Wednesday, September 28, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 15

திருவண்பரிசாரம் திருவாழ்மார்பன்





மலைநாட்டு திவ்வியதேச யாத்திரையின் நிறைவாக திருப்பதிசாரம் என்று தற்போது அழைக்கப்படும் திருவண்பரிசாரத்தை அடைந்தோம். இத்திவ்வியதேசம் மலைநாட்டு திவ்விய தேசம் ஆனாலும் திருவாட்டாறு போல தமிழகத்தில் தற்போது அமைந்துள்ளது. திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் நாகர்கோவிலிலிருந்து சுமார் 4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த திவ்ய தேசம். நாகர்கோவிலிலிருந்து இத்தலத்தை சுலபமாக பேருந்து மூலம் சென்றடையலாம்.

வாருங்கள் அன்பர்களே இத்தலத்தின் சில சிறப்புகளைப் பற்றி காணலாம். வண் என்றால் கொடை என்று பொருள். நம்மாழ்வாரை நமக்கு கொடுத்ததனால் இத்தலத்திற்கு இந்த சிறப்பு  அடைமொழி.  மலை நாட்டு திவ்விய தேசங்களில் பெருமாள் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிப்பது இத்தலத்தில் மட்டும்தான். நம்மாழ்வார் என்னும் அமுதத்தை நமக்களித்த அமுதம் உடைய நங்கையாரின் அவதாரத்தலம் இத்தலம். விபீஷணாழ்வாருக்கு பட்டாபிஷேக கோலத்தை காட்டியருளிய தலம். குலசேகராழ்வார் திருப்பணிகள் செய்த தலம், பரமபதித்த தலம்.  நம்மாழ்வார் இத்தலத்தை ஒரு பாசுரத்தால் மட்டுமே மங்களாசாசனம் செய்துள்ளார்.  ஆலயத்திற்கு எதிரிலேயே லக்ஷ்மி தீர்த்தம் அமைந்துள்ளது.

இனி பெருமாளுக்கு திருவாழ்மார்பன் என்னும் திருநாமம் ஏன் வந்தது என்று காணலாமா அன்பர்களே.  பெருமாள் தன் பக்தனான பிரகலாதன் சொன்ன சொல்லை நிரூபிக்க நரசிம்ம அவதாரம் எடுத்த போது அவரது உக்ரத்தைக் கண்டு தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் அனைவரும் நடுங்கினர். தாயார் கூட பெருமாளை நெருங்க அஞ்சினாள். பிரகலாதனால் மட்டுமே பெருமாளை சாந்தப்படுத்த முடிந்தது. எனவே தாயார் இத்தலம் வந்து லக்ஷ்மி தீர்த்தக்கரையில் தவம் செய்தாள். பின்னர் இங்கு  பெருமாள் எழுந்தருள தாயார்   தனது இருப்பிடமான  பெருமாளின் மார்பில் அமர்ந்தாள். எனவே பெருமாள் ”திருவாழ்மார்பன்” என்றழைக்கப்படுகின்றார். அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன் என்று ஆழ்வார்களும்  மங்களாசாசனம் செய்து மகிழ்கின்றனர்.

திருவாகிய இலக்குமி தனது பதியாகிய மஹாவிஷ்ணுவை இவ்விடத்தில் சார்ந்ததால் திருப்பதி சாரம் என்பதே இத்தலத்திற்குப் பொருத்தமான பெயர் என்று இவ்வூர்வாழ் பெரியோர் பகர்கின்றனர்.

ராவணனை வென்று, சீதையை மீட்டு இலங்கையைத் தன் வசப்படுத்திய ஸ்ரீராமருக்கு, அயோத்தியில் பட்டாபிஷேகம். அதனைக் காண வந்தவர்களுக்கெல்லாம் பரிசுப் பொருட்களை வாரி வழங்கினார் ராமர். அந்த வகையில், ராவணன் தம்பி விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த ஸ்ரீரங்க விமானத்தைத் பரிசாகக் கொடுத்தார் ஸ்ரீராமர். சூரிய குலச் சொத்து அன்புப் பரிசாகக் கை மாறியது. அதனை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினான் விபீஷணன். அப்படியே தன் நாடு நோக்கிக் கிளம்பினான். ஆகாய மார்க்கமாகச் சென்ற அவன் சோமலட்சுமி தீர்த்தத்தில் நீராடி இராமபிரானின் முடிசூட்டு விழாவைத் தனக்கு மீண்டும் ஒரு முறை காட்சி தந்தருள வேண்டி திருவாழ்மார்பனை வழிபட்டார். அதற்கிணங்கி பெருமாள் பட்டாபிஷேக கோலத்தை  மீண்டும் காட்டியருளிய  தலம். எப்போதும் இராம காதையை செவி மடுக்க விரும்பும் அனுமனுக்கு,  அகத்திய முனிவர் இராமாயணத்தை கூறிய தலம் என்றும் கூறுவர்.

ஒரு சமயம் குலசேகர  மன்னரின் வெள்ளை நிற குதிரை காணாமல் போயிற்று. மன்னரும் காவலரும் பல இடங்களிலும் தேடினர். அது சோம தீர்த்தக் கரையில் புல் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டு அவ்விடத்திற்குத் "திருவெண்பரிசாரம்' எனப் பெயரிட்டதாகவும் அதுவே மருவி திருவண்பரிசாரம் என்றாகியது என்றொரு வரலாறும் உண்டு.  எனவே   கொல்லி காவலன், கூடல் நாயகன்,  கோழி வேந்தன்,  குலசேகராழ்வார் ங்கு தங்கி  இவ்வாலயத்தை புனருத்தாரணம் செய்து 40 அடி உயரமுள்ள கொடிமரத்தை நிறுவினார். பின்னர் இங்கேயே  பரமபதமும் அடைந்தார்.  தற்போது  ங்கத்தகடு வேயப்பட்டு தங்கமுலாம் பூசிய கருடனின் உருவம் உச்சியில் பொறிக்கப்பட்ட கொடிமரம் எழிலாக மஹாமண்டபத்தில் அமைந்துள்ளது.

இன்றைய சுசீந்திரம் ஒரு காலத்தில் ஞானாரண்யம் என்று அழைக்கப்பட்டிருந்தது. அத்திரி, வசிஷ்டர், காசியபர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர், ஜமதக்னி, கௌதமர்   ஆகிய சப்தரிஷிகள் இங்கு தவமிருந்தனர். இறைவன் அவர்களுக்கு சிவ வடிவில் அங்கு தரிசனம் அளித்து அருளினார். முனிவர்கள் திருமால் வடிவில் பெருமானைக் காண விரும்பினர். அதற்காக சோமதீர்த்தம் என்னும் இத்தலத்தில்  தவம் செய்தனர். அப்போது திருமால் சேவை சாதித்த  கோலமே இன்று நாம் சேவிக்கும் கோலம் ஆகும். இதனால் திருமால் சப்தரிஷிகள் சூழ பிரசன்ன மூர்த்தியாக இருந்து அருள் புரிகின்றார்.  இவருக்கு வலப்புறம் உள்ள சன்னதியில்  இராமர் விபீஷணாழ்வாருக்கு அளித்த பட்டாபிஷேக கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அவருடன் அகத்தியர் அனுமன், விபீஷணாழ்வான், குலசேகராழ்வார் ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர். 




இத்திவ்ய தேசத்தின்
மூலவர்: திருவாழ்மார்பன், திருகுறளப்பன்
தாயார் : கமலவல்லி நாச்சியார்.
விமானம்: இந்திர கல்யாண விமானம்
தீர்த்தம்: லக்ஷ்மி தீர்த்தம் என்னும் சோம தீர்த்தம்
பிரத்யக்ஷம்: சப்தரிஷிகள். லக்ஷ்மி, கருடன்.
                              
மூலவர் சுமார் ஒன்பது அடி உயரம், கடு சக்கரை யோகம் என்னும் கடுகு வெல்லம் ஆகியவற்றால் ஆனவர் என்பதால் திருமஞ்சனம் கிடையாது. வெள்ளி அங்கி சார்த்தி பஞ்சகவ்யம் தெளிப்பது மட்டுமே உண்டு. கருவறையில் திருவாழ்மார்மன் 9 அடி உயரத்தில் வலது காலை மடக்கி இடது காலை தொங்கவிட்டு நான்கு கரத்துடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தந்து அருள்புரிகிறார். பின் கைகள் சங்கு, சக்கரம் ஏந்தியிருக்க, முன் வலத்திருக்கரம் அபயமாகவும் இடத்திருக்கரத்தை தொடையில் வைத்த வண்ணம், கழுத்தில் லட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட பதக்கத்துடன்  திருவாழ்மார்பனாக   எழிலாக  சேவை சாதிக்கின்றார். நம்மாழ்வார் அவதாரம் செய்தது இத்தலத்தில்தான். நம்மாழ்வாரின் தாயார்  உடையநங்கை இவ்வூரை சேர்ந்தவர், அவருக்கும் ஆழ்வார் திருநகரி பொன்காரிக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வெகு காலம் பிள்ளைப்பேறு இல்லாமல் இருக்க தமது குல தெய்வமான  வண்ணமழகிய நம்பி வடிவழகிய நம்பி  திருக்குறுங்குடி நம்பியிடம் பிரார்த்திக்க, யார் போல பிள்ளை வேண்டும் என்று பெருமாள்  வினவ, உம்மைப் போல பிள்ளை வேண்டும்  என்று வேண்ட,   நாமே வந்து உமக்கு மகவாகப் பிறப்போம் என்று அருளியபடி நம்மாழ்வாராக திருவவதாரம் செய்தார் என்பது ஐதீகம். ஆலயத்தின் பின்புறம் திருத்தாயாருக்கு  தனி சன்னதி உள்ளது. 

ஆலயத்தின் முகப்பில் இராமர்  அமர்ந்த கோலப்பெருமாள், நம்மாழ்வார் சுதை சிற்பங்கள் அருமையாக அமைத்துள்ளனர். கருவறையைச் சுற்றிய கர்ணகூடு ஆரம்பகால சோழர்பாணி என்கின்றனர். இத்திருக்கோவிலின் முன்வாயிலை அடுத்து இருக்கும் கிழக்குப் பிரகாரத்தை மகாமண்டபம் என்பர். கொலு மண்டபம் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கிழக்குப் பிரகாரத் தூண்களில் தசாவதார சிற்பங்கள் அருமை. மேலும் சைவ வைணவ   பேதம் இல்லாமல் அனைத்து தெய்வ   சிற்பங்களும் உள்ளன. கிழக்கு வரிசைத்தூண் ஒன்றில் நம்மாழ்வார் சிற்பம் உள்ளது.   




திருவாழ்மார்பன் ஆலயம் கேரள மன்னர்கள் காலத்திலும் சோம லட்சுமி தீர்த்தத்தின் படிக்கட்டுகள் மதுரை திருமலை நாயக்கர் காலத்திலும் கட்டப்பட்டதாகக் கூறுகின்றனர். தொழுநோயால் பாதிக்கப்பட்ட களக்காடு மன்னன் நோய்தீர மனமுருகி திருவாழ் மார்பனை வேண்ட, நோய் நீங்கியது என்றும் இதனால் மனமகிழ்ந்து இறைவனுக்குத் தங்க கிரீடத்தைக் காணிக்கையாகச் செலுத்தினாராம்.



கருட சேவை 

இவ்வாலயத்தில் நடைபெறும் சித்திரை மாத ஆறாட்டுத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறுகின்றது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் விழா ஆரம்பமாகின்றது. ஒன்பதாம் திருநாள் தேரோட்டத்தில் பெருமாள் தேரில் வலம் வருகின்றார்.  இத்தேரை மூலம் திருநாள் இராஜா பெருமாளுக்கு தனக்கு குழந்தை பாக்கியம் அருளியதற்காக பெருமாளுக்கு சமர்பித்தாராம்.   விஜய தசமியில் திருவாழ்மார்பனின் தங்கையான திருப்பதி நங்கை வெள்ளைக் குதிரை வாகனத்தில் அம்பெய்யச் செல்லும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகின்றது. மேலும் குலசேகர ஆழ்வார் பரமபதித்த ஆடி ஸ்வாதி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகின்றது. இராஜா மார்த்தாண்டவர்மா எதிரிகளிடமிருந்து தப்பிக்க அலைந்த போது இவரையும் வணங்கியுள்ளார். பின்னர் எதிரிகளை வென்று அரசனான பின் தனது  நட்சத்திரமான அனுஷம் திருநாளை விழாவாக கொண்டாடினார்.

இத்தலத்தில், துலாபார நேர்ச்சை முக்கிய வழிபாடாகும். வழிபாட்டு நைவேத்தியங்களில் அரவணை, பால்பாயசம் இரண்டும் குறிப்பிடத்தக்கவை. திருப்பதிக்கு நேர்ந்தால் திருப்பதிசாரத்தில் செலுத்தலாம். திருப்பதிசாரத்தில் நேர்ந்தால் திருப்பதியில் செலுத்த முடியாது என்பது ஐதீகம்.

வருவார் செல்வார் வண்பரிசாரத்திருந்த என்
திருவாழ்மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்?
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு
ஒரு பாடுழ்வான் ஓரடியானு முளனென்றே (தி.வா 8-3-7) 

என்று நம்மாழ்வார்  ஒரே பாசுரத்தினால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

பொருள்: திருவண்பரிசாரத்திற்கும் ஆழ்வார் திருகரிக்குமாக போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருப்பவர்களே  திருவண்பரிசாரத்தில் எழுந்தருளியுள்ள திருவாழ்மார்பன் எம்பெருமானிடம்,   தேவரீருடைய சங்க சக்கரங்களை சுமந்து கொண்டு தங்களின் ஒரு பக்கம் வர மேன்மையுடைய  அடியவன் ஒருவன்  உள்ளான் என்று கூறுங்கள்  என்று பாடுகின்றார்.

என் திருவாழ்மார்பன் – அதாவது ஆழ்வாருடைய பெருமாள், என் திரு+வாழ் மார்பன் – அதாவது ஆழ்வாருடைய தாயாராகிய, அனைவருக்கும் தாயாராகிய  அலர் மேல் மங்கை, அகலகில்லேன்  இறையும் என்று  எப்போதும் உறைகின்ற மார்பன் என்றும்  இரு விதமாகப் பொருள் கொள்ளலாம். ஒருபாடுழல்வான் – அதாவது ஒரு பக்கம் என்று எதற்காக ஆழ்வார் பாடியுள்ளார்  என்பதற்கு பெருமாளை பிரியாமல் லக்ஷ்மணன் வில்லைத் தாங்கி ஒரு பக்கம் வந்து கொண்டிருப்பதால், மற்றொரு பக்கம் தான் பெருமாளின் சங்க சக்கரங்களை தாங்கி வர விழைகின்றார் ஆழ்வார் என்று ஆச்சார்யர்கள் இப்பாசுரத்திற்கு விளக்கம் தருவர். 

அடியோங்கள் சென்ற சமயம் திருக்கோவிலின் திருப்பணிகள் நடந்து கொண்டிருந்தன எனவே எப்போதும் காலை 10:30 மணியளவில் அடைக்கப்பட வேண்டிய நடை 9:30 மணிக்கே அடைக்கப்பட்டிருந்தது. முன் மண்டபத்தில் உள்ள கற்தூண்களையும் சிற்பங்களையும் மணலை வீசி (Sand Blasting) சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இம்மணலால் சுத்தம் செய்யும் முறை அதிக சேதத்தை விளைவிக்கும் என்றாலும் பல ஆலயங்களில் இன்னும் இதை கடைப்பிடிக்கின்றனர்  என்று வருத்தமாக இருந்தது.   எனவே பெருமாளை சேவிக்க முடியவில்லை. லக்ஷ்மி தீர்த்தத்தில் நீராடிவிட்டு  நம்மாழ்வாரின் திருத்தாயார் சன்னதிக்கு சென்று வணங்கினோம்.   

பின்னொரு சமயம் இத்திவ்விய தேசத்திற்கு சென்ற போது மிகவும் அழகாக வார்னிஷ் பூச்சுடன் தூண்களும், சிற்பங்களும் விளங்குவதை கண்டு களித்தோம் பெருமாளையும் திவ்யமாக சேவித்தோம். அப்போது சீவேலி சேவிக்கும் பாக்கியமும் கிட்டியது. மஹா மண்டபத்தில் பிரம்மாண்ட தூண்கள். அவற்றில் அற்புத சிற்பங்கள் வரிசையாக கை விளக்கேந்திய பாவைகள் இத்திவ்விய தேசத்திலும் காணப்பெற்றோம்.

நம்மாழ்வாருக்கு இத்தலத்தில் பெருமாள் காட்டிய கல்யாண குணம் சௌகுமார்யம்  என்னும் மென்மை  ஆகும். எப்போதும் பெருமாள் சங்கு சக்கரங்களை சுமந்து கொண்டிருப்பதால் எம்பெருமானின் மென்மையான திருமேனி வாடி விடும்,   அவரது கரங்கள் வலிக்கும்  என்று வருந்தி ஆழ்வார் சங்கு சக்கரங்களை தான் சுமந்து கொண்டு ஒரு பக்கம் வருவதாக பல்லாண்டு பாடுகிறார். இதை அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் தமது ஆச்சார்ய் ஹ்ருதயத்தில் “சிரமமனம் சூழும் சௌகுமார்யம் ஆய்ச்சேரியிலே    (தாயாரின் ஊரிலே)” என்று கூறுகிறார்  இத்தலத்தில் எம்பெருமான்  காட்டிய மென்மை திருமேனியின்  மென்மை ஆகும். திருமொழிக்களத்தில் காட்டிய மென்மை அடியாரை விட்டுப் பிரிந்தால் மனம் தாங்காது என்னும் மார்த்வம் என்கின்ற மனத்தின் மென்மையாகும்.

அடியும் குளிர்ந்தாள் அறிவும் குலைந்தாள்
முடிகின்றாள்; மூச்சு அடங்கும் முன்னே கடிது ஓடி
பெண்பரிசு ஆர் அங்குப் பிறப்பித்து மீளுவார்
வண்பரிசா ரம்சிறந்த மாற்கு? ( நூ. தி 60)

பொருள்: தலைவியின் கால்களும் குளிரப்பெற்று, அறிவும் அழியப் பெற்று,  மரணமடையும் தறுவாயில் இருக்கின்றாள்; இவளது சுவாசம் அடங்குவதற்கு முன், திருவண்பரிசாரம் சென்று  திருவாழ்மார்பரிடம் இப்பெண்ணின் தன்மையை விளங்கும்படி தெரிவித்து திரும்பி வல்லவர் யாவர்? என்று பிரிவாற்றாது வருந்தும் தலைவியின் நிலை கண்ட செவிலி இரங்கும் பாசுரமாக திவ்வியகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தமது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் இத்திவ்விய தேசத்தைப் பற்றிப் பாடியுள்ளார்.



ஸ்ரீபதிசாரக்ஷேத்ரே சோம தீர்த்த தடே இந்த்ர கல்யாண விமானச் சாயாயாம் ஸ்திதாய ஸ்ரீகமலவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீநிவாச(திருக்குறளப்ப) பரப்ரஹ்மணே நம:  என்பது இவரது தியானஸ்லோகம் ஆகும்.

இவ்வாறு மலர்மகளை தன் மார்பில் கொண்ட மாதவன் அருளால் இரண்டரை  நாளில் 13  மலை  நாட்டு திவ்ய தேச யாத்திரை நிறைவு பெற்றது. 11 தலங்களில் தான் பெருமாளின் திவ்ய தரிசனம் கிட்டியது. அதில் ஒன்று ஏகாந்த சேவையாக அமைந்தது. எனவே ஒரு அதிகப்படி நாள் வைத்துக்கொண்டு யாத்திரை செல்வது உத்தமமானது. இப்பதிவுடன் மலைநாட்டு திவ்ய தேச தரிசனம் நிறைவு பெற்றது. அடியோங்கள் தரிசித்த மற்ற தலங்களைப் பற்றி நவராத்திரிக்குப்பின் பகிர்ந்து கொள்கின்றேன் அன்பர்களே. 
 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        பாயம்மல்

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 14

திருவாட்டாறு - ஆதி கேசவன்




திருவனந்தபுரத்திற்கும் முற்பட்ட  ஆலயம் என்பதால் ”ஆதிஅனந்தசயனம்” என்றும், சேரநாட்டில் அமைந்துள்ளதால் “சேர ஸ்ரீரங்கம் என்றும். வட்டமாக ஆறுகள்  ஓடுவதால் ”வட்டாறு என்பது மருவி  ”திருவாட்டாறு” என்றும்  அழைக்கப்படுகின்றது இத்தலம். திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 50 கி.மீ தூரத்திலும், நாகர்கோவிலிலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. மார்த்தாண்டலிருந்தும்,  தொடுவெட்டியிலிருந்தும் நகர்ப்பேருந்துகள் உள்ளன. மலை நாட்டு திவ்ய தேசமாக கருதப்படும் இத்தலமும், திருவண்பரிசாரமும் தற்போதைய தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளன. ஆதிகாலத்தில்  திருவிதாங்கூர் இராச்சியத்தின்  தலைநகரமாக கன்னியாகுமரி விளங்கியது பின்னரே திருவனந்தபுரம் தலைநகரமாகியது. மலை நாட்டு திவ்ய தேசம் என்பதால் ஆராதனைகள் இன்றும் கேரளப்பாணியிலேயே நடைபெறுகின்றது. தமிழ்ச்சங்க இலக்கியமான  புறநானூற்றில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

மேலே திருவனந்தபுரத்திற்கும் திருவாட்டாற்றுக்கும் உள்ள சில ஒற்றுமைகளைப் பற்றிப் பார்த்தோம் வாருங்கள் இனி அவற்றின் இடையே உள்ள சில வேற்றுமைகளைப் பற்றிக் காணலாம். ஆதி கேசவர் அனந்த பத்மநாப சுவாமிக்கு மூத்தவர் என்பதால் இவரது நாபியில் கமலமும் இல்லை அதில் தோன்றிய பிரம்மனும் இல்லை. கேசவர் மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சயனம் கொண்டுள்ளார். பத்மநாபரோ கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன்  சேவை சாதிக்கின்றார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது போல உள்ளது. பொதுவாக பெருமாள்  சயன கோலத்தில் சேவை சாதிக்கும் ஆலயங்களில் பெருமாளின் திருவடி சேவிக்கும் பக்தர்களின் வலப்புறமும், ஆதிசேஷனும் திருமுடியும் இடப்புறமும் இருக்கும். திருவாட்டாறு மற்றும் திருக்கச்சியின் திருவெஃகாவில் அரி துயில் கொண்டுள்ள ”சொன்ன வண்ணம் செய்த பெருமாள்” ஆகிய இருவர் மட்டுமே  மாறு சயனமாக  சேவை சாதிக்கின்றனர். அதனால் இத்தலத்தில் பெருமாளின் இடது திருக்கர  சேவை கிட்டுகின்றது.   ஆதி கேசவர் 22 அடி நீளம், 16108 சாளக்கிராமங்களால் ஆன திருமேனி, பெருமாளின் திருவடி அருகில் சிவலிங்கம் உள்ளது. அனந்தபத்மநாபரோ 18 அடி நீளம் 1200  சாளக்கிராமங்களால் ஆன திருமேனி, சிவலிங்கம் பெருமாளின் திருமுகப்பகுதியில் உள்ளது. ஒத்தக்கல் மண்டபங்களும் பெருமாளின் அளவிற்கேற்ப மாறுபடுகின்றன. திருவாட்டாற்றில் ஒரு கொடிமரம் மட்டுமே உள்ளது. திருவாட்டாறு மலை மாடக்கோவில் அமைப்பில் 55 அடி உயரத்தில் அமைந்துள்ளது.  வாருங்கள் இனி கேசி என்னும் அசுரன்  மேல் பெருமாள் பள்ளி கொண்ட திருவிளையாடலைக் காணலாம்.

அனந்த சயனத்திற்கு தென் கிழக்கே  பொன்பிரளை என்ற தலத்தில் பிரம்மா ஒரு யாகம் நடத்தினார். பிரசன்னரான பெருமாள் அவர் முன் தோன்றி  என்ன வரம் வேண்டும் என்று வினவினார். பிரம்மாவும், பெருமாளே தாங்கள் இராமாவதாரத்தில் காகாசுரனுடைய கண்ணைக் கிளறிய காகாக்ஷசைலம் என்னும்  மலையினிடத்தில் தவம் செய்யும் முனிவர்களை கேசி என்னும் அசுரன் துன்புறுத்துகின்றான், அவன் என்னுடைய கேசத்திலிருந்து தோன்றியவன், அவன் என்னிடம் சாகா வரம் பெற்றுள்ளான், மேலும் அவனது இரத்தம் ஒரு துளி கீழே சிந்தினாலும் அது தன்னைப்போல உருமாற வேண்டும் என்றும் வரம் பெற்றுள்ளான். தேவரீர்தான் அவனை வென்று முனிவர்களை  அவன் கொடுமையில்  இருந்து காப்பாற்ற வேண்டும் என்று விண்ணப்பித்தார்.


 ஆதி கேசவர் 
பெருமாள் அங்கு சென்று அவனுடன் மல்யுத்தம் செய்யும் போது கேசியை கீழே தள்ளி,  அனந்தனை அழைத்து அசுரன் வெளியே வராதபடி அவனை வளைத்துக் கொள் என்று அருள அனந்தனும் அவ்வாறே செய்தான் கேசன் மேலே வரமுடியாதபடி பெருமாள் அனந்தன் மேல்  சயனித்துக் கொண்டார். இதைக்கண்ட கேசியின் பத்தினி  ஆஸுரி என்பவள் கங்கையை துணைக்கு அழைத்தாள், கங்கை தாமிரபரணியுடன் பெருமாளை கீழே தள்ளி அசுரனை விடுவிக்க ஆவேசமாக பாய்ந்தாள், தன் பர்த்தாவைக் காப்பாற்ற  பூமாதேவியானவள் அந்த இடத்தை உடனே மேடாக்கி விட்டாள், ஒன்றும் செய்ய முடியாத நதிகள் தமது ஆணவத்திற்காக வருந்தி  பெருமாளை  வணங்கி  வட்டமிட்டு ஓடின. இன்றும் அவ்வாறே பரளி ஆறு கோதை ஆறு  என்ற பெயரில் இரு நதிகளும்  பெருமாளை வட்டமாக சுற்றி ஓடிக்கொண்டிருக்கின்றன. எனவே இத்தலத்திற்கு திருவாட்டாறு என்னும் திருநாமம் வழங்குகின்றது.. மேலும் அசுரன் தப்பிக்காமல் இருக்க தன்னை சுற்றி பன்னிரண்டு இடங்களில்  உருத்திரர்களை நிறுத்தினார்,  அவை இப்போது சிவாலயங்களாக விளங்குகின்றன.  இவ்வாறு கேசி முழுதும் அடைபட்டான், அவன் பெற்ற சாகாவரமும் வீணானது. பெருமாள் அதே சயன கோலத்தில் இன்றும் நமக்கு சேவை சாதிக்கின்றார்.

ஒவ்வொரு வருடமும் சிவராத்திரியன்று பக்தர்கள் இந்த பன்னிரண்டு சிவாலயங்களுக்கும்  கோபாலா கோவிந்தா என்று ஜபித்துக்கொண்டே ஓடி வந்து ஆதிகேசவரின் சன்னதியில்  உள்ள  சிவலிங்கத்தை தரிசித்து ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர்.

ங்கையும் தாமிரபரணியும் வேண்டிக் கொண்டதற்கிணங்க வருடத்தில் ஒரு முறை பங்குனி திருவிழாவின் நிறை நாள் ஆறாட்டின் போது பரளி ஆறு  கோதை ஆறும் கடலுடன்  சங்கமிக்கும்  மூவாத்து முகம் என்றும் தோதை பிரளி என்றும் வழங்கப்படும் இடத்திற்கு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி ஆறாட்டு கண்டருளுகின்றார்  ஆதி கேசவப் பெருமாள்.

இன்னொரு விதமாகவும் இந்தப் புராணம் கூறப்படுகின்றது. பிரம்மா யாகம் செய்யும் போது மஹாவிஷ்ணுவை மதிக்காது செய்ததால் சரஸ்வதி தேவி இவரது நாக்கைப்பிரளச் செய்ததால் யாகத்திலிருந்து கேசன் மற்றும் கேசி தோன்றினர். இருவரும் பிரம்மதேவரை குறித்து கடும் தவம் செய்து சாகா வரம் பெற்றனர்.  இதில் கேசனை பெருமாள் அவனுடன் போர் செய்யும் போது அவனை மகேந்திர மலை மேல் வீசினார், பெருமாள் சங்கை முழங்க  அனந்தன்  அவனைச் சுற்றிக் கொண்டான்,  அவன் வெளியே வராதபடி  இன்றளவும் அனந்தன் மேல் சயனம் செய்கின்றார். கேசி தன் தோழி கோதையுடன்  ஆறாக ஒடி வந்து தன் சகோதரனை  விடுவிக்க முயலும் போது பூமாதேவி அந்த இடத்தை உயர்வாக்கினாள். இரண்டு நதிகளும் சாபம் பெற்றன பின் பெருமாளின் அருளினால் ஆணவம் நீங்கி சாப விமோசனம் பெற்று  இன்றளவும் பெருமாளை வட்டமாகச் சுற்றிக் கொண்டு ஓடுகின்றனர்.

திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண்வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வின்றி என்னெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே  என்று திருமார்பில் திருமங்கை, வாகனமாக கருடாழ்வார், அசுரர்களை அழித்தவர்  என்று சகல சிறப்புகளையும் பெற்ற பெருமாள் சேர்ந்த இடம் திருவாட்டாறு என்று  நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த திருவாட்டாற்றில்

மூலவர்: ஆதி கேசவப்பெருமாள், புஜங்க சயனம் (மாறு சயனம்), மேற்கு நோக்கிய திருமுகமண்டலம், மூன்று வாசல் வழியாகத்தான் சேவிக்க முடியும்.
தாயார் : மரகதவல்லி நாச்சியார்.
தீர்த்தம்: கடல்வாய், வாட்டாறு, இராம தீர்த்தம்.
விமானம்: அஷ்டாங்க விமானம்
பிரத்யக்ஷம்: பரசுராமர், சந்திரன்.

கற்சிற்பங்கள்,  மரச்சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள் என்று ஒரு பிரம்மாண்ட கலைக்கோவிலாக விளங்கும் இக்கோவிலின் அழகை இரசிக்கலாம் வாருங்கள் அன்பர்களே. முதல் தடவை அதிகாலையில் சென்றதால் முதலில் ஆலயத்திற்கு பின் புறம் சென்று வாட்டாற்றில் நீராடினோம். பூமாதேவி உயர்த்தியதால் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது  மலை மாடக்கோவில் ஆகவே 18 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். ஆலயத்தின் பின்புறம் கதகளி மண்டபம் உள்ளது. ஒரு வருடம் சபரிமலை யாத்திரையின்  போது ஓரிரவு இந்த மண்டபத்தில்தான் படுத்துத் தூங்கினோம். அதிகாலை எழுந்து கூட்டம் இல்லாத நேரத்தில் ஆலயம் முழுவதையும் எந்த அவசரமும் இல்லாமல் அங்குலம் அங்குலமாக சேவிக்கும் பாக்கியம் கிட்டியது.  சீவேலி மண்டபத்தின் இரு புறத்தூண்களில் தான் எத்தனை எத்தனை கற்சிற்பங்கள், பொதுவாக சிலபஞ்சிகள் என்று மலையாளத்தில் அழைக்கப்படும் கை விளக்கேந்திய காரிகைகள்,  மேலோட்டமாக கண்ணில்படும் ஆனால் ஒவ்வொரு தூணிலும் மூன்றடுக்காக சிற்பங்கள் அமைந்துள்ளன, சைவ வைணவ பேதம் இல்லாமல் அனைத்து  சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. சிற்பிகளுக்கு யோகத்தின் மேல் அதிக ஈடுபாடு போல தெரிகின்றது, குண்டலினி சக்தியை குறிக்கும் பிணையல் நாகங்களும், மலை மேல் தியானத்தில் ஆழ்ந்துள்ள  முனிவர்களும் அதிக அளவில் காணக் கிடைக்கின்றனர். ஒவ்வொரு தூணிலும் ஒரு சிலபஞ்சி ஆனால் ஒருத்தி போல் இன்னொருத்தி இல்லை. தலை அலங்காரம்,  முக பாவம், கண்கள், அணிந்துள்ள அணிகலன்கள், ஆடை அணிந்துள்ள விதம், கையில் விளக்கை ஏந்தியுள்ள எழில், காலை வைத்துள்ள ஒயில் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உள்ளது,  இறைவன் முன் அனைவரும் சமம்  என்பதை உணர்த்தும் விதமாக  மேல் குடிப்பெண்களும், கீழ்க்குடிப் பெண்களும் இந்த சிலபஞ்சிகளில் அமைத்துள்ளனர்.

முன்பக்கம் கதவில் அருமையான மரசிற்பங்கள் காணக் கிடைக்கின்றன. குறிப்பாக இடது திருக்கரத்தை நீட்டிக்கொண்டு அனந்தன் மேல் துயில் கொண்டுள்ள மூலவரின் சிற்பம் அப்படியே கண்ணை விட்டு அகல மறுக்கின்றது. கொடி மரம் அமைந்துள்ள உதய மார்த்தாண்ட மண்டபத்தில் ஆறு அற்புத ஆள உயர சிற்பங்கள் அனைத்தும் கொள்ளை அழகு. பெருமாளின் அழகில் சொக்கி நிற்கும் கிளி வாகன இரதியும்,  கரும்பு வில், மலர்க்கணையுடன் மன்மதனும் அம் மனதை  சொக்க வைக்கின்றனர், நந்தி மத்தளம் வாசிக்க  ஊர்த்துவதாண்டவர் நடனமாட, அவரைக் கண்டு  திகைத்து   காளி நிற்கின்றாள், கோபாலகிருஷ்ணரின் வேணு கானத்தை அனுபவித்த ஆவினங்கள் அப்படியே  தன்னை மறந்து கிடக்கின்றன, மேலும் பரசுராமர், அனுமன், துவார பாலகர்கள், யாழிகள் சிற்பங்கள்  அனைத்தும் காணக் காண தெவிட்டாத அற்புத கலை பொக்கிஷங்கள் ஐயகோ என்ன அழகு விவரிக்க வார்த்தைகளே இல்லை.

விமானத்தில் ஐந்து கலசங்களுடன் அருமையான மரச்சிற்பங்கள், மூலிகை ஓவியங்களுடன் எழிலாக அமைந்துள்ளது. அடியோங்கள் சென்ற சமயம் உபய நாச்சியார்களுடன் உற்சவருக்கு ஒத்தக்கல் மண்டபத்தில் திருமஞ்சனம் நடந்து கொண்டிருந்தது. ஒன்பது வெள்ளிக்குடங்களின்  மந்திர தீர்த்தம், பால், தயிர், தேன்,  சந்தனம் என்று அருமையாக திருமஞ்சனம் நடைபெற்றது.   பிரயோக சக்கரத்துடன் உற்சவர் அருள் பாலிக்கின்றார்.  மூலவர் பெருமாளின் நாபிப்பகுதி சேவை மட்டுமே அப்போது கிட்டியது. காலை 8:30 மணிக்கு மேல்தான் முழு சேவையாம். பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போது ஒத்தக்கல் மண்டபம் முழுவதும் பெருமாளின் திருமேனியாக கருதப்படுவதால் சேவார்த்திகள் யாரும் அதை தொடாமல் பார்த்துக்கொள்கின்றனர். புரட்டாசி மாதத்தில் 3 முதல் 9 நாள் வரை மாலை மூலவரின் திருமேனியைச் சூரியக்கதிர்கள்  தழுவுகின்றன.

மூன்று சுற்றுக்கள் கொண்ட  ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்ட கோலத்தில்  மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சேவை சாதிக்கின்றார். மாற்று சயன கோலம் இடது திருக்கரத்தை கீழே தொங்கவிட்டிருக்கின்றார். வலது திருக்கரத்தை  மேலே தூக்கிய சின் முத்திரை தாங்கிய கோலம். பிரம்மாவைப் படைப்பதற்கும் முன்பு கோவில் கொண்டதால் நாபியில் பத்மமும் இல்லை அதில் பிரம்மனும் இல்லை. கருவறையில் உபயநாச்சியார்களும் காதலேஹ முனிவரும் எழுந்தருளியுள்ளனர்.

தர்மசாஸ்தாவிற்கும், குழலூதும் கோலத்தில் வேம்பாடி கிருஷ்ணருக்கும் பிரகாரத்தில் தனி சன்னதி உள்ளது. திருவாட்டாறு கிராமத்தில் சிறப்பாக கருடனுக்கு ஒரு தனிக்கோவில் உள்ளது. ஆறாட்டிற்காக பெருமாள் எழுந்தருளும் போது இக்கோவிலுக்கு வந்து கருடனுக்கு அருளிச்செல்கின்றார்.

வாருங்கள் இனி இத்தலத்தைப் பற்றிய பல சுவையான வரலாறுகளைக் காணலாம் அன்பர்களே. மூலவருடன் கருவறையில் உபய நாச்சியார்களுடன்  காதலேஹ மஹாமுனியும்  எழுந்தருளி உள்ளார். சோமாயாஜி என்பவர் புத்திரப்பேறு வேண்டி இத்தலத்தில்   யாகம் செய்து வழிபட்டார்.  அவருக்கு ஒரு மகன் பிறந்தான். பிள்ளையையும் பக்தியுடன் வளர்த்தார். ஒரு சமயம்  சுசிவிரதன் என்ற தேவன் பரிகாசமாக  அந்தப் பிள்ளையிடம்    உன்  தாய்,  தந்தை யார் என்று கேட்க,  பிள்ளை திகைத்து அருகில் இருந்த வாழை மரத்தைக் காட்டி இதுதான் என்று கூற, பிள்ளையைக் காக்க  பெருமாள் கதலி(வாழை) மரத்தில் இருந்து தோன்றி அப்பிள்ளைக்கு அஷ்டாக்ஷர மந்திரத்தையும் உபதேசித்து தன் அருகிலேயே இறுத்திக் கொண்டார்.  எனவே விமானமும் அஷ்டாக்ஷர விமானம் என்றழைக்கப்படுகின்றது.

மெய்ந்நின்று கமழ்துளவ விரையேறு திருமுடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திருவுருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழ்வதுவே?  என்று நம்மாழ்வார் பல்லாண்டு  பாடியுள்ள ஆதிகேசவப்பெருமாள் பல அரசர்களுக்கு  அருள் புரிந்துள்ளார் அவற்றை இனி காணலாம். வஞ்சி இராஜக்களுக்கு எதிராக முகலாயர்கள் படையெடுத்தபோது உமையம்மை என்ற இராணி கோட்டயம் கேரள ராஜவை உதவ வேண்ட அவரும்  படை கொண்டு வந்த போது, முகலாயப்படைகளைப் பார்த்து பயந்து  ஆதி கேசவப் பெருமாளை சரணடைந்து  16 பாடல்கள் கொண்ட படை சங்கீர்த்தனம்  என்னும் ”ஆதிகேசவஸ்த்வம்” என்ற கீர்த்தனையைப் பாட.  பெருமாளின் அருளினால் எங்கிருந்தோ தேனீக்கள் திரண்டு  வந்து முகலாயப் படைகளை தாக்கியது, அதில் முகலாய தளபதி மரணமடைய,  பீதியில் முகலாயப்படை பின் வாங்கி ஓடியது,  அவர்களை  கேரளராஜா வென்று அவர்களின் 300 குதிரைகளையும் கைப்பற்றி தனது குதிரைப்படையை உருவாக்கினார் என்பது வரலாறு. இன்றும்  தினமும் மாலை படைச் சங்கீர்த்தனம் பெருமாள் முன் சேவிக்கப்படுகின்றது.


அஷ்டாங்க விமானம் 

திருவனந்தபுரம் திருக்கோவிலை புனரமைத்த இராஜா மார்த்தாண்ட வர்மா  ஒரு சமயம் எதிரிகளிடமிருந்து தப்பிக்க  மாறு வேடத்தில்  அலைந்து கொண்டிருந்த போது,  திருவாட்டாற்றில் ஒரு மூதாட்டி பசி தாகத்தால் வாடியிருந்த இவருக்கு அரிசிக்கஞ்சியும் உப்பு மாங்காயும் அளித்து பசியாற்றினாள், ஆதிகேசவர் அருளால் அரசனும் எதிரிகளை வென்று திருவிதாங்கூர் இராச்சியத்தை மீட்ட போது, அதே அரிசிக்கஞ்சியும், உப்பு மாங்காயும் பெருமாளுக்கு நிவேதனம் ஆக வேண்டும் என்றும் அந்த மூதாட்டியின் சந்ததியினருக்கு திருக்கோவிலில் முன்னுரிமையும் அளித்து ஆணையிட்டார். இன்றும் ஆறாட்டு விழாவின் போது அரசனின் பிரதிநிதி ஆறாட்டு வந்து வாளை கொடிமரத்தின் அடியில் வைத்து சரணடைந்து உற்சவத்தில் கலந்து கொள்கின்றார். அரசன் நியமித்த ஒரு தச்சன் ஓண வில் செய்து சமர்ப்பிக்கின்றார்.


கேரளத்தின் வளமை

ஒரு சமயம் ஆற்காட்டு நவாப் படையெடுத்து வந்த போது உற்சவரை கவர்ந்து சென்று தன்னுடைய கஜானாவில் எறிந்து விட்டான். உற்சவரை எவ்வளவு  கீழே போட்டாலும் தானாக மேலே வந்து கொண்டிருந்தது.  அதே சமயம்  அவனது இராணிக்கு தீர்க்க முடியாத ஒரு வியாதி பற்றிக்கொண்டது. பெருமாள் அர்ச்சகர் கனவில் தோன்றி நவாப்பிடம் சென்று உற்சவரைத் திருப்பித் தந்தால் இராணியின் வியாதி விலகும் என்று கூறப் பணித்தார். நவாபும் உற்சவரை திரும்பக் கொண்டு வந்து திருக்கோவிலில் சேர்க்க இராணியின் நோயும் விலகியது. நன்றிக்கடனாக நவாப் பெருமாளுக்கு தங்கக்கிரீடமும், வெள்ளி தட்டும் உபயமாக அளித்தான். தீர்த்தவாரி தினத்தன்று ”திருவளா பூஜை”  (அல்லா பூஜை) நடத்தினான். அப்போது பெருமாளுக்கு அவல், பொரி, சாதம் நிவேதனம் செய்யப்படுகின்றது.

வம்மின் தொண்டர்களே திரை குழல் கடல் புடைசூழ் தென்னாட்டுத் திலதமன்ன வரை குழுவு மணிமாட வாட்டாற்றான்,  வானேற வழி தந்வாட்டாற்றான்வன்னெஞ்சத்திரணியனை மார்விடந்த வாட்டாற்றான், மலை மாடத்தரவணை மேல் வாட்டாற்றான், வளம்மிக்க வாட்டாற்றான் என்று மங்களாசாசனம் செய்த  நம்மாழ்வாருக்கு  பெருமாள் இத்தலத்தில் காட்டிய கல்யாண குணம் என்ன என்று காணலாம்.  அடியார் கேட்டபடி கேட்கின்ற குணத்தை எம்பெருமான் ஆழ்வாருக்கு காட்டி அருளினார். இதை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தமது ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் அழகிய மோட்சதானத்தில் பிரணபாரதந்த்ரியம்  வளம் மிக்க நதியில் கரைபுரளும் என்று கூறுகின்றார்.


 அழகிய சிற்பங்கள் கொண்ட திருச்சுற்று 

மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் என்று ஆழ்வாரே கூறியபடி பெருமாள் நம்மாழ்வாருக்கு உடலுடனே வைகுந்தம் அளிக்க விழையும் போது ஆழ்வார் உடலுடன் வைகுந்தம் செல்ல விரும்பாததால் அவரது அவாவிற்கிணங்கி உடல் இல்லாமல் வைகுந்தப் பேறளிக்கின்றார். இவ்வாறு அடியார்கள் சொன்ன வண்ணம் செய்யும் பெருமாள் என்னும் குணத்தை காட்டுகிறார் ஆதிகேசவர் இத்தலத்தில். 

வாருங்கள் அன்பர்களே இனி திவ்வியக்கவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தமது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் இந்த திவ்விய தேசத்தைப் பற்றி எவ்வாறு பாடியுள்ளார் என்று காணலாம்.

மாலைமுடி நீத்து மலர்ப்பொன் அடிநோவப்
பாலைவனம்புகுந்தாய் பண்டுஎன்று – சாலவும்நான்
கேட்டால் துயிலேன்காண் கேசவனே பாம்பணை மேல்
வாட்டாற்றுக் கண்துயில்கொள் வாய் (நூ.தி 68)

பொருள்: கேசவன் என்னும் திருநாமத்தை உடையவனே! ’மாலையையும் முடியையும் நீத்து, (சிற்றவையின் சொற்படி) தாமரை மலர்  போன்ற அழகிய திருவடிகள் வருந்தும்படி கொடுங்காட்டில் நடந்து சென்றாய்’ என்று கேட்டால், அடியேன் அடியோடு கண்துயில் கொள்ளேன்; நீயோ திருவாட்டாறு என்னும் திருத்தலத்தில் பாம்பணையில் மீது கவலையின்றிக் கண்ணுறங்குகின்றாய்!   என்று அங்கலாய்க்கின்றார்.


"ஸ்ரீ வர்துல நதிபுர சாகர நிமக்நாய  க்ஷேத்ரே ராம புஷ்கரணி தடே அஷ்டாங்க  விமானச் சாயாயாம் ஸ்திதாய அனந்தசயனாய பக்ஷிமமுகாய ஸ்ரீமதே மரகதவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீஆதிகேசவ பரப்ரஹ்மணே நம: என்ற தியான ஸ்லோகத்தை ஜபித்துக்கொண்டே  வைகுந்த வாழ்வளிக்கும் ஆதி கேசவரிடம் சரணமடைந்து, வாருங்கள் அன்பர்களே  மலை நாட்டுத் திருப்பதிகளில் நிறைத் திருப்பதியான திருப்பதிசாரம் என்று தற்போது அழைக்கப்படும் திருவண்பரிசாரத்தில் திருவாழ்மார்பனை சேவிக்க செல்லலாம். 

 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        பாயம்மல்
மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .