Friday, September 29, 2017

ஸ்ரீசக்ர நாயகி - 10

ஒன்பதாவது ஆவரணம் 




வேங்கீஸ்வரம்  சொர்ணாம்பிகை
கணாம்பாள் அலங்காரம்






******************

ஒன்பதாவது ஆவரணம் .

ராகம்:  ஆஹிரி                                                                             தாளம்: ரூபகம்

பல்லவி

ஸ்ரீ கமலாம்பா ஜயதி அம்பா ஸ்ரீ கமலாம்பா ஜயதி
ஜகதம்பா ஸ்ரீ கமலாம்பா ஜயதி ஸ்ருங்காரரஸ கதம்பா
மதம்பா ஸ்ரீ கமலாம்பா ஜயதி சித்பிம்பா
பிரதி பிம்பேந்து பிம்பா ஸ்ரீ கமலாம்பா ஜயதி
மத்யமம்

ஸ்ரீபுர பிந்து மத்ய்ஸ்த சிந்தாமணி மந்திரஸ்த
ஸிவாகார மஞ்சஸ்தித  ஸிவகாமேஸாங்கஸ்தா (ஸ்ரீ கமலாம்பா)

அனுபல்லவி

ஸுகராநநாத்யர்சித மஹாத்ரிபுரசுந்தரீம்
ராஜராஜேஸ்வரீம் ஸ்ரீகர ஸர்வநந்தாமய
சக்ர வாஸினீம் ஸுவாஸினீம் சிந்தயேஹம் (ஸ்ரீ கமலாம்பா)

திவாகர ஸீதகிரண பாவகாதி விகாஸ கரயா
பீகர தாபத்ரயாதி பேதந துரீணதரயா
பாகரிபு ப்ரமுகாதி ப்ரார்தித ஸுகளேபரயா
ப்ராய பராபரயா பாலிதோ தயாகரயா  (ஸ்ரீ கமலாம்பா)

சரணம்
ஸ்ரீ மாத்ரே நமஸ்தே சிந்மாத்ரே ஸேவித ரமா-ஹரிகாவிதாத்ரே
வாமாதி சக்தி பூஜித பரதேவதாயக: ஸ்கலம் ஜாதம்
காமாதி  த்வாதஸ பிரூபாசித காதி ஹாதி ஸாதி
மந்த்ர ரூபிண்யா: ப்ரமோஸ் பத ஸிவ குருகுஹ ஜநந்யாம்
பிரீதியுக்த மச்சிதம் விலயது
ப்ரஹ்ம மய ப்ரகாஸிநி
நாமரூப விமர்ஸிநி
காமகலா ப்ரதர்யாதி ஸாமரஸ்ய நிதர்ஸிநி  (ஸ்ரீ கமலாம்பா)  


 ஸ்ரீ  கமலாம்பா  வெற்றி வாகையுடன் விளங்குகிறாள். அன்னை கமலாம்பிகை   வெற்றி  முழக்கமிடுகின்றாள்.    உலகம்மையான     ஸ்ரீகமலாம்பிகை  போற்றி! போற்றி!  .சிருங்கார ரசத்தின் நேர்த்தியான கலவையாக விளங்குகின்றாள்.
என்னுடைய தாயான ஸ்ரீ கமலாம்பிகை மேன்மேலும் வெற்றியுடன் திகழ்கிறாள். ஞான சொருபத்தின் பிரதிபிம்பமாக சந்திரனுக்கு சமானமாக  விளங்கும்  ஸ்ரீகமலாம்பிகை வெற்றிகள் மிளிர விளங்குகின்றாள்.

ஸ்ரீபுரம் என்னும்  ஸ்ரீ சக்ரத்தின் பிந்து ஸ்தானத்தின் மத்தியில் உள்ள சிந்தாமணி கிருஹத்தில் இருக்கும் சிவாகார மஞ்சத்தில் கோயில் கொண்டுள்ள சிவகாமேச்வரரின் அங்கமான அவரின் மடிமீது அமர்வது காட்சிதரும் ஸ்ரீ கமலாம்பா ஜய மங்களத்துடன் சர்வோத் க்ருஷ்டமாய் காட்சி தருகிறாள்.

வாராகி முதலிய சக்திகளால் அதாவது தண்டநாதா, மந்த்ரினீ முதலிய சக்திகளால் துதிக்கப்பட்ட மஹாத்ரிபுரசுந்தரியை, ராஜ ராஜேஸ்வரியை,  ஸ்ரீசக்ரத்தின் சர்வாவந்தமய  சக்ரம் என்ற ஐஸ்வர்யங்கள் ததும்பும் சக்கரத்தில் வீற்றிருக்கும் நித்ய சுமங்கலியான ஸ்ரீகமலாம்பிகையை  நான் தியானிக்கிறேன்.

சூரியன், சந்திரன்,   அக்னி   போன்றோருக்கு பிரகாசம் அளிப்பவள்,
பயத்தை கொடுக்கின்ற தாபத்ரயங்களால் உண்டாகும் இடர்ப்பாடுகளை  நீக்குவதில் வல்லமை  உள்ளவள், இந்திராதி தேவர்கள் பிரார்த்தனை செய்து  கொண்டதன் பேரில்  மங்கள  எழிலார்ந்த  திருவுருவோடு தோன்றி அருளியவள்.  

ப்ரக்ட யோகினி முதல் பராபராதிரகஸ்ய யோகினி வரையுள்ள ஒன்பது யோகினி ஸ்வரூபமுள்ளவள். இத்தகைய சிறப்புகளுடைய ஸ்ரீகமலாம்பிகையால் காத்தருளப்பட்டவன் நான். அப்பராபர தேவியை மனதில் போற்றுகின்றேன்.

ஸ்ரீ மாதா என்ற பெயர் கீர்த்தி உடைய லலிதா தேவியை வணங்குகிறேன்.  ஞான மயமானவளே!, லக்ஷ்மி, திருமால், ஈஸ்வரன், பிரம்மா, ஆகியோர் வணங்கிய உன்னைப் பணிகிறேன்.

பிரம்மா ,விஷ்ணு ருத்ர திருமூர்த்திகளின்  சக்திகளான வாமா, ஜ்யேஷ்டா  ரௌத்ரி, ஆகிய தேவதைள்  பூஜிக்கும் பரதேவதேவதையிடமிருந்தே  அனைத்து பிரபஞ்சங்களும் தோன்றியது.  மனு சந்திரன், குபேரன், லோபாமுத்ரா, மன்மதன், அகத்தியர். நந்திகேஸ்வரர், சூரியன், திருமால், குமரன், சிவன், துர்வாசர் முதலிய பன்னிருவரால் உபாசிக்கப்பட்ட ககாரத்தை ஆதியாகக் கொண்ட காதிவித்யை, ஹகாரத்தை ஆதியாகக் கொண்ட ஹாதி வித்யை, ஸகாரத்தை ஆதியாகக் கொண்ட ஸாதி வித்யை முதலான 12 வித்யைகளால் உபாசிக்கப்பட்ட மந்திரரூபிணி கமலாம்பிகைக்கு நான் அன்புக்குரியவன்.

சிவனுக்கே குருவான குமரப்பெருமானின் அன்னையிடத்தில் பிரியத்தோடு கூடிய என் மனம் லயிக்கட்டும். ப்ரஹ்ம ஸ்வருபத்தின்  ஜோதியுடன் பிரகாசிப்பவள், பெயர்கள் - உருவங்கள்  கொண்ட இந்த நாம-ரூப பிரபஞ்சத்தை விளங்கச் செய்பவள். ஸ்ரீவித்யா ஸம்ப்ரதாயத்தில் காமகலா என்ற உபாசனா மூர்த்தியாக இருப்பவள். சகல உயிர்களிடத்தும் சமன் நோக்கு  உள்ளவள். இவ்வளவு பெருமைகளைக் கொண்ட கமலாம்பிகையான நீங்கள் வெற்றியுடன் விளங்குகின்றீர்கள்.  அடியேனது மனது எப்போதும் தாயே! ஸ்ரீகமலாம்பிகையே!  உன்னிடத்திலேயே நிலைத்து நிற்கட்டும் .

ந்த ஒன்பதாவது  ஆவரணத்தின் சக்ரம்  சர்வாநந்தமயம் ஆகும். இச்சக்ரம் சிவசக்தி ஐக்ய பிந்துவாகும். இச்சக்கரத்தின் நாயகி மஹா திரிபுரசுந்தரி. இதில் அட்டித்து விளங்கும் யோகினி பராபர ரகஸ்ய யோகினி. சவிகல்ப சமாதி  ஆகும். இதில் விளங்கும் தேவதைகள் வாமாதியர்கள் ஆவர்.

இக்கீர்த்தனையில் எட்டு வேற்றுமைகளும் கையாளப்படுகின்றன. இக்கீர்த்தனத்தால் எதிலும் வெற்றி கிட்டும், மனம் எப்போதும் பரவச நிலையில் விளங்கும், மந்திர சித்தி உண்டாகும், உள்மனம் சலனமின்றி இன்பத்தில் லயிக்கும். 

முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு




                                                                                                              அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

No comments: