Sunday, October 30, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -48

2016 வருட யாத்திரை

இத்தொடரை சென்ற தடவை முடித்த போது எழுதிய வார்த்தைகள் இவை.

இத்துடன் இத்தொடர் நிறைவு பெற்றது.  இன்னும் பஞ்ச கேதார் யாத்திரை, டோலி யாத்திரை, நந்தா தேவி உற்சவம் என்று  எத்தனையோ யாத்திரைக்கான  செய்ய வாய்ப்புக்கள் உள்ளன.அவன் அருள் இருந்தால் அந்த யாத்திரை விவரங்களையும் அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


இமயமலை  என்பது ஒரு காந்தம் போல  ஒரு தடவை அங்கு சென்றவர்கள் மறுபடியும், மறுபடியும் அங்கு செல்வார்கள். மும்முறை தொடர்ச்சியாக  இமயமலையில் இனிய யாத்திரை  செல்ல வாய்ப்புக் கிட்டியது. 2013ல் இமாலய பெருவெள்ளம் ஏற்பட்டது எனவே இருவருடங்கள் பத்தியுலா தடைப்பட்டது. 

பெருவெள்ளத்தால் தடைபட்ட யாத்திரை பின்னர் 2015ல் தொடர்ந்தது. இவ்வருடம் நான்கு நாட்கள் பத்தியுலாவாக  அமைந்தது,   பத்ரிநாத் மட்டுமே சென்றோம். டெல்லியில் இருந்தே வாகனம் அமர்த்திக்கொண்டோம், வழக்கம் போல் ரிஷிகேசத்தில் போக்குவரத்து அலுவலகத்தில் தாமதம் ஆனது. செல்லும் வழியில் ஒரு குருத்துவாராவில் இலங்காரில் பிரசாதம் உண்டோம். இரவு பீப்பல்கோட்டிற்கு சற்று முன்னர் உள்ள ஒரு தர்மசாலையில் தங்கினோம். மறுநாள் திருவதரி அடைந்து  பத்ரிநாதரை தரிசித்தோம். மாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் சேவித்தோம். மானா கிராமம் சென்று வந்தோம். சயன ஆரத்தி சேவித்தோம். காலையில் திருமஞ்சனகோலம் சேவித்து வெளியே வந்த போது இந்திரநீல பருபதத்தின் அருமையான வர்ண ஜாலத்தை தரிசித்தோம்.  கருக்கலில் பனியில் மின்னிய சிகரம் அருணன் உதிக்க மெல்ல மெல்ல இளஞ்சிவப்பாக மாறி பின்னர் பொன் போல மின்னி இறுதியில் அன்னத்தூவிப்போல  தூயவெள்ளை நிறமாகிய   வர்ண ஜாலத்தை, இந்திர ஜாலத்தை அருமையாக தரிசித்தோம். பின்னர் வரும் வழியில் தேவப்பிரயாகையில் புருடோத்தமனை சேவித்தோம். மெல்ல மெல்ல இம்மாநிலம் வெள்ள சேதத்திலிருந்து மீண்டு வருவது தெரிகின்றது.

மறு வருடமும் (2016) இறைவன் அருள்பாலித்தார் இவ்வருடம் பெங்களூர் அன்பர் சதோபந்த் யாத்திரை செல்ல விழைந்தார், ஒரு சிலர் மறுமுறை கேதாரீஸ்வரரை தரிசிக்கலாம் என்று கூறினர். ஆகவே அவரவர் விருப்பபடி செல்ல முடிவானது. இவ்வருடம் மொத்தம் ஒரு வாரம் யாத்திரை என்பதால் திருக்கேதாரம் சென்றவர்கள் திரியுக நாராயணன், குப்தகாசி, காளிமத், ஊக்கிமத், கோபேஸ்வர்,  பஞ்ச பத்ரிகளில் ஒன்றான தியானபத்ரி, பஞ்சகேதாரங்களில் ஒன்றான கல்பேஸ்வரம், ஆகிய முன்னர் தரிசிக்காத தலங்களை  தரிசிக்க முடிந்தது. இத்தலங்களின்  சிறப்பை இனி வரும் பதிவுகளில் காணலாம் அன்பர்களே. 


வழக்கம் போல் டெல்லிக்கு விமானத்தில் கிளம்பினோம்




டெல்லியில் சப்தர்ஜங் என்க்லேவ் கிருஷ்ண மந்திரத்தில்  உடுப்பி ஸ்ரீகிருஷ்ணரையும்   ஹனுமனையும், இராகவேந்திரையும் தரிசித்தோம் 


உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் 



ஹனுமன் 

இராகவேந்திரர் பிருந்தாவனம் 







யாத்திரை குழுவினர் 

டெல்லியிலிருந்து ஜன்சதாப்தி  தொடர்வண்டி மூலம் ஹரித்வாருக்குச் சென்றோம். 


ஹரித்வாருக்கு   தொடர்வண்டிப்பயணம் 


ஹரித்வாரத்தில்  மத்வாசிரமத்தில் தங்கினோம், 
கங்கையில் நீராடினோம். 

டெல்லியிலிருந்து வாகனம் அமர்த்திக்கொண்டு சென்றால் ரிஷிகேசத்தில் போக்குவரத்து அலுவலகத்தில் தாமதம் ஆகிவிடுகின்றது என்பதால் இவ்வருடம் ஹரித்துவாரத்தில் இருந்து வாகனம் அமர்த்திக் கொண்டோம். அதிகாலையில் ஹரித்வார் மத்வாவச்ரமத்திலிருந்து புறப்பட்டு வழியில் உள்ள பிரயாகைகளை பார்த்துக்கொண்டு சுமார் ஒரு மணி அளவில் ருத்ரப்பிரயாகையை அடைந்தோம். ஒரு வாகனம் நேரே பத்ரிநாத் செல்ல இன்னொரு வாகனம் திருக்கேதாரத்திற்காக திரும்பியது. 

வழியில் மழை பொழிந்தது 



பாகீரதியும் அலக்நந்தாவும் ச‘ங்கமமாகி கங்கையாக மாறும் புனித இடம் தேவப்பிரயாகை என்று அழைக்கப்படும் கண்டம் என்னும் கடிநகர்  திவ்யதேசம் 


 ஓர் அருவி 



 குப்தகாசிக்கு அருகில் உள்ள ஃபடா கிராம ஹெலிகாப்டர் தளம்.




மாலை 4மணி அளவில் குப்தகாசியை அடைந்தது. அங்கு திருகேதாரத்திற்கான கட்டாய வருகைப் பதிவை முடித்துக்கொண்டு  ஃபடா என்ற இடத்திலிருந்து  மறுநாள் திருக்கேதாரம் செல்வதற்கு   ஹெலிகாப்டருக்காக  முன்பதிவு செய்தோம். ஒருவருக்கு ரூ 7000/-  வானிலை சரியாக இருந்தால் அதிகாலையிலேயே அனுப்பிவிடுகிறோம் என்று உறுதியளித்தனர். உடல் எடை  90கிலோவிற்கு அதிகமாக உள்ள அடியார்களுக்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டது. சமயம் இருந்ததால் வெகு நாட்களாக செல்லவேண்டும் என்று நினைத்த திரியுக நாராயணர் ஆலயம் சென்றோம். 


யாத்திரை தொடரும் . . . . . . .

Saturday, October 29, 2016

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நரகாசுரனை  ஸ்ரீகிருஷ்ணரும், சத்யபாமாவும் சென்று வதம் செய்ததால் நரக சதுர்த்தசி நாள்  சூரிய உதயத்திற்கு முன் கங்கா ஸ்நானனம் செய்யும் நாள் , ஸ்ரீராமசந்திர மூர்த்தி இராவணனை வென்ற பின் அயோத்தி திரும்பிய அன்று  அயோத்தி மக்கள் தங்கள் இல்லத்தின் முன் தீபங்களை ஏற்றி வைத்து வரவேற்ற தீபாவளி   நாள், வருடப்பிறப்பு லக்ஷ்மி பூஜை  என்று  பலவிதமாக    பாரத   தேசமெங்கும்   தீபாவளி    சிறப்பாக  கொண்டாடப்படுகின்றது.

இறக்க முக்தித்தலமான காசியில் சொர்ண அன்னபூரணி லட்டுத்தேரில் அருள் பாலிக்கும் நாளும் தீபாவளிதான். 

 ஒரு சாரார்  அமாவாசையன்று சிவபெருமானுக்குரிய அஷ்டமஹா விரதங்களில் ஒன்றான கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கின்றனர். இவ்வருடம் இன்று (29-10-2016) இரவு வரை சதுர்த்தசி உள்ளது ஆகவே கேதார கௌரி விரதம் நாளை அனுஷ்டிக்கலாம். 

கேதார கௌரி விரதத்தை பற்றி அறிந்து கொள்ள இங்கு செல்லுங்கள் 

கேதார கௌரி விரதம்

நர-நாராயண சிகரங்கள்




2013 இமாலய பெருவெள்ளத்திற்கு  பிறகு ஐயனை தரிசிக்க ஒரு வாய்ப்புக்கிட்டியது. முன்பிருந்த பொலிவெல்லாம்  இழந்து கோவில் மற்றும் நிற்கின்ற காட்சியைக் கண்டு கண்ணில் நீர் வடிந்தது. அலக்நந்தாவின் குறுக்கே இருந்த பாலம்,  திருக்கோயில் அருகில் இருந்த  மற்ற கட்டிடங்கள், ஆதி சங்கரர் ஆலயம், அவரது நினைவிடம், அன்பர்கள் உணவருந்திய கூடம். கடைகள், தங்கும் விடுதிகள், சுற்றுச்சுவர் ஈசானேசுவரர் சன்னதி அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன.






  




2012ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் கௌரிகுண்டம் பெருஞ்சேதமடைந்து. கோயில்,  கௌரிகுளம்  எதுவும் தற்போது இல்லையாம். இராம்பாரா, கருடகங்கா முதலிய இடங்களும் தற்போது இல்லை. எப்போது அவைகளை புதுப்பிப்பார்கள் என்று தெரியவில்லை. முதலில் சென்ற பாதையும் சேதமடைந்ததால்  தற்போது ஆற்றின் மறுகரையில் உள்ள பழைய 18 கி.மீ பாதையை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர்.



தற்போது புதிதாக நதியின் குறுக்கே ஒரு  பாலம் கட்டியுள்ளனர். தற்காலிக தங்கும் விடுதிகள் கோவிலிருந்து தூரத்தில் அமைத்துள்ளனர். தற்போது ஆலயம் சுத்தம் செய்யப்பட்டு மின்னுகின்றது. புது வர்ணம் பூசியுள்ளனர். ஒரு பக்கக்கதவு மூடியே உள்ளது இன்னும் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. முன் இருந்த நிலையை அடைய எத்தனை வருடங்கள் ஆகும் என்று தெரியவில்லை. சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ள மாநிலம் என்பதால் பக்தர்கள் வருவதற்கு முதலில் எவை எவை அவசியமோ அவற்றை முதலில் முடிக்கின்றனர். வருடத்தில் ஆறு மாதங்கள் பனி மூடியிருக்கும் என்பதாலும், ஆலயம் திறந்திருக்கும் போது பக்தர்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும் என்பதாலும் வேலைகள் மெதுவாகவே நடைபெறுகின்றன.  










வெள்ளத்திற்கு முன் திருக்கேதாரம் இருந்த அழகைக் காண இங்கு செல்லுங்கள். 


திருக்கேதாரம் 2012_2

திருக்கேதாரம் 2012_3




திருக்கோயில் மட்டும் தப்பித்துக் கொள்ளும் வகையில் ஒரு செவ்வக வடிவப்பாறை எவ்வாறு வந்தது அது மட்டும் அங்கேயே எவ்வாறு நின்றது கோயில் மட்டும் எவ்வாறு தப்பியது என்பது அவ்விறைவனின் லீலை, மிகப்பெரிய அதிசயம் என்றே சொல்லவேண்டும். அப்பாறையை அப்படியே விட்டு வைத்துள்ளனர். அடையாளத்திற்காக காவி பூசி வைத்துள்ளனர்.   


வரும்காலத்தில் இது போன்ற எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்று சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டு வந்தோம்.

இத்தீபாவளி நன்னாளில்  கௌரியன்னை உடனுறை கேதாரீஸ்வரர் அருள் அனைவருக்கு சித்திக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.  

Saturday, October 22, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 24

நாலம்பலம்
பாயம்மல் சத்ருகனன் ஆலயம்



நாலம்பலம் வரிசையில் நிறைவாக அமைந்த ஆலயம் பாயம்மல் சத்ருகனன் ஆலயம். இத்தலம் பரதனின் ஆலயம் அமைந்துள்ள இரிஞ்ஞாலக்குடாவிலிருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. லக்ஷ்மணன், சத்ருகனன் இருவரும் இரட்டையர் தசரதரின் மூன்றாவது மனைவி சுமித்ரைக்கு பிறந்தவர்கள். இவர் பெருமாளின் சுதர்சன சக்கரத்தின் அம்சம்.  லக்ஷ்மணன் எவ்வாறு இராமருக்கு தொண்டு செய்தாரோ அது போல பரதனுக்கு தொண்டு செய்த தொண்டனுக்கு தொண்டன் சத்ருகனன். பரதன் நந்தி கிராமத்தில் ஸ்ரீராமர் வருகைக்காக காத்திருந்த போது இராச்சியத்தை பரிபாலனம் செய்தவர்  இவர் . சத்ருகனன் என்றால் சத்ருக்களை வெல்பவன் என்று பொருள். இராமர் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பின் லவணாசுரனை வென்றவர்இவருக்கான கோவில்தான்  பாயம்மலில் உள்ளது.



சிறிய கோவில்தான். மற்ற கோவில்கள் போலில்லாமல்  ஸ்ரீகோவில் செவ்வக வடிவில் உள்ளது. அதற்கு தகுந்தாற்போல பிரமிட் வடிவ  விமானம். நின்ற கோலத்தில் சதுர்புஜ விஷ்ணுவாகவே இவரும் சேவை சாதிக்கின்றார். ஆனால் மூர்த்தி சிறியது ஆனால் கீர்த்தி பெரியது .மேற்திருக்கரங்களில் சக்கரம், சங்கம், கீழ்க்கரங்களில் பத்மம் கதை தாங்கி சேவை சாதிக்கின்றார்.
சத்ருக்னன் ஆலயத்தில், அவர் மட்டுமே இருக்கிறார். தெற்குப் பார்த்து கணபதி சந்நிதியும், முக மண்டபத்தில் அனுமன் சந்நிதியும் உள்ளதுமது என்ற அரக்கன் சிவனைக் குறித்து தவம் செய்து ஒரு சூலம் பெற்றான். உனக்கும், உன் மகன் லவணனுக்கும் எதிரிகளை ஒழிக்க இது உதவும் என்று கொடுத்தார். லவணனின் காலத்துக்குப் பிறகு சூலம் என்னிடம் வந்துவிடும் என்று சிவபெருமான் கூறிவிட்டு, மறைந்து விட்டார் மது நல்லவனாயிருந்தான். மகன் நேர் எதிர். துஷ்டனான லவணனை அழிக்க ராமர் சத்ருக்னனிடம் சொல்கிறார். அண்ணலின் ஆணை கேட்டு அதை நிறைவேற்றத் தயாராக, கோப வடிவத்தில் நிற்கிறார் சத்ருக்னர்



சுதர்சன புஷ்பாஞ்சலி, சக்கர சமர்ப்பணம் இவை இரண்டும் இங்கே முக்கிய வழிபாடுகள்சித்திரை மாதம் மிருகசீரிட  தினம் பிரதிஷ்டை தினம். வாய்ப்புக் கிட்டுபவர்கள் நான்கு தலங்களையும் சென்று சேவிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்
மலைநாட்டு தலங்களைச் சேவித்தபின்  நாங்குநேரி வந்து வானமாமலைப்பெருமாளை சேவித்தோம்ப,  திருமலை சுவாமிகளின் ஆச்சாரியர் வானமாமலை ஜீயரின் ஆசி பெற்றோம். பின்னர் மதுரையடைந்து கூடலழகரை சேவித்தோம். யாத்திரையின் நிறைவாக திருமோகூரை சேவித்து சென்னை திரும்பினோம். விரிவுக்கஞ்சி இப்பதிவுடன் மலைநாட்டு திவ்விய தேச யாத்திரை தொடரை நிறைவு செய்கின்றேன். இதுவரை வந்து சேவித்த அனைவருக்கும் பரந்தாமன் அருள் கிட்ட அவரிடம் வேண்டுகின்றேன். விரைவில் இன்னொரு இனிய யாத்திரை விவரங்களுடன் தங்களை சந்திக்கின்றேன் அது வரை நன்றி வணக்கம். 

 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை இனிதாக நிறைவுற்றது

Friday, October 21, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 23

நாலம்பலம்

இரிஞ்ஞாலக்குடா பரதன் ஆலயம்



துளசிதாசர் தமதுஹனுமான் சாலீசாஎன்ற ஸ்துதியில்  ஸ்ரீராமர்  அனுமனை

ரகுபதி கீனீ பஹுத் படாயீ |
தும் மம ப்ரிய பரத சம பாயீ ||

பொருள்:  “அனுமனே நீயும்  பரதன் போன்று எனக்கு  ஒரு பிரியமான சகோதரன் என்று போற்றினார்என்று பாடுகின்றார்.

அது போலவே இராஜகோபாலாச்சாரியார் தமதுசக்கரவர்த்தி திருமகன்என்ற இராமாயண நூலில் பரதனை தியானிப்பவர்களுக்கு ஞானமும் பக்தியும் தானே பெருகும் என்று கூறுகின்றார். சகோதர பாசத்திற்கும், தன்னலமின்மைக்கும், பொறுமைக்கும் சிறந்த இலக்கணமாக திகழ்பவன் பரதன். பதினான்கு ஆண்டுகள் நந்தி கிராமத்தில் இராமனை எதிர்பார்த்து காத்திருந்த கோலத்தில் பரதன் இந்த கூடல் மாணிக்கம் என்ற  ஆலயத்தில் சேவை சாதிக்கின்றார்பரதனுக்கு நமது பாரத தேசத்தில் உள்ள தனிக்கோவில்கள் சிலவற்றில் இதுவும் ஒன்று என்பது  ஒரு தனி சிறப்பு. அது மட்டுமல்ல இன்னும் பல சிறப்புகளும் உள்ளன அவை என்னவென்று காணலாமா அன்பர்களே.

பரதன்
பரதன் தவக்கோலத்தில் இருப்பதால் பூஜையின் போது வாசனைத் திரவியங்கள் சேர்ப்பதில்லை. தீபாராதனை வழிபாடும் கிடையாது. இவரே பரப்பிரம்மாக விளங்குவதால் கணேசர் உட்பட வேறு எந்த உபதெய்வமும் இக்கோவிலில் கிடையாது. தாமரை மலர், துளசி, மற்றும் தெச்சி பூக்கள் மட்டுமே பூஜைக்கு பயன்படுத்துகின்றனர். வேறு எந்த மலரும் சார்த்துவதில்லை. இவ்வாலயத்தில் உள்ள  துளசி செடிகளில் விதைகள் தோன்றுவதில்லையாம். பொதுவாக கேரளாவில் எல்லா ஆலயங்களிலும் ஐந்து வேளை பூஜைகள் நடைபெறும் ஆனால் இக்கோவிலில் மூன்று வேளை பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றது. உஷத் பூஜை மற்றும் பந்தீரடி பூஜைகள் நடைபெறுவதில்லை. அது போலவே அனுதின  சீவேலியும் நடைபெறுவதில்லை. சித்திரை உற்சவத்தின் போது மட்டுமே  சுவாமி வெளியே வருவார். ஐப்பசி மாதம் திருவோணத்தன்று புத்தரிசி நைவேத்தியம் உண்டு. புதிதாக அறுவடையான அரிசி உணவு நிவேதிக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மறுநாள் முக்குடி என்ற பிரசித்தி பெற்ற வயிற்று வலியை போக்கும் பிரசாதமும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த பிரசாதம் பல தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினர் ரகசியம் காத்து தயாரிக்கிறார்கள். இவ்வாலயத்தில் கத்திரிக்காய் சிறப்பு  நைவேத்தியம் என்று பல சிறப்புகள் உள்ளன.

இவ்வாலயத்தை அடைய புகைவண்டி மூலம் வருபவர்கள் இரிஞ்ஞாலக்குடா புகைவண்டி நிலையத்தில் இறங்கி பின்னர் ஆட்டோ அல்லது பேருந்து மூலம் 9 கி.மீ தூரத்தில் உள்ள கோவிலை அடையலாம். இத்திருக்கோவில் கொடுங்கல்லூரிலிருந்து திருச்சூர் செல்லும் பாதையில் திருச்சூரிலிருந்து சுமார் 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.   இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட பரதன் ஆலயம் கூடல் மாணிக்கம் ஆலயம் என்றும் அழைக்கப்படுகின்றது. இனி இத்தலத்தின் புராணத்தை பற்றிப் பார்ப்போமா?

ஆதி காலத்தில் அடர்ந்த வனமாக இருந்த இவ்விடத்தில் குலிப்பிணி என்ற மஹரிஷியின்  தலைமையில் பல ரிஷிகள் தவம் செய்து வந்தனர். அவர்களின் தவத்திற்கு மெச்சி மஹா விஷ்ணு அவர்களுக்கு பிரத்யக்ஷமாகி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.அவர்களும் தாங்கள் இங்கேயே கோவில் கொள்ள வேண்டும் என்று கேட்க அவ்வாறே வரம் அளித்தார். பின்னர் முனிவர்கள் கங்கையை வேண்ட அவள் அங்கு தோன்றினாள். அந்த வெள்ளத்தில் மூழ்கி முனிவர்கள் அனைவரும் பரமபதம் அடைந்தனர். இன்றும் கோவிலின் உள்ளே உள்ள  குலிப்பிணி தீர்த்தத்தில் கங்கை இருப்பதாக ஐதீகம். இக்குளத்தின் நீரே பெருமாளுக்கு நைவேத்தியத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது. பூஜை செய்யும் நம்பூதிரிகள் மட்டுமே இக்குளத்தில் நீராடுகின்றனர்.


ஆதிகாலத்தில் சாலக்குடி ஆறும், குருமலி ஆறும்  சங்கமம் ஆகும் கூடுதுறையில் இக்கோவில் அமைந்திருந்ததால் கூடல் மாணிக்கம் என்றழைக்கப்படுகின்றது என்பது ஒரு ஐதீகம். இரு சால் கூடல் என்பதே இரிஞ்ஞாலகுடா ஆனது என்பர். மற்றொறு ஐதீகம். ஒரு சமயம் பெருமாளின் சிரசிலிருந்து ஒரு அற்புத ஓளி தோன்றியது அப்போதைய காயங்குளம் அரசனிடம் இருந்த அற்புத விலை மதிப்பற்ற மாணிக்கத்தின் ஒளியை இவ்வொளியுடன் ஒப்பிட கொண்டுவந்த போது அந்த மாணிக்கம் பெருமாளின் திருமேனியில் மறைந்து விட்டது எனவே கூடல் மாணிக்கம் ஆயிற்று என்பர். மூன்றாவது ஐதீகம் ஒரு சமயம் தலிப்பரம்பா என்ற ஊரின் ஒரு முதியவர் பல் வேறு ஆலயங்களின் சான்னியத்தை ஒரு சங்கில் ஏற்று  தன் ஊரில் உள்ள மூர்த்திக்கு மாற்ற ஆலயம் ஆலயமாக சென்று  வரும் போது இவ்வாலயத்தை அடைந்தார். அப்போது அவர் கையில் இருந்து அந்த  சங்கு கீழே  விழுந்து சுக்குநூறாக உடைந்து அதில் இருந்த தெய்வ சக்திகள் அனைத்தும் இப்பெருமாளில் இணைந்ததால் இவர் கூடல் மாணிக்கம் என்றழைக்கப்படுகின்றார்.

கேரளப்பாணியில் மூன்று பக்கமும் வாயில்களுடன் பிரம்மாண்டமாக இந்த ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கு கோபுரத்தின் சுவர்களில் அற்புதமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ள. ஆலயம் முழுவதும் ஓவியங்களும், அற்புத கற்சிலைகளும், மரச்சிலைகளும் நிறைந்திருக்கின்றன. ஸ்ரீகோவில் வட்டடிவில் உள்ளது. விமானம் சிறப்பாக இரண்டடுக்கு கூம்பு வடிவத்தில் உள்ளது. விமானத்திற்கு தாமிர தகடு சார்த்தியுள்ளனர். கலசம் ஆறு அடி உயரம் ஆலயத்தை சுற்றி நான்கு திருக்குளங்கள் அமைந்துள்ளன. இவற்றுள்  புனிதமான குலிப்பிணி தீர்த்தம் கோவில் வளாகத்திற்குள் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தெற்கு பிரகாரத்தில் பெரிய கூத்தம்பலமும் உள்ளது.

இத்தலத்தில் பரதன் சதுர்புஜ விஷ்ணுவாகவே சேவை சாதிக்கின்றார். நின்ற தவத்திருக்கோலம், சதுர்புஜங்கள், வலமேற்கரம் தண்டம், கீழ்க்கரம் அக்ஷமாலை, இடமேற்கரம் சக்கரம். கீழ்க்கரம் சங்கம். தீபவழிபாடு, அவல் பாயச வழிபாடு, வெடிவழிபாடு, புஷ்பாஞ்சலி வழிபாடு பிரபலம். 14 வருடங்கள் கழித்து எப்போது இராமன் திரும்பி வருவார் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கோலம். வனவாசம் முடித்து இராமன் திரும்பி வந்த போது அன்று பரதன் முகம் எவ்வளவு மலர்ச்சியாக இருந்ததோ அவ்வளவு மலர்ச்சியாக பரதன் இன்றும்  அருள் பாலிக்கின்றார் என்பது ஐதீகம்



பெருமாளுக்கு சங்கமேஸ்வரர் என்றொரு நாமமும் உண்டு101 தாமரை மலர்களுக்கு அதிகமாக எண்ணிக்கையில்  12 அடி நீளமான தாமரை மலர் மாலை பெருமாளுக்கு சார்த்தினால், தடைகள் எல்லாம் விலகும் நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும் என்பது இங்குள்ளவர்கள் நம்பிக்கைமேலும் தீராத வயிற்று வலியை நீக்கும் தன்வந்திரிப் பெருமாளாகவும் இவர் விளங்குகிறார். தீராத வயிற்று வலியால் ஒரு பக்தர் அவதிப்பட்டு வந்தார் அவர் கனவில் தோன்றிப் பெருமாள் அவரது தோட்டத்தில் விளைந்த 101  கத்திரிக்காய்களை நைவேத்யமாக சமர்பிக்குமாறு வேண்டினார். அதற்குப்பின் அவரது வயிற்று வலி மாயமாக மறைந்தது. இது போல பல பக்தர்களின் நோயை தீர்த்து வைத்துள்ளார் பரதப்பெருமாள். பதினான்கு வருடம் கழித்து  இராமன் வர தாமதமானபோது வந்து நந்திகிராமத்தில் காத்திருந்த பரதன்  தீ மூட்டி அதில் இறங்க தயாரான போது விரைந்து வந்து இராமபிரான், இராவணனை வென்று வாகை சூடி, பிராட்டியுடன் திரும்பி வருகிறார் என்று கூறிய ஹனுமன் திடப்பள்ளியில் (மடப்பள்ளி) இன்றும் அரூபமாக  வசிப்பதாக நம்புகின்றனர்

மேட மாதம் (சித்திரை) பூரம் தொடங்கி திருவோணம் முடிய பெருவிழா மிகவும் சிறப்பாகவும் வேத தந்திரீக முறை வழுவாமலும்  நடைபெறுகின்றது. கேரளாவின் மற்ற கோவில்களை விட இங்கு நடக்கும் திருவிழா மிகவும் வித்தியாசமானது. தினமும் காலையும், மாலையும் 17 யானைகளோடு சுவாமி எழுந்தருளுவார். அதைக் காணக் கண் கோடி வேண்டும். பவனியின் போது நூற்றுக்கணக்கான வாத்தியக்கலைஞர்கள் பாங்கேற்கின்றனர்.

தன்னலமின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு பரதன் ஆவான். தான் செய்த தவறையே இல்லை என்றுதான் எல்லாரும் சொல்வர்கள் .ஆனால் தான் செய்யாத தப்பையே தான் செய்ததாக ஒப்புக்கொண்ட உயர்ந்தவன் பரதன். ஸ்ரீராமர் கானகம் சென்ற பின் பரதனும் சத்ருகனனும் பேசிக்கொண்டிருந்த போது பரதன் கூறுகின்றான். சத்ருகனா இவ்வாறு நடந்ததற்கு தாயார் கைகேயியோ, தந்தை தசரதரோ, அண்ணன் இராமனோ காரணம் அல்ல  நான்தான் காரணம், எனக்காகத் தானே தாயார் இராச்சியம் வேண்டுமென்று வரம் கேட்டார் என்று பெரும் பழியை சுமந்த பெருந்தன்மையாளன் பரதன். இதைப் போலவே    சூடிக்கொடுத்த  சுடர்க்கொடியாள் ஆண்டாள் தனது திருப்பாவையில் எல்லே இளங்கிளியே பாசுரத்தில்நானே தானாயிடுகஎன்று தான் செய்யாத தவறை ஒத்துக் கொள்கிறாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இருக்கவேண்டிய ஒரு முக்கியமான லட்சணம் இதுவாகும் எனவேதான் இத ஆண்டாளின் பாசுரம் திருப்பாவை பாசுரம் என்னும் சிறப்புப் பெற்றது.  அனைவரும் இவ்வாறு இருந்தால் எந்தவிதமான சண்டை சச்சரவும் இராதே.

நாலம்பல வரிசையில் மூன்றாவது தலமும், நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் திவ்விய தேசமும் பெருமாள் லக்ஷ்மணராகவும் சேவை சாதிக்கும் திருமூழிக்களத்தின் சிறப்புகளைப் முதலில்  எனவே அடுத்து சத்ருகனன் சேவை சாதிக்கும் பாயம்மல் தலத்தைப் பற்றிக் காணலாம் அன்பர்களே.
 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்         பாயம்மல்

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .