Sunday, December 24, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா -14

அழுதையிலிருந்து   இஞ்சிப்பாறைக்  கோட்டை வரை 

அழுதை ஏற்றம் ஏறும் போது
ஹரிஹரன் மகனைத் துதித்து செல்வார்
வழிகாட்டிடவே வந்திடுவார்
ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்


இப்பதிவுகளையும்  காணலாமே:  

       4   5   6   7   8   9   10  11   12   13   15   16   17   18   19   20   21



அழுதையின் மறுகரை

அழுதையில் நீராடி கல் எடுத்துக்கொண்டு அழுதை மலையை ஏறத்தொடங்குகிறோம்.  காட்டு வழியில் ஒற்றைப் பாதை, செம்மண் பூமி புழுதி கிளம்புகின்றது.  ஏற்றம் செங்குத்து அதிகம் இல்லை மலை உயரமும் அதிகமில்லை, ஆயினும் ஹரிஹர சுதன் நம்முடன் வந்து கொண்டிருக்கிறேன் என்பதை உணர்கிறோம்..





இடையில் சிறிது நேரம் ஓய்வு


வழிநடை சரணங்கள்
ஸ்வாமியே ஐயப்பா      ஐயப்பா  ஸ்வாமியே
ஸ்வாமியப்பா ஐயப்பா         சரணமய்யா ஐயப்பா
சரணமய்யா ஐயப்பா       ஸ்வாமியப்பா ஐயப்பா
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்       ஐயப்ப சரணம் ஸ்வாமி சரணம்
ஸ்வாமியே ஐயப்பா        ஐயப்பா ஸ்வாமியே
பகவான் சரணம் பகவதி சரணம்       பகவதி சரணம் பகவான் சரணம்
பகவானே பகவதியே       பகவதியே பகவானே
தேவன்  சரணம்  தேவி சரணம்      தேவி சரணம் தேவன்  சரணம்
தேவனே தேவியே          தேவியே தேவனே 
ஈஸ்வரன்  சரணம் ஈஸ்வரி சரணம்     ஈஸ்வரி சரணம் ஈஸ்வரன்  சரணம்
ஈஸ்வரனே ஈஸ்வரியே       ஈஸ்வரியே ஈஸ்வரனே 
ஸ்வாமி பாதம் ஐயப்ப பாதம்      ஐயப்ப பாதம் ஸ்வாமி பாதம்
பகவான் பாதம் பகவதி பாதம்     பகவதி பாதம் பகவான் பாதம்
தேவன் பாதம்  தேவி பாதம்     தேவி பாதம் தேவன் பாதம்
பாத பலம் தா தேக பலம் தா      தேக பலம் தா  பாத பலம் தா
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை       காலுக்கு மெத்தை கல்லும் முள்ளும்
குண்டும் குழியும் கண்ணுக்கு வெளிச்சம்    கண்ணுக்கு வெளிச்சம்குண்டும் குழியும்
ஏற்றி விடப்பா தூக்கி விடப்பா        தூக்கி விடப்பா  ஏற்றி விடப்பா
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு      சபரிமலைக்கு பள்ளிக் கட்டு
முத்திரைத் தேங்காய் ஸ்வாமிக்கு    ஸ்வாமிக்கு முத்திரைத்தேங்காய் 
நெய்யபிஷேகம் ஸ்வாமிக்கு     ஸ்வாமிக்கு நெய்யபிஷேகம்
கற்பூர தீபம் ஸ்வாமிக்கு      ஸ்வாமிக்கு   கற்பூர தீபம்
காணிப்பொன்னும் ஸ்வாமிக்கு   ஸ்வாமிக்கு  காணிப்பொன்னும்
யாரைக்காண                 ஸ்வாமியைக் காண 
ஸ்வாமியைக் கண்டால்            மோட்சம் கிட்டும்
எப்போ கிட்டும்                      இப்போ கிட்டும்
ஸத்குரு நாதா ஐயப்பா       ஐயப்பா ஸத்குரு நாதா
கலியுக வரதா ஐயப்பா      ஐயப்பா  கலியுக வரதா
ஸ்வாமியே ஐயப்பா        ஐயப்பா  ஸ்வாமியே



வழி நடை சரணங்களைக்கூறிக்கொண்டே மலையேறுகிறோம். அவ்வாறு செய்யும் போது மூலிகைக் காற்றை நாம் முழுவதுமாக  சுவாசிக்கின்றோம். நமது உடலும் புத்துணர்ச்சி பெறுகின்றது  என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 


கல்லிடும்  குன்னு 

கல் - இடும் - குன்னு அதாவது கல்லை இடும் குன்று. அழுதை நதியில் எடுத்த கல்லை விடுக்கும் இடம் இதுதான். மகிஷி இறந்த பின்னும் அவளது உடலின் மேல் சூரிய ஒளி விழுந்த போது அவ்வுடல் வளர ஆரம்பித்ததாம், அப்போது பிரம்மன் தோன்றி தன்னுடைய வரத்தின் காரணமாக அவ்வாறு நடக்கின்றது. எனவே அவ்வுடலின் மேல் கல்லைப் போட்டு மூடுமாறு கூறுகின்றார். அது இன்றும் தொடர்கின்றது. நன்மைக்கும் தீமைக்குமான நெடும் போராட்டத்தில் நம்மாலான  பங்காக  தீமையை அழிக்க ஒரு முயற்சியாக இது கருதப்படுகின்றது. 



பாதையின் நடுநடுவே பிரம்மாண்ட மரங்கள் உள்ளன அதன் வேர்கள் வெளியே வ்ந்து பகதர்கள் நடந்து செல்வதால் மொழு மொழுவென்று இருக்கின்றது. அதனால் வழுக்கும் என்பதால் பார்த்து பார்த்துத்தான் செல்ல வேண்டி உள்ளது.  பல வித பக்தர்கள், ஓடுபவர்கள், பாடுபவர்கள், உருகி நிற்பவர்கள், எழை, பணக்காரர், சாதி என்ற எந்தவித பாகுபாடும் இல்லாமல் சரண கோஷத்துடன் ஐயனை மனதில் நினைத்துக்கொண்டு ஒரு யோக நெறியாக மலை ஏறுகின்றனர்.  பல் வேறு மொழிகள், பல் வேறு பேச்சுக்கள் நம் காதில் பாய்கின்றன.  அவர்களுடன் நாமும் மலையேறுகிறோம். அழுதை மலையேற்றத்திற்கு சுமார் 3 மணி நேரம் ஆகும்.  


கல்லிடுங்குன்றிலிருந்து  இறங்கி ஒரு வாய்க்காலைக் கடந்து  பின் மலையேற்றம். பாறைகள் எல்லாம் வழுக்குகின்றது பார்த்துப் பார்த்துப் பார்த்து  ஏற வேண்டியுள்ளது.  மரங்களின் வேர்கள் பல இடங்களில் தடுக்கின. அங்கங்கே கால் விரல் நகங்கள் விரல் நுனிகள் அடி வாங்கின. ‘அழ வைக்கும் அழுதா’ என்று சொல்வதுண்டு. இந்த மலையில் ஏறுபவர்களுக்குத் தெரியும் இது எத்தனை உண்மை என்று. இவ்வாறு மலையேறி இஞ்சிப்பாறை கோட்டையை அடைந்தோம். 




அழுதை மலையின்  ஒரு உச்சி  இஞ்சிப்பாறைக் கோட்டையாகும். உடும்புப்பாறை கோட்டை என்றும் அழைக்கின்றனர்.  இது ஒரு தாவளம். இம்மலைக்கு அதிஷ்டான தேவன் இஞ்சிப்பாறை வில்லன் ஆவார். இவர் மலையேறி வரும் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தவாறு எழுந்தருளியுள்ளார். இவரை வணங்கி அனுமதி பெற்று அடுத்து யாத்திரையை தொடர  வேண்டும்.  புதிதாக ஐயப்பன் சன்னதியும் அமைத்துள்ளனர். இச்சன்னதியில் "தேவன் வியாக்ரபாதன்' என்ற பெயரில் ஐயப்பசுவாமி அருளுகிறார். "வியாக்ரம்' என்றால் "புலி'. ஐயப்பன் புலிகளை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, தன்னைக் காணச்செல்லும் பக்தர்களைப் பாதுகாக்கும் காவலராக விளங்குகிறார். ஆன்மிக ரீதியாக, இதை வேறு மாதிரியாக பொருள் காணலாம். மனிதன், இந்த உலக இன்பத்தை பெரிதென நினைக்கிறான். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய இன்பங்களை அடைய ஆசை கொண்டு, பாதகங்களைச் செய்யக் கூட தயாராகி விடுகிறான். இந்த பாதகங்களே மனதை ஆட்டிப்படைக்கும் புலிகளுக்கு ஒப்பிடப்படுகிறது. இந்த கொடிய புலிகளை கட்டிப்போட்டு விட்டால் மனதில் நல்ல சிந்தனைகள் மட்டுமே தங்கும். பக்தி மார்க்கத்திற்குள் மனிதன் வருவான். வெடி வழிபாடு நடைபெறுகின்றது. வெடி வழிபாடும் ஒரு வகை நாத வழிபாடு என்று கொள்ளலாம். இவ்வழிபாடு கேரளாவிற்கே உரித்தானது. பிரம்ம ராக்ஷசன், யக்ஷிகளின் சன்னதியும் உள்ளது.  இனி இறக்கம்தான் என்பதால் பக்தர்கள் அதிகம் இங்கு தங்குவதில்லை. 





இஞ்சிப்பாறைக் கோட்டை 


இம்மலையின் அதிஷ்டான தேவதை ஐயனின் பிரதான காவல் தெய்வம் பூதநாதன் என்பாரும் உளார்.  இஞ்சிப்பாறைக் கோட்டைக்குப்பின் யாத்திரை எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. 


குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா



ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

4 comments:

தனிமரம் said...

அழுதையில் அழவைப்பது நாம் எந்தளவு ஐயன் மீது ஈடுபாட்டுடன் இருக்கின்றோம் என்பதை உணர்த்துவதற்கு.தொடருங்கள் ஐயா .

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் தளத்தில் ஏதோ பிரச்சனை - வேறு விளம்பரத் தளத்திற்குச் செல்கிறது. https - Secure தளத்தில் தான் திறக்க முடிந்தது. சரி பாருங்கள்.

பயணம் தொடரட்டும்.

S.Muruganandam said...

சுவாமியே சரணம் ஐயப்பா.

அனைத்தும் அவன் அருள். அழுதையை விட கரிமலை ஏற்றம் மற்றும் இறக்கம் கடினம் ஐயா.

S.Muruganandam said...

வெங்கட் ஐயா,

சரி பார்க்கின்றேன். தொடருங்கள் ஐயா.