Sunday, November 19, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா -2

ஹரிஹரசுதன்  அவதாரம் 


இப்பதிவுகளையும்  காணலாமே        4   5   6   7   8   9   10  11   12   13   14   15   16   17   18   19   20   21

சிவபெருமானுடைய சக்தியும் நாராயண மூர்த்தியினுடைய சக்தியும்,  இணைந்து அவதரித்தவர் ஹரிஹர புத்திரரான ஐயப்பன்.   

சிவன் யோக சக்தி,  விஷ்ணு போக சக்தி இருவரும் இணைந்து உருவானவரே ஐயப்பன். இது குறியீட்டு முறையில் கூறப்பட்டுள்ளது. 


சுவாமியே சரணம் பொன் ஐயப்பா

(சென்னை மேற்கு போக் சாலை முத்துமாரியம்மன் ஆலய ஐயப்ப பக்தர்கள் ஒரு வருடம் ஐயப்ப சாமி பூஜையின் போது அப்படியே சபரிமலை  ஐயப்ப சன்னிதானத்தை சென்னையில் அமைத்தனர் அதன் காட்சிகளை இப்பதிவில் காணுகின்றீர்கள் அன்பர்களே )
தேவர்களும், அசுரர்களும் அமிர்தம்  பெறுவதற்காகவும்;  துருவாச முனிவரின் சாபத்தால் இந்திரன் இழந்த செல்வங்களை பெறுவதற்காகவும்;  மேருமலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலைக்  கடைந்தார்கள். அப்போது வாசுகி வேதனையால் கக்கிய "ஆலம்" என்னும் விஷமும், பாற்கடலில் தோன்றிய "ஆலம்" என்னும் விஷமும் சேர்ந்து "ஆலகால விஷமாக" திரண்டு தேவர்களையும், அசுரர்களையும் அழிக்க துரத்தியது.


தேவர்களும் அசுரர்களும் திருக்கயிலாயம் சென்று  பரமசிவனிடம் தம்மை காப்பாற்ற வேண்டினர். பரமசிவன் அந்த  ஆலகால விஷத்தினை ஏந்தி அதனை அருந்தி தேவர்களையும், அசுரர்களையும், சகல ஜீவராசிகளையும்  காப்பாற்றி தியாகராஜனாக அருளினார். ஐயனின் வயிற்றில் கொடிய விடம் சென்றால் அகில லோகமும் அழியுமே என்று அவரது வாம பாகத்தில் அமர்ந்திருந்த உமையம்மை தனது தளிரன்ன கரத்தினால் அவ்விதத்தை ஐயனின் கழுத்திலேயே நிறுத்தினால். செம்பவள மேனி வண்ணனின் கழுத்திலே விடம் நின்ரதால் அவர்      திருநீலகண்டன் ஆனார்.



சபரிமலை ஐயன் சரிதம் 
அதன் பின்னர் அவர்கள் திருபாற்கடலைக் கடைந்த போது; திருபாற்கடலில் சங்கமித்த இந்திரனின் செல்வங்களான சங்கநிதி, பதுமநிதி, சிந்தாமணி,  காமதேனு, கற்பக  விருட்சம், ஐராவதம், உச்சைசிரவம்   முதலானவை வந்தன. பின்னர் இலக்குமியும் பாற்கடலில் இருந்து வந்தாள்.  இறுதியாக அமிர்த கலசத்தை தாங்கியவாறு தன்வந்திரி பகவான் வந்தார்.
திருமால் அமிர்தத்தை அசுரர்கள் அருந்தினால் அவர்களும்  சாகாவரம் பெற்றுவிடுவார்கள் என்பதால் ஒரு தந்திரம் செய்தார்.   அசுரர்களின் பலவீனத்தை (அழகான பெண்களைக் கண்டால் தம்மை இழந்து மயங்கும் தன்மையை) நன்குணர்ந்த அவர்  "மோகினி"  அவதாரம் எடுத்து அசுரர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களை வஞ்சித்து  அமிர்தத்தை  தேவர்களுக்கு மட்டும்  பகிந்தளித்தார்.


ஹரியின் மோகினி" அவதாரத்தை சாதகமாக்கி; விதி வசத்தால் நிகழ இருக்கும் மகிஷி சம்காரத்தை நிகழ்ததுவதற்காக; கைலாசபதியான ஸ்ரீ பரமேஸ்வரன் (ஹரன்); மோகினியின் அழகில் மயங்கி, ஆழ்ந்து பரவசம் கொள்ள; அவ்விரு மூர்த்திகளின் ஆற்றல்கள் முழுவதும் ஒன்றாகப் பெற்ற ஸ்ரீஹரிஹர புத்திரன் - தர்ம சாஸ்தா அவதரித்தார் என விஷ்ணு புராணம்  கூறுகின்றது.


ஐயப்பன் சன்னதி 

பஸ்மாசுரன் என்னும் அசுரன் பெரும் தவம் செய்து சிவபிரானிடம் தான் யாருடைய தலைமேல் கை வைத்தாலும் அவர்கள் (சாம்பலாக) பஸ்பமாக போக வேண்டும்  என்னும் அரிய வரத்தினைப் பெற்றான். தான் பெற்ற வரத்தின் வலிமையினால் அகங்காரம் கொண்ட பஸ்மாசுரன் மதி மயங்கி தான் பெற்ற வரத்தினை, வரங்கொடுத்த இறைவனிடமே பரீட்சித்து பார்க்கத் துணிந்தான்.


சிவபிரான் செய்வது அறியாது ஓட,  அசுரனும் அவரைத் துரத்திக்கொண்டு ஓடினான்.  சிவபெருமானைக் காப்பாற்ற   மகாவிஷ்ணு மோகினி ரூபமெடுத்து  பஸ்மாசுரன் முன் தோன்றி  அவனின் எண்ணத்தை திசை திருப்பி; அவனுடன் போட்டியாக நடனமாடி தந்திரமாக அவனது கையை அவனாகவே அவனது தலையில் வைக்கச் செய்து அவனை  பஸ்பமாக்கினார். அந்த மோகினி ரூபத்தைப் பார்த்த பரமேஸ்வரன் விதி வசத்தால் நிகழ இருக்கும் மகிஷி சம்காரத்தை நிகழ்த்துவதற்காக நாராயண மூர்த்தியாகிய மோகினி  மேல் மோகம் கொள்ள ஹரிஹரசுதன் ஐயப்பன்   அவதரித்ததாக பத்ம புராணம் கூறுகின்றது.


ஐயப்ப சுவாமி தரிசனம் 
இவ்விரு புராணங்களும்  ஐயப்பன் அவதாரம்; நாராயண மூர்த்தியினுடைய சக்தியும், பரமேஸ்வரனுடைய சக்தியும் இணைந்ததால் அவதரித்தவன்  ஹரிஹரபுத்திரன் என்பதை கூறுகின்றன.  ஐயனாகிய சிவனும், அப்பனாகிய விஷ்ணுவும் இணைந்து உருவானவர் என்பதால் இவருக்கு ஐயப்பன் என்று திருநாமம்.
ஹரிஹர புத்திரரான தர்ம சாஸ்தாவை தந்தையாகிய சங்கரனும், தாயாகிய நாராயண மூர்த்தியும் பூலோகத்தைக் காவல் புரியும் காவல் தெய்வமாக  (ஐயனாராக) ஆசீர்வதித்து பிரம்மாவிடம் ஒப்படைத்தார்கள். (நாராயண மூர்த்தியின் கையில் அவதரித்தமையால் கைஅப்பன் என்ற பெயர் பெற்றார் என்றும் பின்பு அப்பெயர் மருவி ஐயப்பன் ஆகிற்று என்று ஒரு சாரார் கூறுகின்றனர்). 


ஜோதி தரிசனம் 

குறுகிய காலத்திலேயே சகல சாஸ்திரங்களையும்  பிரம்மாவிடம் கற்று "மஹா சாஸ்த்ரு" என்ற நாமத்தையும் பெற்றார். தர்ம சாஸ்தா வேறு, ஐயப்பன் வேறு அல்ல என்றாலும் தர்மசாஸ்தாவின் திருவவதாரமே ஐயப்பன் என்பது ஐதீகம்.  இது ஐயப்பனின் திருவவதார  வைபவம்.   அடுத்த   பதிவில்  சாஸ்தா புஷ்கலை மற்றும் பூர்ணாவை மணந்த வைபவத்தைக் காணலாம் அன்பர்களே. 


கருப்பண்ணசாமி

ஆண்டவனின் அவதாரங்கள் அனைத்துமே அவரது சங்கல்பத்தால் நிகழ்வன. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மம் வெல்லும் என்றபடி அசுரர்கள் தங்களின் தவ்த்தின் பயனால் பல்வேறு வரங்களை பெற்று சகலருக்கும் துன்பம் விளைவித்தால் அவர்கள்  கொடுமையை ஒழிக்க இறைவன் அவர்கள் பெற்ற வரத்திற்கேற்ப  அவதாரம் எடுக்கின்றார். ஹிரண்யனை அழிக்க அவன் பெற்ற வரத்தின்படி நரசிம்மம், மகிஷாசுரனை அழிக்க துர்க்கை, சூரபத்மனை அழிக்க முருகன் அவதாரம். அது போலவே  மகிஷி பெற்ற வரத்திற்கேற்ப  திரிமூர்த்திகளின் இருவரின் மகனாக பிறந்து மானிடராக 12  ஆண்டுகள் சேவை செய்கின்றார்.


குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஸ்வாமி சரணம்.

ஐயனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

தொடர்கிறேன்.

S.Muruganandam said...

அனைவரும் இன்புற்ற வாழ சபரிகிரீசனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

சுவாமியே சரணம் ஐயப்பா.

கோமதி அரசு said...

அழகான படங்கள்.
அருமையான ஐயப்பன் கதை.
தொடர்கிறேன்.
சுவாமியே சரணம் ஐயப்பா.

S.Muruganandam said...

சுவாமி சரணம். தொடருங்கள் அம்மா.