்கக் கடவது" எனச் சபித்தார். இதைக்கேட்ட லீலாவதி  நீ என்னை சபித்துவிட்டாயா? எனக்கூறி பதிலுக்கு லீலாவதியும் "நீயும் சுந்தரமஹிஷமாக அசுர குலத்தில் பிறந்து எனக்கு கணவனாகக் கடவது" எனச் சபித்தாள். இருவருடைய சாபங்களும் பலித்தன. 

 (விந்திய மலைத்தொடரின் அடிவாரத்தில் காலவன் என்னும் முனிவரும் அவரது மகள் லீலாவதியும், சீடனாகிய தத்தாத்ரேயன் என்பவனும் வாழ்ந்து வந்தனர். தத்தாத்ரேயனிடம் விருப்பம் கொண்ட லீலாவதி அவனிடம் காதல் வயபட்டாள். தன்னை மனைவியாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். லௌகீக வாழ்க்கையில் ஆர்வம் காட்டாத தத்தாத்ரேயன் அவளது வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கவில்லை. 
ஒருநாள் தத்தாத்ரேயர் தியானத்தில் ஆழ்ந்திருந்தபோது அவனை நோக்கி, "தாங்கள் என்னைப் "பட்ட மஹஷி" (மனைவி) ஆக்கவேண்டும்" என லீலா வேண்டினாள். . அந்நேரம் கோபம்கொண்ட தத்தாத்ரேயன், நீ மஹிஷியாகவே (எருமை) போ என சபித்தானாம். அவ்வாறாக அவள் கரம்பன் என்னும் அசுரனின் மகளாக எருமைத் தலையோடு பூமியில் பிறந்தாள் என கூறுவாருமுளர்.)
மணிகண்டன் அவதாரம்:

கைலாசவாசன் தேவர்களின் குறை தீர்க்க எண்ணி விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ-வைஷ்ணவ ஜோதியான  ஐயனாரிடம் சென்று மகிஷியை மர்த்தனம் செய்து தேவர்களைக் காப்பாற்றவும், பந்தள மன்னனின் பிள்ளைக் கலி தீரக்கவும், சபரிக்கு அனுக்கிரகம் செய்வதற்காகவும்  பாண்டிய நாட்டின்  ராஜசேகர  மன்னனுக்கு மகனாக அவதரிக்கும் பாக்கியம் தங்களுக்கு கிடைத்துள்ளது என அனுக்கிரகித்து; பூலோகத்தில் உனது அவதார நோக்கம் நிறைவுற இதோ இந்த "மணி" உனது கழுத்திலே "ரட்சா பந்தனமாக இருக்கட்டும்" என்று கூறி ஒரு மணி மாலையை அணிந்தார். அதன் பின் ஐயப்பனை  ஒரு குழந்தையாக்கி பம்பா நதிக்கரையை அடைந்தார். அங்கு அவர் ஓர் ரிஷிபோல் ரூபமெடுத்து சாஸ்தாவாகிய குழந்தையுடன் வேட்டைக்கு வந்த தனது பக்தனான ராஜசேகரனின் வரவை எதிர்பார்த்து ஒரு மரத்தடியில் காத்திருந்தார். 
  
மணிகண்டன் அவதாரம் 
வனத்தில் வேட்டைக்கு வந்த பந்தள தேசத்து மன்ன பம்பா நதிக்கரை பக்கம் வந்தபோது ஒரு பச்சைக் குழந்தையின் அழுகுரல் கேட்டது.  குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மன்னன். என்ன ஆச்சரியம் கோடி சூரியனின் பிரகாசத்துடன் ஒரு ஆண் குழந்தை கழுத்தில் மணியுடன் அழுது கொண்டிருந்தது. குழந்தை அழகோ, அழகு!!! ஒரு பூவே பூத்து வந்தது போல மன்னனைப் பார்த்ததும் சிரித்தது. மன்னன் கையில் எடுத்தான் அந்தக் குழந்தயை, மார்போடு அள்ளி அணைத்தான், சுற்றும், முற்றும் பார்த்தான்,  யாரையும் காணவில்லை.
அப்போது அங்கே தோன்றினார் ஒரு வேதியர். குழந்தையையும், மன்னனையும் பார்த்தார்.  "மன்னா, குழந்தை இல்லாத உன் பிள்ளைக் கலி தீர்க்க வந்த இந்தப் பாலகனை நீ வளர்த்து வா! இவனால் உன் ராஜ வம்சமே பெருமை அடையும். இவனின் பெருமையை நீயும் பின்னால் உணர்வாய் என்று கூறி மறைந்தார்.
கழுத்தில் மணி இருந்ததால் "மணிகண்டன்" என்னும் பெயர் சூட்டினார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மணிகண்டன் வளர்ந்து வந்தான்.  மணிகண்டன் வந்த ஆண்டுகளுக்குப்பிறகு.  இராணி சூல் கொண்டாள். உரிய காலத்தில் அவளுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. அப்பிள்ளைக்கு இராஜராஜன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். 
ஐயப்பனை குருகுலத்தில் சேர்க்க மன்னன் முடிவு செய்தான். தெய்வக்குழந்தையான அவன் குறுகிய காலத்திலேயே நான்கு வேதம், ஆறு சாஸ்த்திரம், 64 கலைகள் ஆகிய அனைத்தையும் கற்று தேர்ந்தான். குருகுல வாசம் முடிந்தபின் குரு தட்சணையாக பிறவியிலேயே ஊமையாக குருகுலத்தில் இருந்த குருவின் மகனான கண்ணனை பேச வைக்குமாறு குரு வேண்டினார்.  மணிகண்டனும் குருவின் மகனை  பேச வைத்தான். மணிகண்டனின் அபூர்வ சக்திகளையும் செயல்களையும் கண்ட குரு அவரை தாங்கள் யார்  என்பதனை அறிய விரும்புவதாக கூறினார். குருவுக்கு உண்மையை மறைக்க விரும்பாத மணிகண்டன் தான் யார் என்பனை கூறி அதனை இரகசியமாக வைத்திருக்க வேண்டினார். அத்துடன் குருதட்சிணையாக ஆண்டு தோறும் மகர சங்கராந்தி தினத்தில் ஜோதி சொரூபனாக காட்சி தருவதாக கூறினான்.
மணிகண்டன் திறமைகளைக் கண்டு  பொறாமையும், வெறுப்பும் கொண்ட மந்திரியார்; மணிகண்டன்  யார் என்பதை உணராது;  அவர் இராஜாவானால் தனக்குள்ள எல்லாச் செல்வாக்கும், வசதிகளும் பறிபோய்விடும் என எண்ணி மணிகண்டனை கொன்று விட தீர்மானித்து பலவழிகளாலும் முயற்சிகள் செய்தான். உணவில் நஞ்சூட்டச் செய்தும், நஞ்சு பூசப்பெற்ற அம்புகளை ஏவச்செய்தும், பலரை ஏவிவிட்டு தாக்கியும் அவரைக் கொல்ல எடுத்த எல்லா முயற்சிகளும்  அவரின் தெய்வ சக்தியாலும், இறைவனின் அருளிளாலும் தோல்வியில் முடிந்தது.
இதற்கிடையில் மணிகண்டன் பந்தள தேசத்தில் கொள்ளையிட துர்க்கிஸ்தானிலிருந்து படை வீரர்களோடு வந்த கடற் கொள்ளைக்காரனான வாபர் என்ற  கொள்ளைக்காரனை தனது அன்பு வார்த்தைகளினால் அடிபணியச் செய்து அவனைத் தனது நண்பனாக்கினார்.  அதன் பின்னர் பந்தள நாட்டை ஆக்கிரமிக்க வந்த உதயனையும் அவனது தம்பிமாரான உக்கிர சேனன், பத்திர சேனன் ஆகியோரையும், படைகளையும் வாபரின்  உதவியுடன் அழித்து. பந்தள நாட்டை பேராபத்தில் இருந்து காப்பாற்றினார்.
மணிகண்ட குமாரனின் வரவால் நாட்டில் எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகர மன்னன், மணிகண்ட குமாரனுக்கு "பட்டாபிஷேகம்" செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தார். இதனால் வேதனை அடைந்த மந்திரி அரசனிடம் சென்று அதனைத் தடுப்பதற்காக பல காரணங்களை முன்வைத்து பட்டாபிஷேகத்தை நிறுத்த முயற்சித்தான்.

இதற்கிடையில்; இறை அருளால் மஹிஷிக்கு தேவலோக வாழ்க்கையில் வெறுப்பேற்பட்டதனால், லௌகீக வாழ்கையில் நாட்டம் ஏற்பட்டு; முற்பிறப்பில் தனது கணவனாக இருந்த ததாத்திரேயன் தனது சாபத்தினால் அசுர குலத்தில் பிறந்து சுந்தரமஹிஷன் என்ற பெயருடன் பூலோகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதை அறிந்து; பூலோகத்திற்கு வந்து சுந்தரமஹிஷனை  விவாகம் செய்து லௌகீக வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தாள்.
மந்திரியார்  மகாராணியாரை அணுகி; இந்த நாட்டை அரசாளும் உரிமை அரசபரம்பரையில் வந்த ராசராசனுக்கே உண்டு என்றும், காட்டில் கண்டெடுத்த மணிகண்டன் முடிசூடினால் மகாராணியாரின் சொந்த மகனான ராஜராஜனுக்கு அரசாளும் வாய்ப்பு கிடையாமலேயே போகும் என்றும் ராஜ பரம்பரையில் வந்த ராஜ ராஜனை யுவராஜன் ஆக்குவதே ராஜ நீதி என்றும் பல துர்ப்போதனை செய்து  கோபெருந்தேவியின் மனத்தை மாற்றினான். 

மந்திரியின் துர்ப்போதனையால் மனம் மாறிய இராணி அவன் கூறியபடி 
தீராத தலை வலியால் துடிப்பதுபோல் நாடகமாடினாள். தலைவலிக்கு மருந்தாக புலிப்பால் கொண்டு வரவேண்டும் எனச் சொல்லுமாறு மந்திரியார் அரண்மனை வைத்தியரை கூறவைத்து, தந்திரமாக மணிகண்டனை புலிகள் நிறைந்த காட்டிற்கு அனுப்பி கொல்ல நினைத்தான்.
மணிகண்டனும் தனது அவதார நோக்கத்தினை உணர்ந்து அவை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டதால்; புலிப்பால் கொண்டுவர சம்மதித்து காட்டிற்கு செல்ல ஆயத்தமானார். மன்னன் மனம் கலங்கியது. இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாய் உள்மனம் கூறுகிறது. ஆனால் ராணியோ தலைவலியில் துடிக்கிறாள். ஆகவே மன்னன் இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவிக்கின்றான். மனம் கலங்கிய மன்னனையும் மணிகண்டன் ஒத்துக் கொள்ள வைக்கிறான்.
அரை மனதாய்ச் சம்மதித்த மன்னன், மனம் கேளாமல் காட்டில் உணவு கிடைக்காமல் தன் அருமைக் குமாரன் தவிப்பானே என எண்ணி; மணிகண்டன் தனது குலதெய்வமான சிவனைப் பூஜை செய்வதற்காக; ஒரு துணியின் ஒரு பக்கத்தில் மூன்று கண்ணுள்ள தேங்காயும், பூசைக்குரிய பொருட்களும்; மற்றைய பக்கத்தில்; மணிகண்டன் பாதையில் உண்பதற்கான ஆகாரப் பொருட்களும் வைத்து இரண்டு முடிச்சுகளும் தலையில் இருக்கக் கூடியதாக ஒன்றாக இணைத்து; பூஜைப் பொருட்கள் உள்ள முடிச்சு முன்பக்கம் இருக்கக் கூடியாக, "இருமுடிபோல்" ஐயப்பனின் தலைமீது வைத்து வழியனுப்பி வைத்தான்.
அரண்மனையை விட்டுக் கிளம்பிய மணிகண்டன் காட்டை வந்தடைகிறான். அங்கே ஏற்கெனவே மும்மூர்த்திகள் கட்டளைப்படி வந்து கூடிய தேவர்கள், முனிவர்கள் அனைவரும் பொன்னம்பல மேட்டில் பதினெட்டுப் படிகளுடன் கூடிய ஒரு சிம்மாசனத்தில்  மணிகண்டனை  அமர்த்தி, அவரை போற்றித் துதித்து மஹிஷியினால் ஏற்பட்ட துயரங்களை எல்லாம் எடுத்து உரைக்கின்றார்கள்.
மஹிஷியின் வரலாறும் தற்சமயம் மனிதனாய் வந்த மணிகண்டனுக்குச் சொல்லப்படுகின்றது. தன்னுடைய அவதார நோக்கம் புரிந்து கொண்ட ஐயன், மஹிஷியோடு போர் புரியச் செல்கின்றார். மஹிஷியோடு போர் புரிந்த ஐயன், அவளை அப்படியே தூக்கி எறிகிறார். அவர் எறிந்த வேகத்தில், மஹிஷி பந்தள நாட்டுக் காட்டில் அலசா நதியில் (தற்சமயம் அழுதா நதி எனச் சொல்லப் படுகிறது) வந்து விழுந்தாள். அவள் எழுந்தால் ஆபத்து என அவள் எழுவதற்குள் மணிகண்டன் அவள் உடலில் ஏறி நின்று நர்த்தனம் ஆடுகின்றார். அவளுடைய பலமும், அகங்காரமும் போய், அவளின் உயிரானது உள்ளும், புறமுமாகப் போய்ப் போய் வருகின்றது.
மகேசன் புத்திரனின் திருவடி பட்டதுமே அவளுக்கு மெய்ஞ்ஞானமும் உதிக்கின்றது. தன்னுடைய முற்பிறவி, தான் செய்த தவறுகள், எல்லாம் நினைவுக்கு வருகின்றது. அவளின் உடலில் இருந்து உயிரானது ஒளிமயமான பெண் வடிவெடுத்து  ஐயன் திருப்பாதங்களில் வீழ்ந்து தன்னை ஏற்று ரட்சிக்குமாறு வேண்டிக் கொள்கிறாள்.
அப்போது ஐயன்;  என்னுடைய அவதார நோக்கமே மகிஷி சம்ஹாரம் தான். இந்தப் பிறவியில் என்னுடைய தலையாய கடமை இன்னொன்று இருக்கிறது. என் தாய்க்கு நான் கொடுத்த வாக்குறுதி, புலிப்பால் கொண்டு வருகிறேன் என. அதை நிறைவேற்ற வேண்டும், தவிர, இப்பிறவியில் எனக்குத் திருமணமும் இல்லை, என்னால் உயிர் பெற்ற நீ எனக்குச் சகோதரி முறையாவாய், நீ எப்போதும் மாளிகைபுறத்தம்மன் (மஞ்ச மாதா) என்ற பெயருடன் என் பக்தர்களுக்கு அருள்புரிவாயாக"என்று கூறினார் . எந்த வருஷம் என்னைக் காண வரும் பக்தர்களில், கன்னியாக வரும் பக்தர் இல்லையோ அப்போது நான் உன்னை மணந்து கொள்ளுவேன்!" என்று கூறினார்.
மகிஷியின் கொடுமைகள் நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து பூஜித்தனர். பின் யாவரும் புலிகளாக மாறி ஐயனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பந்தளம் செல்ல ஆயத்தமாகினர்.


வன் புலி வாகனன் ஐயப்பன் 

புலியாக மாறிய இந்திரன் மீது மணிகண்டன் அமர்ந்து பந்தளம் நோக்கிச் செல்லும் போது வழியில் உள்ள ஒரு மலையில்; சாபத்தால் கிழரூபம் அடைந்த "சபரி" என்ற  வித்யாதர ஸ்திரீ தவம் செய்து கொண்டிருந்தாள். கடும்புலியின் சிம்மத்தின்மீது வருகின்ற மணிகண்டனை அவள் உபசரிக்கவே அவளையும், அவள் சாபத்தையும் அறிந்த ஐயனும் அவளுடைய சாபத்தை நீக்கி தேவலோகம் செல்லும்படி அருளினார்.
தன் சாபம் எந்த மலையில் நிவர்த்தியாயிற்றோ அந்த மலை (சபரி) தன் பெயரால் வழங்க வேண்டும் என்றும் அம்மலையை அடையும் மானிடர்கள் பிறவி என்னும் சாபத்திலிருந்து நீங்க வேண்டும் என்று பிரார்த்தித்து, பதினெட்டு பிரதட்ஷனை நமஸ்காரங்கள் செய்தாள்.
மணிகண்டனும் வித்யாதர மங்கை தன்னைப் பதினெட்டு சித்திகளையும் பதினெட்டு படிகளாக அமைத்து கோயில் கொள்ளுவதாகவும், ஒவ்வொரு வருஷமும்; தன்னைத் தரிசிக்க வருபவர்கள் ஒவ்வொரு சித்தியையும் அடைந்து பதினெட்டு வருஷங்கள் தரிசித்தவர் சித்த புருஷர்களான முமூச்சுகளாவார்கள் என்றும் அதற்காகச் செய்ய வேண்டிய தவத்தை தானே அங்கு செய்வதாயும் வாக்களித்து பந்தள தேசத்திற்குப் புலிக்கூட்டத்துடன் வந்து சேர்ந்தார்.
புலிக்கூட்டம் ஒன்று பந்தள அரண்மனை நோக்கி வருவதையும் பெரிய புலி ஒன்றின்  மீது மணிகண்டன் அமர்ந்திருப்பதையும் கண்டு மக்கள் அதிசயமும், பீதியும் அடைந்தனர். மணிகண்டனை யாரென்று அறிந்த பந்தள தேசத்து மந்திரியார் தன்னுடைய குற்றங்களை மன்னிக்கும்படி வேண்டினான்.   
மணிகண்டனும், நீங்கள் எவரும் ஒரு குற்றமும் செய்யவில்லை என்றும்; எல்லாம் லீலைகள்படி நடந்துள்ளன. நான் பூமியில்  எதற்காக அவதரித்தேனோ, அந்த வேலை முடிந்துவிட்டது. கலியுகத்தில் அதர்மம் தலை தூக்கியுள்ள இந்த வேளையில் இறைவனின் ஆணைப்படி தர்மத்தை நிலைநாட்ட தர்மதாஸ்தாவாக தவம் செய்யப் புறப்படும் காலம் நெருங்கி விட்டது எனக் கூறினார்.   
இதைக்கேட்டு மனமுடைந்த மன்னனும், மகாராணியாரும் தங்கள் பட்டாபிஷேகம் நடைபெறும்போது அணிவதற்காக பலநாட்களாக தேடி வைத்துள்ள ஆபரணங்களை அணிந்து ஒருநாளாவது சிம்மாசனத்தில் அமர்ந்து எங்களுக்கு காட்சி தந்தருள வேண்டும் என பிடிவாதமாக கேட்டனர்.
ஐயப்பரும் பந்தள சிம்மாசனத்தை விட மேன்மையான சிம்மாசனம் எனக்காக காத்திருக்கின்றது. அது இறைவனின் நியதி. அதனை விலக்கவோ தடுக்கவோ இயலாத காரியம் என்று கூறி; தாங்கள் எனக்காக அன்போடு வைத்திருக்கும் அந்த ஆபரணங்களை "மகர ஜோதி தினத்தன்று அணிந்து தங்களுக்கு காட்சி தருவேன்" என்று உறுதியளித்தார். அத்துடன்  அத்திருவாபரணப் பெட்டி எவ்வாறு யாரால் சபரி மலைக்கு எடுத்து வரப்பட வேண்டும், எந்த ஆலயங்களில் இறக்கப் பெற்று ஆசீர்வாதம் பெற வேண்டும் என்பதனையும் மன்னனுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.
மன்னன் "பகவானே " தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்தி, இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கு ஓர் கோயில் எழுப்புங்கள் என்றான்.
அந்த அம்பு சபரிமலையில் வீழ்ந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும், இடப்பாகத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறி; தான் இனி அரச மாளிகையில் தங்க முடியாது என்றும், சபரிமலைக்குத் தவம் செய்யப் போவதாயும் கூறி மறைந்தார்.


ஹரிஹர சுதன் ஐயன் ஐயப்பன் 
மணிகண்டன் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார். புத்திர சோகத்தினால் வருந்திய அரசன் அகஸ்திய முனிவரால் ஹரிஹரப் புத்திரரின் தத்துவங்கள் உபதேசிக்கப்பெற்று ஐயனின் உத்தரவுப்படி கோவில் அமைத்தார், சுவாமியின் சிலையை பிரதிஸ்டை செய்ய வேண்டிய தருணத்தில் பரசுராமர் தோன்றி குந்தாளமிட்டு அமர்ந்து யோக பட்டயத்துடனும், தந்தையைப் போல வல திருக்கரத்தில் சின் முத்திரையுடன் கூடிய விக்கிரகத்தை தந்தருளினார். இவ்வாறு பந்தளராஜா  மானிடப் பிறவியின் நற்கதி பெற அருள் புரிந்தார்.


சன்னிதானம் 

ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 41 நாட்கள் கடும் விரதம் அனுஷ்டித்து சபரிமலை வந்து சத்தியமான பொன்னு  பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு "ஜோதி" வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார். மணிகண்டன் தனது குருவுக்கு குரு தட்சணையாக ஆண்டு தோறும் "மகர ஜோதியாக" காட்சிஅளிக்கிறார்.  இது மணிகண்டன் வரலாறு.
******

ஐயப்பமார்கள் அனைவரும் தாய் தந்தையருக்கும் , குல தெய்வத்திற்கும் உரிய மரியாதை கொடுத்து வணங்க வேண்டும் என்று ஐயப்பன் தனது வாழ்க்கையில் தானே நடந்து காட்டினா. எனவே முதல் தடவை மாலையிடும் போது பெற்றோர்களின் அனுமதி பெற்ற பின்பே மாலை அணிய வேண்டும். அதுவும் அவர்கள் கரங்களால் மாலை அணிந்து கொள்வது மிகவும் உத்தமமானது.

அது போலவே சபரி மலை செல்வதற்கு முன் ஒரு குலதெய்வத்தின் ஆலயம் சென்று வழிபடுவது சிறப்பு என்று குருசாமி அவர்கள் கூறுவார்.

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

Friday, November 17, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா -1

முன்னுரை 



இப்பதிவுகளையும்  காணலாமே : 

      4   5   6   7   8   9   10  11   12   13   14   15   16   17   18   19   20   21 


கார்த்திகை மாதம் தொடங்குகின்றது ஐயப்பசுவாமிக்கு மண்டல பூசைக்கும், மகர விளக்கிற்கும் சுவாமியை  தரிசனம் செய்யச் செல்லும் பக்தர்கள் மாலை அணியும் புண்ணிய நாள். இந்நன்னாளில்  ஐயனின் பெருவழிப்பாதையில் சுவாமியுடன் பயணம் செய்ய தங்களை அழைக்கின்றேன். 

என்னடா சுவாமியுடன் பயணம் செய்ய அழைக்கின்றேன் என்று எழுதுகின்றீர்களே என்று யோசிக்கின்றீர்களா?  முறையாக விரதமிருந்து ஐயனை தரிசிக்கச் செல்லும் ஒவ்வொரு ஐயப்ப பக்தனும் சுவாமிதான்.  ஐயனின் ஆலயத்தின் முன்பு ’தத்வமஸி’ (தத் + த்வம் + அஸி) என்ற வாக்கியம் மின்னும் அதன் பொருள். நீ யாரைத் தேடிக்கொண்டு வந்தாயோ அதுவாகவே நீ இருக்கின்றாய்.  அதாவது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறல்ல ஒன்று தான் என்ற அத்வைத உண்மை அது.  ஐயப்ப வழிபாட்டின் ஒரு சிறப்பு அம்சம் இதுதான், சாதி, மத, பேதம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் வந்து ஐயனை தரிசிக்கலாம். மாலையிட்ட அனைவரும் சாமிதான். எனவே அனைவரும்  சாமி என்றே அழைக்கப்படுகின்றனர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பதையும் இங்கே நோக்க வேண்டும். ஜீவாத்மா பரமாத்மாவாக மாறுவதற்குத்தான் விரத முறைகளும் சரணாகதியும். சத்தியமான பொன்னு  பதினெட்டாம் படிகளில் ஏற முறையான விரதமும், இருமுடிக் கட்டும் அவசியம்.  

அவனருளால் தானே அவன் தாள் வணங்க முடியும். ஐயன் அடியேனை தன்னிடம் அழைத்தது  முதுமைக் காலத்தில். சிறு வயதிலேயே ஈடுபாடு இருந்தாலும் அழைத்துச் செல்ல யாரும் இல்லாததால் செல்ல முடியவில்லை. கல்லூரி முடித்து வேலையில் சேர்ந்த பிறகும் வெளி மாநிலங்களில் அதிகமாக பணி புரிந்த காரணத்தாலும்  சபரி மலைக்கு செல்ல முடியவில்லை. தற்போது அந்த பாக்கியம் கிட்டியது. அந்த ஆனந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவே இப்பதிவுகள். 

அடியேனுடைய குருசுவாமி ( உயர்திரு. M.K.பாபு) அவர்கள்  கூறுவார், சுவாமி எல்லாம் பூர்வஜென்ம கர்மாவினால் வருவது சிறு வயதிலேயே மலைக்கு வருபவர்கள்  சென்ற ஜென்மத்திலேயே ஐயனை வழிபட்டவர்களாக இருப்பார்கள் ஆகவே அவர்களுக்கு   அது சித்திக்கின்றது.  ஐயன் அழைத்தானே என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். அதுதான் உண்மை. யாருக்கு எப்போது எவ்வாறு அருள வேண்டும் என்பதை அவன் அறிவான்.

இனி வரும் பதிவுகளில் ஐயப்பன்  வரலாறு. ஐயனின் ஆறு ஆதாரத்தலங்கள்  இருமுடியின் தத்துவம். பதினெட்டாம் படிகளின் பெருமை, விரத முறை, பெருவழிப்பாதை யாத்திரை என்று ஐயப்பனுடன் தொடர்புடைய பல்வேறு செய்திகளை அறிந்து கொண்ட வகையில்  பகிர்ந்து கொள்கிறேன் தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.






ஹரிஹரபுத்ரன் எவ்வாறு என்பதற்கு குருநாதர் தரும் விளக்கம். விளையாட்டாக உலகைப் படைத்து அருள்வயப்படுத்த பிரம்மமே சிவம்- சக்தி என்று இரு கூறுகளாக பிரிந்தது. அவ்வாறு பிரிந்த சிவமும் சக்தியும் மீண்டும் இணைந்தன. மஹாவிஷ்ணு அம்பாளின் அம்சம். ஆகவேதான் அர்த்தநாரீஸ்வரரில் அம்பாள் வாம பாகத்தில் இருப்பது போல் சங்கரநாராயணரில் விஷ்ணு இடப்பாகம். எனவேதான் அம்பாள் விஷ்ணு சகோதரி என்பது ஐதீகம்.


குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா

ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

Saturday, December 31, 2011

பொன்னு பதினெட்டாம் படி பூஜை





நம்மை உயரத்திற்கு ஏற்றுபவை படிகள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நால்வரும் அவரவர்களுக்கு உரிய முறையில் நம்மை உயர்த்தும் ஏணிப்படிகள் அல்லவா?  ஆண்டவன் ஆலயத்தில் அமைந்துள்ள படிகள் புனிதத் தன்மையுடையவை. விஷ்ணுவாலயங்களில்  பெருமாளின் கர்ப்பகிரகங்களில் உள்ள படிகள்  “படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே” என்று திருவேங்கடவனின் தரிசனம் எப்போதும் விரும்பிய குலசேகராழ்வாரின் பெயரால் “குலசேகரன்படி”  என்றே அழைக்கப்படுகின்றது. 

அது போலவே கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் சத்திய சொரூபனாய், தர்மசாஸ்தாவாய்  ஹரிஹரசுதன் ஐயன் ஐயப்பன் எழுந்தருளி அருள் பாலிக்கும் சபரிமலையின் “சத்தியம் காக்கும் பொன்னு பதினெட்டாம் படிகள்”  மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்தவை. உலகில் எந்த கோவிலிலும் இல்லாத தேவதாவிச்வாஸம் இந்த படிகளுக்கு உண்டு.

சென்ற வருடம்  ஐயப்ப சுவாமியின் விரத காலத்தில் சென்னை இராஜ அண்ணாமலைபுரத்தில் சபரி மலையைப்போலவே அமைக்கப்பட்டுள்ள ஐயப்பன் ஆலயத்தில் பதினெட்டாம்படி பூஜையை காணும் பாக்கியம் கிட்டியது அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு. இப்பதிவில் பதினெட்டாம்படி பூஜையின் மகத்துவத்தை காணலாம் வருங்கள் அன்பர்களே. 
 
நலம் தரும் சபரிமலை  யாத்திரைக்கு அன்னதானப் பிரபுவை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் நாற்பது நாட்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து, பெருங்காட்டு வழியில்  கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாக, குண்டும் குழியும் கண்ணுக்கு வெளிச்சமாக,  சரண கோஷத்துடன்  இரவு பகல் பாராமல் மலை மலையாக ஏறி இறங்கி, கங்கை நதி போல் புண்ணிய நதியாம்  பம்பையில் நீராடி, புனிதர்களாகி,  நீலி மலை ஏறி சபரியை தரிசனம் செய்தபின்  அய்யப்பனை  தரிசனம் செய்யும் முன் பக்தர்கள் சபரிமலைக்கோவிலின் முன்னால் காணப்படும்  தெய்வாம்சம் நிரம்பிய பதினெட்டுப் படிகளின் மீது கால் வைத்துத் தாண்டியே அய்யனின் சனன்தியை அடைய வேண்டும். இந்த சபரிமலைப் பயணத்தின் தத்துவமனைத்தும் இந்தப் பதினெட்டுப் படிகளில்  அடங்கியுள்ளதென ஆன்றோர் கூறுவர். 

ஈசனுக்கு கயிலாயம். மாலவனுக்கு வைகுண்டம், பிரம்மனுக்கு சத்ய லோகம் போல பூத நாதனுக்கு பொன்னம்பலம். புராணங்களின் படி ஸ்ரீதர்ம சாஸ்தாவின் திருஅவதாரம் தான் ஐயப்பன். உலகில் தர்மத்தை  நிலை நாட்ட ஹரிஹரர்களுக்கு புத்திரனாய் அவதரித்த  தர்ம சாஸ்தா, மஹிஷி மர்த்தனத்திற்காக, பந்தளராஜன் இராஜசேகரனுக்கு பம்பையாற்றங்கரையில்   பாலகனாய் கிடைக்கப்பெற்று  பன்னிரண்டு ஆண்டுகள்  ராஜ சேவகம் செய்து, துர்மந்திரியின் சூழ்ச்சியினால் பல இன்னல் அனுபவித்து, தாயான மஹாராணியின் பொய் தலைவலிக்காக  புலிப்பால் கொண்டு வர கானகம் வந்தார். 

அங்கு நாரத முனிவர் மூலம் தன் அவதார ரகசியம் உணரப்பெற்று, மஹிஷியை வதைத்து  தேவர்கள் துன்பம் துடைத்தார். அதனால் அகமகிழ்ந்த இந்திரன் சபரிமலைக்கு எதிரில் உள்ள காந்த மலையில்  பொன் மயமான அம்பலம் ஒன்றைக்கட்டி அதன் மையத்தில் ஞான பீடம் என்ற சிம்மாசனத்தை ஏற்படுத்தி ஐயனை அதில் அமர கோரினான்.  யக்ஷ, கின்னர, கிம்புராதிகள் வாத்தியங்களை முழங்க, தேவ கன்னியர் நடனமாட, முனிவர்கள் வேதம் ஒத  தேவர்கள் ஜெய கோஷம் எழுப்ப மணிகண்டன் ஞான பீடத்தில் அமர எழுந்தருளினார், பன்னிரண்டு வயது பாலகன் உருவில் நடந்து வரும் ஐயன் உயரமாக அமைந்திருக்கும்  சிம்மாசனத்தில் உட்கார சிரமப்படக்கூடாதென்று  அங்கிருந்த பதினெட்டு தேவதைகள் கீழிருந்து பீடம் வரை படிக்கட்டுகள் போல வரிசையாகப் படுத்துக்கொள்ள தர்மசாஸ்தா அந்த பதினெட்டு தேவதைகளின் மேல் தனது மலர்ப்பாதம் பதித்து ஏறி ஞான பீடத்தில் அமர்ந்து தேவர்களின் பூஜையை ஏற்றுக்கொண்டார்.  இவ்வாறு தேவர்கள் காந்தமலையின் மேல் உள்ள ஐயனுக்கு செய்யும் பூஜையின் மாலை கற்பூர ஆரத்தியே மகர ஜோதி என்பது ஐதீகம்.  பின்னர் ஐயன் தன் கடமையை முடிக்க தேவர்கள் புலிகளாக மாறி, தாய்க்கு புலிப்பால் கொண்டு வந்து பந்தள இராஜனுக்கு உண்மையை உணர்த்தி பம்பா நதிக்கரையிலுள்ள சபரிமலையில் தனக்கு ஒரு கோவில் கட்டப்பணித்து  ஒரு அம்பால் அவ்விடத்தை காட்டி மறைந்தார். 

 
பின்னர் ஒரு சமயம் வேட்டையாட வந்த மன்னனுக்கு ஐயன் பட்டபந்த வடிவம் பூண்டு, சின்முத்திரை, ஆனந்த முத்திரை இவைகளுடன் சேவை சாதித்து பதினெட்டு தேவதைகள் இங்குள்ளது போலவே சபரி மலையில் என்னை  பதினெட்டு படிகளுடன் பிரதிஷ்டை  செய்யவும். இப்படிகளுக்கு ஜீவப்ரதானம் செய்யவும், விக்ரஹபிரதிஷ்டைக்கு ஸ்ரீபரசுராமர் வந்து சேருவார், தேவ சிற்பி விஸ்வகர்மா கட்டிட வேலைகளை கவனித்துக்கொள்ளுவார். யோகபட்டாஞ்சிதமான தவநிலையில் உள்ள என்னை போற்றி வணங்குபவர்கள் நற்கதி பெறுவர் என்று அருளினார்.

சத்ய தர்மங்களை காவல் தெய்வங்களாக கொண்டு நான் வசிக்கும் சபரி மலையில் என்னை தரிசனம் செய்ய வரும்  பக்தர்களுக்கு  அவரவர்களின் விரதநியமங்களுக்கு ஏற்ப பலாபலன்களை இந்த தேவதைகள் அருளுவார்கள். ஆகவே மனமார மண்டலகால நியமநிஷ்டையுடன் பிரம்மச்சரியம் காத்து, புலன் ஐந்து, பொறி ஐந்து, கோசங்கள் ஐந்து இவற்றுடன் மும்மலங்களையும் கூட்டி பதினெட்டு கரணங்களை அடக்கி  எவனொருவன்  முறையாக அந்தப்படிகளை  கடந்து வந்து என்னை சரணடைகின்றானோ அவன் முக்தி என்னும்  வீடுபேற்றை அடைவான்.

பதினெட்டாம் படி மிகவும் புனிதமானதாவும், முக்கியமானதாகவும் இக்கோவிலில் கருதப்படுகின்றது. சத்ய தர்மங்களின் வடிவில் கடுத்தஸ்வாமி, கருப்பஸ்வாமி, கருப்பாயி அம்மா காவல் தெய்வங்களாய் வாள் ஏந்தி காவல் காக்கின்றனர். மனதில் பக்தியின்றி, நியமநிஷ்டை குறைவாக வரும் பக்தர்களை இந்த பதினெட்டு தேவதைகளின் மேல் கால் வைக்க இவர்கள் அனுமதிப்பதில்லை என்பது ஆன்றோர் கருத்து.

தமது யாத்திரையில்  ஏறும் போது ஒரு முறையும், தரிசனம். நெய்யபிஷேகம் செய்தபின்  விடைபெறும் போது ஒரு முறை மட்டுமே  இப்படிகளை பயன்படுத்த வேண்டும்.  சிலர் இருமுடி இல்லாமாலும், மண்டலகால அளவு விரதம் இல்லாமலும்,  இப்படிகளின் மகிமை தெரியாமல் ஏறி விடும் போது இப்படிகளின் புனிதம்  கெடாமல் இருப்பதற்கும், நெறியாக  முறையாக ஏறுபவர்களுக்கு   நற்பலன்களை தர, இந்த படிகளுக்கு சக்தி கூடவும் இக்கோயில் திறக்கும் ஒவ்வொரு மாத நாளும் “படி பூஜை”  செய்து, தந்திர முறையில் இப்படிகளுக்கு புனிதத்தன்மையையும், மகிமைகளையும் புனருத்தாரணம் செய்கின்றனர்.

சபரி மலையின் முக்கிய தந்த்ரிகள் இந்த படிபூஜை செய்யும் உரிமையை பெற்றிருக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு படி தேவனையும் தனித் தனியாக  விளித்து தியானம், ஆவாஹனம் என்று சோடசோபசார பூஜைகள் செய்து, விஸர்ஜனம் செய்து அதன் புனிதத்தன்மையை இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர்.

 
பின்னாளில் இவ்வாலயம் பல தடவை தீக்கிரையாகியது, பல தடவை கொள்ளையர்களின் தாக்குதலுக்கும்  இலக்காயிருக்கின்றது, அப்போதெல்லாம் இப்படிகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.  பிறகு ஸ்ரீதர்மசாஸ்தாவே அய்யப்பனாக அவதரித்து, ஆலயத்திருப்பணி நடத்தி இந்த திருப்படிகளில் தனது  மலர்ப்பாதங்களை வைத்து கடந்து விக்கிரஹ பிரதிஷ்டை செய்து ஜோதி வடிவில் அவ்விக்கிரகத்தில் கலந்தார் என்பர். இவ்வாறு மஹாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமரால் பூஜிக்கப்பட்டு தெய்வாம்சம் பெற்ற இந்த பதினெட்டுப்படிகள் மீண்டும் ஐயனின் தாமரைப் பாதங்கள் பட்டு புனிதம் மிகுந்து  “சத்தியமான பொன்னு பதினெட்டாம் படி”  என்ற அடைமொழியுடன் இன்றும் காட்சி தருகின்றன. 

இந்திரியங்கள் ஐந்து : கண், காது, மூக்கு, நாக்கு, உடல்
புலன்கள் ஐந்து : பார்வை, கேட்டல், சுவாசம், ருசி, ஸ்பரிசம்
கோசங்கள் ஐந்து : அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்
குணங்கள் மூன்று: ஸத்வ குணம், ரஜோகுணம், தமோகுணம்.
இந்த பதினெட்டையும்    ஜெயித்து, அல்லது கட்டுப்படுத்தி, இந்த பதினெட்டுப்படிகளை கடப்பவர்களுக்கு  “எல்லாம் ஒன்றே, அந்த ஒன்றின்றி வேறில்லை: என்ற உண்மை புலப்படும்.  ஸத் அல்லது ஆன்மா அல்லது பரப்ரமம் என்ற தெய்வ ஸாக்ஷாத்காரம். இதுதான் ஸ்ரீஐயப்பன்   கோவில் முன்வசமுள்ள பதினெட்டுப்படிகள் போதிக்கும் தத்துவம். இவற்றை கடந்தால் “தத்வமஸி” நீ எதை நாடி வந்தாயோ அதே நீயாக உள்ளாய் என்னும் உபநிஷத்  வாக்கியத்தை விளக்கும் வண்ணம் நித்தியனாய். சத்தியனாய், சாசுவதனாய், ஸச்ச்சிதானந்த ரூபனாய் ஒளி விட்டு பிரகாசிக்கின்றான் சுவாமி ஐயப்பன்.
 
முன்ஜென்ம பாவ புண்ணியங்களுக்கேற்ப, பிறவி முதலே, காம குரோதங்கள் எனப்படும் பதினெட்டு துர்குணங்களுடன் பிறக்கும் மனிதர்கள், இப்பிறவியிலும் தொடர்ந்து பாவச்செயல்களைப் புரிந்து தாங்கொணா பாவச் சுமையை தாங்கி நிற்கின்றனர். இவர்கள் வருடம் தோறும்  முறையாக மாலை அணிந்து, விரதம் இருந்து  சபரிமலை வந்து  இந்த புண்ணிய பதினெட்டாம் படியைக் கடக்கும் போது ஒவ்வொரு துர்க்குணங்களாக  நீங்கி ஒவ்வொரு சித்தியாக மிகுந்து  தொடர்ந்து பதினெட்டு முறை பயணம் செய்யும் அவர்கள் சித்த புருஷர்களாய் மேல்நிலைக்கு உந்தப்பட்டு  தெய்வத்திற்கு நிகராக  போற்றப்படுகின்றனர்.

லோக நாயகனாய் சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயன் ஐயப்பசுவாமியை தரிசனம் செய்யும் அதிகாரம் அனைவருக்கும் (சில குறிப்பிட்ட நியதிகளின் படி) உள்ளது. யார் வேண்டுமானாலும் சபரி மலை கோவில் திறந்திருக்கும் நாட்களில் பம்பையில் சென்று நீராடி, சபரிமலை ஏறி, சன்னிதானத்தின் வடக்குப்பகுதியில் உள்ள  படிக்கட்டுகளின் மூலம் சென்று பூத நாதனை, ஹரிஹரசுதனை, பந்தளத்து இராஜனை, பம்பா நதி தீரனை, வாபரின் தோழனை தரிசனம் செய்யலாம்.  ஆனால் புனிதமான இந்த பொன்னு பதினெட்டாம் படி வழியாக சன்னிதானம் அடைந்து ஐயனை தரிசிக்க   விரதம், இருமுடி அவசியம்.

இந்த பதினெட்டுப் படிகளுக்கும் ஒவ்வொரு யோகம் உண்டு அவையாவன

முதல் படி – விஷாத யோகம்
பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம். இதுவே முதல்படி

இரண்டாம் படி – சாக்கிய யோகம்
பரமாத்மாவே என் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய யோகம். 

மூன்றாம் படி – கர்ம யோகம்
கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம், 

நான்காம் படி – ஞானகர்ம சன்னியாச யோகம்
பாவ- புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும். 

ஐந்தாம் படி – சன்னியாச யோகம்
நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

ஆறாம் படி – தியான யோகம்
கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக் கூடாது இதுவே ஆறாவது படி. 

ஏழாம் படி – பிரம்ம ஞானம்
இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான். எல்லாமே இறைவன்தான் என உணர்வது பிரம்ம ஞானம்.

எட்டாம் படி – அட்சர பிரம்ம யோகம்
எந்நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி.

ஒன்பதாம் படி – ஆன்மிக யோகம்
கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. சமூக தொண்டாற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி.

பத்தாம் படி – விபூதி யோகம்
அழகு, அறிவு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது பத்தாம் படி

பதினொன்றாம் படி – விஸ்வரூப தரிசன யோகம்
பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.

பன்னிரெண்டாம் படி – பக்தி யோகம்
இன்பம்-துன்பம், விருப்பு-வெறுப்பு ஏழை–பணக்காரன், போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.

பதிமூன்றாம் படி – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்
எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து இறைவனே  அவர்களை இயக்குகின்றான் என்பதை உணர்தல் பதிமூன்றாம் படி
.
பதினான்காம் படி – குணத்ர விபாக யோகம்
யோகம், பிறப்பு, இறப்பு மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம்படி

பதினைந்தாம் படி – தெய்வாசுர விபாக யோகம்
தீய குணங்களை ஒழித்து நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

பதினாறாம் படி – சம்பத் விபாக யோகம்
இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் கொள்ளாமல் நடப்பது பதினாறாம் படி.

பதினேழாம் படி – சிரித்தாத்ரய விபாக யோகம்
’சர்வம் பிரம்மம்’ என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது பதினேழாம் படி.

பதினெட்டாம் படி – மோட்ச சன்னியாச யோகம்
யாரிடமும் எந்த உயிர்களிடத்தும் பேதம் பார்க்காமல்,  உன்னையே சரணாகதி என்று அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில்  அடைக்கலம் அடைந்து, அவன் அருள்புரிவான் என்று அவனையே சரணடைவது பதினெட்டாம் படி . 

சத்தியம் நிறைந்த இந்து பத்தினெட்டுபடிகளை பக்தியோடு கடந்து வந்தால் நம் கண் எதிரே அருள் ஒளியாய் தரிசனம் தந்து அருள் புரிய காத்திருப்பான் ஐயன் ஐயப்பன் என்பதே இந்த பதினெட்டாம் படி  தத்துவம். 


சத்தியம் காக்கும் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படிகளே சரணம்!
சரணம்! சரணம்! சரணம் பொன் ஐயப்பா!