Thursday, October 22, 2020

கோலாகல நவராத்திரி - 7



                              

திருமயிலை கற்பகாம்பாள்  காமதேனு வாகனத்தில் கௌரி அலங்காரம்

இன்றைய தினம்  நவராத்திரியின் ஆறாம் நாள் அன்னையை மஹாலக்ஷ்மியாக வழிபடும் நிறைநாள். மஹாலக்ஷ்மியின் சில பெருமைகளைக் காணலாம். 

லக்ஷ்மி தேவியின் மற்ற பெயர்கள் : திவ்ய ரூபா, அலை மகள், ஸ்ரீ, நித்ய ஸ்ரீ, பிரசன்ன வதனா, பூரண சந்திர முகி. 

 

பூஜை நடக்கும் இடங்கள், சங்க நாதம் கேட்கும் இடம், சிவ நாமம் கேட்கும் இடம், அன்னதானம் வழங்கப்படும் இடம் ஆகிய இடங்களில் லக்ஷ்மி தேவி வாசம் செய்கிறாள்.


அடக்கமான பெண்கள், கணவனுக்குக் கட்டுப்பட்ட மனைவி, மனைவியைக் காப்பாற்றும் கணவன், இரக்க குணம் கொண்டவர்கள், சுறுசுறுப்பாக இருப்பவர்கள், அகங்காரம் இல்லாதவர்கள், தூய வெள்ளை ஆடை அணிபவர்கள் ஆகியோரிடம் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திடும்.

 


நவராத்திரியின் ஆறாம் நாள் அன்னையை ஏழு வயது குழந்தையாக பாவித்து சண்டிகா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் துன்பம் நீங்கும். இன்றைய ஸ்லோகம்

 சண்டிகாம் சண்ட ரூபாஞ்ச சண்டமுண்ட விநாசினீம் தாம்

சண்ட பாபஹரிணீம் சண்டிகாம் பூஜயாம்யஹம் ||

 (சண்ட முண்டர்களை அழித்து மகா பாதகங்களை எந்த சக்தி நிவர்த்தி செய்கிறதோ அந்த சண்டிகையாகிய சக்தியை வணங்குகிறேன்.) 

                                   

காத்யாயினி துர்க்கா

நவராத்திரியின் ஆறாம் நாள் அன்னை நவதுர்கைகளில் அன்னையை காத்யாயன முனிவரின் தவத்திற்கு இணங்கி அவரின் மகளாக அவதரித்த காத்யாயினியாக வழிபடுகின்றோம். அன்னை மும்மூர்த்திகள் மற்றும் சகல தேவர்களின் காந்தியால் உருவானாள். கோகுலத்து கோபியர்கள் கண்ணனை அடைய இவளையே தெய்வமாய் வழிபட்டு விரதம் இருந்தனர் என்பார்கள். கன்னியர் மனம் மகிழும்படியாக கணவனை அளித்துக் கல்யாணப் பேறு அளிப்பாள் இவள் என்று கூறுவார்கள். 

சந்த்ர ஹாஸோஜ்வலகரா சார்துல வர வாஹநா |

காத்யாயநீ சுபம் தத்யாத் தேவீ தாநவ காதிநீ ||

(திருக்கரத்தில் சந்திரஹாச வாளை ஏந்தி சிம்மவாகனத்தில் பவனி வந்து தேவர்களைக் காக்கும் காத்யாயினி அடியேனுக்கு எல்லா சுபங்களையும் வழங்கட்டும்.)

                                           

ருக்மணி ஸ்ரீகிருஷ்ணரை மணாளனாக அடையும் பொருட்டு  இந்த ஸ்லோகத்தால் காத்யாயினியை வழிபட்டதாக பாகவதம் கூறுகிறது.

காத்யாயனி மஹா மாயே
மஹாயோகின்யதீஸ்வரி
நந்தகோபஸுதம் தேவி
பதிம் மே குரு தே நம:

கத கோத்திரத்தில் பிறந்தவளும், மாயைகளுக்கெல்லாம் இருப்பிடமும், மகத்தான யோக ஸித்திகளை அடைந்தவளுமான தேவியே, உன்னை வணங்குகிறேன். உனது திருவருள் கடாட்சத்தால்,  நந்தகோபருடைய மகனான அந்தக் கண்ணனே எனக்குக் கணவனாக அமையவேண்டும். 



ஆறாம் நாள்வடிவம் : சண்டிகாதேவி

திதி : சஷ்டி.

கோலம் : கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.

பூக்கள் : பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம்.

நைவேத்தியம் : தேங்காய் சாதம், தோங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.

பலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.



இன்று சஷ்டியன்று தான் வங்காளத்திலே மஹா கைலாசத்திலிருந்து, பூலோகத்திற்கு துர்க்கா தேவி இறங்கி வந்து அருள் பாலிக்கும் துர்க்கா பூஜை தொடங்குகின்றது.

 

 அம்மன் அருள் பெருகும்  . . .

No comments:

Post a Comment