Monday, July 22, 2019

சித்திரைப் பெருவிழாக்கள் 2019 -1

திருவலிதாயம் (குரு பரிகாரத்தலம்) கொடியேற்றம்

அவனருளால் இவ்வருடம் வடசென்னையின் சில ஆலயங்களின் பெருந்திருவிழாக்களைக் காணும் பாக்கியம் கிட்டியது. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்றபடி அக்காட்சிகளை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவுகள். தேவாரப்பாடல் பெற்ற திருவலிதாயம்  ஜெகதாம்பிகை உடனுறை திருவல்லீஸ்வரர்,  கோசை என்றழைக்கப்படும் கோயம்பேடு   அறம் வளர்த்த நாயகி உடனுறை குசலவபுரீஸ்வரர் என்னும் குறுங்காலீஸ்வரர்  சித்திரைப் பெருவிழா காட்சிகளையும், வில்லிவாக்கம் சொர்ணாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரரின் வைகாசிப் பெருவிழாவின் சில காட்சிகளையும் காண வாருங்கள் அன்பர்களே கை கூப்பி அழைக்கின்றேன்.

திருவலிதாயம் ஆலய இராஜகோபுரம்

சென்னை  மாவட்டத்தில் ஆவடி செல்லும் சாலையில் பாடி லூகாஸ் டிவிஸ் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள  படவேட்டம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள சாலை வழியாகச் சென்று இக்கோவிலை அடையலாம். மேனகையின் சாபத்தால் குருவியாக மாறிய பரத்வாஜ முனிவர் இங்கு வந்து, நெடுந்தவம் செய்து, சிவ வழிபாடு செய்து விமோசனம் பெற்றார் என்கிறது தலபுராணம். மேலும் இராமர்  ஆஞ்சனேயர், சூரியன், சந்திரன், இந்திரன்குரு பகவான் முதலானோர் இறைவனை வழிபட்ட தலம்.  



கொடியேற்ற மண்டபத்தில் அம்மையப்பர்




சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 254 வது தேவாரத்தலம், தொண்டை நாட்டு பாடல் பெற்ற 32 தலங்களில் இத்தலம்  21வது தலம் ஆகும்.. அம்மையின் ஞானப்பாலுண்ட ஆளுடையபிள்ளை திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். மேலும் அருணகிரிநாதர்,, பாம்பன் சுவாமிகள்வள்ளலார்  இராமலிங்க அடிகள் ஆகியோரால் பாடல் பெற்ற தலம்.



அம்பாள்

குருபகவான் சிவபூஜை செய்து வழிபட்டு பாவ நிவர்த்தி பெற்ற தலம் இது என்பதால், குரு பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. தமிழகத்தில் உள்ள சில  குரு பரிகாரத் தலங்கள் திருச்செந்தூர், ஆலங்குடி, தென்குடி திட்டை,  உத்தமர் கோவில் மற்றும் பாடி ஆகியவை ஆகும்.  இத்தலத்தில் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கும் குரு பகவான் கொள்ளை அழகு! கமண்டலம், தண்டு மேற்கரங்களில் ஏந்தி, அபய வரத கீழ் கரங்களுடன், யானை வாகனத்துடன்  நின்ற கோலத்தில் எழிலாக தரிசனம் அளிக்கின்றார் குரு பகவான்.  குரு பார்க்க கோடி நன்மை என்பதால் இவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, முல்லைப் பூவால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வணங்கினால், சகல தோஷங்களும் விலகும் என்கின்றனர். வியாழக்கிழமைகளில், காலையும் மாலையும் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றது. இதில் கலந்து கொண்டு குரு பகவானை வணங்கினால் கோடி புண்ணியம் நிச்சயம்!



பிரம்மாவின்  இரு புதல்விகளான  கமலை, வல்லி   ஆகியோரை விநாயகர் இத்தலத்தில் மணந்து கொண்டார் என்றும் வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. எனவே  விநாயகர் உற்சவர் இரு தேவியருடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்






பாடி என்ற ஊரின் பெயர் போர்க்கால பாடி வீட்டின் அடிப்படையில் எழுந்திருக்கலாம். சோழ மன்னர்களும், விஜய நகர மன்னர்களும் இவ்வூரை பாடிவீடாகப் பயன்படுத்தியிருக்கலாம். இதற்கு சிறந்ததொரு சான்றாக படைவீட்டு அம்மன் விளங்குகிறது. படைவீரர்கள் போருக்குச் செல்லும் முன் வீரதேவதையாகிய காளியை வணங்கிச் செல்வது வழக்கம். வெற்றி பெற்றால், அவ்வீரர்களே தங்கள் தலையை அரிந்து காணீக்கையாக வழங்குவதும் வழக்கிலிருந்தது. அத்தகைய படைவிட்டு அம்மன்என்றும் அதுவே பேச்சு வழக்கில் படவடம்மன் ஆகியிருக்கலாம். . எனவே இவ்வூர் முற்றுகையின் போது தங்கியிருக்கப் பயன்படுத்தப்பட்ட பாடி வீடாக இருந்திருக்க வேண்டும் என்று  கொள்ளலாம்.





இவ்வளவு சிறப்புகள் பெற்ற இத்தலத்தில் சித்திரைப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. இப்பதிவில்  முதல் நாள் காலை கொடியேற்றத்தின் சில காட்சிகள் இப்பதிவில் இடம்பெறுகின்றன. இனி வரும் பதிவுகளில் மற்ற திருநாட்களின் காட்சிகள் இடம் பெறும் வந்து தரிசியுங்கள்.

Friday, October 12, 2018

உலக சுற்றுலா தினப்போட்டி முதல் பரிசு



அடியேன் தினமணி இணைய தளத்தின் உலக சுற்றுலா தின கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன். அதைப் பற்றிய கட்டுரை இது.

******************

தினமணி இணையதளத்தின் ‘உலக சுற்றுலா தினப்போட்டி’ பரிசு பெற்றோர் பட்டியல்!

By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 09th October 2018 03:14 PM  |   அ+அ அ-   | 

செப்டம்பர் 27, சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு தினமணி இணையதளம் நடத்திய ‘உலக சுற்றுலா தினப்போட்டி’ யில் ஏராளமான வாசகர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்கள் அனுப்பியிருந்த சுவாரஸ்யமான சுற்றுலா அனுபவக் கட்டுரைகளில் பரிசுக்குரியவர்களது பட்டியலைத் தேர்வு செய்ய கடைசிவரையிலும் சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஏனென்றால் சுற்றுலா அனுபவங்கள் என்பவை எப்போதுமே சென்றோம், பார்த்தோம், ரசித்தோம், திரும்பினோம் என்று மட்டுமே இருந்து விட்டால் அதில் என்ன சுவாரஸ்யம் இருந்து விட முடியும்?! தான் பார்த்த விடயங்களை... தான் கண்டு ரசித்த இடங்களை... தனக்கு நேர்ந்த அனுபவங்களை சுவை பட ஒருவர் விவரிக்கும் போது அதை வாசிப்பவர்களுக்கு அந்த இடங்களுக்கெல்லாம் செல்லாமலே சென்று வந்த உணர்வை ஒரு அனுபவக் கட்டுரை அளிக்குமாயின் அது தான் சிறந்த சுற்றுலா அனுபவக் கட்டுரையாக இருக்க முடியும்.
போட்டிக்காக எங்களுக்கு வந்த கட்டுரைகளில் பலவும் அந்த ரகத்தில் தான் இருந்தன. ஆயினும் பரிசுக்குரியவை என 5 ஐ மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டியிருந்ததால் நிராகரிக்க மனமின்றியே சில சுற்றுலா அனுபவக் கட்டுரைகள் தேர்விலிருந்து விடுபட்டன. ஆயினும் அவற்றின் சிறப்பான தன்மைக்காக அந்தக் கட்டுரைகள் அனைத்துமே தினமணி இணையதளத்தின் சிறப்புக் கட்டுரைப் பிரிவிலும், சுற்றுலாப் பிரிவிலும் வரும் வாரங்களில் நிச்சயம் பிரசுரிக்கப் பட்டு பெருமைப் படுத்தப்படும். எனவே பரிசுக்குரியவையாக தேர்வாகாத கட்டுரைகளிலும் எதுவுமே சோடையில்லை என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம். 
பரிசுக்குரிய சுற்றுலா அனுபவக் கட்டுரைகள் லிஸ்ட்...
முதல் பரிசு
முருகானந்தம் சுப்ரமண்யன்
(திருக்கயிலாயம் மற்றும் நவதுவாரகை யாத்திரை அனுபவங்கள் )
இரண்டாம் பரிசு 
ஆத்மநாதன்
(வாடிகன் முதல் ஸ்விஸ், ஜெர்மன், ஃப்ரான்ஸ், ஹங்கேரி வரையிலான ஐரோப்பிய பயண அனுபவங்கள்)
மூன்றாம் பரிசு
ரவி அருணாச்சலம்
புலிகேட் ஏரி முதல் வண்டலூர் ஓட்டேரி சரணாலயம் வரையிலான பறவைகள் சரணாலங்களைத் தேடித் தேடிச் சென்று பெற்ற பறவைச் சுற்றுலா அனுபவம்
நான்காம் பரிசு 
நைனார் முகமது
தனியொரு ஆளாகச் சென்று அறிவைச் செறிவாக்கித் திரும்ப உதவிய லண்டன் சுற்றுலா
ஐந்தாம் பரிசு 

மீனாள் தேவராஜன் (உள்ளூரில் சிம்லா, நைனிடால் தொடங்கி இலங்கை, ரோம் வரை சென்று பெற்ற உலகச் சுற்றுலா அனுபவங்கள்)
முதல் ஐந்து இடங்களைப் பெற்ற பரிசுக்குரிய கட்டுரைகள் தவிர்த்து அமெரிக்க வாசகி திலகா சுந்தரின் மெக்ஸிகோ பயண அனுபவக் கட்டுரை, விவேக் காசிமாரியப்பனின்  சந்திரமெளலேஸ்வரர் மற்றும் மடிகேரி பயணக் கட்டுரை, ஆ.சரவணனின் கேரளா சூழல் சுற்றுலாசாய் லட்சுமி எனும் ஓவிய ஆசிரியையின் ‘மகளிர் மட்டும் ஸ்டைல்’ பாபா கோயில் தரிசனக் கட்டுரை, வைரம் நடராஜன் அலைஸ் கண்ணன் என்பவரது கேரளா மற்றும் கர்நாடகச் சுற்றுலாக்கட்டுரைகள், வாசகி லக்‌ஷ்மி கண்ணனின் சதுரகிரி ஆன்மீகச் சுற்றுலா, பரிமள செல்வியின்  வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களைத் தழுவிய இந்திய சுற்றுலா அனுபவக் கட்டுரை போன்றவை அனைத்துமே அட, அட, அடடே! என்றும் வாரே வா சூப்பர் என்று பாராட்டித் தள்ளும் விதத்திலும் வாசிக்க, வாசிக்க மிக அருமையாக இருந்தது. மேற்கண்ட வாசகர்கள் அனைவரது சுற்றுலா அனுபவக் கட்டுரைகளும் அடுத்தடுத்து தினமணி இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதை பெருமையுடன் அறிவிக்கிறோம்.
சுற்றுலா அனுபவங்களுக்கென ஒரு போட்டி வைத்தது எதற்காக? உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்துக்காக மட்டும் அல்ல. சிலருக்கு சம்பாதிக்கத் தெரியும் ஆனால் அதை வைத்து நகைகள், வீடு, கார் எனத் தேவையான அத்தனை ஆடம்பர வசதிகளையும் செய்து வைத்துக் கொண்டு கிணற்றுத்தவளைகளாக வீடு விட்டால் அலுவலகம், அலுவலகம் விட்டால் வீடு என ஒரு சின்ன வட்டத்துக்குள் செக்குமாடு போல சுழலத்தான் தெரிந்திருக்கும். இதனால் என்ன நஷ்டம் என்கிறீர்களா? நஷ்டம் தான் முதல் நஷ்டம் நம் புத்திக்கு அடுத்த நஷ்டம் நம் ஆரோக்யத்துக்கு. புத்தியும், ஆரோக்யமும் சீராக இல்லாத வாழ்வை எப்படி உயிரோட்டமான வாழ்வாகக் கருத முடியும்?
வாழ்க்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க நிச்சயம் பயணங்கள் அவசியம்.
உலகின் மாபெரும் ஊர்சுற்றியாகக் கொண்டாடப்படும் ராகுல சாங்கிருத்யாயன் எனும் வரலாற்றாசிரியர் மனிதன் ஓரிடத்தில் குட்டையாகத் தேங்காது நதி போல பல இடங்களுக்கும் பல்வேறு அனுபவங்களைத் தேடி பயணிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி ‘ஊர் சுற்றி புராணம்’  என்றொரு நூலே எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதை வாசித்தீர்கள் என்றால் குட்டை... நதியாக மாற வேண்டியதின் அவசியத்தை எவரொருவராலும் உணர்ந்து கொள்ள முடியும். அந்த அடிப்படையில் தினமணி வாசகர்களிடையே சுற்றுலாவின் முக்கியத்துவத்தை அழுத்தமாகப் பதியச் செய்வதற்காகவே இப்படி ஒரு போட்டியை அறிவித்தோம். பரிசுக்குரிய கட்டுரைகளை வாசித்தீர்கள் என்றால் அது எத்தனை உண்மை என்பதை நீங்களே உணர்வீர்கள்.
போட்டியில் உற்சாகத்துடன் பங்கேற்று சுற்றுலா அனுபவக் கட்டுரைகள் அனுப்பிய அத்தனை வாசகர்களுக்கும் தினமணி இணையதளத்தின் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்!
மீண்டும் அருமையானதொரு போட்டியில் இணைவோம்

******************

முதல் பரிசு பெற்ற கட்டுரையைப்  படிக்க இங்கே செல்லுங்கள்.

************