Friday, November 2, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -32

ஹரித்வாரம் 


ஹரி-கா-பௌரியின் மணிக்கூண்டு

இமயத்தின் ஒரு உச்சியில் கோமுக்கில் உற்பத்தியாகும் பாகீரதி பல்வேறு ஆறுகளுடன் கூடி மலைகளில் சுமார் 253 கி.மீ  பாய்ந்தோடி வந்து சமவெளியைத்தொடும் இடம்தான் ஹரித்வாரம். துவாரம் என்றால் கதவு, ஆம் பல்வேறு புண்ணியத்தலங்களுக்கு ஹரித்வார்தான் நுழைவு வாயில். ஹரித்வாரம் என்பதை ஹரியின் நுழைவு வாயில் அதாவது பத்ரிநாத்திற்கான வாயில், ஹரனின் நுழைவு வாயில் அதாவது கேதார்நாத்திற்கான வாயில் என்றும் கொள்ளலாம். மேலும் இந்நகரை கங்கா துவார் மற்றும் சொர்க்க துவார், மாயாபுரி, மாயா க்ஷேத்திரம் என்றும் அழைக்கின்றனர். உத்தராகாண்ட் மாநிலத்தின் மேற்குப்பகுதியான கர்வால் பகுதியில் அமைந்துள்ள அனைத்து புண்ணிய தலங்களுக்கும்  செல்ல நாம் ஹரித்வாரை கடந்துதான் செல்ல வேண்டும்.

சிவாலிக் குன்றுகளின் அடிவாரத்தில் இந்த புண்ணிய நகரம் கடல் மட்டத்திலிருந்து 951 மீ உயரத்தில் அமைந்துள்ளது. நமது பாரதபூமியின் முக்தி நகரங்கள் ஏழினுள் ஒன்று இந்த ஹரித்வாரம் ஆகும். மற்ற முக்தி நகரங்கள் துவாரகை, மதுராபுரி, காஞ்சிபுரம், அயோத்தி, அவந்திகா, காசிஆகியவை ஆகும்.  இந்த ஏழு தலங்களில் முக்தி அடைந்தால் மீண்டும் மனித பிறப்பு இல்லை என்பது ஐதீகம்



விஷ்ணு பாதத்தில் கங்கை பாயும் அழகு




பண்டைக்காலத்தில் இங்கே கங்காத்வார் என்னும் கோயில் இங்கு இருந்ததாக நம்பப்படுகின்றது.  ஆதி காலத்தில் பாகீரதனின் முன்னோர்களான சகரர்களை எரித்த கபில முனிவர் தவம் செய்துள்ளார். எனவே இத்தலம் கபில ஸ்தலம் என்றும் அழைக்கப்படுகின்றது. சமவெளியை அடைந்த கங்கை இங்கே பல்வேறு கால்வாய்களாக ஓடுகின்றாள். கங்கை இங்கு  இரண்டு கி.மீ அகலம். மிகவும் புராதானமான இந்நகரில் பல புண்ணிய தலங்கள் உள்ளன, அவற்றுள் முதன்மையானது ஹரி-கா-பௌரி என்னும் படித்துறை. இங்குதான்  ஹரியின்  பாதம் (விஷ்ணு பாதம்) அமைந்துள்ளது. பத்ரிநாத்திலிருந்து ஹரித்வார் வரை உள்ள விஷ்ணுவின் பாதம் இங்குதான் அமைந்துள்ளது.  மாலையில் கங்கைக்கு காட்டப்படும் ஆரத்தி ஹரியின் பாதத்திற்கு காட்டப்படும் ஆரத்திதான். இந்த கங்கையின் கட்டத்தை கட்டியவர் மால்வாவின் அரசன்  யசோதர்மன் ஆகும்.



சண்டி தேவி உடண் கடோலா இழுவை வண்டிகள் 

குரு மேஷ இராசியில் பிரவேசிக்கும் போது 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும்  முழு கும்பமேளாவும் , ஆறு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் அர்த்த(பாதி)கும்பமேளாவும் இந்த படித்துறையில்தான் நடைபெறுகின்றது. மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் நாகத்தை கயிறாகவும் கொண்டு கூர்ம அவதாரம் எடுத்து மஹா விஷ்ணு மந்தார மலையை தாங்க பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது முதலில் ஆலம் (விஷம்) வந்தத, வலி தாங்காமல் வாசுகியும் விஷத்தை கக்கினாள். இரண்டும் சேர்ந்து ஆலாலமாகி அனைவரையும் மிரட்ட, தேவர்கள் சிவபெருமானை சரண் அடைய அந்த பரம கருணாமூர்த்தி அந்த ஆலாலத்தை எடுத்து விழுங்கினார், அம்பிகை தன் தளிரண்ண கரத்தினால் அவ்விடத்தை ஐயனின் கண்டத்திலேயே நிறுத்தினாள் எனவே ஐயனின் கண்டம் நீலநிறமானது அவரும் நீலகண்டரானார். பின்னர் தேவர்களும்,  அசுரர்களும் பாற்கடலை   கடைந்தனர் ஐராவதம், உச்சிரவசு, கற்பக மரம், காமதேனு, மஹா லக்ஷ்மி, சிந்தாமணி, எல்லாம் பாற்கடலில் இருந்து வந்தது. இறுதியாக அமிர்த கலசத்துடன் தன்வந்திரி வந்தார். பின்னர் அந்த அமிர்த கலசத்தை கைப்பற்ற தேவர்களும், அசுரர்களும் முயன்றனர் இவ்வாறு அவர்கள் போட்டியிட்ட போது அமிர்தத்துளிகள் நான்கு இடங்களில் சிந்தியது. இந்த நான்கு தலங்களிலும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுகின்றது. கும்பமேளா நடைபெறும் மற்ற தலங்கள் நாசிக், அலகாபாத்  மற்றும் உஜ்ஜயினி ஆகும். பின்னர் மஹாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து சாதுர்யமாக தேவர்களுக்கு அமிர்தத்தை அளித்தார். தேவர்களும் அமரர்கள் ஆனார்கள்.


 
மேலிருந்து ஹரித்வார் நகரின் காட்சி
(இழுவை வண்டியில் செல்லும் போது கிடைக்கும் காட்சி)



கங்கைக்கரை முழுவதும் கட்டிடங்களும் கோயில்களும் நிறைந்திருக்கின்றன. மேலும் நகர் முழுவது எண்ணற்ற வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான சில, மலை மேல் அமைந்திருக்கும் மானஸதேவி ஆலயம் மற்றும் சண்டிதேவி ஆலயம் ஆகும் இவை இரண்டும் சக்தி பீடங்கள் ஆகும். இவ்வூரில் சித்தி பீடம் அதாவது மன விருப்பத்தை பூர்த்தி செய்யும் தலங்கள் என்று அழைக்கின்றனர். தக்ஷன் தவம் செய்த குண்டமும், சதி தேவி தன் உடலை தியாகம் செய்த இடம் தக்ஷேஸ்வரர் மஹாதேவ் ஆலயம் உள்ளது. அன்னையின் இருதயம் விழுந்த இடம்  மாயா தேவி ஆலயம்  ஹரித்வாரின் மூன்றாவது சக்தி பீடம்  ஆகும். இதல்லாமல் ம்ருத்யுஞ்சய் மஹாதேவ் ஆலயம், பைரவர், நாராயணர், பீமா கோடா , பாரத மாதா ஆலயங்கள் உள்ளன. பாரத மாதா ஆலயத்தில்  ஒன்பது அடுக்கடுக்கான மாடங்களில் ஒவ்வொரு மாடத்திற்கும் பாரத திருநாட்டில் இருந்த ஆன்மீக மற்றும் அரசியல் முன்னோடிகளை கடவுள்களைப் பற்றிய குறிப்புக்களும் சிலைகளும் என அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.   ஹரித்வாரில் மற்ற பார்க்கவேண்டிய இடங்கள் சப்தரிஷி ஆசிரமம் மற்றும் சப்த் சரோவர் ஆகும். காஸ்யபர், பரத்வாஜர், அத்ரி, கௌதமர், ஜமதக்னி, விஸ்வாமித்திரர் என்னும் சப்த ரிஷிகள் இங்கே தவம் செய்த போது கங்கை அவர்களது தவத்திற்கு எந்த   இடையூறும் ஏற்படாமல் இருக்க ஏழு அருவிகளாக ஓடினாள் என்பது ஐதீகம். பீமா கோடா குளம்  பீமன் குளிப்பதற்காக தனது முழங்காலினால் உருவாக்கியது என்பது ஐதீகம்.

கும்பமேளாவைத் தவிர  கங்கா தசரா மற்றும் காவண்ட் மேளா ஆகிய இரு பண்டிகைகள்  ஹரித்வாரில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பகீரதன் செய்த கடுந்தவத்தின் பலனாக  கங்கைத்தாய் முதன் முதலில் தரையைத்தொட்ட நாள் வைகாசி மாத வளர்பிறை 10ம் நாள் கங்கா தசரா  என்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில்தான் சிவபெருமான் முதன்முதலாக தன் சடாமுடியிலிருந்து கீழே விடத்தொடங்கினார் என்பது ஐதீகம். நம்மூரில் முருகனுக்கு காவடி எடுப்பது போல சிரவண மாதம் ( நம்முடைய ஆடி மாதம் ) அமாவாசைக்கு 10 நாள் முன்பிருந்து  காவடியில் கோமுக்கிலிருந்து ஹரித்வார் வரை கங்கை நீரை சுமந்து சென்று தங்கள் ஊரில் உள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்கின்றனர். ஆடி மாதத்தில் ஹரித்வாரில் லட்சக்கணக்கான   சிவபக்தர்கள் இவ்வாறு கங்கை நீரை சிவபெருமானின் அபிஷேகத்திற்காக காவடி சுமந்து செல்ல  கூடுகின்றனர்.ஒரு நீண்ட மெல்லிய மூங்கிலில் இரண்டு புறமும துணியில் தொங்கும் தூளிகள் அதனுள் ஒரு சிறிய பித்தளை குடஙகள். இந்த காவடியை இவர்கள் கான்வர் அல்லது கான்வட் என அழைக்கிறாகள். இப்படி பயணம் செல்பவர்கள் கான்வரியா  அல்லது கான்வடியா என்று அழைக்கப் படுகின்றனர். இப்பண்டிகையும் கான்வட் மேளா என்று அழைக்கப்படுகின்றது. இது வரை ஹரித்வாரின் சிறப்புகளை கண்டோம், இனி நாங்கள் ஹரித்வாரில் எந்த ஆலயங்களுக்கு செல்ல முடிந்தது என்று பார்க்கலாமா? 

சண்டி தேவி ஆலயம் 

இந்த வருட இரண்டு ஆலய யாத்திரையின் எட்டாம் நாள்  02.09.2011 அன்று காலை எழுந்து   ஹரித்வாருக்கு ஆட்டோ மூலமாக வந்து சேர்ந்தோம் அங்கு முதலில் ஹரி-கா-பௌரி கட்டத்தில் முதலில் புனித நீராடினோம். தண்ணீர் மிகவும் குளிராகத்தான் இருந்தது. இங்கு பக்தர்கள் குளிப்பதற்கு ஏதுவாக  இரும்பு சங்கலிகள் மற்றும் கம்பி தடுப்பு அமைத்துள்ளனர். முதலில் மலை மேல் அமைந்துள்ள மன்ஸா தேவி கோவிலுக்கு சென்றோம். மன்ஸா தேவி கோவிலுக்கு படிகள் ஏறியும் செல்லலாம். அல்லது இழுவை வண்டி (கேபிள் கார்) மூலமாகவும்   செல்லலாம். சண்டி தேவி உடண் கடோலா என்ற நிறுவனத்தினர் இழுவை வண்டியைத் தொடரை இயக்குகின்றனர். சண்டி தேவியிலும்  இவர்களே கேபிள்காரை இயக்குகின்றனர். இரண்டு  ஆலயங்களுக்கும் மற்றும் இவற்றின் இடையில் செல்வதற்குமாக சேர்த்து ஒன்றாக டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம். நாங்கள் சென்ற போது மிகவும் கூட்டமாக இருந்ததால் டிக்கெட் தருவதை நிறுத்தி வைத்திருந்தனர். என்ன செய்வது படியேறி சென்றால் நேரம் அதிகமாகுமே என்று யோசித்துக் கொண்டிருந்த போது  தனுஷ்கோடி அவர்கள் தனக்கு தெரிந்த ருத்ராக்க்ஷங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்கும் கடைக்கு அழைத்து சென்றார். அங்கு சென்று ருத்திராக்ஷ மாலைகள், முத்து மாலைகள், சுவாமி சிலைகளுக்கு அலங்காரப் பொருட்கள், கவரி ஆகியன வங்கினோம். கடைக்காரரே தனது கடை வேலைக்காரரை அனுப்பி அனைவருக்கும் டிக்கெட் கிடைக்க ஏற்பாடு செய்தார்.  
    
இழுவை வண்டியில் செல்வதே ஒரு இனிமையான அனுபவம். பயண தூரம் சுமார் 540 மீட்டர் தூரம். ஒரு பெட்டியில் நான்கு பேர் பயணம் செய்யலாம். கண்ணாடி வழியாக சுற்றுப்புறத்தை நன்றாகப் பார்க்கலாம். மேலே செல்ல செல்ல ஹரித்வாரின்  முழு தரிசனமும் நன்றாக தெரிகின்றது. கங்கை ஆற்றையும் அதன் இரு கரையிலும் உள்ள கட்டிடங்களையும் தூரத்தில் உள்ள சண்டி தேவி ஆலயத்தையும் ஸ்பஷ்டமாக காணலாம்  செல்லும் வழியெங்கும்  அழகான மலர் தோட்டங்கள வைத்து பராமரித்து வருகின்றனர். மேலிருந்து பார்க்கையில் சரிவில் பலவிதமான வண்ணங்களில் இந்த மலர்த் தோட்டங்களை காண்பதே ஒரு சுகமான அனுபவம் என்பதில் ஐயமில்லை.  சுமார் 1  நிமிடத்தில் மேலே சென்று சேர்ந்தோம் ஆனால் இந்த பத்து நிமிடப்பயணத்திற்காக சுமார் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.



                                                                            மன்ஸா தேவி ஆலய கோபுரம்  

சக்தி பீடமானன்சா தேவி ஆலயம் சிவாலிக் குன்றுகளின் பில்வ மலையில் அமைந்துள்ளது. அன்னை பார்வதியின் ஒரு அவதாரம்தான் மானசா தேவி. மனஸ் என்றால் மனது, பக்தர்களின் மன கவலைகளை எல்லாம் நீக்கி அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதாலும், காஷ்யப ரிஷியின் மனதில் இருந்து தோன்றிய மானச புத்ரி என்பதாலும் அன்னைக்கு இந்த திருநாமம். அன்னைக்கு நேர்ந்து கொள்பவர்கள் ஒரு கயிற்றை வாங்கி பிரகாரத்தில் உள்ள மரத்தில் கட்டி விட்டு செல்கின்றனர். தங்கள் பிரார்த்தனை நிறைவேறிய பின்னர் பின்னொரு தடவை வந்து அன்னைக்கு பூஜை செய்து விட்டு அந்த கயிற்றை அவிழ்த்து செல்கின்றனர். எப்போது சென்றாலும் கோவிலில் கூட்டம்தான். படிகளில் இறங்கி கீழே சென்று வரிசையில் நின்று அம்மனை தரிசிக்க சென்றோம். தலையில் ஜெய் மாதா தீ! என்று அச்சிடப்பட்ட சிவப்பு துணிகளை கட்டிய பக்தர்கள் பஜனை செய்து கொண்டே அன்னையை ஓம் சக்தியை தரிசிக்க செல்கின்றனர். கர்ப்ப கிரகத்தில் இரண்டு தெய்வ மூர்த்தங்கள் உள்ளன ஒரு அம்மனுக்கு ஐந்து முகங்களும் பத்து கரங்களும் உள்ளன. இன்னோரு மூர்த்தத்திற்கு பதினெட்டு கரங்கள் உள்ளன. மனதார அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக்கொண்டே மிக்க மன அமைதியுடன் வெளியே வந்து தல மரத்தை வணங்கி விட்டு இழுவை வண்டி மூலம் கீழே வந்து சேர்ந்தோம். நவராத்ரி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு குழுமி அன்னையை வணங்கி செல்கின்றனர். 
.
மன்ஸா தேவி ஆலயம் ஹரித்வார் நகரின் உள்ளே ஹரி-கா-பௌரிக்கு அருகிலேயே உள்ளது. ஆனால் சண்டி தேவி ஆலயம் ஹரித்வாரில் இருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் ஹரித்வாரிலிருந்து ரிஷிகேஷ் செல்லும் ஒரு சுற்றுப்பதையில் உள்ளது  உள்ளது. நாங்கள் மொத்த டிக்கெட் வாங்கி விட்ததால் இவர்களின் வண்டி மூலமாக  சண்டி தேவி ஆலயத்திற்கு சென்றோம். அங்கும் சரியான கூட்டம் சுமார் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. அதன் பின்னும் வண்டியில் நின்றே செல்லுகின்றோம் என்று கூறி கிடைத்த முதல் வண்டியிலேயே ஏறி சென்றோம் இல்லாவிட்டால் இன்னும் நேரம் அதிமாக ஆகிவிட்டிருக்கும்  இவ்வாறாக  சண்டி தேவி வந்தடைந்தோம். 


        சண்டி தேவி ஆலய முகப்பு வாயில் 

சண்டி தேவி ஆலயமும் மலையின் மேல் அமைந்துள்ளது  இந்த மலைக்கு பெயர் நீலாசலம் என்று பெயர்  இங்கும் படியேறியும் செல்லலாம் ரோப் கார் மூலமாகவும்  செல்லலாம். ரோப்வேயின் நீளம் 740 மீ உயரம் 208 மீ.இந்த ஆலயத்தையும் தங்கள் மன விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் சித்தி பீடமாக பக்தர்கள் கொண்டாடுகின்றனர். துஷ்டர்களை அழித்து பக்தர்களை காக்கும் ஜகதம்பா பார்வதி தேவி ,  சும்ப நிசும்ப அசுரர்களை வதம் செய்ய  மஹா த்ரிபுர சுந்தரியாக அவதாரம் செய்து  இமய மலை சாரலுக்கு வந்தாள். அன்னையின் பேரழகைக்கண்டு சும்பன் அவளை மணக்க விரும்பினான். அன்னை மறுக்க தனது தளபதிகளான சண்ட முண்டர்களான  அனுப்பினான். அவர்களை அன்னையின் திருமேனியிலிருந்து தோன்றிய காளிகா வதம் செய்தாள். பின்னர் தானே  சும்ப நிசும்பர்களை வதம் செய்து அன்னை மனிதர்களையும் தேவர்களையும் காப்பாற்றினாள்.   இதனால்  அன்னை சாமுண்டி,  சண்டி, சண்டிகா என்றும் அழைக்கப்படுகின்றாள். துஷ்ட நிக்ரஹம் முடிந்து  திரும்பிசெல்லும் போது  அன்னை இங்கே தங்கியதாக ஐதீகம். ஒரு சமயம் அன்னை ஒரு ஸ்வயம்புவாக  தூணில் வெளிப்பட்டாள்.  இன்றும் அந்த எண் கோண தூண் புனிதமானதாக வணங்கப்படுகின்றது.  அன்னையின் திருஉருவச்சிலையை 8ம் நூற்றாண்டில் ஸ்தாபிதம் செய்தார். அன்னையின் உக்கிரம் கருதி வழிபாடுகள் இல்லாமல் போய்விட்டது. 1929ல் காஷ்மிரின் அரசன் சுஸத் சிங் தற்போதைய கோவிலைக்கட்டினார். பின்னர் பக்தர்கள் பெருமளவில்  வர ஆரம்பித்தனர் .தற்போது தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனிடம் தங்கள் மனக்குறைகளை கூறி செல்கின்றனர். அவளருளால் அவை அனைத்தும் நீங்குகின்றன. தேவி மஹாத்மியத்தில் சிறப்பிக்கபடுபவள் சண்டி. மஹா காளி, மஹா லக்ஷ்மி, மஹா சரஸ்வதி மூவரும் சேர்ந்த சக்தியே சண்டி, நவராத்ரி சமயத்தில் சண்டியை வணங்குவது மிகவும் சிறப்பானது. எனவே நவராத்திரி சமயத்தில் பக்தர் இங்கு குவிகின்றனர். மேலும் சண்டி சௌதாஸும் இங்கு விசேஷம். இரண்டு ஆலயங்களிலும், தோல் பொருட்களை அணிந்து கொண்டு செல்லக்கூடாது. மாமிசம் சாப்பிட்டவர்களும்,மது அருந்தியவர்களுக்கும் அனுமதி இல்லை. 

அன்னையை மூல மந்திரம் ஜபித்து கண்ணை மூடி வணங்கி நின்ற முடித்து கண்ணை திறந்த போது  ஒரு ஆச்சரியம் நடந்தது. பண்டா என்ன நினைத்தாரோ தெரியவில்லை அன்னைக்   சாற்றிய சுன்ரி (முக்காடு) ஒன்றை அளித்தார். நம்மூரில்தான் முக்காடு என்பது இழிவாக கருதப்படுகின்றது. ஆனால் வடநாட்டில் பெண்கள் எல்லாம் முக்காடு அணிவதால் அது மங்களமானதாகவே கருதப்படுகின்றது. குறிப்பாக எல்லா அம்மன் கோவில்களுக்கும் அம்மனுக்கு சிவப்பு நிற  தங்க சரிகைகள் கூடிய  இந்த சுன்ரியை அர்ப்பணம் செய்கின்றனர். அம்மன் அருளால்தான் அவளுக்கு சாற்றிய வஸ்திரம் அடியேனுக்கு கிடைத்தது. பின்னர் என்னுடன் பணிபுரியும் அன்பரிடம் விசாரித்தேன் அவர் அம்மனுக்கு சாற்றிய சுன்ரியை பெண்கள் கல்யாணம் ஆகிச் செல்லும் போது சீதனமாக கொடுத்து அனுப்புவோம். தாங்களும் அவ்வாறே இந்த வஸ்திரத்தை பூஜை அறையில் வைத்திருந்து உங்கள் பெண்ணுக்கு திருமணம் ஆகும் போது அவளுக்கு கொடுத்து அனுப்புங்கள் அம்மன் அருள் அவளுக்கு கிட்டும் என்று கூறினார். எல்லாம் அவள் அருள்.



முக்தி தாயினி
மகரவாகினி
கங்கா மய்யா கீ ஜே


இவ்வாறு அன்னையின் அருள் பெற்று வெளி வந்த போது அருகிலேயே அஞ்சனாதேவியின் ஆலயம் உள்ளது என்று கூறினார்கள். அங்கு சென்று அனுமனின் அன்னையை தரிசனம் செய்தோம். குழந்தை அனுமனை மடியில் தாங்கிய தாய்மைக் கோலத்தில் செந்தூர மேனியளாய் அஞ்சனையை வணங்கிவிட்டு பின் கீழிறங்கி பட் பட் ஆட்டோ பிடித்து கங்கா ஆரத்தியை காண ஹரி-ஹா-பௌரி வந்து சேர்ந்தோம். கங்கா ஆரத்தி எப்படி இருந்தது என்று அடுத்த பதிவில் காணலாமா அன்பர்களே?






Friday, October 26, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -31


தேவப்ரயாகையென்று வழங்கும்

கண்டமென்னுந் திருப்பதி

பாகீரதியும் அலக்நந்தாவும் சங்கமமாகி 
கங்கையாகப் பாயும் அழகு 


தேவபிரயாகையின் எழிற் தோற்றம்  



செந்தூர அனுமன் 

இவ்வாறு கட்டு ஷ்யாமின் கதையைகேட்டுக் கொண்டே தேவப்பிரயாகையை அடைந்தோம். ஹரித்வாரிலிருந்து பத்ரிநாத் அல்லது கேதார்நாத் நோக்கி செல்லும் போது நாம் முதலில் தரிசிக்கும் ப்ரயாகை( சங்கமம்) தேவப்ரயாகையாகும். ரிசிகேசிலிருந்து 70 கி..மீ தூரத்தில் உள்ளது.  கோமுக்கில் உற்பத்தியாகும் பாகீரதியும் வஸுதராவில் தோன்றி பல்வேறு சங்கமங்களைக் கண்டு பாய்ந்து வரும் அலக்நந்தாவும் சங்கமமாகி  புனித கங்கையாக மாறுவது இந்த தலத்தில்தான்.  பத்ரிநாத்திலிருந்து ஹரித்வார் வரை பெருமாளின் விராட ரூபம் என்பது ஐதீகம். அந்தப்பெருமானின் நாபிக்கமலம்தான் தேவப்ரயாகை. தசரத சக்ரவர்த்தியும், பின்னர்  இராம பிரான் இராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் தீரவும் தவம் செய்த தலம் தேவப்ரயாகை. இதனால் இங்கு இராமருக்கு ஒரு கோவில் உள்ளது. இது இரகுநாத்ஜீ ஆலயம் என்று அறியப்படுகின்றது.  பெரியாழ்வார் இந்த இராமபிரானை புருடோத்தமன் என்றும் தேவப்ரயாகையை  கங்கைக் கண்டம் என்னும் கடிநகரே என்றும் மங்களாசாசனம் செய்துள்ளார். தேவசர்மா என்ற முனிவர் தவம் செய்த தலம் என்பதால் அவர் பெயரால் தேவ பிரயாகை என்று அழைக்கப்படுகினறது. இயற்கை எழில் கொஞ்சும் இத்தலம் 618 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து டேராடூனுக்கும், தேஹ்ரிக்கும் பாதைகள் செல்கின்றன.



கண்டமென்னும்  கடிநகர்
மஹாதுவாரம் 


இரகுநாதர் ஆலயம் 

இரம்மியமாக இருக்கின்றது தேவப்ரயாகை, இரு வேறு வண்ணங்களாக ஓடி வரும் இரு ஆறுகள் ஒன்றாக இணைந்து வேறு வண்ணமாக பாயும் அழகை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். நெடுஞ்சாலையில் இருந்து கீழே இறங்கி அலக்நந்தா ஆற்றின்  குறுக்காக உள்ள பழைய பாலத்தை கடந்து மறு கரையில் கீழிறங்கி சென்றால் நாம் சங்கமத்தை அடையலாம். தண்ணீர் பாயும் அளவில் பக்தர்கள் சங்கமத்தில் நீராட ஏதுவாக பல அடுக்குகளாக படித்துறைகள் அமைத்துள்ளனர். இரகுநாத்ஜீ ஆலயம் இக்கரையில்தான் அமைந்துள்ளது. முதலில் அலகாபாத் திரிவேணி சங்கமத்திரற்கு இணையான  புனிதமான  தேவ பிரயாகை சங்கமத்தில் நீராடி விட்டு பின் இராமசந்திர மூர்த்தியை சேவிக்கலாமா?  நாங்கள் சென்ற சமயம் தண்ணீர் மிகவும் கீழாகத்தான் ஒடிக்கொண்டிருந்து. சங்கமத்திற்கு  அருகில் கங்கா மாதாவின் அழகிய சிலை உள்ளது. மகர வாகினியாக வெள்ளைப் பளிங்கில் ஒளிர்கின்றாள் முக்திதாயினி கங்கம்மா.  அருகில்  பாறையில் செதுக்கப்பட்ட செந்தூரம் பூசிய அனுமன் சிலையையும்  தரிசனம் செய்கின்றோம்.  பாகீரதியின் எதிர்கரையில் ஒரு மணிக்கூண்டு உள்ளது.


பாகீரதியின் அக்கரை மணிக்கூண்டு 

 விஷ்ணுவின் நாபிக் கமலமான இந்த சங்கமத்தில் பித்ருகளுக்கு பிண்டஸ்ரார்த்தம் செய்வது மிகவும் உத்தமமானது. அதற்காகவே பல பண்டாக்கள் யாத்திரிகளுக்காக இங்கு காத்திருக்கின்றனர். வேண்டுபவர்கள் அவர்களின் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் சிறிது கவனமாக இருக்கவும். கங்கையில் நீராடி விட்டு  புருசோத்தமனை சேவிக்க மேலேறி சென்றோம்.  பல ஆயிரம் வருடங்கள் பழமையான ஆலயம். முழுவதும் கல்லால் ஆன ஆலயம். இமயமலைக்கோவில் போல கோபுரம் மேலே வட்ட வடிவக்கல், மேலே கலசம்  காவி வர்ணக்கொடியுடன் எழிலாக நிமிர்ந்து நிற்கின்றது ஆலயம். ஒரு பிரகாரம். பெருமாளுக்கு எதிரே பெரிய திருவடி கருடன். உயரமான கருவறையில் இலக்குவணுடனும் மைதிலியுயுடனும்  15 அடி உயரத்தில் சேவை சாதிக்கின்றார் கோதண்டராமர். மூவரும் சாளக்கிராம மூர்த்திகள், முகமண்டலங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு.

தங்கையைமூக்கும் தமயனைத்தலையும்
தடிந்த எந்தாசரதிபோய்
எங்கும்தன்புகழாவிருந்தரசாண்ட
எம்புருடோத்தமனிருக்கை
கங்கைகங்கை யென்னவாசகத்தாலே
கடுவினைகளைந்திடுகிற்கும்
கங்கையின்கரைமேற்கைதொழநின்ற
கண்டமென்னுங்கடிநகரே.  

மூன்றெழுத்த்தனைமூன்றெழுத்ததனால்
மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை
ஏற்றுக்கொண்டிருப்பார்க்குஇரக்கநன்குடைய
எம்புருடோத்தமனிருக்கை
மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி
மூன்றினில்மூன்றுருவானான்
கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல்
கண்டமென்னுங்கடிநகரே.     

என்னும் பெரியாழ்வாரின் பாசுரங்களின் இரு பாசுரங்களை எழுதி வைத்திருக்கின்றர்.

தேவப்ரயாகையென்று வழங்கும் கண்டமென்னுந் திருப்பதியின் மகிமையை பெரியாழ்வார் எப்படி பாடியுள்ளார் என்று பார்க்கலாமா?

சதுமுகன்கையில்சதுப்புயன்தாளில் சங்கரன்சடையினில் தங்கி
கதிர்முகமணிகொண்டிழிபுனற்கங்கைக் கண்டமென்னுங்கடிநகரே...

 வாமனனாக வந்து மாபலியிடம் மூவடி மண் கேட்டு, பின்  அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உத்தமனாக மூவுலகையும் அளந்த போது பெருமாளின் திருப்பாதத்தில், பிரம்மதேவன் செய்த அபிஷேக நீர்தான் பின்னர் சிவபெருமானின் சடையில் தங்கி பின் கங்கையாக பூமியில் பாய்ந்தாள் அந்த கங்கையின் கரையில் கண்டமென்னும் கடிநகரில், தங்கையாகிய சூர்ப்பணகையின் மூக்கையையும், மூத்தவனான இராவணனின் பத்து தலைகளையும் அறுத்த புருடோத்தமனான ராமபிரான் எழுந்தருளியுள்ளார் என்று பாடுகின்றார் வேயர் குலத்துதித்த விஷ்ணுசித்தர்.  மேலும்

இமவந்தந்தொடங்கியிருங்கடலளவும் இருகரையுலகிரைத்தாட
கமையுடைப் பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னுங்கடிநகரே..

உயர்ந்த இமயமலையில் தொடங்கி கடல் வரையும் இரு கரைகளும் அகலமாக விளங்கும் கங்கையின் கரையில் வலம்புரி கையில் ஏந்தி அசுரர்களின் தலைகளை இடரும் புருடோத்தமன் கோயில் கொண்டு சேவை சாதிக்கின்றான் என்று பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

சிவபெருமானின் சடையின் கொன்றை மலர், திருமாலின் பாத திருத்துழாய், ஐராவதத்தின் மதநீர், கற்பக மலர், நீராடும் தேவ மங்கையரின் சாந்து ஆகியவை சேர்ந்து பாயும்

எழுமையுங்ககூடியீண்டியபாவம் இறைப்பொழுதளவினிலெல்லாம்
கழுவிடும்பெருமை கங்கையின்கரைமேல் கண்டமென்னுங்கடிநகரே

 என்றும் பாடுகின்றார் வில்லிபுத்தூர்க்கோன்.

இராமபிரான் அமர்ந்த கல் சிம்மாசனம் 

இவ்வாறு பெரியாழ்வாரின் பாசுரம் சேவித்து  மனதார பெருமாளை வணங்கிவிட்டு கோவிலை வலம் வரும் போது இராமர் அமர்ந்திருந்த கல் சிம்மாசனத்தை கண்டோம். கோவிலின் சுவர்களில் அருமையான சிற்பங்கள் உள்ளன. குளிர் காலத்தில் பத்ரிநாத்தின் பண்டாக்கள் இங்கு வந்து தங்குகின்றனர்.



 பழைய தொங்கு பாலத்தில் தேஷ்பாண்டே

இனி இத்தலத்திற்கு அருகில் உள்ள இன்னும் சில ஆலயங்கள்.   தற்போது ரிஷிகேசத்தில் பரதன் ஆலயத்தில் உள்ள பரதன் சிலையை முஸ்லிம் படையெடுப்பின் போது  காப்பாற்ற மறைத்து வைத்திருந்த அழகிய சிறிய  பரதன் ஆலயமும் இங்குள்ளது. கோவிலிருந்து சிறிது தூரத்தில் வாமனரின் குகை உள்ளது.மேலும் இங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் பாகீரதியின் நடுவில் தசரதர்  தன் முன்னோர்கள் முக்தியடைய அமர்ந்து தவம் செய்த சந்திர சிலா எனப்படும் பாறை உள்ளது. இதன் அருகில் நீராடுபவர்கள்களின் எல்லா எண்ணமும் ஈடேறும் என்பது ஐதீகம்.   இங்கிருந்து தெஹ்ரி செல்லும் பாதையில் சுமார் 30  கி. மீ தூரத்தில் மலை மேல் சந்திரபதனி கோயில் அமைந்துள்ளது.   

மிகவும் திருப்தியாக  பின் திரும்பி வந்து சென்றபோது மறந்து தேநீர் குடித்த இடத்தில் மறந்து விட்டு போன செல்போனை திருப்பிவாங்கிக்கொண்டு சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்து ரிஷிகேசத்தை அடைந்து சென்ற வருடம் தங்கிய திருக்கோவிலூர் மடத்தில் தங்கினோம். 

Wednesday, September 12, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -30

காலை சூரிய ஓளியில்  மிளிரும் நீலகண்ட சிகரம் 

சென்ற வருடம் எவ்வளவு இன்னல்கள் ஏற்பட்டதோ அதற்கு எதிர்மாறாக இந்த  வருடம் தரிசனம் மிகவும் சிறப்பாக அமைந்தது அவனருளால். திருமஞ்சன சேவை மட்டும் கொடுக்காமல் விட்டு விடுவாரா? இன்று அருமையான இரு தரிசனம் கிட்டியது ஒன்று பத்ரிநாதரின் நிஜஸ்வரூபம், மற்றொன்று நீலகண்டரின் அருமையான தரிசனம் மிகவும் திவ்யதரிசனம் கிடைத்தது. திருமஞ்சன காலத்தில் மட்டுமே பெருமாளின் நிஜ ஸ்வரூபத்தை நாம் சேவிக்க முடியும். சிருங்காரம்(அலங்காரம்) முடிந்தபின் முக மண்டல தரிசனம் மட்டுமே கிட்டும். பத்ரிநாதரின் யோக கோலத்தைக் கண்ட அந்த இனிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வாருங்கள் அன்பர்களே.

ஓம் நமசிவாய 

அதிகாலையே எழுந்து திருக்கோவிலுக்கு சென்றோம். சபா மண்டபம் முழுவதும் அனுமதி சீட்டு வாங்கிய பக்தர்களால் நிறைந்திருந்தது ஆனால் துவாரத்திற்கு வெளியே அந்நேரத்தில் கூட்டம் இல்லை. அருமையாக நின்று திருமஞ்சனத்தை சேவித்தோம். முதலில் அலங்காரத்தை களைந்து முதல் நாள் சாத்திய சந்தனத்துடன் சேவிக்கின்றோம். தலைமை பூசாரி ராவல் அவர்கள் வரும் வரை மற்ற பூசாரிகள் எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக்கொள்கின்றர். பெருமாளுக்கு சுடு நீரால்தான் திருமஞ்சனம் நடைபெறுகின்றது அதில் பச்சைக்கற்பூரம் மற்றும் குங்குமப்பூ சேர்க்கப்படுகின்றது. . தனக்கே உரிய கருப்பு கம்பளி ஆடையில் தொப்பியுடன் ராவல் அவர்கள் சகல மரியாதையுடன் வந்து சேர்ந்தவுடன் திருமஞ்சனம் துவங்குகின்றது. முதலில் அவர் சந்தனத்தில் மேல் உள்ள சல்லாத் துணியை எடுத்து விட்டு சந்தனத்தை களைகின்றார். அந்த சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படுகின்றது. பின்னர் பெருமாளுக்கு எண்ணெய்க்காப்பு. சாளக்கிராம மேனியராக விளங்கும் பெருமாளின் பத்மாசன கோலத்தையும் சதுர் புஜங்களையும் திவ்யமாக சேவிக்கின்றோம். பின்னர் பாலாபிஷேகம், கங்கை நீரால் அபிஷேகம் மற்றும் பல்வேறு  திரவியங்களினால் முதலில் பத்ரிநாதருக்கும் பின்னர் மற்ற மூர்த்திகளுக்கும் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. பார்த்து பார்த்து யசோதை கண்ணனுக்கு திருமஞ்சனமாட்டியது போல இங்கே பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கின்றது.

கன்றுகளோடச்செவியில் கட்டெறும்புபிடித்திட்டால்
தென்றிக்கெடுமாகில் வெண்ணெய்திரட்டிவிழுங்குமாகாண்பன்
நின்றமராமரம்சாய்த்தாய்! நீபிறந்ததிருவோணம்
இன்று, நீநீராடவேண்டும் எம்பிரான்! ஓடாதேவாராய்.

என்ற பெரியாழ்வார் பாசுரம்தான் நினைவிற்கு வந்தது. திருவோண நாளில் பெருமாளின் திருமஞ்சனம் சேவிக்கும் பாக்கியமும் கிட்டியதுநதியாய்ப் பாயும் திரவியங்கள் மற்றும் மந்திரத்தால் உருவேற்றப்பட்ட ஏழு வெள்ளி கலச புண்ணிய தீர்த்தத்தால் திருமஞ்சனம் முடிந்தபின் சிருங்காரம் துவங்குகின்றது. முதலில் பெருமாளுக்கு அத்தர் சார்த்தப்படுகின்றது. பின்னர் திருமேனி முழுவதும் சந்தனம் சார்த்தப்படுகின்றது. அதன் மேலே மெல்லிய வெள்ளைத்துணி சுற்றி பின்னர் பட்டுப்பீதாம்பரங்கள் சார்த்தப்படுகின்றது. அதன் மேலே வெள்ளிக்கவசம். பின்னர் மற்ற முர்த்திகளுக்கு சிருங்காரம். குபேரனுக்கு மகுடம் மற்றும் மலர் மாலைகள், வெள்ளி நின்ற கோல கருடனுக்கு பட்டு சார்த்தி, மலர்  மாலைகளால் அலங்காரம், அடுத்து நாரதருக்கு மகுடம், பட்டு மலர் மாலை அலங்காரம், பின்னர் உத்தவருக்கு கவசம் மலர் மாலை, பின்னர் நரநாராயணர்களுக்கு பட்டாடைகள், மலர் மாலைகள் என்று அலங்காரம் செய்தபின், பெருமாளுக்கு வைரம் பதித்த தங்க மகுடம் சூட்டி இரு பக்கமும் மயிற்பீலீ சார்த்தி, பெரிய மலர்மாலையால் அலங்காரம் செய்கின்றார் ராவல் அவர்கள். பின்னர் பெருமாளின் திருமுகமண்டலத்தில் சந்தனம் சார்த்தி வைர திருமண் சார்த்தினார். பின்னர் மேலும் மலர்மாலைகளால் மேலும் அலங்காரம்  செய்தபின் சிருங்கார தரிசனம் தொடங்கியது. அலங்காரம் செய்யும் போது இவர்கள் திரையிடுவதில்லை. முதலில் வேத பாராயணம், பின்னர் பாகவத பாராயணம். உள்ளே சென்று பெருமாளை திவ்யமாக சேவித்துவிட்டு மிகவும் மனசாந்தியுடன் வெளியே வந்தோம்.   

நீலகண்ட சிகரம் 

வெளியே வந்தவுடன் ஒர் ஆச்சரியம், அதி காலை சூரிய ஒளியால் அருண நிறத்தில்  அற்புதமாக ஒளிந்து கொண்டிருந்தது நீலகண்ட சிகரம்அந்த சிவப்பு வர்ணம் மாறி தூய வெள்ளை நிறத்தில் ஐயன் மின்னும் அழகையும் கண்டு ஆனந்தம் அடைந்தோம். வானத்தில் மேகமே இல்லை, வானம் நிர்மலமாக இருந்தது. சென்ற வருடம் வந்தபோதும், நேற்றைய தினம் முழுவதும், மஞ்சு மறைத்த எம்பெருமானை இன்று முழுவதுமாக தரிசனம் செய்தோம். முன்னரே கூறியது போல நீலகண்ட சிகரம், தேவாரப் பாடல் பெற்ற தலம் ஆகும். பாலறவாயர் இத்தலத்தை இந்திரநீலபர்ப்பதம் என்று பாடியுள்ளார். வெள்ளியை வார்த்து ஊற்றியது போல மிளிரும் அந்த அழகு மிகவும் இரம்மியமாக இருந்தது.   மனதார சிவபெருமானையும் , உமையம்பிகையும் வணங்கி விட்டு மிக்க மன நிறைவுடன் மடத்திற்கு வந்தோம். அற்புதமான தரிசனத்திற்கு பிறகு ஹரித்வாரத்திற்கு புறப்பட்டோம்.  பத்ரிநாத்தை விட்டு கிளம்பி வரும் வழியில் லம்பா பகட் என்ற கிராமத்தில்  எப்போதும் நிலச்சரிவு ஏற்படும் இடம் என்று முட்கல் அடையாளம் காட்டினார். பின்னர் Jaypee குழுமத்தினரின் சிறு புனல் மின்  நிலயத்தை கண்ணுற்றோம். இவ்வாறு எங்கள் பயணம் தொடர்ந்த்து. முதலில் ருத்ரப்ரயாகையை வண்டியை நிறுத்தி தரிசனம் செய்தோம். பின்னர்  மதிய உணவை ஸ்ரீநகரில் முடித்துக்கொண்டு தேவப்பிரயாகைக்குச் சென்று கொண்டிருந்த போது திரு.முட்கல் அவர்கள் ஒரு அருமையான கதை ஒன்றைக் கூறினார், இது வரை நாங்கள் அறியாத கதையாக இருந்தது. என்ன உங்களுக்கும் அந்த கதையை கேட்க ஆசையாக உள்ளதா? இதோ சொல்கிறேன் கேளுங்கள்.

நாம் எல்லோரும் கடோத்கஜனைப் பற்றி அறிவோம் அல்லவா? ஏனென்றால் மாயா பஜார் படத்தில் கல்யாண சமையல் சாதம் என்ற பாட்டை நாம் எல்லோரும் அறிவோமே.  அந்த கடோத்கஜனின் மகன் பார்பரிக்கை பற்றிய கதைதான் இது. பீமனுக்கும் ஹிடும்பிக்கும் பிறந்தவன் தான் கடோத்கஜன். அரக்கு மாளிகையிலிருந்து உயிர் தப்பிய பஞ்ச பாண்டவர்கள், தாய் குந்தியுடன் ஹிடும்பிவனம் என்ற காட்டிற்கு வந்தார்கள். அந்த வனத்தை ஆண்டு வந்த ஹிடும்பன், பஞ்ச பாண்டவர்களைக் கொன்று வருமாறு, தன் தங்கை ஹிடும்பியை அனுப்பினான்.ஹிடும்பி, அரக்கி உருவத்தை, அழகான இளம்பெண் உருவமாக மாற்றிக் கொண்டு சென்றாள். பாண்டவர்களுக்காக, நீர் கொண்டு வருவதற்காகக் கிளம்பிய பீமனை ஹிடும்பி பார்த்தாள். பீமன் மீது காதல் கொண்டு அவனை மணக்க விரும்பினாள். ஹிடும்பியைத் தொடர்ந்து, ஹிடும்பன் வந்தான். பாண்டவர்களுடன் யுத்தம் செய்தான், உயிரிழந்தான். ஹிடும்பி, பீமனை மணம் புரிந்து கொண்டாள். அவர்களுக்குப் பிறந்த பிள்ளை கடோத்கஜன்.


கட்டு ஷ்யாம் 

அர்ஜுனன்  கர்ணனால்  கொல்லப்படாமல் காத்தவன் கடோத்கஜன் . வீரமும் தீரமும்  கீர்த்தியும் நிறைந்தவன். பாண்டவர்களின் அன்புக்கும் அபிமானத்திற்கும் உரியவன் . அரக்கர் குலத்திலே தோன்றினாலும் பீமனின் மகனானதால் உத்தமமான பண்புகள் நிறைந்தவனாகத் திகழ்ந்து தியாகம் புரிந்தவன். பாண்டவர் பரம்பரையில்      முதலில் பிறந்தவன் கடோத்கஜன்.  ஆனால் எந்தவிதமான உரிமையையோ பதவியையோ அவன் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம், கடோத்கஜன் உயிர்த் தியாகம் செய்யவில்லை என்றால், பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது. அர்ஜுனன் வாழ்வும் முடிந்திருக்கும்.அப்படி   நடக்காமல், தன் வாழ்வையே முடித்துக் கொண்ட, மிகவும் உயர்ந்ததான ஒரு புண்ணிய ஆத்மாதான் கடோத்கஜன்.

கிருஷ்ணபரமாத்மாவின் ஆலோசனைப்படி கடோத்கஜன் மணிப்பூரின் அரசன் முரண் என்பவனின் மகள் கரகண்கடியை வென்று வந்து அவளை திருமணம் செய்து கொண்டான். அரசளங்குமரி மிகவும் புத்திக் கூர்மை மிக்கவள். ஆகவே அவள் தன்னை யார் வெல்கிறார்களோ அவரைத்தான் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்திருந்தாள். பலர் முயன்று அவளிடம் தோற்று அவளுக்கு அடிமையாயினர். கிருஷ்ணரின் ஆசியுடன்  கடோத்கஜன் அவளுடன் போட்டியிட வந்தான்யார் முதலில் பதில் உடனே பதில் சொல்ல தயங்குகிறார்களோ அவர்கள் தோற்றவர்கள் என்பது போட்டிகளின் விதி. அரச குமாரி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் கடோத்கஜன் டாண் டாண் என்று பதில் சொல்லி விட்டான். பின் அவன் அரசகுமாரியிடம் ஒரு கதை சொன்னான்மனைவி ஒருவர் இல்லாத ஒருவர் தனது பெண் குழந்தையை தனது நண்பனின் குழந்தையை தனது நண்பனின் குழந்தை என்று  தானே வளர்த்து வந்தார்.   அந்த குழந்தையும் வளர்ந்து பெரியவளானாள். அவரே அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கும் ஒரு பெண் பிறந்தாள்.

அந்த பெண்ணுக்கு அவர் என்ன உறவு? என்று கடோத்கஜன் கேட்டார்.  நாங்கள் எல்லாரும் இளவரசி என்ன பதில் சொன்னாள் என்று அவரிடம் கேட்டோம். அவர் முதலில் நீங்கள் சொல்லுங்கள் என்றார். நாங்கள் குழம்பி ஙே!” என்று முழிக்க. அவரும் குறும்பாக அந்த இளவரசியும் இது போலத்தான் முழித்தாள் என்று கூறினார். இதனால் அந்த அரசகுமாரி தோல்வியடைய அவளை  கிருஷ்ண பரமாத்மா கூறியபடி இந்திரபிரஸ்தம் அழைத்துவந்து திருமணம் செய்து கொண்டான். இவர்களின் குழந்தைதான் பார்பரிக். இவன் பிறந்தவுடன் இவன் தலை முடி சிம்மத்தின் பிடரி மயிர் போல இருந்ததால் வலிமை மிக்கவன் என்ற பொருளில் இவனுக்கு இந்தப் பெயர் வைத்தனர்.


இவன் கிருஷ்ணபரமாத்மாவின் ஆலோசனைப்படி துர்கா தேவியை உபாசித்து யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்றான். மேலும்  மிகவும் விசேஷமான மூன்று அம்புகளைப் பெற்றான். முதல் அம்பு இவனது எதிரிகளின் மேல்  அடையாளமிடும். இரண்டாவது அம்பு இவனது நண்பர்களை அடையாளமிடும். மூன்றாவது அம்பு அடையாளம் இட்ட பகைவர்கள் அனைவரையும் அழித்து விடும். இதனால் இவன். மூன்று அம்புக்காரன் என்றும் அழைக்கப்பட்டான். அக்னி பகவான் இவனுக்கு இந்த அம்புகளை எய்ய வல்ல ஒரு திவ்ய அம்பை அளித்தார்.

மஹாபாரதப்போர் முடிவான போது பார்பரிக் அந்த யுத்தத்தில் கலந்து கொள்ள விரும்பினான் அவன் தன் தாயிடம் அதற்காக அனுமதி கேட்ட போது அவள் யார் நலிவுற்றிருக்கிறார்களோ அவர்கள் பக்கம் நீ சேர்ந்து போரிடு என்று ஆசி அளித்தாள். தன் தாய்க்கு அது போலவே செய்வதாக வாக்களித்துவிட்டு, வீரதீர, பார்பரிக் தனது நீலக்குதிரையில் ஏறி குருஷேத்திரத்தை நோக்கி பாய்ந்து வந்து கொண்டிருந்தான்அவன் வருவதை தனது ஞான திருஷ்டியால் அறிந்துகொண்ட கண்ணபிரான் அவனை சோதிக்க வந்தார். கிருஷ்ணர் பிராமண வேடத்தில் அவன் காற்றென பாய்ந்து வரும் பாதையில் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்து கொண்டார். ஒரு பிராமணரை ஆலமரத்தடியில் கண்ட பார்பரிக், குதிரையை விட்டு இறங்கி அவருக்கு நமஸ்காரம் செய்தான்பிராமணராக கள்ள வேடம் பூண்ட பகவான் ஏதும் அறியாதது போல, இளைஞனே! இவ்வளவு வேகமாக எங்கு செல்கின்றாய்? என்று வினவினார். அதற்கு பார்பரிக் மஹாபாரதப் போரில் கலந்து கொள்ள செல்கின்றேன் என்று பதிலிறுத்தான்அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே கண்ணன், மூன்று அம்புகளை மட்டும் வைத்துக்கொண்டு நீ என்ன செய்து விட முடியும் என்று கேட்டார். அதற்கு அவன் என் ஒரு அம்பு போதும் இப்போரில் ஈடுபடும் அத்தனை வீர்ர்களையும் கொல்ல, என்னுடைய மூன்று அம்புகளை நான் பயன்படுத்தினால் மூன்று உலகங்களிலும் பிரளயமே ஏற்பட்டு விடும் என்று பெருமையாக கூறினான். வீணாக மார் தட்ட வேண்டும், முடிந்தால் இந்த ஆலமரத்தின் அத்தனை இலைகலையும் உனது அம்பால் ஒன்றாகக் கட்டு பார்க்கலாம் என்று கிருஷ்ணர் கூறினார். அதற்கு பார்பரிக் இது வெறும் தற்பெருமை அல்ல எனது கடுமையான தவத்தின் பலன் மற்றும் அம்பாளின் அருள், இப்போதே நான் அதை செய்து காட்டுகின்றேன் என்று கண்ணை மூடி அம்பாளை தியானித்து அம்பை எய்தான். அதற்குள் கிருஷ்ணர் அந்த ஆலமரத்தின் ஒரு இலையை பறித்து தனது வலது கால் கட்டை விரலின் கீழே மறைத்து வைத்துக்கொண்டார். பார்பரிக் எய்த முதல் அம்பு ஆலமரத்தின் அனைத்து இலைகளையும் கட்டி விட்டு  பிராமணனாக வந்த மாய கண்ணனின் கட்டை விரலை சுற்றி வட்டமிட்டது. அம்பு ஏன் இன்னும் உனது அம்புறாதூணிக்கு வரவில்லை என்று பிராமணன் கேட்க, உங்களது பாதத்தின் அடியில் ஒரு இலை இருக்க வேண்டும்  ஆகவே தான் அம்பு தங்கள் பாத்ததை வட்டமிடுகின்றது என்றான். எனது கட்டை விரலை துளைத்து செல்ல்லாமே என்று பிராமணர் கேட்க, அந்த அம்பு இலைகளை மட்டுமே கட்டுவதற்காக எய்யப்பட்டது தங்கள் கட்டை விரலை துளைக்க அல்ல என்றான் பார்பரிக். எனவே கிருஷ்ணர் தந்து பாதத்தை உயர்த்த அந்த இலையையும் கோர்த்துக் கொண்டு அவனது அம்புறாத்தூணிக்கு  திரும்பியது. பார்பரிக்கின் அம்பின் திறத்தை அறிந்து கொண்டார் கிருஷ்ணர்.

மூன்று அம்புகள் 

பிறகு பிராமணர் பார்பரிக்கிடம் நீ எங்கு செல்கிறாய் என்று கேட்டார். பாரதப்போரில் கலந்து கொள்ள செல்கிறேன் என்றான். பிறகு கண்ணன், வீரனே !, நீ  யார் பக்கம் சேர்ந்து போரிடப்போகிறாய்என்று கேட்டார். அதற்கு அவன் நான் போரில் கலந்து கொள்ள செல்லவில்லைஆனால் யார் தோற்கும் நிலையில் இருக்கின்றார்களோ அவர்கள் பக்கம் சேர்ந்து கொள்வேன் என்று கூறினான். எப்படியும் கௌரவர்கள்தான் தோல்வியடையப் போகிறார்கள் என்பதை அறிந்த கண்ணபிரான் இந்த வீரன் கௌரவர்கள் பக்கம் சேர்ந்து போரிட்டால் பாண்டவர்கள் வெல்வது கடினம் என்பதை உணர்ந்து கள்ளத்தனமாக,   ஒரு சத்திரியன்  மிக சிறந்த வீரனாக இருந்தால் மட்டும் போதாது, சிறந்த தர்மவானாகவும் இருக்க வேண்டும் என்று கூறினான்அதற்கு பார்பரிக், பிராமணரே! தங்களுக்கு என்ன வேண்டுமோஅதைக் கேளுங்கள் நான் அதை தானமாகத் தருகிகின்றேன் என்று கூறினான். முதலில் நீ என்ன கேட்டாலும் தருவதாக சத்தியம் செய்து தருமாறு கேட்டார் கபட வேடதாரி கிருஷ்ணர். அவனும் என்ன கேட்டாலும் தருவதாக வாக்களித்தான்கண்ணன் நீ உனது தலையை தானமாக கொடு என்று கேட்க, பார்ப்பரிகிற்கு தூக்கிவாரி போட்டது. அவர் வெறும் பிராமணரில்லை என்பதை உணர்ந்து கொண்டு தாங்கள் யார்? எதற்காக எனது தலையை தானமாக கேட்கின்றீர்கள் என்று வினவினான். கிருஷ்ணரும் தந்து திவ்ய மங்கள சொரூபத்தை பார்பரிக்கிற்கு காட்டி அருளினார். போர் துவங்குவதற்கு முன் ஒரு மிகச் சிறந்த வீரனை பலியிடுவது வழக்கம் உன்னை விட சிறந்த வீரன் யார் உள்ளார் எனவேதான் உனது தலையை தானமாகக் கேட்டேன் என்றான் கிருஷ்ணபரமாதமா. அதற்கு பார்பரிக் கிருஷ்ணா, மஹாபாரதப் போரை பார்க்க வேண்டும் என்ற என்னுடைய ஆசையை மட்டும் நிறைவேற்றித் தரவேண்டும் என்று கோரினான். கிருஷ்ணரும் அவ்விதமே வரம் தந்தார்.

ருத்ர ப்ரயாகை 

( அலக்நந்தா + மந்தாங்கினி சங்கமம்)

அதற்கு பிறகு பந்குனி மாதம் சுக்லபக்ஷ ஏகாதசியன்று விரதம் இருந்து துவாதசியன்று  தான் வாக்களித்தபடி தனது அரிந்து கண்ணனுக்கு தானமாக அளித்தான். அதனால் அவர் தலை அளித்த வீரன் என்றும் போற்றப்படுகிறார். கிருஷ்ணா ஏன் இவ்வாறு ஒரு அருமையான வீரனின் தலையை நீ தானமாகப் பெற்றாய் என்று பாண்டவர்கள் கேட்க, கண்ணபிரான் கூறினார். சென்ற பிறவியில் இவன் சூரியவசன் என்ற கந்தர்வன். ஒரு சமயம் அனைத்து தேவர்களும் மஹாவிஷ்ணுவிடம் சென்று பூலோகத்தில் பாவம் பெருகிவிட்டது. துஷ்டர்கள் அதிகமாகி விட்டனர் தாங்கள் தான் இரட்சித்து அருள வேண்டும் என்று விண்ணப்பம்ச் செய்தனர். மஹா விஷ்ணுவும் தானே அவதாரம் செய்து  துஷ்டர்களை அழித்து பூபாரம் குறைப்பதாக அருளினார். அப்போது இந்த கந்தர்வன் மஹா விஷ்ணு எதற்காக அவதாரம் எடுக்க வேண்டும் தான் மட்த்உம் போதுமே அந்தக் காரியத்தை முடிக்க என்று அகங்காரமாக பேசினான். இதனால் கோபம் கொண்ட பிரம்மதேவன்பெருமாள் அவதாரம் செய்யும்   போது உன் தலை  அவரால் கொய்யப்படும் என்று. சாபம் கொடுத்தார். ஆகவே தான் இவ்வாறு நடந்த்து என்று விளக்கமளித்தார்பார்ப்பரிக்குக்கு வரம் தந்தபடி அவனது தலையை ஒரு மலை உச்சியில் வைத்து மஹா பாரதப்போரை அவன் பார்க்குமாறு அருளினார் கிருஷ்ணர்.  

பாரதப்போர் முடிந்த பிறகு பாண்டவர்கள் தங்களுள் யார் மிகவும் வீரமாக போரிட்டனர் என்று கேட்டனர். அதற்கு கிருஷ்ணரும் பார்பரிக்கிடம் கேட்கலாம் என்று அழைத்து சென்றார்.   பார்பரிக் பாரதப் போர் முழுவதும் நான் சுதர்சன  சக்கரத்தையும் துர்க்கையின்   கப்பரையையும்தான் கண்டேன் என்று பதில் கூறினான். அனைத்தையும் ஆட்டுவிப்பவன் அவனே மற்றவர்கள் எல்லாம் ஆட்டுவிப்பவர்களே என்பதை உணர்த்தினான். (இங்கு துர்க்கை எனக்குறிப்பிடப்பட்டது திரௌபதி). இதற்குபிறகு   கண்ணபிரான்  கொடுத்த வரத்தின்படி கலியுகத்தில்  கட்டு என்னும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டு கண்ணனின் பெயரான ஷ்யாம் என்ற பெயரிலேயே வணங்கப்படுகின்றார். இராஜஸ்தான் மாநிலத்தில் சிகார் மாவட்டத்தில் இந்தக்கோவில் அமைந்துள்ளது. இவர் கட்டு ஷ்யாம் என்று வணங்கப்படுகன்றார். ஹோலியை ஓட்டி மிகப்பெரிய விழா இங்கு  நடைபெறுகின்றது. இவ்வாறு பார்பரிக்கின் கதையைக் கேட்டுக்கொண்டே தேவப்ரயாகையை வந்தடைந்தோம். இனி வரும் பதிவில் தேவப்ரயாகையின் பெருமைகளைக் காணலாம் அன்பர்களே.   






ருத்ரப்ரயாகையில் குழுவினர்