Friday, December 2, 2011

ஆதியும் அந்தமும் இல்லா ஜோதி வடிவான மலை

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி

அண்ணாமலையானுக்கு அரோகரா!





பன்றித்திருவுருவம் காணாத பாதங்கள்
நின்றவா நின்ற நிலை போற்றி அன்றியும்
புண்டரீகத்து உள்ளிருந்த புத்தேள் கழுகு  உருவாய்
அண்டர் அண்டம் ஊடுருவ ஆங்கு ஓடிப்
பண்டு ஒரு நாள் காணான்


திருக்கார்த்திகைத் திருநாளின் மூன்றாம் திருநாளான இன்று திருவண்ணாமலைதலத்தை வலம்வரலாமா அன்பர்களே. வாருங்கள் அடியேனுடன்.

முக்திபுரி, தென் கயிலாயம், சிவத்தலம், தலேச்சுரம், சிவலோகம், சோணாத்ரி, ,  சோணாச்சலம், சோணகிரி என்று பல்வேறு பெயர்களினால் அழைக்கப்படுகின்றது இத்தலம்அருணன்  என்றால் சிவப்பு, செந்தழல் மேனியனான சிவபெருமானே மலையாக நின்றதால் இத்தலம் அருணாச்சலம், அருணகிரி, அருணாக்கை, திருவருனை என்றும் , மேலும்  அனற்கிரி, அண்ணல் மலை, அண்ணாமலை, ஞான நகரம், சுத்த நகரம், கௌரி நகரம்அண்ணாத்தூர்,   என பல் வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது கவலை தீர்க்கும் திருவண்ணாமலை.


அண்ணாமலையார், அருணாசலேஸ்வரர்திருவண்ணாமலை மஹாதேவர், ஆண்டவர், ஆழ்வார் நாட்டுடையார், சோணாச்சலர், திருவண்ணாமலை ஆண்டார், உடையார், பரிமள வசந்தராயர் என்றும் வணங்கப்படுகிறார். அம்மை உண்ணாமலையம்மன், உலகுடைய பெருமாட்டி, நம்பிராட்டி,  சமஸ்கிருதித்தில் அபீத குஜாம்பாள் என்றும் அழைக்கப்படுகின்றாள். அம்மையைப் பற்றியும் பல பாடல்கள் பாடப்பட்டுள்ளன.



தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றை செழுந்தாராய்
வானைக்காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே
ஆனைக்காவில் அரனே பரனே அண்ணாமலையானே
ஊனைக்காவல் வைவிட்டு உன்னை உகப்பார் உணர்வாரே

என்று  எம்பிரான் தோழர் சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடிப்பரவிய அண்ணாமலையார் ஆலயம் தமிழகத்தின் பெரிய ஆலயங்களுள்  ஒன்று. 24 ஏக்கர் பரப்பளவில் சோழ, பாண்டிய, பல்லவ, விஜய நகர,    ஹொய்சால  மன்னர்கள் திருப்பணி செய்த  6 பிரகாரங்கள், 9 கோபுரங்கள், 56 திருச்சுற்றுக்கள், சிவகங்கை பிரம்ம தீர்த்தம் என்னும் இரண்டு பெருங்குளங்கள், ஆறு மண்டபங்கள் உள்ள தலம். 140 சன்னதிகளை தன்னிடத்திலே கொண்ட தலம். இத்தலம் முழுவதும் 360 தீர்த்தங்கள் உள்ளன,  மலையில் அக்னி தீர்த்தம் மற்றும் இந்திர தீர்த்தம்  சிறப்பானவை. ஒவ்வொரு கோபுரத்திற்குமாக  ஒரு தனி வரலாறு உண்டு. நான்கு திசை வாயில்களுக்கு நான்கு கோபுரங்கள், உட் பிரகாரத்தில் நான்கு கோபுரங்கள் சுவாமி சன்னதியில் ஒரு கோபுரம் என ஒன்பது கோபுரங்களுடன் எழிலாக காட்சி தருகின்றது இத்திருக்கோவில். கார்த்திகை திருவிழாவின் போது மின் விளக்கு ஒளியில் இரவில் இந்த கோபுரங்கள் ஒளிரும் அழகை விவரிக்க வார்த்தைகளே இல்லை
  
மின்விளக்கு ஒளியில் மிளிரும் திருவண்ணாமலை



வெளிப்பிரகாரமான   ஆறாவது பிரகாரத்திலிருந்து துவங்குவோமா?  வெளிப்பிரகாரத்தில். தமிழகத்தில் திருவரங்க கோபுரத்திற்கு அடுத்த உயரமான கோபுரம்  கிழக்கில் உள்ள 217 அடி உயர  11 நிலை திருவண்ணாமலை இராஜ கோபுரம் , இதை கிருஷ்ண தேவராயர் திருப்பணி என்று கூறுவர்மற்றும்  தெற்கில் திருமஞ்சன கோபுரம், மேற்கில்  பேய் கோபுரம், பேய் கோபுரம் அருகில் அண்ணாமலையார் பாத சன்னிதி உள்ளது. இந்த பாதத்திற்கு  தினமும் மூலஸ்தனத்தில் நடைபெறுவது போல பூஜைகள் நடைபெறுகின்றன. பாத தரிசனம் பாவ விமோசனம் என்றபடி கோவிலுக்கு  செல்லும் பக்தர்கள் மூலவரை தரிசித்த பின் பாத தரிசனம் செய்வது நன்று. வடக்கில் அம்மணி அம்மாள் கோபுரம் ஆகியவை ஆறாம் பிரகாரத்திற்கும் ஐந்தாம் பிரகாரத்திற்கும் இடையில் அமைந்துள்ளன.

 
தினமும் காலையில் எம்பெருமானின் திருமஞ்சனத்திற்கு கங்கை தீர்த்தம் யானையின் மேல் திருமஞ்சன கோபுரத்தின் வழியாக கொண்டு வரப்படுகிறது. மேலும்  ஆனித் திருமஞ்சனம் மற்றும்  ஆருத்ரா தரிசனத்தன்று ஆடல் வல்லானும் அம்மை சிவகாம சுந்தரியும் அபிஷேகம் கண்டருளும் எழில்மிகு ஆயிரங்கால் மண்டபம்இம்மண்டபத்தில் தான் இரமண மகரிஷிகள் பல ஆண்டுகள் தவம் செய்த பாதாள லிங்கேஸ்வரர் சன்னதியும் உள்ளது. ஆணவம் கொண்ட சம்பந்தாண்டன் ஆணவத்தை அடக்க முருகப்பெருமான் அருணகிரி நாதருக்காக கம்பத்தில் தோன்றிய கம்பத்து இளையனார் சன்னதி மற்றும் சிவகங்கைக் குளம், பெரிய நந்தி, வன்னி மரத்து வினாயகர் சன்னதி, சிவ கங்கை வினாயகர் சன்னதி, அருணகிரி நாதர் மண்டபம், கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி  ஆகியவையும் இந்த ஆறாம் மற்றும் ஐந்தாம் பிரகாரத்திற்குள்   உள்ளன. 


விவேக சிந்தாமணியில்  அருணை கோபுரத்தில்  மேவும் கணபதியை   கைதொழுதக்கால்  கிடைக்கும் பலன்களைப் பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது,

அல்லல்போம்  வல்வினைபோம்  அன்னை  வயிற்றிற்பிறந்த
தொல்லைபோம்  போகாத்  துயரம்போம்நல்ல
குணமதிக  மாம்  அருணைக்  கோபுரத்துண்  மேவும்
கணபதியைக்  கைதொழுதக்கால்.


வினாயகரின் ஆறு படை வீடுகளுள் ஒன்று திருவருணை செந்தூர வினாயகர்  மற்ற விநாயகரின் படை வீடுகள்,   விருத்தாசலம்  (ஆழத்து வினாயகர்), திருக்கடவூர் (கள்ள வாரணப் பிள்ளையார்), மதுரை    (முக்குறுணிப் பிள்ளையார்), திரு நாரையூர் ( பொல்லாப் பிள்ளையார்) மற்றும் காசி  (துண்டி வினாயகர்) ஆகியவை ஆகும்.    .

இப்பிரகாரத்திலும் நான்கு பக்கமும் நான்கு கோபுரங்கள் உள்ளன. கிழக்கு கோபுரம் வள்ளாள மகாராஜன் கோபுரம், கி.பி. 1318 க்கும் கி.பி 1343க்கும் இடையில்     ஹொய்சால மன்னனால் கட்டப்பட்டதுஇக்கோபுரம் சம்பந்தப்பட்ட இரு வரலாறுகள் உள்ளன. ஒன்று வல்லாள மகாராஜாவின் ஆணவம் அகற்றப்பட்டது. கோபுரத்தைக் கட்டிய பின் இராஜா மிகவும் அகந்தை கொண்டாம் எனவே எம்பெருமான் திருவிழாக்காலத்தில் இக்கோபுரம் வழியாக செல்ல மறுத்து விட்டார். பின் மனம் வருந்தி மன்னன் வேண்ட பத்தாம் நாள் அன்று மட்டும் செல்ல சம்மதித்தார். இரண்டாவது இக்கோபுரத்தில் இருந்து குதித்த அருணகிரி நாதரை காப்பாற்றி

ஏறு மயிலேறி விளையாடும் முகம் ஒன்று
      ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று
கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
      குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறுபடு சூரரை வதைத்த முகம் என்று
      வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
       ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

என்று திருப்புகழ் பாட வைத்தது இக்கோபுரத்தின் அருகில் தான். எனவே முருகன் கோபுரத்திளையனார் என்று வணங்கப்படுகின்றார். மற்ற மூன்று திசைகளிலும்  கட்டளை கோபுரங்கள் உள்ளன.

வள்ளாள கோபுரத்தைத் தாண்டினால் காலபைரவர் சன்னதி அருகில் பிரம்ம தீர்த்தம், அதற்கு வலப்புறத்தில் யானைகளை கட்டி வைக்கும் புரவி மண்டபம். வல்ளாள கோபுரத்திற்கும், கிளிக்கோபுரத்திற்கும் இடையில் மேலும்  சின்ன நந்தி, சக்தி விலாச சபா மண்டபம், கருணை இல்லம், மற்றும் பிரம்ம லிங்கேஸ்வரர் சன்னதி, வித்யாசுரேஸ்வரர் சன்னதி, வினை தீர்த்த விநாயகர் சன்னதி, நளேஸ்வரர் சன்னதியானைத்திறை கொண்ட விநாயகர் சன்னதிபிச்சை இளையனார் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன.


நான்காவது பிரகாரத்தில் ஒரு கோபுரம் கிழக்கு நோக்கிய கிளி கோபுரம். சம்பந்தாண்டன்சூழ்ச்சியால் பாரிஜாத மலர் கொண்டுவர கூடு விட்டு கூடு பாய்ந்து கிளி ரூபத்தில் சென்ற அருணகிரி நாதரின் மனித உடலை எரித்து விட கிளி ரூபமாக முருகனிடம் சேர்ந்த கோபுரம். அருணகிரி நாதர் கந்தரனுபூதி பாடிய கோபுரம் என்றும் கூறுவர். கிளிக் கோபுரத்திற்குள் நுழைந்தால் முதலில் தரிசனம் தருவது தீப தரிசன மண்டபம். இம்மண்டபம் பதினாறு கால் மண்டபம், பஞ்ச மூர்த்திகள் திருக்கார்த்திகையன்று தீப தரிசனத்திற்காக எழுந்தருளி அருள் பாலிக்கும் மண்டபம், இதற்கு எதிர்ப்புறம் கொடி மரம் மற்றும் பலி பீடம்கிளி கோபுரத்தின் இடப்புறம் பன்னீர் மண்டபமும் கோவில் மடப்பள்ளியும் உள்ளனஇப்பிரகாரத்தில் ஸ்தல விருட்சம் மகிழ மரம் உள்ளது. இம்மரத்தில் குழந்தை வரம் வேண்டுபவர்கள்   தொட்டில் கட்டி நேர்ந்து கொள்கின்றனர். மகிழ மரத்தினடியில் இருந்து பார்த்தால் ஒன்பது கோபுரங்களையும் ஒரு சேர காணலாம்  மற்றும் பங்குனி உத்திரத்தன்று அம்மையப்பர் திருக்கல்யாணமும், பிரம்மோற்சவத்தின் போது பஞ்ச மூர்த்திகள் அலங்காரம் கொண்டருளும் கல்யாண மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை உள்ளன.    வசந்த மண்டபத்தை சுற்றி மற்ற பஞ்ச பூத லிங்கங்களின்    ( சிதம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், காளத்தீஸ்வரர்) சன்னதிகளும்பிடாரி அம்மன் சன்னதியும் உள்ளன. பிடாரி அம்மன் முன் உள்ள கல் திரி சூலம்  வேறெங்கும் காண முடியாத ஒன்றாகும்.

Thursday, December 1, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -9

கங்கோத்ரி  நோக்கி பயணம்
நான்கு ஆலயங்களின் முதல் ஆலயமான யமுனோத்ரியில் அற்புதமான தரிசனம் முடித்துக்கொண்டு பர்கோட் வந்து தங்கினோம். இரவு முழுவதும் மழை கொட்டிக்கொண்டிருந்தது,  அதிகாலையில் எழுந்து பார்த்தபோது மழை இல்லை சுமார் ஏழு மணியளவில்  உத்திரகாசிக்கு கிளம்பினோம், இரவு உத்திரகாசியில் தங்கி பின் அடுத்தநாள் காலை கங்கோத்ரிக்கும் அங்கிருந்து பின் கௌமுக் செல்வதாகவும் அட்டவனை இருந்தது ஆனால் நடந்தது  என்ன?
யமுனோத்ரியிலிருந்து கங்கோத்ரி செல்லும்  பாதை
புறப்படும் இடம்
செல்லும் இடம்
தூரம் கி.மீ
உயரம் மீ
யமுனோத்ரி (நடை)
ஜானகிசட்டி
6
2576
ஜானகி சட்டி
பார்கோட்
41
1828
பார்கோட்
பிரம்மகால்
40
1158
பிரம்மகால்
தாராசு
15
1036
தாராசு
உத்ரகாசி
26
1158
உத்ரகாசி
கங்கோரி
4
1219
கங்கோரி
மனேரி
6
1372
மனோரி
பாட்வாரி
19
1677
பாட்வாரி
சுகி
32
2744
சுகி
ஜாலா
7
2439
ஜாலா
ஹர்சில்
6
2591
ஹர்சில்
லங்கா
13
2652
லங்கா
பைரான்காட்டி
3
2652
பைரான்காட்டி
கங்கோத்ரி
10
3140
ரிஷிகேசத்திலிருந்து கங்கோத்ரி நேராக செல்பவர்கள் நரேந்திர நகர், சம்பா, தெஹ்ரி வழியாக உத்தரகாசி அடைந்து பின்னர் மேலே சொன்ன வழியில் கங்கோத்ரியை அடையலாம். தற்போது கங்கோத்ரி வரையில் வாகனங்கள் செல்கின்றன, நடைப்பயணத்திற்கு அவசியம் இல்லை. 


முதல் நிலச்சரிவை தானே சரி செய்யும் மக்கள்
 
பார்க்கோட்டில் இருந்து கிளம்பி யமுனோத்ரி - கங்கோத்ரி பிரிவு வரை பயணம் செய்து வலப்பக்கமாக ( இடப்பக்கம் செல்லும் பாதை யமுனோத்ரிக்கு செல்கின்றது)   NH-94ல் சுமார் இரண்டு  கி.மீ பயணம் செய்திருப்போம். ஒரு நிலச்சரிவு என்று பேருந்து நின்று விட்டது எங்களுக்கு முன்னால் சுமார் ஐந்து வண்டிகள்தான் இருந்தன. ஆகவே நிலச்சரிவு அப்போதுதான் ஏற்பட்டிருக்க வேண்டும். வழிகாட்டி தொலைப்பேசி மூலம் பார்கோட் சுற்றுலா பவனத்திற்கு செய்தி அனுப்பினார்.    சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்தோம்,  இது முக்கிய பாதை அல்ல என்பதாலோ, அல்லது விடாமல் பெய்கின்ற அடாத மலையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாலோ,  நிலச்சரிவை சரி செய்ய JCBஇயந்திரம் எதுவும் வரவில்லை. 

JCB இயந்திரம் ஒரு நிலச்சரிவை சரி செய்யும் காட்சி
கூடியிருந்த மக்களே நிலச்சரிவை சரி செய்ய முனைந்தனர். இந்த இடத்தில் சரிவு சேறாக இல்லாமல்  சிறிது ரப்பிஷ் என்போமே அது போல கருங்கல் தூளாக இருந்ததால். முதலில் விழுந்து கிடந்த  மரங்களை வெட்டி ஆற்றுக்குள் தள்ளினோம். பின்னர் மண்ணை சிறிது சமப்படுத்தி வண்டிகள் செல்வதற்கு ஏதுவாக செய்து முதலில் ஜீப் போன்ற சின்ன வாகனங்களை போகச்செய்து மண் சிறிது கெட்டியானவுடன் எங்கள் பேருந்தும் அந்த நிலச்சரிவை வெற்றிகரமாக கடந்தது. லேசாக நின்றிருந்த மழை மீண்டும் துவங்கியது, ஆனால் கொட்டவில்லை தூறல் போட்டுக்கொண்டிருந்தது.   வழியில் நின்ற வண்டிகளில் பயணம் செய்து அனைவருமே வந்து இப்பணியில் கலந்து கொண்டனர். குறிப்பாக இராஜஸ்தானத்தில் இருந்து வந்த ஒரு பேருந்தில் பயணம் செய்து ஒரு இளைஞர் குழு வழியெங்கும் இதுமாதிரி சேவை செய்து செய்தனர்.  பிறருக்கும் உதவும் நல்ல எண்ணம் கொண்ட அவர்களை வாழ்த்தினோம். சுமார் மூன்று மணி நேரம் ஆகியது அந்த முதல் நிலச்ச்ரிவைக் கடக்க இனி வரப்போகும் நாட்களிலும் இதை விட பெரிய நிலச்சரிவுகளை சந்திக்க உள்ளோம் என்று அப்போது உணரவில்லை நாங்கள்.
அங்கிருந்து சுமார் ஒரு கி.மீ சென்றிருப்போம்  ஒரு பெரிய மரம் சாலையின் குறுக்ககாக கிடந்தது வேறு வண்டி எதுவும் இல்லை என்பதால் முதல் வண்டி சென்றதற்குப்பிறகு நாங்கள் வருவதற்குள் இந்த மரம் விழுந்திருக்க வேண்டும் சேற்றிலே இறங்கி அனைவருமாக அந்த மரத்தை ஒரமாக தள்ளி மீண்டும் பயணத்தை துவக்கினோம், நடுவில் வந்த ஒரு கிராமத்தில் காலை உணவை உண்டோம், பார்க்கோட் பள்ளத்தாக்கில் உள்ளது என்று பார்த்தோம் அல்லவா?  எனவே  முதலில் மலையில் ஏறி பின் அடுத்த பக்கம் கீழிறங்கத் துவங்கினோம், நடுவே புதுப்புனலுடன் நுங்கும் நுரையுமாக ஒரு ஆறு ஓட இரு பக்கமும் பச்சைக்கம்பளம் போர்த்துக்கொண்டு முகத்தில் தாடி முளைத்துள்ளது போல கூம்பு போல குச்சி குச்சியான மரங்களுடன், நடு நடுவே பாம்பு போல வளைந்து செல்லும் பாதைகள்   என்று அருமையான காட்சி கண்ணில் பட்டது அப்படியே கீழே இறங்கி பிரம்மகால் என்ற ஊரை நெருங்கினோம். 
 
அப்போது பார்த்தால் சுமார் 20க்கு மேற்பட்ட வண்டிகள் நின்றிருந்தன இன்னும் ஒரு நிலச்சரிவு என்பதை உணர்ந்து கொண்டோம். வழிகாட்டி வெளியே சென்று நிலவரம் எவ்வாறு உள்ளது என்று அறியச்சென்றார். அவர் திரும்பி வந்து கூறிய செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. இங்குள்ள நிலச்சரிவு எப்போது சரியாகும் என்று தெரியவில்லை எனவே இங்கே அறைகள் எடுத்து தங்கிக்கொள்ளவும் என்று அறிவுறை கூறினார். நாங்களும் நாக்ராஜ் காம்வ்லா என்ற அந்த கிராமத்தில் இருந்த ஒரு விடுதியில் நான்கு அறைகளை எடுத்து  தங்கினோம். 
 
நாகராஜ் காம்லாவின் அழகிய காட்சிகள்





நேரமாகியதே தவிர நிலச்சரிவு சரியாகவில்லை இரு பக்கமும் வண்டிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போனது கிராமத்தில் இருந்த உணவுப் பொருள்கள் எல்லாம் தீர்ந்து விட்டது. வழியில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி விட்டது.  இரவு பலர் ஒன்றும் இல்லாமல் தங்களிடம் இருந்த இனிப்பு, காரம் ஆகியவற்றை உண்ணும்படி நேரிட்டது. பலர் திறந்த வெளியில் குளிரில் தூங்கினர். நாங்கள் வழிகாட்டி கூறியபடி அறை எடுத்ததாக் சிரமம் ஒன்றும் இருக்கவில்லை, ஆனால் எங்கள் திட்டம் அனைத்தும் மாறி விடுமே, எப்போது இங்கிருந்து செல்ல முடியும் என்ற கவலை சேர்ந்து கொண்டது.மாலை ஒருவாறு மழை நின்றது ஆயினுக் காலம் காலம் இல்லாத காலத்தில் பெய்த பெருமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு என்பதால் இந்த கிராமத்திற்கு ஒன்றும் முக்கியத்துவம் கிட்டவில்லை.   சாயுங்காலம் நிலச்சரிவை பார்த்துவிட்டு,  தேவேந்திரன் அவர்கள் நமது சாப்பாட்டிற்கு  ஏங்கியதால் நடந்து பிரம்மகால் என்னும் ஊருக்கு சென்று தக்காளிப் பழம் வாங்கிக்கொண்டு இரசம் வைத்து சாப்பிட்டோம். இரவில் தத்துவ விசாரம் செய்தோம். காலை எழுந்து  முதலில் அருகில் இருந்த ஒரு கோவிலுக்கு மலையேறி சென்று சீக்கிரம் இங்கிருந்து கிளம்பி செல்ல வேண்டும் என்று வேண்டிக்கொண்ட்டு வந்தோம்.  நிலச்சரிவு வரை சென்று பார்த்துவிட்டு வந்தோம், இரவு பெய்த மழையால் இன்னும் சகதி ஆகிவிட்டது, இதில் செல்ல முயன்ற ஒரு ஜீப் வேறு மாட்டிக்கொண்டது.  எப்போது சரியாகும் என்று சுமார் ஆயிரம் யாத்திரிகள் இரு பக்கமும் காத்துக் கிடந்தோம்.

நிலச்சரிவில் மாட்டிக்கொண்ட ஜீப் (சொக்கலிங்கம்)


 நிலச்சரிவு சரியாக காத்திருக்கும் இராஜஸ்தானி முதியவர்கள்

இதையெல்லாம் பார்த்து இரசிக்கும் கிராமத்து சிறுவர்கள்

இந்த சமயத்தில் இங்கிருக்கும் கிராமங்களின் எளிய மக்கள் எவ்வாறு கடுமையாக உழைத்து இங்கு வசிக்கின்றனர் என்று நேரில் பார்க்க ஒரு வாய்ப்புக்கிட்டியது. அருமையான மலர்கள். நெடிதுயர்ந்த பைன் மரங்கள், மலை ஆகியவற்றின் புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினோம். எப்படியும் கோமுக் செல்வது கடினம் எப்படியாவது நான்கு ஆலயங்களையும் தரிசனம் செய்யும் வாய்ப்பாவது கிட்ட வேண்டும் என்று  இறைவனை  துதித்துக்கொண்டு இருந்தோம்.

GMVN மூலமாக சென்றதால் இவ்வாறு எதிர்பாராமல்  தங்குவதற்கு அவர்களே பணம் செலுத்திவிடுவதாக ஒப்புக்கொண்டனர், ஆனால் அவர்களின் Asst. General Managerஉடன் திரு. தனுஷ்கோடி அவர்கள் பேசி சம்மதிக்க வைத்தார் ஆனால் வழிகாட்டியிடம் அதிக பணம் இல்லை என்பதால் எங்களை தரச்சொன்னார் பின்னர் திருப்பி தருவதாக வாக்களித்தார். இவ்வாறு எங்கோ  இமய மலையின் ஒரு குக்கிராமத்தில் மாட்டிக்கொண்ட அனுபவமும் கிடைத்தது.
 கல்யாணி நிலசரிவு
இரண்டாம் நாள்(9/9/10) அன்று காலை 9 மணியளவில் JCB இயந்திரம் வந்து முதலில் மாட்டிக்கொண்ட ஜீப்பை இழுத்து அகற்றியது. பின்னர் பன்னிரண்டு மணியளவில் முதல் வண்டி நிலச்சரிவை கடந்தது. இவ்வளவு வண்டிகள் இருபுறமும் நின்றதால் நாங்கள் கிளம்பும் போது மணி மூன்றாகிவிட்டது அங்கிருந்து சுமார் ஒரு கி.மீதான் சென்றிருப்போம் கல்யாணி என்ற ஊரின் அருகில் இன்னொரு நிலச்சரிவு,பெரிய ஒரு பாறை பாதையில் கிடந்தது அதை அனைவரும் சேர்ந்து நகர்த்தி போட்டுவிட்டு சுமார் அரை மணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பினோம். இங்கும் பாதை இரட்டிப்பாகும் பணி நடந்து கொண்டிருந்தது. பாதைக்காக மலையை செதுக்கியதால் ஏற்பட்ட சரிவுகளே அதிகம். நம்முடைய வசதிக்காக நாம் செய்யும் செயலால்தான் இவ்வளவு துன்பங்கள் ஏற்படுகின்றன என்பது கண்கூடு. வழியெங்கும் நிலச்சரிவுகள் வீடுகள், மரங்கள், மின்சாரக்கம்பங்கள் எல்லாம் மானாவாரியாக சாய்ந்து கிடந்தன. 

மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன
பாகீரதி ஓடி வரும் அழகு

  மலை ஆடுகள்
 
 பாகீரதிக்கரையில் காத்திருக்கின்றோம்
சுமார் நூறு வண்டிகள் ஒன்றான் பின் ஒன்றாக சென்றது எதோ ஊர்வலம் செல்வது போல இருந்தது. வழியில் ஏற்பட்ட சேதங்களைப் பார்த்துக்கொண்டும் நடுவில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை பார்த்துக்கொண்டும் மிகுந்த சிரமத்துடன் தாராசு அடைந்து அங்கிருந்து தெஹ்ரி அணையை பார்த்துக்கொண்டே உத்தர காசிக்காக திரும்பும் வழியில்  பாகீரதி நதிக்கரையில் இன்னொரு நிலச்சரிவு சூரியன்  மலையில் மறையும் காட்சி அருமையாக இருந்தது. புகைப்படம்  சலனப்படம் எடுத்துக்கொண்டோம். சுமார் இரண்டு மணி நேரம் அங்கே காத்திருந்தோம். இரவில் வண்டிகள் மலைப் பிரதேசத்தில் ஒடாது என்றாலும் வேறு வழியில்லாததால் பயணம் செய்து இரவு பத்து மணியளவில் உத்தரகாசி அடைந்தோம். அடுத்த நாள் கங்கோத்ரி செல்ல முடிந்ததா? என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? சிறிது பொறுங்கள் விடிந்தவுடன் தெரிந்து விடும்.